Powered By Blogger

Saturday, January 16, 2021

ஒரு பொம்மை புக்கின் விஸ்வரூபம் !!

நண்பர்களே,

வணக்கம். எங்கேயோ, எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது .... ! ரயிலிலோ , பஸ்ஸிலோ ஜன்னலோரம் குந்திக்கொண்டு ஒரு பாக்கெட் முறுக்கையோ ; சிப்ஸையோ கொறித்தபடிக்கே பராக்குப் பார்த்துச் செல்லும் போது, ஆங்காங்கே நிற்கும் மரங்களும், விளக்குக் கம்பங்களும் 'சர்ர் சர்ரென்று ' வேக வேகமாய் எதிர் திசையில் பயணம் ஆவது போலிருக்கும் தானே ? அதெல்லாம் நாம் உள்ளே தள்ளி கொண்டிருக்கும் முறுக்கிலோ ; சிப்ஸிலோ உள்ள எண்ணைமக்கின் உபயம் மாத்திரமல்ல ; theory of relative motion காரணமாகவும் என்று வேதியியலில் கற்றுத் தந்திருந்தார்கள் ! "பில்டப் பலம்மா கீதே ? இன்னிக்கு  என்ன மொக்கைக்கு இது முகாந்திரமோ ?"  என்ற யோசனையா ? வேறொன்றுமில்லை - சமீப காலமாகவே பொழுதுகளும், வாரங்களும், மாதங்களும், இந்த உவமைக்குப் பொருந்திப் போவது போலவே  பிரமைகள் எனக்கு ! தீபாவளி மாசம்...டிசம்பர்..ஜனவரி...என்று அட்டவணையின் இதழ்களெல்லாம், நெடு நெடுவென்ற மரங்களாய் ; கரண்ட் கம்பங்களாய் நிற்க, நமது காமிக்ஸ் ரயிலில் குந்தியபடிக்கே டாப் ஸ்பீடில் ஓட்டமெடுக்கும் போது - அவை சகலமும் பின்னோக்கி செம வேகமாய் travel செய்வது போல் தெரிகிறது !! நிஜத்தில் அவை சகலமும் அதனதன் இலக்கிலேயே தான் நிலைகொண்டுள்ளன ; முன்னே ஓடிக்கொண்டிருப்பது நாம் தான் என்பதை மண்டைக்குப் புரியச் செய்யத் திணறுகிறது ! "அது சரி, இதுலாம் இப்போ இன்னாத்துக்குபா ? ஐன்ஸ்டீன் பாணியில் இன்னாமோலாம் அள்ளி வுடுறியே - இன்னா மேட்டரு ?" என்ற கேள்வியா ? இருக்கே - இருக்கே - தற்சமயமாய்ப் பணியாற்றி வரும் ஆல்பங்களுள் மேற்படிக் கேள்விக்குப் பதில் உள்ளதே !! இன்னும் சொல்லப்போனால், ஐன்ஸ்டீனுக்குமே கூட இங்கு இடமுள்ளது !

ARS MAGNA !! அட்டவணையினில் இடம் பிடிக்காத போதிலும், MAXI வாண்டு ஸ்பெஷல் இதழ்கள் நடப்பாண்டுக்கு வேண்டாமே என்ற தீர்மானத்துக்குப் பின்பாய் திடு திடுப்பென உள்ளே புகுந்த இதழ் ! இவற்றின் உரிமைகளை வாங்கி கொஞ்ச காலம் ஆகி விட்ட  போதிலும் - "வாய்ப்பான தருணம் அமையட்டுமே" என்றபடிக்கு காத்திருப்பில் வைத்திருந்தேன் !  வாய்ப்பை எதிர்நோக்கியது மட்டுமே அந்தத் தள்ளிப்போடலுக்குக் காரணமாகிடாது ; செமத்தியான இந்த த்ரில்லருக்குப் பேனா பிடிப்பது மிரட்டலானதொரு அனுபவமாயிருப்பது சர்வ நிச்சயம் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிந்திருந்ததுமே எனது தயக்கங்களுக்கொரு காரணம்  ! So "அப்பாலிக்கா பாத்துக்கலாம் !" என்றபடிக்கே காலத்தை தள்ளியிருந்தேன் ! ஆனால் நம்ம சின்னப்பம்பட்டி நடராஜனுக்குக் கிடைத்தது போலொரு திடு திடுப்பு வாய்ப்பு அர்ஸ் மேக்னாவிற்கும்  கிட்டுவது தவிர்க்க இயலா நிகழ்வாகிப் போன போது ஓடவும் வழியில்லை ; ஒளியவும் இடமில்லை ! நமது கருணையானந்தம் அவர்களிடம் பந்தை அடித்து விடலாமென சத்தமின்றி அனுப்பிய இரண்டாம் நாளே "இது எனக்கு சுகப்படறா மாதிரித் தெரியலையேப்பா  ; நீயே பாத்துக்கோயேன் !" என்ற போனும், அதன் மறு தினம் வாபஸ் கூரியரும் தான் பலனாகின ! 

'ரைட்டு...அடுத்து என்ன ?' என்ற யோசனைக்குள் மூழ்கிய வேளையில், பணி கோரி விண்ணப்பித்திருந்ததொரு அண்டை மாநிலத்து யுவதி நினைவுக்கு வந்திட, அவரது பணிமாதிரியினை மறுக்கா எடுத்துப் பார்த்தேன் ! "தேவலாமே...வார்த்தைப் பிரயோகங்கள் சற்றே வித்தியாசமாகவும், நன்றாகவும் உள்ளனவே ?!" என்று பட்டது ! So தொடர்ந்த நாட்களில் இந்த முப்பாக ஆல்பத்தின் முதல் பாகத்தின் முதல் பாதியை  - அதாவது துவக்க 23 பக்கங்களை மட்டும் அனுப்பி வைத்தேன் அவருக்கு ! கிட்டத்தட்ட 20 நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டு அவர் அனுப்பியிருந்த ஸ்கிரிப்ட் "மோசமில்லை ; தேற்றிக் கொள்ளலாம்" என்றிருக்க, குஷியில் மீத 23 பக்கங்களையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். இம்முறையோ ஒரு மாதம் எடுத்துக் கொண்டார் எனும் போதே எனக்கு லைட்டாக நெருடல் ; மீதமிருக்கும் 92 பக்கங்களை இவர் என்றைக்கு முடிப்பாரோ ? என்று ! இரண்டாவதாய் வந்த ஸ்கிரிப்ட் ரொம்பவே சுமார் என்றிருக்க, தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டேன் ! கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களை விரயம் செய்து விட்டோமே என்ற சங்கடத்தோடு முழித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து மூன்று பாகங்களும் எக்காளமிட்டது போலிருந்தது ! எழுதி வந்திருந்த முதல் 46 பக்கங்களை செப்பனிடும் முயற்சியில் அரை நாளைச் செலவிட்ட போது பொறுமையைத் தொலைத்ததே புலனாகியது ! இந்த பல்டிகளை முயற்சிக்கும் நேரத்துக்கு மொத்தத்தையும் புதுசாய் எழுதிடுவது லேசு தான் என்று பட்டது ! இவை அத்தனையும் அரங்கேறிய சமயம் தேதி - ஜனவரி 5 ! 

144  பக்க ஆல்பத்தினை பிப்ரவரி முதல் தேதிக்கு ஹார்ட்கவர் சகிதம் உங்களிடம் ஒப்படைப்பதாயின், இனி பிசாசாய் பணிசெய்தாலன்றி கதைக்கு ஆகாதென்பது புரிந்தது ! Fresh ஆக அந்தப் பக்கங்களை எடுத்துக் கொண்டு, மறுக்கா ஒருவாட்டி படங்களை பராக்குப் பார்த்தபடிக்கே நகர்ந்த போது - ஒரு அசாத்தியக் கதைசொல்லியும், ரகளையான ஓவியரும் இங்கே கடைவிரித்திருப்பது கண்கூடாய்த் தெரிந்தது ! ஏற்கனவே நமது ஜேசன் ப்ரைஸ் 3 பாகத் தொடருமே இதே கதாசிரியர் + ஓவியர் கூட்டணி என்பது நினைவுக்கு வந்திட, அந்தக் கதையினில் பணியாற்றிய நினைவுகள் pleasant ஆக வந்து போயின !! எங்கிருந்தோ குடியேறிய வைராக்கியமும், எங்கிருந்தோ கிட்டிய ஆற்றலும் இணைந்திட இந்த மொத்தப் பணியையும் மூன்றரை தினங்களில் பூர்த்தி செய்தேன் ! யோசித்துப் பார்க்கும் போது, இந்தக் கதைக்குள் புகுந்த பின்னே நம்மையும் அறியாதே தொற்றிக் கொள்ளும் அசாத்திய பரபரப்பே என் பேனாவிற்கு றெக்கைகளைத் தந்துள்ளன என்பது புரிகிறது ! And அது முடிந்த சூட்டோடு சூடாய் ; பணி சார்ந்த நினைவுகள் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் போதே இந்தப் பதிவினையும் எழுதி முடித்தேன் ! 

To cut a long story short - இது எனக்கு நானே முதுகு சொரிந்து விட்டுக் கொள்ளும் தருணமே அல்ல ; on the contrary இந்த நொடியும் சரி, ஆல்பம் வெளியாகும் வேளையும் சரி, வரம் வாங்கி வந்திருக்கும் இந்தப் படைப்பாளிகளைக் கொண்டாடிடும்  வேளைகளாகவே முழுக்க முழுக்க இருந்திட வேண்டி வரும் ! இதன் பொருட்டே நான் மாமூலாய்ப் போடும் ஹாட்லைன் பல்லவியினை கூட அரைப் பக்கத்தோடு இந்த ஆல்பத்தில் முடித்துக் கொண்டு, கதாசிரியரே மனம் திறக்கும் முன்னுரைக்கு முன்னுரிமை தந்துள்ளேன் ! செர்பிய மொழியினிலே வெளியான அர்ஸ் மேக்னாவின் தொகுப்பிற்கு அவர் எழுதியிருந்த முன்னுரையைக் கேட்டு வாங்கி, மொழிபெயர்த்துத் தந்துள்ளேன் ! 

இந்தக் கதையைப் பற்றிச் சொல்வதானால் எங்கே ஆரம்பிப்பது ? எங்கே சிலாகிப்பது ? எங்கே எழுந்து நின்று கரவோசை எழுப்புவது ? என்ற குழப்பமே மிஞ்சுகிறது ! இதனை ஏற்கனவே வாசித்திருக்கும் நண்பர்களுக்கு இது மறு ஒலிபரப்பாய்த் தென்படலாம் தான் ; ஆனால் இந்தப் படைப்பினை எத்தினி பேர் ; எத்தினி இடங்களில் உச்சி மோர்ந்தாலும் தப்பில்லை என்றே நினைக்கச் செய்கிறது ! 

இரண்டாம் உலக யுத்தப் பின்னணி...நாஜிக்களிடம் சிக்கித் தவிக்கும் பெல்ஜியம்...அதன் ஜொலிக்கும் தலைநகர் பிரஸ்ஸல்ஸ்...இவையே இந்த 144 பக்க ரகளையின் backdrop ! ஜேசன் ப்ரைஸ் ஆல்பங்களில் 1920-களின் இலண்டனை கண்முன்னே ஓவியர் மிலன் இவனோவிக் கொணர்ந்திருந்தார்  எனில் - இம்முறை ப்ரஸ்ஸல்ஸின் கம்பீரத்தை அதகளமாய்ப் போட்டுத் தாக்கியுள்ளார் ! இந்த ஆல்பத்தின் உருவாக்கத்தைப் பற்றி கதாசிரியரும், ஓவியரும் பகிர்ந்து கொள்ளும் நினைவுகளை, கதையினைப் படித்து முடித்த பிற்பாடு வாசிக்கும் போது - பிரமிப்பில் உள்ளிழுக்கும் மூச்சை யோகப்பயிற்சியில் வெளிவிடுவது போலவே வெளிப்படுத்த வேண்டிப் போகிறது ! ஓவியர் என்னை மிரட்டியது ஒருபக்கமெனில் , கதாசிரியர் இன்னொரு extreme க்கு இட்டுச் சென்றார் என்றே சொல்லியாக வேண்டும் ! இந்த 144 பக்க ஆல்பத்தினூடே பயணித்த மூணரை நாட்களில் நான் கூகுளைத் துளாவிய ஒவ்வொரு முறைக்கும்  நூறு ரூபாய் தர அவசியமாகிப் போயிருந்தால், இந்நேரத்துக்கு கூகுளின் கடனை அடைக்க கன்னத்தில் மருவோடு - ஏதாவதொரு வங்கியில் கன்னக்கோல் வைக்க வேண்டி வந்திருக்கும் ! போர் நிகழ்வுகள்  ; தகரத்தைத் தங்கமாக்கும் ரசவாதக் கோட்பாடுகள் ; பிரஸ்ஸல்ஸின் வரலாறு ; லத்தீன் மொழியின் சொற்றொடர்கள் ; கிருஸ்துவ நம்பிக்கைகளினூடே பின்னிக் கிடக்கும் வரலாற்று நிஜங்கள் ; வேதியியல் ; ஜெர்மானிய தலைவர்களின் யுத்த யுக்திகள் ; Freemasons ; Lodges - என்று நான் கற்றறிய அவசியப்பட்ட சமாச்சாரங்கள் ஒரு நூறு !! எங்கேனும் குழப்பும் இடத்தில், ஆய்வு செய்திடச்  சோம்பல் கொண்டு, எதையேனும் நானாய்ப் பூசி மெழுகினால் அடுத்த பத்தாவது பக்கத்திலேயே அது குமட்டில் குத்தாய்த் திரும்பிட, மிரண்டே போனேன் ! விசித்திரமாய் முதல்வாசிப்புக்குத் தோன்றும் அத்தனை விஷயங்களுக்கும் பின்னே லாஜிக் சாயத்தை அனாயாசமாய்ப் பூசுவது ; வரலாற்றோடு, கற்பனைகளை இணைத்திடும் அந்த அற்புத லாவகம் ; கதையின் எந்தவொரு இடத்திலும் துளி கூட டெம்போ குறைந்திட அனுமதிக்கா ஸ்கிரிப்ட் ; எங்கெங்கோ சிகிச் சிதறி தெறிக்கும் புள்ளிகளின் சகலத்தையும் ஒற்றை இலக்கினில் அழகாய் ஒருங்கிணைக்கும் தேர்ச்சி - என கதாசிரியர் Alcante மூன்று அத்தியாயங்களிலும் அடித்திருக்கும் சிக்ஸர்களைக் கண்டு ரோஹித் ஷர்மாவே பொறாமை கொள்ளலாம் ! 

இன்னமும் எடிட்டிங்கில் ஒரு வண்டித் திருத்தங்கள், மாற்றங்கள் என செய்து வரும் எனக்கு - புதனுக்குள் இதனை அச்சுக்கு கொண்டு செல்வதே இந்த நொடியின் ஒற்றை இலட்சியம் ! தயாரிப்பும் சிறப்பாய் அமைந்து, மொழியாக்கமும் நெருடல்களின்றி கதையை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி காணின், மெய்யாகவே ஒரு மெகாப் பெருமூச்சை விட்டே தீருவேன் ! கிராபிக் நாவல்களின் மொழிபெயர்ப்பினில் எதிர்ப்படும் இடர்கள் பழகி விட்டன ; ஆனால் ஒரு ஆக்ஷன் த்ரில்லரில் இத்தனை நாக்குத் தொங்கிடும் அவசியம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை ஆல்பத்தைப் படிக்கும் போது தான் புரிந்திட இயலும் ! Anyways - இந்த ஆல்பத்தினை உங்களிடம் ஒப்படைக்கும் வேளைக்கும், உங்களின் தீர்ப்புகளுக்குக் காத்திருக்கும் வேளைகளுக்கும் இப்போதிலிருந்தே காத்திருக்கத் துவங்கி விட்டேன் ! Fingers HUGELY crossed !! இதோ அதன் அட்டைப்பட முதல் பார்வை ! நிஜத்தைச் சொல்வதானால், இங்கு தான் இதற்கு முதல்பார்வை ; கதாசிரியரோ இதனை ஏற்கனவே தனது FB பக்கத்தில் அறிமுகம் செய்து விட்டிருக்கிறார் ! முழுக்கவே ஒரிஜினல் டிசைன்கள் தான் - முன் & பின் அட்டைகளுக்கு - கோகிலாவின் வர்ண மெருகூட்டல்களோடு ! 

ஹார்ட்கவரில், மாமூலான நகாசு வேலைகளோடு உங்களைச்சந்திக்கும் போது அட்டைப்படம் இன்னமும் ஒரு லெவல் அதிகமாய் மிரட்டக்கூடும் என்பேன் ! And இதோ உட்பக்க சித்திர + கலரிங் அதகளங்களின் ஒரு மினி சாம்பிள் :

இந்த ஒற்றைப் பக்கத்தினில் மட்டுமே அரங்கேறியுள்ள சித்திர ஜாலங்களை நண்பர் ராஜ் முத்துக்குமார் போன்ற ஓவியப் பார்வை கொண்டோர் விளக்கினால் ஒரு நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கலாம் ; and இந்த சாகஸத்தின்138 பக்கங்களிலும்  சித்திர பிரமாண்டங்கள் காத்துள்ளன ! So "கதை சொல்லும் சித்திரங்கள்" என்ற வர்ணனை விஸ்வரூபம் காணுமொரு அழகான தருணம் பிப்ரவரியில் புலர்ந்திடும் போது - இந்த இதழை உங்கள்  வாசிப்புகளுக்கு எடுத்துக் கொள்ள சற்றே துரிதமாய் நேரங்களை ஒதுக்கிடக்  கோருவேன் !! A masterpiece deserves its fair share of attention !! 

ரைட்டு...குவிந்து கிடக்கும் எடிட்டிங் பணிகளுள் புகுந்திடப் புறப்படுகிறேன் நான் ! 

அப்புறம் ஒரு சின்ன தகவல் : நாளைய தினம் நமது ஆன்லைன் புக்பேர் மாலை நாலரை சுமாருக்கு நிறைவுறும் guys ; 4 நாட்களாய் ஆபீசே கதியெனக் கிடந்துள்ள நம்மவர்கள் நாளையாவது சற்றே விரைவாய் வீடு திரும்பட்டுமென நினைத்தேன் ! So நாளை ஆர்டர் செய்திட எண்ணியுள்ள நண்பர்கள் சற்றே சீக்கிரமே செய்து ஒத்துழைப்பின் சூப்பர் ! நாளைய தினம் எவ்விதம் இருப்பினும், இதுவரைக்குமான 3 தினங்களும் பிரமாதமே ! And by the way, "மரண முள்" தெறிக்க விட்டுக்கொண்டுள்ளது என்பது கொசுறுத் தகவல் ! Bye all ....see you around !! Have a lovely Sunday !

P.S : 2021-ன் சந்தாக்கள் துவங்கிட நடுவில் ஒற்றை மாதத்து (march) இதழ்கள் மாத்திரமே பாக்கியுள்ளன என்பதை நினைவூட்ட  அனுமதியுங்கள் - ப்ளீஸ் ! So இதுவரையிலும் சந்தா எக்ஸ்பிரஸில் டிக்கெட் போட்டிருக்கா நண்பர்கள், தொடரும் நாட்களில் அதற்கான ஏற்பாடுகளை செய்தால் மகிழ்வோம் !! Please guys !

253 comments:

  1. இரண்டாமிடம்.
    பூனையார் முந்திவிட்டார்.

    ReplyDelete
  2. சரி சரி குட் நைட்

    ReplyDelete
  3. இரவு வணக்கம் நண்பர்களே☺️☺️☺️

    ReplyDelete
  4. சிறு வயதினிலே  (டிராகன் நகரம் - அந்த பிரிட்ஜ் கிளைமாக்ஸ்) தவிர Tex அவ்வளவு தூரம் ரசித்ததில்லை. என்னடா சும்மா குதிரை மேல போயி அடிக்கடி சுட்டுகிட்டு இருக்காங்க என்ற ஒரு சலிப்பு. சிவப்பாய் ஒரு சொப்பனம் படித்த பின்புதான் Tex எவ்வளவு பெரிய என்டேர்டைன்மெண்ட் (சார், அந்த கதைக்கு ஒரு கதை இருக்கு அதை அப்பறம் சொல்றேன்னு சொன்னீங்க - இன்னும் டீ-ய காணோமே ?) என்பது புரிந்தது. அதன் பின்னர் நண்பர்கள் உதவியுடன் பல பழைய tex கதைகளை வாசித்தேன். 
    மரணமுள் இதுவரை படித்ததில்லை - ஆனால் நெடுநாளைய tex ரசிகர்களிடம் பேசும்போது இந்த கதைக்கு இவ்வளவு வரவேற்பா என்றெண்ணி வியந்தே போகிறேன் !

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்'ன்ற சத்தத்தோட அது உருண்டுவரும் பாருங்க.. அப்படியே நம்ம கொரோனாவோட அண்ணன்காரனைப் பார்க்கிறா மாதிரியே அப்படியொரு மிரட்டலா இருக்கும்!

      ஜோக்ஸ் அபார்ஷன், நீங்க எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமயே படிங்க - நிச்சயமா ஏமாத்தாது!

      Delete
    3. எனக்கு கதை சொன்ன அந்தக் கதை சொல்லியும் மண்ணுக்குள்...எனத் துவங்கும் வரிகள் உங்களையும் கடந்த காலத்துக்குள் திணிக்க காத்திருந்தால் வியக்க வேணாம்...இறுதி வரை
      முள்ளாய் ்விறுவிறுப்புக்'குத்திர'வாதம்

      Delete
  5. Sir - how many books in February totally?

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த எதிர்பார்ப்புடன் அர்ஸ் மேக்னாவை நோக்கி...

      Delete
    2. //மரண முள் தெறிக்க விட்டுக்கொண்டுள்ளது//

      நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமையும் சார்!

      Delete
    3. ஆர்வமுடன் வெயிட்டிங்

      Delete
  7. ////எங்கிருந்தோ குடியேறிய வைராக்கியமும், எங்கிருந்தோ கிட்டிய ஆற்றலும் இணைந்திட இந்த மொத்தப் பணியையும் மூன்றரை தினங்களில் பூர்த்தி செய்தேன் ! ////

    அபாரமான உழைப்பு எடிட்டர் சார்! 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
    Replies
    1. உழைப்பின் தரத்தை பரிசீலித்த பின்னே இதைச் சொல்ல சாத்தியப்பட்டால் 💪💪 !!

      Delete
    2. பரிசோதிக்கறோம்.. சொல்றோம்! அக்காங்!!

      Delete
  8. ////நாளைய தினம் எவ்விதம் இருப்பினும், இதுவரைக்குமான 3 தினங்களும் பிரமாதமே ! And by the way, "மரண முள்" தெறிக்க விட்டுக்கொண்டுள்ளது என்பது கொசுறுத் தகவல் ////

    சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. விற்பனை அட்டகாசம் தொடரட்டும்.

      Delete
    2. மரணமுள் சாதித்ததில் வியப்பு ஏதுமில்லை,அது சாதிக்காவிடில் தான் வியப்பு மேலிடும்...
      தல அச்சாணி போன்றவர்...

      Delete
  9. வரட்டும் பிப்ரவரி சீக்கிரமே ARS Magna. Preview மிரட்டலாக உள்ளது

    நண்பர்களே.... புத்தக விழாவில் வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் தரலாமா.

    ReplyDelete
    Replies
    1. Yes - that is what they will ask you to do after showing you all the books. Then after u send the list they will provide the total. Then you transfer it and then they will parcel - probably Monday.

      Delete
    2. தாராளமாக கொடுக்கலாம்...

      Delete
  10. மரணம் முள், ஆர்ச்சி மற்றும் மாயாவி கொரியர் எப்போது வரும் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  11. 50 நாளில் 46 பக்கம் எங்கே
    3 அரை நாளில் 144 பக்கம் எங்கே ப்பா உங்களுக்கு உள்ளது காமிக்ஸ் காதலல்ல ஆசிரியரே தான் ரசித்ததை வாசகர்களுக்கு குறித்த நாளில் தர வேண்டுமென்ற காமிக்ஸ் அர்பணிப்பு இதற்காக நாங்கள் பெருமைப்படவேண்டும் இப்படி ஒரு ஆசிரியரை பெற என்ன தவம் செய்தோமோ கடவுளுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நமக்கிது அன்றாடப் பிழைப்பு சத்யா ; தவிர ஏழு கழுதை வயசுக்கு இதே வேலை பார்த்து வருகிறோம் ! ஆனால் புதிதாய் முயற்சிப்போர் தம் பணிகளுக்கு மத்தியில் தானே பேனா புடிக்க சாத்தியப்படும் ?

      தவிர எனக்கே இம்முறை கொஞ்சம் வியப்பு தான் ; ஏதேனும் சொதப்பி மாதத்தின் முதல் தேதி எனும் இலக்கைக் கோட்டை விட்டு விடுவோமோ என்ற பயத்தில் விளைந்த வேகம் என்று சொல்லலாம் !

      Delete
  12. டியர் எடி,

    அர்ஸ் மேக்னா சித்திரங்கள் மிரட்டல் ரகம். சில வருடங்கள் முன்பு இணையத்தில் ஸ்கான்லேஷன் ஆர்வலர்கள் தமிழில் வெளியிட்டபோது படிக்க எத்தனித்தேன். ஆனால், ஆன்லைன் இ-புத்தகம் வாசிப்பிற்கு இன்னும் தோதான பழக்கம் இல்லையென்பதால், நடைமுறைபடுத்த முடியவில்லை.

    புத்தக வடிவிலேயே மொத்த கதையையும் படிக்க வாய்ப்பு கிடைக்கபோவது சிறப்பு. எழுத்தாளர் பெருமையுடன் ஃபேஸ்புக்கில் பகிரந்தபோது அட்டையை பார்க்க முடிந்தது.

    2021 சந்தா, வழக்கம் போல முதல் தவணை மார்ச், மற்றும் இரண்டாவது தவணை ஜூலை வரை கட்டிகொள்ளலாமா என்ற என்னுடைய முந்தைய கேள்விக்கு பதிலளித்தால், பணம் செலுத்த ஏதுவாக இருக்கும்.

    ReplyDelete
  13. அர்ஸ் மேக்னா - அட்டைப்படத்தை ரொம்ப நேரம் பார்த்த பிறகும் - 'சூப்பர்' என்றோ; 'சுமார்' என்றோ; 'ஆவரேஜ்' என்றோ - எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை! இதுவே எனக்கு கொஞ்சம் ஆச்சரியப்படுத்தும் சங்கதிதான்!

    ஒருவேளை.. புத்தகத்தைக் கையிலேந்திப் பார்த்திடும் சமயத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியுமோ என்னமோ!!

    ReplyDelete
    Replies
    1. // சுமார்' என்றோ; 'ஆவரேஜ்' என்றோ - எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை //
      ஒருவேளை உங்க அனாடமி தியரியை இங்கேயும் வெச்சி பார்த்துட்டிங்களோ ஈ.வி...!!!

      Delete
    2. அதையெங்கே பாக்கறதுங்க அறிவரசு ரவி.. அதான் முகத்தை மாஸ்க் வச்சும், உடம்பை ஸ்வெட்டர் போட்டும் முழுசா கவர் பண்ணியிருக்காங்களே?!!

      Delete
  14. படித்து விட்டு....

    ReplyDelete
    Replies
    1. தல இன்னுமா படிக்கறீங்க???? ஒரு நாலு வார்த்தை நல்லதா வந்து சொல்லிட்டு போங்க

      Delete
  15. இது வரை காமிக்ஸில் நாங்கள் எதைத் தேடினோமோ அவை அனைத்தும் இந்த ஒரே கதையில் இருக்கும் போலவே தோன்றுகிறது. மொத்தத்தில் ஒரு அதகளம் காத்திருப்பது புரிகிறது. அர்ஸ் மேக்னாவின் ட்ரைலர் தானோ ஜேஸன் ப்ரைஸ். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  16. மரண முள்தெறிக்கவிட்டுக் கொண்டுள்ளது. நிபடிக்கும்போதே80களின் ரஜினிபட ஓபனிங்மாஸ் காட்சிபார்க்கும் உற்சாகம்.

    ReplyDelete
  17. ///theory of relative motion காரணமாகவும் என்று வேதியியலில் கற்றுத் தந்திருந்தார்கள் !///

    சார்.. இது கணிதவியல்ன்னு மேச்சேரிக்கார் தக்காளி பிரியாணி வாங்கிக் கொடுக்கும் போது சொன்னாரு..

    அப்ப, இப்ப எது உண்மைன்னு வரலாறு சொல்லுது???!!!

    ReplyDelete
    Replies
    1. இயற்பியல்னுதான் வரலாறு சொல்லுது.

      Delete
  18. முன் பின் அட்டைகள் ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன.

    சித்திரங்களும், வண்ணக் கலவைகளும் மிகவும் தனித்து தெரிவது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ஹார்ட் பவுண்ட் அட்டையுடன் கையில் பார்க்கும் போது இன்னும் பல மடங்கு அட்டகாசமாக இருக்கும்.

      Delete
  19. ஜனவரி மாதம் மூன்று இதழ்களும் அருமை. வருடத்தின் ஆரம்பமே ஹிட் என சொல்லலாம்.

    புத்தகத் திருவிழா மூன்று இதழ்களும் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் கண்டிப்பாக ஹிட் என சொல்லலாம்.

    எனவே இந்த மாத ஒவ்வொரு இதழ்களும் சிக்ஸ். யுவராஜ் சிங்கின் ஆறு பந்து ஆறு சிக்ஸ் என்ற சாதனையை நாம் காமிக்ஸ் மூலம் சமன் செய்து உள்ளோம்.

    ReplyDelete
  20. மரணமுள் சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி சார். ரொம்ப நாள் போராட்டத்திற்குப் பிறகு அர்ஸ் மேக்னா வருவது மட்டற்ற மகிழ்ச்சியே! புதையல் அட்வென்ஜர் கதைகளைப் படித்து (பார்த்து) ரொம்ப வருடமாகி விட்டது! மரணமுள் போல இது விற்பனையில் கலக்கும் என்றே எண்ணுகிறேன்

    ReplyDelete
  21. நானும் வந்துட்டேன். அருமையான preview சார். முதலில் புத்தக விழா ஸ்பெஷல் பிறகு அர்ஸ் மேக்னா. மரண முள் சத்தமின்றி சாதிப்பது மகிழ்ச்சியே. மற்ற இரண்டு புத்தகங்கள் விற்பனையில் ஓகே வா சார்???

    ARS மேக்னா மற்றும் ஒரு ஹிட் என்பது இந்த பதிவில் இருந்தே தெரிகிறது. 2021இன் ஆரம்பமே தோர்கல் உடன் தொடங்கி அமோகமாக சென்று கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  22. ARS பற்றிய இந்த பதிவு புத்தகம் எப்போது கைகளில் கிடைக்கும் என்ற ஆர்வத்தை பன்மடங்காக்கி விட்டது சார்.

    ReplyDelete
  23. ARS மேக்னா ஒரு அசாத்திய வெற்றியை கொண்டு வரும் என்று உறுதியாக கூறுகிறேன்.

    ReplyDelete
  24. டியர் சார்..
    "ஆன்லைன் - புத்தக விழாவிற்கு பணம் அனுப்பியாச்சு...i
    அடுத்து , "அர்ஸ் மேக்னா "படிக்க என்ன செய்யலாம் ...?i
    (நான் Maxi _ சந்தாவில் இல்லை.) ....
    தங்களது இந்த பதிவு - படிக்காமல் தவிர்க முடியாது போல் உள்ளதே..?i.

    ReplyDelete
  25. ""இரண்டாம் உலக யுத்தத்தை மாற்றியமைத்திருக்க கூடிய ரகசியம்..''
    இதைப் படித்தபோது..

    ARS MAGNA. THE GREAT ART எனப் பொருள்

    ANAGRAM என்பது ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரின் வரிசைக் கிரமத்தை மாற்றி அமைப்பது

    உதாரணம்

    Listen...silent

    இப்படி இருந்திருந்தால் எனக் கொள்ள வேண்டும்

    ARS MAGNA -ன் anagram -ANAGRAMS

    கதையை பற்றி எடிட்டர் சொல்வதை பார்த்தால்

    இப்படி நடந்திருந்தால் எனப் பொருள் கொள்ள வேண்டும் போல..

    பி.கு.. Hamlet -ல் வரும் TO BE OR NOT TO BE -என்ற phrase -ன் anagram சுவையானது..

    ReplyDelete
    Replies
    1. சரியாக பிடித்து விட்டீர்கள் டாக்டர்.

      இது போன்ற புதிர்களுக்குப் பஞ்சமில்லாத வேட்டைகள் இந்த கதை முழுவதும் விரவிக் கிடக்கின்றன. கதையை படிக்கத் துவங்கி விட்டால், கீழே வைக்கும் எண்ணம் வராத அளவுக்கு அசுர வேகத்தில், புதிர்களினூடாக செல்லும் சாகஸம்...

      Delete
  26. இரண்டாம் உலக யுத்தம் தற்போது நடக்கிறதா ? அல்லது நடக்க வாய்ப்பு இருக்கிறதா ? அல்லது நடக்கப் போகிறதா ?!


    # டவுட்

    ReplyDelete
    Replies
    1. நான் தான் ரொம்ப கன்ப்யூஸ் ஆகிவிட்டேனோ ?!

      அட்டையின் பின் பக்கத்தில் வரும் சொற்றொடர் சரிதானா ?!

      *இரண்டாம் உலக யுத்தத்தையே மாற்றியமைக்கக் கூடியதொரு இரகசியம் !!*


      தெரிந்தவர் சொல்லலாமே ?!

      Delete
  27. \\\இந்த ஒற்றைப் பக்கத்தினில் மட்டுமே அரங்கேறியுள்ள சித்திர ஜாலங்களை\\\

    மரத்தினால் செய்யபட்ட sniper ஐ இப்போது தான் பாரக்கிறேன். (மீ.ம தில் ஏஞ்சல் பேஸ் வைத்திருக்கும் sniper மரத்தினால் செய்யபட்டதா?. ஞாபகம் இல்லை).

    ஹெலிகாப்டர் இறங்கும் போது நாஜி கொடிகள் வெவ்வேறு திசையில் பறக்கிறது. உண்மையில் நிறைய ஓவியர்கள் ஓரே திசையில் பறப்பது போல்தான் வரைவார்கள். ஒரு வாசகர் ஒரு ஓவியத்தை நல்லா இல்லை என்று எளிதில் கூறிவிடுவார்கள். ஆனால் ஏன் பிடிக்க வில்லை என்று வாசகர்களால் கூற முடியாது?. ஆனால் வாசகர்கள் ஆழ் மனதில் கொடி ஹெலிகாப்டர் இறங்கும் போது எப்படி பறக்கும் என்று பதிவாகி இருக்கும். இதை ஓவியத்தில் கொண்டு வருவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கும்.

    ஹெலிகாப்டர் இறக்கைகளை இனைக்க எத்தனை கம்பி இனைப்புகள் பயன்படுத்தி உள்ளனர்!!!. இதற்கு உண்மையில் ஜெர்மன் இன்ஜினியர்களை தான் பாரட்ட வேண்டும். இரண்டாவது உலக போரில் ஜெர்மன் கனிசமான வெற்றி பெற்றது அவர்களுடைய இன்ஜினியர்களால் தான். அதை சிரமம் பார்க்காமல் frame ல் வரைந்த ஓவியருக்கு ஒரு spl salute.

    அந்த காலத்தில் satellite கிடையாது. இறங்க வேண்டிய இடத்தை தெரியபடுத்த சக்தி வாய்ந்த light டை மேல்நோக்கி அடிபார்கள். அதை வைத்து இறங்க வேண்டிய இடத்தை விமானி தெரிந்து கொள்வார். அந்த விஷயத்தையும் ஓவியர் ஹெலிகாப்டர் பறந்து வரும் frame ல் வைத்து உள்ளார்.

    ஹெலிகாப்டருக்கு டயர் இருக்கிறது?!! உண்மையில் டயர் வைத்த ஹெலிகாப்டர் இருந்ததா?. இருக்க வாய்ப்புகள் குறைவு.

    ReplyDelete
    Replies
    1. இணையத்தில் பார்த்தால் நிஜ போட்டோக்கள் உள்ளன..

      அனைத்துக்கும் டயர்கள் உள்ளன..

      //ஹெலிகாப்டருக்கு டயர் இருக்கிறது?!! உண்மையில் டயர் வைத்த ஹெலிகாப்டர் இருந்ததா?. இருக்க வாய்ப்புகள் குறைவு.//

      Delete
    2. அட்டகாசம் கணேஷ்

      Delete
    3. ஓவியங்களை மிகவும் கவனித்து அருமையாக வர்ணித்து உள்ளீர்கள்.

      Delete
    4. நிறைய light weight மாடல்களில் bar(skids) தான் இருக்கும். Heavy Weight மாடல்களில் பெரும்பாலும் டயர் இருக்கும். இதுவும் கூட strict rule கிடையாது. திரைப்படத்தின் முடிவில் ஹீரோ அந்த கம்பியை பிடித்துக்கொண்டு தொங்குவது நம்முடைய நினைவில் மிகவும் தங்கிவிட்டது என்பதால் நமக்கு பார்தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது

      Delete
    5. அருமை....இது போல் பார்ப்பது ....தவறாகிட்டா கதையின் சுவாரஸ்யத்தை கெடுக்குமோ என நினைத்ததுண்டு....ஆனா இதுவும் உண்மையானா சிலாகித்து கூட்டலாம்...தவறானதானா கதைன்னு கடக்கலாம் போனல்லி பேட்டியில் கூறியதன் போல...
      அருமை நண்பரே

      Delete
    6. எலிகாப்டருக்கு இருக்கா இல்லியான்னு தெர்ல. எனக்கு நாலைஞ்சு டயர் இருக்கு 🤣🤣🤣

      Delete
  28. ஆஹா ...உங்கள் பதிவே புத்தகத்தை எப்பொழது கண்களில் பார்ப்போம் என இப்பொழுது இருந்தே ஏங்க வைத்து விட்டது சார்...

    அட்டைப்படமும் சிறப்பு ..வெகு வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  29. மரணமுள் வெற்றி கொடி நாட்டுவதில் மிக மகிழ்ச்சி சார்..தளத்தலியே அவ்விதழின் கண்ணைக்கவரும் வண்ண ஓவியங்கள் அட்டகாசப்படுத்தி இருந்தது.. நேரில் சொல்லவா வேண்டும்...

    ஆன்லைன் ஸ்பெஷல் இதழ்கள் மூன்றும் எப்பொழது என்னை வந்தடையும் என ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்..

    ReplyDelete
  30. 144 பக்க ஆல்பத்தினை பிப்ரவரி முதல் தேதிக்கு ஹார்ட்கவர் சகிதம் உங்களிடம் ஒப்படைப்பதாயின்...

    #####

    மிக்க நன்றி சார்...


    எனில்..


    இனி மாதா மாதம் வழக்கம் போல் இதழ்கள் ஒன்றாம் தேதியே கிடைத்து விடும் என்று சொல்லுங்கள்...:-)

    ReplyDelete
  31. //// And by the way, "மரண முள்" தெறிக்க விட்டுக்கொண்டுள்ளது என்பது கொசுறுத் தகவல் ! Bye all ....see you around !! Have a lovely Sunday !////


    ----யாஹீ...ஹீ..ஹீ....யா...யாயா...ய்யாஆஆஆஆ...
    ஹீ...ஹீ...ஆஆஆஆஆயாஆயாயா...யாஹீ....
    யாஹீ...ஹீ..ஹீ....யா...யாயா...ய்யாஆஆஆஆ...
    ஹீ...ஹீ...ஆஆஆஆஆயாஆயாயா...யாஹீ....

    (சன்டே பூராவும் இதை பார்த்துட்டு இருந்தாலே போதும்)

    ReplyDelete
  32. இதன் பொருட்டே நான் மாமூலாய்ப் போடும் ஹாட்லைன் பல்லவியினை கூட அரைப் பக்கத்தோடு இந்த ஆல்பத்தில் முடித்துக் கொண்டு,

    ######

    இது மட்டுமே கொஞ்சம் வருத்தமான விடயம் சார்..!

    ReplyDelete
  33. டெக்ஸ் மறுமதிப்பு அறிவிப்பு வரும்போது வேணாம்னு கொஞ்சம் குரல்கள் கேட்பதுண்டு;
    சரிதான் இது படுத்துடுமோனு நாமும் நகத்தை கடிக்க வேண்டியது;
    ஆனா புக்கு வந்த பிறகு சேல்ஸ் சும்மா மின்னல்தான்!!!
    யாரு வாங்குவாங்க???? ஒருவேளை இத்தாலிகாரவுகளா...!!!!!

    ஒரு சந்தேகம்🤔
    "வேணாம் வேணாம்னுட்டு மொத அவிங்கதான் வாங்குறாங்களோ..!!!???"

    ReplyDelete
    Replies
    1. ஹி,ஹி இதெல்லாம் கம்பெனி இரகசியமாக்கும்...!!!

      Delete
  34. 1996 ஏப்ரல் மாதம் என்று நினைக்கிறேன்... சேலத்திற்கு போய்விட்டு, திரும்பும் வழியில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த அந்த கடையில் மரண முள் புத்தகத்தை வாங்கி படித்தேன். 10ம் வகுப்பு மாணவனாக இருந்த எனக்கு, அந்த கதையில் வந்த 'ஸ்ஸ்ஸ்' என்ற சத்தமிடும் முள் உருண்டைகளைக் கண்டதும் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்ப்பு.

    எப்பொழுதும் டாமல், டுமீல், சத், கும் என்று களமிறங்கும் டெக்ஸ் வில்லர் குழுவினருக்கு, இந்த சயின்ஸ் பிக்ஷன் வரிசையிலான கதை ஒரு நல்ல மாற்றமாக இருக்கும். மாறுபட்ட டெக்ஸும், அவருடைய நண்பர் மோரிஸ்கோ, டிராகுலா விழியான் யுஸேபியா என அசத்தும் சாகசமாக "மரண முள்" இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்....சூப்பர்... மரணமுள் படித்துட்டு பீதியில் சிலிர்த்தது நல்ல அனுபவம்....!!!

      நீங்க 1996ல் 10வதா...நன்று.
      என்ன நாங்க 14வது படித்துட்டு இருந்தோம். இதுக்கு போய் அங்கிள், வயசான பார்டிங்கிறாங்க...ஹூம்...!!!

      Delete
  35. Ars magna அட்டைப்படமே கலக்குகிறது, பின்னட்டை முன்னட்டையை விட colourful ஆகவும் அட்டகாசமாகவும் இருக்கிறது. அது முன்னட்டையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    தங்களுடைய விமர்சனம் நிச்சயம் கதையை படிக்கத்தூண்டுகிறது.

    Thanks a lot for good selection sir

    ReplyDelete
  36. First attempt in Online Book fare.

    Unbelievable within 10 Mins.. Order list given, amount informed, Order Placed.

    What a dedication Big Salute to Lion Team..

    Look forward more online book fare.

    Thanks to Editor and team.

    ReplyDelete
  37. // A masterpiece deserves its fair share of attention //
    அர்ஸ் மேக்னாவின் பாதிப்பு உங்கள் எழுத்துகளில் புலப்படுகிறது சார்,மிக ஆவலுடன் ஒரு காத்திருப்பு படலம்...!!!

    ReplyDelete
    Replies
    1. பின்னட்டை ஓவியங்களை பார்க்கும்போது,ஜேஸன் பிரைஸ் ஓவியர் என்பதை கணிக்க இயலும் வகையில் உள்ளது...

      Delete
    2. ///அர்ஸ் மேக்னாவின் பாதிப்பு உங்கள் எழுத்துகளில் புலப்படுகிறது///

      ---எக்ஸாக்ட்லி!!!

      Delete
  38. முடிந்தால் ஜனவரியில் பிப்ரவரி முடியுமான்னு பாருங்க சார்...
    ஏனெனில் ஜனவரி வார இறுதியில் முடிவடைகிறது...!!!

    ReplyDelete
    Replies
    1. அதே...அதே... சனவரி கடேசில ரீலீஸ் ப்ளீஸ்!

      "சனவரியில் பிப்ரவரி"--- என தங்களது பதிவு பார்த்து (முன்மாத கடேசியில் அடுத்த மாத புக் வரும் நிகழ்வு) கிட்டத்தட்ட ஓராண்டு இருக்கும் போல...

      வழக்கமாக முன்பே புக் தாருங்கள் என தங்களுக்கு பிரசர் தரும் அன்பு நண்பர்கள் தலீவர், ரவி & KS ன் பதிவுகளுக்கு "கவுன்டர்" தர கை பற பறக்கும்...

      இம்முறை நானும் அவர்களோடு கை கோர்த்துக் கொள்கிறேன்.

      புக் எப்ப சார் அனுப்புவீங்க😉😉😉😉

      Delete
    2. அது பிரசர் எல்லாம் இல்லை டெ.வி...
      அன்பு கோரிக்கை அவ்வளவே...
      ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் ஹா,ஹா....
      சார் அதை எல்லாம் சீரியஸா எடுத்துக்க மாட்டாருங்கோ...!!!

      Delete
  39. ///எங்கிருந்தோ குடியேறிய வைராக்கியமும், எங்கிருந்தோ கிட்டிய ஆற்றலும் இணைந்திட இந்த மொத்தப் பணியையும் மூன்றரை தினங்களில் பூர்த்தி செய்தேன் !///

    👏👏👏

    ReplyDelete
  40. அர்ஸ்மேக்னா அட்டைபடம்... வாவ்....சும்மா இதுவரை 40,50 ஆண்டுகளில் வந்த எல்லா அட்டைகளையும் தூக்கி சாப்பிடுது.

    என்னா கலரு...நீல வண்ண பனிப் போர்வையில் அந்த இரு சோடி விழிகளில் தெறிக்கும் பயம்...சும்மா மிரட்டுகிறது சார்.

    பின்னட்டை ரவி சொன்னா மாதிரி அக்மார்க்கா அப்படியே ஜேசன் ப்ரைஸை உறித்து வைத்துள்ளது.

    முன்னட்டயே பிரமாதம்.

    "ஒரு பானை பொங்கலுக்கு ஒரு பருக்கை பதம்"-- என்பது போல அசத்தவிருக்கும் சித்திர விருந்துக்கு இந்த ஒரு பக்கமே அத்தாட்சி!

    லாங்ஷாட் ஹெலிகாரு, குளோஷப் ஹெலிகாரு, சிவப்பு பில்டிங்...செம செமயான ஓவியங்கள்.

    ஓவியங்கள் ரசிக்கும் என் போன்றோருக்கு கொண்டாட்டம்தான்.....!!!

    தங்களது அதிரடிகள் என்றும் மெகா ஹிட்தான் சார். இம்முறை 3நாளில் 3பாகங்கள் என T20 பாணியில் அடி வெளுத்து உள்ளூர்கள்....!!!

    பிப்ரவரி 1விரைந்து வரட்டும்....!!!

    ReplyDelete
  41. சார் அட்டைப் படம் பிரிச்சு மேயுது....வண்ணப்பக்கம் அடி தூள்....ஜேசன் பிரைஸ்க்கு ஏற்கனவே ஸ்பெசல் மையை தருவித்தீர்கள்....அது போல இதுவுமா....கதை பட்டய கிளப்புவதாய் தெரிவித்தது கூடுதல் மகிழ்ச்சீ.....

    ReplyDelete
    Replies
    1. //ஒருமுறை ஒரு டெக்ஸ் மினி சாகசத்துக்கு கதை எழுதிக்கொண்டிருந்தேன் ; அதற்கான ஆர்ட்டிஸ்ட் ரொம்பவே மெதுவாய் படம் போட, எனக்குப் பொறுமையின்றி பக்கம் 10 -ல் நிறுத்தி விட்டு வேறு பணிக்குள் புகுந்து விட்டேன் ! ரொம்ப காலம் கழித்து ஆர்ட்டிஸ்ட் மீத ஸ்கிரிப்ட்டைக் கேட்ட போது - "ஆண்டவா - இவ்வளவு காலம் கழித்து அந்தக் கதையை எப்படிக் கையாள்வதோ ?" என்ற கலக்கத்தோடு அமர்ந்தேன் ; ஆனால் எனது உள்ளுணர்வுகள் அந்தக் கதையை அடுத்த 2 மணி நேரங்களுக்குள் எடுத்துச் சென்று பூர்த்தியடையச் செய்தன ! என்னையும் அறியாமலே கதாபாத்திரங்கள் தாமாகவே கதையை வழிநடத்திடுவதை உணர்ந்தேன் ! எனக்காக வேறு யாரோ எழுதித் தந்தது போல் அன்றைக்கு உணர்ந்தேன் ! கலைவடிவங்களில் ; குறிப்பாய் இசைத்துறையில் உள்ளோருக்கு இது நன்றாகவே புரியும் என்பேன் ; ஒவ்வொரு நோட்ஸிலும் இசையமைப்பாளர் யோசித்துக் கொண்டிருக்க மாட்டார் ; திடீரென தோன்றும் inspiration வழிநடத்திடும் அவரை ! எங்களை போல காமிக்ஸ் உருவாக்கும் சாமான்யர்களுக்கும் இதுவே நடைமுறை ; கதைகள் திடீரென தாமரை உயிர் கொண்டு ஓட்டமெடுப்பதுண்டு ! //
      போன் பதிவுக்கு முந்தய பதிவு....நீங்க உடனடியாக முடித்த அதிசயம் இது போன்ற வரம் வாங்கிய தூரிகைக் கரத்தால்தானே

      Delete
  42. விஜயன் சார், ARS MAGNA இங்கே நீங்கள் கொடுத்த தகவல்கள், கதாசிரியர் மற்றும் ஓவியர்களின் உழைப்பு பிரமிக்க செய்கிறது.

    ReplyDelete
  43. ஆன்லைன் புத்தகத் திருவிழாவில் எனக்கு வேண்டிய சில புத்தகங்களை வாங்கி விட்டேன்.

    நமது அலுவலக பணியாள நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள், இது போன்ற ஒரு நீண்ட விடுமுறை நாட்களில் பணி செய்யும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்றி.

    ReplyDelete
  44. // ஆனால் ஒரு ஆக்ஷன் த்ரில்லரில் இத்தனை நாக்குத் தொங்கிடும் அவசியம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை ஆல்பத்தைப் படிக்கும் போது தான் புரிந்திட இயலும் ! //
    நில் கவனி வேட்டையாடு இதழ் கண்முன்னே ஒரு ஆக்‌ஷன் சினிமாவை நிறுத்தியது போன்ற மேஜிக்கை அர்ஸ் மேக்னாவும் நிகழ்த்தும் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  45. அட்டைப்படம் பிரமாதம். நேரில் தருசிக்கும்போது இன்னும் கலக்கும். உட்பக்க ரெயிலர் இல் ஓவியங்கங்கள் அதகளப்படுத்துகின்றன. ஓவியர் பிரேமுக்கு பிரேம் நம்கண்முன் காட்சியை அச்சு அசலாக விரியவைக்கின்றார். மேலும் எமக்கு இந்த படைப்பை எப்படியாவது தந்து விடவேண்டும் என்னும் உத்வேகம்தான் சார், உங்களை மூன்றே நாளில் மொழிபெயர்க்க வைத்தது. Hats off you Sir.
    ஆவலுடன் இதழுக்காக மற்றும் ஆன்லைன் புத்தகதிருவிழா முடிவுகளுக்காக waiting....

    ReplyDelete
  46. ‘தல’ சில்லுகளில் மூக்குகளை சிதறித்துப் பார்த்தே பழக்கப்பட்ட எமக்கு “ மரணமுள்” ரொம்பவே வித்தியாசமான கதை என்பதில் ஐயமில்லை. அதுவும் ஸ்ஸ்ஸ்ஸ் எனும் சத்தத்துடன் உருண்டைகள் உருண்டோடி வருவதை எண்ணும்போது....முதுகுத்தண்டு கூசுகிறது. ‘மரண முள்’ விற்பனையில் சாதிக்கும்.

    ReplyDelete
  47. //
    Lion Comics26 August 2020 at 21:54:00 GMT+5:30
    இந்த இதழில் இதுவரையிலும் நாம் முயற்சித்திருக்கா சமாச்சாரம் ஒன்றினை நிஜமாக்கிடும் திட்டம் உள்ளது ! பார்ப்போமே அந்நேரம் !// சார் அந்த சமாச்சாரம் என்ன என்று புத்தகம் வந்தால் தான் தெரியுமா சார்??

    ReplyDelete
    Replies
    1. ARS மேக்னா ஹைப் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே. வாரதோ Feb 1.

      Delete
    2. What is the surprise Vijayan sir? :-) waiting!!

      Delete
    3. அதனை நடைமுறைப்படுத்த அவகாசம் இருப்பது சந்தேகம் போல் தோன்றுகிறது சார் ! We'll give it a good try though !

      Delete
    4. No problem sir. எனக்கு புத்தகம் வந்தால் போதும்.

      Delete
  48. நண்பர்களே...

    இன்றைக்கு 2021 ஆன்லைன் புத்தகவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.

    இந்த ஆன்லைன் புத்தகவிழா சிறப்பிதழ்கள்

    1.மரண முள்
    2.நயூயார்க்கில் மாயாவி
    3.ஆழ்கடலில் ஆர்ச்சி
    ---3ம் விற்பனையில் சக்க போடு போட்டிருக்கும்.

    இன்கம்பாரபிள் இரும்புக்கையார் வேறு லெவல். ஆர்ச்சி பழமையை நினைவூட்டும் பெட்டகம் பலருக்கும். தல தாண்டவம் மீண்டும் மீண்டும் ஓங்காரமாக ஓங்கி ஒலித்து இருந்ததை எடிட்டர் சார் தெரிவித்து இருந்தார்.

    இந்த ஆன்லைன் ஸ்பெசல்களை பலரும் ஆவலுடன் அள்ளி இருப்போம்.

    குறிப்பாக ஒரு 10 நண்பர்களுக்கு இந்த ஆன்லைன் ஸ்பெசல்கள் மறக்க இயலா நினைவுகளை கொண்டிருக்கும்.

    காரணம் தங்களுக்கு பிடித்த நாயகனை(நாயகியை) பற்றி ஒரு மினி கட்டுரை எழுதும் போட்டியில் வென்று இந்த ஸ்பெசல்களை பரிசாக வென்றுள்ளனர்.

    "காமிக்ஸ் எனும் கனவுலகம்" வாட்ஸ்ஆப்&முகநூல் குழு சார்பில் போன மாதத்தின் கடைசி வாரத்தில் இந்த போட்டிகள் நடந்தது.

    17 நண்பர்கள் தங்களது ஆதர்ஷ நாயகனை பற்றி பிரமாதமாக எழுதி இருந்தனர். நானும் அன்பு தம்பி பிளைஸி பாபுவும் நடுவர் பொறுப்பை ஏற்று இருந்தோம்.
    மிக மிக கடினமான போட்டியில் முதல் பரிசை தட்டி சென்றது லயன் காமிக்ஸின் முதல் நாயகி மாடஸ்தி பற்றி எழுதி இருந்த அருமை நண்பர் டாக்டர்AKKராஜா.

    இந்த போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் எழுதி இருந்தவைகள் தெரிவிப்பது, பெரும்பாலும் தத்தம் நாயகரோடு உயிர்ப்பான பயணமே செய்து வருகிறார்கள் என்பதே!

    டாப் 10ல் வந்து நாளை இந்த 3இதழ்களை பெறப்போகும் நண்பர்கள்.......

    1.AKK ராஜா.

    2.இளவிஜய்.

    3.ரம்மி & மரு.பெ.பார்த்தீபன்.

    5.ஷாஜஹான்.

    6.தலைவர் பரணிதரன்.

    7.(7டூ10வது இடங்களை ஷேரிங்) கிரிஜி, சுரேஷ் தனபால், கிரிதரசுதர்சன் & ஓவியர் அப்பு சிவா.

    ஊக்கப்பரிசாக இரும்புக்கையார் இதழை பெறப்போகும் 7நண்பர்கள்...

    11&12.JSC ஜானி & ஜனா(J).

    13,14&15.செந்தில்சத்யா, சரவணகுமார் &KK.

    16&17.வெற்றி&அபிஷேக்.

    நண்பர்களின் கட்டுரைகளை மதிப்பீடு செய்வது அத்தனை எளிதாக இல்லை. மிக மிக கடினமான ஒன்றாக இருந்தது. மிக சிறிய வித்தியாசமே நிலவியது மதிப்பீடுகளில்....!!!!

    வெற்றி பெற்று இதழ்களை பெறப்போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.💐💐💐💐💐💐💐

    இத்தகைய போட்டியை நடத்திய கனவுலகம் நண்பர்களுக்கு பாரட்டுகள்.🌹🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
  49. மேற்கண்ட போட்டியில் முதல் இடம் பெற்ற கட்டுரை....

    *ஆண்கள் செய்யும் வீரதீர செயல்களில் எனக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டு*

    இளவரசியின் இந்த வார்த்தைகள் எவ்வளவு பொய்யானவை என்னும் உண்மையை என் சிறு வயதிலேயே லயன் காமிக்ஸ் ஆழமாக என் மனதில் பதியவைத்தது... ஆம்.. என்னைப் பொருத்தவரை இளவரசி ஆண்களுக்கு இணையானவர் அல்ல... அவர்களை விட பன்மடங்கு சிறந்தவர்...

    சகோதர சகோதிரிகளில்லா என் இளமைக் காலத்தில், ஆண்களே சிறந்தவர்... பெண்கள், என் தாயைப் போல் ஆசிரியை வேலைக்கு படித்திருந்தாலும்... சமையல் செய்ய மட்டுமே உகந்தவர்கள், என்னும் கண்ணோட்டம் எனக்கு எப்பவுமிருந்தது...

    எனது காமிக்ஸ் காதல் ஸ்பைடர், ஆர்ச்சி, மாயாவி இவர்களால் தான் வளர்க்கப்பட்டது... எங்கு நோக்கினும் ஆண்களே சூப்பர் ஹீரோக்களாக இருந்த அந்த காலக்கட்டத்தில்... ஒரு மின்னல் கீற்றைப் போல் தோன்றினார் இளவரசி... அவரது கதைகள் என்னை முழுவதும் மாற்றின... ஒரு male chauvinist pigஆக இருந்த என்னை அடியோடு மாற்றியவர் இளவரசி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை....

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல... இளவரசியின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக... இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட வரிகள் இடம் பெற்ற *கழுகு மலைக் கோட்டையை* கொஞ்சம் அலசுவோம்...

    இந்த அற்புதக் கதையை அறியாதார் யாருமிருக்க மாட்டார்கள்... வில்லி கார்வின் ஒரு இளம் பெண்ணைக் காப்பாற்றப் போய்... சதியில் விழுந்து சிறைப்படுகிறான்... அந்தப் பெண் இளவரசியை மிரட்டுகிறாள்... என்னுடைய கோரிக்கைகளை ஏற்காவிட்டால் உன் நண்பனைக் கொன்று விடுவோம் எனக் கூறுகிறாள்... அதற்கு இளவரசியின் பதில்..!? என் உயிர் நண்பனைக் கடத்தி என்னையே மிரட்டுகிறாயா..!? கார்வின் மேல் அவர்கொண்ட வாஞ்சை கடுங்கோபமாக மாறி அந்தப் பெண்ணை ஒரே அறையில் கொல்கிறார்... எப்பொழுதும் யோசித்து முடிவெடுக்கும் இளவரசி, கார்வினிடம் கொண்டுள்ள உயிர் நட்பை நம் கண்முன் நிறுத்துகிறார்..

    ReplyDelete
    Replies
    1. அடுத்து கழுகமலையின் அடிவாரம் செல்லும் இளவரசி அங்கு பிளெட்ஸர் என்னும் முதியவரை சந்நக்கிறார்... *இந்த உலகிலேயே நான் வெறுப்பவை எவை தெரியுமா...!? ஒன்று பெட்ரோல் நாற்றமடிக்கும் வாகனங்கள்... இரண்டாவது... பெண்கள்...* இவையே பிளெட்ஸ்ர் இளவரசியை வரவேற்க்க பயன்படுத்தும் வார்த்தைகள்....

      இளவரசி அசரவில்லை... தனது வீரத்தால்... அறிவால்... பிளெட்ஸரின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறார்... குன்றின் உச்சிக்கு போக முடியாது என பிளெட்ஸர் கூற... *குன்றின் உச்சிக்கு போக முடியாதென சொல்கிறீர்கள்.. ஆனால் நான் எப்படியும் உயரே போயாக வேண்டும்... போவதில் உள்ள சிக்கல்களை மட்டும் கூறுங்கள்... அவைகளை எப்படித் தீர்ப்பது என்பதை யோசிப்போம்...* தன்னம்பிக்கை ஊட்டும் இளவரசியின் வைர வார்த்தைகள்...
      பல இன்னல்களைக் கடந்து குன்றின் மேலேறும் இளவரசியின் வீரம் நம் மனதைக் கொள்ளை கொள்கிறது... அங்கோ கார்வின் கயவர்களின் போதை மருந்தின் கட்டுப்பாட்டில் சுய அறிவை இழந்திருக்கிறான்... இளவரசியையே அடையாளம் தெரியாமல் கொல்லவும் பார்க்கிறான்... விரோதிகளை சுலபமாக அழித்திடும் இளவரசி... கார்வினின் நிலை கண்டு கலக்கம் கொள்கிறார்...

      அறிவுஜீவியான இளவரசி... கார்வினைக் காக்க... தன் உயிரை துச்சமென கருதி... பிளெட்ஸரின் உதவியுடன் நாடகமாடத் துணிகிறார்... பிளெட்ஸரை தனக்கு மயக்க ஊசி போட வைக்கிறார்... பின்னர் இளவரசியின் ஆணைப்படி பிளெட்ஸர் கார்வினை எழுப்புகிறார்... இளவரசி குண்டடிப்பட்டதாகவும் நான்கே மணி நேரத்தில் மருத்துவமனை கொண்டு செல்லாவிட்டால் இளவரசியின் உயிர் போய்விடுமென நாடகமாடுகிறார்... கார்வின் துளியும் யோசிக்காமல், தன மனப்பிராந்தியை புறந்தள்ளி, இளவரிசியை கழுகு மலையிலிருந்து இறக்குகிறான்... தெளிவும் பெறுகிறான்...

      இங்குதான் இளவரசியை எனக்கு மிகவும் பிடித்துப் போனது... 800 அடி மலையுச்சியிலிருந்து இறங்குவதென்பது மிக்க கடினம்... திடகாத்திரமான, அனுபவமுள்ள, மலையேறும் வீர்ர்களே திணறக்கூடிய செயலது... ஆனால் இளவரசியோ... தன் உயிர் நண்பனைக் காக்க தன்னுயிரையும் பொருட்படுத்தாது, தன்னையே மயக்கமுற வைத்து, தன் நண்பன் மன நோயில் இருந்து குணம் பெற வழி வகுக்கிறார்... பொதுவாக கார்வின் இளவரசிக்காக எதுவும் செயவான் எனும் எண்ணம் அனைவருக்குமுண்டு... ஆனால் இளவரசியின் ஆழ்ந்த அன்பே.... நட்பின் மேல் கொண்ட ஈடில்லா நம்பிக்கையே... கார்வினை ஒருமுகப்படுத்தி குற்ற வாழ்க்கையிலிருந்து நல்வழிப்படுத்தியது...

      அனாதையாக வளர்ந்து... உணவிற்காக வேறு வழியின்றி குற்ற வாழ்க்கையை கையிலெடுத்து, அதில் நிகரற்றவர் என நிலை வரும் போது... அனைத்தையும் துறந்து... நேர்வழியில் செல்வதே சாலச்சிறந்தது என தன் வாழ்வின் அனைத்து கஷ்டங்களையும்... தெளிவோடு எதிர் நோக்கி... ஆணுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவரல்ல... உண்மையில் பெண்ணுக்கு பிறகுதான் ஆண் என்னும் எண்ணத்தை என் ஆழ்மனதில் விதைத்த... இளவரசி... *மாடஸ்டி பிளைஸியே*... என் மனங்கவர்ந்த காமிக்ஸ் மற்றும் வாழ்க்கை பாடத் தலைவி...

      ----டாக்டர் AKK ராஜா, கரூர்.

      Delete
    2. சூப்பர் கட்டுரை ...
      மாட ஸ்டியின் கதையில் உள்ள முக்கியமான ஈர்ப்புகளை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
      ம்ஹூம்.. என்ன பிரயோசனம். ஒரு ஸ்லாட் தானே வாங்க முடிகிறது..

      Delete
  50. மொழிபெயர்ப்பின் அசாத்தியங்களை சாத்தியப்படுத்திய அர்ஸ் மேக்னாவுக்கு ஜே..

    ReplyDelete
  51. உண்மையிலேயே அர்ஸ் மேக்னா ஒரு மாஸ்டர்பீஸ் தான், அதை தங்கள் கைவண்ணத்தில் காண ஆவலுடன் உள்ளேன்.

    உள்ளபடியே டான் பிரவுன் நாவல்களில் காணப்படும் சிக்கலான குறியீடுகள், அவை உணர்த்தும் மறை பொருள்கள், அவை தாங்கி நிற்கும் வரலாற்றுக் குறிப்புகள், அதன் மூலமாக கடத்தப்படும் இரகசியங்கள், அவைகளை சரியான முறையில் கோர்த்து செய்தியை வெளிக்கொணரும் நாயகனின் அறிவுக்கூர்மை முதலியவற்றை கண்டு பிரமித்து இருக்கிறேன். இந்தக் கதையும் அதற்கு சற்றும் சளைத்தது இல்லை, மாறாக இதன் அசாதாரணமான வேகமும், கூடுதலான ஆக்சன் களமும் ஒருபடி மேலாக நம்மை அசரவைக்கப் போகிறது.

    இந்த கதையை மொழிபெயர்ப்பு செய்வது நிச்சயம் சவாலான பணியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை, ஆனால் அதை மூன்றரை நாட்களில் முடிப்பதென்பது தங்களின் பணிசார்ந்த வல்லமையும் கரைகடந்த ஆர்வத்தை பறைசாற்றும் தருணமாக வெளிப்பட்டு இருக்கிறது. வெல்டன் சார், ஆனால் புதிய மொழிபெயர்ப்பாளருக்கு முதல் கதையாக இதை அனுப்பி... பாவம்... அவரைத் தெரித்து ஓடச்செய்து விட்டீர்களே...

    வாண்டு ஸ்பெஷல் மேக்சிக்கு பதிலாக இது என ஓட்டெடுப்பு நடத்தியபோது கார்ட்டூன் பிரியனாக இருந்தாலும் தயங்காமல் இதற்கு ஓட்டளித்ததே இந்த கதையின் மீதான அசாதாரண ஈர்ப்பின் காரணமாகத்தான். இந்த கதையின் ஒவ்வொரு புதிரும், அதைக் கட்டமைக்க வரலாறு சார்ந்து பிணைக்கப்பட்ட குறியீடுகளும், அதை விடுவிக்க நாயகன் கையாளும் நுணுக்கமான வழிமுறைகளும், ஏதோ இல்லாத அப்ஸ்ட்ராக்ட் கிளைமாக்சை யூகித்து வாசிக்கும் நம் பிடரியில் ஓங்கி சாத்தி பக்கா லாஜிக்கல் கிளைமாக்சை நம்முன் நிறுத்தும் கதாசிரியரின் வல்லமை அப்பப்பா...!

    சாதாரண புதையல் தேடும் கதையல்ல இது!
    பல்லாயிரம் கதைகளிடையே கிடைத்த ஓர் புதையல்!

    ReplyDelete
  52. நான் தான் ரொம்ப கன்ப்யூஸ் ஆகிவிட்டேனோ ?!

    அட்டையின் பின் பக்கத்தில் வரும் சொற்றொடர் சரிதானா ?!

    *இரண்டாம் உலக யுத்தத்தையே மாற்றியமைக்கக் கூடியதொரு இரகசியம் !!*


    தெரிந்தவர் சொல்லலாமே ?!

    ReplyDelete
    Replies
    1. சரிதான், கதை நடக்கும் காலகட்டத்தில் இருந்து பார்க்கும்போது, அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும், கதையோடு பயணித்து விட்டு இதைப் பாருங்களேன்...

      Delete
    2. Super👍

      Caption பார்த்து புத்தகம் வாங்க நினைக்கும் புதியவர்களுக்கும் இது பொருந்துமா?!

      Delete
  53. P.S : 2021-ன் சந்தாக்கள் துவங்கிட நடுவில் ஒற்றை மாதத்து (march) இதழ்கள் மாத்திரமே பாக்கியுள்ளன என்பதை நினைவூட்ட அனுமதியுங்கள் - ப்ளீஸ் ! So இதுவரையிலும் சந்தா எக்ஸ்பிரஸில் டிக்கெட் போட்டிருக்கா நண்பர்கள், தொடரும் நாட்களில் அதற்கான ஏற்பாடுகளை செய்தால் மகிழ்வோம் !! Please guys !

    இன்னும் ஒரு மாதம் தான், அப்புறம் நோ அரக்க பரக்க ஆர்டரிங். டப்பி வூடு தேடி வரும் 😁. கூரியர் வந்தாச்சு. தலைவலி பிரச்சனை கம்ப்யூட்டர் கண்ணாடி போட்டதில் தீர்ந்தது. மரணமுள் தான் முத போணி.

    ReplyDelete
  54. வாவ்...இன்றே இதழ்கள் கிடைத்து விட்டன..ஆர்ச்சி ,இரும்புக்கை மாயாவி ,டெக்ஸ் இணைப்புடன் அட்டகாசமான லக்கி போஸ்டரும் கூட ..சூப்பர் சார்..

    மரண முள் சான்ஸே இல்லை..அட்டைப்படமும் சரி ,உள்ளே சித்தரங்களும் ,வண்ணங்களும் சரி..இந்த முறை செம க்ளாசிக் .முன் பின் இருப்பக்க அட்டைப்படங்களும் அசத்தல் ரகம்..

    நியூயார்க்கில் மாயாவி ,ஆழ்கடலில் ஆர்ச்சி இந்த இரண்டு இதழ்களும் அமைப்பில் அட்டைப்படத்தில் என அதுவுமே போட்டி போடுகிறது..

    ஆன்லைன் ஸ்பெஷல் இதழ்கள் இன்று திடீரென வருகை புரிந்து ஆனந்தப்படுத்தி விட்டது.அதுவும் இந்த இதழ்கள் அனைத்தும் பரிசாக வந்த இதழ்கள் எனும் பொழுது வாட்ஸ்அப் குழுவில் போட்டி வைத்த ,தேர்ந்தெடுத்த ,பரிசளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும் ...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வந்தாச்சா...அருமை...என்ஜாய்..இப்பதா ஊர்லர்ந்து வந்தேன்....எனக்கு வரலை....காலை படையெடுப்புதான்

      Delete
    2. ராத்திரில வரலைனா காலையிலயாச்சும் வரணும். அப்பவும் இல்லேன்னா கொஞ்சம்க ஷ்டம்தான்

      Delete
  55. நியூயார்க்கில் மாயாவி...

    முதலில் அட்டைப்படத்திற்கு ஒரு ஷொட்டு...அடுத்த இந்த இதழ் சி.சி யில் வராத கதை என்றே நினைவு...எனவே நீண்ட நாட்கள் கழித்து புதிய சாகஸம் படிப்பது போலவே ஓர் எண்ணம்..அடுத்து இந்த இதழின் சாகஸம் இரும்புக்கை மாயாவியின் முதல் சாகஸகமாகவும் ,ஸ்பைடர் போல் நல்லவன் ஆக மாறுவதற்கு முன் என்பது போலவும் அமைந்து இருப்பதால் கதையை அலுப்பு இன்றி மிகவும் விறுவிறுப்புடனே செல்வதும் பெரிய்ய ப்ளஸ்பாயிண்ட்..

    மொத்தத்தில் பால்ய காலத்திற்கு மீண்டும் அழைத்து சொன்றுள்ளார் மிஸ்டர் மாயாவி நியூயார்க்கில் மாயாவி மூலமாக..

    ReplyDelete
    Replies
    1. நியுயார்க்கில் மாயாவி கிளாசிக் காமிக்ஸில் வந்துவிட்டது தலீவரே

      Delete
  56. மரண முள்...

    அடேங்கப்பா அந்த சிறிய வயதில் ( இப்போ கொஞ்சம் பெரிய ...சிறிய வயது ) கறுப்பு வெள்ளையில் திக் ,திக் மனநிலையில் படித்த அதே நிலை இம்முறையும் . அதிலும் வண்ணத்தில் ,சித்தரத்தில் இந்த முறை டெக்ஸ் எந்த குறையும் இன்றி வந்துள்ளதால் இன்னமும் சிறப்பு.ஏற்கனவே படித்த கதை தான் எனினும் ,அப்பொழுது அடிக்கடி படித்த கதை என்பதால் கதையின் நினைவும் நிழலாடியது எனினும் முதல் பக்கத்தில் வாசிக்க ஆரம்பித்தவுடன் இறுதி பக்கத்தை வந்தடைந்தவுடனே தான் புத்தகத்தை கீழே வைக்க முடிந்தது. அதே பரபரப்பு ,அதே விறுவிறுப்பு ,அதே திக்திக் மனநிலை..இந்த முறையும் இருப்பக்க அட்டைப்படங்களும் செம க்ளாசிக்காக அமைந்து இதழை பார்த்தவுடனே வாங்க வைக்கும் என்பதும் உறுதி..மரண முள் மறுபதிப்பை விட வேறு பழைய டெக்ஸ் கதைகள் வந்து இருக்கலாமோ என்ற எண்ணம் இருந்தால் கூட இந்த முறை இந்த இதழை பார்த்தால் அதனை மறந்து இதழை உச்சி முகர்வது உறுதி.

    மாதத்தின் நடுவாக்கில் மீண்டும் டெக்ஸ் உடன் அதுவும் வண்ணத்தில் பயணிக்க வைத்த ஆன்லைன் விழாவிற்கு ஒரு பலத்த கை தட்டல்..

    ReplyDelete
  57. இரும்புக்கை மாயாவி ,டெக்ஸ் இருவருமே மறுபதிப்பிலியே கலக்கி விட்ட பொழுது புதிய சாகஸத்தில் இரும்பு மனிதன் சாதிக்காமல் போவாரா என்ன...இனி இரும்பு மனிதனிடம் பயணித்து விட்டு....

    ReplyDelete
  58. மரணமுள்: வழக்கமான டெக்ஸ் புத்தக அளவில் வண்ணத்தில் அட்டகாசமாக உள்ளது. டெக்ஸ் வண்ணக் கதைகள் இதுபோன்ற புத்தக அளவில் வரும் காலங்களில் தொடர்ந்து வரட்டும். புத்தகம் செம வெயிட்டாக உள்ளது :-)

    ReplyDelete
  59. புத்தகங்கள் கிடைத்து விட்டன வார இறுதியில் நேரம் கிடைக்கும் போது படிக்க வேண்டும்.

    ReplyDelete
  60. மூன்று அட்டைப்படங்களும் அதகளப்படுத்த.....ஆர்ச்சி மும் மரணமுள்ளும் போட்டி போட ....வெல்வது ஆர்ச்சியே....இது வரை வந்த அட்டைகளில் பெஸ்ட் இதான்....உள்ள புரட்ட புரட்ட மூன்று கதைகளும் பின்னோக்கி சிறகடிக்குது பள்ளிப்பருவத்திற்குள்....படித்ததும் பகிர்கிறேன்....மறந்துட்டேன்...எல்லாத்தையும் சாமி சத்தியமா தூக்கி சாப்பிடுது நம்ம லக்கி லூக் போஸ்டர்.....சூப்பர் சார்...இதைப்போல ஆர்ச்சி...ஸ்பைடர்...மாயாவி வந்தா அட்டகாசமா இருக்கும்

    ReplyDelete
  61. லயன் அலுவலக சகோக்களின் அதிவேக செயல்பாட்டினால் சனிக்கிழமையன்று ஆர்டர் செய்திருந்த புத்தகங்கள் அடுத்தநாளே வந்தடைந்துவிட்டன! ஆனால் நான் புத்தகங்களைக் காண இன்னும் சில நாட்களாகும் எனும்படியான நிலை!

    ஐ யாம் வெயிட்டிங்!

    ReplyDelete
  62. Dear edi,

    ஆன்லைன் புத்தக திருவிழா தேதி அன்று வாட்ஸ்அப் மூலமாக பல புத்தகங்கள் ஆடர் குடுத்து இருந்தேன், இன்று புத்தகங்கள் கிடைத்தது, ஆனால் நான் வாங்கிய எந்த புத்தகத்திற்கும் தள்ளுபடி இல்லாமல் முழு விலையில் பணம் வாங்கி இருக்கிறார்கள், மேலும் நான் கேட்ட பல கதைகள் வரவும் இல்ல. நான் வாங்கிய கதைகளுக்கான தள்ளுபடியை பெறுவது எப்படி.

    ReplyDelete
  63. நியூ யார்க்கில் மாயாவி - அடுத்த அத்தியாயம் எப்போது வர இருக்கிறது?

    ReplyDelete
  64. எனக்கு இன்றுவரை புத்தகங்கள் வரவில்லை. அலுவலகத்திற்கு போன் செய்து கேட்டதில், என் பெயர் தவறுதலாக விடுபட்டுவிட்டதாகவும் இன்று அனுப்பிவிடுவதாகவும் தெரிவித்தனர்.

    ReplyDelete
  65. Due to heavy work load unable to unwrap feb books. I also received online special books. Hope to unwrap coming sunday

    ReplyDelete
  66. I have read ARS MAGNA as tamil scanslation. Waiting for the real translation.

    ReplyDelete
  67. I got one more Archie book. Wow! But no time to read

    ReplyDelete
  68. ஆழ்கடலில் ஆர்ச்சி - அட்டகாசம். விறுவிறுப்பாக சென்றது டெத் கப்பல் மர்மத்துடன். சித்திரங்கள் தெளிவு, வசனங்கள் தெளிவாக வாசிக்க ஏதுவாக இருந்தது.

    ஆர்ச்சியின் இதுபோன்ற புதிய கதைகள் இருந்தால் வருடத்திற்கு ஒன்று கண்டிப்பாக வெளியிடுங்கள்.

    அட்டைப்படம் சூப்பர். தாம்சன் கழுத்தில் ட்ரான்ஸ் மீட்டருடன் இருப்பது போல் வரைந்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  69. நியுயார்க்கில் மாயாவி - அட மாயாவிக்கு பின்னால் இது போன்ற ஒரு கதை இருக்கிறதா என வியக்க வைத்தது. மாயாவியை உருவாக்கிய புரபஸர்தான் ஹீரோ இந்த கதையில் அவரின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

    கதையின் இறுதியில் மாயாவி மற்றும் வில்லன் இருவரின் குறிக்கோள் வேறு என சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கதையின் முற்பகுதியில் மாயாவி பல சேதங்களை ஏற்படுத்தி விட்டு அதில் உள்ள அப்பாவி மக்கள் தப்பியது தெய்வாதிமான நிலையில் மாயாவின் குறிக்கோளை ஏற்று கொள்ள முடியவில்லை.

    சித்திரங்களும் வசனங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால் படிக்க சிறப்பாக இருந்திருக்கும்.

    இந்த கதையின் தொடர்ச்சியை எப்போது வெளியிடுவீர்கள் விஜயன் சார்.

    ReplyDelete
  70. ஆசிரியர் அவர்களுக்கு...

    *ஆழ்கடலில் ஆர்ச்சி*

    இதழின் விமர்சனம் அல்ல இது..மொத்தமாகவே ஆர்ச்சி சாகஸங்களுக்கான விமர்சனம் என்றே எடுத்துக்கொள்ளலாம்.ஏன் கூட வலை மன்னனையும் கூட இணைத்து கொள்ளலாம்.

    சார் ...ஒரு காலத்தில் ஸ்பைடர் ,ஆர்ச்சி ,இரும்புக்கை மாயாவி என்றால் உணவு கூட தேவையில்லை இந்த நாயகர்களும் ,மும்மூர்த்திகளுமே போதுமே என்று இருந்த நாட்கள் எல்லாம் உண்டு.அட்டைப்படத்தில் இவர்கள் இருந்தாலே போதுமானது .,

    சில சமயங்களில்...பழைய புத்தக கடைகளில் அட்டை இல்லாமல் ,முன்பின் பக்கங்கள் இல்லாமல் சில இதழ்கள் கிடைத்தால் கூட புரட்டி பார்த்து அதில் ஆர்ச்சி,ஸ்பைடர் ,மாயாவி இருந்தால் கூட அவ்விதழ்களை தான் அவ்வளவு ஆவலுடன் முதலில் தேர்ந்தெடுந்தெடுத்து வாங்குவேன்.இதை எல்லாம் சொல்வதற்கு காரணம் எல்லா காமிக்ஸ் நண்பர்களை போலவே நானும் இவர்களுக்கும்,மும்மூர்த்திகளுக்கும் அப்படிப்பட்ட ரசிகன் தான் என்பதை நினைவூட்டவே..ஆனால் சமீபத்தில் நமது இதழ்களில் வெளிவந்த ஆர்ச்சி சாகஸங்கள் ,ஸ்பைடர் சாகஸங்கள் ,மாயாவி சாகஸங்கள் எல்லாம் நம்மை சாரி என்னை மகிழ்ச்சி படுத்த வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் சார்.(

    ஆனால் இந்த சமயம் "நியூயார்க்கில் மாயாவி " மட்டும் விதிவிலக்காக கொள்ளலாம் .காரணம் மாயாவியின் முதல் சாகஸமாக வருவது போலவும் ,இரும்புக்கையின் முன்வரலாறு போலவும் அமைந்த ஒரு காரணமாகவும் இருக்கலாம் . ஆனால் மற்ற சாகஸங்களை படிப்பதற்கு பொறுமை பற்றவில்லை சார். இப்பொழுது வரும் கதைகளை படிக்க ஆரம்பித்தவுடன் கிராபிக் நாவல் உட்பட எப்பொழுதுடா முடிவை அறிந்து கொள்வோம் என்ற பரபரப்பில் விறுவிறுப்பாக படிக்க முடிகிறது.ஆனால் நமது இந்த பழைய நாயகர்களை படிக்க ஆரம்பித்தவுடன் வாங்கி விட்டோம் படித்து தான் முடித்துவிடுவோமே என்று படிக்க ஆரம்பித்தாலுமே எப்பொழுதுடா முடியும் ? புத்தகத்தை பீரோவில் வைத்துவிடலாம் என்றே கொட்டாவியுடன் புத்தகத்தை புரட்டி மூடிவைக்க சொல்கிறது.

    ஆனால் கண்டிப்பாக இதன் காரணம் தாங்களோ,ஏன் அந்த கதையின் நாயகர்களோ கூட காரணம் இல்லை.படிக்கும் நாங்கள் தான் காரணம் .ஆம் நாங்களே தான் சார்.பலவித புது ,புது காமிக்ஸ் விருந்துகளை எங்களுக்கு படைத்து அதிலியே நாங்கள் மூழ்கி பழகிவிட்டோமே..இப்பொழுது சிறப்புக்காக என்றாலும் கூட அந்த பழைய (பாணி) விருந்து எப்படி பரிமாறினாலும் எமக்கு சுவைக்கவில்லை என்பதே உண்மை சார்.

    இல்லை..இவர்களை இன்னமும் ரசிக்கவும் ஒரு நண்பர் வட்டம் உண்டு என்பதும் கூட உண்மையாகவும் இருக்கலாம்.ஆனால் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு இருப்பார்கள் என்பது தான் எனது அனுமானம் .மேலும் பலரும் அந்த காலத்தில் இவர்களுக்காக எப்படி அதிதீவிர ரசிகராக இருந்தோம் ; இப்பொழுது அவர்களை நாமே குறை சொல்லி பதிவிடலாமா ? .நமது ஆதர்ச நாயகரை நாமே இன்சொல் பழியலாமா ? என்ற தயக்கத்தின் காரணமாகவே ஏதும் சொல்லாமல் அமைதி காக்கிறார்களோ ?! என்ற பலத்த சந்தேகமும் எனக்கு உண்டு .

    ஏன் நானே இதை எழுத எவ்வளவு தயங்கினேன் !! உண்மையில் மறுபிறப்பில் ஸ்பைடர் ,ஆர்ச்சி இதழ்களை ( படிக்க முடியாமல் ) படிக்கும் பொழுதெல்லாம் இதை சொல்ல கை பரபரக்கும் .ஆனால் மனதோ மறுமறுக்கும்.எனவே தான் இத்தனை தாமதங்கள்.வருடத்தில் சில இதழ்கள் தான் ; சிறு விலையில் தான் எனவே தங்களை குற்றமும் சொல்லவில்லை ..ஆனால் படிக்கும் பொழுது ஆயாசமாய் தோன்றும் போது ஆசிரியருக்கு எப்படியாவது முடியவில்லை என்று சொல்லி விடலாமே என்ற தலைதூக்கல் எழாமலும் இருப்பதில்லை.எனவே தான் சார் இந்த முறையாவது எப்படியாவது இதை தெரிவித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

    அப்படி எல்லாம் இல்லை ..நீ பழசை மறந்து விட்டாய் .எனது பழைய ஆதர்ஷ நாயகர்களை எப்படி பழிசொல்லலாம் என சில கொட்டுகள் எனது தலையில் விழலாம் தான்..ஆனால் அந்த வலியை என்னால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் எனது ஆதர்ஷ நாயகர்கள் எனக்கு வலியை ஏற்படுத்த கூடாது என்பதே எனது அவா.

    ReplyDelete
  71. @ ALL : நேற்றுக்கு வந்ததொரு மின்னஞ்சல் ! நெடுநாள் வாசகரே இவர் !!

    ஒரு நெடுநாள் வாசகர் நேற்றைக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் மேலே !!

    உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ் folks ? ஆளில்லா டீ கடையில் ஒரு சாயா ஆத்தியது போலவுமிருக்கும் அல்லவா ?

    ReplyDelete
    Replies
    1. என்னை பொறுத்தவரை நான் அப்போதும் ரசித்து படித்தேன்
      இப்போதும் ரசித்து படிக்கிறேன்
      எப்போதும் ரசித்து படித்து கொண்டிருப்பேன் எனது பால்ய காலங்களை மறக்கமுடியாத பிரிக்கமுடியாத சந்தோஷ நினைவுகள் இவர்களே

      Delete
    2. // ஒரு நெடுநாள் வாசகர் நேற்றைக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் மேலே !! //
      மேலே சொல்லப்பட்ட கருத்துகள் எனக்கும் ஏற்புடயவையே சார்...
      பெரும்பாலான மறுபதிப்பு இதழ்களை முதல் வாசிப்பு என்ற ஆர்வத்தில்தான் படிக்கிறேன்,ஏனெனில் ஆரம்பகால காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களைத் தவிர நிறைய இதழ்கள் என்னிடம் இல்லை, அதை நான் படித்ததும் இல்லை...
      மேலும் இந்த இதழ்களை மீள்வாசிப்புக்கென மீண்டும் தேடிய நினைவும் இல்லை...
      ஆகவே முடிந்தவரை இனி மறுபதிப்பு செய்யப்படாத இதழ்களையே மறுபதிப்பு செய்யலாம்,அதையும் முந்தைய இதழ்கள் இருப்பு குறைந்தவுடன்,கோரிக்கைகளின் அடிப்படையில் அளவாய் வெளியிடலாம்.....

      Delete
    3. // முடிந்தவரை இனி மறுபதிப்பு செய்யப்படாத இதழ்களையே மறுபதிப்பு செய்யலாம் //

      +1

      // என்னை பொறுத்தவரை நான் அப்போதும் ரசித்து படித்தேன்
      இப்போதும் ரசித்து படிக்கிறேன்
      எப்போதும் ரசித்து படித்து கொண்டிருப்பேன் //

      +1

      ஆழ்கடலில் ஆர்ச்சி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சஸ்பென்ஸ் உடன் போனதை மிகவும் ரசித்தேன்.

      Delete
    4. நானும் இதற்கு உடன் படுகிறேன். ரவி அண்ணன் எழுதியது எனக்கு வரிக்கு வரி உடன் பாடு உண்டு

      Delete
    5. அமாயா, ஆர்ச்சி, ஸ்பைடர், லாரன்ஸ் டேவிட் , மாயாவி, ஜானி &ஸ்டெல்லா என்னால படிக்க முடியறதில்லை. மாயாவி பரவாயில்லை. ஆர்ச்சி கலரில் வந்ததால் மகளுக்கு படித்துக் காட்ட முடிந்தது. பெரியவங்களுக்குன்னா க. வெ. ஓகே சிறுவர்களுக்கு டார்கெட் பண்றதா இருந்தா க. வெ. போட வேணாம்.. என்னை மாதிரி இளைஞர்களுக்குன்னா போடவே வேணாம்.

      இருந்தாலும் இதெல்லாம் விக்குதுன்னா இந்த மாதிரி புத்தகங்களை புத்தக விழா ஸ்பெசலா போடறதுல எந்தப் பிரச்னையும் இல்லை. வருடத்துக்கு மொத்தமா ஒன்றோ இரண்டோ வருவது ஓகே.

      Delete
    6. விற்பனை அளவுகோலை வைத்து முடிவெடுக்கலாம் சார்.!

      சந்தாவை தவிர்த்து வேளியே எப்படி விற்பனை இருக்கிறது என்பதுதான் ஒரு நாயகனின் அல்லது கதையின் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கும் காரணி என்பது என் கருத்து.!
      ஆர்ச்சி, ஸ்பைடர், மும்மூர்த்திகள். அமாயா.,மாடஸ்டி போன்றோரின் எதிர்காலத்தை விற்பனையை வைத்து முடிவெடுப்பதே நல்லதென்று நான் நினைக்கிறேன் சார்.!

      தனிப்பட்ட முறையில் சொல்வதானால் இந்த கதைகளின்மீது பெரிய அளவுக்கு ஆர்வம் இல்லையென்றாலும் துளியும் வெறுப்பு இல்லை சார்.!

      Delete
    7. என்னை மாதிரி இளைஞர்களுக்குன்னா போடவே வேணாம்.

      ######


      இந்த வரிதான் எனரனால தாங்க முடியல...மிஸ்டர் ஷெரீப்...அழுகையா வருது...

      Delete
    8. Same lines I just wanna write about Marana mull.. Thanks doc..

      Delete
    9. தனிப்பட்ட முறையில் சொல்வதானால் இந்த கதைகளின்மீது பெரிய அளவுக்கு ஆர்வம் இல்லையென்றாலும் துளியும் வெறுப்பு இல்லை சார்.!

      நன்றி கிட் அண்ணா...

      Delete
    10. மறுபதிப்புகள் வண்ணத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ புத்தக விழா சிறப்பு இதழ்களாக வெளியிடலாம்... தற்போதைய சிறார்கள் க.வெ. புத்தகங்களை கண்ணெடுத்தும் பார்ப்பது இல்லை.

      வண்ணத்தில் ஆர்வத்தோடு ஆர்ச்சியை வாசித்த என் மகள் க.வெ. யைத் தொடக் கூட இல்லை.

      Delete
    11. ஐயா, நண்பர் தன்னுடைய மின்னஞ்சலில் சொன்ன கருத்துக்களை அவருடைய சொந்த கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்பைடர், ஆர்ச்சி போன்றவர்களின் கதைகள் காதில் பூ சுற்றும், கழுத்துக்கு மாலை போடும் என்று சொன்னாலும், இத்தனை வருடங்களாக என்னுடைய காமிக்ஸ் புத்தகங்களை தொட்டும் பார்க்காத எனது 7 வயது பையன் ஆர்ச்சியின் கதைகளை கையில் எடுத்துக் கொண்டு, இது என்ன அயர்ன் மேனா அப்பா, இவர் யார் ஸ்பைடர் மேனா என்று கேட்கிறான்.

      கார்ட்டூன் கதைகளுக்கும் கூட எடுபடாத ஆர்வம், இப்போது ஆர்ச்சியின் வடிவில் உத்வேகம் பெற்றுள்ளதை எண்ணி பெருமை கொண்டிருக்கும் வேளையில், ஆர்ச்சி-ஸ்பைடர் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

      அது போக, நண்பர் மஹி சொன்னது போல, வருடத்திற்கு ஒருமுறையோ, 2 முறையோ ஆர்ச்சி-ஸ்பைடர் கதைகளை வண்ணத்தில் வெளியிட்டால் வரவேறப்பு நன்றாகவே இருக்கக்கூடும்.

      எது எப்படியோ, அட்டைப்படத்தில் ஆர்ச்சியும், ஸ்பைடரும் இருந்தாலேயே விற்று விடும் என்ற நிலையில் இருந்த நாயகர்களை கைவிடாத வாசகர் கூட்டம் இன்னமும் உள்ளதை மறுக்க இயலாது.

      இறுதியாக, தங்களுடைய விற்பனை அளவுகோலுக்கு பங்கம் வராது என்று நினைத்தால், இந்த நாயகர்களை தொடர்வதில் எனக்கும் விருப்பமே!

      Delete
  72. ஆனா இப்ப வர்ற அந்த தோர்கள் லார்கோ ட்யுராங்கோ....டெக்ஸ் கூட காலம் தாழ்த்தியே படிக்க முடியுது....காரணம் வேலை..பொறுப்புகள்...நம்ம சந்தோசங்கள் குடும்பம்....நண்பர்கள்....வலைப்பக்கங்கள்னு திரும்பியது....ஆனா நேரம் கிடைக்கும் போது எடுத்து படிச்சா....அது தரும் சந்தோசமே அலாதிதான்...சர்ப்பங்களின் சாபமாகட்டும்...வண்ண ஆர்ச்சியாகட்டும் எல்லாம் வேற லெவல்....காத்திருக்கும் பொக்கிஷக் குவியல்கள்...நிதானமான நேரங்களில் தான் படிக்க முடியும்....படிச்சே ஆகனும்னு படிச்சா இதான் கதை...நமக்குத் தேவைப்படும் போது படிப்பம்

    ReplyDelete
  73. எனக்கு புத்தகங்கள் இன்று வந்துவிட்டன. ஆனால் தவறுதலாக ஐந்து புத்தகங்கள் உள்ளன. (பிழையிலா மழலை & ஆர்டின் ஒரு ஆச்சரியக் குறி). இவை நான் ஆர்டர் செய்யாதவை. இவைகளை நாளை மீண்டும் திருப்பி அனுப்பிவிடுகிறேன். நன்றி.

    ReplyDelete
  74. கனவே கலையாதே 
    ட்ரெண்ட் கதைகளிலே எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். அட்டகாசம். வைல்ட் பில் உபயத்தில். தவறவிட்டவர்கள் கவனிக்கவும்.

    வித்யாசமான வைல்ட் வெஸ்ட் கதை.

    (ஒரு வருடம் லேட்டா review தான் - ஆனா இப்போதான் படிச்சேன்).

    ReplyDelete
  75. இன்று பதிவு தபாலில் கொனோராவினால் வரத்தவறிய நவம்பர் 2020 வரையான பொக்கிஷங்கள் வந்தன. மிக்க நன்றிகள் சார். அவற்றுள் “தலைவாங்கி குரங்கு” + “ நேற்றைய நகரம் “+ “சர்ப்பத்தின் சவால்”ஆகியனமட்டும் missing. ஸ்வீட் கடையில் நுளைந்த சிறுவன் போன்று உள்ளேன். எதை முதலில் படிப்பது என்று தடுமாற்றம் . கொஞ்ச நாளுக்கு நான் பிசி.!

    ReplyDelete
    Replies
    1. படியுங்கள்...ரசியுங்கள்.கனவுலகத்தில் அமிழ்ந்துவிடுங்கள்.விமரிசியுங்கள்

      Delete
    2. // ஸ்வீட் கடையில் நுளைந்த சிறுவன் போன்று உள்ளேன் //

      Enjoy :-)

      Delete
  76. வணக்கம் நண்பர்களே .!

    காமிக்ஸ் எனும் கனவுலகம் என்னும் வாட்ஸ்அப் குழுவில் சமீபத்தில் ஒரு காமிக்ஸ் போட்டி நடத்தினோம்.!

    "எனக்கு பிடித்த கதாநாயகன் "

    என்ற தலைப்பில் உங்களைக் கவர்ந்த காமீக்ஸ் ஹீரோ, ஹீரோயின் பற்றி ஒரு கருத்துரை எழுதச்சொல்லி கேட்டிருந்தோம்.! ஜனவரி2021 ஆன்லைன் புத்தக திருவிழா சிறப்பு வெளியீடுகளை போட்டிக்கான பரிசாக அறிவித்து இருந்தோம்.!

    பொங்கலுக்கு முன்னதாக நடந்துமுடிந்த அந்த போட்டியில் மொத்தம் 17 நண்பர்கள் கலந்துகொண்டிருந்தனர்.! அந்தப் போட்டிக்கு நடுவர்களாக சேலம் டெக்ஸ் விஜயராகவன் மற்றும் மாடஸ்டி ப்ளைசி பாபு இருவரையும் நியத்திருந்தோம்.! அவற்றுள் பரிசுக்குரியனவாக பத்து நண்பர்களின் கருத்துரைகளை நடுவர்கள் மூலம் தேர்ந்தெடுத்தோம்.!
    அந்த பத்து நண்பர்களுக்கும் பரிசாக ஜனவரி2021 ஆன்லைன் புத்தக திருவிழா சிறப்பு வெளீயிடுகளான மரணமுள், நியூயார்க்கில் மாயாவி, ஆழ்கடலில் ஆர்ச்சி ஆகிய மூன்று இதழ்களையும் லயன் அலுவலத்தில் நேரிலேயே போய் பதிவுசெய்து நேரடியாக நண்பர்களின் விலாசத்திற்கு கிடைக்கச்செய்தோம்.!
    போட்டியில் கலந்துகொண்ட மற்ற நண்பர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்கள் எழுவருக்கும் நியூயார்க்கில் மாயாவி இதழை பதிவு செய்து அவர்கள் விலாசத்திற்கே கிடைக்கும்படி செய்தோம்.! சிறப்பாக செயல்பட்ட நடுவர்கள் டெக்ஸ் விஜய் மற்றும் ப்ளைசி பாபு இருவருக்கும் கௌரவப்பரிசாக சிறப்பு இதழ்கள் மூன்றையும் பதிவுசெய்து பரிசாக கிடைக்கச்செய்தோம்.!

    கலந்துகொண்டு சிறப்பித்த நண்பர்களுக்கும், எங்கள் விருப்பத்தை கேட்டு நடுவர்களாக செயல்பட சம்மதித்த நண்பர்களுக்கும் குழு உறுப்பினர்களுக்கும் தமிழ் காமிக்ஸ் வாசகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.!

    அனைவருக்கும்(அபிசேக், இலங்கை தவிர) பரிசுகள் வந்துசேர்ந்துவிட்டதை உறுதிசெய்தபின்னரே இதனை ப்ளாக்கில் பதிவுசெய்ய விரும்பினேன்.! அதனால் தாமதமாக தெரிவித்தமைக்கு மன்னாப்பு கேட்டுக்கிறேன்.!

    போட்டிக்கு வந்த கருத்துரை பதிவுகளை இங்கே பகிரப் பிரியப்படுகிறேன்.. அறியாச்சிறுவனை பொறுத்தருள்க நண்பர்காள்.!

    ReplyDelete
    Replies
    1. *ஆண்கள் செய்யும் வீரதீர செயல்களில் எனக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டு*

      இளவரசியின் இந்த வார்த்தைகள் எவ்வளவு பொய்யானவை என்னும் உண்மையை என் சிறு வயதிலேயே லயன் காமிக்ஸ் ஆழமாக என் மனதில் பதியவைத்தது... ஆம்.. என்னைப் பொருத்தவரை இளவரசி ஆண்களுக்கு இணையானவர் அல்ல... அவர்களை விட பன்மடங்கு சிறந்தவர்...

      சகோதர சகோதிரிகளில்லா என் இளமைக் காலத்தில், ஆண்களே சிறந்தவர்... பெண்கள், என் தாயைப் போல் ஆசிரியை வேலைக்கு படித்திருந்தாலும்... சமையல் செய்ய மட்டுமே உகந்தவர்கள், என்னும் கண்ணோட்டம் எனக்கு எப்பவுமிருந்தது...

      எனது காமிக்ஸ் காதல் ஸ்பைடர், ஆர்ச்சி, மாயாவி இவர்களால் தான் வளர்க்கப்பட்டது... எங்கு நோக்கினும் ஆண்களே சூப்பர் ஹீரோக்களாக இருந்த அந்த காலக்கட்டத்தில்... ஒரு மின்னல் கீற்றைப் போல் தோன்றினார் இளவரசி... அவரது கதைகள் என்னை முழுவதும் மாற்றின... ஒரு male chauvinist pigஆக இருந்த என்னை அடியோடு மாற்றியவர் இளவரசி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை....

      ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல... இளவரசியின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக... இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட வரிகள் இடம் பெற்ற *கழுகு மலைக் கோட்டையை* கொஞ்சம் அலசுவோம்...

      இந்த அற்புதக் கதையை அறியாதார் யாருமிருக்க மாட்டார்கள்... வில்லி கார்வின் ஒரு இளம் பெண்ணைக் காப்பாற்றப் போய்... சதியில் விழுந்து சிறைப்படுகிறான்... அந்தப் பெண் இளவரசியை மிரட்டுகிறாள்... என்னுடைய கோரிக்கைகளை ஏற்காவிட்டால் உன் நண்பனைக் கொன்று விடுவோம் எனக் கூறுகிறாள்... அதற்கு இளவரசியின் பதில்..!? என் உயிர் நண்பனைக் கடத்தி என்னையே மிரட்டுகிறாயா..!? கார்வின் மேல் அவர்கொண்ட வாஞ்சை கடுங்கோபமாக மாறி அந்தப் பெண்ணை ஒரே அறையில் கொல்கிறார்... எப்பொழுதும் யோசித்து முடிவெடுக்கும் இளவரசி, கார்வினிடம் கொண்டுள்ள உயிர் நட்பை நம் கண்முன் நிறுத்துகிறார்..

      அடுத்து கழுகமலையின் அடிவாரம் செல்லும் இளவரசி அங்கு பிளெட்ஸர் என்னும் முதியவரை சந்நக்கிறார்... *இந்த உலகிலேயே நான் வெறுப்பவை எவை தெரியுமா...!? ஒன்று பெட்ரோல் நாற்றமடிக்கும் வாகனங்கள்... இரண்டாவது... பெண்கள்...* இவையே பிளெட்ஸ்ர் இளவரசியை வரவேற்க்க பயன்படுத்தும் வார்த்தைகள்....

      இளவரசி அசரவில்லை... தனது வீரத்தால்... அறிவால்... பிளெட்ஸரின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறார்... குன்றின் உச்சிக்கு போக முடியாது என பிளெட்ஸர் கூற... *குன்றின் உச்சிக்கு போக முடியாதென சொல்கிறீர்கள்.. ஆனால் நான் எப்படியும் உயரே போயாக வேண்டும்... போவதில் உள்ள சிக்கல்களை மட்டும் கூறுங்கள்... அவைகளை எப்படித் தீர்ப்பது என்பதை யோசிப்போம்...* தன்னம்பிக்கை ஊட்டும் இளவரசியின் வைர வார்த்தைகள்...
      பல இன்னல்களைக் கடந்து குன்றின் மேலேறும் இளவரசியின் வீரம் நம் மனதைக் கொள்ளை கொள்கிறது... அங்கோ கார்வின் கயவர்களின் போதை மருந்தின் கட்டுப்பாட்டில் சுய அறிவை இழந்திருக்கிறான்... இளவரசியையே அடையாளம் தெரியாமல் கொல்லவும் பார்க்கிறான்... விரோதிகளை சுலபமாக அழித்திடும் இளவரசி... கார்வினின் நிலை கண்டு கலக்கம் கொள்கிறார்...

      அறிவுஜீவியான இளவரசி... கார்வினைக் காக்க... தன் உயிரை துச்சமென கருதி... பிளெட்ஸரின் உதவியுடன் நாடகமாடத் துணிகிறார்... பிளெட்ஸரை தனக்கு மயக்க ஊசி போட வைக்கிறார்... பின்னர் இளவரசியின் ஆணைப்படி பிளெட்ஸர் கார்வினை எழுப்புகிறார்... இளவரசி குண்டடிப்பட்டதாகவும் நான்கே மணி நேரத்தில் மருத்துவமனை கொண்டு செல்லாவிட்டால் இளவரசியின் உயிர் போய்விடுமென நாடகமாடுகிறார்... கார்வின் துளியும் யோசிக்காமல், தன மனப்பிராந்தியை புறந்தள்ளி, இளவரிசியை கழுகு மலையிலிருந்து இறக்குகிறான்... தெளிவும் பெறுகிறான்...
      --தொடரும்---

      Delete
    2. --தொடர்கிறது---

      இங்குதான் இளவரசியை எனக்கு மிகவும் பிடித்துப் போனது... 800 அடி மலையுச்சியிலிருந்து இறங்குவதென்பது மிக்க கடினம்... திடகாத்திரமான, அனுபவமுள்ள, மலையேறும் வீர்ர்களே திணறக்கூடிய செயலது... ஆனால் இளவரசியோ... தன் உயிர் நண்பனைக் காக்க தன்னுயிரையும் பொருட்படுத்தாது, தன்னையே மயக்கமுற வைத்து, தன் நண்பன் மன நோயில் இருந்து குணம் பெற வழி வகுக்கிறார்... பொதுவாக கார்வின் இளவரசிக்காக எதுவும் செயவான் எனும் எண்ணம் அனைவருக்குமுண்டு... ஆனால் இளவரசியின் ஆழ்ந்த அன்பே.... நட்பின் மேல் கொண்ட ஈடில்லா நம்பிக்கையே... கார்வினை ஒருமுகப்படுத்தி குற்ற வாழ்க்கையிலிருந்து நல்வழிப்படுத்தியது...

      அனாதையாக வளர்ந்து... உணவிற்காக வேறு வழியின்றி குற்ற வாழ்க்கையை கையிலெடுத்து, அதில் நிகரற்றவர் என நிலை வரும் போது... அனைத்தையும் துறந்து... நேர்வழியில் செல்வதே சாலச்சிறந்தது என தன் வாழ்வின் அனைத்து கஷ்டங்களையும்... தெளிவோடு எதிர் நோக்கி... ஆணுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவரல்ல... உண்மையில் பெண்ணுக்கு பிறகுதான் ஆண் என்னும் எண்ணத்தை என் ஆழ்மனதில் விதைத்த... இளவரசி... *மாடஸ்டி பிளைஸியே*... என் மனங்கவர்ந்த காமிக்ஸ் மற்றும் வாழ்க்கை பாடத் தலைவி...!!


      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      முதல் இடம் பிடித்த பதிவு..
      எழுதியவர்...
      டாக்டர் A K K ராஜா..!

      Delete
    3. வணக்கம் நண்பர்களே...

      என் பெயர் இளவிஜய், சேலம் மாநகரில் பிறந்து, வளர்ந்து இன்று சென்னையில் வாழ்ந்து வருகிறேன்.

      1984ல் படம் பார்த்து, 1988ல் காமிக்ஸ் படிக்க பழகினேன்.

      இதுவரையில் எந்த புத்தக விழாவிற்கும் வந்ததில்லை, உங்களில் யாரையும் சந்தித்தறியேன்.

      வெகுவிரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.

      வருடம் தவறாது அனைத்து சந்தாவையும் கட்டி காமிக்ஸ் வாங்கி இல்லத்தில் அனைவரும் படித்து விடுவோம்.

      சமீபகாலமாக எனது இல்லத்தரசியாரும் காமிக்ஸ் வாசிப்பைத் துவங்கியுள்ளார்.

      சுயவரலாற்றை சற்றே ஓரம்கட்டிவிட்டு, போட்டியின் தலைப்புக்கு வருவோம்.

      தலைப்பிலேயே தலை இருக்கிறார்; மஞ்சள் சட்டை மாவீரர் தான் என்னுடைய க(தை)தாநாயகர்.

      டெக்ஸ்வில்லர் என்ற இந்த ஒப்பற்ற மனிதர், அந்நாளைய வன்மேற்கில் நிஜமாகவே வாழ்ந்திருப்பாரெனில், இன்றைய அமெரிக்காவில் நவஹோ, கமான்சே, ஹோபி, சியோக்ஸ், அபாச்சே இனத்தவர் அங்கு நன்முறையில் வாழ்ந்திருப்பர் என்றால் அது மிகையாகாது.

      ஒரு நம்பிக்கை நாயகனுக்கு அடையாளங்களென அனைத்து வகை சங்க கால நூல்களில் துவங்கி, சாண்டில்யன், கல்கி, விக்கிரமன், அகிலன் தாண்டி, தமிழ்வாணன், ராஜேஷ் குமார், சுபா, பிகேபி, ஆர்னிகா நாஸர் வரை அனைவரின் கதைகளிலும் நாயகன் என்பவர் நேர்மையாளர், இறுதிவரை முழுமூச்சுடன் போராடி வெற்றி பெறுபவர், நட்பினை உயிருக்கும் மேலாக மதிப்பவர், தன்னை நம்பியவரை கைவிடாதவர் என்று பல குணாதிசயங்கள் உள்ளவராகவே இருப்பார்.

      எமது நாயகன் டெக்ஸ் மேற்கூறியவற்றையும் மீறி நான் மிகவும் போற்றி வணங்கும் மகத்தான குணமாகிய “*பிறன்மனை நோக்கா பேராண்மை*” குணமுடையவர் என்பதாலேயே பிற நாயகர்களிடமிருந்து தனியிடம் பிடிக்கின்றார்.

      தன் காதல் மனைவி லிலித் கயவர்களின் பேராசையாலும், செவ்விந்தியர்கள்தானே சாகட்டும் என்ற மனிதம் தொலைத்த நிலையாலும் அம்மை நோயால் இறந்த பின், கைக்குழந்தையுடன் தனியே நிற்கும் போது, துக்கம் இதயத்தையே இரணமாக்கிய நிலையிலும் மற்றவர்கள் நிலை பற்றி யோசித்த தன்னலற்ற தலைமைப்பண்பினை என்னவென்று பாராட்டுவது ?

      தன்னை முழுமையாக நம்பும் அப்பாவி செவ்விந்திய சகோதர்களை காப்பதாகட்டும், அதே செவ்விந்தியர்கள் அப்பாவி மக்களை கொன்றால் தயங்காது தண்டிப்பதும், தன் நேர்மையில் இம்மியளவும் பிசகாத ஓர் நேர்மையாளர்.

      எதிரிகளின் தாக்குதலில் தன் ஆருயிர் நண்பரான கிட் கார்சனுக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்ற பதட்டம் தலைக்கேற, எதிரிகளை பழிவாங்கியே தீருவேன் என்று சூளுரைப்பதும், பின்னாளில் தன் மகனிடம் நண்பனின் அந்நாளைய காதல் கதையை சொல்லும்போது, “*இவ்விஷயத்தை வைத்து அவனை பரிகாசம் செய்வது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம்*” எனறு எச்சரிக்கை விடுத்து நண்பனின் (ஒரு தலை)காதலுக்கு மரியாதை தரும் பாங்கிலும் தன் உயர்ந்த குணத்தை பறைசாற்றுகிறார்.

      பிறப்பால் தெற்கத்தியரானாலும், அடிமைத்தனம் தவறு என்ற தன் கொள்கையில் நிலைமாறாத தன்மையில் உயர்ந்த மனிதனாய் ஜொலிக்கிறார்.

      நம் சராசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து நற்குணங்களையும் கற்றுத் தரும் குணக்குன்றாய் உயர்ந்து நிற்கும் டெக்ஸ் போல வேறு யாரும் என்னை வெகுவாய் கவர்ந்ததில்லையென்றால் அது மிகையன்று.

      சென்ற மாதத்தின் கலர் டெக்ஸ் புத்தகத்தில், தன் மனைவி மாற்றானால் (அபாச்சே) கவர்ந்து செல்லப்பட்டது அவள் தவறு என்று இராணுவ அதிகாரி கணவன் பழி சுமத்தும் போது பொங்கி எழுவதும், காயப்பட்ட வீரனுக்கும் சிகிச்சையளித்து காப்பாற்றும் மனமும், ஒற்றைக்கு ஒற்றை சவால் என்பது அந்த போராளிக்கு அளிக்கப்பட்ட கெளவரம் என்பதும், தோற்றாலும் அவனை கொல்லாத வீரமும் வேறு யாரிடம் காண முடியும் இரவுக்கழுகாரைத் தவிர ?

      தலையின் நகைச்சுவை உணர்வைப்பற்றி சொல்ல வெள்ளி முடியார் ஒருவர் போதும்.

      இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் இந்நாளில் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று பல நாட்கள் நான் கற்பனை செய்திருக்கிறேன்.

      ஒரு ரேஞ்சர், எதற்கும் அஞ்சாத வீரன், எப்படிப்பட்ட சமூகவிரோத கும்பலையும் மோதி துவம்சம் செய்தால் எப்படி இருக்கும் ?

      லீ சைல்ட் என்ற எழுத்தாளரின் நாயகன் ஜாக் ரீச்சர் (Jack Reacher) போல்தான் இருக்கும் என்று எண்ணிய நாட்கள் உண்டு.

      ஆகையால் நண்பர்களே, டெக்ஸ் போன்றதொரு தலைவர் இனி இல்லை.

      அவரே என்னை அன்றும், இன்றும் ஏன் என்றும் கவர்ந்த நாயகன் என்றுரைத்து வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்.

      அன்புடன்,
      இளவிஜய்.

      ~~~~~~~~~~~~~~~~

      இரண்டாம் இடம் பிடித்த பதிவு.!
      எழுதியவர்..
      Adv. ElaVijay

      Delete
    4. *நம் நாயகன்...*

      பால்யத்தில் காமிக்ஸ் வாசமற்ற என்னை போன்றோர்களுக்கு
      எல்லா நாயகர்களையும் போல சமீப காலங்களில்தான் இவனும் அறிமுகம்...

      பால்யத்தில் என்னுடன் காமிக்ஸ்கள் கூட இல்லை...
      ஆனால் காமிக்ஸ்கள் இப்போது அந்தப் பால்யத்தை திரும்ப கொண்டு வந்திருக்கிறது என்பதே உண்மை...

      காமிக்ஸ் நாயகர்கள் என்றாலே சவரம் செய்த மொழு மொழு கன்னம்,
      கசங்காத உடைகள்,
      பேச்சில் நளினம்,
      வெள்ளை முகம், இவைகள்தான் நம் ஞாபகங்களில் தட்டுப்படும்....

      ஆனால் என் மனம் கவர்ந்த இவனோ இந்த அடிப்படை காமிக்ஸ் இலக்கணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன்..
      சுருக்கமாய் ஒரு வரியில் சொன்னால் "இவன் வேற மாதிரி..."

      நீண்ட கூர்மையான காதுகள்,வளைந்த தடித்த புருவங்கள்,
      உருண்டை கண்கள்,
      வித்தியாசமான தலை...
      சாப்பிட மறுக்கும் குழந்தைகளிடம் "ஒழுங்கா சாப்பிடாட்டி அந்த பூச்சாண்டிகிட்ட அங்கிள்கிட்ட பிடிச்சு கொடுத்திடுவேன்",
      என அம்மாக்கள் மிரட்டும் அளவுக்கு ஏதுவான தோற்றம் கொண்டவனாயினும், நம் எல்லோராலும் மிக விரும்பப்படும் கதாநாயகன்...
      யார் இவன்....?
      கூர்மண்டையன் என்று செல்லமாய் அழைக்கப்படும், குற்றங்களின் சக்கரவர்த்தியும்
      நீதியின் காவலுனுமான ஒன் அண்ட் ஒன்லி
      *ஸ்பைடர்* தான் அவன்....

      யாரையும் மதிக்காத கர்வம்,தலைக்கனம்,
      அகம்பாவம்,ஆணவம்
      என இன்னும் சொல்லாமல் விட்ட எல்லாமே கொண்டிருந்தாலும் எல்லோராலும் கொண்டாடப்பட்டவன் இவன்...

      பொடியன்,ஈனப்பிறவி,முட்டாள்கள், கிழட்டுபிண்டம்,
      பன்றிப்பயல்,
      அற்பபுழு என தனி அகராதியே படைக்கும் அளவுக்கு இவன் வசைபாடும் அழகில் நம் காதோரமும் கூட கொஞ்சமாய் ரத்தம் கசிந்திடக் கூடும்..

      கற்பனைக்கு எட்டாத ஆயுதங்களை எல்லாம் தன்னகத்தே கொண்டவன்.
      வலைத்துப்பாக்கி, முடக்கவாயு பிஸ்டல்,
      ஜெட்,ஹெலிகார்,
      என இன்னும் பலவும் கொண்ட இவனது சாம்ராஜ்யத்தில் ஒரு பிரஜையாக இல்லாவிட்டாலும் ரசிகனாக இருப்பதற்கே நாம் பெருமைப்படலாம்.

      இவன் கதைகளை எல்லாம் காதில் பூ சுற்றும் வேலையென இன்று அறிவு முதிர்ச்சியுடன் பேசுபவர்கள் எல்லாம் "அண்ணே இந்த ஸ்பைடர் வச்சிருக்க மாதிரி வலைத் துப்பாக்கி எங்கண்ணே கிடைக்கும்"என ஒருகாலத்தில் கேட்டுத் திரிந்த பயலுகதான்...

      இவனை எல்லோருக்கும் பிடிக்க இன்னொரு காரணம் இவனுக்கு அமைந்த எதிரிகள்...
      தனக்கு சமமான எதிரிகளையே தன் எல்லா போட்டிக் களங்களிலும் கண்டவன்.
      *இவன் எதிரியாய் இருக்கவும் கூட தனித்தகுதி வேண்டும்.*

      தவளை மனிதன்,
      சிவப்பு தளபதி,மிஸ்டர் மாஸ்,கோப்ரா,டாக்டர்நட்விசித்திரன் என நீளும் அந்த பாவப்பட்டவர்கள் வரிசையில் நாம் இல்லாத வரை நமக்கு நல்லதுதான்...

      பல்வேறு திறமைகளோடு வந்த எதிரிகள் எல்லாம் ஸ்பைடரை தோற்கடித்து, குற்றச்சக்கரவர்த்திக்கான அவன் இடத்தை அடைய நினைப்பதில் இருந்தே அவன் இருக்கும் உயரம் என்னவென நமக்கு புரியும்...

      எவ்வளவு பெரிய விசயத்தையும் ரொம்ப சாதாரணமாய் பார்ப்பது இவனது இன்னொரு ஸ்பெசல்..
      பஞ்சமே இன்றி பஞ்ச் டயலாக்குகள் இவன் பேச்சில் அனல் தெறிக்கும்.

      பார்க்கவும் சுமாரா பழகவும் கஷ்டமான ஆசாமியா இருந்தாலும் இவனை ஏன் இவ்வளவு பிடிக்குது?
      நன்கு யோசித்துப் பார்த்தா நிச்சயம் அது நமக்கு புரிபடும்...
      ஏன்னா உண்மையில் ஸ்பைடர்ங்கறது வெளியே இல்லை...
      *அது நாம்தான்...* நமக்குள்ள இருக்கும் நல்லதும் கெட்டதும்தான் ஸ்பைடர்.
      நமக்குள் இருக்கும் நல்லது கெட்டதோட வெளிப்பாடா நாம ஸ்பைடரை பார்க்கிறதாலதான் அவனை நமக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு.

      இதுமட்டுமில்லாம மனிதர்களுக்கு இயல்பா இருக்கும் குணங்களான கோபம், ஆக்ரோசம், பழிவாங்குதல்,இரக்கம்,சாந்தம் இது மாதிரி எல்லா வடிவங்களையும் ஸ்பைடரோட கதையில நாம பார்க்க முடியும்...
      நெருக்கமான ஒரு உறவா,நம்ம பக்கத்து வீடடு பையனாதான் நாம ஸ்பைடர பார்த்திருக்கோம்...

      உடன் இருப்பவர்களே சதி பண்ணிய போது அந்த உண்மையறிந்து அவர்களை மன்னிக்கும் போதும்(அதுவும் கெத்தாதான்),
      எதிரிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகும் போதும்,
      யாருமற்றவனாய் தனியனாய் இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பெருமையாய் பீற்றி அலையும் போதும் கொஞ்சம் *பச்சாபம்* கூட தோன்றி விடுகிறது இவன்பால்...

      *ஆபத்து காலங்களில் எல்லாம் பூவுலகை காக்கும் இவன் வருகை இப்போது இருந்திருந்தால் இவ்வுலகம் இன்னும் கூட நன்றாய் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது....*

      குற்ற சக்கரவர்த்தி என்றும் இவன் ஒருவனே...
      *ஸ்பைடருக்கு நிகர் ஸ்பைடரே...!!!*

      காதலுடன்,
      *நான்....*
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~

      மூன்றாம் இடம் பிடித்த பதிவு..

      எழுதியவர்..

      டாக்டர் பார்த்தீபன்

      Delete
    5. ரத்தமும் சதையுமான ஒரு நாயகன்.. ஒவ்வொரு சாமானியனுமே ஒரு நாயகனாக உருவெடுக்கலாம் என்பதை நிரூபித்த நாயகன்.. குடிகாரனாகவோ, சூதாடியாகவோ அல்லது உருப்படதானாகவோ இந்த சமுதாயம் ஒரு மனிதனை எளிதாக உருவகப்படுத்தலாம்.. குருடன் யானையை தடவி பார்த்த கதையாய்.. ஆனாலும் அக்கினி குஞ்சை பெருங் காட்டில் ஒளித்து வைத்த கதை தான் தங்க தலைவனை இல்லாத தங்கத்தை கண்டு பிடிக்க சொன்னது..அதன் வீரியமான விளைவை யாருமே அறிய வில்லை.. சுகவாசி கிடையாது, சபலமில்லா நண்பர்கள் கிடையாது, பார்த்வுடன் பம்மும் எதிரிகள் கிடையாது.. உயரதிகாரிகளின் உதவிகளும் கிடையாது, அரசாங்கத்தின் ஆதரவும் கிடையாது, முக லட்சணம், அழகு அறவே கிடையாது, அப்புறம் என்ன தான் இருக்கு இந்த நாயகனிடம்?? நம்மை போல சக மனிதனிடம் இருக்கும் எல்லா சபலமும் இருக்கு, எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் இருக்கு, ஒரு கரடி போல உடல் வலு இருக்கு, தனக்கு உதவிய ஒரு இனத்தையே காப்பாற்றக் கூடிய மதியூகமும், தலைமை பண்பும் இருக்கு, தன்னுடைய நண்பர்களே தவறு செய்தாலும் அதை சரி செய்யும் மதியூகம் இருக்கு, வாழ்க்கையே முழுவதும் சதி வலைகளும், முதுகில் குத்தும் துரோகங்களும் இருந்தாலும் தளராத நம்பிக்கை இருக்கு, தலைக்கு என்ன விலை பேசினாலும் அத்தனை சதிகளிலிருந்தும் தப்பிக்கும் அறிவு கூர்மை இருக்கு, எதரிலே நின்று குறி பார்த்தாலும் தன்னை நோக்கிவரும் தோட்டாவை பார்க்க தைரியம் இருக்கு.. இவ்வளவு ஏன் உலகமே எதிர்த்து நின்றாலும் எதிர் கொள்ள மன தைரியமும், மதியூகமும், உடல் வலுவும் இருக்கு.. எல்லாவற்றையும் விட உடைந்து போன ஒருவர் தன்னுடைய கதையை படிக்கும் போதெல்லாம் நம்பிக்கையை மீட்டு தரும் ஆற்றல் இருக்கு *எனக்கு பிடித்த நாயகன் இல்லை.. தலைவன்.. தங்க தலைவன்*

      ~~~~~~~~~~~~~~~~~~~~~

      மூன்றாம் இடத்தை இணைந்து பிடித்த பதிவு..

      எழுதியவர்

      ரம்மி 13 என்கிற ரமேஷ்.!

      Delete
    6. எனக்கு பிடித்த கதாநாயகன்...
      கேப்டன் டைகர்.....
      கேப்டன் டைகர் என்று சொல்லும்போதே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது....அந்தளவுக்கு என்னை ஆட்கொண்டுவிட்டார் டைகர்.....பள்ளிப்பருவத்தில் நண்பர்கள்குழாம் அனைவரும் ஒவ்வொரு சினிமா கதாநாயகர்களை தம்முடைய ஆதர்ஷ தலைவர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களின் படத்தை முதல்நாள் முதல்காட்சி பார்ப்பதும்.கட்அவுட்டிற்கு பாலாபிசேகம் பன்னுவதுமாக இருந்தார்கள்..ஆனால் ஏனோ எனக்கு எந்த நடிகரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள மனம் விரும்பவில்லை...அவர்களும் நம்மை போன்றே சாதாரண மனிதர்கள்தானே...அவர்களுக்கும் இரண்டு கால் இரண்டு கைகள்தானே இருக்கு...மேலும் பணத்துக்காகத்தானே நடிக்கிறார்கள் என்றெல்லாம் எண்ணியிருக்கிறேன்...இவ்வாறு மனநிலையில் இருந்த எனக்கு கேப்டன் டைகரின் மின்னும் மரணம் காமிக்ஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது....ஆரம்பத்தில் சற்று அசட்டையாகத்தான் படித்தேன் போகப்போக கதையில் மூழ்கி விட்டேன்...இன்னும் சொல்லப்போனால் டைகரின் விசிறியாகிவிட்டேன்....டைகரின் மன துணிச்சல்...விவேகம்.மதிநுட்பம்...இக்கட்டான சமயத்தில் துரிதமாக யூகத்து செயல்படுவது....தன் பேச்சு திறமையால் உயர் அதிகாரிகளை தன் வழிக்கு கொண்டுவரும் தந்திரம்...பல சூல்நிலைகளில் சாவை நேருக்குநேர் சந்தித்து அதிலிருந்து தப்பி பிழைப்பது....யப்பப்பா.......சினிமா கதாநாயகர்காளின் பின்னால் போகாத நான் டைகரை மானசீக குருவாக. தலைவராக ஏற்றுக்கொண்டேன்.அந்தளவுக்கு டைகர் என்னை ஈர்த்துவிட்டார்......ஒரு காலத்தில் முடியை அதிகமாக வளர்த்து பரட்டை தலையாக்கி டைகரைப்போன்று என்னை உருவகப்படுத்தி சுற்றியலைந்தேன்....நண்பர்கள் எல்லாம் வித்தியாசமாக பார்ப்பார்கள்...இன்னும் சொல்லப்போனால் அவ்வபப்போது இவ்வாறு நினைப்பதுண்டு.....( நான் மட்டும் பெரும்பணக்காரனாக இருந்திருந்தால் டைகரின் மின்னும் மரணத்தை அப்படியே அதிக பொருட்செலவில் திரைப்படமாக எடுத்து உலகமக்கள் அனைவரையும். யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக...என்பதுபோல் அனைவரும் கண்டுகளிக்கனும்.)என்றெல்லாம் எண்ணியுள்ளேன்.......
      ( மைக் டோனோவான் புளூபெர்ரி கேப்டன் டைகர ஷி- நா-பா .....)
      தலைவா நின்புகழ் ஓங்குக......

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      ஐந்தாம் இடத்தைப் பிடித்த பதிவு...

      எழுதியவர்..

      ஷாஜகான்.!

      Delete
    7. *எனக்கு பிடித்த கதாநாயகன்*


      நமது லயன் காமிக்ஸ் வரலாற்றில் எத்துணையோ நாயகர்கள் வெளிவந்துள ளார்கள் .அவர்களில் சிலர் ( *இரும்புக்கை நார்மன் ,அதிரடி வீரர் ஹெர்குலஸ் ,ஜார்ஜ் அன்ட் ட்ரேக் போல*) ஒரு சில கதைகளுடன் மாயமாகி உள்ளார்கள் ..ஒரு சில நாயகர்கள் ( *டெக்ஸ் ,லக்கி போல*..) அன்று முதல் இன்று வரை இன்னமும் வெற்றி நடையில் வீறு நடை போட்டு கொண்டுள்ளார்கள் .இப்படி காணாமல் போன நாயகர்களும் சரி ,முதல் இடத்திலியே தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும் நாயகர்களுமே சரி என்னை கவர்ந்தவர்கள் தான் ,பிடித்தமானவர்கள் தான்.

      *ஆனாலும்*

      லயன் வரலாற்றி்ல் முதல் தொடக்கத்தில் இருந்து இன்று வரை இந்த நாயகர் (கள்) சிலரை வெறுப்படைய வைத்தாலும் ,சிலரை ஆதர்ச நாயகராக்கி வைத்தாலும் முதல் இடத்தில் இல்லாமலும் ,கடைசி இடத்தில் நில்லாமலும் மிதமாக இன்னமும் ஓடிக்கொண்டு இருக்கும் இந்த *இளம் (?) நாயகர்* என்னை மிகவும் கவர்ந்த ஒருவர் என்பதே உண்மை.

      தனது நாயகர் பட்டத்தையே தன்னை வேறுவித மறுவாழ்க்கை *( மறு வாழ்க்கை அழுத்தி படிக்கவும் )* அடைய வைத்த ,தான் குருவாக மதித்து ,பெண்ணாக இருந்தாலும் அவருக்கே தனது நாயக அந்தஸ்தை அளித்து பின் நிற்கும் *நாயகன் ( மாடஸ்தி) கார்வின்* என்னை மிகவும் கவர்ந்த ஒருவர்.

      எத்துனையோ மனிதர்கள் ஒரு சிலரால் மேம்படுத்தப்படுவார்கள்..சிலரால் தனது வாழ்க்கை முறையே மாறியிருக்கும்.இடர்மிகு காலங்களில் சிலர் சிலருக்கு எவ்வளவோ உதவிகள் அளித்திருப்பர் .அதை நிஜ மனிதர்கள் பலர் சில காலங்களிலியே அதனை மறந்து விடுபவர்களை நாம் பார்த்து கொண்டுத்தான் உள்ளோம்..சில சமயங்களிலோ தன்னை மேம்படுத்திய மனிதர்களையே எட்டி உதைக்கும் நபர்களையும் நாம் வாழ்வில் பார்த்து கொண்டுத்தான் இருக்கிறோம்.ஆனால் கார்வினோ தன்னை மேம்படுத்திய இளவரசிக்காக காலம் முழுவதம் உடனிருப்பதுடன்..அவருக்கு ஓர் ஆபத்து ,இழுக்கு எனில் தனது உயிரையும் பணயம் வைத்து அவருக்காக போராடுவதும் ,தனக்கு கட்டளை இடுவது பெண் என்றாலும் எந்த உத்தரவு இட்டாலும் பேதம் பார்க்காமல் சேவகன் போல் மறுப்பேச்சின்றி உடனே செயலாற்றும் அந்த பாங்கும் ,எங்கு எந்த சூழலில் இருந்தாலும் மாடஸ்தி கட்டளை இட்டால் அது எந்த காரியமாக இருந்தாலும் அங்கேயே அதை விட்டுவிட்டு இளவரசிக்காக உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பறந்து வருவதும் என இவரிடம் மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.எனவே தான் *கார்வின்* என்ற நாயகர் *மாடஸ்தி* என்ற நாயகிக்கு பின் நின்றாலும் எனக்கு பிடித்த முதன்மையான பல நாயகர்களில்

      *கார்வினும்* ஒருவர்.

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


      ஆறாம் இடத்தைப் பிடித்த பதிவு..

      எழுதியவர்..

      தலீவர் பரணீதரன்.!

      Delete
    8. எனக்கு பிடித்தமான கதாநாயகனாக நான் கூறவிரும்பவது *'கதை'* யே!!!

      காமிக்ஸில் மட்டுமே நாம் சில நூறு நாயக, நாயகியர்களை கடந்து வந்திருக்கிறோம்.
      இரும்புக்கை மாயாவி, ஸபைடர், காரிகன், ரிப் கிர்பி, ஆர்ச்சி, மாடஸ்டி, டைகர், டேக்ஸ், லக்கி இன்னும் பல. இவர்களை பற்றி பேசும் போது, இவர்களது சிறந்த கதையை உதாரணமாக கொண்டெ பேச முடிகிறது.

      காரிகன் வின்வெளி சென்ற *கதை*..
      மாடஸ்டி மலையேறி கார்வினை காப்பாற்றிய *கதை*...
      இரும்புக்கையார் குற்றவாளியாக திரிந்த *கதை*... இன்னும் பல.

      பல ஆண்டுகளுக்கு முன் நாம் படித்த புத்தகத்தின் பெயர் நினைவில் இருக்காது, ஆனால் ஆழமாக ஆணி அடித்தாற்போல் கதைகள் நம் மனதில் தங்கிவிடும்.

      ஆனானப்பட்ட டெக்ஸ் வில்லருக்கே பலர் பாயாசம்கிண்ட காரணமாக இருப்பது , நமது பழைய படங்களில் மாறுவேடம் போட மறு வைப்பது பொல இருக்கும் ஒரேமாதிரி கதைகள் என்ற விமரிசனம்.
      ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி குவித்த ரன்களை, மற்றவர் டி20 மட்டுமே ஆடி தொடுவது போல, டெக்ஸ் கதை எண்ணிக்கையில் வெறும் பத்து சதவிகிதம் கூட தொடாத டைகர், அவருக்குப் நிகராக விரும்பபப் பட காரணம் *கதையே*.

      இந்த ஆண்டு லயனின் சிறந்த காமிக்ஸ்களாக கொண்டாடப்படும் கண்ணே கலைமானே, பிரிவோம் சந்திப்போம், நில் கவனி வேட்டையாடு தேர்வாக இருப்பதற்கு காரணம் *கதையே*.

      *அமையாவே வந்தாலும் கதை இல்லையேனில் கண்டுகொள்ளமாட்டோம்.*

      சினிமா, சீரியல், நாவல், இலக்கியம், காஸ்ஸிப்( ஊர் வம்பு) என அனைத்திலும் நிறைந்திருக்கும் *கதையே* காமிக்ஸ்லும் சிறந்த நாயகன்/நாயகி.

      நன்றி
      தி. கிரிதரசுதர்சன்

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      ஏழாம் இடத்தைப் பிடித்த பதிவு..
      எழுதியவர்..
      தி.கிரிதரசுதர்சன்.!

      Delete
    9. “ஆரம்பத்தில் எல்லாமே சீராகவும், எங்கும் அமைதியாகவும், இதமான பயணமாகத்தானிருந்தது.”
      ஒரு கதையின் ஆரம்பமாக தொடங்கும் வரிகள். ஆனால் பதிந்துள்ள அமைதியின் பின்னே ஒளிந்திருக்கும் ஆர்ப்பாட்டம் சுனாமியை ஒத்தது. படபடவென்று சூடுபிடிக்கும் கதையில், சம்மந்தமில்லாமல் வந்து இணைந்துகொள்ளும் அந்த நபரின் முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பின் மாயமென்ன.
      வேகம்…வேகம்…வேகம். தவிர வேறொன்றுமேயில்லாத வேகமான விறுவிறுப்பான கதை. ஒரு நிமிடம் ஓய்வெனும்போது அடுத்த நொடி பற்றிக்கொள்ளும் பதட்டம். ஆக்சன்..
      அந்த சிறுவனின் முகத்தில் கூட அவ்வப்போது மாறிமாறி வரும் உணர்வுகளின் சுவடுகளின் நிழல்கூட பற்றிக்கொள்ளாத அந்த ஆக்சன் ஹீரோவின் முகத்தில் எப்போதும் மாறாத புன்னகை.
      தெரிந்தோ தெரியாமலோ எடிட்டர் வைத்த பெயர் : “ஆக்சன் ஹீரோ சைமன்”
      அவரை அதன்பின் பார்த்தேனா, முன்னமே ஒரு கதை வந்திருக்கிறதா எதுவும் தெரியாது. ஆனால் எப்போது சோர்வு வருமோ, மனம் பாரமாக இருக்குமோ.. இந்த கதையை நினைக்க எல்லாம் தூசி போல் தெரியும்.
      எவ்வளவு இடர்பாடுகள், துன்பங்கள் அனைத்தும் ஒரே வரியில் காணாமல் போகும்.
      “கவலைப்பட நேரமேது”
      அது இந்த கதையின் தாக்கம்தான்.
      இந்த கதையில் முன் பாகம் இருக்கலாமோ, தெரியாது. ஆனால் பின் தொடரும் கதை இருக்கலாம். எனினும் அது எல்லாம் தேவையில்லாமல் சில தேர்ந்தெடுத்த காட்சிகளால் (அட்டகாசமான படங்கள்) தொகுக்கப்பட்ட அட்டகாசமான சினிமாவை ஒத்த கதை.
      முன்னரே ஒரு முறை சொல்ல நினைத்து, இந்த போட்டிக்கு பயன்படுத்திக்கொண்ட எனக்கு பிடித்த ஹீரோ…” ஆக்சன் ஹீரோ சைமன் “
      “சாவிடம் இருந்து தப்பிப்போவதற்கே நேரம் சரியாக இருக்கும்போது… சாவதற்கு நேரமேது?”

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~

      ஏழாம் இடத்தை இணைந்துபிடித்த பதிவு..

      எழுதியவர்..
      ஓவியர் அப்புசிவா.!

      Delete
    10. *என் மனம் கவர்ந்த கதாநாயகன்* 

      ஒவ்வொரு கதாநாயகர்களுடன் பயணிக்க ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்படும். அந்த கதாபாத்திரத்தின் உதவியுடன் முக்கிய கதாபாத்திரமான நம் கதாநாயகர் கட்டமைக்கப் படுவார். Simply the side kick will be used to build up the characterization of our HERO. டெக்ஸுக்கு கார்சன், மாடஸ்திக்கு கார்வின், லோன் ரேஞ்சுருக்கு டோண்டோ, என்று ஒருவரோ... கேப்டன் பிரின்சுக்கு, பார்னே & ஜின் என்று இருவரோ கதை நெடுக வலம் வந்து கதைக்கு வளம் சேர்ப்பார்கள். இவர்கள் துணையின்றி கதாநாயகனால் சில பல இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது என்றும் கட்டமைக்கப் படுவார்கள்.

      அந்த வகையில் இப்படி கதாநாயகனுக்கு முட்டு கொடுக்க வந்த கதாபாத்திரமே, ஒரு கதாநாயகனாக உருவெடுத்தவன் என் மனம் கவர்ந்தவர். இவரை யாருக்கு பிடிக்காது? இந்த கேள்விக்கு கடைசி வரியில் பதில் சொல்கிறேனே. ரொம்ப ஓவரா சலம்புறானே  தவிர நேரா விஷயத்துக்கு வர மாட்டேங்கிறானே என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது.

      எனக்கு மிகவும் பிடித்த லக்கி லூக்கின் ஆஸ்தான நண்பர் ஜாலி ஜம்பர் அடிக்கும் லூட்டிக்கு இடையில் அசாதாரணமாய் காமடி செய்து ஆறிலிருந்து எண்பது வரை வயிறு நோக வைக்க கிச்சு கிச்சு மூட்டும் சதுரவட்டக்கேனின் மகன் ரின்டின்கேன் தான் என் மனம் கவர்ந்த கதாநாயகன்.

      இவரது புத்தகத்தை முடிந்த வரை யாரும் இல்லாத வீட்டில் படிக்கவே நான் விரும்புவேன். நான் இவரின் புத்தகத்தை கையில் எடுத்த உடன் வீடு அதிர சிரிப்பேன். ஆகையால் தனிமையே என் துணைவன் என்று பாடாமல், ரின்டின்கேனே என் துணைவன் என்று கவலை மறந்து சிரிப்பேன்.

      ஒரு சிலர் கதை தான் கதாநாயகன் என்பார்கள்; கதை இல்லையென்றால் கதாநாயகர்கள் தோற்றுப் போவார்கள் என்பது உண்மையே.. என்ன தான் கதாநாயகர்கள் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் கதை இல்லையென்றால் கதை கந்தல் தான். ஆனால் கதையே இல்லையென்றாலும் என் மனம் கவர்ந்த கதாநாயகன் அடிக்கும் லூட்டியே கதை தான். கதை கதாநாயகர்களை உருவாக்கலாம், ஆனால் என் மனம் கவர்ந்த கதாநாயகன் கதைகளை உருவாக்குபவன்.

      நாலு கால் ஞான சூன்யம் என்ற பட்டப் பெயர் வாங்கியிருந்தாலும் கிளைமாக்சில் செய்ய வேண்டியதை சரியாக செய்து விட்டு, சாதித்தது  கூட தெரியாமல் அவுக் லவுக் என்று கடமையே கண்ணாக இருப்பவனை யாருக்கு தான் பிடிக்காது. எவ்வளவு பெரிய கிரிமினலாக இருந்தாலும் அவனின் மென்மையான மறுபக்கத்தை மட்டுமே பார்ப்பவன். என்ன தான் காவலராக இருந்தாலும் அவர்களின் ஆணைக்கு அடிபணியாதவன். அவனது நடையில் சிங்கமே சோர்ந்து விடும். அப்படி ஒரு கம்பீரம். அந்த நடையை காணவே கண்கோடி வேண்டும். அவனது ஓட்டம் ஜாலி ஜம்பருக்கே சவால் விடுபவை. 

      இவனைப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? என்று முதலிலேயே கேள்வியும் கேட்டே, பதிலை கடைசியில் சொல்கிறேன் என்று பில்ட் அப் கொடுத்து வைத்திருந்தேன். இவனை பிடிக்காதவர்கள் இந்த லோகத்தில் டால்டன் பிரதர்ஸாக மட்டுமே இருப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதிலும் ஜோ டால்டனுக்கு ரின்டின்கேனை கண்டாலே அலர்ஜி தான்.உங்களுக்கு இவரை பிடித்து இருக்கிறது தானே... பிடிக்கவில்லை என்று சொல்லி டால்டன் பிரதர்ஸுடன் கூட்டு சேராதீர்கள். ஆமாம் சொல்லிப்புட்டேன்.

      என் தலைவனுக்கு 2006 ல் தனியாக ஒரு தொலைக்காட்சி தொடரும் தயாரிக்கப் பட்டது. அதில் அவரது பெயர் பிரெஞ்சில் RANTANPLAN என்றும் ஆங்கிலத்தில் RINTINDUMB என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். எது எப்படியோ ரின்டிண்டம்பாக இருந்தால் என்ன ரண்ட்னபிளானாக இருந்தாலென்ன எங்கள் தலைவன் ரின்டின்கேன் வழி தனி வழி தான்.

      பிணைக்கைதியாக இருந்தாலும் பிரியமுடன் நடந்துக் கொள்பவன். தடை பல தகர்த்தெழுந்தவன். இவன் என் நண்பேன்டா என்று மார் தட்டி சொல்வேன்.!

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      ஏழாம் இடத்தை இணைந்துபிடித்த பதிவு..
      எழுதியவர்..
      சுரேஷ் தனபால்.!

      Delete
    11. நடுஜாமத்து தூக்கத்துல தட்டி எழுப்பி கேட்டாலும் நான் சொல்லும் ஒரே சொல் "ஸ்பைடர்". இது ஒரு மந்திர சொல்லாகவே மனதில் நின்று விட்டது. இத்தனை வருடங்களில் எத்தனையோ கதாநாயகர்கள் நாயகிகள் வந்துள்ளனர் அவர்களை பிடிக்கலையா என்றால்....பிடிக்கும். ஆனால் அனைவருமே ஒரே பரிமாணத்தில் தங்களின் சாகசங்களை, திறமைகளை தொடர்பவர்கள். கதாநாயகன்னா அடிவாங்காம எதிரிகளை அடிக்கனும் என்பதை நாம் விரும்பினாலும்....எதிரியிடம் அடிவாங்கிய பின் இறுதியில் அடித்து நொறுக்கும் கதாநாயகனை அதிகப்படியாக விரும்புவோம். இது ஸ்பைடர் கதையில் காணலாம். எல்லா ஆயுதங்கள் இருந்தும் போராடித்தான் வெல்வார். மேலும் ஒரு Negative Character ஆ இருந்து Positive Character ஆக அதாவது இரு பரிமாணங்களில் ஸ்பைடர் மாறுவது ஏனோ எனக்கு பிடிச்சிருந்தது. குறைந்த வருடங்களில் ஸ்பைடர் கதைகள் வந்தாலும் ஒரு நல்ல Message எனக்கு தெரிந்தது...ஒரு நல்லவன் என்னைக்கும் ஒரே மாதிரிதான் இருக்கனும், கொஞ்சம் மாறினாலும் அவ்வளவுதான். ஆனா ஒரு கெட்டவன் மாறினா நல்லவனாதான் மாறுவான்.....அந்த மாற்றம் உயர்ந்த மதிப்பையும் பாராட்டையும் தரும். இந்த குணத்தை ஸ்பைடர் கதையில் தெரிந்துட்டேன்....அதனால தான் " எனக்கு பிடித்த கதாநாயகன் என்றும் "ஸ்பைடர்".

      நன்றி நண்பர்களே!

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      ஏழாம் இடத்தை இணைந்துபிடித்த பதிவு..
      எழுதியவர்..
      கிரிஜி.!

      Delete
    12. மேற்கண்ட பத்து பதிவுளும் பரிசுக்குரியவையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்.!
      உற்சாகப்பரிசு பெற்ற பதிவுகளை சேகரித்து பிறிதொரு ஃப்ரீ நாளில் பகிர முயல்கிறேன்.! :-)

      Delete
    13. கலந்துகொண்டு எங்களை கௌரவப்படுத்தி, ஊக்கப்பரிசினைப்பெற்ற அருமை நண்பர்கள்....

      11.ஜனார்த்தனன்.

      12.ஜான் சைமன்.

      13.செந்தில் சத்யா.

      14.சரவணக்குமார்.

      15.கார்த்திகேயன்.

      16.வெற்றி.

      17.அபிஷேக்.



      அனைவருக்கும் நன்றி நண்பர்களே.!

      Delete
    14. போட்டியை நடத்தி பரிசுகள் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் கண்ணன்

      Delete
    15. "எனக்கு பிடித்த நாயகர்கள் "

      நண்பர்கள் ஒவ்வொருவரின் கருத்துகளையும் படிக்கும் பொழுது நமது நாயகர்கள் அனைவரும் கற்பனை நாயகர்கள் அல்ல..ஒவ்வொருவரின் இதயத்திலும் குடியிருக்கும் நிஜ மாந்தர்களாகவே உருவகப்படுத்தி உள்ளார்கள் என்பது உண்மை.


      *லயனுக்கு நன்றி*

      Delete
  77. மரணமுள், நியூயார்க்கில் மாயாவி, ஆழ்கடலில் ஆர்ச்சி நேற்று மாலையில்தான் ஆர்டர் கொடுத்தேன். இன்று புத்தகங்கள் கைகளில். என்னா ஒரு சர்வீஸ். சூப்பர்.

    நான் கூட என்னடான்னு online book fair க்கு புதுக் கதைகளைப் போடாமல் பழைய மாயாவி, தகர டப்பா ஆர்ச்சின்னு வருதேன்னு நினைச்சேன். ஆனால் இதழை கைகளில் ஏந்திப் பார்க்கும் போது வசீகரிக்கவே செய்கிறது. அதற்கு இந்த தயாரிப்பு தரமும் முக்கிய காரணம். பாக்கெட் சைசில் பார்த்தைதை விட இந்த ரெகுலர் சைஸ் அம்சமாக பொருந்துகிறது. ஒரு விதத்தில் இதொரு சம்திங் ஸ்பெஷல் தான். கதைக்கு நான் வரலை, நல்ல ஒரு மழை நாளில் எடுத்துப் படிக்க வேண்டியது தான்.

    Last, but not least டெக்ஸ், மரண முள் என்னுடைய சாய்ஸ் 50-50 யாகேவேயிருந்தது. வழக்கத்திற்கு மாறான கதைக்கரு. விண்கல், பள்ளம், உருண்டை, முள், மரணம், மர்மம் என ஒரு scientific suspense thriller. ஆனால், வண்ணத்தில் பார்க்கும் போது இன்னும் மிரட்டலாகவே இருக்கிறது. டெக்ஸின் மாதாந்திர இடைவெளியை இட்டு நிரப்ப வந்திருப்பதால் ஒரு பெரிய ப்ளஸ்.

    ReplyDelete
  78. Edi,

    டெக்ஸ் வில்லர் இன் Science fiction கதைகளான மரணத்தின் நிறம் பச்சை, மரண முள் போன்று வேறு கதை வரிசைகள் இருந்தாலும் தேடிப்பிடித்து வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
  79. ஆன்லைன் இதழ்களை இனிதே பெற்றாயிற்று சார்,மரண முள்ளை நெருடாமல் புரட்டியாயிற்று...
    கூரியரில் பெற்ற இதழ்களையும்,அன்பு பரிசான லக்கிலூக் போஸ்டர்களையும் நண்பர்களுக்கு கொடுத்தாயிற்று...
    மகிழ்வான அதே நேரத்தில் தம்பி யுவா,சுசி அவர்களின் கோரிக்கை யாதெனில் இனிவரும் காலங்களில் அனுப்பப்படும் போஸ்டர்கள் மடித்து அனுப்பாமல் ரோல் செய்து அனுப்பினால் நலம் என்று தெரிவித்தார்கள்,இதனால் அனுப்பப்படும் பரிசு போஸ்டர்கள் எந்த வகையிலும் சேதமாகலும் மடிப்பு கலையாமலும் கிடைக்கும் என்று தெரிவித்தனர்...
    எனது கோரிக்கையும் அதுவே சார்...

    ReplyDelete
  80. அப்புறம் அந்த விலையில்லா லக்கி லூக் போஸ்டர் கனஜோராய் ரூ.200 ப்ளஸ் கூரியர் கட்டணத்துக்கு வியாபாரமாகிடுவதையும் பார்த்தேன் ! பத்து ரூபாய் சமாச்சாரம் நிறைய பேருக்கு ஒரு தண்டத்துக்கு வழிவகுப்பதை பார்க்கும் போது நெருடுகிறது ! அந்த போஸ்டர் வேண்டுவோர் கூரியர் கட்டணமாய் ரூ.25 மட்டும் அனுப்பினால், நம் அன்புடன் எப்போது வேண்டுமானாலும் அனுப்பிடலாம் !

    G Pay அல்லது Phone Pe சிறு தொகைகளாயினும் சிரமங்களின்றி அனுப்பிட உதவும் என்பதால் அதனை உபயோகிக்கக் கோருகிறேன் folks !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் காமிக்ஸ் வாட்சப் க்ரூப்களில் இதனைப் பகிர்ந்திடுங்களேன் ப்ளீஸ் guys ?

      Delete
    2. ஒருவருக்கு ஒன்றுதான் என்று இருந்தால் நன்று.
      இல்லையேல் மொத்தமாக வாங்கி விற்று விட வாய்ப்பு உண்டு.

      Delete
    3. அருமையான முடிவு சார்! நன்றிகள் பல🙏🙏🙏

      Delete
    4. சிறப்பான (சிறந்த) முடிவு சார் 😍

      Delete
    5. சிறப்பான தரமான சம்பவம் இதுபோல் மற்ற அத்துமீறல்களுக்கும் நடவடிக்கை எடுப்பீர்களென்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் ஆசிரியரே

      Delete
  81. சார் - யோசிச்சு பாருங்களேன் - ஒங்க கிட்ட 25 ரூபாய்க்கு வாங்கி வெச்சுட்டு அடுத்த வருஷம் 225க்கு வைத்தாலும் 200 லாபம் :-D 

    எதுக்கும் நா ஒரு டஜன் வாங்கறேன் ;-)

    ReplyDelete
    Replies
    1. அப்படியானால் ஒன்றுக்கு மேற்பட்ட போஸ்டர்கள் நஹி என்று தடா போட்டு விடவேண்டியது தான் !

      Moreover "விற்பனைக்கு அல்ல" என்ற நீரோட்டத்தோடு போஸ்டர்கள் இருக்கும் ; அவற்றை அதற்குப் பின்னேயும் வாங்கிட ஜனம் இருப்பின், அது அவர்கள் பாடு சார் !

      Delete