நண்பர்களே,
வணக்கம். இன்னமும் வைரசுக்கு டாட்டா காட்டிய பாடைக் காணோம் எனும் போது மேற்கொண்டும் நம் மனைவாசங்கள் தொடர்வது காலத்தின் கட்டாயமாகவே தெரிகிறது ! இரண்டு வாரங்களா ? மூன்று வாரங்களா ? என்ற கேள்வி தானே இப்போதைக்கு அனைவரின் மனங்களிலும் ?! So அரசின் தீர்மானம் எதுவாயிருப்பினும் அதற்கு முழுசாய் இசைவு சொன்ன கையோடு, புதுசாயொரு தம் கட்டிக்கொண்டு, பாத்திரம் கழுவும் படலம் 2-குத் தயாராகிக்கொள்வோமே ! ஆங்காங்கே பூரி போடும் நண்பர்களும், துவைத்துக் காயப்போடும் நண்பர்களும், துடைப்பங்களோடு வீறுநடை போடும் அன்பர்களும் சீக்கிரமே தத்தம் பொறுப்புகளை பூர்த்தி செய்த பூரிப்போடு, இங்கே எட்டிப்பார்த்தால் அவ்வப்போது ஜாலி மொக்கைகளைத் தொடர்ந்திடலாம் ! சூழ்ந்து நிற்கும் இறுக்கங்களிலிருந்து நண்பர்களின் சங்கமத்தின் புண்ணியத்தில் நிவாரணம் கிட்டிட்டால் சூப்பர் என்பேன் ! என்ன எழுதுவதென்ற என்னுள்ளான கேள்விக்கு பதிலாய், சில பல கேள்விகளே கைதூக்கி நிற்க, இதோ இந்த ஞாயிறை ஒப்பேற்ற முனைகிறேன் அவை சார்ந்த இன்னொரு பதிவோடு !
And before I go into it - சின்னதாயொரு வேண்டுகோள் ப்ளீஸ் :
Flashback mode-க்குள் புகுந்து துவக்க நாட்களை பற்றி நான் விவரிக்கும் போதெல்லாம் தடித்தாண்டவராயன் போல் நான் மாத்திரமே அதனுள் தென்படுவது தவிர்க்க இயலா சங்கடமாய் நெருடுகிறது எனக்கு ! நிறையப் பேரின் பங்களிப்புகளின்றி இந்தப் பயணம் சாத்தியமாகாது என்பதை பறைசாற்றும் முதல் ஆள் நானே ! So இதுபோன்ற பதிவுத்தருணங்கள் முழுசுமாய் என்னைச் சார்ந்த புராணங்களாகவே இருப்பது தர்மசங்கடத்தையே ஏற்படுத்துகிறது ! என்னைத் தெரிந்து வைத்திருக்கும் நண்பர்களுக்குப் பதிவின் ஓட்டத்தைத் தாண்டி வேறெதுவும் இடறிடாது போகலாம் ! ஆனால் தொலைவிலிருந்து வாசித்து விட்டு நடையைக் கட்டும் நண்பர்களுக்கும் சரி ; நம் மேல் "பாச மழை" பொழியும் அன்பர்களுக்கும் சரி, "ஓவராய் அலம்புராண்டோய் !" என்று தோன்றின், பிழை அவர்கள் மீதிராது தான் ! நிச்சயமாய் பீப்பீ smurf எனது favorite கிடையாது ; இந்த முந்தைய நினைவுப் பகிரல்கள் அனைத்துமே நமது காமிக்ஸ் சார்ந்தவைகள் என்ற விதத்தில், வாசிப்பினில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதால் மாத்திரமே நான் இந்த வாடகைச் சைக்கிள் படலத்தைக் கையிலெடுக்க நேரிடுகிறது அவ்வப்போது ! So please bear with me !!
ரைட்டு, பின்னாட்களில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்படவுள்ள கேள்வியும் ; அதற்கான எனது பதிலும் இதோ ! முந்தைய பதிவினைப் போல இதனில் காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்கள் சொற்பமே ; and நிறைய விதங்களில் இதுவொரு பெர்சனல் பதிவுமே ! ஆனால் சொல்ல வேண்டியதொரு கதையிது என்பதால் நீங்கள் புரிந்து கொள்வீர்களென்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன் ! நிறைய பொறுமை இருந்தால் மாத்திரமே படிக்க முனையுங்கள் ப்ளீஸ் :
* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்.....? (பேச்சு மட்டுமே ! ) :
இந்தக் கேள்விக்கு சற்றே கிளுகிளுப்பான பதிலை எதிர்பார்த்திருப்பின், நிச்சயமாய் ஏமாற்றமே மிஞ்சிடப் போகிறது ! Simply becos நான் விடிய விடியப் பேசிட எண்ணிடுபவர் இங்கு இப்போது இல்லை ! அவர் விண்ணுலகம் சென்று வருஷங்கள் 22 ஓடி விட்டன ! நிறையப் பேருக்கு எனது இந்தத் தேர்வு இந்தத் தருணத்தில் விநோதமாய்த் தோன்றிடலாம் தான் ; ஆனால் இதனை முழுசுமாய்ப் படிக்கும் பொறுமை உங்களுக்கு இருப்பின், பதிவின் இறுதியில் எனது தேர்வுக்கு 200 மார்க்குகள் போடுவீர்களென்பது உறுதி !
S.V.A.கந்தசாமி நாடார் என்பதே எனது தாய்வழித் தாத்தாவின் பெயர் ! அந்நாட்களில் ஜாதியினையும் பெயரோடு இணைத்துக் கொள்வது வழக்கமோ, என்னவோ - தெரியாது, ஆனால் அவரை நினைவுறும் போதெல்லாம் அந்தப் பெயரினை முழுசாய் உச்சரிக்கவே தோன்றிடும் ! அந்தக் கடைசிப் பகுதியினை நீக்கிவிட்டு அவரைக் குறிப்பிடுவது ஏதோ மரியாதைக் குறைவு என்பது போலொரு அபத்த சிந்தனை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! தாத்தாவுக்கு என் தாயார் ஒரே பிள்ளை & சொந்த அக்காவின் மகனுக்கே அவரை மணமுடித்துக் கொடுத்ததால் மருமான் - மருமகப்பிள்ளையாகிப் போனார் ! ஒரே பிள்ளை என்பதால் தாத்தாவுக்கு உலகம் சுழன்றதே என் தாயாரைச் சுற்றியே !! So சிவகாசிக்கு அச்சுத் தொழில் துவங்கிடும் நோக்கில் சீனியர் எடிட்டர் குடிபெயர்ந்த போது, தாத்தா செய்த முதல் வேலை - அவரது வீட்டுக்கு நேர் எதிரிலிருந்ததொரு வீட்டை வாடகைக்குப் பிடித்து அங்கேயே குடியேறச் செய்தது ! எனது பால்ய நினைவுகள் முழுவதுமே நாங்கள் வசித்த அந்தச் சின்னஞ்சிறு வீட்டோடும், எதிர்க்கே குடியிருந்த தாத்தாவின் வீட்டோடுமே !! வீட்டில் நான் மூன்றாவது பிள்ளை ; எனக்கு முன்னே 2 சகோதரிகள் ! கொடுமை என்னவெனில் இரண்டே அறைகள் கொண்ட அந்த வாடகை வீட்டில் குடியிருந்தது நான் + அம்மா + அப்பா மட்டுமே ! சகோதரிகள் இருவருமே தாத்தாவின் வீட்டில் தான் முழுக்க முழுக்கக் குடியிருப்பர் ! எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் இடம் பற்றாதென்று அந்த ஏற்பாடா ? அல்லது தாத்தாவுக்கும், பாட்டிக்கும் துணையாய் சகோதரிகள் அங்கே இருந்தனரா ? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது ! ஆனால் நினைவு தெரிந்த நாள் முதலாய் சின்னஞ்சிறு குருவிக்கூடுகள் எதிர் எதிரே இருக்க, அதனுள் இங்கும் அங்குமாய் சந்தோஷங்களை பரிமாறி வளர்ந்தோம் நாங்கள் !
அப்போதெல்லாம் சீனியர் எடிட்டரின் அச்சுத் தொழில் பிசுனஸ் ஊருக்குள் TOP 3 என்றவிதத்தில் சும்மா தெறிக்க விட்டுக்கொண்டிருந்தது ! காலண்டர்கள் & ரெடிமேட் நோட்புக் ராப்பர்களின் உருவாக்கத்தில் வியாபாரம் திகுடுமுகுடாய் ஓடிக்கொண்டிருக்க, தந்தை + அவரது சகோதரர்கள் சினிமாவில் வரும் தொழிலதிபர்கள் ரேஞ்சுக்கு பிசியோ பிசி ! நூறு பேருக்கு குறையாது பணி செய்வார்கள் அந்நாட்களிலேயே என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! So அப்போதெல்லாம் ஆர்டர் ; வசூல் ; காலெண்டர்களுக்கான படம் வரையும் வடஇந்திய ஓவியர்களை சந்திக்கவென தந்தை டூர் கிளம்பிப் போனால் ஊர் திரும்ப சுத்தமாய் ஒரு மாசமோ, 40 நாட்களோ, ஆகி விடும் ! ஆனால் எதிர்வீட்டில் தாத்தா & பாட்டி குடியிருந்ததால் பயம் தெரியாது ; எங்கள் வண்டி அதுபாட்டுக்குப் பயணிக்கும் ! ரொம்பவே சிரமப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர் என்ற முறையில் தாத்தா ரொம்பவே சிக்கனமானவர் ; ஆனால் ரொம்பவே தொலைநோக்குப் பார்வை கொண்டவர் ! அவசியமின்றி ஆடம்பரச் செலவுகள் செய்திட மாட்டார் ; ஆனால் பேரப்பிள்ளைகளுக்கென எதையும் செய்யத் தயாராக இருப்பார் ! விடுமுறைகளில் சென்னைக்குப் போனால் எங்களை அந்நாட்களது மூர் மார்க்கெட்டிலோ ; ஊருக்குள்ளேயே இருந்த zoo -விலோ இறக்கிவிட்ட கையோடு அப்பா கிளம்பிவிடுவார் - சென்னையிலுள்ள காலெண்டர் விற்பனையாளர்களைச் சந்திக்க ! பொழுது சாயும் நேரத்துக்குத் தான் திரும்புவார் என்றால் கூட முழுநேரமும் தாத்தா உடனிருப்பார் என்பதால் பயமின்றித் திரிவோம் ! So சின்ன வயதிலிருந்தே எங்களின் வாழ்க்கைகளில் தாத்தா ஒரு constant இருப்பாகவே தொடர்ந்திட்டார் !
சுதேசி காங்கிரஸ் அமைப்பில் அவருக்கு ஈடுபாடுண்டு என்பதாலோ என்னவோ, வெள்ளை வெளேர் கதர் வேஷ்டி & கதர் ஜிப்பா தான் தாத்தாவின் உடை எப்போதுமே ! நல்ல உயரம் ; ஆஜானுபாகுவான உருவம் ; நெற்றியில் குங்குமப் பொட்டு ; மீசையில்லா மழுமழு முகம் ; பிரமாதமான பேச்சாற்றல் ; அந்தக் கதராடை என்ற தோரணை - அவரைப் பார்த்த நொடியே, புதியவர்களிடம் கூட ஒருவித மரியாதையை உருவாக்கிடுவதை எண்ணற்ற முறைகள் நான் பார்த்திருக்கிறேன் ! அவருமே ஒரு சிறு அச்சகம் நடத்தி வந்த போதிலும், காலையில் கொஞ்ச நேரம் ஆபீசுக்குப் போய் விட்டுத் திரும்பிட்டால் - ஊருக்குள் உள்ள பொதுக்காரியங்களின் முன்னணியில் செயலாற்றிடுவார் ! பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயர்பொறுப்பு ; பில்டிங் சொசைட்டியில் தலைவர் பதவி ; அச்சக சங்கத்தின் தலைவர் பொறுப்பென எதை எதையோ இழுத்துப் போட்டுக் கொண்டு பணியாற்றுவார் ! ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த பொழுது, சிவகாசியிலிருந்து அச்சக சங்கத்து முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு டில்லி சென்று பிரதமரைச் சந்தித்து எடுத்துக் கொண்ட போட்டோ தாத்தா வீட்டில் மெகா சைசில் சுவற்றில் தொங்குவது எனது ஆயுட்கால நினைவுகளுள் ஒன்று ! பொதுக்காரியங்களுக்கென நேரத்தை ஒதுக்கிய பிற்பாடு முழுக்க முழுக்க வீட்டில் எங்களோடு நேரம் செலவிடுவதே தாத்தாவின் ஆதர்ஷப் பொழுதுபோக்கு ! யாருக்கேனும் உடம்புக்கு முடியவில்லையா ? டாக்டரிடம் இட்டுப் போவது தாத்தாவாகத்தானிருக்கும் ! அவர் ரொம்பவே பயந்த சுபாவம் என்ற போதிலும், அந்தத் தோரணை அதை மறைத்து விடுவதுண்டு ! And எங்களுக்கும் தாத்தா ஒரு larger than life figure !
எல்லாமே மாறியது 1981-ன் இறுதியினில் ! சகோதரிகளுக்குத் திருமண வயதுகள் நெருங்கிடும் என்பதால் பெரியதாய் ஒரு சொந்த வீட்டைக் கட்ட 1978-ல் திட்டமிட்டார் தந்தை ! ஆனால் அந்த வீடு வளர்ந்த வேகத்தை விட தந்தையின் தொழிலினில் வளர்ந்த சிக்கல்கள் ஜாஸ்தி வீரியத்துடன் இருந்ததால், ஜவ்வாய் இழுத்து கிட்டத்தட்ட மூன்றரை ஆன்டுகளாயிற்று வீடு முடிவுற ! So நினைவு தெரிந்த நாள் முதலாய் எதிர் எதிர் வீட்டில் வசித்து வந்த நாங்கள் டிசம்பர் 1981-ல் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு (அப்போது) ஊருக்கு வெளியே இருந்த வீட்டுக்கு குடி மாறினோம் - சகோதரிகளுடனும் ! So திடு திடுப்பென டவுணுக்குள் இருந்த தாத்தா & பாட்டிக்கு தனிமையும், வெறுமையுமே துணையாகிப் போயின ! வாரத்தில் பாதி நாட்கள் காலையில் கிளம்பி எங்கள் வீட்டுக்கு வந்து விட்டு, பொழுது சாயும் போது தான் டவுணுக்குத் திரும்புவார்கள் என்ற போதிலும், உள்ளங்கைக்குள் பேரப்பசங்களும், மகளும் வசித்த அந்த நாட்கள் திரும்பிடாது தானே ?!
பாட்டிக்கு என்றைக்குமே ஆரோக்கியம் துணை இருந்ததில்லை ! சர்க்கரை வியாதி ; ஆஸ்துமா ; சிறுநீரகப் பாதிப்பு என்று ஏதேதோ படுத்தி எடுக்கும் அவரை ! நாள்தோறும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள அவர் ஆஸ்பத்திரிக்குப் போய்வருவது அப்போதே கஷ்டமாக இருக்கும் ; ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாது சிரித்த முகத்தோடு சுற்றி வருவார் ! பாட்டிக்கும் அம்மா மேல் வாஞ்சையுண்டு என்ற போதிலும், தாத்தாவைப் போல "anything for the daughter" ரகமெல்லாம் கிடையாது ! தாத்தாவின் ஆபீசில் பின்னே ஒரு ஏக்கரில் ஒரு பெரிய வயல்வெளி இருக்கும் ; அங்கே பால்மாடுகளும் வளர்த்திடுவார்கள் ! So தினமும் வீட்டுக்குப் பால் அங்கிருந்து வந்துவிடும் ! ஆனால் அதெல்லாம் பாட்டியின் டிபார்ட்மெண்ட் என்பதால் - லிட்டருக்கு இவ்வளவு என்ற கணக்குக்கேற்ப காசு கொடுத்துத் தான் நாங்களே வாங்கிக்கொண்டாக வேண்டும் ! தினசரி ஐம்பது காசோ என்னவோ (!!!) எடுத்துக் கொண்டு போய் எதிரே இருக்கும் பாட்டி வீட்டிலிருந்து பால் வாங்கி வருவேன் ! என்றைக்கேனும் காசு கொண்டு போகாது போனால், "அம்மாட்ட சொல்லி, நாளைக்கு சேர்த்து வாங்கிட்டு வந்திரனும் கண்ணா...சரியா ?!" என்று ஞாபகப்படுத்தி அனுப்புவார்கள் ! தாத்தா இந்தக் கூத்தைப் பார்த்துத் தலையிலடித்துக் கொண்டாலும் - 'தாயும் பிள்ளையுமா இருந்தாலும், வாயும் வயிறும் வேற !!' என்று இந்த ஒற்றைச் சமாச்சாரத்தில் பாட்டி பிரேக் போட்டுவிடுவார் ! சினிமா தியேட்டருக்குப் போனால் டிக்கெட் காசையும், கரீட்டாய்ப் பிரித்துக் கொள்வோம் !! ஹோட்டலுக்குப் போனாலும் அதே கதை தான் !
ஆனால் 1981-ல் நாங்கள் ஒட்டுமொத்தமாய் கிளம்பிப் போய்விட்டதில் பாட்டியும் எத்தனை சோர்வுற்றுப் போனார்கள் என்பதைத் தொடர்ந்த நாட்களில் பார்க்க முடிந்தது ! அடிக்கடி சுகவீனங்கள் ; ஆஸ்பத்திரிவாசங்கள் என்று பொழுதுகள் சென்றன ! நாங்கள் டவுணுக்குள் குடியிருந்த வீட்டின் மிக அருகில் தான் சிவகாசியில் செஸ் க்ளப் இருந்தது ! 1979-ல் எனக்குத் தொற்றிக்கொண்ட செஸ் பைத்தியம் அசாத்தியமானது ! ஒவ்வொரு ஞாயிறின் காலையிலும் அங்கே போனால், பொழுது சாயும் போது தான் வீடு திரும்புவேன் ! ஜூனியர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தால், கப்பில் முதலிலேயே என் பெயரைப் பொறித்து விடும் அளவுக்கு அய்யா பெரிய பிஸ்தா அப்போதெல்லாம் ! +2 பரீட்சைகளின் மத்தியில் கூட சத்தமில்லாது பக்கத்து ஊரான விருதுநகரில் நடந்துகொண்டிருந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு அந்த craze முற்றியிருந்தது ! So 1981-ல் நாங்கள் தூரமாய்க் குடி போய்விட்டாலும் ஞாயிறு பிறந்துவிட்டால் காலை எட்டரை மணிக்கே நான் தாத்தா வீட்டில் ஆஜராகியிருப்பேன் ! சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்தும் போதே அசைவ விருந்தின் வாசனை நாசியைத் துளைக்கும் ! தாத்தாவும் சரி, பாட்டியும் சரி, அந்த ஒற்றை நாளினில் என்னைக் கவனிக்கும் விதத்தினை, ப்ரூனே சுல்தானின் அரண்மனையில் கூட எதிர்பார்த்திட இயலாது ! சாப்பிட்ட மறுநிமிஷம் ஓட்டம் பிடிப்பவன், மறுக்கா மதியத்துக்குத் தான் வீட்டுக்குத் திரும்புவேன் - வயிற்றை ரொப்பிக் கொள்ள ! மாலை சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பும் முன்னே வேறெதாச்சும் ரெடியாக இருக்கும் ! வாரத்தின் அந்த ஒற்றை நாளை வேறெதெற்காகவும் தாத்தாவோ, பாட்டியோ செலவிட்டதாய் எனக்கு நினைவே இல்லை ! இந்நேரத்துக்கு வீட்டின் பிள்ளைகளுள் தாத்தாவுக்கும், பாட்டிக்கும் ரொம்பவே வேண்டப்பட்ட பேரப்பிள்ளையாய் நான் மாறியிருந்தேன் ! எப்போதும், எதெற்காகவும் அவர்களது கதவுகள் எனக்குத் திறக்காதிருந்ததில்லை !1983 -ன் பிப்ரவரியிலோ, மார்ச்சிலோ தட்டுத் தடுமாறி ஒரு மழை நாளிரவினில் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி நின்ற போது எனக்கு பள்ளியின் கடைசி மாதத்து fees கட்டப் பணமிருக்கவில்லை ! அறுபது ரூபாய்கள் monthly fees + exam fees என நூற்றிச்சில்லறை ரூபாய்களை புரட்டவே நாக்குத் தள்ளி, கையேந்தி நின்ற நாட்களவை ! தாத்தா அழுது நான் பார்த்த முதல் தருணம் அது தான் ! தொடர்ந்த நாட்களில் அந்தக் கண்ணீர் முகத்தை மீண்டும் பார்க்கும் துரதிர்ஷ்டம் நிகழ்ந்தது - பாட்டியின் மரணத்தைத் தொடர்ந்து !
All good things have a shelf life தானே ? 1983-ன் ஏப்ரலில் CBSE தேர்வுகள் முடிந்த கையோடு விடுமுறைகள் என்று சுற்றித் தெரிந்ததை விடவும், அடுத்து என்ன ? என்ற கேள்விக்கு விடை தேடிய நாட்களே ஜாஸ்தி ! சக மாணவர்கள் ஆங்காங்கே அப்ளிகேஷன் போட்டு காலேஜ்களில் சேரத்துவங்க, ஸ்கூல் topper ஆன நானோ திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தேன் ! அந்நேரத்துக்கு எனது மூத்த சகோதரிகள் இருவருக்குமே திருமணமாகியிருக்க, சிக்கல்களில் விழி பிதுங்கியிருந்த தந்தையால் ஏதும் உதவிடும் சூழலில்லை ! "இருக்கும் மிஷின்களில் கொஞ்சத்தை விற்றுக் கடனடைத்த பிற்பாடு ஒரு மிஷினை மட்டும் சென்னைக்கு கொண்டு சென்று, அங்கே ஆபீஸ் போடப்போகிறோம் ; நீ அதைப் பார்த்துக் கொண்டே மாலை நேரக்கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம் !" என்று தந்தை சொன்னபோது அதுவும் ஓ.கே. தானே என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன் ! ஆனால் கடனெனும் எமன் மிச்சம் மீதமின்றி அத்தனை மிஷின்களையும் வட்டியெனும் சித்திரகுப்தனின் துணையோடு இழுத்துப் போனது என் துரதிர்ஷ்டம் ! பாட்டிக்கும் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில், வீட்டுக்கும், மருத்துவமனைக்குமாய் அலைந்து கொண்டிருந்த தாத்தாவிடம் - "காலேஜில் என்னைச் சேர்த்து விடப் பணம் தர்றீங்களா ?" என்று கேட்க எனக்கு நா வரவில்லை ! ஏற்கனவே ஒருமுறை நான் கையேந்தி நின்றதைக் கண்டு கண்கலங்கிய மனுஷனை மறுபடியும் படுத்தியெடுக்க எனக்கு தில்லும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! So எனக்குள் நானே புதையுண்டு போனவனாய் - "தொழில் பண்ணப் போறேன் ; புக் போடப் போறேன் !" என்று ஏதேதோ பெனாத்தித் திரிந்தேன் ! டிசம்பரில் பாட்டி காலமானார் - தாத்தாவின் தோள்களிலேயே !
சகோதரிகள் ஆளுக்கொரு ஊரில் செட்டில் ஆகியிருக்க, பாட்டியும் திடு திடுப்பென மறைந்திருக்க - பெரியதொரு குருவிக்கூடு திடீரென சூன்யமாய்த் தெரியத்துவங்கியது ! வெட்டி ஆபீசராய்ச் சுற்றித் திரிந்தவன் நானே என்பதால், பாட்டியின் வீட்டை ஒதுக்குவது ; தாத்தாவின் அச்சகப் பொறுப்புகளைக் கவனிப்பது என்று அந்த டிசம்பரை நகற்றிய நாட்கள் இன்னமும் நினைவில் நிற்கின்றன ! டவுணுக்குள் அந்தப் பூர்வீக வீட்டில் தாத்தா மட்டும் தனித்திருக்க வேண்டாமென்று தீர்மானித்து எங்கள் வீட்டுக்கு அவரை அழைத்து வந்தோம் ! எதெற்கென்று மறந்து விட்டது - ஆனால் டிசம்பரின் ஒரு இரவில், பூட்டிக் கிடந்த தாத்தாவின் வீட்டிலிருந்து எதையோ எடுத்து வரும் பொருட்டு என்னை அனுப்பினார்கள் ! நினைவு தெரிந்த நாள் முதலாய் அந்தச் சந்துக்குள் போகும் போதெல்லாம் மனம் நிறைந்திருக்கும் சந்தோஷம் அன்றைக்கு முற்றிலுமாய்க் காணாது போயிருந்தது ! நாங்கள் ஓராயிரம் நாட்கள் சிரித்து, மகிழ்ந்து, விளையாடிய அந்த முற்றமும், தாத்தாவின் அந்த வீடும் இருளில் மூழ்கிக் கிடப்பதைப் பார்த்து எனக்குள் பயமே மிஞ்சியது ! கதவைத் திறக்கும் போதே பாட்டியின் குரல் காதில் கேட்பது போலிருந்தது ; அவர் வழக்கமாய் அமர்ந்து காப்பி குடிக்கும் அந்த இடத்தில அவரைப் பார்ப்பது போலவே தெரிகிறது ! போனது எதெற்கென்றே மறந்து போய் தலை தெறிக்க வீடு திரும்பியவனுக்கு அன்றிரவு முதலாய் புதிதாயொரு அத்தியாயம் துவங்கியது - தாத்தாவின் அண்மையின் வடிவத்தில் !
பெரிய வீடே என்றாலும், இரண்டே படுக்கையறைகள் தான் அந்த விசித்திரத் திட்டமிடலில் ! So ஒரு அறையில் அப்பா, அம்மா, தங்கை & தம்பி தூங்கிட, இரண்டாவது அறையை ஆக்கிரமித்திருந்த என்னோடு தாத்தாவும் ஒரு மடக்குக் கட்டிலைப் போட்டுப் படுத்துக் கொண்டார் அன்று முதலாய் ! பாட்டியின் இழப்பு தந்த வலியினை தாத்தா மறைக்க முயன்றாலும், அந்த நிசப்த இரவுகளில், நான் தூங்கிவிட்டேனென்ற நினைப்பிலிருக்கும் தாத்தாவின் விசும்பல்கள் காட்டிக் கொடுத்திடும் ! நாட்கள் தான் எத்தனை பெரிய இழப்புகளையும் கபளீகரம் செய்து ஏப்பமிடும் சக்தியைத் தந்திடுமே ? சிறுகச் சிறுக பாட்டி நினைவுகளில் மாத்திரமே என்றாகிப் போக, கண்முன்னே தத்தளித்துக் கொண்டிருக்கும் மூத்த பேரனைக் கரைசேர்க்க முனைந்தார் ! எனது சென்னை குடிமாற்றலோ ; தந்தையின் சென்னைக் கிளையோ ; மாலைநேரக் கல்லூரிப் படிப்போ கானல்நீராய் மாத்திரமே இருந்திடவுள்ளதை புரிந்து கொண்டவராய் என்னை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புத் திட்டத்தில் சேர்த்து விட்டார் - B.Com படித்திட ! அதனில் சேரும் பொருட்டு, ஒரிஜினல் +2 மார்க் ஷீட் & TC-களில் பச்சை மசிக்கையெழுத்து வாங்கிடும் பொருட்டு, தாத்தாவுக்கு ரொம்பவே நெருங்கிய நண்பரான அரசுப் பள்ளியின் தலைமைஆசிரியரிடம் போன அந்த நாள் இன்னமும் நினைவுள்ளது ! நான் படித்தது வேறொரு பள்ளியில் தான் என்றாலும், எங்கள் பள்ளியின் சார்பில் நான் பேச்சுப் போட்டி ; கட்டுரைப் போட்டி என்று அத்தனையிலும் சுற்றி வருவதை அறிந்திருக்கிறார் அவர் ! "இவனை ஏன் காலேஜில் சேர்க்கவில்லை ? நன்றாகக் படிக்கும் பையனை தொழிலுக்குள் இழுத்து விட்டு இப்படிப் பாழாக்குகிறீர்களே !" என்று அவர் தாத்தாவிடம் ஒரு ருத்திரதாண்டவமே ஆடியது மறக்காது ! ஏதோ சொல்லிச் சமாளித்துக் கையெழுத்து வாங்கிவிட்டுக் கிளம்பிய போது தாத்தாவுக்கு என்னை எப்படியேனும் தூக்கி நிறுத்த வேண்டுமென்ற வைராக்கியம் கூடிப் போனது போலும் !
அன்று முதலாய் எங்களின் இரவு நேரங்கள் நள்ளிரவு வரையுமே ஏதேதோ பேசிடும் படலங்களாய் மாறிப் போயின ! தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றி ; அரசாங்க உத்தியோகத்தில் இருந்தது பற்றி ; குட்டிக்கர்ணமடித்து தொழில் துவங்கியது பற்றி ; தனது சகோதரிகளை, அவர்களது பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கியது பற்றி, என்று ஏதேதோ பேசுவார் ! கல்லூரி படிக்க வாய்ப்புக் கிட்டாது போனது தான் எனக்கு - ஆனால் வாழ்க்கை எனும் பல்கலைக்கழகத்தில் எனக்கு ஒவ்வொரு இரவிலும் கிடைத்த பாடங்கள் அசாத்தியமானவை ! பேசுவோம்..பேசுவோம்..பேசுவோம்... தாத்தா தூக்கத்தில் அசரும் வரைப் பேசுவோம் ! இருளிருப்பின், சீக்கிரமே கதிரவனின் கதிர்கள் ஒளியையும் கொணர்வதே இயற்கையின் நியதியல்லவா ? "லயன் காமிக்ஸ்" எனும் ஒரு கனவு மெதுமெதுவாக உருவம் பெற்றிட, "காதலிக்க நேரமில்லை" நாகேஷ் போல திரிந்து வந்தேன் ! "கதை ரெடி...ஹீரோ / ஹீரோயின் ரெடி...பைனான்ஸ் மட்டுமே தேவை" என்ற நிலையில் அந்தக்குறையையும் நிவர்த்தி செய்தார் தாத்தா ! தடுமாற்றத்தோடு கிளம்பிய வண்டி, ஸ்பைடரெனும் புண்ணிய ஆத்மாவின் சகாயத்தில் டாப் கியரைத் தொட - வாழ்க்கையே திடீரென இளையராஜாவின் மெலடியாய் இனிக்கத் துவங்கியது ! எங்களது இரவு அளவளாவல்களோ இப்போது வேறொரு லெவெலில் தொடர்ந்தன ! தாதாவுக்குத் தொழில்ரீதியான technical stuff ஏதும் பரிச்சயம் கிடையாது ; அவை எல்லாமே சீனியர் எடிட்டரிடமும், அங்கே அந்நாட்களில் பணியாற்றிய பாலசுப்ரமணியன் எனும் மேலாளரிடமும் தான் கற்றுக்கொண்டேன் ! ஆனால் பணம் சார்ந்த விஷயங்களில் ; தொழிலை அணுக வேண்டிய விதங்களில் தாத்தாவின் அறிவுரைகள் அற்புதமானவை ! ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ராவினில் பேப்பரும் கையுமாய் அமர்ந்திருப்பேன் - Lion Comics கம்பெனியின் Balance sheet தனைப் போட்டுப் பார்க்க !! தாத்தா கொடுத்த 40,000 பணம் எந்த ரூபத்தில் கையில் உள்ளதென்பதை நான் எழுதிக் காட்டிட வேண்டும் ! அந்த நாற்பதாயிரம் பணமானது - பேப்பர் இருப்பாய் ; கதைக் கொள்முதலாய் ; புத்தக ஸ்டாக்காய் ; வங்கிக்கையிருப்பாய் இருப்பதை நான் பட்டியலிட்டு எழுதிக் காட்டி, ஒரு ஆயிரம், இரண்டாயிரமாவது லாபம் சம்பாதித்திருக்கிறேனா ? இல்லையா ? என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளாது தூங்க மாட்டார் ! ஒருமுறை தொள்ளாயிரம் ரூபாய்க்கு கணக்கு உதைக்கிறதென்று ராத்திரி ஒரு மணி வரைக்கும் இந்த இளம் அம்பானி உட்கார்ந்திருக்க நேரிட்டது என்றால் நம்புவீர்களா ? இறுதியில் அது எனக்கு புதிதாய் வாங்கிய ஹெர்குலிஸ் சைக்கிளுக்குச் செலவானதென்ற புரிதல் வந்த பின்தான் தூக்கம் பிடித்தது - எங்கள் இருவருக்குமே !
கதைக்கொள்முதல் செய்திட டில்லியில் இருந்த அப்போதைய Fleetway ஏஜெண்ட்களைச் சந்திக்கும் அவசியம் 1984-ன் இறுதியில் எழுந்த போது டிக்கெட் போட்டது, எங்கள் இருவருக்குமே ! அதுவரைக்கும் தமிழ்நாட்டைத் தாண்டியதில்லை எனும் போது "டில்லி வரைக்கும் தனியாவா ??? நானும் வாரேன் !!" என்று தாத்தா கூட வந்தார் ! வெளி மாநிலப் பயணம் என்றவுடன் தாத்தாவின் கெட்டப்பே மாறிடும் ! ஒரு இளம் மஞ்சள் நிற முழுக்கைச் சட்டையும் ; ஒரு பிரவுன் பேண்டும் போட்டுக் கொண்டு வரும் தாத்தாவோடு டில்லியில் சுற்றிய நாட்களில் எனக்கு கொஞ்சம் விநோதமாயிருக்கும் - அந்தக் காதரின் கம்பீரம் குறைகிறதே என்று !! ஆனால் horses for the courses என்று தெரிந்திருந்தார் ! ரயில் பயணத்தின் போது அரட்டை ; சிலுசிலுக்கும் டில்லியில் பேரனுக்கு ஸ்டைலாக ஸ்வெட்டர் வாங்கித் தந்த பின்னே அரட்டை ; கதைக்குவியலோடு ரூமுக்குத் திரும்பியவன் திறந்த வாய் மூடாது ஸ்பைடரையும், ஆர்ச்சியையும் சிலாகித்த போதும் அரட்டை - என்று தொடர்ந்தது கச்சேரி !
1985-ல் ஐரோப்பிய பயணம் ன்று தீர்மானமான பின்னே தாத்தாவுக்கு கொஞ்சம் பயம் ; கொஞ்சம் உற்சாகம் ! ஆயுசுக்கும் கடல்கடந்திரா ; விமானத்தை அண்ணாந்து கூடப் பார்க்கப் பிரியம் கொண்டிரா மனுஷனுக்கு - ஒரு 18 வயசுக்கோமாளியை 23 நாட்களுக்கு கண்ணுக்குத் தெரியா தேசங்களுக்கு அனுப்பவுள்ளதை எண்ணி பயம் ! அதே நேரம் தன் கற்பனைகளில் கூடச் சாத்தியப்படா ஒரு சமாச்சாரத்தினை பேராண்டி செய்ய முனைவதில் உற்சாகம் ! பதட்டத்தோடும், பரிவோடும் கலந்த அரட்டைகளில் அந்தச் சமயங்களின் ஒவ்வொரு ராத்திரியும் கடந்திட்டன ! ஒரு மாதிரியாய் பயணமும் கிளம்பி ; எல்லாம் ஒழுங்காய் நடந்தேறி ; மூன்று வாரங்களின் முடிவில், முழுசாய், ஒழுங்காய், வெள்ளைக்காரி யாரையும் கையோடு கூட்டி வராது, கதைகளை மட்டும் பேரன் கைபிடித்துக் கொண்டு வந்ததில் தாத்தா அடைந்த சந்தோஷம் தொடர்ந்த மாதம் முழுவதும் பிரதிபலித்தது எங்களின் அரட்டையில் ! முதல்வாட்டி பாரின் போய்விட்டு வரும் எவருக்கும், கதை கேட்க மட்டும் வாகாய் ஒரு ஆள் சிக்கினால், காதில் தக்காளிச் சட்னி கசியும் வரை போட்டுத் தாக்கும் ஆசை பொங்கோ பொங்கென்று பொங்கும் ! நான் மட்டுமென்ன விதிவிலக்கா ? "ஜெர்மனி எப்படி இருந்துச்சு தெரியுமா தாத்தா ? லண்டன் தெரியுமா ? ஸ்காட்லாந்து தெரியுமா ? பெல்ஜியம் தெரியுமா ?" என்று கொலையாய்க் கொல்ல, அத்தனையையும் சந்தோஷமாய்க் கேட்டுக் கொள்வார் ! அந்நாட்களில் கடுதாசித் தொடர்புகளே மார்க்கம் எனும் போது, வேலை சார்ந்த progress பற்றிய விஷயங்கள் அத்தனையையும் சீனியரிடம் பகிர்ந்திடுவேன் ; தாத்தாவிடமோ, பொதுவாய் ஷேம நலன்களை பற்றி மட்டுமே !
1984-ல் துவங்கிய இந்த ரணகள ராத்திரிகள் - 1987 வரைக் குறையின்றித் தொடர்ந்தன ! அந்நேரத்துக்குள் நமது தொழிலுமே சிரமங்கள் ஏகமாய்க் குடியேறியிருந்தன - தந்தையின் நிறுவனத்துக்கு 1986-ல் மூடுவிழா நடத்தியதைத் தொடர்ந்து, அவர் பங்குக்கு மிஞ்சியதொரு முரட்டுக் கடன்தொகையினால் ! அந்தக் கடன்களுக்கு வட்டி கட்டியே என் குறுக்கு கழன்று போகத்துவங்கிட, 1987 / 88 முதலே மொக்கைகளின் மத்தியில் தான் வண்டி ஓடத்துவங்கியது ! அந்நாட்களிலுமே எங்களின் இரவு அரட்டைகள் விடாது தொடர்ந்தன - சிக்கல்களிருந்து விடுபடும் வழிகள் தேடி ! ஆண்டுகள் நகர்ந்திட, ஆபீசில் சிக்கல்களோ குரல்வளையை நெறிக்கும் ரேஞ்சுக்கு முன்னேறியிருந்தன ! ஆனால் நான் அவற்றை முழுசுமாய்த் தாத்தாவிடம் சொல்லாது தவிர்த்தே வந்தேன் - அவர் நிம்மதியைக் கெடுப்பானேன் என்று !
1992 புலர்ந்தது ; and அந்தாண்டே தான் தாத்தாவுக்கு மாரடைப்பின் முதல் அத்தியாயத்தை அறிமுகமும் செய்து வைத்தது ! திடகாத்திரமாய் இருப்போருக்கு நோவே வராதென்ற அந்நாட்களது அசட்டுச் சிந்தனைகளா ? அல்லது பொதுவாய் அப்போதைய ஆயுட்காலங்கள் ஜாஸ்தி என்ற நிதரிசனத்தின் மீதான நம்பிக்கையா ? - சொல்லத்தெரியவில்லை ; ஆனால் எவ்வித மருத்துவ செக்கப்புகளும் செய்து கொள்ள அந்நாட்களில் தோன்றவேயில்லை யாருக்கும் ! So ஒரு கோட்டையின் சுவர்களில் விரிசல் விழுவதை ஆயுசில் முதன்முறையாகப் பார்க்க முடிந்தது ! மாரடைப்பு எத்தனை தாட்டியமான மனுஷாளையும் உலுக்கி விடுமென்பதை அந்நாட்களில் மௌனமாய் நான் பார்த்தேன் ! ஒய்வு அவசியம் ; தூக்கம் அவசியம் ; நிம்மதி அவசியம் என்றான பின்னே அந்த ராத்திரி அரட்டைகள் குறையத் துவங்கின ; மாத்திரைகளில், எதிர்காலம் சார்ந்த பயங்களிலும் கரையத் துவங்கின !இதற்கு மத்தியில் எனக்கு அந்த வருஷமே கல்யாணம் செய்து வைக்கத் தீர்மானித்தனர் ! ஆபீசை ஓட்டவே திணறும் அழகில், இப்போதைக்கு கல்யாணமா ? என்று நான் தயங்கினாலும், தாத்தா பிடிவாதமாய் இருந்தார் ! So ஒரு சுபயோக சுபதினத்தில் குடும்பஸ்தனானேன் !
1992 புலர்ந்தது ; and அந்தாண்டே தான் தாத்தாவுக்கு மாரடைப்பின் முதல் அத்தியாயத்தை அறிமுகமும் செய்து வைத்தது ! திடகாத்திரமாய் இருப்போருக்கு நோவே வராதென்ற அந்நாட்களது அசட்டுச் சிந்தனைகளா ? அல்லது பொதுவாய் அப்போதைய ஆயுட்காலங்கள் ஜாஸ்தி என்ற நிதரிசனத்தின் மீதான நம்பிக்கையா ? - சொல்லத்தெரியவில்லை ; ஆனால் எவ்வித மருத்துவ செக்கப்புகளும் செய்து கொள்ள அந்நாட்களில் தோன்றவேயில்லை யாருக்கும் ! So ஒரு கோட்டையின் சுவர்களில் விரிசல் விழுவதை ஆயுசில் முதன்முறையாகப் பார்க்க முடிந்தது ! மாரடைப்பு எத்தனை தாட்டியமான மனுஷாளையும் உலுக்கி விடுமென்பதை அந்நாட்களில் மௌனமாய் நான் பார்த்தேன் ! ஒய்வு அவசியம் ; தூக்கம் அவசியம் ; நிம்மதி அவசியம் என்றான பின்னே அந்த ராத்திரி அரட்டைகள் குறையத் துவங்கின ; மாத்திரைகளில், எதிர்காலம் சார்ந்த பயங்களிலும் கரையத் துவங்கின !இதற்கு மத்தியில் எனக்கு அந்த வருஷமே கல்யாணம் செய்து வைக்கத் தீர்மானித்தனர் ! ஆபீசை ஓட்டவே திணறும் அழகில், இப்போதைக்கு கல்யாணமா ? என்று நான் தயங்கினாலும், தாத்தா பிடிவாதமாய் இருந்தார் ! So ஒரு சுபயோக சுபதினத்தில் குடும்பஸ்தனானேன் !
மற்ற எல்லோரையும் விட, அவரோடு ஜாஸ்தி நேரம் செலவிட்டவன் நானே என்ற முறையில் தாத்தாவின் முடக்கம் உள்ளுக்குள் ஒரு இனமறியா பயத்தை உருவாக்கியிருந்தது ! நினைவு தெரிந்த நாள் முதலாய் தாத்தா உடம்புக்கு முடியாது படுத்ததாய் ஞாபகமே கிடையாதெனும் போது அவரொரு சூப்பர்மேன் என்று நான் நம்பியிருந்தேனோ - என்னவோ ; அவரைப் படுக்கையில் தளர்ந்து பார்ப்பது உள்ளுக்குள் பிசைந்தது ! அதுமட்டுமன்றி, சிக்கல் எதுவானாலும், ஒரு தைரியம் சொல்லவாச்சும் அவர் இருக்கிறாரே என்ற எனது அடிமனது நம்பிக்கை ஆட்டம் கண்டிருந்ததும் புரிந்தது ! நாட்கள் ஓடிட, தாத்தா கொஞ்சமாய்த் தேறியிருந்தார் ! அவரது பூர்வீக வீட்டுக்கே திரும்பிடத் தீர்மானித்தவராய் அங்கே அவர் இடம்மாறிய சமயம், நமது காமிக்ஸ் அலுவலகம் அங்கு தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது ! In fact - 1989 முதலே காமிக்ஸ் அலுவலகத்தை அங்கே மாற்றியிருந்தேன் ! நாள் முழுக்க அங்கே ஓவியர்கள் ; டைப்செட்டிங் ஆட்கள் ; டெஸ்பாட்ச் staff என்று ஜெ ஜெவென இருப்பதை ரொம்பவே ரசிப்பார் ! மையமாய் ஒரு சேரைப் போட்டு அமர்ந்து கொண்டு ஜாலியாய் ஒவ்வொருவருடனும் அரட்டையடிப்பதில் அவரது நாட்கள் உற்சாகம் காணும். நானோ பிரஸ் இருக்கும் இடத்தில பெரும்பான்மை நேரத்தைச் செலவிட்டு விட்டு அங்கே காமிக்ஸ் பணிகளைக் கவனிக்க வேளை கெட்ட வேளையில் போனாலும், தவறாது என்னோடு பேசிக்கொண்டிருப்பார் !
நான் வரும் போது என் முகரையில் தெரியும் சோர்வைக்கொண்டே கணித்து விடுவார் - தம்புடு பையில் தம்படி லேதுவென்று ! கடன்கள் சிறுகச் சிறுக அழுத்துவதை இயன்றமட்டும் வெளிக்காட்டிக் கொள்ளாது நான் சுற்றி வந்தாலும், எனது ஒவ்வொரு எட்டையும் உடனிருந்து பார்த்தவருக்குத் தெரியாதா - என் சிரமங்கள் பற்றி ? நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய்க் கைமீறத் துவங்கிய சமயம் அவரிடம் நிலவரத்தைச் சொல்லாது இருக்க முடியவில்லை ! என்ன நினைத்தாரோ தெரியாது - தொடர்ந்த 90 நாட்களுக்குள் அவர் வாங்கிப் போட்டிருந்த சொத்துக்களின் பெரும்பான்மையை விற்று, எனது தலைக்கு மேல் கத்தியாய்த் தொங்கிக்கொண்டிருந்த கடன் தொகையின் முழுமையையும் தீர்க்கும் பணத்தைப் புரட்டியிருந்தார் ! இருந்த கடன்கள் சகலத்தையும் 1994-ல் தீர்த்து முடித்த போது என்னுள் இருந்தது நிம்மதியா ? நன்றியுணர்வா ? ஒவ்வொரு பள்ளத்தில் கால்விடும் போதும் காப்பாற்றும் இவரின்றி வாழ்க்கைச் சக்கரங்கள் ஓடத்தான் செய்யுமா ? என்ற கேள்வியா ? - தெரிந்திருக்கவில்லை ! தொடர்ந்த நாட்களில் பிடுங்கல்கள் இல்லாது, தொழில் செய்யும் சுதந்திரத்தை ரசித்தவனாய், மிஷினரி இறக்குமதித் தொழிலுக்குள் மெதுவாய்க் கால்பதித்தேன் !
அதுநாள் வரைக்கும் அந்த ஆரம்பத்து 2 ஐரோப்பியப் பயணங்களுக்குப் பின்னே, கடல்கடந்து செல்லும் அவசியம் எழுந்திருக்கவில்லை ! ஆனால் இந்த இறக்குமதித் தொழிலின் நிமித்தமோ, உலக வரைபடத்தை அடிக்கடி பயணப்பட்டியலில் கொணர வேண்டிப் போன போது தாத்தாவுக்கு சொல்லி மாளா வியப்பு ! எங்கெங்கோ பயணங்கள் ; ஏதேதோ வியாபார முயற்சிகள் என்பதில் அளவிட இயலா மகிழ்ச்சி ! ஆனால் என்ன கூத்தடித்தாலும், தாத்தாவைப் பார்த்துப் பேசாது இருந்த நாட்கள் குறைவே ! 1998-ல் ஒரு டிசம்பரின் அதிகாலையில், ஏற்கனவே ஆஸ்பத்திரியில் இருந்தவரை மாரடைப்பின் மூன்றாம் அத்தியாயம் காலனிடம் காணிக்கையாக்கிய தகவல் வந்த போது நானும், என் தம்பியுமே அவரை வீட்டுக்கு கொண்டு வர ஓடினோம் ! சின்ன அந்த அறையின் தரையில் விழுந்து கிடந்தவரை தூக்கிப் படுக்க வைக்கக் கூட அங்கு யாருக்கும் தோன்றியிருக்கவில்லை ; மாரடைப்பு தாக்கிய நொடியில் கீழே விழுந்ததில் நெற்றிப்பொட்டில் இரத்தம் கட்டியிருக்க, தரையில் face down கிடந்தார் ! ஆயுளெல்லாம் எங்கள் ஒவ்வொருவரையும் தூக்கி நிறுத்துவதையே தன் லட்சியமாய்க் கொண்டிருந்தவரை அந்தக் காலையில் தரையிலிருந்து தூக்கிட வேண்டிப் போனது தான் விதியின் வினோதம் !
நான் வரும் போது என் முகரையில் தெரியும் சோர்வைக்கொண்டே கணித்து விடுவார் - தம்புடு பையில் தம்படி லேதுவென்று ! கடன்கள் சிறுகச் சிறுக அழுத்துவதை இயன்றமட்டும் வெளிக்காட்டிக் கொள்ளாது நான் சுற்றி வந்தாலும், எனது ஒவ்வொரு எட்டையும் உடனிருந்து பார்த்தவருக்குத் தெரியாதா - என் சிரமங்கள் பற்றி ? நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய்க் கைமீறத் துவங்கிய சமயம் அவரிடம் நிலவரத்தைச் சொல்லாது இருக்க முடியவில்லை ! என்ன நினைத்தாரோ தெரியாது - தொடர்ந்த 90 நாட்களுக்குள் அவர் வாங்கிப் போட்டிருந்த சொத்துக்களின் பெரும்பான்மையை விற்று, எனது தலைக்கு மேல் கத்தியாய்த் தொங்கிக்கொண்டிருந்த கடன் தொகையின் முழுமையையும் தீர்க்கும் பணத்தைப் புரட்டியிருந்தார் ! இருந்த கடன்கள் சகலத்தையும் 1994-ல் தீர்த்து முடித்த போது என்னுள் இருந்தது நிம்மதியா ? நன்றியுணர்வா ? ஒவ்வொரு பள்ளத்தில் கால்விடும் போதும் காப்பாற்றும் இவரின்றி வாழ்க்கைச் சக்கரங்கள் ஓடத்தான் செய்யுமா ? என்ற கேள்வியா ? - தெரிந்திருக்கவில்லை ! தொடர்ந்த நாட்களில் பிடுங்கல்கள் இல்லாது, தொழில் செய்யும் சுதந்திரத்தை ரசித்தவனாய், மிஷினரி இறக்குமதித் தொழிலுக்குள் மெதுவாய்க் கால்பதித்தேன் !
அதுநாள் வரைக்கும் அந்த ஆரம்பத்து 2 ஐரோப்பியப் பயணங்களுக்குப் பின்னே, கடல்கடந்து செல்லும் அவசியம் எழுந்திருக்கவில்லை ! ஆனால் இந்த இறக்குமதித் தொழிலின் நிமித்தமோ, உலக வரைபடத்தை அடிக்கடி பயணப்பட்டியலில் கொணர வேண்டிப் போன போது தாத்தாவுக்கு சொல்லி மாளா வியப்பு ! எங்கெங்கோ பயணங்கள் ; ஏதேதோ வியாபார முயற்சிகள் என்பதில் அளவிட இயலா மகிழ்ச்சி ! ஆனால் என்ன கூத்தடித்தாலும், தாத்தாவைப் பார்த்துப் பேசாது இருந்த நாட்கள் குறைவே ! 1998-ல் ஒரு டிசம்பரின் அதிகாலையில், ஏற்கனவே ஆஸ்பத்திரியில் இருந்தவரை மாரடைப்பின் மூன்றாம் அத்தியாயம் காலனிடம் காணிக்கையாக்கிய தகவல் வந்த போது நானும், என் தம்பியுமே அவரை வீட்டுக்கு கொண்டு வர ஓடினோம் ! சின்ன அந்த அறையின் தரையில் விழுந்து கிடந்தவரை தூக்கிப் படுக்க வைக்கக் கூட அங்கு யாருக்கும் தோன்றியிருக்கவில்லை ; மாரடைப்பு தாக்கிய நொடியில் கீழே விழுந்ததில் நெற்றிப்பொட்டில் இரத்தம் கட்டியிருக்க, தரையில் face down கிடந்தார் ! ஆயுளெல்லாம் எங்கள் ஒவ்வொருவரையும் தூக்கி நிறுத்துவதையே தன் லட்சியமாய்க் கொண்டிருந்தவரை அந்தக் காலையில் தரையிலிருந்து தூக்கிட வேண்டிப் போனது தான் விதியின் வினோதம் !
இன்றைக்கு ஆண்டுகள் 22 ஓடிவிட்டன ; தலைமுறைகள் மாறி விட்டன ; காலங்கள் மாறி விட்டன ; காட்சிகளும் மாறி விட்டன ; வாழ்க்கையின் ஏற்றங்களையும் பார்த்தாச்சு ; பள்ளங்களையும் உணர்ந்தாச்சு ! நிறைய விஷயங்கள் இன்றைக்கு மறந்தும் விட்டன ; நிறைய வலிகளைக் கடந்தும் விட்டாயிற்று ! யார் வாழ்வில் தான் இழப்புகளில்லை ? யாரிடம் தான் வலிகள் இல்லை ? அன்றைக்கு தூரத்துக் கனவாய்த் தோன்றிய பல விஷயங்கள் இப்போது சுலபமாய்த் தொட்டு விடும் தொலைவில் இருக்கின்றன தான் ! இன்றைய நமது காமிக்ஸ் முயற்சிகளும், இந்த வாசகச் சந்திப்புகளும், இந்த சந்தோஷங்களும், அவர் இருந்த நாட்களிலெல்லாம் சாத்தியப்பட்டிருப்பின், அவர் அடைந்திருக்கக்கூடிய குதூகலத்துக்கு எல்லைகளே இருந்திராது ! என்றைக்கேனும் ஏதேனும் மனதை நெருடிடும் சமயமெல்லாம் தாத்தாவுடன் கழித்த அந்த அரட்டை ராத்திரிகளைத் தான் நினைத்துக் கொள்வேன் ! இந்தப் பதிவின் துவக்கத்தில் என் முன்வைக்கப்பட்ட அந்தக் கேள்வியை வாசித்த போது - 900 ரூபாய்க்கென முக்கால் ராத்திரி முழித்திருந்த அந்த ஒற்றை வேளையை மட்டுமேனும் மறுக்கா வாழ்ந்து அனுபவிக்கும் பொருட்டு, தாத்தாவை கூப்பிட முடிந்தால் தப்பில்லையே என்று நினைத்தேன் ! சொல்லுங்களேன் guys - எனது தேர்வு ஓ.கே.வா ? என்று ?! இதை நான் டைப்படித்து முடிக்கும் போது மணி மூன்று !! கிட்டத்தட்ட அந்த இரவினைப் போலவே என்பதை நினைத்துக் கொண்டே தூங்கப் செல்கிறேன் !!
Bye all & thanks for reading this !! I know this has been one huge rambling....ஆனால் மனதில் பட்டத்தை எடிட் செய்ய முனையாது பகிர்ந்துள்ளதன் பலனிது ! ஓவராய் படுத்தியிருந்தேனெனில் sorry !! See you around !!
![]() |
| மாரடைப்புக்குப் பின்னான போட்டோ என்பதால் தாத்தாவின் சவரம் செய்திரா முகத்தில் தளர்ச்சி தென்படக்கூடும் ! 1992 ...நவம்பர்... என் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவினில் எடுத்த போட்டோ ! |












