Powered By Blogger

Thursday, January 22, 2026

வல்லவர்களும் வீழ்வதுண்டு.. 😪

நண்பர்களே,

வணக்கம். வார்த்தை அலங்காரங்களுக்கு இது நேரமல்ல என்பதால் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேனே..... நண்பர் பல்லடம் சரவணக்குமார் நம்மிடமிருந்து விடை பெற்று ஆண்டவனின் பாதங்களில் நிரந்தரமாய் ஐக்கியமாகி விட்டார்....! 

போன டிசம்பர் முதல் தேதியன்று கோவை செல்லும் சாலையில் கார் விபத்துக்கு உள்ளானவர், காரிலிருந்த LPG சிலிண்டர் பற்றிக் கொண்டதில் கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகி இருந்தார். தவிர அந்தக் கரும் புகையினை நிறையவே சுவாசித்ததில் அவரது நுரையீரல்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன! கோவையின் 2 பெரிய மருத்துவமனைகளில், பெரும் பொருட்செலவில் குடும்பத்தினர் சிகிச்சை செய்து பார்த்தும், நண்பருக்கு ஒன்றன் பின் ஒன்றாய் இடர்கள் தொடர்ந்த வண்ணமே இருந்து வர, காலதேவனுக்கு மேற்கொண்டும் வாய்தா சொல்ல சாத்தியமாகிடவில்லை. நள்ளிரவுக்கு சற்றே பின்னர் நண்பர் SKP-ன் போராட்டம் ஒரு முற்றுப்புள்ளி கண்டுள்ளது.

இடைப்பட்ட தருணத்தில் அவரது குடும்பத்தாரின் நிதிச்சுமையினை சற்றே மட்டுப்படுத்த நாமெல்லாம் கரம் கோர்த்ததில் ஒரு கண்ணியமான தொகை சாத்தியப்பட்டு இருந்தது. நல்ல சிகிச்சைகளும், நம் அன்பும், பிரார்த்தனைகளும், இறை அருளும் எப்படியேனும் நண்பரை மீட்டுத் தந்து விடுமென்று நம்பிக்கை நிறையவே இருந்தது. ஆனால் கடவுளின் சித்தமோ வேறாக இருந்து விட்டது பெரும் சோகமே!

நண்பரை தனிப்பட்ட முறையில் எனக்கு maybe ஆறோ- ஏழு ஆண்டுகளாகத் தான் தெரியும். திருப்பூர் புத்தக விழாவிற்கு தன் பள்ளிக் குழந்தைகளை இட்டு வந்து, தன் கைக்காசைப் போட்டு காமிக்ஸ் வாங்க ஊக்குவித்து மகிழ்ந்த ஒரு ஆசிரியரைப் பற்றி நம்மாட்கள் சிலாகித்தது தான் சரவணகுமார் பற்றிய எனது முதல் நினைவு! க்ரூப் போட்டோக்களில் ஒரு மலர்ந்த முகமாய் மட்டுமே தொடர்ந்து வந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்னே சென்னை புத்தக விழாவுக்கு கிளம்பி வந்த போது தான் நேரில் நான் பார்த்தது! If memory serves me right, அந்த நேரம் நம்மைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பரில் நியூஸ் போட்டிருந்தனர் & சரவணகுமாரை பேட்டியும் கண்டிருந்தனர். மிகுந்த அன்போடும், தீரா காமிக்ஸ் காதலோடும், அதி தீவிர அக்கறையோடும் நமது பயணத்தின் ஒவ்வொரு முன்னெடுப்புமே ஜெயம் கண்டிட வேண்டும் என்ற முனைப்பு அவருக்குள் கனன்று வருவதை எனக்கு அன்றே உணரமுடிந்தது. தொடர்ந்த நாட்களில், நான் பதில் போட்டாலும் சரி, போடாது போனாலும் சரி, அவ்வப்போது வாட்சப் சேதிகளின் மார்க்கமாய் டச்சில் இருப்பார்...! தோர்கலின் அசாத்தியக் காதலர் என்ற முறையில் அடிக்கடி அந்தத் தொடரின் லேட்டஸ்ட் updates பற்றி பேசிக் கொண்டிருப்பார். தோர்கல் கதைகள் மீதம் இருப்பவை வருமா சார்- அல்லது மங்களம் பாடிடுவீங்களா? என்பதே நண்பரின் பிரதான கவலை....! தோர்களின் விற்பனை சுணக்கங்கள் பற்றிப் பதிவிடும் போதெல்லாம் நான் தாண்டிப் போயிருந்தாலும், நண்பர் SKP மருகியது நிஜம்..! 

2024 சென்னை Comic Con விழாவிற்கும் அவர் வந்திருந்தார், and டின்டின் in திபேத் இதழின் சிறப்புப் பரிசான நேபால் ட்ரிப் வாய்ப்பு சார்ந்த குலுக்கல் நிகழ்ந்த நொடியில் முன்னே, என்னருகே தான் நின்று கொண்டிருந்தார். நண்பர் சென்னை வெங்கடேஸ்வரனின் புதல்வி டப்பாவினுள் இருந்து ஒரு சீட்டை எடுத்து SPK என்று வாசித்த நொடியில், மெய்யாலுமே வாயடைத்துப் போனார் சரவணகுமார். சந்தோஷத் தகவலை வீட்டாரோடு பகிர்ந்து விட்ட கொஞ்ச நேரம் மௌனமாய் நின்று கொண்டிருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னவை என் காதில் இன்னமும் ஒலிக்கின்றது....! "வாழ்க்கையில் எனக்கு இதுவரை எதுவுமே பரிசா கிடைச்சதே கிடையாது சார்... இது தான் என் வாழ்க்கையின் முதல் பரிசு!" என்று சொன்னார். 

தொடர்ந்த வாரங்களில் அந்தப் பயணம் தொடர்பாய் அடிக்கடி தொடர்பில் இருந்தார்... அரசுப் பள்ளி ஆசிரியர் என்பதால் நேபாள் போவதற்குக் கூட அதிகாரப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என்று முயற்சித்தவர், "அது லேட்டாகும் போல் தெரியுது சார் - நான் வேணும்னா லடாக் போயிட்டு வரட்டுமா? " என்று வினவினார். நாமும் ஓ.கே சொல்ல, நம் பங்களிப்பில் தனது டிக்கெட்டையும், தன் கைக்காசில் தனது வீட்டாருக்கும் டிக்கெட்டும் போட்டு இமய மலைக்கு family trip சென்ற அனுபவத்தினை அத்தனை ஆர்வத்தோடு பகிர்ந்து வருவார் SKP...! அதிலும் நமது டின்டின் இதழை அங்கே பனிச் சிகரத்தில் நண்பர் ஏந்தி நின்ற போட்டோவெல்லாம் நமது ஆயுட்காலப் பொக்கிஷங்களுள் ஒன்று! But வாழ்க்கை எத்தனை ஸ்திரமற்றது என்பதை yet again காணும் போது தலைக்குள் ஒரு வெறுமையே வியாபிக்கின்றது!

எனது தீரா விசனம் நண்பர் பெரிதும் எதிர்பார்த்திருந்த THORGAL SAGA நம் மத்தியில் "விடைகொடு ஆரிசியா" என வெளிவந்திருக்கும் அதே மாதத்தில், அந்த இதழை ரசிக்கும் வாய்ப்பு கூட இல்லாது நண்பரும் விடைபெற்று விட்டதே!! இழப்புகள் இல்லா வாழ்க்கையே கிடையாதென்பது தெரிந்த விஷயமே, ஆனால் அவற்றை அனுபவத்தில் உணரும் ரணம் ஆற நிரம்பவே நாள் பிடிக்கும் போலும்! 

அமைதியாய் துயிலுங்கள் சரவணக்குமார்... இனி ஈரோட்டில் உங்களை சிரித்த முகமாய் பார்க்க முடியாது.... இதோ இரண்டே நாட்களில் துவங்கிடவுள்ள உங்கள் அபிமான திருப்பூர் விழாவிலும் தோர்கலை தூக்கிப் பிடிக்க நீங்கள் இருக்கப் போவதில்லை...! ICU-விலிருந்து வெளிப்பட்ட முதல் நாளே டெக்சின் "வல்லவர்கள் வீழ்வதில்லை" புக்கை கொண்டு வரக் கோரிய உங்களின் டெக்ஸ் நேசம் இனி நமது நினைவுகளில் மட்டுமே தொடர்ந்திடும்! உங்களுக்கு ரொம்பவே பிடித்தமான வைக்கிங் இதிகாசத்து வீரர்களின் சொர்க்கபூமியாம் வால்ஹல்லாவில் இனி உலவுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு 🙏🙏! 

Rest in Eternal Peace my friend!



52 comments:

  1. ஆழ்ந்த இரங்கல்கள் 😭

    ReplyDelete
    Replies
    1. உங்கள் இறுதி பயணத்தில் புனித தேவன் ஓடின் துணை வருவார் SK. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உங்கள் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்வது.

      Delete
    2. விடை கொடு ஆரிஸியா
      வந்த நேரத்தில் விடை கொடுங்கள் நண்பர்களே என்று கிளம்பி விட்டீர்களா நண்பரே 😭😭😭😭

      Delete
  2. ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  3. நம் நண்பர் தெய்வத்திரு.சரவண குமார், பல்லடம் அவர்கள் ஆன்மா இறைவனடி சேர்ந்திட வேண்டிக் கொள்வோம். அன்னாரது ஆன்மா சாந்தி கொள்ளட்டும்.. தன் மனதுக்கு மிகவும் பிடித்தமான தோர்கல் ஒட்டுமொத்த கலெக்ஷனையும் எங்கள் ஊரின் சிறுவர் சிறுமியருக்காக கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்ப்பேட்டை நூலகத்துக்கு அன்பளிப்பாக அளித்த கொடையாளர். சித்திரக்கதை வாசிக்கும் இரசிகர்கள் மனதில் கதாநாயகன் தோர்கல் பதிய வேண்டும் என்று பல போட்டிகளை முன்னின்று நடத்தியவர் பரிசுகளை வழங்கிய வள்ளல்.. இறைவனிடம் ஐக்கியமாகி விட்டார். அன்னாரது மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு..ஒரு புத்தகத்திருவிழாவிலும் தங்களை சந்திக்க இயலவில்லையே நண்பனே.. எங்கோ பிறந்தோம்.. காமிக்ஸால் இணைந்தோம்.. இனி என்று சந்திப்போமோ... திபெத் வரை சென்று எங்கள் மனதில் அதே மகிழ்ச்சி அலையடிக்கக் காரணமாக இருந்தவரே.. இனி எப்போது சந்திப்போம் நண்பனே.. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  4. அவரது தோற்கல் பற்றிய விளக்க பதிவுகள் அபாரமாய் இருக்கும்.. நிறைய பேரை அந்த தொடர் நோக்கி தொடர்ந்து ஈர்த்தவர். காமிக்ஸ் வட்டத்தில் தம்பி என அன்புடன் அழைத்தவர்கள் திடீரென இல்லாமல் போவது மனதை பாரமாக்குகிறது. தோற்கல் இதழை பார்க்கும் போதெல்லாம் அவர் நினைவுக்கு வருவார்.. 💔💐

    ReplyDelete
  5. Very sad to lose a die hard comic fan. Be in Valhalla with other gods Saravanakumar.

    ReplyDelete
  6. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
    நல்ல ஒரு நண்பரை இழந்து விட்டோம்🙏

    ReplyDelete
  7. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  8. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭

    ReplyDelete
  9. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். May his soul rest in peace.

    ReplyDelete
  10. ஒரு நல்ல நண்பரை, தோர்கல் காதலரை இழந்து விட்டோம். விரைவில் திரும்பி வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அவரின் இழப்பு தாங்க முடியாத பேரிழப்பு.

    ஆழ்ந்த இரங்கல்கள் 🥲🥲🥲🥲

    ReplyDelete
  11. நண்பர் SKP யின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். "விடை கொடு ஆரிசியா" எனும் மலர் தூவி அவருக்கு லயன் குடும்பத்தின் அஞ்சலி.

    ReplyDelete
  12. 😰😰😭
    🙏🙏 நண்பரே SK🙏🙏

    உங்களுடன் பழகிய ஒவ்வொரு
    மணித்துளியும் மரண படுக்கையிலயும் எங்களுக்கு மறக்காது நண்பரே 🙏💐😭

    தோர்கலுடன் துயில சென்று விட்ட நண்பரே..🙏
    தோர்கலின் காதலரே 🙏😰
    அடுத்த யுகத்திலும் காத்திருப்போம் உங்களுக்காக 🙏

    ReplyDelete
  13. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  14. நம்பவே முடியவில்லை.நிச்சயமாக மீண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்தேன்😥

    ReplyDelete
  15. நண்பர் சரவணகுமாரின் ஆத்மா நிம்மதியும் அமைதியும் கொள்ள எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  16. ஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே.. அமைதியாக துயிலுங்கள்

    ReplyDelete
  17. ஆழ்ந்த இரங்கல்கள் சரவணக்குமார் சகோ ..

    உங்கள் ஆன்மா சாந்தி கொள்ள பிரார்த்திக்கிறேன் .. 🙏🙏

    ReplyDelete
  18. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  19. நம்புவதற்கு மிகவும் கடினமாக உள்ளது
    மீண்டு வந்து விட்டார் என்று நினைத்தேன்.இந்த செய்தி மிகவும் மன வேதனையை தருகிறது. ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  20. ஆழ்ந்த இரங்கல்கள் ...

    ReplyDelete
  21. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  22. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  23. மனம் கனத்துப் போய்க் கிடக்கிறது...
    இந்த புது வருடத்தில் ஆரிசியாவுக்குத் தானே விடை கொடுத்திருந்தோம்.... 😢😢😢

    ReplyDelete
  24. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  25. கொஞ்சமும் நம்ப முடியாத செய்தி.
    ஏதோ தீக்கனவோ என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  26. ஆழ்ந்த இரங்கல்... RIP 😭

    ReplyDelete
  27. அன்பு நண்பரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இணைந்து இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  28. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  29. ஆழ்ந்த இரங்கல்கள், நண்பரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். தோர்கல் கதைகளின் ஆழத்தையும், வசீகரத்தையும் அனைவருக்கும் உணர்த்தியவர்

    ReplyDelete
  30. ஆழ்ந்த இரங்கல். சகோதரர் அமைதி பெற ஆண்டவனை வேண்டுவோம்

    ReplyDelete
  31. ஆழ்ந்த இரங்கல்.

    கண்ணீர் அஞ்சலி.

    🙏🙏🙏

    ReplyDelete
  32. Rest in Peace ! May god bless the family with abundant strength to tide through this difficult situation..

    ReplyDelete
  33. ஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே.

    ReplyDelete
  34. திருப்பூர் புத்தக விழா பற்றிய செய்தி அறிந்தவுடன் அங்கேநண்பரை நலமுடன் சந்திப்பேன் என்றே நினைத்திருந்தேன்.இறைவன் ஏமாற்றி விட்டார்.
    ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  35. 2014 -இல் மீண்டும் காமிக்ஸ் வருவது தெரிந்து உள்ளே வந்த போது எனது முதல் அறிமுகம் தோர்கல்
    2019-இல் சகோதரரை பார்த்திருந்தாலும் 2022-இல் தோர்கல் போட்டி நடத்தி அறிமுகமானார்.
    2024 -இல் திருப்பூர் புவி-யில் நேரில் சந்தித்த போது சகோதரரின் புத்தக காதலை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.
    தோர்கல் ஆரிசியா காதலை சிலாகித்து பேசினார், மறக்கவியால நேரங்கள்.
    இரண்டு வருடம் கொஞ்சமாய் நட்பு வளர்ந்து இருந்தது.
    புத்தக விழாவில் பள்ளி சிறார்களுக்கு மட்டுமல்ல நண்பர்களுக்கும் புத்தகங்கள் வாங்கி பரிசளிப்பார்
    இவர் கோபம் கொண்டு பார்த்ததில்லை


    எனது தோர்கல் சகோதரரான சரவணகுமாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏💐💐

    ReplyDelete
  36. நண்பர் சரவணகுமாருடன் நான் பகிர்ந்து கொண்ட சில தருணங்கள்.

    முதன் முதலில் அவரை பற்றி தெரிந்தது நான் கோவையில் பணி புரிந்து கொண்டு இருந்த போது எடிட்டர் சார் blog இல் அவரை பற்றி எழுதிய போது தான். ஒரு பள்ளி ஆசிரியர் அவரது மாணவர்களை அழைத்து வந்து அவரது காசிலேயே புத்தகம் வாங்கி கொடுக்கிறார் என்று. பிறகு எப்படி அவருடைய போன் number கிடைத்தது என்று தெரியவில்லை. அடுத்த வருடம் திருப்பூர் புத்தக விழாவின் போது நானே அவருக்கு call செய்து இந்த முறை நீங்கள் குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கி கொடுக்கும் போது எனது பங்களிப்பும் இருக்கட்டும், என கேட்ட போது அவர் இல்லை சார் இங்கே பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து தான் புத்தகம் வாங்கி கொடுக்கிறோம்.வேறு ஏதாவது ஒரு சமயத்தில் உங்கள் உதவி தேவைப் படும் போது செய்யுங்கள் என்று கூறினார்.

    அதற்கு பிறகு வெகு நாட்கள் கழித்து காமிக்ஸ் என்னும் கனவுலகம் குழுவில் தோர்கல் பற்றிய போட்டிகளின் போது தான் அவரது கேள்விகளையும் அவரது தோர்கல் பற்றிய ஆராய்ச்சிகளையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ரொம்பவே சிம்பிள் ஆன மனிதர். எப்போதும் நியாயமாக நடந்து கொள்ளும் ஒருவர். அழகாக பேசக் கூடியவர்.

    தோர்கல் போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த நண்பர்களுக்கு தோர்கல் Elite Group என்று ஒரு குழு வைத்து இருந்தார். அதில் நானும் ஒருவன். பிறகு அவரை நேரில் பார்த்தது முத்து 50 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது தான். அப்போது அவரே காசு செலவு செய்து பிரிண்ட் செய்து கொண்டு வந்த தோர்கல் T-shirt இப்போதும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அதற்கு பிறகு அவரை பற்றிய மிக முக்கியமான நினைவுகள் இரண்டு,
    1. 2024 சென்னை Comic Con நிகழ்வு நானும் அன்று அந்த குலுக்கல் நடந்த போது அங்கே இருந்தது மிக மகிழ்வான நினைவு, அவரது பெயர் கொண்ட சீட்டு எடுக்கப் பட்ட உடன் அப்படியே அவர் திகைத்து நின்றது ஜோதி மேடம் சார் நீங்க தான் வின்னர் என்று சிரித்துக் கொண்டே சொன்னது இன்னமும் என் மனக்கண்ணில் தெரிகிறது.
    2. சீனியர் எடிட்டரின் நினைவேந்தல் நிகழ்வு சேலத்தில் நடைபெற்றது அப்போது அவர் பேசிய சீனியர் எடிட்டரின் கனவு எல்லாருக்கும் காமிக்ஸ் சென்று அடைய வேண்டும், ஒரு அமிழ்தினை சுவைத்த ஒருவன் அதனை எல்லாருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று போராடிய போராட்டத்தை பற்றி பேசியது காலத்துக்கும் நினைவில் இருக்கும். அடுத்த தலைமுறைக்கு காமிக்ஸ் போய் சேர வேண்டும் என்று அவர் அன்று பேசிய பேச்சு தான் இந்த ஆண்டு Gen Z ஆக நம்மிடம் உள்ளது. அவரது மனைவியையும் அன்று சந்திக்க முடிந்தது. இன்னும் பல விஷயங்கள் உள்ளன இதுவே ரொம்ப நீளமாக உள்ளதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

    நண்பரின் ஆசையை நிறைவேற்ற முடிந்த வரை முயல்வேன் என்பது தான் நான் எடுத்துக் கொள்ளும் உறுதி. நீங்கள் எப்போதும் எங்கள் நினைவுகளில் வாழ்வீர்கள் SK. 😭😭😭🙏🏽🙏🏽🙏🏽

    ReplyDelete
  37. ஆழ்ந்த இரங்கல்கள். அவருடன் இமயமலை பயணம் ஒன்று பல வருடங்களாக திட்டமிட்டு கொண்டே இருந்தேன்.

    அவர் அழைக்கும் போதெல்லாம், அடுத்த வருடம் அடுத்த வருடம் என்று பதில் கூறி, கடைசியில் அமையாமலே போய்விட்டது. சென்று வா PSK நண்பா.

    ReplyDelete