Powered By Blogger

Saturday, June 21, 2025

ஜூலைக்கொரு வாடகை சைக்கிள் !

 நண்பர்களே,

வணக்கம்! பூமியின் ஒரு ஸ்பெஷல் தினத்துக்கு நல்வரவு! வருஷத்தின் ஜுன் 21-ம் தேதி தான் பூமியின் மேல்பாதியானது சூரியனை நோக்கிச் சாய்ந்து கிடக்குமாம் - ஆக நீண்டதொரு பகல் பொழுதையும், மிகச் சுருக்கமானதொரு இரவுப் பொழுதையும் உருவாக்கிட! வடதுருவ நகர்களிலெல்லாம் இந்த Summer Solstice தினத்தை செம விமர்சையாகக் கொண்டாடுவதை நானே பார்த்திருக்கிறேன்! So கிட்டத்தட்ட ஆண்டின் நடுப்பகுதி என்ற பொழுதில் இன்று நின்று கொண்டிருக்கிறோம்!

And காத்திருப்பது "ஆண்டுமலர் மாதம்" என்பதால் இந்த நொடியில் வாடகைச் சைக்கிளைத் தேடும் ஆட்டோகிராப் சேரனைப் போல மனசு flashback-க்குள் ஐக்கியமாகிட விழைகிறது! அது என்னமோ தெரியலை- அப்பப்போ பரோட்டாக்களை உள்ளே தள்ளினாலுமே சாலையோரக் கடைகளின் மாஸ்டர்கள் மலை போல மைதாவைக் குவித்துக் கொண்டு, ஈரானிய ஏவுகணைகளின் லாவகத்தோடு முட்டைகளை உடைச்சு அதனுள்ளே ஊற்றிவிட்டுப் பினைந்து தள்ளுவதைப் பார்க்கும் போதெல்லாம் பசிக்கிறது தானே?! அதே போலவே ஒரு நூறு தபா பழங்கதைகளை அசை போட்டிருந்தாலுமே நாற்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பான அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் மண்டை நிறைய கேசமும்; அகம் அம்புட்டும் ரம்யமும் இருப்பது போலவே ஒரு பீலிங்! And செம தற்செயலாய் நாற்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன் போலவே இப்போதும் இளவரசியுடன் பணியில் ஈடுபட்டிருக்க, nostalgia ஒரு மிடறு தூக்கலாய் அலையடிக்கிறது! "The பிளைஸி ஸ்பெஷல்'' இதழுக்கான எடிட்டிங் ஓடிக் கொண்டுள்ளதே!

1983......!! லக்கி லூக்குக்கு இணையாக "தனிமையே என் துணைவன்' என்று பாட்டுப் படிக்கும் நிலை தான் அன்று எனக்குமே! பதினான்கு வருடப் பள்ளி வாழ்க்கை முற்றுப் பெற்ற தருணத்தில், அடுத்து என்ன செய்வதென்ற வழிகாட்டலுக்கு நமக்கு விதி லேது! அப்பாவால் அன்றாடப் பாடுகளையே அல்லலி­ன்றிச் சமாளிக்க முடியாத நாட்கள் அவை! And எனது தாய்வழிப் பாட்டியும் மிகுந்த ஆரோக்கியக் குறைபாடுகளோடு முட்டி மோதிக் கொண்டிருக்க- தாத்தாவால் எனக்கோசரம் எதுவும் செய்ய இயலா நிலை! மார்ச் இறுதியில் தேர்வுகள் ஓவர்- நானோ CBSE பள்ளி மாணவன் என்பதால் எங்களது ரிசல்ட்கள் டில்­லியி­ருந்து மே நடுவாக்கில் வெளியிடப்படும்! And மேயும் வந்து, ரிசல்ட்களும் வந்து, எங்களது Commerce பிரிவில் நான் டாப்பராகத் தேர்வானதும் நிகழ்ந்த வேத்திலேயே மறந்தும் போயின - becos ரொம்ப ரொம்பச் சீக்கிரமே எனக்குப் புரிந்துவிட்டது காலேஜ் பக்கமாய் தலை வைக்கும் வாய்ப்பு கூட நமக்கு வாய்க்கப் போவதில்லையென்று! அது நாள் வரைக்கும் நெதத்துக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருந்தது - பள்ளி, கல்வி என்றெல்லாம்! ஆனால், திடுதிடுப்பென ஒவ்வொரு நாளுமே கேள்வி குறியாகியிருந்தது!

உடன் படித்த பசங்கள், பெண்கள் சகலரும் சென்னை, கோவை என ஆங்காங்கே கல்லூரிகளில் சேர்ந்திருக்க, அவர்களிருக்கும் திக்கைத் தவிர்ப்பதே எனது முதல் இலட்சியமாகிப் போச்சு! கடன் தொல்லைகள், கழுத்தைச் சுற்றிய பாம்பாய் படுத்தியெடுக்க, சீனியர் எடிட்டர் காலையில் வீட்டிலிருந்து கிளம்பிப் போய் விடுவார் ; so அலறும் தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் பொறுப்பு நம்மளதே! அன்றெல்லாம் விடியற்காலைகளில் கந்தர் சஷ்டியோ, சுப்ரபாதமோ ஒ­லித்திடாது ; மாறாக, மார்வாடி மாமையாக்களிடமிருந்தும், செட்டியார் சேட்டன்களிடமிருந்தும் குளிரக் குளிர கிட்டிடும் அர்ச்சனைகளே காதை நிரப்பிடும்! அக்காக்கள் இருவருமே திருமணமாகிப் போயிருந்தனர் & தம்பி + தங்கை ஸ்கூல் போகும் பிள்ளைகள்! So காலைப் பொழுதுகளை காது நிறைய கரம் மசாலாக்களால் நிரப்பிய பிற்பாடு, குளித்துக் கிளம்பிப் போக போக்கிடம் கிடையாது! அப்பாவின் ஆபீஸுக்குப் போனால், கடனுக்கு ஈடாக ஏதேனும் மிஷின்களை ஈட்டிக்காரப் பிரபுக்கள் ஜப்தி பண்ணி தூக்கிச் செல்லும் காட்சிகளே வரவேற்கும் என்பதால் அங்கே போகவே மனம் ஒப்பாது! தவிர, முத்து காமிக்ஸ் ஆபீஸில் நான் அமர்ந்திருக்கும் மேஜையில் அப்போது திருவாளர் முல்லை தங்கராசன் நடுநாயகமாய் குந்தியிருப்பார்! முத்து காமிக்ஸ் வாரமலருக்கு ஏற்கனவே மங்களம் பாடப்பட்டிருந்த நிலையில், அடுத்து க்ரைம் நாவல்களை வாரயிதழாக வெளியிடலாமென்று அப்பாவிடம் கொக்கி போட்டுக் கொண்டிருப்பார்! So ஆபீஸ் பக்கமாய் போவதை ரொம்பவே குறைத்துக் கொண்டேன்!

என்ன செய்வதென்றே தெரியாத அந்த நாட்களில் நான் செய்த குடாக்குத்தனங்களை இன்று நினைத்தால் சிரிக்கத் தான் தோன்றுகிறது! Hindu நியூஸ்பேப்பரின் வரி விளம்பரங்களை நெதமும் விடாமல் படிப்பேன்; ஏதாச்சும் டிப்ளமோ படிப்புகளோ; வூட்டிலி­ருந்தபடியே செய்யக்கூடிய வேலைளோ கண்ணில் படுகின்றனவா? என்ற தேடலில் ! "சேலம் டாக்டர் ஈரோடு விஜயம்'' போன்ற பூமியை அதிரச் செய்யும் விளம்பரங்களையெல்லாம் தாண்டி கண்ணில்பட்டது ஒரு ad! அது தான் "வீட்டி­லிருந்தபடியே டிடெக்டிவாக ஆவது எப்படி?'' என்றதொரு டிப்ளமோ படிப்பு(?!!!!) ......அரை லூசாட்டம் அதற்கொரு தபால் போட்டேன் - என்ன தான் சொல்றானுங்கன்னு பார்ப்போமே என்ற நினைப்பில்! தபால் போட்டாச்சு - ஆனால், அவர்கள் அனுப்பக் கூடிய பதிலை வீட்டில் யாராச்சும் பார்த்துவிட்டால் சிரிப்பாய் சிரித்து விடுவார்களே என்ற பயம் தொற்றிக் கொண்டது! "ஆஹா.. என்னடா இது முத்து விஜய ரிப் கிர்பிக்கு வந்த சோதனை?" என்றபடியே தினமும் போஸ்ட்மேன் வீட்டுப் பக்கமாய் வரக் கூடிய நேரத்துக்கு ரோட்டிலேயே போய் நிற்க ஆரம்பித்தேன்!

"நாலு நாளாய் நடுரோட்டில் பிள்ளை திடீரென தேவுடா காக்குதே?'' என்று அம்மாவுக்கு சந்தேகம் எழுந்திடக் கூடாதே என்ற பயமும் இன்னொரு பக்கம்! ஐந்து நாட்கள் கழித்து ஒரு பதினைந்து காசு போஸ்ட்கார்ட் வந்தது - ரப்பர் ஸ்டாம்பில் "என்னவோ ஒரு டிடெக்டிவ் இன்ஸ்டிட்யூட்'' என்ற விலாசத்தோடு! சேலம் பக்கமாய் ராசிபுரமோ, ஆத்தூரோ அவர்களது கம்பெனி(!!!) என்று பார்த்தேன்! "ஆறு மாசம் படிச்சுப் போட்டா அடுத்து சேம்சு பாண்ட் நீங்களே தான்'' என்ற ரேஞ்சுக்கு என்னவோ எழுதியிருந்தார்கள்! "அஞ்சல்வழியில் படிக்கிற சமாச்சாரங்களை அனுப்பி வைப்போம்; நீங்க இப்போ ஒரு 150/- அனுப்பி வைக்க வேண்டியது!'' என்றும் இருந்தது! நாற்பத்தி இரண்டு வருஷங்களுக்கு முன்னே அதெல்லாம் வெயிட்டானதொரு தொகை! என் கையிலோ வெறும் அரையணா கூடக் கிடையாது! இத்தனை பணத்துக்கு எங்கே போவதென்று புரியலை!

என்னைப் போலவே வேலையற்ற எவனோ ஒருத்தன் ராசிபுரத்திலி­ருந்தபடியே காதிலே பூச்சுற்றி நாலு காசு சம்பாதிக்கப் பார்க்கிறான் என்பது கூட மண்டைக்குள் அந்த நாட்களில் எட்டவில்லை! தாத்தாவிடம் ஏதேதோ சொல்லி இரண்டோ- மூன்றோ தவணைகளில் அந்த ரூ.150-ஐ கேட்டு வாங்கவே கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் பிடித்தன! மொத்தமாய் காசு சேர்ந்த பின்னே அதை மணியார்டர் பண்ண போஸ்ட் ஆபீஸிற்குப் போனால், படிவத்தைப் பூர்த்தி செய்யக் கூடத் தெரியலை நமக்கு! பள்ளிக்கூடத்தில் பெரிய பருப்பு- but ஒரு சாதாரண படிவத்தை நிரப்பவே தடுமாறும் நிலையாகிப் போச்சே என்று துப்பிக் கொண்டே யாரிடமோ கேட்டு, ஒரு மாதிரி பாரத்தை பூர்த்தி செய்து பணத்தை கவுண்ட்டரில் நீட்டினேன்! அங்கே அமர்ந்திருந்த மனுஷன்- "மணியார்டர் கமிஷன் இவ்ளோ.. அதையும் சேர்த்து எடுத்து வை தம்பி!'' என்றார்! ஆஹா.. இதுக்குமொரு கட்டணம் உண்டா? என்று பேந்தப் பேந்த முழித்தபடியே ஆபீஸிற்கு ஓட்டமெடுத்தேன் - அந்த ரெண்டோ, மூணோ ரூபாய்களை வாங்கி வர! ஒருவழியாய் மணியார்டரை அனுப்பிவிட்டு வீட்டுக்குத் திரும்பிய போது, என் மனக்கண்ணில் ஜானி நீரோ... காரிகன்.. ரிப் கிர்பி என்று ஓடிக் கொண்டிருந்தனர்! கூடிய சீக்கிரமே நாமளும் அந்த ரேஞ்சுக்கு டிடெக்டிவாகி இருப்போமென்று மெய்யாலுமே நம்பியிருந்தேன்! மறுநாள் முதல் உச்சிப் பொழுதில் போஸ்ட்மேனுக்காக ரோட்டில் காத்திருக்கும் படலம் தொடர்ந்தது!

நாட்கள் சிறுகச் சிறுக நகர்ந்தன.. மணியார்டரைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீதென்று ஒரு சிறு அட்டைத் துணுக்கை மட்டுமே போஸ்ட்மேன் தந்தார்! தொடர்ந்த நாட்களில் பகல்களும் புலர்ந்தன; போஸ்ட்மேனும் வருவார் but "ஒண்ணுமில்லே'' என்று சைகை காட்டியபடியே போயும் விடுவார்! விடாப்பிடியாய் இரண்டு வாரங்கள் எல்லைவீரனாய் ரோட்டில் நின்றதன் பின்னே தான் சிறுகச் சிறுக உரைக்க ஆரம்பித்தது - எல்லாமே ஒரு டகால்டி என்பது! காசும் போச்சு; ஒரு மாதத்துக் கனவுகளும் போயிண்டே.. என்பது புரிபட்ட நேரத்தில் தொண்டையெல்லாம் அடைத்தது; ஆனால், கஷ்டத்தைச் சொல்லி­ அழக் கூட ஆள் கிடையாது ! வெறுத்துப் போயிருந்த அந்தப் பொழுதில் தான் ஒரு நல்ல மனிதரின் பரிச்சயம் கிட்டியது!

அந்நாட்களில் மாலை மலர் குழுமத்தி­லிருந்து "தேவி' என்ற வாரயிதழ் ஒன்றினை வெளியிட்டு வருவார்கள்! அதற்கான அட்டைப்படம் மட்டும் அப்பாவின் அச்சகத்தில் ப்ரிண்ட் ஆகும். திரு.ஆதித்தனார் அவர்களின் மூத்த புதல்வரான திரு.ராமசந்திர ஆதித்தன் அவர்கள் அதனை நடத்திக் கொண்டிருந்தார்! அப்பா மீது அவருக்கு நிரம்ப அன்பும், நம்பிக்கையும் உண்டு! படு சுமாராக "தேவி' அட்டைப்படங்களை அச்சிட்டு அனுப்பினாலும், முகம் சுளிக்க மாட்டார்கள்! அவரது மூத்த மகன் திரு.கண்ணன் ஆதித்தன்! அமெரிக்காவில் கல்வி கற்று முடித்து சென்னைக்குத் திரும்பியிருந்தார்! அச்சுத்துறை சார்ந்த அனுபவம் அவருக்குக் கிட்டினால், நல்லதென்று அவரது தந்தையார் கருதிட, அன்றைக்கு அச்சுத் தொழிலுக்கு மையமாய் திகழ்ந்த சிவகாசியில் சில நாட்களைச் செலவிட்டால் பயனுள்ளதாக இருக்குமென்று எண்ணியிருந்தார்! "சிவகாசி" என்ற உடனே அந்நாட்களில் அவர்களுக்கு இருந்த பிரதான பரிச்சயம் நம்ம சீனியர் எடிட்டரும், அவரது அச்சகமும் தான்! So திரு.கண்ணன் ஆதித்தன் அவர்கள் சிவகாசிக்கு ஒரு வாரமோ என்னவோ visit அடித்தார்!

அறவே வேலையே இல்லாத அரைவேக்காடு நான் இருந்ததால், கண்ணன் ஆதித்தன் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விட்டார் சீனியர் எடிட்டர்! அன்றைக்கு சிவகாசியில் ஒரேயொரு மிதமான லாட்ஜ் மட்டுமே உண்டு; ஆனால், அதுவும் பெரிய ஸ்டார் ஹோட்டல் ரகமெல்லாம் கிடையாது! வருகிறவரோ பாரம்பரியமிக்கப் பெரிய குடும்பத்தவர் ; அமெரிக்காவில் கல்வி கற்றிருந்தவர்! So இந்தப் புறாக்கூண்டில் எவ்விதம் தாக்குப் பிடிப்பாரோ? என்ற பயம் எனக்கு! தவிர, இந்த ஊரில் தெருவுக்குத் தெரு இருக்கும் பாய் கடை பரோட்டாக்கள் தான் அன்றைய McDonald's.....Burger King...KFC...! புதுசாய் வருபவர்கள் மெய்யாலுமே திணறித் தான் போவார்கள்! ஆனால், மலர்ந்த முகத்தோடு வந்து சேர்ந்த கண்ணன் அவர்கள் எதையுமே ஒரு குறையாகப் பார்க்கக் காணோம்! சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உடுப்பி ஹோட்டலுக்கு என்னோடு போய், விளக்குமாற்றால் வருடப்பட்ட கற்கள் மீது சுடப்பட்ட தோசைகளையும் சங்கடங்களின்றிச் சாப்பிட்டார்; சந்துக்குள் இருந்த நமது ஆபீஸிற்கும் சங்கோஜங்களின்றி நடந்தே வந்தார்! பிராசஸிங் நுணுக்கங்கள்; அச்சுத்துறை டெக்னிக்ஸ் என்று கவனமாய் பார்வையிட்டார்!

ஓய்வாய் ஹோட்டல் ரூமில் இருக்கும் போது தான் என்னிடம் பேச்சுக் கொடுத்தார்- "நீ என்ன பண்ணிக்கிட்டிருக்க ப்ரோ?'' என்று!! அந்நாட்களில் நம்பளுக்கு புடிக்காத ஒரே வினா அது தான்......ஆனால், ஓடவோ, ஒளியவோ இடமிருக்கவில்லை - அவர் உள்ளன்போடு அந்தக் கேள்வியினை முன்வைத்த போது! எனக்கோ, எதையாச்சும் புலம்பி, ஒப்பாரி வைத்துத் தொலைத்தால் அப்பாவின் பெயர் கெட்டு விடுமே என்ற பயம்! So எதையோ சொல்லி­, பூசி மெழுகிட நான் எத்தனித்தாலுமே அவருக்கு நிலவரம் புரிந்தது! ஆறுதலாய் பேசினார்...! "உனக்கு எதில் ஆர்வமுள்ளதோ- அதனில் முயற்சி செய்....சென்னை வந்தால் ஏதும் உதவி தேவை எனில் சொல்லு !" என்று சொன்னார்! ஏனோ தெரியலை - அன்று இரவு அழுதேன்.. ரா முழுக்க அழுதேன்! எதற்குமே பிரயோஜனமாகிட மாட்டோமோ? என்று கொஞ்ச காலமாகவே அரிக்கத் துவங்கியிருந்த அரக்கன் அழுது முடித்த போது லேசாக ஓய்ந்தது போலி­ருந்தது காலையில் எழுந்த போது!

ஆனால், நம்ம கி.நாக்களுக்கு அன்றைக்கே ட்ரெய்லர் விட்டிருந்தார் புனித மனிடோ! அழுகாச்சிப் படலம் அத்தனை சுலபமாய் ஓய்ந்திருக்கவில்லை! சுகர்; ஆஸ்துமா; இருதயக் கோளாறு என்று அல்லல்பட்டுக் கொண்டிருந்த எனது பாட்டி ஒரு டிசம்பர் நாளில் just like that ஒற்றை நிமிடத்தில் இயற்கையோடு ஐக்கியமாகியிருந்தார்! மூன்று நாட்களுக்கு முன்னே மதுரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த தாத்தாவையும், பாட்டியையும் நான்தான் வழியனுப்பி வைத்திருந்தேன்! பாட்டியை அதன் பின்பாக நான் பார்த்தது சடலமாகக் கொண்டு வரப்பட்ட போது தான்! ஒற்றை நாளில் உலகமே சரிந்தது போ­லிருந்தது! பதினாறு வயதில் நான் பார்த்த முதல் family member-ன் மரணம் அது - உலுக்கித் தள்ளிவிட்டது! பாட்டிக்கு அப்போது வயது 55 தான் எனும் போது இழப்பை ஜீரணிக்க கிஞ்சித்தும் முடியவில்லை! வீட்டின் முதல் பேரன் என்ற வகையில் சின்ன வயதில் பாட்டியை ரொம்பவே பெண்ட் கழற்றியிருந்ததெல்லாம் மனதில் நிழலாட, ஒவ்வொரு ராத்திரியும் மொட்டை மாடியில் தனியாய் போய் அமர்ந்து அழுவேன்! ஆனால், எல்லா இருண்ட குகைகளின் இறுதியிலும் ஒரு வெளிச்சக் கீற்று இல்லாது போகாது என்பது நிஜம் தான் போலும்! பாட்டியின் மறைவைத் தொடர்ந்து தாத்தா தனித்து இருக்காது, எங்களோடே குடியிருக்க வந்துவிட்டார்கள்! அம்மா தான் அவருக்கு ஒரே பிள்ளை என்பதால் அந்தக் குடிமாற்றம் சுலபமாகிப் போனது!

ஆறு மாதங்களாய் என்னை வதைத்துக் கொண்டிருந்த தனிமை சிறுகச் சிறுகக் கரைந்தோடத் துவங்கியது தன் பிற்பாடே! தாத்தாவுமே ஒரு அச்சகம் நடத்தி வந்தவர் என்பதால் சென்னை ட்ரிப்ளிகேனில் உள்ளதொரு பாரம்பரியமிக்க சீட்டுக் கம்பெனிக்கு வருஷா வருஷம் சாமி படம் போட்ட காலெண்டர்கள் ப்ரிண்ட் செய்து தருவார்! 1983 டிசம்பரிலோ பாட்டியின் காரியங்கள் முடிந்திருந்த நிலையில் தாத்தாவால் காலெண்டர் தயாரிப்பினைக் கண்காணிக்க இயலவில்லை! "நீ பார்த்துக்குறியாடா கண்ணா?'' என்று தாத்தா கேட்ட போது - இஸ்ரேல் - ஈரான் யுத்தத்துக்கு மத்தியஸ்தம் பண்ணும் பொறுப்பையே என்னிடம் ஒப்படைத்தது போலிருந்தது! அன்று வரைக்கும் கண்ணாடியில் பிரதிப­த்த ஒரு தண்டச் சோற்றுத் தடியன் திடுதிடுப்பென காணாது போய்விட்டது போல் பட்டது!

ஒரு விநாயகர் படம்! 30.000 காலண்டர்கள்! அச்சிட்டு அவர்களது ஐந்து கிளைகளுக்கு (டில்­லி, மும்பை, சென்னை; பெங்களூர்; கல்கத்தா ) அனுப்பிட வேண்டும்! தாத்தாவின் பிரஸ் மூடியிருந்தது என்பதால் அப்பாவின் மூத்த சகோதரரிடம் பிரிண்ட் பண்ணி வாங்குவது என்று தீர்மானித்தேன்! (பின்நாட்களில் லயன் காமிக்ஸ் துவக்கம் கண்ட பிற்பாடு நாமாக அச்சு இயந்திரங்கள் வாங்கும் வரைக்கும் பெரியப்பாவின் பிரஸில் தான் பிரிண்ட் செய்வோம்)

சித்திரம் போடுவது பாலக்காட்டில் உள்ளதொரு ஓவியர்! முழுப் பொறுப்பு மட்டுமல்லாது, தயாரிப்பின் முழுக் காசையும் என் வசம் தாத்தா ஒப்படைத்திருக்க, நேற்று வரை வெங்கம் பயலாய் சுற்றிக் கொண்டிருந்தவனிடம் கணிசமாய் பணமும், பொறுப்பும் ஒரே நாளில் தொற்றியிருந்தன! நான் ப்பாவின் பிரஸ்ஸில் ஏகப்பட்ட நாட்களைச் செலவிட்டிருந்தேன் தான்; ஆனால், அச்சுக்கலை என்பதற்குள் புகுந்து பணி செய்த அனுபவமெல்லாம் இம்மியும் கிடையாது! So திடுமென கைக்கு வந்த பொறுப்பு மலைக்கச் செய்தாலும், இதைச் சொதப்பாது செய்து முடிக்க வேண்டுமென்ற வேட்கை ஒரு வெறியாய் உள்ளுக்குள் ஆட்டிப் படைத்தது! பெரியப்பாவும் சரி, அவரது அச்சகத்தினரும் சரி, எனக்கு மெய்யாலுமே இயன்ற அத்தனை உதவிகளையும் செய்தனர்! அவர்களது ஆபீஸிலேயே எனக்கென ஒரு சின்ன மூலையில் ஒரு மேஜை போட்டுத் தந்தனர்!

  • ஒவியர் படம் போட்டாகணும்!
  • அதை கம்பெனியினர் ஓ.கே. செய்தாகணும்!
  • அதன் பின்பாய் அந்த டிசைனை நெகடிவ் எடுக்க வேண்டும்!
  • ஐந்து வர்ணங்களில் அச்சிட பிராசஸிங் பணிகள் அடுத்து!
  • அப்புறமாய் பேப்பர் கொள்முதல்....!
  • பின்னே பிரிண்டிங் !
  • அதன் மேலே வார்னிஷ் + தங்க மூலாம் பூச்சு!
  • அதனூடே கீழே தேதிகள் கொண்ட தாள்களை தனியாக ரெடி பண்ணி, ப்ரிண்ட் பண்ணி வைத்திருக்கணும்!
  • அதுவொரு Chit Fund நிறுவனம் என்பதால் என்றைக்கு ஏல விடுமுறை என்று ஒவ்வொரு கிளைக்கும் ஏற்ப டைப்செட் செய்து, பிழையின்றி சரி பார்த்திருக்க வேண்டும் ! கன்னட ராஜ்யோத்சவ தினத்துக்கு பெங்களூரு காலெண்டர்களில் விடுமுறைகள் காட்டணும் ; துர்கா பூஜாவுக்கு கொல்கத்தா காலெண்டர்களில் ....and etc etc !
  • படத்தைத் தொங்க விடும் பொருட்டு மேல் பக்கம் டின் அடிக்க வேண்டும்!
  • கீழேயுள்ள மாதக்குறிப்புகள் கொண்ட ஷீட்களை வரிசைப்படுத்தி தையல் மிஷின்களில் (யெஸ்- டெய்லர்கள் தைக்கும் அதே தையல் மிஷினில் தைக்க வேண்டும்) தைத்து வாங்கினால் காலெண்டர்கள் ரெடி!
  • அப்புறமாய் கேஸ் பெட்டிகளில் பேக் பண்ணி எந்த ஊருக்கு எவ்வளவென்று கணக்கிட்டு அனுப்ப வேண்டும்!
  • அத்தனை கிளைகளுக்கும் காலெண்டர்கள் பத்திரமாகக் கிடைத்த பின்பாக சென்னை தலைமையகத்தில் காசு வசூ­லிக்க வேண்டும்!

இன்றைக்கு யோசித்தால் மலைப்பாக உள்ளது - நயா பைசா அனுபவமின்றி இத்தனை வேலைகளை நான் எவ்விதம் ஏற்றுக் கொண்டேன் என்பது! ஆனால், அடுத்த பதினைந்து நாட்களுக்காவது புலரும் ஒவ்வொரு காலையிலும் என்னை நானே கண்ணாடியில் பார்க்கும் போது, லஜ்ஜை பிடுங்கித் தின்னாமல் இருக்க எதையும் செய்யலாமென்ற ஒரு desperation தான் என்னை அன்று இயக்கியது என்பது புரிகிறது! பைத்தியக்காரன் போல கால நேர மாற்றங்களை சட்டை செய்யாது பணி செய்வது துவங்கியது அன்றைக்குத் தான்! அப்போதெல்லாம் சிவகாசி ஒரு 24/7 நகரம்! இரு ஷிப்ட்களில் ஊரின் அத்தனை அச்சகங்களும் இயங்கி வரும் என்பதால் ஹோட்டல்கள், டீக்கடைகள் என சகலமும் திறந்திருக்கும்! So வேளைக்குச் சோறு' என்பதெல்லாம் மறந்து "வேலைக்குப் பின் சோறு'' என்று மாறிப் போயின எனது பொழுதுகள்!

எனக்குப் பணிகள் தெரியாதென்ற போதிலும் பணி தெரிந்தோரைத் தெரியும்! So ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவரவது ஒத்தாசையைக் கோரிப் பெற்று வரிசையாய் வேலைகள் அரங்கேறுவதை ரசித்தேன் ! நெட்டி வாங்கிய இரண்டரை வாரங்களுக்குப் பின்பாக கேஸ்பெட்டிகளில் காலெண்டர்களை அடைத்து லாரி ஷெட்களுக்கு அனுப்பி விட்டு அந்த லாரி பாஸ்களை பதிவுத் தபால்களில் ஐந்து முகவரிகளுக்கும் அனுப்பி முடித்த போது தேதி 31.12.1983. ஆண்டின் பெரும் பகுதி சூன்யமாய் தென்பட்டிருந்த நிலையில், அதன் இறுதி இருபது நாட்கள் எனக்குள் ஒரு பெரும் நம்பிக்கையினை விதைத்திருந்தன! வேலைகளை முடித்த கையோடு, கணக்கு வழக்குகளையும் எழுதி தாத்தாவிடம் பாக்கிப் பணத்தைக் கொடுத்த போது, பாம்பன் பாலத்தையே கட்டி முடித்த திருப்தி எனக்குள்! And அந்த இரண்டு வாரத்து அனுபவங்களே ஆறு மாதங்களுக்குப் பின்பாய் லயன் காமிக்ஸின் பயணம் துவங்கிய பிற்பாடு எனக்குப் பெரிதும் உதவின என்பதில் துளியும் ஐயமில்லை!

தொடர்ந்த நாட்களில் தாத்தாவுக்கு நானும், எனக்கு தாத்தாவும் துணையென்று ஆகிப் போனோம்! ஒரே ரூமில் தாத்தாவும், நானும் படுத்துறங்க, சீக்கிரமா ஒரு ரவுண்ட் தூக்கத்தைப் போட்டுவிட்டு நள்ளிரவுவாக்கில் தாத்தா முழிப்பதற்கும், நம்ம ராக்கோழி அவதார் அரங்கேறிடுவதற்கும் சரியாகயிருக்கும்! ஏதேதோ பேசுவோம்...விடிய விடியப் பேசுவோம் ! முறையாய் ஆதரவு தந்து தூக்கிவிட்டால் பேரன் தேறிவிடுவான் என்ற நம்பிக்கை தாத்தாவுக்குப் புலர்ந்ததோ என்னவோ- எனது கனவான டிங்-டாங் சிறுவர் மாத இதழை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட ஊக்குவித்தார்! மதுரை காமராஜ் யுனிவர்சிடியின் அஞ்சல்வழிக் கல்வியில் ஏற்கனவே சேர்த்தும் விட்டிருந்தார் !! So மெதுமெதுவாய் எனக்குமொரு புது routine புலரத் தொடங்கியது!

எழுதினேன்.. எழுதினேன்.. கட்டுரைகள்; துணுக்குகள்; கதைகள் - என்று ஏதேதோ எழுத ஆரம்பித்தேன்! ஒவ்வொன்றுமே வெகு சீக்கிரம் வெளிவரப் போகும் இதழினில் பக்கங்களாகிடப் போகின்றன என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையுமே எழுதிடும் marathon-களாக்கினேன்! இதோ இன்றைக்கு பதிவுகள், ஹாட்லைன்கள், மொழியாக்கங்கள் என எதையெதையோ எழுதுவதற்கு 1984-ன் அந்தப் பொழுதுகள் தான் முதற்புள்ளி ! நடுநடுவே B.Com-க்கென படிக்கவும் நேரமெடுத்துக் கொண்டேன்! கொஞ்ச நாட்களில் டிங்-டாங் வேலைக்கு ஆகப் போவதில்லை என்பது புரிபட்ட போது உதயமானது தான் "லயன் காமிக்ஸ்''! And இதோ கிட்டத்தட்ட ஐநூறு மாதங்கள் கழிந்த நிலையில் here we are!

அப்பா இருந்த வரையிலும் இதையெல்லாம் பகிர்ந்தால் அவர் சங்கடப்படுவாரே என்ற எண்ணம் என்னுள் இருந்தது! So இதைப் பற்றியெல்லாம் எங்கேயுமே வாய் திறந்ததில்லை ! But where it all started? என்று அவதானிப்பதானால் 1983-ன் டிசம்பரில் தான் என்பதை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்ளத் தான் இந்த ரிவர்ஸ் கியர் பயணம்! 1983-ன் இருண்ட பொழுதுகளையும், 1984-ன் வெளிச்சக் கீற்றுக்களையும் இன்றைக்கு நிதானமாய் அசை போடும் போது ஒன்று மட்டும் புரிகிறது - தண்ணீருக்குள் இறங்காது நீச்சல் சாத்தியமே ஆகாதென்று ! கடப்பாரை நீச்சலோ, butterfly stroke களோ - எதையேனும் போட்டு தலையினை தண்ணீருக்கு மேலே தக்க வைக்க நமது survival instinct உதவிடும் என்று நம்பணும் போலும் ! Of course - எதுவும் வேலைக்கு ஆகாமல் போய் தண்ணீருக்குள் சுவாஹா ஆகிடவும் வாய்ப்புண்டு தான் ; but புனித மனிடோ கரம் தராது போக மாட்டாரென்றும் நம்ப வேணும் போலும் ! புதிய தத்துவம் # 4941 .....!

Moving on : இதோ - ஜூலையில் காத்துள்ள நம்ம மஞ்ச சொக்காய் கார்ட்டூன் தலயின் சாகசத்தின் அட்டைப்படப் preview ! வழக்கம் போலவே 2 கதைகள் ! இம்முறையே இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களிலிருந்து ! முதலாம் சாகசம் ஜாம்பவான் கோசினி கைவண்ணத்தில் - "ஒரு நாயகன் உதயமாகிறான்" !! இங்கே நம்ம ரின்டின் கேன் முதன்முறையாக டால்டன்களோடு அறிமுகம் காணும் படலம் அரங்கேறிடுகிறது ! இரண்டாம் கதையோ தொடரின் பிற்பகுதியினைச் சார்ந்தது ! "நல்ல காலம் பிறக்குது" ஆல்பத்திலும் டால்டன்கள் + ரின்டின் கேன் லூட்டிகள் உண்டு ! So உங்களுக்கு மட்டுமன்றி, உங்க வீட்டு குட்டீஸ்களுக்குமே ஒரு breezy read வெயிட்டிங் என்பேன் !

ரைட்டு.. இளவரசியோடு ஒரு பக்கமும், டேங்கோவோடு இன்னொரு பக்கமும் சாகஸம் பண்ணப் புறப்படுகிறேன்! கிளம்பும் முன்னே ஒரேயொரு (ஜா­லி) கேள்வி மட்டும் :

1983ல் நீங்கள் பிறந்திருந்தீர்களா மகாஜனங்களே? ஆமாம் - எனில் என்ன செய்து கொண்டிருந்தீர்களோ? Just curious!

Bye all.. Have a great weekend! See you around!

101 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு..

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. நான்காவதாக டைப்புவதற்குள் 5 அடி பின்னே. எந்தா செய்யு?....

    ReplyDelete
  4. 1983ல் நீங்கள் பிறந்திருந்தீர்களா மகாஜனங்களே? ஆமாம் - எனில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்

    1 வது படித்து
    ( பார்த்து)கொண்டிருந்தேன் ஆசிரியரே( மீனா டீச்சர் கொள்ளை அழகு)

    ReplyDelete
    Replies
    1. அந்த வயசிலயேவா ஜி..

      Delete
    2. இன்னமும் மீனா டீச்சர் நினைப்பாவே இருப்பது போல் தெரிகிறது

      Delete
  5. நானு அப்ப அஞ்சாப்பு படிச்சுட்டிருந்தனுங்க சார்..!

    ReplyDelete
  6. ஐ லக்கி லூக். அடுத்த மாதம் குழந்தைகளுக்கு கதை சொல்லும் மாதம் 😍

    ReplyDelete
  7. // தண்ணீருக்குள் இறங்காது நீச்சல் சாத்தியமே ஆகாதென்று ! //
    மிகச் சிறந்த அனுபவ பதிவு சார்...

    ReplyDelete
  8. 4.9.1983 என்னுடைய பிறந்த நாள்..
    மு பாபு
    ஆத்தூர்

    ReplyDelete
  9. நான் எட்டாம்பு படிச்சிட்டு இருந்தேன் dob. 1971

    ReplyDelete
  10. மதுரை காமராஜ் யுனிவர்சிடியின் அஞ்சல்வழிக் கல்வியில் ஆஹா.. நீங்களும் நம்ம யுனிவர்சிட்டி தபால் வழிக் கல்வியா சார். மிக்க மகிழ்ச்சி.. நான் பிபிஏ அங்கேதான்..

    ReplyDelete
  11. // 1983ல் நீங்கள் பிறந்திருந்தீர்களா மகாஜனங்களே? //
    அப்ப நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. நானும் அதே ..
      லயன் காமிக்ஸ் - பிறக்காததால் -
      முத்துக் காமிக்ஸ் -
      வராததால்...
      ரத்னபாலா படித்துக்
      கொண்டிருந்தேன் ...

      Delete
  12. 1983 ஜனவரி முதல் ஜூலை வரை சென்னையில் அண்ணன்களுடன் வாசம். வடபழனியை அடுத்த ஆழ்வார் திருநகரில் சூப்பர் டாய்ஸ் எனும் கொசுவர்த்தி கம்பெனியில் சில மாதங்கள் வேலை. பின்னர் திருவண்ணாமலை ரிடர்ன். பின்பு, செப்டம்பரில் டி. என் பி. எல்லில் ஆபரேட்டர் டிரெய்னி வேலைக்கு மனு போட்டுவிட்டு வெயிட்டிங். பின்னர் நவம்பரில் எழுத்துத் தேர்வு, டிசம்பரில் நேர்முகத் தேர்வு, 1984 ஜனவரியில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர். பிப்ரவரி 1ம் தேதி வேலையில் சேர்ந்ததெல்லாம் இன்று போல இருக்கிறது. 41 வருடங்கள் ஓடிவிட்டன.

    ReplyDelete
  13. 1983- மணலூர்ப்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் அரசுப் பள்ளியில் ஒண்ணாவது சார். எங்கள் பள்ளி சிறந்த ஆசிரியர்கள் கொண்ட பள்ளி.. இன்று வேறு இடத்துக்கு மாற்றி விட்டனர். ம்ஹ்ம்..

    ReplyDelete
  14. நான் அப்போது பிறக்கவே இல்லைங்க 😊😁

    ReplyDelete
  15. சொல்ல மறந்த கதை. 1983 ல் நானும் மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியில் B.Com கரஸ்பாண்டன்ஸ் கோர்சில் ஜாயின் பண்ணி முதல் செமஸ்டர் புத்தகங்கள் வந்து சேர்ந்து படிக்க ஆரம்பித்து, 84ல் டி.என்.பி.எல்லில் வேலை கிடைத்ததால் படிப்பை மேற்கொண்டு தொடர முடியவில்லை.

    ReplyDelete
  16. 83 ல நாலாம்பு படிச்சிட்டிருந்தேன். அப்ப எல்லாம் கதை படிப்பதற்காக பக்கத்திலிருந்த பார்பர் ஷாப், இல்லேன்னா வ உ சி பூங்காக்கு பக்கத்திலிருந்த அரசு நூலகத்தில இருந்திருப்பேன்

    ReplyDelete
  17. //தண்ணீருக்குள் இறங்காது நீச்சல் சாத்தியமே ஆகாதென்று//புதிய தத்துவம் "4941" இந்த 54 வதுவயசிலும் புதுசாக வே உள்ளதுங்க சார்

    ReplyDelete
  18. 1983 மார்ச் மாதம் தான் திருவண்ணாமலைக்கு அப்பா குடிபெயர்ந்தார். ஆறு வயது. புது இடம். புது பள்ளிக்கூடம். புதிய நண்பர்கள்.. அது ஒரு கனாக்காலம்..

    ReplyDelete
  19. // "நல்ல காலம் பிறக்குது" ஆல்பத்திலும் டால்டன்கள் + ரின்டின் கேன் லூட்டிகள் உண்டு ! //

    Jolly! Jolly!! Dance time :-)

    ReplyDelete
  20. Excellent flashback! very interesting to read. Thanks for sharing this with us sir!

    ReplyDelete
  21. வணக்கங்கள் கமெண்ட் போட்டபின் படிக்க 20 நிமிடம் எடுத்து கொண்டேன்

    தங்களுடன் மீண்டுமொரு சைக்கிள் பயணம் இன்று

    தங்கள் தாத்தாவுக்கு மிகப் பெரிய நன்றிகள்
    எல்லாவற்றையும் உங்கள் மீது நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்திட்டதிற்கு நன்றிகள், சார் 💐💐💐

    ஒரு காலெண்டர் பின்னயில் எவ்வளவு வேலை, இன்றும் அவ்வப்போது தினசரி காலெண்டர் படிக்கும் பழக்கம் உண்டு, அதன் பின்னயில் இருக்கும் வேலையை யோசித்தில்லை

    அப்புறம் உங்கள் தாத்தா அச்சகம் வைத்திருந்தார் என்று பதிவிட்டு இருப்பீர்கள், என்ன பிரிண்ட் செய்தார் என எண்ணியதுண்டு, இன்று விடை கிடைத்ததுங்க

    ReplyDelete
  22. அட்டைப்படம் டிசைனிங் செம, சார்
    எழுத்துரு ஆக்கங்கள் செம
    நாலுகால் நண்பனேயும், டால்டன்ஸ்களையும் சந்திக்க ஆவலுடன்

    ReplyDelete
  23. //வீட்டி­லிருந்தபடியே டிடெக்டிவாக ஆவது எப்படி?//

    கையில் காசு இல்லாததால அடுத்த step எடுத்து வைக்கல சார். ஆனா இத்தனை நாள் இந்த course படிக்காம போயிட்டோமேன்னு மனதின் ஓரத்தில் ஒரு குறை இருந்து..

    இப்ப அந்த குறை போயிந்தே..

    அதே மாதிரி தபாலில் ஓவியம் கற்கலாம்னு சிந்தாதிரிபேட்டை முகவரி போட்டு ஒரு விளம்பரம் வந்தது உண்டு.. அதற்கும் காசு கட்ட முடியாததால முயற்சிக்காமலே விட்டுட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. ஒரு நல்ல ஓவியரை மிஸ் பண்ணிட்டோமே

      Delete
    2. . என் நண்பன் ஒரு சிறந்த ஓவியன். அனைத்து ஓவிய போட்டிகளில் அவன் முதல் இடம் பிடிப்பான். நான் பெரும்பாலும் இரண்டாமிடம்.. ஒரு முறை அவன் ஒரு தவறு செய்ய முதல் பரிசை தவற விட்டான்.. முதல் பரிசு எனக்கு கிடைத்தது.. அந்த நிகழ்வு பல கசப்பான நினைவுகளைக் கொண்டதால் ஓவியம் வரைவதை வெறும் zoology botany record நோட்டுக்கு என்பதாக மாறி விட்டது..

      Delete
    3. // அந்த நிகழ்வு பல கசப்பான நினைவுகளைக் கொண்டதால் ஓவியம் வரைவதை வெறும் zoology botany record நோட்டுக்கு என்பதாக மாறி விட்டது.. //

      OMG. :-(

      Delete
    4. புரிகிறது சுரேஷ் சகோ

      Delete
  24. 🙏👍🤝வணக்கம் நான் அப்பொழுது பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். சென்னை நங்கைநல்லூரில் நேரு அரசு பள்ளியில் படித்த காலம். பள்ளிக்கு அருகாமையில் உள்ள அண்ணாச்சியின் பெட்டி கடையில் பல மாதத்து முத்து காமிக்ஸ்கள் சணல் கயிற்றில் கிளிப் பின் உதவி யுடன் பின் அடிக்கப்பட்ட நிலையில் தொங்கி கொண்டு இருக்கும்.. அதில் வேதாளர், ரிப் கிர்பி, இரும்பு கை மாயாவி, காரிகன் என என் பால்ய கால ஹீரோகள் ஒரு ருபாய் விலையில் எனக்கு சொந்தமாகிட காத்து இருப்பார்கள்.... ஓ... அந்த நாட்கள்..... ஹ்ம்ம் அது ஒரு பொற்காலம் sir 😍🥰

    ReplyDelete
  25. "வேளைக்கு சோறு" என்று இல்லாமல் "வேலைக்கு பின் சோறு" - என்ன ஒரு டைமிங் சார்

    ReplyDelete
    Replies
    1. எழுதும் flow-ல் தானாய் செட் ஆகும் சமாச்சாரம் சார்!

      Delete
  26. நான் அப்போது இரண்டு வயது குழந்தை

    ReplyDelete
  27. 1983...அப்பதான் நடக்கவே ஆரம்பிச்சிருப்பேன்.☺

    ReplyDelete
  28. 1983 டிசம்பர்ல ஒரு வயது முடிந்த குழந்தையாக இருந்தேன் 😁🫠

    ReplyDelete
  29. 1983-84😘🥰
    பத்தாப்பு சார் 😄😄

    கையில் கிடைச்சதை எல்லாம் படிச்சிட்டு இருந்தேன் சார் 😄🙏
    சிறு பின் குறிப்பு :நான் ஸ்கூல் first சார் 😘😘

    ReplyDelete
  30. தங்களின் வாழ்க்கை கதை உங்களுடன் பயணித்தது போல நெகிழ்ச்சியுடன் இருந்தது சார்..💐🙏

    புனித மனிடோ அப்பவே உங்களுக்கு Help பண்ற முடிவ எடுத்துட்டாரு போல சார் 💐👍😘

    ReplyDelete
    Replies
    1. புனித மனிட்டோவும் ஒரு காமிக்ஸ் ஆர்வலரே என்பதை நிறுவ, வேற ஆதாரங்களே தேவையில்லை என்பேன் தல!

      Delete
  31. விஜயன் சார் உங்கள் அனுபவத்தை சிறுவயதிலிருந்து தொகுத்து புத்தகமாக எழுத வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அட, இப்படி ஜாலியாய் பதிவு பண்ணி விட்டு, ஜாலியாய் அடுத்த பணிக்குள் புகுந்திடுவோம் சார்..! புத்தகம் எழுதும் அளவுக்கெல்லாம் நாம ஒர்த் இல்லீங்க!

      Delete
  32. "பயணம்"
    ------------------------
    மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ஞாயிறு அன்று மழையோடு சேர்ந்து கூரியரும் எதிர்பாரா நேரத்தில் வந்து சேர, ஒரு வித பரபரப்பில் புத்தகத்தை பிரித்து எடுத்தேன்.

    பிரம்மாண்டத்தை அட்டைப்படம் முதல் பார்வையிலேயே காட்டி விட்டது. இந்த மெகா சைசுக்கு பொருத்தமான அட்டைப்படம்.

    ஆனால் புத்தகத்தை புரட்டும் போது, பைண்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பது கண்கூடாக தெரிகிறது. ஹாட் லைனில் தொடங்கி கடைசி பக்கம் வரை இடது புறத்தில் உள்ள கடைசி பேனல்கள் பைண்டிங்கில் புதைந்து விட்டது.

    அதை மேற்கொண்டும் விரித்தால் பைண்டிங் பிரிந்து விடுவது போல் இருப்பதால் அப்படியே விட்டு விட்டு தான் கடந்து போனேன். கதை முடிவில் வரும் ஆசிரியரின் பெயரே பாதிக்கு மேல் உள்ளே புதைந்து தான் கிடக்கிறது.

    இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு வெளியீட்டில் இந்த குறை நிச்சயம் இருந்திருக்க கூடாது. அதுவே ஒரு வித அயர்ச்சியை கொடுக்க, திட்டமிட்டபடி டெக்ஸின் மெக்சிகோ மேஜிக் ஸ்பெஷல் அல்லது சட்டத்தோடு சடுகுடு என இரண்டில் ஒன்றை எடுத்து படிக்கலாம் என்று எண்ணினேன்

    ஆனாலும் மனம் இந்த பயணத்தை நோக்கியே செல்ல, மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளே நுழைந்தேன்.

    ஓவியரின் ஒவ்வொரு பேனல்களையும் "ஆ"வென்று ரசித்து கொண்டே பயணத்தில் மெல்ல மெல்ல மூழ்கினேன்.

    ஏற்கனவே படித்த உயிரை தேடி, புரட்சி தலைவன் ஆர்ச்சி, ஜெரமெயா எல்லாம் ஞாபகத்துக்கு வந்தாலும் இந்த பாணி முற்றிலும் வேறு விதமாகவும், புதுமையாகவும் இருந்தது

    நீர் வீழ்ச்சி காட்சி வந்தது. இருவரும் ஆடையை கழைய சட்டென்று நிமிர்ந்து ஒரு சபாஷ் போட்டேன். அந்த ஒற்றை பேனல் முழுக்கதையின் வீரியத்தையும் உணர்த்தி விட்டது.

    ஒரு வித பரபரப்போடு நானும் ஓட, அந்த டிரக் காட்சிகள் மேலும் சுவாரஸ்யமாக்கி அடுத்த கட்டத்துக்கு இட்டு சென்றது

    அடுத்து ஒரு ஒதுக்குபுற வீட்டின் நிலவறை. உள்ளே இருந்த கோரம் "ஹெல்ப் பிளீஸ்" என்று ஒட்டு மொத்தமாய் கதற திக்கு முக்காடி போனேன் அந்த இடத்தில்.

    அடுத்த நிலவறை காட்சி இன்ப அதிர்ச்சி ஊட்ட, அவர்களுக்காக நானும் சந்தோஷப்பட்டேன்.

    ஒரு பெயரளவு முதியவனுக்கு, மகனுக்காக தானம் செய்யும் இடத்திலும், திருடி கொண்டு ஓடியவனிடம் பொருட்களை மீட்ட இடத்திலும் பேசும் வசனங்கள் யதார்த்தத்தை தோலுரித்து காட்டுகிறது.

    இறுதியில் வரும் கடற்கரை காட்சிகளை கனத்த இதயத்துடன் கடந்து செல்ல முடியாமல் தக்கி முக்கி தான் வெளியே வந்தேன். இப்படி ஆகி இருக்க வேண்டாமே என்கிற வருத்தம் படித்த முடித்த பின்பும் விடாமல் விரட்டி வருகிறது என்றால் அதுவே இந்த பயணத்தின் வெற்றியை வானளவு உயர்த்தி இருக்கிறது.

    நான் இங்கே விவரித்தது துளியளவு தான், இன்னும் இந்த கதையை பல முறை படித்தால் தான் இதன் முழு வீச்சை உணர முடியும் என்று நினைக்கிறேன்

    படித்து முடிக்க நான் எடுத்து கொண்ட நேரம் 2 மணி 45 நிமிடங்கள். எக்கச்சக்க எதிர்பார்ப்போடு உள்ளே நுழைந்தேன். அதைத் தாண்டி ஒரு படி மேலே உள்ளது இந்த பயணம்.

    பைண்டிங்கில் உள்ள அந்த குறையை பயணத்தின் விஸ்வரூபம் மறைத்து விட்டது உண்மை.

    கிராபிக் நாவல்களின் வருகை/தேவை எவ்வளவு முக்கியம் என்பதை இக்கதை மேலும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

    அடுத்த கிராபிக் நாவலான சாம்பலின் சங்கீதத்துக்கு வெயிட்டிங்.

    இது போன்ற பல அரிய கிராபிக் நாவல்களை உங்களிடம் மேலும் மேலும் எதிர்பார்க்கிறேன். நன்றிகள் பல
    -------------------------------
    வழுக்குப்பாறை R திருநாவுக்கரசு, கோவை

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சகோ

      //கிராபிக் நாவல்களின் வருகை/தேவை எவ்வளவு முக்கியம் என்பதை இக்கதை மேலும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.//

      +99999

      அடுத்து வரவிருப்பது சாம்பலின் சங்கீதம், சகோ

      முன்பதிவு பண்ணிடுங்க

      Delete
  33. மிகுந்த வலி நிறைந்த பதிவு சார் இது

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் கடந்து போயாச்சு சார்!

      Delete
  34. பதிவு.... மனதை பிசைகிறதுங்க sir.. கல்லூரி செல்ல முடியாததன்
    வலி எனக்கும் உண்டு... 😔.... பிரமிக்கிறேன்.. 🤭.... Life is divine design... என்பது நிஜம் போல... ❤️👍🙏. வாழ்த்துக்கள்.. ❤️

    ReplyDelete
    Replies
    1. இன்றைக்கு அதையெல்லாம் தாண்டியாச்சு சார்....!

      Maybe காலேஜ் போய் எல்லோரையும் போல் நானும் படிச்சு, பொறுப்பாய் ஒரு உத்தியோகத்துக்குப் போயிருப்பின், இன்றைக்கு பொன்னாடை போர்த்தி ரிட்டயர் ஆக்கி, ஊட்டாண்ட குந்திக்கோ ராசா என்று விடை கொடுத்திருப்பார்கள் சார்! இப்போதோ ஜாலியாய் கதையடித்துக் கொண்டே, பொறுப்புகளை சுமக்கவும் சாத்தியமாகிறதே! Will take this any day & every day sir!

      Delete
    2. அப்பட்டமான உண்மைங்க sir...❤️ பிரான்ஸ் நாட்டு கலை உணர்வு மிக்க மக்களின் அழைப்பு... 🤭ஆஹா...amezing..🙏எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு...வாழ்த்துக்கள் sir.. ❤️👍🙏.

      Delete
  35. 1983 - 84 ல் நான் BSc final year படித்துக் கொண்டிருந்தேன்.
    அதற்கு முந்தைய flash back ஞாபகம் வருகிறது.
    1971ல் நான் அரசுப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். அப்போது வரும் பொன்னி காமிக்ஸை என் தந்தை வாங்கிக் கொடுப்பார். அது முழுக்க படமே இல்லாத மாயாஜாலக் கதைகளாக இருக்கும். அட்டைப்படத்தில் மட்டுமே இளவரசன், இளவரசி மற்றும் கொம்பு முளைத்த பூதம் ஆகியோர் இருப்பர். உள்ளே ஒரு படமும் இருக்காது. அந்த வயதில் சற்று கஷ்டப் பட்டு, படித்து பழகிக் கொண்டிருந்தேன்.
    திடீரென்று ஒரு நாள் இந்தா புது காமிக்ஸ் என்று அப்பா ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.
    பொன்னி காமிக்ஸுக்கு பதிலாக முத்து காமிக்ஸ் என்று இருந்தது. அட்டைப்படத்தில் விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. தலைப்பு 'விண்ணில் மறைந்த விமானங்கள்' என்று இருந்தது.
    என்ன இது மாயா ஜாலக்கதை போல் தெரியவில்லையே என்று நினைத்தபடி முதல் பக்கத்தைப் புரட்டினேன். முதல் பக்கத்தில் படம் இருந்தது. மாஸ்கோ செஞ்சதுக்கம். என்று போட்டு விமானங்கள் சாகசம் செய்யும் காட்சி.
    அட படம் இருக்கிறது என்றபடி அடுத்த பக்கத்தைப் புரட்டினேன். அடுத்த பக்கத்தில் நான்கு படங்கள். இத்தனை படங்களா என்று ஆச்சரியப்பட்டு அடுத்த பக்கங்களைப் பரட்டினேன். பக்கத்துக்குப் பக்கம் படம். புத்தகம் முழுவதும் புரட்டினேன். முழுக்க படங்களோடு கதை. இன்ப அதிர்ச்சியில் சந்தோசம் தாங்க முடியாமல், முதல் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்து முடித்து விட்டுத்தான் வைத்தேன். ஆகா என்ன ஒரு ஆனந்தம்!
    அப்போதெல்லாம் பொழுது போக்கு என்று எதுவும் இல்லை. ரேடியோ கூட இல்லை. பக்கத்து ஊர் டூரிங் டாக்கிஸில் மாதம் ஒரு முறை பெற்றோரோடு படம் பார்ப்பது மட்டுமே ஆனந்தமான பொழுது போக்கு.
    அப்படி இருந்த எனக்கு விண்ணில் மறைந்த விமானங்கள் வீட்டிலேயே படம் பார்த்த உணர்வை ஏற்ப்படுத்தியது.
    பிரமிப்பாக இருந்தது.
    அதன் பின் அப்பாவிடம் நச்சரித்து கேட்டு, விசாரித்து படித்த கதை பாதாள நகரம். அதன் பின் முதல் முத்து காமிக்ஸ் 'இரும்புக்கை மாயாவி' என்றறிந்து, படித்து, அப்பாவிடம் மீண்டும் பேப்பர் காரிடம் சொல்லி மாதம் ஒரு முறை வரும் காமிக்ஸை வீட்டுக்கே வரவழைத்து படித்து, நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்து, அவர்கள் வாங்கிச் சென்று திருப்பித் தராமல் போக நொந்து, அதன் பின் சேர்த்த ஆரம்பித்து, என் தம்பி வளர்ந்து, படித்து, எனக்குத் தெரியாமல் அவன் நண்பர்களிடம் கொடுத்து அவைகளும் வராமல் போக விரக்தியடைந்து, உஸ்ஸ்...
    முத்து காமிக்ஸோடு ஒரு தனி உலக வாழ்க்கையே இருந்து வந்தது.
    இதில் என்னைப் போல் காமிக்ஸ் பிரியன் ஒருவனிடம் பள்ளியில் பேசி மகிழ்வதும் நடக்கும்.
    அவன் என்னை விட ஒரு படி மேல் சென்று, காமிக்ஸில் வரும் வெளிநாட்டு நகரங்களின் பெயரைச் சொல்லி அங்கெல்லாம் சென்று வந்ததாக கூறி பள்ளி நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொண்டிருந்தான்.
    ஒரு முறை ஆசிரியர் ஆப்பிரிக்கா காடுகளுக்கு யாரும் போக முடியாது என்று சொல்ல, மாணவர்கள் 'சார், சகதிவேல் ஆப்பிரிக்கா, அமெரிக்கா என்று எல்லா நாடுகளுக்கும் போயிருக்கிறானாம் சார் என்று சீரியசாய் சொல்ல, நண்பன் பலிஆடு போல் பயத்தோடு எழுந்திருக்க, ஆசிரியரோ 'அப்படியா! ஒரு சிலர் போயிருக்கலாம்' என்று குழம்பியது தனிக்கதை.
    நான் காமிக்ஸை பள்ளிக்கு எடுத்துச் சென்று திட்டு வாங்கியது தனிக்கதை.
    அப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்டது நமது முத்து காமிக்ஸ்.
    திரு. விஜயன் லயன் காமிக்ஸ் ஆரம்பித்த சமயம் கல்லூரிப் படிப்பு.
    அதனால், தொடர்ச்சியாக படிக்க இயலா விட்டாலும்,
    அவ்வப்போது பல கதைகளைப் படிக்க முடிந்தது.
    வேலையில் சேர்ந்த பின்னும் அப்படியே!
    தற்சமயம் பணி ஓய்வு பெற்ற பிறகுதான் படித்துக் கொண்டும், இப்படி எழுதிக் கொண்டும் முத்து லயன் காமிக்ஸோடு தொடர்பில் இருக்க முடிகிறது.
    ஆனாலும், எடிட்டர் CBSCல் படித்தும், வீட்டில் சும்மா இருக்க வேண்டிய காலக்கட்டாயம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
    ஆனால், அவர் படித்த ஆங்கிலம்தான் காமிக்ஸ் உலக மொழி பெயர்ப்புக்கு உதவுகிறது எனும் போது, மொழி பெயர்ப்புக்கு உதவுவதற்காகவே அந்த இடைப்பட்ட சிரமக் காலம் இருந்தது போலும். எல்லாம் நன்மைக்கே என்று எண்ணத் தோன்றுகிறது.
    அதனால், மேலும்,
    அவர் பணி தொடர வாழ்த்துகள் பல!

    ReplyDelete
    Replies
    1. Flashbacks.... ஒவ்வொருவருக்கும் ஒரு ரகம் சார்!

      Delete
    2. ஆமாம் சார். தந்தையாருக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்று உங்கள் சோகத்தை மறைத்ததது சரிதான். அவர் சூழல் அப்போது அப்படி. அதன் பின் தங்கள் எழுத்தை அவர் ரசித்தது ஒரு கொடுப்பினை அல்லவா! பாட்சா படத்தில் சொல்வது போல் நாடி, நரம்பு, இரத்தம் இப்படி எல்லாத்துலேயும் காமிக்ஸ் கலந்து இருபபவரால்தான் இப்படிப் பல புத்தகங்கள் வெளியிட முடியும்.
      பல வருடங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க முடியும்.
      முக்கியமாய் இப்படிக் கண் விழித்து வாசகர் கடிதங்களை நடு இரவிலும் படித்துக் கொண்டிருக்க முடியும். !!!

      Delete
    3. உணர்வுபூர்வ எழுத்து கண்ணன்.. எடிட்டர் சொன்னது போல... ஒவொன்றும் ஒவொவொரு வித அனுபவம்... வாழ்த்துக்கள். நன்றி.. ❤️👍🙏

      Delete
    4. நன்றி நண்பரே!

      Delete
  36. நான் ரன் டாப்பு

    ReplyDelete
  37. Replies
    1. No.. " முத்து விஜய சேம்ஸ் பாண்டி ". Lovely... 😄😄😄❤️👍....

      Delete
  38. 1983ல் பிறந்திருந்தேன் சார்.
    இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் சார்.

    ReplyDelete
  39. மனதை புரட்டும் பதிவு...தன்னம்பிக்கை ஊற்று...உங்க தத்துவம் உண்மைதான் போலும் சார்...புனித மானிடோ உங்களுக்கெனில் செந்தூரான் எனக்கு...நல்லவனோ கெட்டவனோ இறைவன் தகுந்த சமயத்தில் படியளிக்காது போவதில்லை போலும்...தூங்கி எழுந்ததும் இரை தேடும் பறவைக்கு ம்...தூங்கி வடியும் பறவைக்கும் இறைவன் உணவு தராமலிருப்பதில்லை...போராடியும் ஜெயிக்கலாம்...போராடாமலும் ஜெயிக்கலாம்....ஆனா உங்க போராட்டமும் வெற்றியும் சந்தோசம் தரும் உணர்வுகள்...சில கவலைகள்...தாத்தாவை உங்களோடு இணைத்தது பாட்டியின் இழப்பென்றால்...பின் வந்த வெற்றிகள் வரவு...இழக்காமல் வரவில்லை...ஒன்றையிழந்து ஒன்றை பெறுகிறோம்...அர்த்தமுள்ளதே வாழ்க்கை....உண்மையை தேடினால் தகுந்த காரணங்களினாலும் கும்...காரண காரியமில்லாது சுழலாது உலகு...உங்களோட ரைட்டிங்கிலே டாப் தன்னம்பிக்கையோட்டமிக்க பதிவுன்னா...டாப் அட்டைப்படமமுமிதே....லக்கி லூக் குக்கு சூப்பர் சர்கசுக்கு பின் என்னைக் கவர்ந்த டாப்பட்டை இதான்...


    80 கள் இரண்டே விசயம்தான் இனிக்கும் நினைவுகள்...நண்பர்களோடு விளையாட்டு ...காமிக்ஸ்...

    மே மாதத்துக்காக ஊருக்கு செல்ல வருடம் தோறும் காத்துக் கிடப்பதும்...மாதந்தோறும் வரும் காமிக்ஸ் களுக் காகவும் ...ஸ்பெசலா லயன் ஜுனியர் முத்து திகில்...ரத்னபாலா...பூந்தளிர்...அம்புலிமாமா...பால மித்ரா ..கோகுலம்....பொன்னி காமிக்ஸ்...இரும்புக் கை...கடல் கொள்ளையர் கதைகள்...ராணி காமிக்ஸின் வரும் ஜேம்ஸ்பாண்ட் இல்லா கதைகள்...மாயாஜால இதழ்கள்...நீங்க தேடியது போல லேனாவின் டிடெக்டிவ் ஆனது எப்படி...


    உலகம் முழுக்க சந்தோசங்களுக்கு பஞ்சமிராது போலும்.....
    எனக்கு கிடைத்த முதல் இரும்பு மனிதன்..அது கிடைக்கவில்லையெனில் வேறு திசையில் சந்தோசம் இருந்திருக்கலாம் தான்...
    ஆனா அந்த லயன் என் வாழ்வில் சந்தோச செடிக்கு எந்த குறையும் இல்லாமல் நீர் தெளித்து எனில் ...மிகையில்லை நிஜமே...இந்த திசையில் இன்று வரை தொடர வைத்த தங்களுக்கு நன்றிகள்....ஸ்பைடர் லாரன்ஸ் டேவிட் மாயாவி கதைகள் இனியில்லை என்று அன்றைய ஏமாற்றங்கள்...ஆனா இன்று வரை நம்பவில்லை...ஸ்பைடர் கூட தொடருதே...

    சிறு வயது முதல் எந்த பாதிப்புகளும் பெரிதாய் நடந்ததில்லை..அழகிய வாழ்க்கை.இப்போது வரை தேவையானது கிடைத்தே வருகிறது...வாழ்க்கை அழகானதே...அன்று அடுத்த வெளியீடு களுக்காய் ஸ்கார்பியோ ரேம்போ டாக்டர் கராத்தே...ரேம்போ ஆவலாய் காத்திருந்தது போல இன்றும் குறையா ஈர்ப்போடு லார்கோ பதிமூனு பயணம் கோகினூரான பரகுடா..பெயர் நினைவுக்கு வர மாட்டேங்குதே அந்த வித்தியாச துப்பாக்கி மனிதன் தற்போதய கோடை மலர்கள்....சாம்பலின் சங்கீதம்...திகைக்க வைக்கிறீர்கள் சார்...நீங்க தந்த சந்தோசம் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது அதே சாரலாய் இந்த மரத்துக்கு

    ReplyDelete
    Replies
    1. இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்...அப்பவே இரும்பு மனிதனை படித்தேன் என்பதே இன்று வரை நான் பெருமைப்படும் விசயம்...நீங்க 17 வயதில் தொழில் துவங்கியதற்கிணையாய்

      Delete
    2. அருமையாய் சொல்ல இருக்கீங்க ஸ்டீல்

      Delete
  40. ஐயா, பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்த டிடெக்டிவ் ஏஜென்சி இருந்த ராசிபுரம் தான் அடியேனின் சொந்த ஊர்.

    ஹி ஹி ஹி...

    ReplyDelete
  41. எடிட்டர் சார்... இயக்குனர் சேரனின் சைக்கிளை நீங்கள் கடன் வாங்கிக்கொண்டு அப்படியே ஒரு உலா போக ஆரம்பித்து விட்டால், நிலாவையும் நட்சத்திரங்களையும் ரசித்துக் கொண்டே பாட்டியிடம் கதை கேட்ட திருப்தி கிடைத்துவிடுகிறது எங்களுக்கு!

    எந்த முன் அனுபவமும் இன்றி அன்றைக்கு நீங்கள் அந்த வயதில் அந்த காலண்டர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டது ஒரு அசாத்தியமான விஷயம்! உங்களது அந்த முதல் வெற்றியே அதன் பிறகான அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஊக்கமளித்திருக்கிறது & பல வெற்றிகளையும் தேடி கொடுத்து இருக்கிறது என்பதை உணர முடிகிறது! 💐💐💐

    அந்த ராசிபுரம் டிடெக்டிவ் இன்ஸ்டிடியூட்டுக்கு நன்றிகள் பல!🙏🙏 அவங்க மட்டும் அன்றைக்கு கோர்ஸ் மெட்டீரியலை உங்களுக்கு அனுப்பி வைத்திருந்தால் இன்று எங்களுக்கு ஒரு நல்ல எடிட்டர் கிடைக்காமல் போயிருந்திருப்பார்! ( ஆனால் நாடு ஒரு நல்ல டிடெக்டிவ்வை இழந்து விட்டதே.. வடை போச்சே!!🤔)

    லக்கி லூக் அட்டைப்படம் அட்டகாசம்!! இரண்டு கதைகளிலுமே டால்டன்களும், ரின்டின்கேனும் இடம் பெற்றிருப்பது எக்ஸ்ட்ரா மகிழ்ச்சியளிக்கிறது! இந்த கூட்டணியில் அலப்பறைகளுக்கு பஞ்சமே இருக்காது என்பது உறுதி!😍😍😍😍

    1983ல் இளவரசருக்கு ஐந்து வயது! காமிக்ஸ் அறிமுகமான காலகட்டம்! காமிக்ஸ் படிக்க வேண்டும் என்பதற்காகவே ஒண்ணாம் வகுப்பில் அதிவேகமாக தமிழ் கற்றுக் கொண்ட காலகட்டமும் அதுவே! வகுப்பில் கற்றுக் கொண்ட மொழியை காமிக்ஸ் படித்து மேம்படுத்திக் கொண்ட காலகட்டமும் அதுவே!😇😇

    ReplyDelete
    Replies
    1. //நிலாவையும் நட்சத்திரங்களையும் ரசித்துக் கொண்டே பாட்டியிடம் கதை கேட்ட திருப்தி கிடைத்துவிடுகிறது எங்களுக்கு!//

      சரியா சொன்னீங்க இளவரசரே 😊

      Delete
    2. //அந்த ராசிபுரம் டிடெக்டிவ் இன்ஸ்டிடியூட்டுக்கு நன்றிகள் பல!🙏🙏 அவங்க மட்டும் அன்றைக்கு கோர்ஸ் மெட்டீரியலை உங்களுக்கு அனுப்பி வைத்திருந்தால் இன்று எங்களுக்கு ஒரு நல்ல எடிட்டர் கிடைக்காமல் போயிருந்திருப்பார்! ( ஆனால் நாடு ஒரு நல்ல டிடெக்டிவ்வை இழந்து விட்டதே.. வடை போச்சே!!🤔)//


      இளவரசரே 😂😂😂

      Delete
    3. //லக்கி லூக் அட்டைப்படம் அட்டகாசம்!! இரண்டு கதைகளிலுமே டால்டன்களும், ரின்டின்கேனும் இடம் பெற்றிருப்பது எக்ஸ்ட்ரா மகிழ்ச்சியளிக்கிறது! இந்த கூட்டணியில் அலப்பறைகளுக்கு பஞ்சமே இருக்காது என்பது உறுதி!😍😍😍😍//

      +9

      Delete
  42. சூப்பர் சார் நீங்கள் ஒரு லெஜன்ட் 1983 ஆறாம் வகுப்பு படித்து கொண்டு மாலை நேரத்தில் அப்பா நடத்தி கொண்டு இருந்த சாராய கடையில் க்ளாஸ் கழுவிக்கொண்டு இருந்தேன் 🙏

    ReplyDelete
  43. 1983 .. உங்களுக்கு நேர்மாறாக - வாழ்வினில் எனக்கு மிகச் சிறந்ததாய் அமைந்த ஆண்டுகளுள் ஒன்று சார். 1981ல் சென்னை வந்த அடியேன் - புது நண்பர்கள் - ரஜினி படங்கள் என்று செட்டில் ஆகியிருந்த வருடம், அப்பா ஜப்பான் சென்று வந்து - சில வீடியோ கேம்ஸ் மற்றும் எங்களது முதல் stereo செட் வாங்கிய வருடம். ரேடியோவில் வரும் அனைத்து பாடல்களையும் TDK 90 மினிட்ஸ் டேப்களில் பதிப்போம் நானும் என் தம்பியும்.

    1983 - அடியேன் பள்ளியில் அனைத்து தேர்வுகள் - கிளாஸ் டெஸ்ட் முதல் பைனல் எக்ஸாம் வரை 100 வாங்கிய ஒரே வருடம் - எனவே வீட்டிலும் ராஜ மரியாதை. (படிச்சது என்னவோ மூணாப்பு :-)) Class Teacher Vasantha Miss - அன்பே வடிவானவர் - வகுப்பில் அனைவரிடத்திலும் ஒரே அன்போடு கரிசனமாய் பாடங்கள் சொல்லிக்கொடுத்தவர் - நம்மோடு நம்ம வீட்டுக்கு வந்துட மாட்டாங்களா என்று அனைத்து மாணவர்களும் ஒரு சேர எண்ணிய குணங்கள் - விசால மனம் கொண்டவர்.

    தாதாக்கள் பாட்டிகள் அப்பா அம்மா என்று அனைவரும் உடல் நலம் நன்றாய் இருந்த ஒரு வருடம் என்பதால் திருப்பதிக்கும் பின்னர் பெங்களூருக்கும் அனைவரும் சென்று வந்த ஞாபகம். 
    சென்னையின் சுவையான ஹோட்டல்களான Mathura , New Woodlands , Parklands, Shantha Bhavan ஆகியவை அறிமுகம் ஆன வருடம். சும்மா சூப்பரான - நிறைவான ஒரு ஆண்டு என்றால் 1983 தான் சார் .

    ReplyDelete
  44. சார் , ஒரு டிடெக்டிவா தொப்பிய மாட்டிக்கிட்டு துப்பாக்கிய கைல எடுத்துக்கிட்டு பிண்ணணியில் ஜேம்ஸ் பாண்ட் தீம்மியுசிக் ஒலிக்க நடந்து கிட்டு இருப்பார்

    ReplyDelete
  45. 83 இல் 9 வயது ,ஆனால் 7வயதிலேயே முத்து காமிக்ஸ் சொந்தமாக முதலில் வாங்கியது தற்போது மறுபதிப்பாக வந்த முத்து காமிக்ஸின் கொலைகார குள்ளநரி.அதன்பின. முத்து,இந்திரஜால. என காமிக.ஸ் உலக வாசம்.தமிழ் வாணன் விசிறி என்பதால் கல்கண்டில் லயன் வரப்போகிறது என்ற கத்திமுனையில் மாடஸ்டியில் இருந்து லயன. வாசகன்.ஆனால் லயன் காமிக்ஸ். வெளியீட்டை fdfs களாக்கியது தானைத்தலைவன் ஸ்பைடர்.தான்.தமிழ்வாணனிலிரெந்து ஜெயமோகன் வரை வந்தாலும் மாறாதது லயன் வாசிப்பு தான்.

    ReplyDelete
  46. //1983 இல் பிறந்திருக்கிறீர்களா//
    1983ல் எனக்கு மூன்று வயது. அப்போதுதான் என்னை படைத்த பிரம்மனுக்கு மூளை இல்லாமல் படைக்க வேண்டிய என்னை மூளையுடன் படைத்தது மூன்று வருடங்கள் கழித்து தாமதமாகத்தான் ஞாபகம் வந்திருக்கிறது. உடனே காய்ச்சலை கொடுத்து அதை மூளையில் ஏற்றி விட்டார். காங்கேயத்தில் உள்ள மருத்துவமனையில் பார்த்து அங்கே ஆகாது என்று சொல்லி ஈரோட்டுக்கு செல்லச் சொல்லிவிட்டார்கள். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 3 மாதங்கள் பைத்தியம் பார்த்தபின் குணமாகி வீட்டுக்கு அனுப்பினர். ஆனாலும் அவர்கள் எந்த ஒரு உத்திரவாதமும் கொடுக்கவில்லை. அந்த மூன்றாம் வயதில் 1983இல் வீட்டுக்கு வந்த பின்னர் கிழக்கே கூப்பிட்டால் மேற்காகவும் தெற்கே கூப்பிட்டால் வடக்காகவும் செல்வேனாம். அது காலப்போக்கில் தான் சரியாகும் என்று சொல்லி விட்டார்களாம். இதுதான் என் மூனு வயதில் நடந்த அனுபவம். காலப்போக்கில் அதிலிருந்து மீண்டு வந்து விட்டாலும் மறதி என்கின்ற ஒன்று இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  47. 1983 - LKG student sir, 1979 born

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. அடுத்த பதினைந்து நாட்களுக்காவது புலரும் ஒவ்வொரு காலையிலும் என்னை நானே கண்ணாடியில் பார்க்கும் போது, லஜ்ஜை பிடுங்கித் தின்னாமல் இருக்க எதையும் செய்யலாமென்ற ஒரு desperation தான் என்னை அன்று இயக்கியது என்பது புரிகிறது


    தண்ணீருக்குள் இறங்காது நீச்சல் சாத்தியமே ஆகாதென்று ! கடப்பாரை நீச்சலோ, butterfly stroke களோ - எதையேனும் போட்டு தலையினை தண்ணீருக்கு மேலே தக்க வைக்க நமது survival instinct உதவிடும் என்று நம்பணும் போலும் ! Of course - எதுவும் வேலைக்கு ஆகாமல் போய் தண்ணீருக்குள் சுவாஹா ஆகிடவும் வாய்ப்புண்டு தான்..

    அருமை.....

    ReplyDelete
  50. டைலனின் "குட், பேட் அக்ளி" எப்போது வெளியீடு, சார்

    ReplyDelete