நண்பர்களே,
வணக்கம். செவ்வாயன்றே ஆஜராகியிருக்க வேண்டியவன் இதோ, இந்த ஞாயிறு அதிகாலை வரையிலும் காணாமல் போக நேரிட்டது ஏனோ? என்ற கேள்வி எழுந்திருக்கலாம்! அதற்கான பதில் பதிவின் இறுதியில் ! So இப்போதைக்கு விட்ட இடத்திலிருந்து தொடர முயற்சிக்கட்டுமா – மான்ட்ரியால் விமான நிலையத்தின் அந்தப் பனி ராத்திரியிலிருந்து?
"மொத்த ஏர்-போர்ட்டுமே ஷட்-டவுண்! யாரும் எங்கேயும் போகப் போறதில்லே!‘ என்று எனக்கு முன் நின்ற வெள்ளைக்காரர் சொல்ல – பாதித் தூக்கத்தில் நின்ற நான் மலங்க மலங்க முழித்தபடிக்கே மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தேன் ! விறுவிறுவென வரிசை நகர விமான நிலையத்தின் ARRIVALS தளத்திற்கே எங்களை இட்டுப் போனார்கள் - ஏற்கனவே ஒப்படைத்திருந்த பெட்டி, படுக்கைகளை வாபஸ் தந்திடும் பொருட்டு ! உசர உசரமான கண்ணாடி ஜன்னல்கள் வழியே எட்டிப் பார்த்தால் - கும்மிருட்டில் வெள்ளைக் குவியல்களாய் தென்படுவது சகலமுமே வானம் மடை திறந்து வீசியெறிந்த பனி என்பது புரிந்தது. நிறைய இடங்களில் இடுப்பளவுக்குத் திண்டு போல பனி திரண்டிருக்க – ‘அம்போ‘வென அதன் மத்தியில் நின்ற எங்களது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் கண்ணில் பட்டது ! இன்னமும் ஏதாச்சும் அதிசயம் நிகழ்ந்து, எப்படியாச்சும் இந்தக் குளிர்ப் பொறியிலிருந்து தப்பிட வழி பிறக்காதா ? என்று யோசித்தபடிக்கே நடந்தால் – என் பெட்டி எதிரே நின்றது ! ‘ரைட்டு‘ ஆகிற வழியைப் பார்ப்போம்! என்றபடிக்கே பெட்டியைத் தள்ளிக் கொண்டு விமான நிலையத்தின் முகப்புப் பகுதிக்கு நடந்தால் கண் முன்னே விரிந்த காட்சி மிரளச் செய்தது!
நிறைய பிஸியான விமான நிலையங்களைப் பார்த்திருக்கிறேன் தான்; ஐரோப்பிய சம்மர் விடுமுறைக் காலத்தின் போது பாரீஸ் ஏர்போர்ட்டில் / லிஸ்பன் ஏர்போர்ட்டில் வாசலிலிருந்தே திமிறிக் கிடந்த ஜனத்தையெல்லாம் பார்த்திருக்கிறேன் தான் – ஆனால் இது போலொரு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜனத்திரளை அன்று வரைக்கும் கண்ணில் பார்த்த அனுபவம் கிடையாது! கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் என்ன செய்கிறோம் ? ஏது செய்கிறோம் ? என்ற நிதானங்கள் இல்லாமலே தெற்கேயும் – வடக்கேயும் ஓடிக் கொண்டிருந்தார்கள். மணி இரவு பத்தரையை நெருங்கி இருக்க, முக்கால்வாசி ஏர்லைன் ஆபீஸ்கள் லைட்டை ஆஃப் செய்து விட்டு CLOSED என்ற போர்டைத் தொங்க விட்டிருக்க – யாருக்கும் எவ்விதத் தகவல்களும் நஹி ! வரிசையில் எனக்கு முன்னே நின்ற ஆசாமியோ, அடுத்த இரண்டு நாட்களாவது இங்கே தான் அடைந்து கிடக்கணும் போலத் தெரியுது! என்று பீதியைக் கிளப்பியிருக்க – கையிலுள்ள செல்லில் சார்ஜ் எத்தனையுள்ளது என்று தான் சரிபார்க்கத் தோன்றியது முதலில். வயிறுமே ‘பசி...பசி...‘ என்று சேதி சொல்ல – விமானத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றிருந்தவனுக்குச் சுருக்குத் தட்டியது ! ‘ஆஹா.. கைவசமுள்ள சொற்ப பிஸ்கெட் & சாக்லெட்டுகளை இருப்பாக வைத்துக் கொண்டு, இப்போதைக்குக் கிடைப்பதை வாங்கும் வழியைப் பாருடா என் பீன்சு!‘ என்று மண்டை உத்தரவிட, வேக வேகமாய்க் குறுக்கே, நெடுக்கே ஓடிக் கொண்டிருந்த ஜனங்களின் பட்டியலில் நானும் சேர்ந்து கொண்டேன்! ‘எங்கே ஹோட்டல்? எ்ஙகே ஹோட்டல்?‘ என்று நாலாபக்கமும் ஆந்தைவிழிகளைச் சுழற்றியபடிக்கே நோட்டமிட, முக்காலே மூன்று வீசம் மூடப்பட்டிருக்க, இரண்டே இரண்டு Fast Food Outlets மாத்திரமே ஓடிக் கொண்டிருந்தன! ஆனால் – ‘இன்னியோடு பர்க்கரும், சிக்கனும், பீட்ஸாக்களும் அழிஞ்சிடும் புள்ளைங்களா...! இப்போவே சாப்பிட்டாச் சாப்பிட்டுக்கோங்க!‘ என்ற தகவலை ஆண்டவன் அங்கே மண்டி நின்ற பல நூறு ஜனங்களின் காதுகளுக்குள் மட்டும் பிரத்யேகமாய்ச் சொல்லி வைத்திருந்தாரோ – என்னவோ, கைகளில் ஆறு., தலையில் நாலு என்ற ரீதியில் பார்சல்களை வாங்கித் தெறிக்க விட்டுக் கொண்டிருந்தனர் ! நம்மூர் டாஸ்மாக்களில் விடுமுறை தினங்களுக்கு முந்தைய நாட்களில் நடக்கும் WWF ரகளைகளை நிறையப் பார்த்திருக்கிறேன் ; ஆனால் அதெல்லாம் ஜுஜுப்பி என்று சொல்லும் விதமிருந்தன அந்த 2 உணவகங்களிலும் மக்கள் நடத்திக் கொண்டிருந்த மல்யுத்தங்கள் ! எனக்கு முன்னே குறைந்தது 400 பேர் நிற்பது தெரிய – மான்ட்ரியாலின் மொத்தக் கால்நடை எண்ணிக்கையும் அங்கே கொணர்ந்திருந்தாலுமே கூட, காத்திருந்தோரின் பசிகளுக்கு ஈடு தரப் பற்றாது என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது ! "பசிக்குப் புசிப்பது ஒரு பக்கமெனில், இது பீதிக்குப் புசிப்பதாயுள்ளதே!! “ச்சீ...ச்சீ... இந்த பர்கர்லாம் கசக்கும்!” என்றபடிக்கே அத்தனை நீள லைனில் நிற்கச் ஜீவனின்றி ரிவர்ஸ் கியரைப் போட்டேன்! பவுசாய் மண்டை சமாதானம் சொல்லி விட்டிருந்தாலும் காற்றோடு விரவியடித்த பர்கர்களின் மணமும், சிக்கனின் சுகந்தமும் (!!) என் பசியைத் கூடக் கொஞ்சம் தூண்டிட, வாயெல்லாம் ஜலப் பிரவாகம்! ‘அத்தினி பயலுக்கும் இன்னிக்கு பேதி தாண்டியோவ்!‘ என்றபடிக்கே அந்தாண்டை நகர்ந்தேன்!
மனுஷனின் மனம் தான் எத்தனை வேகமாய் தனது priority களை மாற்றியமைத்துக் கொள்கிறது! என்பதை அந்த நொடியில் நினைக்காதிருக்க முடியவில்லை ! அதிகாலையில், பனிப்புயலுக்கு முந்தைய குளிர்வேளையில் அந்த அங்காடிக்குப் போவது பெரும் லட்சியமாய்த் தோன்றியது ! ஹோட்டலிலிருந்து ஏர்போர்ட் கிளம்பத் துடித்துக் கொண்டிருந்த தருணத்திலோ – ‘ஒரு டாக்ஸி கிடைச்சால் போதும் தெய்வமே... இந்த ஜென்மத்திலே வேற விண்ணப்பமே போட மாட்டேன்!' என்று உருகியது மனசு. டாக்ஸியில் அந்தப் பனிப் பொழிவினில் சிக்கித் தவித்த போதோ – ‘தெய்வமே.... என்னை ஏர்போர்ட் வரைக்கும் முழுசாக் கொண்டு போய்ச் சேர்த்திடேன் – ப்ளீஸ்! என்று பிரார்த்தனையின் திசை மாறியிருந்தது ! ஆனால் இதோ, இப்போது விமான நிலையத்தினுள் ஆபத்துக்கள் ஏதும் லேது என்ற நிலையில் ஒற்றை பர்கருக்காக இஷ்ட தெய்வங்களையெல்லாம் சம்மன் அனுப்பிக் கூப்பிடத் தோன்றிட – சிரிப்பதா ? அழுவதா ? என்று தெரிந்திருக்கவில்லை! “ரைட்டு... லண்டன் புரோக்ராம் கோவிந்தா... புத்தக விழா ப்ளான் எல்லாம் பீப்பீபீ...!” இனி இங்கேர்ந்து கிளம்பச் சாத்தியப்படும் வரைக்கும் கட்டையைக் கிடத்த ஏற்பாடு பண்ணனும் என்பது புரிபட, ஓரமாய்ப் படுக்க இடம் தேடும் வேட்டையில் இறங்கினேன்.
விமான நிலையத் தரைகளில் தூக்கத்தைத் தேடுவதென்பது எனக்கொரு புது அனுபவமே அல்ல தான் ! ஸ்டைலாக காதிலே ஹெட்-போனை மாட்டியபடிக்கே இப்டியும், அப்டியுமாய் பிட்ட சர்க்கஸ் செய்தபடிக்கே ஏர்போர்ட்டின் இருக்கைகளில் 'தேவுடா' காப்பதெல்லாம் நமக்கு ஒத்துவரா விஷயங்கள் ! ‘அக்கடா‘வென கட்டையைக் கிடத்தும் சுகம் வேறெதிலும் வராது என்பதால் – நள்ளிரவைத் தாண்டிய காத்திருப்புகளெனில் கிடைக்கும் முதல் ஓரத்தில் நீட்டி விடுவதுமுண்டு ! இன்றைக்கோ மான்ட்ரியால் விமான நிலையத்தின் அந்தப் பத்தாயிரத்துச் சொச்சம் பேருக்குமே அது தான் மார்க்கம் எனும் போது – ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் தரையில் ஜனம் உருண்டு கொண்டிருந்தது ! ஒரு ஓரத்தில் தரையோடு தரையான ப்ளிக் பாய்ண்ட் ஃப்ரீயாக இருப்பது கண்ணில் பட – “தெய்வமே!” என்றபடிக்கு அங்கே போய் என் பெட்டியைக் கிடத்தி விட்டு வேகம் வேகமாய் செல்லை சார்ஜில் போட்டு வைத்தேன் ! நமக்கு வயிறு ரொம்புதோ - இல்லியோ ; செல்லின் பேட்டரி ரொம்பாட்டி ரொம்பவே ராவடியாகிப் போகும் அல்லவா ? சரி... படுக்கலாம் என்று தீர்மானித்த போது தான் அன்றைய பொழுது ப்ரிண்டிங் மிஷின் inspection-ஐத் தொடர்ந்து அப்போது அச்சான சில தாட்களை மாதிரியாய் எடுத்து, பெட்டிக்குள் மடித்து வைத்திருப்பது நினைவுக்கு வந்தது – ஊருக்குத் திரும்பிய பிற்பாடு அந்த மிஷினை வாங்கிடவுள்ள கஸ்டமரிடம் காட்ட வேண்டிடும் பொருட்டு ! ஆனால் 'ஆபத்துக்குப் பாவமில்லை' என்றபடிக்கே பரபரவென்று பேப்பர்களை வெளியே எடுத்து அழகாய் விரித்து அதன் மேல் படுத்துக் கொண்டேன். எனக்குக் கொஞ்சம் தள்ளி ஜிலீர் தரையில் கிடந்த மனுஷனின் பார்வையில் செம கடுப்பு அப்பட்டமாய்த் தெரிந்தது ! சரி... தூங்க முயற்சிப்போம் என்றபடிக்கே கண்ணை மூடினால் அத்தனை விளக்குகளும் ‘ஜிலோ‘வென்று ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி நிற்கும் நிலையில் தூக்கமே பிடிக்கவில்லை. பற்றாக்குறைக்கு நள்ளிரவை நெருங்கும் வேளையில் குளிர் ஊசியாய்க் குத்தத் தொடங்க, போட்டிருந்த ஸ்வெட்டரெல்லாம் பற்றவில்லை. இப்படிப் புரண்டு, அப்படிப் புரண்டு என்று என்ன கூத்தடித்தாலும் குளிரைக் கழற்றி விட முடியவில்லை ! ‘அதிசயங்களுக்கு என்றுமே பஞ்சமிராது!‘ என்பதை அப்போது ஆண்டவன் yet again நிரூபித்துக் காட்டினார்! திடீரென்று என் மேல் ஒரு சிகப்புக் கம்பிளிப் போர்வை ‘பொத்‘தென்று விழ – ‘யார்டா அந்த கனேடிய கிருஷ்ண பரமாத்மா ??‘ என்று நிமிர்ந்து பார்த்தால் AIR CANADA-வின் சில பிரதிநிதிகள் சில நூறு கம்பிளிகளை அங்கே குளிருக்குள் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருந்த ஜனத்தினிடையே விநியோகம் செய்து கொண்டிருந்தனர். பெரிய போர்வையெல்லாம் கிடையாது தான் ; ஆனால் அசல் Wool என்பதால் அற்புதமாய்க் குளிர் தாங்கியது ! இன்றுவரைக்கும் என்னிடம் பத்திரமாயுள்ளதொரு பொருள் ! தலை வரைக்கும் பொத்திக் கொண்டு ஃபோனை எடுத்து நோண்டத் தொடங்கினேன்!
ஊருக்கு ஃபோன் அடித்து, மதியக் குட்டித் தூக்கத்திலிருக்கக் கூடிய எனது டிராவல் ஏஜெண்டை உசுப்பி விட்டேன்! ‘இன்ன மாரி... இன்ன மாரி... எல்லாமே கேன்சல் ஆகிப் போச்சு! இன்ன மாரி... இன்ன மாரி கொலைப்பசியோட தரையிலே கிடக்கேன்... எப்டிக்கா இங்கேயிருந்து வெளியேறது? டிக்கெட்டை மாத்திக் கீத்தி ஏதாச்சும் பண்ண முடியுமா?‘ என்று அவர் குடலை உருவினேன். என் தம்பியின் காலேஜ் நண்பன் தான் நமது டிராவல் ஏஜெண்டுமே என்பதால் சாவகாசமாய் மொக்கை போட முடிந்தது ! ஆனால் அந்த முனையிலிருந்து எதுவுமே சாத்தியமாகாது ; எதுவானாலும் மான்ட்ரியால் ஏர்-போர்ட்டில் சர்வீஸ் தொடரத் துவங்கும் சமயம், இங்கே தான் மாற்றியமைத்து வாங்கிக்கணும்!‘ என்று அவர் சொல்ல – யாரையாவது ஓங்கி நடுமூக்கில் குத்த வேண்டும் போலிருந்தது ! ஆனால் இங்கே தவறு யார் மீதுமே இல்லை எனும் போது, மிஞ்சிப் போனால் என்னை நானே குத்திக்கலாம் என்பது மட்டுமே option ஆகயிருந்தது. சரியென்று வரிசையாய் ஊரில் உள்ளோருக்கு சேதியைச் சொல்லி விட்டு தூக்கத்தைத் தேடிட மறுமுயற்சி செய்தேன்! சகலத்தையும் மீறி அசதி என்னை அரவணைக்க இரவு ஒரு மணிவாக்கில் தூங்கிப் போனேன்!
ஆனால் சகஜ சூழலில் இல்லை என்பது தலைக்குள் ஓங்கிப் பதிவாகியிருக்கும் நிலையில் தூக்கம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை ! எழுந்து பார்த்தால் மணி இரண்டே முக்கால்! என்னைப் போலவே மக்கள் குறட்டை விட்டுக் கிடப்பார்களென்று பார்த்தால் – நோ ! ஒரு கணிசமான ஜனத்திரள் ஆஞ்சநேயர் வால் போலாக செம நீளமான 2 க்யூக்களில் வரிசைகட்டி நிற்பது தெரிந்தது ! ‘ஆத்தாடியோவ்... க்யூ நிற்குதே!‘ ஏதாச்சும் தகவல் தெரிஞ்சு தான் நிற்குறாங்களோ?‘ என்றபடிக்கே பதறியடித்து எழுந்து போய் அந்தக் க்யூவின் வாலில் ஐக்கியமாகிக் கொண்டேன்! எனக்கு முன்னேயோ இரண்டு இளசுகள் அந்த ராத்திரியிலும் செம ஜாலியாய் 'லவ்ஸ்' செய்து கொண்டிருந்தன ! என்னைப் போல பெருசாய் லக்கேஜ் இல்லை அவர்களிடம் ; அதே போல அந்தப் பகுதிகளது சீதோஷ்ணங்களுக்குப் பழக்கபட்டதாலோ – என்னவோ பெருசாய் அலட்டிக் கொண்டதாகவும் தெரியக் காணோம்! லைனில் நின்றபடிக்கே அடித்துப் பிடித்து, ஒரே ரொமான்ஸ் மூடிலிருக்க, எனக்கோ காதில் புகை வராத குறை தான் ! ‘இங்கே என்ன நடந்துக்கிட்டிருக்கு? இவனுக பாட்டுக்கு மிக்சர் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்களே ?‘ என்றபடிக்கே லைனில் எங்களுக்கு முன்னே நிற்கும் ஜனங்களை எண்ண முடிகிறதாவென்று பார்த்தேன்! ஊஹும்... குறைந்தபட்சம் ஒவ்வொரு லைனிலுமே 250 பேருக்குக் குறையாது நிற்பதால், தகவல் கவுண்டரில் ஆளுக்கு 2 நிமிடங்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட, எனது முறை வருவதற்கே பொழுது விடிந்திடும் என்பது உறைத்தது! ‘இந்தியாவிலே எல்லாமே க்யூ தான்... எதிலேயும் விறுவிறுப்பாச் செயல்படறதில்லே!‘ என்று புலம்பும் மக்களை அன்றைக்கு நான் சந்தித்திருந்தால் நிச்சயமாய் சில்லுமூக்குகளைச் சிதறடித்திருப்பேன் ! அத்தனை பெரிய ஏர்-போர்ட்டில் ஒரு இயற்கை இடரைத் தொடர்ந்து தகவலளிக்க மொத்தமே இரண்டே பெண்கள் தான் பணியமர்த்தப்பட்டிருந்தனர் ! இயன்றமட்டிலும் அத்தனை பேருக்கும் பொறுமையாய்ப் பதில் சொல்ல அந்த இருவருமே முயன்றாலும், நிமிஷத்துக்கு நிமிஷம் நீண்டிடும் க்யூவானது பொறுமையிழந்து கொண்டிருந்தது ! என்ன ஒரே saving grace – நடுவே ஒரு மேஜையில் விதவிதமாய் பிஸ்கெட்கள்; வாழைப்பழங்கள் & பருக ஏதாவதென ஒரு சிலர் கொண்டு வந்து அடுக்கிக் கொண்டே இருந்தனர் ! நம்மூராய் இருந்திருப்பின் – “இது எனக்கு; இது என் புள்ளைகளுக்கு; இது எங்க அத்தாச்சிக்கு; இது ஊரிலேயிருக்கிற எங்க பெரியம்மாவுக்குப் பக்கத்து வீட்டுப் பாப்பாவுக்கு!” என் மக்கள் வழித்திருப்பார்கள் ! ஆனால் அங்கேயோ தேவைக்கு மட்டுமே ஜனம் கைவைத்தது – நாசூக்காய்! நானும் என் பங்குக்கு வாழைப்பழத்தையும் (!!!) ஒரு பிஸ்கெட்டையும் எடுத்தபடிக்கே லைனுக்குத் திரும்பிய போது தான் நம்ம கவுண்டரின் தீர்க்கதரிசனம் என்னைப் புல்லரிக்கச் செய்தது ! ஒற்றை வாழைப்பழத்தின் நிஜமான மதிப்பு என்னவென்பதை அன்றைக்கே உணர்ந்திருந்து உலகுக்கே எடுத்துச் சொன்ன ஞானம் அவருக்கன்றி வேறு யாருக்கு வரும் ? தலைவா...நீர் தேவுடு !!
மணி அதிகாலை 4-ஐ நெருங்கிய போது லைனில் நிற்கவே கால்கள் சண்டித்தனம் செய்தன ! பெட்டி மேலே அவ்வப்போது பிட்டத்தை அமர்த்திக் கொண்டாலும் செமத்தியாய் நோவியது ! வெளியே பனிப்பொழிவு நின்றிருந்தது ! காற்று மட்டும் இன்னமும் சுழற்றியடிப்பது தெரிந்தாலும் – அதன் மத்தியில் கணக்கற்ற துப்புரவுப் பணியாளர்கள் வெளிச்சாலையில் அந்த அகால வேளையிலும் பணியாற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது ! ‘என்னவொரு திடமனசு... என்னவொரு கடமையுணர்ச்சி‘ என்றபடிக்கே பார்வையை 360 டிகிரிக்கு சுழல விட்டேன் – அயர்ச்சியைக் கொஞ்சமாச்சும் தடைபோட ஏதாவது கண்ணில் படுமா ? என்ற ஆர்வத்தில் ! எனக்கு முன்னே நடந்து கொண்டிருந்த 'லவ்' ரவுஸைக் காணச் சகிக்காமலும் அப்பாலிக்கா பார்த்திட முயன்றேன் என்றும் சொல்லலாம்!
அப்போது தான் உயரமாய், வெட வெடவென ஒடிசலானதொரு பெண்மணி ப்ரெஷ்ஷாக – டக்... டக்.. டக்கென்று கையில் ஒரு பேக் சகிதம் நடைபோட்டு வருவதைக் கவனித்தேன். சிகப்பு யூனிபார்ம் – அவர் ஏதோவொரு பொறுப்பிலிருக்கும் பெண்மணி என்பதை உணர்த்தியது ! ஏனென்று இன்னமுமே சொல்லத் தெரியலை – ஆனால் உள்ளுக்குள் ஒரு gut feel சொன்னது, இந்தப் பெண்மணி புதுசாய் ஒரு கவுண்டரைத் திறந்து அமரப் போகிறாரென்று ! திடு திடுப்பென லைனிலிருந்து அகன்று - நெடு நெடு பெண்மணியைப் பின்தொடர்ந்து போய் ஒருக்கால் பல்ப் வாங்கிடும் பட்சத்தில், லைனில் அதுவரையிலுமான 2 மணி நேரக் காத்திருப்பு வியர்த்தமாகியிருக்குமென்று புரிந்தது ! ஆனாலும், உள்ளுக்குள் ஏதோவொரு பட்சி அடித்துச் சொன்னது – இது 'பல்ப்' சமாச்சாரம் ஆகாதென்று ! பெட்டியைத் தூக்கிக் கொண்டு மறைகழன்ற பயலாட்டம் ஒரே ஓட்டமெடுத்தேன் அந்தப் பெண்மணி நடக்கும் திக்கில் ! என் யூகம் தப்பாகியிருக்கவில்லை ; சரேலென்று ஒரு கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்தார் – ‘This line is open too!’ என்று குரல் எழுப்பினார். அவர் வாய் மூடுவதற்குள் “உள்ளேனுங்க அம்மணி!” என்று அவர் முன்னே அலாவுதீன் விளக்குப் பூதமாட்டம் ஆஜராகி நின்றேன் ! அதற்குள் ஆங்காங்கே நின்றும், படுத்தும் கிடந்த ஜனங்கள் தெறித்தடித்து என் பின்னே குழுமத் துவங்கினர் ! ‘ஹி...ஹி...ஹி...‘ எத்தினி ரயில்வே ஸ்டேஷன் கவுண்டர்களைப் பார்த்திருப்போம்; எத்தினி தியேட்டர்களில் எத்தினி பாப்கார்ன் வாங்க ஏறிக் குதிச்சிருப்போம் ; எத்தினி பரோட்டா கடைகளிலே பார்சல் கட்டி வாங்க முண்டியடிச்சிருப்போம்... எங்ககிட்டேவா?‘ என்று உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்கிய போது – கடந்த 24 மணி நேரங்களுக்குள் புன்னகைக்கக் கிடைத்த முதல் முகாந்திரம் இதுவே என்பது பதிவானது! வேக வேகமாய் என் பாஸ்போர்டை எடுத்து நீட்டியபடிக்கே – ‘லண்டன் மேலே போகுது... ரெம்போ அர்ஜெண்ட் பிசுனஸ் கீது..! ஏதாச்சும் பார்த்துச் செய்யுங்கோ மேடாாம்!!‘ என்று பஞ்சப் பாட்டைப் பாடினேன் ! ‘ஏர்போர்ட் மறுக்கா பணியாற்றத் தொடங்கவே இன்னும் நேரமாகும் ; அதுவரைக்கும் பறக்கப் பறக்காதே லே !! என்று அம்மணி தலையில் தட்டும் என்று தான் எதிர்பார்த்திருந்தேன் ! ஆனால் அவர் திருவாய் மலர்ந்த போது – என் புள்ளை முதல்வாட்டி பள்ளிக்கூட மேடையில் ஏறி நர்சரி ரைம்ஸ் சொல்வதைக் கேட்ட போது தோன்றிய அதே பரவசம் பாய்ந்தது உள்ளுக்குள் ! ‘Montreal Airport will be operational from 6 in the morning!’ என்றார் !! திகைத்துப் போய் விட்டேன் – இத்தனை ராட்சஸப் பனிப்பொழிவையும் ராவோடு ராவாய்ச் சமாளித்து விட்டார்களே என்று !! அவர் சொன்னதைக் கேட்டு என் பின்னே லைனில் நின்ற மக்கள் ‘யேயயயய‘ என்று கூக்குரலிட – எனக்கும் கத்த ஆசையிருந்தாலும், ‘கன்ட்ரோல்.. கன்ட்ரோல்... நாமெல்லாம் இம்மாம்பெரிய பிசுனசுமேன் ; கடுவன்பூனைக்குப் பக்கத்துவூடு... அநாவசியமா பல்லைக்காட்டப்படாது!‘ என்று மனசு தடா போட்டு விட்டது !
‘அம்மணிங்கோ... எப்புடியாச்சும் என்னை லண்டனுக்கு அனுப்புங்களேன்னு‘ கெஞ்ச – கம்ப்யூட்டரையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து விட்டு – உதட்டைப் பிதுக்கினார் ! எனக்கோ வயிற்றுக்குள் சிமெண்ட் மிக்சர் ஓடுவது போலொரு உணர்வு ! “மான்ட்ரியாலிலிருந்தே நீ இலண்டன் பயணமாகனும்னாக்கா இன்னிக்கு ராவுக்குத் தான் முடியும் ! ஆனால் அந்த ப்ளைட் புல்... சீட் சுத்தமாயில்லே !‘ என்றார் ! ஒரே நொடியில் எனக்குள் அடுத்த 2 நாட்களையும் அந்த ஏர்போர்ட் மூலையில் செலவிடணுமோ ? என்ற பீதி தாண்டவமாடியது ! அதற்குள் அவரே- "உன்னை டொராண்டோவுக்குப் போகும் காலை ஃப்ளைட்டிலே போட்டால் அங்கேயிருந்து ராத்திரி கிளம்பும் லண்டன் விமானத்திலே சீட் தர முடியும் ! என்ன ஒரே சிக்கல்-பகல் முழுவதும் நீ டொராண்டோ ஏர்போர்ட்டில் 'தேவுடு' காக்கணும்!" என்றபடியே நிமிர்ந்து பார்த்தார் ! 'தாயே.... மகமாயி.... நிறைய புள்ளைகுட்டி பெற்று நீ நலமாயிருக்கணும்... முதல்லே அந்த ரூட்டுக்கு என் டிக்கெட்டை மாற்றி இந்த ஊர்லேர்ந்து கிளப்பிக் கூட்டிப் போயிடு ! புயல் இல்லாத ஊரிலே பொரிகடலை சாப்பிட்டாச்சும் பகல் பொழுதைக் கழித்துக் கொள்கிறேன்!' என்று கோரிக்கை வைக்க, மளமளவென்று வேலை ஆகியது! இந்நேரத்துக்குள் பரபரவென இதர ஏர்லைன் கவுண்டர்களும் செயல்படத் துவங்கியிருக்க, அங்கே நிலவிய ஒட்டுமொத்த இறுக்கமும் தளரத்துவங்குவது புரிந்தது !! நானோ லாட்டரியில் ஜாக்பாட் கெலித்தவனைப் போல போர்டிங் பாஸை ஏந்திப் பிடித்தபடியே செக்யூரிட்டி சோதனை நோக்கி நடைபோட்டேன்! அங்கே லைனில் எனக்கு முன்னே தொட்டுப் பிடித்து ஆடிக் கொண்டிருந்த இளசுகளோ ஏதோவொரு க்யூவின் கட்டக்கடைசியில் வாட்டமான முகங்களோடு நிற்பதைப் பார்க்க முடிந்தது! 'வர்ட்டா தம்பி !' என்று அவனை நோக்கிக் கையசைத்து விட்டு, செக்யூரிட்டியைத் தாண்டி, அதிகாலையிலான டொராண்டோ விமானத்தில் ஏறி உட்கார்ந்த போது என் அதிர்ஷ்டத்தை எனக்கே நம்ப முடியவில்லை ! ஒரு மாதிரியாய் விமானமும் அந்த வெண்போர்வை ரன்வேயில் வழுக்கிய படியே take-off ஆன போது ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன்-கடந்த ஒன்றரை நாட்களில் என் கேசத்தில் ஒரு ஆயிரம் முடிக்கற்றைகளையாவது காவு வாங்கிய மாண்ட்ரியலை ! 'போதும்டா சாமி உங்க சகவாசம்' என்ற படிக்கே விடைகொடுத்தது; அப்பாலிக்கா டொராண்டோவில் பளீரென்று டாலடித்த சூரிய ஒளியில் தரையிறங்கியது ; அன்றைய பகல் பொழுதினை தின்னும், தூங்கியும் கழித்தது ; அன்றிரவு லண்டனுக்கான விமானத்தில் ஏறியமர்ந்தது என்று எல்லாமே fast forward-ல் நடந்து முடிந்தது ! இடைப்பட்ட நேரத்தில் லண்டன் புக் ஃபேரில் நான் சந்திக்கவிருந்த பதிப்பகங்கள் ஒவ்வொன்றுக்குமே மின்னஞ்சல்களைத் தட்டி விட்டேன் -"பனி மேட்டரு... பயணம் சொதப்பிட்டாப்லே... அப்பாய்ண்மெண்டை அடுத்த நாளைக்கு மாத்திக் குடுத்தா கூலாயிடுவாப்டி!" என்று ! பாதிப் பேர்-"சாரி; நாங்க நாளை புத்தகவிழாவில் இருக்க மாட்டோம் ; கடைசி நாள் என்பதால் சீக்கிரமே பேக் செய்து புறப்பட்டு விடுவோம்!' என்று பதிலளிக்க - நமது Fleetway கதைகள் சார்ந்த பதிப்பகத்தாரோ 'Sure .... no problems ! See you tomorrow ! ' என்று பதிலளிக்க எனக்கு செம குஷியாகிப் போச்சு ! 'இத்தனை கூத்துக்களுக்கு அப்புறமும் முக்கியமானவர்களை சந்திக்க சாத்தியமாகுதே - சூப்பரப்பு!' என்றபடியே தூக்கத்தில் ஆழ்ந்தேன்!
விடிந்த போது பளபளக்கும் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் காத்திருந்தது ! என் தமக்கையின் மகள் சமீபமாய் லண்டனுக்கு மாற்றலாகிக் குடியேறியிருக்க அவர்கள் வீட்டில் தங்கியபடி புக்-ஃபேருக்கு விசிட் அடித்து விட்டு, அன்று ராவே இந்தியா திரும்புவது என்பதே திட்டமிடல் ! என் பிறந்த நாளுக்கு என்ன பாடு பட்டேனும் வீடு திரும்பிட வேண்டுமென்ற வைராக்யத்தில் லண்டனில் மருமகளின் குடும்பத்தோடு மேற்கொண்டு ஒரு நாளைச் செலவிடக் கூட மனசு ஒப்பவில்லை ! So பாஸ்ப்போர்ட்டில் 'லொஜக்' என்று சீல் போட்டு வாங்கிய கையோடு - செக்-இன் செய்த பெட்டியைச் சேகரிக்கக் காத்திருந்தேன் ! நின்றேன்-நின்றேன்-நின்றேன்-அந்த லக்கேஜ் பெல்ட் ரங்க ராட்டினம் சுற்றி முற்றிலுமாய் ஓய்ந்து போகும் வரை ; ஆனாலும் நம்மள் கி பொட்டி கண்ணில் படவில்லை ! அதற்குள் ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் சீருடையுடனானதொரு பெண்மணி என்னிடம் வந்து "மிஸ்டர் செலந்திரபேன்டியான் விஜாயான்?" என்றாள் ! 'ஊம் ' என்று மண்டையை ஆட்ட - 'Sorry sir... your baggage has not made the flight ! அது இன்னமுமே மாண்ட்ரியாலில் தானுள்ளது ! என்று குண்டைத் தூக்கிப் போட்டார் ! 'நாசமாய்ப் போச்சு... நான் குளிச்சு 2 நாள் ஆச்சுடிம்மா... என் கையிலே கர்ச்சீப் கூடக் கிடையாது !' என்று பதற, அவரோ "பொட்டியை எங்கே கொண்டு வந்து தரணும்? நாளை வந்திடும் !" என்றார் ! எரிச்சலில் - "நாளைக்கு நான் 6000 மைல் தாண்டி ஊர் போய்ச் சேர்ந்திருப்பேனென்று" சொல்ல-" No Problems... அருகாமையிலுள்ள ஏர்போர்ட் எதுன்னு சொன்னாக்கா அங்கேயே அனுப்பிடறேன் ! போய் சேகரிச்சுக்கோங்க!" என்றவரிடம் அதற்கு மேல் சண்டையிட தம் இருக்கவில்லை ! "ம-து-ரை" என்று எழுதித் தந்து விட்டு 'அன்பே வா' எம்.ஜி.ஆர் பாணியில் கையில் ஒரு ப்ரீப் கேஸோடு மட்டும் புறப்பட்டேன் ! வெளியே என்னை அழைத்துப் போகக் காத்திருந்த மருமகளுக்கும், மாப்பிள்ளைக்கும், அவர்களது குட்டி டிக்கெட்டுக்கும் என்னைப் பார்த்த நொடியில் சந்தோஷப் பிரவாகம் ! எனக்குமே கடந்த 2 நாட்களது கூத்துக்களுக்குக் பின்னே nearer to family என்ற உணர்வு சொல்ல முடியா நிம்மதியைத் தந்தது ! பற்றாக்குறைக்கு 'இங்கே வெயிலடிச்சாலும், புயலடிச்சாலும் சோத்துக்கோ ; சாய்ஞ்சுக்க இடத்துக்கோ பஞ்சம் இராது சாமி!' என்று உள்மனசு சத்தமின்றிக் குதூகலித்துக் கொண்டது போலும் ! ஆனால் நான் வீசிய கையோடு நடந்து வருவதைப் பார்த்து -"என்னாச்சு?" என்று விசாரிக்க, பொட்டி தொலைஞ்ச கதையைச் சொன்னேன் ! 'ஒண்ணும் பிரச்சனையில்லே; வீட்டிலே உள்ள புது ட்ரெஸ் எதையாச்சும் எடுத்துக்கோங்க ; பெருசா வித்தியாசம் இராது !' என்று மாப்பிள்ளை பெருந்தன்மையுடன் சொல்லிட- எனக்கோ உள்ளுக்குள் ஒரு சன்னமான வருத்தம். முதல்வாட்டி வீட்டுக்கு போகும் தடிமாடு - வெறும் கையோடு போவது பற்றாதென அவர்களிடமிருந்த துணிகளையும் ஆட்டையைப் போடப் போகிறோமே என்று ! அதுமட்டுமில்லாமல் லண்டனில் போடுவதற்கோசரம் பரணிலிருந்து கோட்-சூட்டைத் தூசி தட்டி எடுத்து வைத்திருந்தேன் ! அனால் நமக்கு அந்த பந்தாவெல்லாம் சுகப்படாதென்று பெரும் தேவன் மனிடோவே தீர்மானித்த பிற்பாடு - வழக்கமான 'புல்லட் பாண்டி' வேஷத்திலேயே புத்தக விழாவுக்குப் புறப்படத் தீர்மானித்தேன் ! "முன்கூட்டிய பிறந்த நாள் பரிசென்று" ஒரு ஜீன்ஸையும், புதுச்சட்டையையும் மருமகள் கையில் தந்திட-காலம் தான் எத்தனை ஓடிவிட்டதென்று நினைத்துக் கொண்டேன் ! நண்டு போல இதே மருமகள் கைக்குள்ளும், காலுக்குள்ளும் சுற்றித் திரிந்த 20 வருடங்களுக்கு முந்தைய காலத்தில் பிறந்தநாள் gift-களைத் தருவது எனது வழக்கமாக இருந்தது ! ஆனால் இன்றைக்கோ நண்டுகள் நல்மரமாகி-கரை கடந்த மண்ணில் வேரூன்றி நிற்பதை ரசிப்பதைத் தாண்டி என்ன செய்வது ? மாப்பிள்ளையே என்னை புத்தக விழா அரங்கினில் காரில் இறக்கி விட - ஒரு மாதிரியாய் இத்தனை கூத்துகளுக்குப் பிற்பாடும் இங்கே கால் பதிக்க முடிந்துள்ளதே என்ற சந்தோஷத்தில் வேக வேகமாய் உள்ளே புகுந்தேன்!
ஃ ப்ராங்க்பர்ட் திருவிழாவினை ஒப்பிட்டால் இது அதனில் இருபதில் ஒரு பங்கு கூடத் தேறாது தான் ! ஆனால் நமக்கு வேண்டப்பட்டவர்கள் பலரும் ஆண்டுதோறும் இங்கு வருகை புரிவதால் நம்மளவுக்கு இதுவும் முக்கியத்துவம் பெற்றிடுகிறது ! நேராய் நம்மவரைச் சந்திக்க அவரது ஸ்டாலுக்கு விரைந்தேன் ! கடைசி நாள் என்பதால் ரொம்பவே மிதமான கூட்டம் மட்டுமே ! பாதிப் பேர் ஆங்காங்கே தென்பட்ட சிறு உணவகங்களில் அமர்ந்து ஒரு 'தம்'மைப் போட்டபடிக்கே எதையேனும் கொறித்துக் கொண்டே பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தனர் ! Rebellion என்ற ஸ்டாலில் தூரத்திலிருந்தே என்னைச் சுண்டியிழுக்கும் Fleetway சமாச்சாரங்கள் நிறைய கண்ணில்பட்டன! இன்றைக்கு ப்ரான்கோ பெல்ஜியம் ; இத்தாலி ; ஈஞ்சாரு - என்று எங்கெங்கோ பிரயாணம் செய்து வந்தாலும் நம் துவக்கங்கள் என்றென்றுமே இங்கிலாந்தின் Fleetway-ல் தானே வேர் ஊன்றியுள்ளன ? So அந்த MISTY ; ஒற்றைக் கண் ஜாக் ; பலமுக மன்னன் ஜோ ; JUDGE DREDD போன்ற இதழ்களின் artwork போஸ்டர்களைப் பார்த்த போது - ஏதோ பால்ய நண்பன் ஒருவனை சந்தித்த குஷி ! அங்கே பொறுப்பிலிருந்த நிர்வாகியுமே 'பல நாள் பரிச்சயம்' என்பது போலான நேசத்தை முகமெலாம் நிறைத்திருக்க -அமர்ந்த மறு நொடியே என் ஓட்டை வாயைச் சலசலக்கச் செய்தேன் !
நாம் இதுவரையிலும் முயற்சித்துள்ள Fleetway கதாப்பாத்திரங்களைப் பற்றி விவரிக்கத் தொடங்க-எனது உற்சாகம் அவரையும் தொற்றிக் கொண்டது ! "ஸ்பைடர் போட்டுருக்கீங்களா ? அர்ச்சியுமா ? இரட்டை வேட்டையரா ? செக்ஸ்டன் ப்ளேக்கா ? ஸ்டீல் க்ளாவா ? " என்று கேட்டுக் கொண்டே போக-அவருமே Fleetway காமிக்ஸ்களை ஆராதித்து வளர்ந்தவர் என்பது நொடியில் புரிந்தது ! So ஒரு வியாபார discussion என்ற தொனியில் அல்லாது - ஒரு சக காமிக்ஸ் காதலரோடு அரட்டையடிக்கும் பாணியில் எங்களது அளவளாவல் தொடர்ந்தது ! கதைகளுக்கான ராயல்டி என்னவென்பதை பரஸ்பரம் பாதிப்பில்லா ஒரு தொகையாக நிர்ணயித்த பிற்பாடு -கதைத் தேர்வுகள் எனும் சமாச்சாரத்தினுள் புகுந்தோம் ! அவர்கள் வரிசையாய் மெருகூட்டி, அடுத்தடுத்து வெளியிடவுள்ள Fleetway இதழ்களின் பட்டியலை ஒப்படைத்தார் - ஒரு சில முன்னோட்டப் பக்கங்களோடு ! பற்றாக்குறைக்கு அவர்களது படைப்புகளின் பெரும்பகுதி pdf பைல்களாக ஆன்லைனில் சேமிக்கப்பட்டிருக்கும் தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தி, அங்கேயே அமர்ந்தபடிக்கு அதனில் நமக்கொரு guest login ஏற்பாடு செய்து கொடுத்து - அந்த pdf பைல்களில் எதை வேண்டுமானாலும் திறந்து, வாசித்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தந்தார் ! திக்குமுக்காடச் செய்தது அவரது அன்பு ! அதே சமயம் -"இப்போதே, இங்கேயே உங்களது தேர்வுகளைச் சொல்ல வேண்டுமென்ற அவசியம் நஹி ! சாவகாசமாய் ஊருக்குத் திரும்பிய பிற்பாடு எல்லாவற்றையும் படித்துப் பார்த்த பின்னே கூட சொல்லலாம்!" என்ற போது பிரமிப்பாகயிருந்தது!
மனம் நிறைந்த நன்றிகளைச் சொல்லியபடியே விடைபெற்றவன், நமது படைப்பாளிகள் வேறு சிலரது ஸ்டாலுகளுக்கும் சென்று தலையைக் காட்ட யத்தனித்தேன் ! பெரும்பகுதியினர் கிளம்பியிருக்க - SOLEIL நிறுவனத்து மேடம் மாத்திரமே அங்கிருந்தார் ! அவரிடம் நமது ட்யுராங்கோ விற்பனைகள் பற்றி சந்தோஷமாய்ப் பேசியபடியே கிளம்பி விட்டேன் ! மேற்கொண்டு வேலைகள் ஏதுமிரா நிலையில் மாப்பிள்ளை & மருமகளோடு வீடு திரும்பி, அப்பாலிக்கா அருகிலிருந்த சரவண பவனில் தொந்தியை ரொப்பி விட்டு, இரவு 8 மணிக்கு மும்பை திரும்பும் விமானதைப் பிடிக்க விரைந்தேன்! மலர்ந்த முகத்தோடு காலையில் வரவேற்ற பிள்ளைகளின் முகங்களிலோ மாலையில் மெலிதான நீர்த்தாரைகள் ; எருமைக்கடா போல சுற்றித் திரியும் எனக்கே தொண்டை லைட்டாக அடைக்க, விடைபெற்று மறுநாள் மும்பை ; அங்கிருந்து மதுரை; அப்பாலிக்கா சிவகாசி என்று திரும்பினேன் - இப்போதுமே லக்கேஜ் இல்லாத லட்சுமணபாண்டியனாய் !
இந்த 2 பாகப் பதிவின் காரணப் புள்ளியே தலைகாட்டப் போவது இனி தான் எனும் போது - இத்தனை நீட்டி முழக்கிய என்னைச் சாத்த இஷ்டப்பட்ட துடைப்பங்களையெல்லாம் தூக்கிடலாம் தான் ! ஆனாக்கா "எதைச் சொல்றதாயிருந்தாலும் ஒரு ஃப்ளோவா சொல்ற சுகமே தனி !!" என்பதை மூதறிஞர் ரோபோ ஷங்கர் நமக்கு உணர்த்தியுள்ளாரென்றோ ? ஊருக்குத் திரும்பிய பிற்பாடு-Fleetway கதைத் தேர்வுகளில் மும்முரமாகினேன் ! நமது ஜம்போ காமிக்ஸின் சீஸன் 1-ல் இயன்றமட்டிலும் இவற்றை நுழைக்கும் உத்தேசத்தில் இருந்தேன் ! So வேக வேகமாய் வாசிப்புகள் துவங்கின... தொடர்ந்தன ! அந்நாட்களில் நாம் திகிலில் சிறுகதைகளாய் வெளியிட்டதெல்லாமே MISTY என்ற வாரயிதழில் வந்த சிறுகதைளையே ! அதனில் தொடராக ஓடிய சில பல நெடுங்கதைகளைத் தற்சமயம் தொகுப்புகளாக வெளியிட்டிருந்தனர் ! பரபரப்பாய் அவற்றைப் படித்துப் பார்த்தேன் ! MONSTER என்றதொரு மிக நீளமான தொடர் - சுமார் 190 பக்க நீளத்துக்கு ஓட்டமெடுக்க அதனையும் சுவாரஸ்யமாய்ப் படித்தேன் ! இடையிடையே JUDGE DREDD கதைகள் ; ஒரு கௌபாய் சாகஸம் ; அப்புறம் முதலாம் உலகயுத்தம் சார்ந்ததொரு நெடும் கதை வரிசை என்று ஏகத்துக்கு pdf களை டவுன்லோடு செய்து வாசித்த வண்ணமே இருந்தேன் ! ஆனால்... ஆனால்...


......நமது அந்நாட்களது ரசனைகளுக்குக் கச்சிதமாய் பொருந்திய இந்தக் கதைகளை தற்போது நாம் எவ்விதம் ஏற்றுக் கொள்வோமோ ? என்ற பயம் எழுந்தது ! Make no mistakes - அந்தப் படைப்புகள் எல்லாமே ஏ-ஒன் ரகங்களே ! ஆனால் தற்சமயமாய் நாம் பயணித்து வரும் கௌ-பாய் ; கிராபிக் நாவல்கள் போன்ற திக்கில் இவை தடதடக்கவில்லை என்பதே நெருடியது ! 'CHARLEY'S WAR' என்ற பெயரில் வெளிவந்திட்ட முதல் உலகயுத்தம் சார்ந்த கதைகள் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தன ; ஆனால் யுத்தம் என்றாலே 'சத்தம்... மூச் !' என்று நீங்கள் உறுமிடுவதால் அக்கட கவனம் சாத்தியப்படவில்லை ! "Judge Dredd போடலாமா ?" என்ற கேள்வியோடே-இன்ன பிற சயின்ஸ் பிக்ஷன் நாயகர்களையும் இணைத்து பதிவொன்று போட்டேன்... "பிடுங்குகிற ஆணியை நிகழ்காலத்திலேயே பிடுங்குடாப்பா !" என்று பொங்கி விட்டீர்கள் ! ஒட்டு மொத்தமாய் நீங்கள் thumbs down என்று சொல்லிட - அந்த கேட்டும் பூட்டியது புரிந்தது ! இதற்கு மத்தியில் நமக்கு ஏற்கனவே பரிச்சயமான ஒற்றைக்கண் ஜாக் + இயந்திரன் + விசித்திர மண்டலம் (Thirteenth Floor) கதைகள் கண்ணில் பட-இவை நிச்சயமாய் ஒற்றை இதழினில் தொகுப்பாக்கிட சுகப்படுமென்று தீர்மானித்தேன் ! பரபரவென்று 'இதில் இத்தனை... அதில் அத்தனை..." என பக்க எணிக்கைகளைத் தீர்மானித்த கையோடு அவர்களிடம் சொல்ல, சந்தோஷமாய் சம்மதித்தார்கள் ! ஜம்போவின் 'The Action Special' ஜனித்தது இவ்வாறுதான்! "இந்த ஒற்றை இதழ் மட்டும் தானா ? இப்போதைக்கு இது போதுமா ?" என்று அவர்கள் கேட்ட போது எனக்கு ரெம்பவே தர்மசங்கடமாயிருந்தது ! "இத்தனை கதைகளிருந்தும் நமக்கு சுகப்படுவதாய் எதையுமா தேர்வு செய்ய முடியாது போய்விடும்?" என்ற கடுப்பில் இன்னோரு முறை அவர்களது தளத்தினுள் புகுந்து ஃபைல்களை பொறுமையாய் அலசினேன் ! அப்போது கண்ணில்பட்டது தான் "The Bendatti Vendetta"!

'அட... புராதனம் அல்லது sci-fi என்ற கதைகளுக்கு மத்தியில் இது ஏதோ வித்தியாசமாய்த் தென்படுகிறதே !' என்றபடிக்கே அதை மேலோட்டமாய்ப் புரட்ட - தெறிக்கும் அந்த ஆக்ஷனும், அந்த மாறுபட்ட சித்திர பாணியும் மெர்சலாக்கியது ! இது நிச்சயமாய் நமக்கு ஓ.கே.வாகிடும் என்ற நம்பிக்கையில் அவசரம் அவசரமாய் இதையுமே நமது தேர்வாக்கி, படைப்பாளிகளுக்கு சொன்னேன் ! அதற்கப்புறம் நடந்தது தான் தெரியுமே - "வஞ்சம் மறப்பதில்லை" என்ற நாமகரணத்தோடு அட்டவணையில் இடம் பிடித்து, இதோ இம்மாதம் உங்களில் சிலரது மனங்களிலாவது இடமும் பிடித்துள்ளது ! So நான் பிடிக்க முனைந்த பிள்ளையாரே வேறு ; ஆனால் இறுதியில் அது மலைக்குரங்காகிப் போய்விடக்கூடாதே என்ற ஆர்வத்தில் /ஆதங்கத்தில் அவசரமாய்ப் பிடிக்க முயற்சித்தபோது பலனானது ஸ்டைலான இந்தப் பிள்ளையாரே ! ஒன்றரை வாரங்களுக்கு முன்பாய் "வஞ்சம் மறப்பதில்லை" கதையைத் தேர்வு செய்த லயன் கி.நா.டீமுக்கு நன்றிகள்" என்று இங்கே நீங்கள் பதிவிட்டதை வசித்த போது என் மனதில் நிழலாடியது தான் மேற்படி மேற்படி பதிவு(களும்), சார்ந்த நினைவுகளும், சிந்தனைகளும் ! பெரும் ஆராய்ச்சி செய்தோ; பெரும் அலசல்களைச் செய்தோ இந்தக் கதையை "டீம்" (ஹி!ஹி!) தேர்வு செய்திடவில்லை ! எப்போதும் போல கொஞ்சம் வாசிப்பு ; கொஞ்சம் gutfeel ; கொஞ்சம் நல்லதிர்ஷ்டம் ! அவை கெலிக்கும் போது -"நான்தேன்... நான்தேன்..." என்று கழுத்தை நீட்டிக் கொண்டு - முன்வரிசைக்குப் பாயலாம் ! அவை சொதப்பும் போது - கன்னத்தில் மருவோடு தெலுங்கானா பக்கமாய் ரயில் ஏறிடலாம் ! எப்படிப் பார்த்தாலும் ஜாலியான பிழைப்பு தானே ?
So Thus Ends the 2 part பதிவு ! "எலிவால் நீளத்துக்கான சமாச்சாரத்தைச் சொல்ல 2 வாரப் பதிவுகளா ? நீ நல்லா வருவே !" என்று மானசீகமாயும், உரக்கவும், எழுத்துக்களிலும் வாழ்த்தப் போகும் நண்பர்களுக்கு முன்கூட்டிய நன்றிகள் ! இந்தப் பதிவின் தலைப்பை இக்கட ஒருவாட்டி நினைவு கூர்ந்து கொள்ளுங்களேன் - பொருத்தமாயிருக்கக்கூடும் ! "நியூஸிலாந்திலே ஷூட்டிங் வைக்காட்டி, நான் எப்போ நியூசிலாந்தை பார்ப்பது?" எனும் விவேக்கைப் போல - 'நான் என்றைக்குக் கனடா கதையை அவிழ்த்து விடுவதாம் ?' எது எப்படியோ - இரு ஞாயிறுகளை இந்த வாசிப்புக்கென செலவிட்ட நண்பர்களை கும்பிட்டுக்கிறேனுங்கோ ! And தீபாவளி மலர் பணிகள் பிசாசாய் பயமுறுத்த-அப்படியே அந்தத் திக்கில் குதிரையை விடறேன் இப்போதைக்கு !
அப்புறம் கடந்த சில நாட்களது லீவு பற்றி கொஞ்சம் கழித்து எப்போதாவது எழுதுகிறேனே... கையில் 'தம்' இல்லை இதற்கு மேலும் பேனா பிடிக்க ! இந்தப் பதிவின் நீளத்தைப் பார்த்து மிரண்டு போன நமது DTP நண்பர் - "ஆத்தாடியோவ்..முழுசையும் அடிக்க எனக்கு இன்னிக்கு மாளாது ; பாதி தான் முடியும் !" என்று கையைத் தூக்கியிருக்க, இரண்டாம் பகுதியை நம் ஆபீஸிலேயே கோகிலாவைக் கொண்டு அடித்து வாங்கியுள்ளேன் ! So இதற்கு மேலேயும் எழுதி போனால் DTP பணியாட்கள் அத்தனை பேருக்குமே சனிக்கிழமையானால் குளிர் காய்ச்சலாகிப் போய் விடும் ஆபத்துள்ளது ! Anyways ரொம்பவே தவிர்க்க இயலா சூழல் என்பதாலேயே இந்தப் பக்கமாய் பிராமிஸ் செய்தபடிக்கு தலைகாட்ட சாத்தியப்படவில்லை ! சற்று முன்னே இங்கு நுழைந்தால் பின்னூட்ட எண்ணிக்கை 1000+ என்று மிரட்டிட - கொஞ்சமாய் மூச்சு விட அவகாசம் கிட்டும் முதல் தருணத்தில் இந்த absence பற்றி பேசிட முனைவேன் ! இப்போதைக்கு bye all ! See you around ! Have an awesome weekend !