Powered By Blogger

Sunday, March 31, 2013

கோடையின் கொடை !


நண்பர்களே,

வணக்கம். ஜெர்மனியின் மைனஸ் 7 டிகிரிக் குளிருக்கு அணிந்த ஸ்வெட்டரோடு லார்ட் லபக்தாசைப் போல் சென்னையில் வந்திறங்கிய போது பிடறியோடு அறைந்து வரவேற்றது நமது கோடை வெப்பம் ! எண்ணெய் வழிந்த முகமும்,  வியர்வையும் இனி சில, பல மாதங்களுக்கு இலவச இணைப்புகளே என்ற நினைப்பு தலைக்குள்ளே எட்டிப் பார்த்த கணமே - ஆண்டின் இந்த வேளையினை அத்தனை ஆவலாய் எதிர்பார்த்திட்ட 3 x 10 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களும் நினைவுக்கு வரத் தப்பிடவில்லை! 

ஏப்ரல், மே மாதங்கள் என்றாலே நமது லயனின் துவக்க காலம் முதல் ஒரு பரபரப்பு எங்களுக்குள் தொற்றிக் கொள்வது வழக்கம் . பள்ளியின் ஆண்டு விடுமுறைகள் என்பதால் காமிக்ஸ் வழக்கத்தை விடக்  கூடுதலாய் விற்பனை ஆகுமென்ற கணிப்பில் வியாபாரிகள் நம்மிடமிருந்து மொத்தமாய் முந்தைய கையிருப்பு இதழ்களை வாங்கிடுவர். 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ரூ.5000-க்கு ரொக்க பில் போடுவதென்பது விவரிக்க இயலாததொரு த்ரில் அனுபவம் ! மலேசியாவிற்கும் நம் பிரதிகள் பயணமாகி வந்த சமயமது ; கடல் கடந்து சென்றிடும் பிரதிகளின் எண்ணிக்கையும் கூட கோடையினில் கணிசமாய் இருந்திடும். கையில் கொஞ்சமாய் காந்தி படமிட்ட நோட்டுக்கள் புழங்கத் துவங்கிட்டாலே , எனக்குள் உறங்கிடும் பாலே நடனக் கலைஞன் பரபரப்போடு துயில் எழுந்து  கால் கட்டை விரலைத் தேடத் துவங்கிடுவது வழக்கம் ! அவ்வேளையில் நிலவிய விற்பனை சூழல்களும் பிரமாதம் என்பதால், நமது முகவர்கள் அனைவருமே எனது "வாய்க்குள் விரல்" நடனத்தின் முன்சீட் ரசிகர்கள் ! தமிழ் பத்திரிகை உலகினில் ஒரு ரூபாய் ; இரண்டு ரூபாய் விலைகளைத் தாண்டி இதழ்கள் ஏதுமே கிடையாது என்ற நிலையில் - ஐந்து ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் "கோடை மலர்கள்" வெளியிடும் நம் அசட்டுத் துணிச்சல் ஏஜெண்ட்களுக்கு சுலபமாய் 25% கமிஷன் ஈட்டிடும் ஒரு வாய்ப்பாய் அமைந்தது. சொல்லி வைத்தாற்போல நீங்களும் அவற்றை பரபரப்பாய் வாங்கித் தள்ளியதால் கோடை வியாபாரம் துளி ரிஸ்க்கும் இல்லாது போய் விடுவது வழக்கம் ! 

1984 முதல் வித விதமாய் நாம் வெளியிட்ட கோடைமலர்களில் பல எனக்கு வெறும் அட்டைப்படங்களாக மாத்திரமே இன்று நினைவில் நின்றிட்டாலும், நான் ரொம்பவே ரசித்துப் பணியாற்றிய "கோ.ம" இதழ்களில் பிரதானமானவை என்று வரிசைப்படுத்தினால் - இது போன்றதொரு லிஸ்ட் உருவாகும் : (இது முழுக்க முழுக்க "கோ.ம." பட்டியல் மாத்திரமே)

1.லயன் கோடை மலர் - 1986
2.திகில் கோடை மலர் 1987
3.லயன் கோடை மலர் - 1987
4.மினி லயன் - சம்மர் ஸ்பெஷல் 1988
5.மினி லயன் - ஹாலிடே ஸ்பெஷல் 1989

1986 லயன் கோடை மலர் பற்றி "சிங்கத்தின் சிறுவயதில்" பகுதியினில் வெகு சமீபமாய்த் தான் எழுதி உள்ளேன் என்பதால் அதனை மீண்டுமொருமுறை துயில் எழுப்பிட வேண்டாமே என்ற எண்ணத்தில், பட்டியலின் பாக்கி இதழ்களை நினைவுக்குக் கொணர முயற்சித்தேன்...!1987-ல் லயன் காமிக்ஸ் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த வேளையினில், ஸ்பெஷல் வெளியீடுகள் அதனில் தலை காட்டியதில் பெரியதொரு வியப்பில்லை தான் ; ஆனால் தத்தித் தடுமாறிய நடையோடே காலம் தள்ளி வந்த திகில் காமிக்ஸில் ஒரு 5 ரூபாய் ஸ்பெஷல் என்பதெல்லாம் கொஞ்சம் 'டூ மச் 'என்ற நிலை அப்போது  ! பற்றாக்குறைக்கு நமது மினி லயன் & ஜூனியர் லயன் இதழ்களும் கூட அந்நேரங்களில் வெளி வந்து கொண்டிருந்தன  !


விற்பனை எண்ணிக்கை குறையும் போதெல்லாம் professional பத்திரிகைகள் ஏதேனும் புதுப் பாணிகளை ; இலவசங்களை ; விளம்பரங்களைக் கொணர்வது வழக்கம் ; ஆனால் எனக்கோ விற்பனை துவளும் சந்தர்ப்பங்களில் இன்னமும் கூடுதலாய் கதைகளை வழங்குவதைத் தாண்டி வேறேதும் செய்ய மண்டைக்குள் தோன்றிடவில்லை. 'அந்தக் கதை பிடிக்காது போனால், maybe இதாவது பிடிக்கும் தானே ..?' என்ற ரீதியில் மாற்றி மாற்றி எதையாவது வழங்கிட  வேண்டுமென்ற உத்வேகம் மட்டுமே அந்த வயதில் என்னுள் ஓடியதன் பலனே இந்தக் கோடை மலர் 1987! இரு அயல்நாட்டுப் பயணங்களின் பலனாய் கழுதைப் பொதியளவுக் கதைகள் கையில் இருந்திட்டதால் எனது பல்டிகள் அத்தனைக்கும் நிறையவே களங்கள் சாத்தியமாகி.அன்றைய நாட்களில் ! தமிழ் காமிக்ஸ் உலகினில் இரும்புக்கை மாயாவி முடிசூடா மன்னராய் கோலோச்சி வந்த அந்நாட்களில்  ; முத்து காமிக்ஸின் பொறுப்பும் என் கைக்கு முழுமையாய் வந்திருக்காத அச்சமயத்தில் - கையில் இரும்பு மாதிரி எதையேனும் வைத்திருக்கும் எந்தக் குடாக்குக்  கேரக்டர் சிக்கி இருந்தாலும் அவரையும் நமது காமிக்ஸ் உலகிற்க்குக் கொணர நான் தயாராக இருந்த சமயம் அது !அப்போது இங்கிலாந்தின் மற்றொரு காமிக்ஸ் ஜாம்பவான்களான D.C .Thomson  & கோ.வின் படைப்பான IRONFIST எனும் ஹீரோ நமது திகில் நாயகர்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாய் இருந்திட்டதால் - முதலில் 'டிக்' ஆனவர் அவரே ! ஓவராய்க் காதில பூ சுற்றும் ரகமாக அல்லாது - ஒரு நார்மலான துப்பறியும் ஆக்க்ஷன் ஹீரோவாக அவரைப் பார்த்திடல் சாத்தியம் என்பதால் எனக்கு அவரைப் பிடிக்கும் என்பதும் ஒரு காரணம். இந்த இதழின் ஸ்டார் attraction என நான் கருதியது இந்த இரும்புக்கை நண்பரையும், தொடர்ந்திட்ட ஏஜெண்ட் ரோஜர் மூரையும் ! தெளிவான சித்திரங்கள் ; மிதமான ஆக்க்ஷன் என்று இரு நாயகர்களுமே நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தோன்றியது. அவர்களோடு கூட்டணி சேர அடுத்து என் வசமிருந்தவர் இன்னொரு பிரிட்டிஷ் ஹீரோவே  ! கொஞ்சம் புராதன நெடியடித்தாலும், 1960s களில் வெளியான VALIANT வார இதழில் சுவாரஸ்யமான துப்பறியும் கதைகள் பலவற்றில் சாகசம் செய்த செக்ஸ்டன் ப்ளேக் தான் அந்த ஆசாமி.  (இன்றைய ஜெரோம் ; ரிப் கிர்பி போல் சற்றே பரபரப்புக் குறைச்சலான டிடெக்டிவ் இவர்!!)

'பிசாசு வனம்' என்ற ஒரு மிதமான மர்மக் கதையில் அவருக்கு வாய்ப்புக் கிட்டியது. இந்த இதழின் பாக்கிப் பக்கங்களை ஆக்ரமித்தவர்களும் கூட அத்தனை பெரிய பெயர்கள் அல்ல தான் ! ஜான் ராம்போ என்ற இன்னொரு DC THOMSON-ன் ஹீரோவின் ஒரு சாகசம் ; கறுப்புக் கிழவியின் 2 கதைகள் (கிழவியின் காதலர் நண்பர் ஜான் சைமன்- இந்த இதழைப் படித்தாகியாச்சா ?)  ; கேப்டன் பிரின்சின் ஒரு துக்கடாக் கதை என்று படிக்க நிறையவே பக்கங்கள்.


இவர்கள் தவிர 2 சூப்பர் ஸ்டார் சூப்பர் ஹீரோக்களும் இதழில் இடம் பிடித்திருந்தனர். முதலாமவர் நமது அப்போதைய டாப் ஸ்டார் ஸ்பைடர் - "விண்வெளிப் பிசாசு 'எனும் விட்டலாசார்யா பாணி தொடர்கதையில் ; இரண்டாமவர் BATMAN - சின்னதானதொரு அறிமுகத்தோடு ! தொடர்ந்திட்ட மாதங்களில் BATMAN முழு நீள சாகசங்கள் பலவற்றில் தூள் கிளப்பிய போது - கோடை மலரிலே அவருக்கு இன்னமும் கொஞ்சம் பெரிய பங்களிப்பைத் தந்திருக்கலாமோ என்ற எண்ணம் தலை தூக்காதில்லை ! ஆஸ்தான பாக்கெட் சைசில் ; ஐந்து ரூபாய்க்கு வந்திட்ட இந்த இதழோடு - எனக்குத் தெரிந்தே ஒரே விற்பனை யுக்தியாய் ஒரு தாய விளையாட்டையும் இலவசமாய் வழங்கியது நினைவுள்ளது. (அது என்னவென்று நினைவில்லை என்பது வேறு விஷயம்!!) சமீபமாய் சென்னை புத்தகத் திருவிழாவில் என்னை சந்தித்த நண்பரொருவர் "NBS -க்குக் கூட ஒரு தாய விளையாட்டை தந்திருக்கலாமே ?" என்று கேட்ட போது அவர் ஹேஷ்யமாய் கேள்வியினைப் போட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு. ஆனால் - அந்தத் தாய விளையாட்டுக்கள் ஒரு காலத்தில் எத்தனை சந்தோஷத்தைத் தந்தவை என்பதையும், இத்தனை காலம் கழிந்த பின்னும் கூட அந்த நாட்களின் உற்சாகத்தை மறக்க இயலவில்லை என்று ரொம்பவே உணர்வுபூர்வமாய் அவர் சொன்ன போது - நினைவுகளுக்கு வயதாவதில்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபணமானது.


மாங்கு மாங்கென்று திகில் இதழுக்காக நிறைய யோசித்து (!!) ஒரு இதழை  உருவாக்கிடுவது அவசியமான அதே வேளையினில் - 'சூ ..மந்திர காளி!' என்றதும் ஒரு லயன் ஸ்பெஷல் இதழைத் திட்டமிடுவது சாத்தியம் என்ற சுலப நிலை நிலவியது !! ஒரு ஸ்பைடர் + ஒரு ஆர்ச்சி + ஒரு டெக்ஸ் வில்லர் + கைக்குச் சிக்கிய சில கதைகளின் கூட்டணி = 1 லயன் ஸ்பெஷல் இதழ் என்பது தான் அன்றைய recipe ! அதே 1987-ல் ; அதே கோடையினில் இந்த லயன் மலரும் தயாராகிய போதிலும் (Lion KM- April ; Thihil K.M.-May) - எங்களிடம் அப்போதெல்லாம் பணியாற்றிய ஆர்டிஸ்ட் பட்டாளம், அதகளம் செய்திடும் ஆற்றலைக் கொண்டிருந்ததால் - துளி டென்ஷனும் இன்றி இரு இதழ்களையும் வடிவமைக்க இயன்றது. மாடஸ்டியின் ஒரு முழு நீள சாகசம் (கார்வினின் யாத்திரைகள்) ; லாரன்ஸ் டேவிட் ஜோடியின் ஒரு குட்டி சாகசம் ; அன்றைய ஆக்க்ஷன் மன்னர்களான "இரட்டை வேட்டையரின்" ஒரு சாகசம் பிளஸ் மாமூலான விச்சு, கிச்சு என்று இதுவும் ஒரு பாக்கெட் சைஸ் அதிரடியே ! திகில் கோ.ம.க்கு தாய ஆட்டம் இலவசம் என்பதால் இதற்கொரு டைம் டேபிள் ப்ரீ! பாக்கெட் சைசுக்கு டெக்ஸ் கதையினை மாற்றி அமைப்பதைத் தவிர்த்து இந்த இதழில் வேறெங்குமே சிரமம் நேர்ந்திடவில்லை ! ஸ்பைடர் சின்னதாய் ஒரு cameo கதையினில் மாத்திரமே தலையைக் காட்டி இருப்பினும், எங்களது சூப்பர் ஸ்டார் அவரே என்பதால், அட்டைப்படத்தில் முக்காலே மூன்று வீசம் அவருக்கும், பாக்கி இருந்த இடம் சட்டித் தலையன் ஆர்ச்சிக்குமென்று ஒதுக்கப்பட்டது. நம் ஓவியர் மாலையப்பன் இந்த இதழுக்கு வரைந்திட்ட அசத்தலான அட்டைபடம்  இன்றும் நம் கிட்டங்கியில் பளீரென்ற வண்ணங்களோடு கால் நூற்றாண்டுக்கு முந்தையதொரு சந்தோஷக் கோடையை நினைவூட்டும் சின்னமாய் கிடக்கின்றது !

காலங்கள் தான் எத்தனை மாறி விட்டன....நம் ரசனைகளில் தான் மாற்றங்கள் எத்தனை நேர்ந்து விட்டன என்ற சிந்தனைகள் எழும் போது - தேய்ந்து போன அந்த cliche தான் நினைவுக்கு வந்தது...'மாறாதது மாற்றம் மாத்திரமே !' கோடை கொணர்வது வெப்பத்தை மட்டுமல்ல...சில சுகமான சிந்தனைகளையும் கூடத் தான் என்ற புரிதலோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். பாக்கி 2 (மினி லயன்) கோடை மலர்கள் பற்றி இடைப்பட்டதொரு சந்தர்ப்பத்தில் எழுதிடுவேன் ! புது இதழ்கள் இரண்டும் (ஹாட் n ' கூல் ஸ்பெஷல் + டைகர் ஸ்பெஷல்) ஏப்ரல் 7க்கு உங்களைத் தேடித் புறப்படும் ! அதே போல நாளைய தினம் "KAUN BANEGA TRANSLATOR -சீசன் 2" க்கான பக்கங்கள் கூரியரில் அனுப்பிடப்படும். Get cracking guys ! Adios for now ! 

230 comments:

  1. ஆகா! நான் தான் முதலாவதா?

    ReplyDelete
    Replies
    1. கோடை என்றாலே கொண்டாட்டம்தான் ,விடுமுறைகளை விட அதிகமாய் கிடைக்கும் கதைகள்,இரும்பு ஏதேனும் கையில் இருந்தால் ,வெளியிட தயார் எனும் நிலையில் நீங்கள்,அப்படி எது வந்தாலும் எந்த காமிக்ஸில் வந்தாலும் வாங்க தயாராய் நான் ,இரும்புக்கை வில்சன் ,இரும்புக்கை நார்மன் மனதில் கிளப்பிய சந்தோசங்கள் பல பல ....ஆனால் வந்த இதழ்கள் குறைவெனும் பொது....ம்ஹூம் ....

      Delete
    2. பழைய நினைவுகளை அசை போடுவது இனிய அனுபவம் தான். ஆனால் அப்படிச் செய்யும் போது ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இன்னும் இருபது வருடம் கழித்து நமது ஆசிரியரிடம் எது பொற்காலம் என்று கேட்டால் 2012 இல் தொடங்கியதே பொற்காலம் என்று சொல்ல வாய்ப்பு அதிகம் உண்டு. எனவே அத்தகைய ஒரு பொற்காலத்தை அது நடக்கும் போதே நன்கு உணர்ந்து அனுபவித்து ஆனந்தம் அடைவோம்!

      Delete
    3. வாழ்த்துக்கள் பிருந்தாபன் ஜி! அப்படியே நமக்கு முக நூலில் ஒரு தகவலை தட்டி விட்டுடுங்க! பதிவை கவனிக்கற நிமிடங்களில் எண்பது கமெண்டுகள் ஓடியே போய் விட்டன! ஹி ஹி ஹி

      Delete
  2. அந்த கோடை மலர்களை அப்படியே அதே போல வெளியிட்டால் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் கோடையின் கொடைதான் இவை ,கோயில் கொடைகளும் வரும் காலங்களில், மலர்ந்த மனம் முழுக்க வாசம் செய்து ,வாசம் வீசிய நினைவுகள் அடேயப்பா ....அந்த லேபில்கள் பல காலங்கள் சேர்த்து வைத்திருந்தேன் !தாய விளையாட்டுதந்த சந்தோசம் ,விளையாட கிடைத்த நண்பர்கள் என அமர்க்களமாய் நினைவுகள்....

      Delete
    2. ஜான் ரேம்போவுக்கு வாய்ப்புகள் உண்டா ? அவரை எதிர்பார்த்ததும் அதிகமே !

      Delete
    3. லயன் கோடை மலர் அட்டை படமும் ,பின்னால் திகிலின் விளம்பரமும் என்ன அழகு ,அனைவருமே ஹை லைட் செய்ய பட்ட அந்த விளம்பர பாணி தூள் !

      Delete
    4. Yes sir.If possible please republish those special issues... like some book festival we can include and it will increase our circulation also...SOme of us missed old comics books much...

      Delete
    5. I second Steel Claw. It would be a treat to all of us if all those good old specials to be reprinted now as it is..

      Dear Editor, Will it be possible?

      Delete
  3. "கேப்டன் பிரின்சின் ஒரு துக்கடாக் கதை..."
    என எழுத உங்களுக்கு எப்படி சார் மனம் வந்தது.?

    திகில் கோடை மலர் 1987ன் டாப் (La flamme verte du conquistador) கதையல்லவா அது.
    என்றாலும் இது ஒரு மலரும் நினைவுகளின் super பதிவு.

    ReplyDelete
    Replies
    1. "ஸ்பைடர் சின்னதாய் ஒரு cameo கதையினில் மாத்திரமே தலையைக் காட்டி இருப்பினும், எங்களது சூப்பர் ஸ்டார் அவரே என்பதால், அட்டைப்படத்தில் முக்காலே மூன்று வீசம் அவருக்கும், பாக்கி இருந்த இடம் சட்டித் தலையன் ஆர்ச்சிக்குமென்று ஒதுக்கப்பட்டது..."

      "ஸ்பைடரா கொக்கான்னானாம்" - நன்றி "சைத்தான் விஞ்ஞானி" (லயன் வெளியீடு எண் 15)

      Delete
    2. ஸ்பைடரை பாராட்டும் எண்ணத்தில் ஆர்ச்சியை குறைத்து மதிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் ! இரண்டு ஸ்டார்கள் !ஸ்பைடர் சூரியன் எனில் ஆர்ச்சி நிலவு,இரண்டுமே நம் இதய வானில் ஒளி வீசிய/காட்டிய அற்புத படைப்புகள் என்றால் மிகை அல்லவே ?

      Delete
    3. உங்களின் மன்னிப்பை கோருகிறேன் நண்பரே ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்,
      உற்சாகத்தில் புரட்சி தலைவன் ஆர்ச்சியினை குறிப்பிட மறந்து போனேன். வெனிஸ் நகரம் என்று ஒன்று இருப்பதே எனக்கு "வெனிஸ் நகரில் ஆர்ச்சி" கதை மூலமாகவே தெரியும்.

      "யார் அந்த மினி ஸ்பைடர்?" "புரட்சி தலைவன் ஆர்ச்சி!" போன்ற நமது பால்ய வயதின் சூப்பர் ஹிட்கள் தானே லயன் காமிக்ஸினை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு சென்றது?
      இந்த புத்தகங்கள் 25000 பிரதிகள் (பெரிய பத்திரிக்கையின் ஆரம்ப அளவு) தாண்டி விற்பனை ஆகியிருக்கும் என்பது என் அனுமானம்?!

      Delete
    4. யார் அந்த மினி ஆர்ச்சி,குதிரை வீரன் ஆர்ச்சி ,உலகப்போரில் ஆர்ச்சி கூட சேர்த்து கொள்ளுங்கள் !

      Delete
  4. அடடா பழைய கோடைமலர் இதழை பற்றி நினைவுகூர்ந்து என்னை மலரும் நினைவுகளுக்கு கூட்டிச்சென்ற உங்களுக்கு என் நன்றிகள்... ஆமாம் எடிட்டர் அவர்களே எப்படி இப்படி தலாலென்று காலச்சக்கரத்திற்குள் நுழைந்தீர்கள்....ஆனாலும் ஒரு கணம் நான் பொறுமையாக ரசித்தே படித்தேன்.

    ReplyDelete
  5. கோ டை க் கு இத மா க ஒரு பதிவு .

    ReplyDelete
  6. மேட்டு பாளையம் மாமா வீட்டுக்கு விடுமுறைக்கு சென்ற சமயம் வந்த இதழ் லயன் கோடைமலர் 1987. மாமாவிடம் லெமன் ஜூஸ் குடிக்க பணம் வாங்கிவிட்டு நடந்தே 2 கிலோமீட்டர் வெயிலில் சென்று புத்தகம் வாங்கி படித்து விட்டு ஒரே நாளில் ஐந்து முறை படித்த காலம் . மீண்டும் அந்த காலம் வராதா ? ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

    ReplyDelete
  7. ஜேம்ஸ் பாண்ட் என்றாலே இப்போதும் ரோஜர் மூர்தான் எனக்கு !நீங்கள் ஏதேனும் ஒரு கதை பிடிக்குமா என திரட்டினீர்கள் ஆனால் அனைத்துமே ,சிங்கங்களே,....ஆர்ச்சியும் ,ஸ்பைடரும் அட்டையில் கம்பீரமாய் இந்த பதிவால் மீண்டும் அதே காலத்திற்குள் சென்று வந்த பிரம்மை எனக்குள் ,அதனால்தான் கால கோட்டையை அப்போது ஆர்ச்சி மூலம் அறிமுகபடுத்திய தாங்கள், பின்னொரு நாளில் அதாவது இப்போது மீண்டும் அங்கே அதே போல அழைத்து செல்வீர்கள் என சத்தியமாய் நினைக்கவில்லை அப்போது ,தூசி தட்டுங்கள் நினைவுகளை,அதே புத்தகங்களையும் மீண்டும் தந்தால் கால பயணத்தில் துணை வர என்னை போன்ற நண்பர்கள் பலருண்டு !

    ReplyDelete
    Replies
    1. "அதே புத்தகங்களையும் மீண்டும் தந்தால் கால பயணத்தில் துணை வர என்னை போன்ற நண்பர்கள் பலருண்டு !"

      நண்பரோடு நானும் சேர்ந்து பலமாக இக்கதைகளை எல்லாம் மறுப்பதிப்பாக வர வேண்டுகிறேன்

      Delete
  8. Super we will get teh book on 7th april..

    ReplyDelete
  9. Sir,Bangalore Comics con our comics is participating right?

    ReplyDelete
    Replies
    1. அதற்க்கு இந்த புத்தகங்களை விட சிறப்பாய் அதாவது வழ வழப்பான கண்ணாடி அட்டை ,அரை டஜன் ஹீரோக்கள் என ஏதும் அமையாது நிச்சயமாய் ,பால்ய கால நண்பர்களை கரம் பிடித்து அழைத்து வருவது உறுதி!

      Delete
  10. விஜயன் சார்,

    பழைய நினைவுகளை கிளறி விடுவதில் தான் எத்தனை சுகம் உங்களுக்கு, ஆனால் இதில் எந்த புத்தகமும் படிக்காத (கிடைக்காத) எங்களது வருத்தத்திற்கு உங்களது பதில் என்ன சார் ?

    எடிட்டர்: விடுங்க ப்ளூ, மறுபதிப்பு சீக்கிரமாவே போட்டிடுவோம் :)

    ஹி.. ஹி... ஹி

    // கிழவியின் காதலர் நண்பர் ஜான் சைமன்- இந்த இதழைப் படித்தாகியாச்சா ? //

    அவரு படிக்காம இருந்திருந்தா கிழவி இந்நேரம் அவரை பாடா படுத்தி இருப்பாங்க :)







    ReplyDelete
    Replies
    1. Vijayan sir,

      It's a great post! It brings back nostalgic memories!
      I still remember the day I bought Kodai Malar 86 in Udumalpet(Or Pollachi) Bus stand.
      (Hmm, no harm in asking), why can't you reprint those Kodai Malars' for us?

      Regards,
      Mahesh

      Delete
  11. விஜயன் சார், கீழே குறிப்பிட்ட கோடை மலர்களில் ஏதுவும் என்னிடம் இல்லை! இந்த புத்தகம்களின் அட்டை படம்களை பார்க்கும் போது மனதில் தோன்றும் சந்தோசத்தையும் தாண்டி இவைகளை நாம் படிக்க முடியவில்லை என்ற கவலைதான் அதிகம் உள்ளது :-( இவைகளை மீண்டும் கோடை மலராகவே வெளி இட வாய்ப்புகள் உண்டா?

    யாரிடமாவது இந்த புத்தகங்கள் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்!

    1.லயன் கோடை மலர் - 1986
    2.திகில் கோடை மலர் 1987
    3.லயன் கோடை மலர் - 1987
    4.மினி லயன் - சம்மர் ஸ்பெஷல் 1988
    5.மினி லயன் - ஹாலிடே ஸ்பெஷல் 1989

    ReplyDelete
  12. கருப்பு வெள்ளை கதைகள் கடந்த வருடத்தில் கலர் புத்தகத்துடன் வந்தது. எங்களை போன்ற பழைய புத்தகத்தை வாங்காதவர்கள் படிக்க வசதியாக இருந்தது..ஆனால் இப்பொழுது அவைகள் வருவதில்லை வருத்தமாக இருக்கிறது.திரும்பவும் வருமா கலரோடு சேர்ந்து...

    ReplyDelete
    Replies
    1. விடுங்கள் +6 ஐ +12 ஆக மாற்றி விட்டால் போயிற்று !ஆனால் ஆசிரியர் நமது பர்சுக்கு பொத்தல் போடுவதாய் நினைக்கிறார் !அப்போது வந்த இதழ்கள் லயன்,முத்து,திகில்,மினிலயன்,ஜூனியர்,பொன்னி,அசோக்,மேத்தா,மாயாஜால கதைகள், அம்புலிமாமா ,ரத்னபாலா ,பூந்தளிர்,பாலமித்திரா ,கோகுலம் ,பைக்கோ கிளாசிக்ஸ் ,பூந்தளிர் அமர் சித்திர கதைகள்...இன்னும் பல இவை அனைத்தும் வாங்க பணம் போதவில்லை எனும் போதே வாங்கி படித்தவர்கள் ஏராளம் ,அப்போது ஆசிரியரும் ஐந்து இதழ்களை வெளியிட்டார் !இப்போது நமது கதைகள் மட்டுமே காமிக்ஸில் வரும் போது தயங்காமல் வெளியிடலாம் மாதம் மூன்று !காமிக்ஸ் கிளாசிக்ஸ் ஒன்று ,வண்ணத்தில் நூறு விலையில் ஒன்று ,கருப்பு வெள்ளையில் நூறு விலையில் இன்னொன்று ,பத்து நாளுக்கு ஒருபுத்தகம் எனும் நிலையில் !இவ்வாறு வெளியிட பணியாளர்கள் போதுமான அளவில் இருந்தால் தயங்காமல் வெளியிடலாமே !அன்றைய விலையில் இன்றைய விலையை நினைத்தும் குழப்பி கொள்ள வேண்டாமே !அன்று ஐம்பது காசுக்கு விற்ற டீ இன்று ஏழு ரூபாய் அல்லவா !

      Delete
  13. காலம் பொன் போன்றது! ஆனால் 1986, 1987 & 1988 ஆகிய முக்காலமும் பிளாட்டினம் போன்றது!

    ReplyDelete
    Replies
    1. உண்மை ,அணிவகுத்த அற்புதமான கதைகள் ,இப்படியும் நடக்குமா என கிளறி விட்ட ஆச்சரியங்கள் ! புதிதாய் இருந்த இதயத்தை நிரப்பிய , அதிசயத்த அற்புதங்கள் அல்லவோ அந்த நாட்கள் !வழக்கமான நாட்களை சுவாரஸ்ய படுத்திய வளமான கதைகளின் வளமான காலம் !

      Delete
    2. Yes! It's True. How wonderful the days were...!

      Delete
  14. எடிட்டர் சார்,

    சுகமான மலரும் நினைவுகள் பதிவு. என்னுடைய ஆல் டைம் favorite 1986ல் வெளி வந்த முதன் முதல் லயன் கோடை மலர் தான். முதல் 10 பக்கங்கள் ஈகிள் மேன் வண்ணத்திலும் மற்ற பக்கங்கள் கருப்பு வெள்ளையிலும் அணைத்து கதைகளும் டாப் கிளாஸ்.

    அந்த காலக் கட்டங்களில் (end of 80s / Early 90s ) புக் மார்க்கெட் பகுதியில் பல கோடை மலர் புத்தகங்களை விற்றது நினைவுக்கு வருகிறது.
    அதன் மூலம் அப்போது பல நண்பர்கள் கிடைத்தார்கள். ராஜ் மோகன், சேலம் மா கா சிவஞானம் , சோளிங்கர் சங்கர் மற்றும் பலர். இப்போது இவர்களெல்லாம் எப்படி இருக்கிறார்களோ? ... சுகமான நினைவுகளை கிளறிய ஆசிரியர் அவர்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. I too remember the eagle man story in colour. But i dont have that book with me now, hmmmmmmm if editor can reprint these stories.......

      Delete
  15. கோடை விடுமுறைக்கு திருத்தங்கலுக்குச் சென்று என் மாமா வீட்டுக்கு அருகில் செல்வம் என்பவரது வாடகை புத்தகக் கடையில் குண்டு குண்டு பாக்கெட் சைஸ் கோடை மலர்களை ஐம்பது காசு வாடகைக்கு வாங்கிவந்து எனது பாட்டிவீட்டுத் திண்ணையில் மணிக்கணக்காகப் படித்து வந்த வசந்த காலத்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றி சார்… அந்தக் காலகட்டத்தில் எனக்கு பள்ளியில் 'வாங்கித் திங்க' என்று தினசரி பத்து காசு கொடுப்பது வழக்கம்..அதனை சேர்த்து வைத்து காமிக்ஸ்களும் பிற மந்திரக் கதைகளும் வாண்டுமாமா கதைகளும் விலைக்கு வாங்க இயலாதாகையால் வாடகைக்கு எடுத்துப் படித்துத் திருப்திப்பட்ட நாட்கள் இப்போது திரும்பாதா என ஏங்க வைக்கின்றன.. அப்போது பணம் குறைவு ; படிக்க காமிக்ஸ்கள் அதிகம்; இப்போது பணம் அதிகம் ; படிக்க காமிக்ஸ்கள் மிகக் குறைவு; அதனாலேயே பழைய புத்தகக் கடைகளிலும் பால்ய நண்பர்களிடமும் என் காமிக்ஸ் தேடல்கள் இன்றும் தொடர்கின்றன…

    ReplyDelete
  16. //நம் ஓவியர் மாலையப்பன் இந்த இதழுக்கு வரைந்திட்ட அசத்தலான அட்டைபடம் இன்றும் நம் கிட்டங்கியில் பளீரென்ற வண்ணங்களோடு கால் நூற்றாண்டுக்கு முந்தையதொரு சந்தோஷக் கோடையை நினைவூட்டும் சின்னமாய் கிடக்கின்றது !//

    அந்த ஓவியத்தையும் அப்படியே இங்கே இணைத்தால் சந்தோஷ பாடுவோமே !

    ReplyDelete
  17. அறிவிப்புக்கு நன்றி ப்ளூ!

    ReplyDelete
  18. என்னதான் 'ஸ்பெஷல்' என்ற பெயர்தாங்கி மாதாமாதம் இப்போது வந்தாலும், அந்நாட்களில் வந்திட்ட 'கோடைமலர்', 'தீபாவளி மலர்' கொடுத்த சந்தோஷத்திற்கு இணையாகாது!

    80களின் இறுதியில் என்று நினைக்கிறேன்; 'இதுவரை வந்ததில்லை- இனி வரப்போவதுமில்லை' என்ற விளம்பர அறிவிப்புடன் முதன்முதலில் ரூ.25 விலையில் வந்த 'தீபாவளி மலர்' எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது!
    தீபாவளிக்கு முந்தைய நாளே ஒரு குட்டி ராட்சசனாய் அதைக் கடைகளில் பார்த்திட்டபோது எனக்குள் பொங்கிய உற்சாகப் பிரவாகத்தை வார்த்தைகளில் விளக்கிட இயலாது!
    புத்தகக்கடை முன்பு ஆதிவாசி மாதிரி கூக்குரலிட்டபடி குதித்துக்கொண்டிருந்தபோது, என் பின்னந்தலையில் 'ணங்' என்று மோதி விழுந்தது ஒரு கேள்விக்குறி! - '25 ரூபாய்க்கு எங்கே போவது?'
    உற்சாகத்தோடு ஓலமிட்டபடியே அந்தக் கேள்விக்குறியையும் முதுகில் சுமந்து ஒன்னறைக் கி.மீ தள்ளியிருந்த வீட்டிற்கு ஓடோடிச் சென்று, ஏதோ யுத்தம் வந்துவிட்ட தொணியில் வீட்டிலிருப்பவர்களிடம் அந்த தீபாவளி மலர்பற்றி அவசர அறிவிப்புச் செய்து, உடனே எனக்கு 25 ரூபாய் வேண்டுமெனக் கத்தினேன். அப்போதைய காலகட்டங்களில் 25ரூபாய் என்பது என் குடும்பத்தாருக்கு சற்றே பெரிய தொகை என்பதால் 'அவ்வளவு விலையில் கதைப் புத்தகமெல்லாம் வாங்கித்தர முடியாது' என கோரஸாக எல்லோரும் சொல்லிவிடவே, என் அம்மாவிடம் அழுதுபுரண்டு 'அம்மா எனக்கு தீபாவளிக்கு பட்டாசு வேண்டாம், புது ட்ரெஸ் வேண்டாம்; தீபாவளி மலர் மட்டும் வாங்கிக் கொடுங்க போதும்' எனக் கெஞ்சி, சாப்பிடாமல் ஒரு நாள் முழுக்க தர்ணா இருந்து, ஒருவழியாக என் தர்ணா வெற்றிபெற்று என் அம்மா காசுகொடுத்து என் அண்ணனை கடையில் வாங்கிவரச் செய்து, அந்தக் குட்டி ராச்சதனைக் தீபாவளி மலராக் கைகளில் ஏந்திய அந்தத் தருணங்கள்...

    பின் குறிப்பு: அன்று 25 ரூபாய் கொடுத்து உதவிய என் அம்மாவுக்கு நன்றிக் கடனாக இன்று நான் தினமும் ரூ.250 கொடுக்கிறேன்.
    நீதி: பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகள் விரும்பும் காமிக்ஸை தாராளமாக வாங்கிக் கொடுங்கள். இன்றைய முதலீடு - நாளைய சேமிப்பு!

    ஒரு சோகக் குறிப்பு: 'கொடுத்தவனே எடுத்துக் கொண்டான்டி' என்ற கதையாக, என் அண்ணனாலேயே அந்தப் பொக்கிசம் தன் நண்பர்களுக்குக் கொடுக்கப்பட்டு தொலைக்கப்பட்டது.
    நீதி: அண்ணனை நம்பி காமிக்ஸைக் கொடுக்காதீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்களை கடைகாரர் ஏமாற்றி விட்டார் !அது பத்து ரூபாய் மட்டுமே !ஆனால் மிக பெரிய தொகை அப்போது !

      Delete
    2. எந்தக் கடைக்காரரும் ஏமாற்றவில்லை ஸ்டீல் க்ளா! அதிலிருந்த பல கதைகளுள் லக்கி-லூக்கின் 'Billy the kid' வண்ணத்தில் ஒரு கதையாக வந்தது. விலை 25 ரூபாய்தான்!

      Delete
    3. No Erode Vijay - it was 10 rupees :-) Yaaro ungalukku appovE 'dimikki' kuduththuvittaargal :-)

      Delete
    4. விஜய், ஸ்டீல் க்ளா சொல்றது சரிதான். நீங்க ஏமாந்து இருக்கலாம். அல்லது உங்களுக்கு ஞாபகமறதியா இருக்கலாம். அது பத்து ரூபாய் இதழ்தான். 80 ம் ஆண்டும் கிடையாது. 86 ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.

      Delete
    5. ஏமாந்தது விஜய் அல்ல! இன்றைக்கு ஏப்ரல் 1.

      Delete
    6. 1987 - Deepavali - Lion Super Special .. current price is around INR 2000/- :-) Aanaal Erode Vijay appovE 25 roobai koduththu ... hmmm .. indraya athiga vilai comics aarvalargalukku Erode Vijay thaan munnOdi :-) :-) :-)

      Delete
    7. //ஏமாந்தது விஜய் அல்ல! இன்றைக்கு ஏப்ரல் 1.// அடப்பாவிகளா. அப்பவே கொஞ்சம் டவுட் இருந்துச்சு. :(

      Delete
    8. படிக்கும் போதே சந்தேகம், என்னடா விஜய் இப்படி செண்டிமெண்டா ஏழுதுராரே என்ற.
      Good one.

      Delete
    9. அடடே! இன்னிக்கு ஏப்ரல்-1 இல்ல? மறந்தே போச்!

      Delete
    10. //புத்தகக்கடை முன்பு ஆதிவாசி மாதிரி கூக்குரலிட்டபடி குதித்துக்கொண்டிருந்தபோது//...

      i am just imagining that You are like joe dalton (Aathivaasi ) who will jump with anger ( for 25 rupees)after seeing lucky luke ( Kodai malar ) saying i want kodaimalar lion comics...

      Delete
    11. @ Dave Lawrence

      நல்ல கற்பனை! :) ஆனால், டால்டன்களில் நான் ஆவ்ரெல் ரகத்தைச் சார்ந்தவன். ;)

      Delete
  19. //தொடர்ந்திட்ட மாதங்களில் BATMAN முழு நீள சாகசங்கள் பலவற்றில் தூள் கிளப்பிய போது - கோடை மலரிலே அவருக்கு இன்னமும் கொஞ்சம் பெரிய பங்களிப்பைத் தந்திருக்கலாமோ என்ற எண்ணம் தலை தூக்காதில்லை !//
    Batman - அடுத்த வருடம் எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. Dear Editor,

      Siriththu Kolla Vendum should be definitely brought out as a classic reprint - even if priced slightly higher. Even the english version 'The Killing Joke' has come out as a classic high priced edition. SKV is one of the best Tamil Comics to have ever been published.

      Delete
  20. palaya kodai ninavugalai kilapiyathai 16 vayathinele style solanumna "PATHAVACHUTIYE PARATTA"!

    ReplyDelete
  21. மறக்கமுடியாத இனிமையான நாட்கள். அசைபோட்டமைக்கும், எங்களை அசைபோட வைத்தமைக்கும் மிக்க நன்றி திரு.விஜயன். இந்த இதழ்கள் மீள்பதிப்பு செய்யப்பட்டால் விற்பனை அபாரமாக இருக்கும். செயற்படுத்த முயற்சியுங்கள்.

    ReplyDelete
  22. அருமையான நினைவை கிளரும் பதிவு சார்.
    இந்த கோடைமலர்களை எல்லாம் மட்டும் அதே போல மறுபதிப்பு செய்தால் மிக நன்றாக இருக்கும்.
    வாய்ப்பு இருகிறதா என்று கூறுங்கள் சார்.

    ReplyDelete
  23. என்னுடைய சிறு வயதில் கருப்பு கிழவி யின் பயங்கர கதைகளிகளை விரும்பி ரசித்து படித்தது உண்டு. செக்ஸ்டன் blake ஒரு செமி action ஹீரோ உதாரணம் வழிப்பறி பிசாசு , அவரது உதவியாளர் டிங்கர் .

    ReplyDelete
  24. தேங்க்ஸ் வாத்யாரே! எப்பேர்பட்ட காலம் அது. சும்மா குந்திக்கினே அல்லா புக்கையும் பச்சிக்கினே இருப்பேன் அதுவும் எத்தினி தபான்னு தெரியாம., இன்னொரு தபா அந்த புக்ஸ் எல்லாம் கடிக்குமா?

    ReplyDelete
    Replies
    1. இன்னா நைனா.உனுக்கு இல்லாத பொஸ்தகமா?நம்ம வாத்யாருகிட்ட மேட்டர சொல்லிட்டல்ல. ஜோலி முடிஞ்சுது.சும்மா தீயா வேல செஞ்சி ரிப்பீட்டு புக்கு பிரிண்ட்டு பண்ணி நம்ம அல்லாரு கைலயும் கொடுக்காம ,வாத்யாரு நாஸ்டா துங்கமாட்டாரு,இது கொலைகாரன்பேட்டை வீச்சருவா சாமி மேல சத்தியம்.இன்னான்றே.

      Delete
    2. சூப்பர், சாத்தான்ஜி! :D

      Delete
  25. அப்போது அமராவ‌தி நகர் சைனிக் பள்ளியில் படித்து வந்தேன்........கோடை விடுமுறை இரண்டு மாதம்......உடுமைப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் பஸ் நுழைந்த‌வுடன் இறங்கி ஓடிச்சென்று புத்தக்ககடையில் உள்ள பழைய , புதிய லயன் ,முத்து , திகில் , மினி மற்றும் ஜூனியர் லயன் புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிக்குவித்துவிடுவேன் [ பாதுகாப்பு அமைச்சக பள்ளி என்பதால் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ......வெளியில் செல்லவே முடியாது....இதில் காமிக்ஸ் எங்கே வாங்குவது ?] .....விளையாடும் நேரம் போக மீதி நேரமெல்லாம் காமிக்ஸ் டைம்தான்..........

    சளைக்காமல் நான் கேட்ட புத்தகம் எல்லாம் வாங்கித்தந்து என்னை ஊக்குவித்த [ சமீபத்தில் மறைந்த ] என் தந்தையை நினைக்கையில் கண்கள் கலங்குகின்றன..........

    பல சுகமான , கனமான நினைவுகளை கிளப்பிவிட்டீர்கள் சார்........[ அது ஒரு கனாக்காலம்........ ]......

    ReplyDelete
    Replies
    1. உங்களது நினைவுகள் எனது நினைவுகளையும் தட்டிவிட்டு விட்டது.
      ஒவ்வொருவாரமும் பழனி சென்று வரும்பொழுதும் உடுமலை பஸ் நிலையத்தில் இருக்கும்
      புத்தக நிலையத்தில் லயன் முத்து ராணி பாலமித்ரா அம்புலிமாமா என அணைத்து புத்தகங்களும் வாங்கி செல்வேன்.
      ஹ்ம்ம் அதுஒரு பொற்காலம்.

      Delete
    2. Yeah, Udumalpet Vasanth book stall had those books. Good old days!

      Delete
    3. உடுமலையின் பேருந்து நிறுத்தத்தின் உள்ளிருக்கும் புத்தக கடையில் நானும் சில இதழ்கள் வாங்கியுள்ளேன் . சமீபத்தில் பொள்ளாச்சி ரோட்டில் இருக்கும் ஒரு கூல்ட்ரின்க் கடையில் சாத்தானின் தூதுவன் வாங்கினேன் .

      Delete
    4. Meeran,

      please provide some more details about that cool drink shops at pollachi road, I will give a look when I visit there next time. I thought nobody sells Lion/Muthu comics in Udt nowadays.

      From 1989 onward those books were seldom available in Udumalpet bus stand shop :(.
      But books were available at a shop near Kalpana theater, after they have closed that shop in 2003/4, little hope to get new Lion/Muthu comics in Udumalpet :(.

      Regards,
      Mahesh kumar S

      Delete
    5. Mahesh kumar S

      தாராபுரம் ரோடு பிரிவு நேர் எதிர் கடை . நான் வாங்கியது போன வருடம் ஜூலை மாதம் .

      Delete
    6. Meeran,
      Thanks for the info.
      Regards,
      Mahesh

      Delete
  26. இந்த புத்தகங்களை எல்லாம் படிக்க இயலா அபாக்யசாலி நான்.. So no Nostalgia.. :`(

    ஆரவாரமாக புது அறிவிப்புகள் புது களங்கள் பற்றி பதிவுகளுகிடையே "சிங்கத்தின் சிறுவயதில்" டைப்பில் இந்த பதிவு சற்று "சப்" என்று உள்ளது...

    if offended "மன்னிச்சுசு"...

    ReplyDelete
  27. friends please help me coimbatore la intha books enga kedaikkum

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உக்கடம் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டு 1988 க்கு ஒரு டிக்கெட் எடுங்கள் !நடத்துனர் இன்று போய் கேட்டால் ஏமாற்றி விடுவார் ஏப்ரல் முதல் நாள் என்பதால் !நாளை சென்று கேளுங்கள் ,டிக்கெட் கொடுத்தால் எனக்கும் ஒன்று வாங்கி வாருங்கள் !
      இனி வரும் புத்தகங்கள் வேண்டுமென்றால் சந்தா கட்டுங்கள் !

      Delete
    2. துணைக்கு நண்பர்கள் கார்த்திக்கையோ அல்லது விஜயையோ அழைத்து செல்லல் உத்தமம் !யாரும் அசைக்க முடியாது !~

      Delete
    3. //நண்பரே உக்கடம் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டு 1988 க்கு ஒரு டிக்கெட் எடுங்கள் !நடத்துனர் இன்று போய் கேட்டால் ஏமாற்றி விடுவார் ஏப்ரல் முதல் நாள் என்பதால்//

      கலக்கற நண்பா ..: ) : ) GOOD ONE!

      @ ரமேஷ் ...இந்த புத்தங்கள் தற்போது ஆசிரியர் மறுபதிப்பிட்டலே பார்க்காதவர்களுக்கு பார்க்கும் வாய்ப்பு கிட்டும். தற்போது, இனி வரும் புத்தகங்களையும் சமீப காலத்தில் வெளியிடப்பட்ட IN-STOCK புத்தகங்களையும் வாங்க வேண்டும் என்றால் 0456-2272649 என்ற லயன் காமிக்ஸ் அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

      Delete
  28. ;:....I still remember 1986 kodaimalar....hmmm.....thanks for being part of my life vijayan sir...

    ReplyDelete
  29. WELCOME BACK SIR...
    பெரும்பாலும், பயணங்களின் போதே நமது பழைய நினைவுகளை அணைத்து அசைபோடும் வாய்ப்புகள் நமக்கு கிட்டுகின்றன.ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கண்களிலே வினாடிக்கு வினாடி மாறி எழும் காட்சிகளை PROCESS செய்யாமல் நினைவுகளின் ஆழத்தில் அமிழ்ந்திருக்கும் அறிய நினைவுகளின் பிடியில் நம்மை இழக்கும் அந்த தருணங்கள் வரண்ட கோடையின் முதல் மழையில் நனையும் சிலிர்ப்பை நமக்கு கொடுக்கும். அந்த வகையில் இந்த பதிவை பார்க்கும் போது நீங்கள் இந்த பயணத்தை ரசித்து கழித்துள்ளீர்கள் எனபது தெரிகிறது.மிக்க மகழ்ச்சி : )

    உங்கள் பயணத்தை பற்றி ஒரு பயணக்கட்டுரை வடிவில் புகைப்படத்துடன் உங்கள் நடையில் பதிவிட்டால் ஜெர்மனி செல்ல முடியாத எங்களை போன்றவர்களுக்கு
    உங்கள் மூலம் ஜெர்மனியை போன்ற அயல் நாடுகளை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டுமல்லவா??
    : ) பிட்ட போட்டாச்சு : )

    கோடை-மலர் எனபது இப்பொழுததும் எங்களுக்கு ஒரு மந்திர வார்த்தை. என்னதான் மாதமாதம் ஸ்பெஷல் என்ற பெயரில் வண்ணமயமாக புத்தகங்கள் வந்தாலும் ஒரு "கோடை-மலர்" என்ற மந்திர வார்த்தைக்கு எந்த ஸ்பெஷலும் ஈடாகாது. வியாபார நோக்கில் "கோடை-மலர்" ரை விட "ஸ்பெஷல்" லே தற்போதைய TREND க்கு ஏற்புடையது என்பதால் ஆசிரியரின் கவனம் ஸ்பெஷல் ளின் மேலே நாட்டமாக உள்ளது. நாம் காத்திருப்போம்...இன்னமும் ஒரு கோடை மலர் என்ற பெயரை தாங்கி வரும் பொக்கிசத்தை எதிர்பார்த்து...

    // தமிழ் காமிக்ஸ் உலகினில் இரும்புக்கை மாயாவி முடிசூடா மன்னராய் கோலோச்சி வந்த அந்நாட்களில் ; முத்து காமிக்ஸின் பொறுப்பும் என் கைக்கு முழுமையாய் வந்திருக்காத அச்சமயத்தில் - கையில் இரும்பு மாதிரி எதையேனும் வைத்திருக்கும் எந்தக் குடாக்குக் கேரக்டர் சிக்கி இருந்தாலும் //

    //கையில் இரும்பு மாதிரி எதையேனும் வைத்திருக்கும்//

    ஹா ஹா ஹா...விழுந்து விழுந்து சிரிக்க வைத்த அருமையான நகைசுவை நடை. GR8. இந்த பதிவின் CAPTIVATING வாக்கியம்!!! : ) : ) : )

    //புது இதழ்கள் இரண்டும் (ஹாட் n ' கூல் ஸ்பெஷல் + டைகர் ஸ்பெஷல்) ஏப்ரல் 7க்கு உங்களைத் தேடித் புறப்படும் ! //

    ஏப்ரல் 7 SUNDAY சார். அப்போ SUNDAY எங்கள் கைகளில் புத்தகம் இருக்குமா??? ஆவலாய் எதிர்பார்கிறேன்.

    //அதே போல நாளைய தினம் "KAUN BANEGA TRANSLATOR -சீசன் 2" க்கான பக்கங்கள் கூரியரில் அனுப்பிடப்படும். Get cracking guys ! //

    நன்றி! .LETZ BANG ON IT GUYS! இந்த தடவை களத்தில் எத்தனை போட்டியாளர்கள் சார்???

    ReplyDelete
    Replies
    1. கோடை மலர் என்பது மந்திர வார்த்தை மட்டுமன்று ,அன்றைய உற்ச்சாக ஊற்றும் கூட ,அதுவும் கோடைக்கு !

      Delete
    2. ஜெர்மனி போட்டோ.. அருமையான ஐடியா... எடிட்டர் ஆவன செய்யவேண்டும்.

      Delete
  30. //அதே போல நாளைய தினம் "KAUN BANEGA TRANSLATOR -சீசன் 2" க்கான பக்கங்கள் கூரியரில் அனுப்பிடப்படும்.//
    மெட்ராஸ் பாஷைல translate பண்ணிக்கலாமா? ஷோக்கா இருக்கும் ல ?

    ReplyDelete
    Replies
    1. லண்டன் கதைக்கு மெட்ராஸ் பாஷையா ......?அட தேவ கௌடா!.......ஹிஹி..ஸாரி...தேவுடா!

      Delete
  31. கடந்து போன காலங்களை திரும்பி பார்ப்பது ஒரு சுகமான அனுபவங்கள் தான் .... இந்த கோடை மலர் புத்தகங்களை வாங்குவதற்கு நாம் பட்ட கஷ்டங்கள் இன்று நமக்கு இல்லை என்றாலும், இன்றும் அதே thrill - உடன் தான் நம்முடைய காத்திருப்புகள் கரைகிறது.... மீண்டும் இந்த கதைகளை மறுபதிப்பு செய்ய வேண்டும்... என் மகனுக்கு இந்த கதைகளை நான் படிக்க தர வேண்டும்........

    ReplyDelete
    Replies
    1. //இன்றும் அதே thrill - உடன் தான் நம்முடைய காத்திருப்புகள் கரைகிறது.... //
      உண்மை !
      உண்மை !!
      உண்மை !!!

      Delete
    2. ---------

      வெளியே கொளுத்தும் வெயில் சாயங்காலம் 4 மணிக்கு மேல் தான் விளையாட அனுமதி கிடைக்கும்.
      டேபிள் ஃபேன் வைத்துக்கொண்டு, அப்பா ஆபீஸ் போனதால், அவருடைய ஈசிச் சேரில் சாய்ந்து, கோடை மலரை படித்தது இன்னும் நினைவிலிருக்கிறது. கூடவே.. தக்காளி அல்லது எலுமிச்சை ஜீஸ் - அது ஒரு சொர்க்கம்...ம்ம்ம்ம்ம்ம்ம்

      ----------

      Delete
  32. எத்தனை மறுபதிப்பு போட்டாலும் ஒரிஜினல் மாதிரி வருமா
    அல்லது அப்போதைய மனநில தான் வருமா
    ஹீம் ....... அது ஒரு கனாக்காலம்

    ReplyDelete
  33. இதப் படிங்க முதல்ல...

    * எடிட்டர் போனது ஜெர்மனிக்கு இல்லையாம்! ஜப்பானாம்!!

    * எடிட்டர் ஊர் திரும்பிட்டதாகச் சொன்னதிலும் உண்மை இல்லையாம்! அவர் இன்னும் ஜப்பானில்தான் இருக்கிறாராம்!!

    * இந்தப் பதிவைப் போட்டதுகூட நம்ம இராதாகிருஷ்ணன் அண்ணாச்சிதானாம்!

    நம்பினால் நம்புங்கள்...

    ReplyDelete
  34. In those old golden days my old best friend John gnana ilavazhan introduce me lion, thigil muthu comics. at those days i read these comics while he lent me and by lending libraries by paying 50paise to read in lending libraryitself because in those days only 2rs. only pocket money per month for buying gokulam or any other books.Now I dont know where my friend is. But i am happy now that lion, muthu comics will be with me forever as lifelong friend.

    ReplyDelete
  35. வணக்கம் சார்! கருப்பாத்தாவுக்கு கொஞ்சம் இடம் ஒதுக்கி ஒரு பேய் கதைகள் ஸ்பெஷல் வெளியிடுங்களேன்! ஆயா சார்பில் அப்பப்போ கேட்டுகிட்டே இருக்கேன். விரைவா அறிவிப்பு போடாங்காட்டி அப்புறம் உங்கள் கனவிலும் கதை சொல்ல வருவாள் எங்க ஆயா! நல்லா தூங்கியே சில பல மாதங்களாகியிருக்கும் நீங்க! இதுல எங்க ஆயா வேற உங்களை தொல்லை பண்ணனுமா? ஆவிகளின் சாம்ராஜ்யம் வெறிச்சோடிக் கிடக்குது! நாம பாட்டுக்கு புதுப் பாதையில பீடு நடை போட்டுக்கிட்டு இருக்கோம்! ரத்தம் கலர்ல கொடூரமா இருக்குன்னு யாராவது கொடி பிடிச்சி ஆர்ப்பாட்டம் செய்யலாம்னு மண்டையில மணிகள் குலுங்காமல் இல்லை சார்! ஆனாங்காட்டியும் கருப்பு வெள்ளை கவனம் பெறும் நிலை வந்தால் நம்ம ஆயாவை மறந்து விடாதீர்கள்! ஹீ ஹீ ஹீ என்ன்னமா சிரிப்பா எங்க ஆயா! கண்டுக்குங்க வாசக கண்ணுங்களா! ஹீ ஹீ ஹீ அப்புறம் நான் பேய் வீரர் பிளேக் புத்தகம் படிக்கலை சார்! திகில் பயங்கர பூனைகள் முதல் அடுத்தடுத்த கதைகளில் தேர்ந்து சிலது மறுபதிப்பு அடுத்த வருடங்களில் முயற்சிக்கலாமே சார்! (விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!) -உங்க பதிவை கண்டு அக மகிழ்ந்தோம்! அது ஒரு தனி போதை சார்! வாரம் ஒரு முறையாவது நாலு வரியை போட்டுடுங்க சார் மீதியை ரசிகக் கண்மணிகள் பார்த்துக்குவோம்! ஹி ஹி ஹி சும்மா விட மாட்டிங்களே என்கிற மனக்குரல் மெட்ராஸ் வரை கேக்குதுங்க சார்! ஆவலுடன் டைகர் கதைக்கு காத்திருக்கிறேன் சார் என் பழைய கடிதங்களில் மீதி கதை எப்போ வரும்னு வெறுப்பேத்தி இருப்பேன்! ஹி ஹி ஹி மிக்க நன்றி சார்! அப்படியே திகில் நகரில் டெக்ஸ் தனது பூத வேட்டையை ஆரம்பிக்க உதவுங்க சார்! வாழ்த்துக்கள்! ஹாட் அண்ட் கூல் மகத்தான வெற்றி பெறும் சார்! என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஸ்பைடர் மேன் ஹி ஹி ஹி சைமன்!

    ReplyDelete
    Replies
    1. --------

      கறுப்புக் கிழவிக்கு என் வோட்டு.. இப்பொழுது படித்தாலும் ரசிக்கக் கூடிய வகையில் இருப்பது ஆச்சரியமே... புதிய கதைகள் இருந்தாலும், வெளியிடுங்கள்.

      ---------

      Delete
    2. தானாக்கர தொற நீயும் இந்த பிஸ்தா மேரி SPIDER வெறியன் தானா?

      Delete
  36. those were the days. during 1985 and 1986 and 1987, we become almost mad and fanatical fans on lion muthu comics. The sight of new bulky pocket sized kodai malars during april/may was an experience and thrill which there are no words to describe. We liked Archie and Lawrence and david.
    Those who missed these times, really missed something great in their life.
    this post by vijayan sir, on one hand made me very happy and re-kindled the memories. But on the other hand made be sad when i realise that this experience will never return as we cannot return to childhood and the modern day crazy distractions?
    Will some body provide me a time machine to go back to the 80s ?

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியரால் இயலும் அப்படியே அதே போல வெளியிட்டால் !

      Delete
    2. //But on the other hand made be sad when i realise that this experience will never return as we cannot return to childhood and the modern day crazy distractions?//
      அன்று இவை அனைத்துமே புதிது ,தெரிந்து கொள்ளும் ஆர்வம் என இருந்தாலும் மீண்டும் எடுத்து படிக்கும் போது அதே உணர்வுகள் என்னை தாக்க தவறுவதில்லை ,அவர்களின் ஆளுமைக்குள் கரைந்து போங்கள் ,அமைதியான நிலையில் ரசிக்க என அமருங்கள் அதே கால கட்டம் கண்முன்னர் ...
      ஸ்பைடரின் விண்வெளிப் பிசாசு தொடராய் வர காரணம் ஏகப்பட்ட பூச்சுற்றல் என ஆசிரியர் கூறுகிறார் ,ஆனால் நேர்த்தியான ஸ்பைடர் கதைகளுள் முதன்மையானது அது !இப்போது வெற்றி பெற்ற பல ஆங்கில திரைப்படங்கள் உண்மையை சொல்லுமே !ரசனையின் முன்னே எதுவும் சாதாரணமே .....

      Delete
    3. எனக்கும்கூட டைம் மெஷினில் ஏறி 80களுக்குப் போய்விடும் ஆசை நிறையவே உண்டு. அது சாத்தியமல்ல என்பதோடு, அப்படியே சாத்தியமானாலும் மறுபடியும் ஸ்க்கூலில் சேர்த்திடுவாங்களே என்ற பயமெனக்கு! மறுபடியும் அந்த பாழாய்ப்போன கணக்குப்பாடத்தையெல்லாம் படித்திட என்னால் ஆகாது சாமி!!

      Delete
    4. // எனக்கும்கூட டைம் மெஷினில் ஏறி 80களுக்குப் போய்விடும் ஆசை நிறையவே உண்டு. அது சாத்தியமல்ல என்பதோடு, அப்படியே சாத்தியமானாலும் மறுபடியும் ஸ்க்கூலில் சேர்த்திடுவாங்களே என்ற பயமெனக்கு! மறுபடியும் அந்த பாழாய்ப்போன கணக்குப்பாடத்தையெல்லாம் படித்திட என்னால் ஆகாது சாமி!!///

      En kulamada nee...( alakudathu )...enge siri parrppom....


      Delete
    5. sorringa just for comedy i wrote like this..sir...i dont know your age...please dont take me wrong... really your command made me laugh more and more...keep it up...

      Delete
  37. நமது நண்பர் கோவை மாயாவி யாருக்கும் தெரியாமல் ஈரொடு விஜய்-க்கு மட்டும் ஒரு ’கால டிக்கெட்’ அனுப்பினதாக தகவல். இது உண்மையா , யாராவது விசாரித்து சொல்லுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வரும் காலங்களுக்கு,இறந்த காலங்களுக்கு அனுப்ப என்னால் இயலாது ....அந்த தகுதி நமது பழைய காமிக்ஸ்களுக்கு இருக்கலாம் உங்கள் மனது முழுதுமாய் ஒத்துழைத்தால்

      Delete
  38. 1987 எனக்கு ஒரு மறக்கமுடியாத வருடம். அப்போது நான் திருவள்ளூரில் படித்துக்கொண்டிருந்தேன். 10 ரூ புக் வாங்க காசு சேர்க்க முடியாததால் புத்தகத்தை பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு கடையில் திருடினேன். அந்த மன உறுத்தல் 2005 மே மாதத்தில் தான் முடிந்தது. எனது திருமணத்திற்கு முன்பாக பாவமன்னிப்பு எடுக்க சொன்னபோது நான் பாதிரியாரிடம் சொன்னது மேற்கண்ட விஷயத்தை மட்டுமே. அவரின் வழிகாட்டுதலின்படி அந்தகடைக்கு சென்று 500 ரூ கொடுத்து 47 ரூபாய்க்கு பொருள் வாங்கிவிட்டு மீதி காசு வாங்காமல் வந்துவிட்டேன். இது 100% உண்மை

    ReplyDelete
    Replies
    1. என் புத்தகங்கள் என்னை விட்டு சென்றபோது மேற்கண்ட தவறினால்தான் எனக்கு இப்படி நேர்ந்தது என்று மனதை தேற்றி கொள்வேன்

      Delete
    2. @ கி கி

      பாதிரியாரிடம் மட்டுமன்றி, இப்படி எல்லோர் முன்பும் உண்மையைச் சொல்லும் உங்கள் குணம் வியக்கவைக்கிறது!

      அவ்வப்போது 500 ரூபாய் கொடுத்துச் சில்லறை வாங்காமல் செல்ல நீங்கள் தயாரென்றால், நான் கூட ஒரு கடை வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்...

      Delete
    3. I admire..I strongly believe that our comics and vijayan sir holds lions share in our good deed .they have taught these ......

      Delete
    4. ஹாஹாஹா..நண்பர் ஈரோடு விஜயின் humour sense என்னை வியக்க வைக்கிறது...அபாரம் நண்பரே…keep us smile always...

      Delete
    5. @ Raja babu

      நன்றி நண்பரே!

      தங்கள் சி(ரிப்புச் ச)த்தம் - என் பாக்கியம்! :)

      Delete
    6. எவ்வளவு ஆழமான நேசிப்பை லயன் உண்டு பண்ணி இருக்கின்றது! இந்த புத்தகத்தை வாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை வேறு எந்த நிறுவனத்தின் இதழ்களும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை . உணவு பண்டங்களும் , விளையாட்டு பொருட்களும் ஏற்படுத்தாத தாக்கத்தை சித்திரங்கள் வரையப்பட்ட தாள்கள் ஏற்படுத்தியது என்ன ஒரு ஆச்சர்யம் ?!

      Delete
  39. உலக தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே அடுத்த வாரம் /முயற்சி எடுத்தால் இந்த வாரம் இரண்டு நூறு ரூபாய் புத்தகங்கள் ஒரே நாளில் ,இது மூன்றாக உயர வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  40. அப்பிடியே சுக்கா கறி,வேகவைத்த ஆப்பிள் ,பீன்ஸ் சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தி ...கூடவே பிரெஞ்சு பிங்கர் பிரைஸ் ......

    ReplyDelete
  41. சார்...முடிந்தால் அந்த திகில் கோடை மலர்..,மற்றும் mini lion சம்மர் ஸ்பெஷல் மறுபதிப்பாக மீண்டும் தாங்கள் கொண்டு வந்தால் உங்களுக்கு கோடி ...கோடி புண்ணியம் (கண்டிப்பாக ) சார் ..ப்ளீஸ் ...
    (இதை 100 முறை டைப் செய்து வினவுவதாக அனைவரும் நம்பவும் ;)

    ReplyDelete
  42. கோடை காலத்தின் நிழலே நிழலே
    கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா...

    ReplyDelete
    Replies
    1. //கோடை காலத்தின் நிழலே//
      அல்ல கோடை மழை
      கொட்டோ கொட்டென்று கொட்டட்டும்

      Delete
  43. அடுத்த வாரம் ...
    கண்ணா ...லட்டு தின்ன ஆசையா..?
    ஆமாம்பா...
    இந்தா...ஹாட் & கூல் ஸ்பெஷல்...
    ஆகா..
    கண்ணா ...இன்னொரு லட்டு தின்ன ஆசையா..?
    அட...ஆமாம்பா...
    இந்தா ...கிளாசிக் டைகர் ஸ்பெஷல்...
    ஓ....சூப்பர் ...

    நினைத்தாலே இனிக்கிறது....

    100 விலையில் இரு வண்ண புத்தகம் ஒரே மாதத்தில் ... எத்தனை மாத கனவு .....இந்த மாதம் நனவாகி விட்டது .ஒவ்வொரு மாதமும் இந்த கனவு நிறை வடைய ஆண்டவனையும்..ஆசிரியரையும் வேண்டுகிறேன் .

    ReplyDelete
  44. நினைக்கும் போதே இவ்வளவு இனிமையாக இருக்கின்றதே ?!
    இந்த இதழ்களை கைகளில் பெற்ற தினத்தில் மனம் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விளக்கிடவும் இயலுமோ?!

    அப்பொழுது எல்லாம் பள்ளி இறுதியாண்டு விடுமுறையை எதிர்பார்ப்பதும் தீபாவளி எப்போது என்று காலண்டரில் தேதி பார்ப்பதும் இது போன்ற குண்டு இதழ்களை எதிர் நோக்கியே .

    சிறு வயதை மிக மிக சந்தோசமாக இருக்க செய்ததில் லயன் , திகில் , மினிலயன் , ஜூனியர் லயன் , முத்து இதழ்களுக்கு முதன்மையான பங்குண்டு .

    அன்றைய தின ஐந்து ரூபாய்க்கு இருந்த மதிப்பு இன்றைய ஐநூறு ரூபாய்க்கு இருக்கின்றதா என்று தெரியவில்லை .

    ஏனெனில் டிராகன் நகரம் இதழை ஒரு மழை மாலையில் வீட்டின் திண்ணையில் கைகளில் வைத்து படித்துக்கொண்டிருந்தேன் . அப்பொழுது மழைக்கு நனையாமல் ஒதுங்குவதற்காக சைக்கிளில் மீன் விற்பவர் என் அருகில் அமர்ந்தார் ,என்கைகளில் இருந்த இதழைப்பற்றி விசாரித்தவர் அதன் விலையை அறிந்ததும் அவர் காட்டிய வியப்பு இன்றும் மறக்க முடியாதது !

    இன்று என் மகனுடன் ஒரு குழந்தையைப்போல் என்னால் நட்பு பாராட்ட முடிகின்றது. அதற்கு காரணம் இன்றும் நான் வாசிக்கும் காமிக்ஸ்கள் என்றால் அது மிகையில்லை .

    ReplyDelete
  45. என் பெயர் லார்கோ இதழ் மறுபடியும் ஈபே மூலம் கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா ?எடி. சார்?

    புது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  46. நண்பர்களே,

    நினைவுகள் விலைமதிப்பற்றவை என்பதை உங்கள் ஒவ்வொருவரின் பதிவுகளையும் படித்திடும் போது உணர்ந்திட இயல்கிறது. கடந்து சென்ற நாட்களும்,அவை சார்ந்த அழகான அனுபவங்களும் மீட்டிட இயலா பொக்கிஷங்கள் என்ற புரிதல் நம்முள் வளர்ந்திடும் போதெல்லாம் - பழையனவற்றின் மீதான பற்றுதல் சற்றே தூக்கலாய்த் தெரிவது இயற்கை தானே !!

    நமது காமிக்ஸ்களின் முந்தைய இதழ்களைப் பார்த்திடும் போதும் தோன்றிடும் அந்த nostalgia கூட இந்த ரகம் தான் என்பது எனது கருத்து. மறுபதிப்புகள் அச்சு அசலாய் அதே இதழை இப்போது நம் முன்னே கொணர வல்லதே - ஆனால் அதனை முதன்முதலில் படித்திட்டபோது நமக்கிருந்த அந்த carefree வயதினையோ ; அந்த வயதிற்கான சுதந்திரங்களையோ மீட்டுக் கொணர்வது சாத்தியமானால் தவிர, அதே ரசனையோடு இன்று அவற்றைப் படிப்பது சிரமம் தானே ?

    நினைவுகள் - தலைக்குள், சிந்தைக்குள் மேகங்களாய் இருக்கும் வரை அவற்றின் தனித்துவமே அலாதி....அவை சரளமாய் மீண்டு நம் முன்னே வந்து நிற்கும் போது, முதல் தாக்கத்தைத் தாண்டி - பெரிதாய் சாதிக்கப் போவதில்லை ! இன்றைய தலைமுறைக்கு காமிக்ஸ் எனும் சுவையைப் புகட்ட புதிதாய் வழிகள் தேடுவோமே . ...இது KFC -ஐ வணங்கி வளருமொரு தலைமுறை - அவர்கட்கு நாம் சுவைத்த புளியோதரைகளும், சக்கரைப் பொங்கல்களும் பிடிக்கக் கூடும்...லயிப்பது சிரமமாகிடாதா ?

    ReplyDelete
    Replies
    1. என்னவோ போங்க சார் ,நீங்க சொல்வது ஏற்று கொள்ளும் படியாக இருந்தாலும் ,கையில் கிடைத்தால் அந்த சந்தோசம் என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும் ,பழைய போக்கிச புதையல்களை பார்க்கும் பொது உள்ள சந்தோசம் பிரம்மிப்பு ,உங்களிடம் கிட்டங்கியில் உள்ளதால் தெரிவதில்லை ...காமிக்ஸ் இதில் விதி விலக்கு ...மனித அறிவுக்கு எட்டாத விசயங்களில் இந்த சந்தோசமும் உண்டு ....
      இப்போதெல்லாம் அடுத்த காமிக்ஸின் வரவை எதிர்பார்த்தே நேரம் கரைகிறது ...சீக்கிரம் ...சீக்கிரம்

      Delete
    2. எல்லோரும் KFC செல்வதுமில்லை,எல்லோரும் கோவில்களுக்கு செல்வதுமில்லை !இங்கே உள்ள நாம் சிலரேனினும் வெகுவாய் காமிக்ஸ் ரசிகர்கள் ,வெறித்தனமான ரசிகர்கள் !

      Delete
    3. அனைத்து பழைய கதைகளும் வேண்டும் என்ற எண்ணம் ஓங்கியிருந்தது முன்பு !இது போன்ற சிறந்த கதைகளை முயற்ச்சிக்கலாமே இயன்றால் !1986 கோடை மலரை முன்னோட்டமிடலாமே ,வெற்றி பெற்றால் தொடர்வோம் !உங்கள் உழைப்பு இங்கே தேவைபடாது எனும்போது ,நீங்கள் KFC வகையறாக்களை லார்கோ போல சுவைபட வழங்கலாம் உங்கள் உழைப்பில் !

      Delete
    4. இன்றைய இளைய தலைமுறையினரின் இரசணையும் காலத்திற்கேற்ப மாறியே உள்ளது.
      உதாரணத்துக்கு, நாம் லயித்துக்கேட்கும் (80களில் வந்த) இளையராஜா பாடல்களை  கேட்கும்படி கூறினால் ஆர்வம் காட்டாத இன்றைய பொடிசுகள், சமீப நாட்களில் வெளிவரும்  அர்த்தம்புரியாத பாடல்களில் லயித்துக்கிடக்கிறார்கள். அப்படி எந்த விசயம் அவர்களை ஈர்த்ததென்று ஆராய்ந்தால் ஒன்றுமே புரிவதில்லை; கேட்டாலும் சொல்லமாட்டேனென்கிறார்கள்.

      அவர்களிம் ஸ்பைடர் புத்தகத்தைக் காட்டி 'இவர் பேரு ஸ்பைடர்' என்றால், ஒரு முறை முறைத்துவிட்டு ஓடிச்சென்று 'ஸ்பைடர் மேன்' ஸ்டிக்கரை எடுத்துவந்து 'ம்... இவர்தான் ஸ்பைடர்' என்கிறார்கள். எனக்கு டர்ரானதுதான் மிச்சம்!

      நீதி: ம்... வந்து... கொஞ்சம் யோசிச்சு அப்புறமா சொல்றேனே? :)

      Delete
    5. அந்தப் பொடிசுகளில் ஒன்று நம்ம ஸ்பைடரைப் பார்த்துட்டு ஒரு கேள்வி கேட்டுச்சே பார்க்கலாம்... ஹூம் நொந்துட்டேன்! ஸ்பைடர் அபிமானிகளின் நலன் கருதி அதை இங்கே வெளியிட விரும்பவில்லை! :)

      Delete
    6. Erode VIJAY : அட..சும்மா சொல்லுங்க விஜய் ! நாளைய வரலாறு ஒரு பொன்மொழியை தவற விட்டதற்காக வருத்தப்படக்கூடாது அல்லவா ?

      Delete
    7. தோடா! நேத்து பேஞ்ச மழையில இன்னிக்கி மொள்ச்ச காலானுங்கோ, spider மேரி பெரிய பெரிய வஸ்த்தாதுவையே கலாய்க்குதுங்கோ,இத்த தான் எங்க தலீவரு தேங்கா சீனிவாசன் என்ன சொல்லி இருக்கார் நா : ஆ அஜிக்கு ஜிக்கா அமுக்கு ஜிக்கா குமுக்கு ஜிக்கா ஜிக்கா !
      வாண்டு புள்ளிங்கோ வந்து நின்னா spider எல்லாம் தாத்தா !

      Delete
    8. எடிட்டரே கேட்டதால சொல்றேன்...

      ஸ்பைடர் ரசிகர்கள் மனசைக் கல்லாக்கிக்கோங்க...

      நம்ம ஸ்பைடரை ஒரு நிமிஷம் உற்றுப்பார்த்த அந்தப் பொடிசு "முதுகிலே சிலிண்டரெல்லாம் கட்டியிருக்காரே, இவரு யாரு கொசு மருந்து அடிக்கிறவரா?" அப்படீன்னு...
      யாராவது கர்சீப் வச்சிருக்கீங்களா?

      Delete
    9. அப்படி என்றால் கடந்த வருடம் போல கலர் புத்தகத்துடன் இணைந்து திகில்/மினி லயன் கதைகளை (B & W)வெளியிட்டால் என்னை மாதிரி பழைய புத்தகங்களை படிக்காதவர்களுக்கு படிக்க உதவுமே...மீண்டும் வெளியிட முடிந்தால் மிகவும் சந்தோசம் அடைவோம்...புத்தகமும் தடிமனாக இருக்கும்.எங்களுக்கு படிக்க நிறைய கதைகள் கிடைக்கும்...மறுபடியும் மறுபரிசீலனை செய்யும் படி கேட்டு கொள்கிறோம்...

      Delete
    10. /* "முதுகிலே சிலிண்டரெல்லாம் கட்டியிருக்காரே, இவரு யாரு கொசு மருந்து அடிக்கிறவரா?" */ Ha Ha Ha :-) :-)

      Delete
    11. எங்கள் தானை தலைவர் ஸ்பைடர் நிலைமை இப்படி ஆகிவிட்டதை நினைத்தாள்
      ஆ ஆ ஆ ஆ.....

      Delete
    12. Vijay...இப்பொழுது தமிழ் நாட்டில் கொசு தொல்லையும்.. மின்சாரம் இல்லாமையும் மக்களை தூங்க விடு வதில்லை...அதனால்..அவ்வாறு கொசுவடிக்க வருவரோ என்று சொல்லி இருப்பார்கள்...கதையில் கொள்ளையர்களை பிடித்து கொடுப்பார்... குழந்தைகளுக்காக இப்பொழுது கொசுவையும் கொல்லவேண்டிய சுழ்நிலை..நம்ப spider க்கு

      Delete
    13. Dear Editor,

      புளியோதரையும் பொங்கலும் என்றுமே Top. அதன் சுவையும், மவுசும் என்றுமே குறைவதில்லை. ஆகவே உங்கள் கருத்துக்களை மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன். :)

      Delete
    14. @ tex kit

      அப்படீன்னா... ஸ்பைடர் இப்போ வச்சிருக்கறது வலைத் துப்பாக்கியா? கொசுவலைத் துப்பாக்கியா? :)

      Delete
    15. Erode VIJAY : நண்பர் R .T .முருகன் உங்களை எதற்கோ ஆவலாய்த் தேடிய வண்ணம் உள்ளதகாகக் கேள்விப்பட்டேன்...இன்று மாலை கொஞ்சம் உருட்டுக் கட்டைகளுக்கும் அவர் ஆர்டர் தந்ததாய் நம்பத் தகுந்த தகவல்கள் !!

      Delete
    16. இந்த வாரம் R T M -ஐ சந்தித்தால் விஜய் சொன்னதை பற்றி அளவளாவ உத்தேசம் :-)

      Delete
    17. Periyar : நேற்றைக்குக் கூட KFC -க்கு ஜூனியர் எடிட்டரின் பொருட்டு செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது....எவ்வளவு தேடியும் அவர்களது மெனுவில் "நம்ம ஐட்டங்கள்" - அது தான் புளிசாதம் + பொங்கல் தட்டுப்படவே இல்லை :-)

      Delete
    18. ha ha..Vijay..சந்தேகம் இல்லாமல் கொசுவலை துப்பாக்கிதான்...ஆசிரியர் இரும்புக்கை மாயாவி இனிமேல் காமிக்சில் வருவது கடினமே என்று NBSல் சொன்னது...இரும்புக்கை மாயாவி தமிழ்நாட்டுக்கு வந்தால் இரும்புக்கை ஆசாமி ஆகி விடுவார் என்பதால் தான் போல...

      Delete
    19. Comic Lover (a) சென்னை ராகவன் : விடாதீர்கள் ராகவன் சார் ! ஒவ்வொரு ஸ்பைடர் இதழுக்கும் அந்தக் காலத்திலேயே 50-60 போஸ்ட்கார்ட் போட்ட ஸ்பைடர் ரசிகர் மன்றத் தலைவருக்குத் தெரிவிக்காது போனால் வரலாறு மன்னிக்காது !

      Delete
    20. old is gold sir.. consider reprint...

      Delete
    21. Atleast CC2 booking we will start and look for the bookings...sir..

      Delete
    22. //ஒவ்வொரு ஸ்பைடர் இதழுக்கும் அந்தக் காலத்திலேயே 50-60 போஸ்ட்கார்ட் போட்ட ஸ்பைடர் ரசிகர் மன்றத் தலைவருக்குத் தெரிவிக்காது போனால் வரலாறு மன்னிக்காது !//

      50-60 post card இல் சரி பாதி இந்த சென்னைவாசி க்கும் சொந்தம் .

      Delete
    23. chennaivaasi : நீங்கள் தூய தமிழில் போடும் பதிவுகள், வேறு யாரோ எழுதுவதைப் படிப்பது போலுள்ளது ! தலைவர் தேங்காய் சீனிவாசனின் சிஷ்யப் புள்ளை அந்தத் தப்பைப் பண்ணலாமா :-)

      Delete
    24. ஓ.கே. வாத்தியாரே மிஸ்டேக் ஆய்ச்சி. இனிமேங்காட்டி இந்த மேரி ஆவாது .

      Delete
  47. //இது KFC -ஐ வணங்கி வளருமொரு தலைமுறை//
    :) good one sir!

    ReplyDelete
  48. என்ன விஜய்..... கொசுமருந்து....ஹா....ஹா....ஹா....நல்லா சிரிச்சேன் போங்க....

    ReplyDelete
  49. என்ன இருந்தாலும் நானும் ஸ்பைடரை ரொம்ப நேசித்து படித்தவன் விஜய்

    ReplyDelete
  50. டியர் எடிட்டர் சார்,

    //Periyar : நேற்றைக்குக் கூட KFC -க்கு ஜூனியர் எடிட்டரின் பொருட்டு செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது....எவ்வளவு தேடியும் அவர்களது மெனுவில் "நம்ம ஐட்டங்கள்" - அது தான் புளிசாதம் + பொங்கல் தட்டுப்படவே இல்லை :-//

    நீங்கள் கூறுவதுபோல் இந்த Generation கண்டிப்பாக KFC -ஐ வணங்கி வளருமொரு தலைமுறை கிடையாது, நம்மவர்கள் இன்றும் பொங்கல் , புளியோதரைகளுக்கு அடிமைகளே, அதனால் தான் நம்மவர்களை கவர KFC 25 விலையில் மெனு கொண்டுவருகிறார்கள் ஆனால் A2B என்னும் அடையார் அனந்த பவன் 50 Rs ஒரு plate பொங்கல், MR Idli என்னும் கடையில் 75 Rs oru plate pongal, என்னுடைய மகள் இன்றும் KFC ya A2B ya என்ரால் A2B என்றே சொல்கிறாள்.

    A2B கடையில் எப்பொழுது போனாலும் இங்கு பெங்களூரில் உட்கார இடம் கிடைப்பதே கடினம். :)

    So Please do consider releasing our Classic Digest books and all unreleased spider stories. (பிட்ட போட்டோம் இல்ல)

    கார்த்திக் சோமலிங்க மன்னிப்பாரக :)

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் Suresh...சொன்னது பொல A2B ல் இட்லி பொங்கல் சாப்பிட்ட திருப்தி KFC ல் கிடைப்பதில்லை தான்...

      Delete
    2. KFC ; பொங்கல் ; இட்லி என்று படிக்கப் படிக்க எனக்கு இப்போவே லைட்டாகப் பசிப்பது போல் தோன்றுகிறது...! உங்களில் யாருக்கேனும் ?

      Delete
    3. நாங்களும் பசியோடு காத்திருக்கிறோம்... அடுத்த புத்தகத்தை எதிர் நோக்கி(பழைய கதைகளையும் சேர்த்து)

      Delete
    4. @Suresh Natarajan:
      பெங்களூர் A2B-களில் பொங்கல் அல்லது வேறு எதை வாங்கினாலும் கஞ்சத்தனமாக ரெண்டு டீஸ்பூன் சாம்பார், ஒரு டீஸ்பூன் சட்னி மட்டுமே தருவார்கள். வாங்குகிற காசுக்கு ஒழுங்காக உட்கார்ந்து சாப்பிடக் கூட இடம் இருக்காது. ஆனால் பெங்களூர் ஸ்டைல் 'டேஷ் டேஷ் சாகர்' ஹோட்டல்களில் பொங்கலே சாம்பார் போல சொதசொதவென்றுதான் இருக்கும் என்பது வேறு விஷயம். வெறுத்துப் போய் KFC பக்கம் போனால், கவுன்டரில் ஆர்டர் எடுக்கிறேன் பேர்வழி என்று ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்த டயலாக்கை ஸ்டைலாக உளறியே வெறுப்பேற்றுவார்கள். இருநூறு ரூபாய்க்கு கிட்டத்தட்ட 50 கிராம் சிக்கன் தருவார்கள்! இந்தக் கொடுமையை எல்லாம் அனுபவிப்பதற்கு பதில் வீட்டிலேயே தோசையோடு தேங்காய் சட்னி ஒற்றி சாப்பிட்டுக் கொள்ளலாம்.

      யாரு ஸ்பைடரா? வீட்டுல சுத்திட்டு இருந்த அவரை, நேத்துதான் ஒட்டடைக் குச்சியால... சரி விடுங்க, சொல்றதுக்கே சோகமா இருக்கு! :)

      Delete
    5. @Dear Editor: கரெக்டா சொன்னீர்கள். நம்ம ஐட்டங்கள் சரியாகக் கிடைப்பதில்லை but always in demand. அதனால் தான் அதை கிடைக்க வைப்பதற்கு உங்களிடம் கோரிக்கை வைக்கிறோம் ;)

      @Suresh Natarajan: நன்றாகச் சொன்னீர்கள். பெங்களூர் A2B தான் டிமான்டிலேயே இருக்கிறது. Karthik Somalinga-வும் CC digest மறுபடி வந்தால் வாங்குவேன் என்று ஏற்கனவே கூறியுள்ளார்

      @Karthik Somalinga: Super. அப்படியே பெங்களுரு உணவகங்களைப் பற்றி உங்கள் ஸ்டைலில் ஒரு பதிவு :)

      Delete
    6. //KFC ; பொங்கல் ; இட்லி என்று படிக்கப் படிக்க எனக்கு இப்போவே லைட்டாகப் பசிப்பது போல் தோன்றுகிறது...! உங்களில் யாருக்கேனும் ? //
      அப்போ இரண்டும் தர தயார் என்று கூறியதற்கு நன்றி !

      Delete
  51. அழிந்து போன பழைய புகைப்படங்களை மீட்டிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமோ அதைப்போன்றதே பழைய இதழ்கள் வேண்டும் என்பதும் .

    பழைய புகைப்படங்கள் நாள் செல்ல செல்லவே வசிகரமாகின்றன .இன்று பார்ப்பதற்கு நேற்றை விடவும் மிகவும் அழகாக இருக்கின்றன . அவை நினைவலைகளில் ஏற்படுத்தும் அதிர்வுகள் ஆனந்தமானவை .

    மதராசப்பட்டினமும் ,சுப்புரமனியபுரமும் , பரதேசியும் ஆட்டோ கிராப்பும், அழகியும் முதல் ஈர்ப்பை நமக்கு ஏற்படுத்துவது அவை கடந்த காலத்தை நினவூட்டுவதாலேயே .

    ReplyDelete
  52. சில விஷயங்களில் பொருளினால் ஏற்படும் பயனை விடவும் அந்த பொருளை அடைவதில் ஏற்படுகின்ற மன திருப்தி அளவிட முடியாதது .
    பழைய இதழ்களில் உள்ள கதைகள் இன்றைய தினத்திற்கு பொருந்தாமல் போனாலும் அந்த இதழ்களை புரட்டுவதே ஒரு சுகானுபவம் .

    ஏனெனில் சிறுவயதின் இழந்த சந்தோசங்களில் இன்று மீட்டிட வாய்ப்புள்ளது பழைய காமிக்ஸ் இதழ்கள் மட்டுமே .

    அன்றைய நாட்களில் அனைத்து தினங்களிலும் காமிக்ஸ் இதழ்கள் பங்கு பெற்ற நாட்களாகவே உள்ளன .விளையாட்டு ,நட்பு ,படிப்பை தவிர்த்து நினைவலைகளில் பெரும் பங்கு வகிப்பது காமிக்ஸ் மட்டுமே .

    அவற்றை மீட்டிட முடிந்தால் காலத்தின் 25 வருடங்களை திரும்ப பெற்ற உணர்வே தோன்றுகிறது .

    ஒவ்வொரு பழைய காமிக்ஸும் வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவத்துடன் சம்பந்த பட்டதாகவே உள்ளது .

    அந்த காமிக்ஸை மீட்டிடுவது அந்த சம்பவங்களை மீட்டிடுவதற்கு சமமே .

    ReplyDelete
  53. நான் காலபயணதிற்கு மூட்டை முடிச்சுகளை கட்டி தயாராக உள்ளேன் அழைத்து செல்ல நீங்கள் தயாரா சார் ?!

    ReplyDelete
  54. It is true, our sutties nowadays are verymuch interested only in Spider-Man. But teaching them our king of crooks story may be really little challenging for us, but it will promise a deep impact on tamilcomics. I hope so.

    Dear karthick, you can try a tamilian hotel there you will get a lot of tamilnadu food menu. nice tasty pongal food available with thick sambar in the morning. The hotel located nearby eastend bus stop.

    Dear Raghavan sir, I would like to join with you ar RT Murugan's home.

    ReplyDelete
  55. விலையில்லா வலை மன்னனுக்கு வணக்கம்

    உனது ஜெட் அமைப்பு கிளப்பி விட்ட சிந்தனைகள்,தூண்டி விட்ட சந்தோசங்கள் பல பல ....இப்போது தனியாக பறக்க கூடிய அது போன்ற சாதனங்கள் கண்டு பிடிக்க பட்டு விட்டன !
    தனியாக நியூ யார்க்கை கட்டி இழுத்து சென்றது அல்லது நகர செய்வது கண்டங்களின் நகர்வுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு !
    மனிதனின் மாறுகின்ற குணங்களுக்கும்,வெடித்து கிளம்பும் கோப உணர்வுகளுக்கும் நீ ஒரு எடுத்து காட்டு ,எதை செய்தாலும் அழகே ,கஷ்டப்பட்டு கொள்ளை அடித்து விட்டு அதே பொருட்களை த்ரில்லுக்காகவே கடத்தினேன் என்று திரும்ப அளிப்பதும் ,வில்லன்களை பந்தாடுவதும் ,நீதியின் காவலனாக மாறியதும் உன் மனம் போல வாழ்ந்த்ததும் சரியான முடிவுகளை சரியான தருணத்தில் எடுப்பதுமே உனது பொழுதுபோக்கு ,அதில் கூடவே கழிந்தன எங்களது பொழுதுகளும் ,கடிதம் ஒரு கதைக்கு ஐம்பதா என வியக்கிறேன் ,இது ஒரு தனி மனிதன் rt murugan பாராட்டு மட்டுமல்ல ,நினைவுகளால் எத்தனை கடிதம் எழுதியிருப்போம் என் போன்றவர்கள் ,தொடர்ந்து வர வேண்டும் உனது கதைகள் என நிதம்தொரும் எத்தனை முறை ஏங்கி இருப்போம் ,எவ்வாறெல்லாம் என்பது உனக்கு தெரியாமல் போனதே எனது வருத்தம் !!!அன்று லயன் காமிக்சில் உனது வரவு குறைந்த பின்னர் இழந்த நண்பர்கள் ஏராளமிருக்கும் நிச்சயமாய் !மேலும் இப்போதைய விரைவாய் விற்று தீர்ந்த சூப்பர் ஹீரோ ஸ்பெசல் ஒன்று போதுமே உனது பெருமைதனை கூற !உனது வரவு அறியாது காமிக்ஸ் படிக்காமல் ஊரெங்கும் பதுங்கி கிடப்போர் உண்டு பல்லாயிரம் !உனது வலையை வீச நேரம் வந்து விட்டது !அவர்களது மனங்களை கட்டியிழுக்க தயாராகு தயங்காது உனது பழைய கதைகள் மூலமாய் .முன்பு நடந்த சந்தோசமான தருணங்களை நினைவு மூலம் மீட்டு அசை போடுவோமே சந்தோசமாய் ,அது போல அசை போட நாங்கள் தயார் !
    ஏழு மலை தாண்டி,ஏழு கடல் தாண்டி மினி ஸ்பைடர் உனது ஜெட்,வலைதுப்பாகி ,வசீகரமான கருப்பு உடைகளை தூக்கி வருவானே அது போல எங்கோ பாதுகாப்பாய் இருக்கும் என நினைத்ததும் ,பறக்கும் போது அந்த ஜெட் அமைப்பு சீர்கெட்டு தலை கீழாய் நண்பர்களுடன் நீ கீழே பாய்வதும் ,பின்னர் மர பொந்திலிருந்து நீண்ட கையால் நீ ஜெட்டை பெற்று பறந்ததும் ,பதை பதைப்பை சந்தோசமாய் மாற்றியதும் உன்னால் மட்டுமே இயலும் !
    இன்று அது கொசு மருந்தடிக்கும் சாதனமாய் இளைய தலை முறைக்கு தோன்றியதில் தவறில்லை ,அதன் பெருமைகளை உணரவில்லை அவர்கள் !எந்த ஒரு விசயத்தின் மதிப்பையும் அவர்களுக்கு உணர்த்தினாலே அவர்கள் உணர்வார்கள் !நீங்கள் உணர்த்தவேல்லாம் வேண்டாம் ஒரு பழைய யார் அந்த மினி ஸ்பைடரையோ,எத்தனுக்கு எத்தனையோ அல்லது சைத்தான் விஞ்சானியையோ கையில் கொடுத்து படிக்க வையுங்கள் அவர்களுக்கு போரடிக்கும் பொழுதுகளில் !
    உணர்வாகவும் ,சதையாகவும் கதைகள் மூலமும் ,நரம்புகளாய் வலைகள் மூலமும் பின்னி பிணைந்து விட்ட வலை மண்ணுக்கு விலைதான் ஏது!


    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஸ்டீல் க்ளா! மனதிலிருப்பதை அப்படியே அருவி மாதிரி கொட்டிட்டீங்களே!! ஸ்பைடரை நினைத்தாலே உங்களுக்கு என்னா ஒரு உத்வேகம் வந்துவிடுகிறது!!

      அடடே! ஸ்டீல் க்ளாவின் ஒரு முழுநீளப் பின்னூட்டத்தைப் படிக்கப் படிக்கவே புரிந்துகொள்ளும் சக்தி எனக்கு இப்போதுதான் கிடைத்திருக்கிறதே!

      எல்லாம் ஸ்பைடரின் வலைத்துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட மின்காந்தக் கதிர்வீச்சின் மகிமையாகத்தானிருக்கும்!! :)

      Delete
    2. ஸ்பைடரா கொக்கான்னான்னாம் !உங்கள் மனதிலும் ஸ்பைடர் உண்டு நண்பரே !

      Delete
    3. நிச்சயமாக ஸ்டீல் க்ளா!

      ஆனால் துரதிர்ஷ்டவசமாக...

      மனதில் மட்டும்! :(

      Delete
    4. அப்படியென்றால் மீண்டும் தீபாவளி மலரை பார்த்தால் நீங்கள் ஆதிவாசியாய் கூக்குரலிட தயாரா ?

      Delete
    5. அது போல இளையராஜாவின் பாடல்களை நான் கொடுத்து அதனை கேட்டு லயித்த இளைய தலை முறைகளும் உண்டு !ஏன் MSV பாடல்களையும் நான் ரசித்தோமே நமது முந்தய தலைமுறை இளையராஜா குறித்து புலம்பும்போதும் !இப்போது சிறிய குழந்தைகள் பாடுவதை சன் சிங்கரில் அனுஷ்யா எனும் சிறுமி லயித்து பாடுவதை கேளுங்கள் !காலம் கடந்தாலும் சிறந்த படைப்புகள் என்றும் வாழும் மனதில் மட்டுமின்றி,மண் மீதும்

      Delete
  56. "
    இனி
    பூ
    இதழ் உதிர் காலம்
    உதிர்ந்த இதழ்களை மீண்டும் கோக்க முடியாவிட்டலும்
    சிறுவயதில்
    ஒற்றை பூவிதழ்களை
    புத்தக பககங்களிடையே பாடம் செய்தது போல
    இவற்றையும் பாடம் செய்கின்றேன்
    பின்னொரு நாளில்
    வசந்த கால நினைவுகளை மிடுத்தரகக்கூடும் அது..."

    Dedicated to all you fans of Spider/Maayaavi...

    ReplyDelete

  57. 1.லயன் கோடை மலர் - 1986
    2.திகில் கோடை மலர் 1987
    3.லயன் கோடை மலர் - 1987
    4.மினி லயன் - சம்மர் ஸ்பெஷல் 1988
    5.மினி லயன் - ஹாலிடே ஸ்பெஷல் 1989 மற்றும் மில்லேனியம் ஸ்பெஷல் , மெகா ட்ரீம் ஸ்பெஷல் எல்லாம் திரும்பவும் வெளியிட்டு தன்னுடைய குடோனை நிரப்ப போவதாக சொன்னார் கனவில். உண்மையாக இருக்குமோ என இங்கு வந்து பார்த்தால் இனி kfc மட்டும்தான் என தலையில் இடி இறக்கி விட்டார். (so.. கனவே கலையாதே)

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் முன்பே கூறினாரே கிட்டங்கியை நிரப்ப சத்தமில்லாமல் புத்தகங்களை தயார் செய்து விட்டு ஒட்டு மொத்தமாக அறிவிக்கிறேன் என்று ,அதில் இவையும் இடம் பெற்றிருக்குமோ !யாரறிவாரோ !

      Delete
    2. 1980களில் மத்தியில் நமது காமிக்ஸ்களின் பிரிண்ட் ரன் 12000ஐ தொட்டிருக்கிறதென்றால், குறைந்தபட்டம் இருபதாயிரம் வாசகர்களாவது இருந்திருப்பார்கள்தானே? எங்கே அவர்களெல்லாம்? அவர்களில் 95%க்கு மேற்பட்டவர்கள் இன்றும் உயிரோடிருப்பது நிச்சயம்! ஏதோ சில காரணங்களால் காணாமல் போயிருக்கும் அவர்களில் ஒரு 50% பேர்களை மீட்டெடுக்க முடிந்தால்கூட ஒருவேளை நமது இந்த சூப்பர் ஹீரோக்களை மறுபதிப்பாக்கிடும் கனவு நிறைவேறிடக்கூடுமோ என்னவோ?!

      பெங்களூர் பரணி சொல்லியதைப் போல பழைய சந்தாதாரர்களின் விலாசங்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு நம் காமிக்ஸ்களின் சமீப வரவை உணர்த்தினால் கொஞ்சம் பலன் கிடைக்கக்கூடும்!

      Delete
    3. Hello boss. What about this months edition.... shall we espect in two days.....

      Delete
    4. //1980களில் மத்தியில் நமது காமிக்ஸ்களின் பிரிண்ட் ரன் 12000ஐ தொட்டிருக்கிறதென்றால், குறைந்தபட்டம் இருபதாயிரம் வாசகர்களாவது இருந்திருப்பார்கள்தானே? எங்கே அவர்களெல்லாம்? அவர்களில் 95%க்கு மேற்பட்டவர்கள் இன்றும் உயிரோடிருப்பது நிச்சயம்! ஏதோ சில காரணங்களால் காணாமல் போயிருக்கும் அவர்களில் ஒரு 50% பேர்களை மீட்டெடுக்க முடிந்தால்கூட ஒருவேளை நமது இந்த சூப்பர் ஹீரோக்களை மறுபதிப்பாக்கிடும் கனவு நிறைவேறிடக்கூடுமோ என்னவோ?!

      பெங்களூர் பரணி சொல்லியதைப் போல பழைய சந்தாதாரர்களின் விலாசங்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு நம் காமிக்ஸ்களின் சமீப வரவை உணர்த்தினால் கொஞ்சம் பலன் கிடைக்கக்கூடும்!/?

      சபாஷ் நண்பரே !

      Delete
  58. நிச்சயம் சூப்பர் ஹீரோ மறுபதிப்புகளுக்கு நான் எதிரியல்ல! நமது இப்போதைய உடனடித் தேவை வாசகர் வட்டத்தை விரிவுபடுத்துவதே! அந்த வட்டத்தில் புதிய, இளம் வாசகர்களும் அடக்கம்! அந்த விரிவாக்கப் பணிகளை விரைவில் வரவிருக்கும் சுட்டி லக்கியும், லக்கி மறுபதிப்புகளும் செய்திடும்.

    இப்படியாக, வாசகர் வட்டம் திருப்திகரமான எண்ணிக்கையைத் தொடும்போது சூப்பர் ஹீரோக்களின் மறுபதிப்பு ( மறுபிரவேசம்?) நிச்சயம் எடிட்டரின் பட்ஜெட்டுக்கு துண்டுவிழாமல் காப்பாற்றும்தானே?

    அதுவரை, கொஞ்ச நாளுக்காவது நமது ஸ்பைடர் ஒரு 'அரசாங்க ஊழியனாக' தனது 'பணியை' செவ்வனே செய்துகொண்டிருக்கட்டுமே? ;)

    ReplyDelete
  59. ஏம்ப்பா! சொம்மா அத்த திர்ப்பி போடு, இத்த திர்ப்பி போடுன்னு சொல்லிக்னு இருக்கறத விட புச்சா கேளுங்கப்பா. எங்க தலயோட சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் வந்தப்போ வாணாம் வாணாம் ன்னு கூச்சல் போட்டுட்டு இப்போ வோணும் ன்னா எப்டிப்பா?

    ReplyDelete
    Replies
    1. அன்னிக்கு பொற்ம இல்லாம விம்ர்சனம் பண்ண வெரசா பச்சு சொல்ட்டேன்பா !அப்புறம் பச்சு அர்ம தெர்ஞ்சு பேக் அச்சன்பா !மன்ச்கொபா !

      Delete
    2. ஸ்பைடரோட புது கதை முழு நீளம் என்று கூறிய ஆசிரியரிடம் அவற்றை கேட்க கூட தயக்கமாய் இருக்கிறது காதில் பூ சுற்றல் நாம் ஏற்று கொள்ள மாட்டோம் என கூறிய போது!இப்போதோ !சரி பழைய சிறந்த கதைகளை மறு பதிவில் விட்டால் ,அதுவும் கோடை ,தீபாவளி மலர்கள் என்றால்.....

      Delete
    3. உன் பச்சிய புச்சி சூப்பு வெச்சி குச்சா தான் spider புக் வரும்னா அத்த செய் தொர நீ நல்லா இருப்பே.

      Delete
    4. // உன் பச்சிய புச்சி சூப்பு வெச்சி குச்சாதான் //

      ஹா ஹா ஹா! தூள்! :D

      Delete
    5. குடித்த பின்னர் ,இவ்வளவு நாள் கழித்து ஏப்பமா !

      Delete
  60. எங்கிட்ட spider புக் அல்லாம்கீது. என்ன ஒன்னு இந்த விண்வெளி பிசாசு மட்டும் தனி புக்கா கடச்சா ஷோக்கா இருக்கும். வாத்யாரே! மனச வை வாத்யாரே. நம்ம தல spider புக் எதனாங்காட்டி புச்சா வந்தா ஒடனே ரிலீஸ் பண்ணிடுங்கோ. ஒ.கே. ஓவர்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியே அந்த புக்கல்லாம் எங்க வச்சிருக்கீங்கன்னு சொன்னா சென்னை வரும் போது தரிசிக்க வசதியா இருக்குமே !

      Delete
  61. தோடா! இந்த குற்ற சக்ரவர்த்திகிட்டேயே ஆட்டைய போட வரீங்களா?

    ReplyDelete
  62. வாங்கோ மாயாவி! சென்ன ஒனக்கு வெல்கம் சொல்லிக்கீதுப்பா .

    ReplyDelete
  63. நண்பர்களே நமது பழைய புத்தகங்கள் கோயம்புத்தூர்ல் எங்கே கிடைக்கும் என சொல்ல முடியுமா ....

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...கோவையில் நமது பழைய புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் .....

      கோயம்புத்தூர் ஸ்டீல் க்ளா வீடு ....

      Delete
    2. நண்பரே

      செல்லும் பொழுது ஜாக்கிரதையாக செல்லவும். அவர் வீட்டில் உள்ள காவலாளிகளிடம் உஷாரு :)

      Delete
  64. காமிக்ஸ் இல்லா இந்த வார வறட்சியில் இப்பொழுது நான் மீண்டும் படித்து கொண்டு இருக்கும் புத்தகம் ...நம்பினால் நம்புங்கள் "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ".அப்பொழுது போரடித்த spider கதை இப்பொழுது நன்றாக படுகிறது .
    (அதற்காக புது spider கதை வேண்டவில்லை .இன்னும் மறுபதிப்பில் வராத அந்த பழைய spider ....)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நான் படித்து முடித்து விட்டு வந்து இங்கே பார்த்தால் எனது எண்ணம் அப்படியே ! டெலிபதியோ !நம் இருவர் எண்ணமும் ஒன்றே !ஆனால் நிச்சயமாய் என்னிடம் பழைய புத்தகங்கள் இல்லை !இருந்தால் நான் ஏன் கேட்க போகிறேன் நண்பா !போரடிக்கும் போது,நண்பர்கள் வாய்ப்பிருந்தால் அதனை மீண்டும் படியுங்கள் ,உறைந்து விடுவீர்கள் !நிச்சயம் ஓவியங்களிலும்,கதைகளும் ஆர்டினியின் தோற்றமும் யார் அந்த மினி ஸ்பைடரை நியாபகமூட்டும் !ஸ்பைடர் சுற்றி விழுவது கடந்த காலத்தை கண் முன்னே நிறுத்தும் !~ஸ்பைடர் விண்வெளிக்கு விண்வெளி உடை அணியாமல் செல்வதே அன்று என்னை ஏற்றுகொள்ள மறுக்க வைத்தது !நண்பர் சுஸ்கி ,விஸ்கி கேள்வி என்னை உணர வைத்தது ,சூப்பர் மேனை ஏற்று கொள்ளவில்லையா ,பாண்டஸி என்றால் அப்படிதானே !அழிக்க உள்ள எதுவோ அதுவாக மாறும் ஸ்பைடர் அற்புதமே !

      Delete
    2. //காமிக்ஸ் இல்லா இந்த வார வறட்சியில் இப்பொழுது நான் மீண்டும் படித்து கொண்டு இருக்கும் புத்தகம் //

      அய்யா நான் படித்து கொண்டு இருப்பது 'XIII'

      மெய்யாலுமே ...

      Delete
  65. சார்...நாளை எங்களுக்கு "இன்ப அதிர்ச்சி " உண்டா...?

    ReplyDelete
  66. "இன்ப அதிர்ச்சி "கொண்டு வரும் இரண்டு அட்டைப்படங்களும் செம கலக்கல் சார்...

    (நேற்று இரவே அட்டைப்படங்களை கனவில் கண்டு கொண்டேன் )

    ReplyDelete
  67. // புது இதழ்கள் இரண்டும் (ஹாட் n ' கூல் ஸ்பெஷல் + டைகர் ஸ்பெஷல்) ஏப்ரல் 7க்கு உங்களைத் தேடித் புறப்படும் ! //

    விஜயன் சார், புத்தகங்கள் இன்று அனுப்பப்படுமா ???

    ஒரு அப்டேட் கொடுக்கலாமே சார்.

    ReplyDelete