Powered By Blogger

Sunday, October 13, 2019

ஈர்....பேன்...பெருமாள் !!

நண்பர்களே,

வணக்கம். செவ்வாயன்றே ஆஜராகியிருக்க வேண்டியவன் இதோ, இந்த ஞாயிறு அதிகாலை வரையிலும் காணாமல் போக நேரிட்டது ஏனோ? என்ற கேள்வி எழுந்திருக்கலாம்! அதற்கான பதில்  பதிவின் இறுதியில் ! So இப்போதைக்கு விட்ட இடத்திலிருந்து தொடர முயற்சிக்கட்டுமா – மான்ட்ரியால் விமான நிலையத்தின் அந்தப் பனி ராத்திரியிலிருந்து?

"மொத்த ஏர்-போர்ட்டுமே ஷட்-டவுண்! யாரும் எங்கேயும் போகப் போறதில்லே!‘ என்று எனக்கு முன் நின்ற வெள்ளைக்காரர் சொல்ல – பாதித் தூக்கத்தில் நின்ற நான் மலங்க மலங்க முழித்தபடிக்கே மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தேன் ! விறுவிறுவென வரிசை நகர விமான நிலையத்தின் ARRIVALS தளத்திற்கே எங்களை இட்டுப் போனார்கள் - ஏற்கனவே ஒப்படைத்திருந்த பெட்டி, படுக்கைகளை வாபஸ் தந்திடும் பொருட்டு ! உசர உசரமான கண்ணாடி ஜன்னல்கள் வழியே எட்டிப் பார்த்தால் - கும்மிருட்டில் வெள்ளைக் குவியல்களாய் தென்படுவது சகலமுமே வானம் மடை திறந்து வீசியெறிந்த பனி என்பது புரிந்தது. நிறைய இடங்களில் இடுப்பளவுக்குத் திண்டு போல பனி திரண்டிருக்க – ‘அம்போ‘வென அதன் மத்தியில் நின்ற எங்களது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் கண்ணில் பட்டது ! இன்னமும் ஏதாச்சும் அதிசயம் நிகழ்ந்து, எப்படியாச்சும் இந்தக் குளிர்ப் பொறியிலிருந்து தப்பிட வழி பிறக்காதா ? என்று யோசித்தபடிக்கே நடந்தால் – என் பெட்டி எதிரே நின்றது ! ‘ரைட்டு‘ ஆகிற வழியைப் பார்ப்போம்! என்றபடிக்கே பெட்டியைத் தள்ளிக் கொண்டு விமான நிலையத்தின் முகப்புப் பகுதிக்கு நடந்தால் கண் முன்னே விரிந்த காட்சி மிரளச் செய்தது!

நிறைய பிஸியான விமான நிலையங்களைப் பார்த்திருக்கிறேன் தான்; ஐரோப்பிய சம்மர் விடுமுறைக் காலத்தின் போது பாரீஸ் ஏர்போர்ட்டில் / லிஸ்பன் ஏர்போர்ட்டில்  வாசலிலிருந்தே திமிறிக் கிடந்த ஜனத்தையெல்லாம் பார்த்திருக்கிறேன் தான் – ஆனால் இது போலொரு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜனத்திரளை அன்று வரைக்கும் கண்ணில் பார்த்த அனுபவம் கிடையாது! கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் என்ன செய்கிறோம் ? ஏது செய்கிறோம் ? என்ற நிதானங்கள் இல்லாமலே தெற்கேயும் – வடக்கேயும் ஓடிக் கொண்டிருந்தார்கள். மணி இரவு பத்தரையை நெருங்கி இருக்க, முக்கால்வாசி ஏர்லைன் ஆபீஸ்கள் லைட்டை ஆஃப் செய்து விட்டு CLOSED என்ற போர்டைத் தொங்க விட்டிருக்க – யாருக்கும் எவ்விதத் தகவல்களும் நஹி ! வரிசையில் எனக்கு முன்னே நின்ற ஆசாமியோ, அடுத்த இரண்டு நாட்களாவது இங்கே தான் அடைந்து கிடக்கணும் போலத் தெரியுது! என்று பீதியைக் கிளப்பியிருக்க – கையிலுள்ள செல்லில் சார்ஜ் எத்தனையுள்ளது என்று தான் சரிபார்க்கத் தோன்றியது முதலில். வயிறுமே ‘பசி...பசி...‘ என்று சேதி சொல்ல – விமானத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றிருந்தவனுக்குச் சுருக்குத் தட்டியது ! ‘ஆஹா.. கைவசமுள்ள சொற்ப பிஸ்கெட் & சாக்லெட்டுகளை இருப்பாக வைத்துக் கொண்டு, இப்போதைக்குக் கிடைப்பதை வாங்கும் வழியைப் பாருடா என் பீன்சு!‘ என்று மண்டை உத்தரவிட, வேக வேகமாய்க் குறுக்கே, நெடுக்கே ஓடிக் கொண்டிருந்த ஜனங்களின் பட்டியலில் நானும் சேர்ந்து கொண்டேன்! ‘எங்கே ஹோட்டல்? எ்ஙகே ஹோட்டல்?‘ என்று நாலாபக்கமும் ஆந்தைவிழிகளைச் சுழற்றியபடிக்கே நோட்டமிட, முக்காலே மூன்று வீசம் மூடப்பட்டிருக்க, இரண்டே இரண்டு Fast Food Outlets மாத்திரமே ஓடிக் கொண்டிருந்தன! ஆனால் – ‘இன்னியோடு பர்க்கரும், சிக்கனும், பீட்ஸாக்களும் அழிஞ்சிடும் புள்ளைங்களா...! இப்போவே சாப்பிட்டாச் சாப்பிட்டுக்கோங்க!‘ என்ற தகவலை ஆண்டவன் அங்கே மண்டி நின்ற பல நூறு ஜனங்களின் காதுகளுக்குள் மட்டும் பிரத்யேகமாய்ச் சொல்லி வைத்திருந்தாரோ – என்னவோ, கைகளில் ஆறு., தலையில் நாலு என்ற ரீதியில் பார்சல்களை வாங்கித் தெறிக்க விட்டுக் கொண்டிருந்தனர் ! நம்மூர் டாஸ்மாக்களில் விடுமுறை தினங்களுக்கு முந்தைய நாட்களில் நடக்கும் WWF ரகளைகளை நிறையப் பார்த்திருக்கிறேன் ; ஆனால் அதெல்லாம் ஜுஜுப்பி என்று சொல்லும் விதமிருந்தன அந்த 2 உணவகங்களிலும் மக்கள் நடத்திக் கொண்டிருந்த மல்யுத்தங்கள் ! எனக்கு முன்னே குறைந்தது 400 பேர் நிற்பது தெரிய – மான்ட்ரியாலின் மொத்தக் கால்நடை எண்ணிக்கையும் அங்கே கொணர்ந்திருந்தாலுமே கூட, காத்திருந்தோரின் பசிகளுக்கு ஈடு தரப் பற்றாது என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது ! "பசிக்குப் புசிப்பது ஒரு பக்கமெனில், இது பீதிக்குப் புசிப்பதாயுள்ளதே!! “ச்சீ...ச்சீ... இந்த பர்கர்லாம் கசக்கும்!” என்றபடிக்கே அத்தனை நீள லைனில் நிற்கச் ஜீவனின்றி  ரிவர்ஸ் கியரைப் போட்டேன்! பவுசாய் மண்டை சமாதானம் சொல்லி விட்டிருந்தாலும் காற்றோடு விரவியடித்த பர்கர்களின் மணமும், சிக்கனின் சுகந்தமும் (!!) என் பசியைத் கூடக் கொஞ்சம் தூண்டிட, வாயெல்லாம் ஜலப் பிரவாகம்! ‘அத்தினி பயலுக்கும் இன்னிக்கு பேதி தாண்டியோவ்!‘ என்றபடிக்கே அந்தாண்டை நகர்ந்தேன்!


மனுஷனின் மனம் தான் எத்தனை வேகமாய் தனது priority களை மாற்றியமைத்துக் கொள்கிறது! என்பதை அந்த நொடியில் நினைக்காதிருக்க முடியவில்லை ! அதிகாலையில், பனிப்புயலுக்கு முந்தைய குளிர்வேளையில் அந்த அங்காடிக்குப் போவது பெரும் லட்சியமாய்த் தோன்றியது ! ஹோட்டலிலிருந்து ஏர்போர்ட் கிளம்பத் துடித்துக் கொண்டிருந்த தருணத்திலோ – ‘ஒரு டாக்ஸி கிடைச்சால் போதும் தெய்வமே... இந்த ஜென்மத்திலே வேற விண்ணப்பமே போட மாட்டேன்!' என்று உருகியது மனசு. டாக்ஸியில் அந்தப் பனிப் பொழிவினில் சிக்கித் தவித்த போதோ – ‘தெய்வமே.... என்னை ஏர்போர்ட் வரைக்கும் முழுசாக் கொண்டு போய்ச் சேர்த்திடேன் – ப்ளீஸ்! என்று பிரார்த்தனையின் திசை மாறியிருந்தது ! ஆனால் இதோ, இப்போது விமான நிலையத்தினுள் ஆபத்துக்கள் ஏதும் லேது என்ற நிலையில் ஒற்றை பர்கருக்காக இஷ்ட தெய்வங்களையெல்லாம் சம்மன் அனுப்பிக் கூப்பிடத் தோன்றிட – சிரிப்பதா ? அழுவதா ? என்று தெரிந்திருக்கவில்லை! “ரைட்டு... லண்டன் புரோக்ராம் கோவிந்தா... புத்தக விழா ப்ளான் எல்லாம் பீப்பீபீ...!” இனி இங்கேர்ந்து கிளம்பச் சாத்தியப்படும் வரைக்கும் கட்டையைக் கிடத்த ஏற்பாடு பண்ணனும் என்பது புரிபட, ஓரமாய்ப் படுக்க இடம் தேடும் வேட்டையில் இறங்கினேன்.

விமான நிலையத் தரைகளில் தூக்கத்தைத் தேடுவதென்பது எனக்கொரு புது அனுபவமே அல்ல தான் ! ஸ்டைலாக காதிலே ஹெட்-போனை மாட்டியபடிக்கே இப்டியும், அப்டியுமாய் பிட்ட சர்க்கஸ் செய்தபடிக்கே ஏர்போர்ட்டின் இருக்கைகளில் 'தேவுடா' காப்பதெல்லாம் நமக்கு ஒத்துவரா விஷயங்கள் ! ‘அக்கடா‘வென கட்டையைக் கிடத்தும் சுகம் வேறெதிலும் வராது என்பதால் – நள்ளிரவைத் தாண்டிய காத்திருப்புகளெனில் கிடைக்கும் முதல் ஓரத்தில் நீட்டி விடுவதுமுண்டு ! இன்றைக்கோ மான்ட்ரியால் விமான நிலையத்தின் அந்தப் பத்தாயிரத்துச் சொச்சம் பேருக்குமே அது தான் மார்க்கம் எனும் போது – ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் தரையில் ஜனம் உருண்டு கொண்டிருந்தது ! ஒரு ஓரத்தில் தரையோடு தரையான ப்ளிக் பாய்ண்ட் ஃப்ரீயாக இருப்பது கண்ணில் பட – “தெய்வமே!” என்றபடிக்கு அங்கே போய் என் பெட்டியைக் கிடத்தி விட்டு வேகம் வேகமாய் செல்லை சார்ஜில் போட்டு வைத்தேன் ! நமக்கு வயிறு ரொம்புதோ - இல்லியோ ; செல்லின் பேட்டரி ரொம்பாட்டி ரொம்பவே ராவடியாகிப் போகும் அல்லவா ? சரி... படுக்கலாம் என்று தீர்மானித்த போது தான் அன்றைய பொழுது ப்ரிண்டிங் மிஷின் inspection-ஐத் தொடர்ந்து அப்போது அச்சான சில தாட்களை மாதிரியாய் எடுத்து, பெட்டிக்குள் மடித்து வைத்திருப்பது நினைவுக்கு வந்தது – ஊருக்குத் திரும்பிய பிற்பாடு அந்த மிஷினை வாங்கிடவுள்ள கஸ்டமரிடம் காட்ட வேண்டிடும் பொருட்டு ! ஆனால் 'ஆபத்துக்குப் பாவமில்லை' என்றபடிக்கே பரபரவென்று பேப்பர்களை வெளியே எடுத்து அழகாய் விரித்து அதன் மேல் படுத்துக் கொண்டேன். எனக்குக் கொஞ்சம் தள்ளி ஜிலீர் தரையில் கிடந்த மனுஷனின் பார்வையில் செம கடுப்பு அப்பட்டமாய்த் தெரிந்தது ! சரி... தூங்க முயற்சிப்போம் என்றபடிக்கே கண்ணை மூடினால் அத்தனை விளக்குகளும் ‘ஜிலோ‘வென்று ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி நிற்கும் நிலையில் தூக்கமே பிடிக்கவில்லை. பற்றாக்குறைக்கு நள்ளிரவை நெருங்கும் வேளையில் குளிர் ஊசியாய்க் குத்தத் தொடங்க, போட்டிருந்த ஸ்வெட்டரெல்லாம் பற்றவில்லை. இப்படிப் புரண்டு, அப்படிப் புரண்டு என்று என்ன கூத்தடித்தாலும் குளிரைக் கழற்றி விட முடியவில்லை ! ‘அதிசயங்களுக்கு என்றுமே பஞ்சமிராது!‘ என்பதை அப்போது ஆண்டவன் yet again நிரூபித்துக் காட்டினார்! திடீரென்று என் மேல் ஒரு சிகப்புக் கம்பிளிப் போர்வை ‘பொத்‘தென்று விழ – ‘யார்டா அந்த கனேடிய கிருஷ்ண பரமாத்மா ??‘ என்று நிமிர்ந்து பார்த்தால் AIR CANADA-வின் சில பிரதிநிதிகள் சில நூறு கம்பிளிகளை அங்கே குளிருக்குள் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருந்த ஜனத்தினிடையே விநியோகம் செய்து கொண்டிருந்தனர். பெரிய போர்வையெல்லாம் கிடையாது தான் ; ஆனால் அசல் Wool என்பதால் அற்புதமாய்க் குளிர் தாங்கியது ! இன்றுவரைக்கும் என்னிடம் பத்திரமாயுள்ளதொரு பொருள் ! தலை வரைக்கும் பொத்திக் கொண்டு ஃபோனை எடுத்து நோண்டத் தொடங்கினேன்!


ஊருக்கு ஃபோன் அடித்து, மதியக் குட்டித் தூக்கத்திலிருக்கக் கூடிய எனது டிராவல் ஏஜெண்டை உசுப்பி விட்டேன்! ‘இன்ன மாரி... இன்ன மாரி... எல்லாமே கேன்சல் ஆகிப் போச்சு! இன்ன மாரி... இன்ன மாரி கொலைப்பசியோட தரையிலே கிடக்கேன்... எப்டிக்கா இங்கேயிருந்து வெளியேறது? டிக்கெட்டை மாத்திக் கீத்தி ஏதாச்சும் பண்ண முடியுமா?‘ என்று அவர் குடலை உருவினேன். என் தம்பியின் காலேஜ் நண்பன் தான் நமது டிராவல் ஏஜெண்டுமே என்பதால் சாவகாசமாய் மொக்கை போட முடிந்தது ! ஆனால் அந்த முனையிலிருந்து எதுவுமே சாத்தியமாகாது ; எதுவானாலும் மான்ட்ரியால் ஏர்-போர்ட்டில் சர்வீஸ் தொடரத் துவங்கும் சமயம், இங்கே தான் மாற்றியமைத்து வாங்கிக்கணும்!‘ என்று அவர் சொல்ல – யாரையாவது ஓங்கி நடுமூக்கில் குத்த வேண்டும் போலிருந்தது ! ஆனால் இங்கே தவறு யார் மீதுமே இல்லை எனும் போது, மிஞ்சிப் போனால் என்னை நானே குத்திக்கலாம் என்பது மட்டுமே option ஆகயிருந்தது. சரியென்று வரிசையாய் ஊரில் உள்ளோருக்கு சேதியைச் சொல்லி விட்டு தூக்கத்தைத் தேடிட மறுமுயற்சி செய்தேன்! சகலத்தையும் மீறி அசதி என்னை அரவணைக்க இரவு ஒரு மணிவாக்கில் தூங்கிப் போனேன்!


ஆனால் சகஜ சூழலில் இல்லை என்பது தலைக்குள் ஓங்கிப் பதிவாகியிருக்கும் நிலையில் தூக்கம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை ! எழுந்து பார்த்தால் மணி இரண்டே முக்கால்! என்னைப் போலவே மக்கள் குறட்டை விட்டுக் கிடப்பார்களென்று பார்த்தால் – நோ ! ஒரு கணிசமான ஜனத்திரள் ஆஞ்சநேயர் வால் போலாக செம நீளமான 2 க்யூக்களில் வரிசைகட்டி நிற்பது தெரிந்தது ! ‘ஆத்தாடியோவ்... க்யூ நிற்குதே!‘ ஏதாச்சும் தகவல் தெரிஞ்சு தான் நிற்குறாங்களோ?‘ என்றபடிக்கே பதறியடித்து எழுந்து போய் அந்தக் க்யூவின் வாலில் ஐக்கியமாகிக் கொண்டேன்! எனக்கு முன்னேயோ இரண்டு இளசுகள் அந்த ராத்திரியிலும் செம ஜாலியாய் 'லவ்ஸ்' செய்து கொண்டிருந்தன ! என்னைப் போல பெருசாய் லக்கேஜ் இல்லை அவர்களிடம் ; அதே போல அந்தப் பகுதிகளது சீதோஷ்ணங்களுக்குப் பழக்கபட்டதாலோ – என்னவோ பெருசாய் அலட்டிக் கொண்டதாகவும் தெரியக் காணோம்! லைனில் நின்றபடிக்கே அடித்துப் பிடித்து, ஒரே ரொமான்ஸ் மூடிலிருக்க, எனக்கோ காதில் புகை வராத குறை தான் ! ‘இங்கே என்ன நடந்துக்கிட்டிருக்கு? இவனுக பாட்டுக்கு மிக்சர் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்களே ?‘ என்றபடிக்கே லைனில் எங்களுக்கு முன்னே நிற்கும் ஜனங்களை எண்ண முடிகிறதாவென்று பார்த்தேன்! ஊஹும்... குறைந்தபட்சம் ஒவ்வொரு லைனிலுமே 250 பேருக்குக் குறையாது நிற்பதால், தகவல் கவுண்டரில் ஆளுக்கு 2 நிமிடங்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட, எனது முறை வருவதற்கே பொழுது விடிந்திடும் என்பது உறைத்தது! ‘இந்தியாவிலே எல்லாமே க்யூ தான்... எதிலேயும் விறுவிறுப்பாச் செயல்படறதில்லே!‘ என்று புலம்பும் மக்களை அன்றைக்கு நான் சந்தித்திருந்தால் நிச்சயமாய் சில்லுமூக்குகளைச் சிதறடித்திருப்பேன் ! அத்தனை பெரிய ஏர்-போர்ட்டில் ஒரு இயற்கை இடரைத் தொடர்ந்து தகவலளிக்க மொத்தமே இரண்டே பெண்கள் தான் பணியமர்த்தப்பட்டிருந்தனர் ! இயன்றமட்டிலும் அத்தனை பேருக்கும் பொறுமையாய்ப் பதில் சொல்ல அந்த இருவருமே முயன்றாலும், நிமிஷத்துக்கு நிமிஷம் நீண்டிடும் க்யூவானது பொறுமையிழந்து கொண்டிருந்தது ! என்ன ஒரே saving grace – நடுவே ஒரு மேஜையில் விதவிதமாய் பிஸ்கெட்கள்; வாழைப்பழங்கள் & பருக ஏதாவதென ஒரு சிலர் கொண்டு வந்து அடுக்கிக் கொண்டே இருந்தனர் ! நம்மூராய் இருந்திருப்பின் – “இது எனக்கு; இது என் புள்ளைகளுக்கு; இது எங்க அத்தாச்சிக்கு; இது ஊரிலேயிருக்கிற எங்க பெரியம்மாவுக்குப் பக்கத்து வீட்டுப் பாப்பாவுக்கு!” என் மக்கள் வழித்திருப்பார்கள் ! ஆனால் அங்கேயோ தேவைக்கு மட்டுமே ஜனம் கைவைத்தது – நாசூக்காய்! நானும் என் பங்குக்கு வாழைப்பழத்தையும் (!!!) ஒரு பிஸ்கெட்டையும் எடுத்தபடிக்கே லைனுக்குத் திரும்பிய போது தான் நம்ம கவுண்டரின் தீர்க்கதரிசனம் என்னைப் புல்லரிக்கச் செய்தது ! ஒற்றை வாழைப்பழத்தின் நிஜமான மதிப்பு என்னவென்பதை அன்றைக்கே உணர்ந்திருந்து உலகுக்கே எடுத்துச் சொன்ன ஞானம் அவருக்கன்றி வேறு யாருக்கு வரும் ? தலைவா...நீர் தேவுடு !! 


மணி அதிகாலை 4-ஐ நெருங்கிய போது லைனில் நிற்கவே கால்கள் சண்டித்தனம் செய்தன ! பெட்டி மேலே அவ்வப்போது பிட்டத்தை அமர்த்திக் கொண்டாலும் செமத்தியாய் நோவியது ! வெளியே பனிப்பொழிவு நின்றிருந்தது ! காற்று மட்டும் இன்னமும் சுழற்றியடிப்பது தெரிந்தாலும் – அதன் மத்தியில் கணக்கற்ற துப்புரவுப் பணியாளர்கள் வெளிச்சாலையில் அந்த அகால வேளையிலும் பணியாற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது ! ‘என்னவொரு திடமனசு... என்னவொரு கடமையுணர்ச்சி‘ என்றபடிக்கே பார்வையை 360 டிகிரிக்கு சுழல விட்டேன் – அயர்ச்சியைக் கொஞ்சமாச்சும் தடைபோட ஏதாவது கண்ணில் படுமா ? என்ற ஆர்வத்தில் ! எனக்கு முன்னே நடந்து கொண்டிருந்த 'லவ்' ரவுஸைக் காணச் சகிக்காமலும் அப்பாலிக்கா  பார்த்திட முயன்றேன் என்றும் சொல்லலாம்!


அப்போது தான் உயரமாய், வெட வெடவென ஒடிசலானதொரு பெண்மணி ப்ரெஷ்ஷாக – டக்... டக்.. டக்கென்று கையில் ஒரு பேக் சகிதம் நடைபோட்டு வருவதைக் கவனித்தேன். சிகப்பு யூனிபார்ம் – அவர் ஏதோவொரு பொறுப்பிலிருக்கும் பெண்மணி என்பதை உணர்த்தியது ! ஏனென்று இன்னமுமே சொல்லத் தெரியலை – ஆனால் உள்ளுக்குள் ஒரு gut feel சொன்னது, இந்தப் பெண்மணி புதுசாய் ஒரு கவுண்டரைத் திறந்து அமரப் போகிறாரென்று ! திடு திடுப்பென லைனிலிருந்து அகன்று - நெடு நெடு பெண்மணியைப் பின்தொடர்ந்து போய் ஒருக்கால் பல்ப் வாங்கிடும் பட்சத்தில், லைனில் அதுவரையிலுமான 2 மணி நேரக் காத்திருப்பு வியர்த்தமாகியிருக்குமென்று புரிந்தது ! ஆனாலும், உள்ளுக்குள் ஏதோவொரு பட்சி அடித்துச் சொன்னது – இது 'பல்ப்' சமாச்சாரம் ஆகாதென்று ! பெட்டியைத் தூக்கிக் கொண்டு மறைகழன்ற பயலாட்டம் ஒரே ஓட்டமெடுத்தேன் அந்தப் பெண்மணி நடக்கும் திக்கில் ! என் யூகம் தப்பாகியிருக்கவில்லை ; சரேலென்று ஒரு கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்தார் – ‘This line is open too!’ என்று குரல் எழுப்பினார். அவர் வாய் மூடுவதற்குள் “உள்ளேனுங்க அம்மணி!” என்று அவர் முன்னே அலாவுதீன் விளக்குப் பூதமாட்டம் ஆஜராகி நின்றேன் ! அதற்குள் ஆங்காங்கே நின்றும், படுத்தும் கிடந்த ஜனங்கள் தெறித்தடித்து என் பின்னே குழுமத் துவங்கினர் ! ‘ஹி...ஹி...ஹி...‘ எத்தினி ரயில்வே ஸ்டேஷன் கவுண்டர்களைப் பார்த்திருப்போம்; எத்தினி தியேட்டர்களில் எத்தினி பாப்கார்ன் வாங்க ஏறிக் குதிச்சிருப்போம் ; எத்தினி பரோட்டா கடைகளிலே பார்சல் கட்டி வாங்க முண்டியடிச்சிருப்போம்... எங்ககிட்டேவா?‘ என்று உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்கிய போது – கடந்த 24 மணி நேரங்களுக்குள் புன்னகைக்கக் கிடைத்த முதல் முகாந்திரம் இதுவே என்பது பதிவானது! வேக வேகமாய் என் பாஸ்போர்டை எடுத்து நீட்டியபடிக்கே – ‘லண்டன் மேலே போகுது... ரெம்போ அர்ஜெண்ட் பிசுனஸ் கீது..! ஏதாச்சும் பார்த்துச் செய்யுங்கோ மேடாாம்!!‘ என்று பஞ்சப் பாட்டைப் பாடினேன் ! ‘ஏர்போர்ட் மறுக்கா பணியாற்றத் தொடங்கவே இன்னும் நேரமாகும் ; அதுவரைக்கும் பறக்கப் பறக்காதே லே !! என்று அம்மணி தலையில் தட்டும் என்று தான் எதிர்பார்த்திருந்தேன் ! ஆனால் அவர் திருவாய் மலர்ந்த போது – என் புள்ளை முதல்வாட்டி பள்ளிக்கூட மேடையில் ஏறி நர்சரி ரைம்ஸ் சொல்வதைக் கேட்ட போது தோன்றிய அதே பரவசம் பாய்ந்தது உள்ளுக்குள் ! ‘Montreal Airport will be operational from 6 in the morning!’ என்றார் !! திகைத்துப் போய் விட்டேன் – இத்தனை ராட்சஸப் பனிப்பொழிவையும் ராவோடு ராவாய்ச் சமாளித்து விட்டார்களே என்று !! அவர் சொன்னதைக் கேட்டு என் பின்னே லைனில் நின்ற மக்கள் ‘யேயயயய‘ என்று கூக்குரலிட – எனக்கும் கத்த ஆசையிருந்தாலும், ‘கன்ட்ரோல்.. கன்ட்ரோல்... நாமெல்லாம் இம்மாம்பெரிய பிசுனசுமேன் ; கடுவன்பூனைக்குப் பக்கத்துவூடு... அநாவசியமா பல்லைக்காட்டப்படாது!‘ என்று மனசு தடா போட்டு விட்டது !


அம்மணிங்கோ... எப்புடியாச்சும் என்னை லண்டனுக்கு அனுப்புங்களேன்னு‘ கெஞ்ச – கம்ப்யூட்டரையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து விட்டு – உதட்டைப் பிதுக்கினார் ! எனக்கோ வயிற்றுக்குள் சிமெண்ட் மிக்சர் ஓடுவது போலொரு உணர்வு ! “மான்ட்ரியாலிலிருந்தே நீ இலண்டன் பயணமாகனும்னாக்கா இன்னிக்கு ராவுக்குத் தான் முடியும் ! ஆனால் அந்த ப்ளைட் புல்... சீட் சுத்தமாயில்லே !‘ என்றார் ! ஒரே நொடியில் எனக்குள் அடுத்த 2 நாட்களையும் அந்த ஏர்போர்ட் மூலையில் செலவிடணுமோ ? என்ற பீதி தாண்டவமாடியது ! அதற்குள் அவரே- "உன்னை டொராண்டோவுக்குப் போகும் காலை ஃப்ளைட்டிலே போட்டால் அங்கேயிருந்து ராத்திரி கிளம்பும் லண்டன் விமானத்திலே சீட் தர முடியும் ! என்ன ஒரே சிக்கல்-பகல் முழுவதும் நீ டொராண்டோ ஏர்போர்ட்டில் 'தேவுடு' காக்கணும்!" என்றபடியே நிமிர்ந்து பார்த்தார் ! 'தாயே.... மகமாயி.... நிறைய புள்ளைகுட்டி பெற்று நீ நலமாயிருக்கணும்... முதல்லே அந்த ரூட்டுக்கு என் டிக்கெட்டை மாற்றி இந்த ஊர்லேர்ந்து கிளப்பிக் கூட்டிப்  போயிடு ! புயல் இல்லாத ஊரிலே பொரிகடலை சாப்பிட்டாச்சும் பகல் பொழுதைக் கழித்துக் கொள்கிறேன்!' என்று கோரிக்கை வைக்க, மளமளவென்று வேலை ஆகியது! இந்நேரத்துக்குள் பரபரவென இதர ஏர்லைன் கவுண்டர்களும் செயல்படத் துவங்கியிருக்க, அங்கே நிலவிய ஒட்டுமொத்த இறுக்கமும் தளரத்துவங்குவது புரிந்தது !! நானோ லாட்டரியில் ஜாக்பாட் கெலித்தவனைப் போல போர்டிங் பாஸை ஏந்திப் பிடித்தபடியே செக்யூரிட்டி சோதனை நோக்கி நடைபோட்டேன்! அங்கே லைனில் எனக்கு முன்னே தொட்டுப் பிடித்து ஆடிக்  கொண்டிருந்த இளசுகளோ ஏதோவொரு க்யூவின் கட்டக்கடைசியில் வாட்டமான முகங்களோடு நிற்பதைப் பார்க்க முடிந்தது! 'வர்ட்டா தம்பி !' என்று அவனை நோக்கிக் கையசைத்து விட்டு, செக்யூரிட்டியைத் தாண்டி, அதிகாலையிலான டொராண்டோ விமானத்தில் ஏறி உட்கார்ந்த போது  என் அதிர்ஷ்டத்தை எனக்கே நம்ப முடியவில்லை ! ஒரு மாதிரியாய் விமானமும் அந்த வெண்போர்வை ரன்வேயில் வழுக்கிய படியே take-off ஆன போது ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன்-கடந்த ஒன்றரை நாட்களில் என் கேசத்தில் ஒரு ஆயிரம் முடிக்கற்றைகளையாவது காவு வாங்கிய மாண்ட்ரியலை ! 'போதும்டா சாமி உங்க சகவாசம்' என்ற படிக்கே விடைகொடுத்தது; அப்பாலிக்கா டொராண்டோவில் பளீரென்று டாலடித்த சூரிய ஒளியில் தரையிறங்கியது ; அன்றைய பகல் பொழுதினை தின்னும், தூங்கியும் கழித்தது ; அன்றிரவு லண்டனுக்கான விமானத்தில் ஏறியமர்ந்தது என்று எல்லாமே fast forward-ல் நடந்து முடிந்தது ! இடைப்பட்ட நேரத்தில் லண்டன் புக் ஃபேரில் நான் சந்திக்கவிருந்த பதிப்பகங்கள் ஒவ்வொன்றுக்குமே மின்னஞ்சல்களைத் தட்டி விட்டேன் -"பனி மேட்டரு... பயணம் சொதப்பிட்டாப்லே... அப்பாய்ண்மெண்டை அடுத்த நாளைக்கு மாத்திக் குடுத்தா கூலாயிடுவாப்டி!" என்று ! பாதிப் பேர்-"சாரி; நாங்க நாளை புத்தகவிழாவில் இருக்க மாட்டோம் ; கடைசி நாள் என்பதால் சீக்கிரமே பேக் செய்து புறப்பட்டு விடுவோம்!' என்று பதிலளிக்க - நமது Fleetway கதைகள் சார்ந்த பதிப்பகத்தாரோ 'Sure .... no  problems ! See you tomorrow ! ' என்று பதிலளிக்க எனக்கு செம குஷியாகிப் போச்சு ! 'இத்தனை கூத்துக்களுக்கு அப்புறமும் முக்கியமானவர்களை சந்திக்க சாத்தியமாகுதே - சூப்பரப்பு!' என்றபடியே தூக்கத்தில் ஆழ்ந்தேன்!
    
விடிந்த போது பளபளக்கும் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் காத்திருந்தது ! என் தமக்கையின் மகள் சமீபமாய் லண்டனுக்கு மாற்றலாகிக் குடியேறியிருக்க அவர்கள் வீட்டில் தங்கியபடி புக்-ஃபேருக்கு விசிட் அடித்து விட்டு, அன்று ராவே இந்தியா திரும்புவது என்பதே திட்டமிடல் ! என் பிறந்த நாளுக்கு என்ன பாடு பட்டேனும் வீடு திரும்பிட வேண்டுமென்ற வைராக்யத்தில் லண்டனில் மருமகளின் குடும்பத்தோடு மேற்கொண்டு ஒரு நாளைச் செலவிடக் கூட மனசு ஒப்பவில்லை ! So பாஸ்ப்போர்ட்டில் 'லொஜக்'  என்று சீல் போட்டு வாங்கிய கையோடு - செக்-இன்  செய்த பெட்டியைச் சேகரிக்கக் காத்திருந்தேன் ! நின்றேன்-நின்றேன்-நின்றேன்-அந்த லக்கேஜ் பெல்ட் ரங்க ராட்டினம் சுற்றி முற்றிலுமாய் ஓய்ந்து போகும் வரை ; ஆனாலும் நம்மள் கி பொட்டி கண்ணில் படவில்லை ! அதற்குள் ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் சீருடையுடனானதொரு பெண்மணி என்னிடம் வந்து "மிஸ்டர் செலந்திரபேன்டியான் விஜாயான்?" என்றாள் ! 'ஊம் ' என்று மண்டையை ஆட்ட - 'Sorry sir... your baggage has not made the flight ! அது இன்னமுமே மாண்ட்ரியாலில் தானுள்ளது ! என்று குண்டைத் தூக்கிப் போட்டார் ! 'நாசமாய்ப் போச்சு... நான் குளிச்சு 2 நாள் ஆச்சுடிம்மா... என் கையிலே கர்ச்சீப் கூடக் கிடையாது !' என்று பதற, அவரோ "பொட்டியை  எங்கே கொண்டு வந்து தரணும்? நாளை வந்திடும் !" என்றார் ! எரிச்சலில் - "நாளைக்கு நான் 6000 மைல் தாண்டி ஊர் போய்ச் சேர்ந்திருப்பேனென்று" சொல்ல-" No Problems... அருகாமையிலுள்ள ஏர்போர்ட் எதுன்னு சொன்னாக்கா அங்கேயே அனுப்பிடறேன் ! போய் சேகரிச்சுக்கோங்க!" என்றவரிடம் அதற்கு மேல் சண்டையிட தம் இருக்கவில்லை !  "ம-து-ரை" என்று எழுதித் தந்து விட்டு 'அன்பே வா' எம்.ஜி.ஆர் பாணியில் கையில் ஒரு ப்ரீப் கேஸோடு மட்டும் புறப்பட்டேன் ! வெளியே என்னை அழைத்துப் போகக் காத்திருந்த மருமகளுக்கும், மாப்பிள்ளைக்கும், அவர்களது குட்டி டிக்கெட்டுக்கும் என்னைப் பார்த்த நொடியில் சந்தோஷப் பிரவாகம் ! எனக்குமே கடந்த 2 நாட்களது கூத்துக்களுக்குக் பின்னே nearer to family என்ற உணர்வு சொல்ல முடியா நிம்மதியைத் தந்தது ! பற்றாக்குறைக்கு 'இங்கே வெயிலடிச்சாலும், புயலடிச்சாலும் சோத்துக்கோ ; சாய்ஞ்சுக்க இடத்துக்கோ பஞ்சம் இராது சாமி!' என்று உள்மனசு சத்தமின்றிக் குதூகலித்துக் கொண்டது போலும் ! ஆனால் நான் வீசிய கையோடு நடந்து வருவதைப் பார்த்து -"என்னாச்சு?" என்று விசாரிக்க, பொட்டி தொலைஞ்ச கதையைச் சொன்னேன் ! 'ஒண்ணும் பிரச்சனையில்லே; வீட்டிலே உள்ள புது ட்ரெஸ் எதையாச்சும் எடுத்துக்கோங்க ; பெருசா வித்தியாசம் இராது !' என்று மாப்பிள்ளை பெருந்தன்மையுடன் சொல்லிட- எனக்கோ உள்ளுக்குள் ஒரு சன்னமான வருத்தம். முதல்வாட்டி வீட்டுக்கு போகும் தடிமாடு - வெறும் கையோடு போவது பற்றாதென அவர்களிடமிருந்த துணிகளையும் ஆட்டையைப் போடப் போகிறோமே என்று ! அதுமட்டுமில்லாமல் லண்டனில் போடுவதற்கோசரம் பரணிலிருந்து கோட்-சூட்டைத் தூசி தட்டி எடுத்து வைத்திருந்தேன் ! அனால் நமக்கு அந்த பந்தாவெல்லாம் சுகப்படாதென்று பெரும் தேவன் மனிடோவே தீர்மானித்த பிற்பாடு - வழக்கமான 'புல்லட் பாண்டி' வேஷத்திலேயே புத்தக விழாவுக்குப் புறப்படத் தீர்மானித்தேன் ! "முன்கூட்டிய பிறந்த நாள் பரிசென்று" ஒரு ஜீன்ஸையும், புதுச்சட்டையையும் மருமகள் கையில் தந்திட-காலம் தான் எத்தனை ஓடிவிட்டதென்று நினைத்துக் கொண்டேன் ! நண்டு போல இதே மருமகள் கைக்குள்ளும், காலுக்குள்ளும்  சுற்றித் திரிந்த 20 வருடங்களுக்கு முந்தைய காலத்தில் பிறந்தநாள் gift-களைத் தருவது எனது வழக்கமாக இருந்தது ! ஆனால் இன்றைக்கோ நண்டுகள் நல்மரமாகி-கரை கடந்த மண்ணில் வேரூன்றி நிற்பதை ரசிப்பதைத் தாண்டி  என்ன செய்வது ? மாப்பிள்ளையே  என்னை புத்தக விழா அரங்கினில்  காரில் இறக்கி விட - ஒரு மாதிரியாய்  இத்தனை கூத்துகளுக்குப் பிற்பாடும் இங்கே கால் பதிக்க முடிந்துள்ளதே என்ற சந்தோஷத்தில் வேக வேகமாய் உள்ளே புகுந்தேன்!

ஃ ப்ராங்க்பர்ட் திருவிழாவினை ஒப்பிட்டால் இது அதனில் இருபதில் ஒரு பங்கு கூடத் தேறாது தான் ! ஆனால் நமக்கு வேண்டப்பட்டவர்கள் பலரும் ஆண்டுதோறும் இங்கு வருகை புரிவதால் நம்மளவுக்கு இதுவும் முக்கியத்துவம் பெற்றிடுகிறது ! நேராய் நம்மவரைச் சந்திக்க அவரது ஸ்டாலுக்கு விரைந்தேன் ! கடைசி நாள் என்பதால் ரொம்பவே மிதமான கூட்டம் மட்டுமே ! பாதிப் பேர் ஆங்காங்கே  தென்பட்ட சிறு உணவகங்களில் அமர்ந்து ஒரு 'தம்'மைப்  போட்டபடிக்கே எதையேனும் கொறித்துக் கொண்டே பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தனர் ! Rebellion என்ற ஸ்டாலில் தூரத்திலிருந்தே என்னைச் சுண்டியிழுக்கும் Fleetway சமாச்சாரங்கள் நிறைய கண்ணில்பட்டன! இன்றைக்கு ப்ரான்கோ பெல்ஜியம் ; இத்தாலி ; ஈஞ்சாரு - என்று எங்கெங்கோ பிரயாணம் செய்து வந்தாலும் நம் துவக்கங்கள் என்றென்றுமே இங்கிலாந்தின் Fleetway-ல் தானே வேர் ஊன்றியுள்ளன ? So அந்த MISTY ; ஒற்றைக் கண் ஜாக்  ; பலமுக மன்னன் ஜோ ;  JUDGE DREDD போன்ற இதழ்களின் artwork போஸ்டர்களைப் பார்த்த போது - ஏதோ பால்ய நண்பன் ஒருவனை சந்தித்த குஷி ! அங்கே பொறுப்பிலிருந்த நிர்வாகியுமே 'பல நாள் பரிச்சயம்' என்பது போலான நேசத்தை முகமெலாம் நிறைத்திருக்க -அமர்ந்த மறு நொடியே என் ஓட்டை வாயைச் சலசலக்கச் செய்தேன் ! 

நாம் இதுவரையிலும் முயற்சித்துள்ள Fleetway கதாப்பாத்திரங்களைப் பற்றி விவரிக்கத் தொடங்க-எனது உற்சாகம் அவரையும் தொற்றிக் கொண்டது ! "ஸ்பைடர் போட்டுருக்கீங்களா ? அர்ச்சியுமா ? இரட்டை வேட்டையரா ? செக்ஸ்டன் ப்ளேக்கா ? ஸ்டீல் க்ளாவா ? " என்று கேட்டுக் கொண்டே போக-அவருமே Fleetway காமிக்ஸ்களை ஆராதித்து வளர்ந்தவர் என்பது நொடியில் புரிந்தது ! So ஒரு வியாபார discussion  என்ற தொனியில் அல்லாது - ஒரு சக காமிக்ஸ் காதலரோடு அரட்டையடிக்கும் பாணியில் எங்களது அளவளாவல் தொடர்ந்தது ! கதைகளுக்கான ராயல்டி என்னவென்பதை பரஸ்பரம் பாதிப்பில்லா ஒரு தொகையாக நிர்ணயித்த பிற்பாடு -கதைத் தேர்வுகள் எனும் சமாச்சாரத்தினுள் புகுந்தோம் ! அவர்கள் வரிசையாய் மெருகூட்டி, அடுத்தடுத்து வெளியிடவுள்ள Fleetway இதழ்களின் பட்டியலை ஒப்படைத்தார் - ஒரு சில முன்னோட்டப் பக்கங்களோடு ! பற்றாக்குறைக்கு அவர்களது படைப்புகளின் பெரும்பகுதி pdf பைல்களாக ஆன்லைனில் சேமிக்கப்பட்டிருக்கும் தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தி, அங்கேயே அமர்ந்தபடிக்கு அதனில் நமக்கொரு guest login ஏற்பாடு செய்து கொடுத்து - அந்த pdf பைல்களில் எதை வேண்டுமானாலும் திறந்து, வாசித்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தந்தார் ! திக்குமுக்காடச் செய்தது அவரது அன்பு ! அதே சமயம் -"இப்போதே, இங்கேயே உங்களது தேர்வுகளைச் சொல்ல வேண்டுமென்ற அவசியம் நஹி ! சாவகாசமாய் ஊருக்குத் திரும்பிய பிற்பாடு எல்லாவற்றையும் படித்துப் பார்த்த பின்னே கூட சொல்லலாம்!" என்ற போது பிரமிப்பாகயிருந்தது!
  
மனம் நிறைந்த நன்றிகளைச் சொல்லியபடியே விடைபெற்றவன், நமது படைப்பாளிகள் வேறு சிலரது ஸ்டாலுகளுக்கும் சென்று தலையைக் காட்ட யத்தனித்தேன் ! பெரும்பகுதியினர் கிளம்பியிருக்க - SOLEIL  நிறுவனத்து மேடம் மாத்திரமே அங்கிருந்தார் ! அவரிடம் நமது ட்யுராங்கோ  விற்பனைகள் பற்றி சந்தோஷமாய்ப் பேசியபடியே கிளம்பி விட்டேன் ! மேற்கொண்டு வேலைகள் ஏதுமிரா நிலையில் மாப்பிள்ளை & மருமகளோடு வீடு திரும்பி, அப்பாலிக்கா அருகிலிருந்த சரவண பவனில் தொந்தியை ரொப்பி விட்டு, இரவு 8 மணிக்கு மும்பை திரும்பும் விமானதைப் பிடிக்க விரைந்தேன்! மலர்ந்த முகத்தோடு காலையில் வரவேற்ற பிள்ளைகளின் முகங்களிலோ மாலையில் மெலிதான நீர்த்தாரைகள் ; எருமைக்கடா போல சுற்றித் திரியும் எனக்கே தொண்டை லைட்டாக அடைக்க, விடைபெற்று மறுநாள் மும்பை ; அங்கிருந்து மதுரை; அப்பாலிக்கா சிவகாசி என்று திரும்பினேன் - இப்போதுமே லக்கேஜ் இல்லாத லட்சுமணபாண்டியனாய் !
    
இந்த 2 பாகப் பதிவின் காரணப் புள்ளியே தலைகாட்டப் போவது இனி தான் எனும் போது - இத்தனை நீட்டி முழக்கிய என்னைச் சாத்த இஷ்டப்பட்ட துடைப்பங்களையெல்லாம் தூக்கிடலாம் தான் ! ஆனாக்கா "எதைச் சொல்றதாயிருந்தாலும் ஒரு ஃப்ளோவா  சொல்ற சுகமே தனி !!" என்பதை மூதறிஞர் ரோபோ ஷங்கர் நமக்கு உணர்த்தியுள்ளாரென்றோ ? ஊருக்குத் திரும்பிய பிற்பாடு-Fleetway கதைத் தேர்வுகளில் மும்முரமாகினேன் ! நமது ஜம்போ காமிக்ஸின் சீஸன் 1-ல் இயன்றமட்டிலும்  இவற்றை நுழைக்கும் உத்தேசத்தில் இருந்தேன் ! So வேக வேகமாய் வாசிப்புகள் துவங்கின... தொடர்ந்தன ! அந்நாட்களில் நாம் திகிலில் சிறுகதைகளாய் வெளியிட்டதெல்லாமே MISTY என்ற வாரயிதழில் வந்த சிறுகதைளையே ! அதனில் தொடராக ஓடிய சில பல நெடுங்கதைகளைத் தற்சமயம் தொகுப்புகளாக வெளியிட்டிருந்தனர் ! பரபரப்பாய் அவற்றைப் படித்துப் பார்த்தேன் ! MONSTER என்றதொரு மிக நீளமான தொடர் - சுமார் 190 பக்க நீளத்துக்கு ஓட்டமெடுக்க அதனையும் சுவாரஸ்யமாய்ப் படித்தேன் ! இடையிடையே JUDGE DREDD கதைகள் ; ஒரு கௌபாய் சாகஸம் ; அப்புறம் முதலாம் உலகயுத்தம் சார்ந்ததொரு நெடும் கதை வரிசை என்று ஏகத்துக்கு pdf களை டவுன்லோடு செய்து வாசித்த வண்ணமே இருந்தேன் ! ஆனால்... ஆனால்...


......நமது அந்நாட்களது ரசனைகளுக்குக் கச்சிதமாய் பொருந்திய இந்தக் கதைகளை தற்போது நாம் எவ்விதம் ஏற்றுக் கொள்வோமோ ? என்ற பயம் எழுந்தது ! Make no mistakes - அந்தப் படைப்புகள் எல்லாமே ஏ-ஒன்  ரகங்களே ! ஆனால் தற்சமயமாய் நாம் பயணித்து வரும் கௌ-பாய் ; கிராபிக் நாவல்கள் போன்ற திக்கில் இவை தடதடக்கவில்லை என்பதே நெருடியது ! 'CHARLEY'S WAR'  என்ற பெயரில் வெளிவந்திட்ட முதல் உலகயுத்தம் சார்ந்த கதைகள் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தன ; ஆனால்  யுத்தம் என்றாலே 'சத்தம்... மூச் !' என்று நீங்கள் உறுமிடுவதால் அக்கட கவனம் சாத்தியப்படவில்லை ! "Judge Dredd  போடலாமா ?" என்ற கேள்வியோடே-இன்ன பிற சயின்ஸ் பிக்ஷன் நாயகர்களையும் இணைத்து பதிவொன்று போட்டேன்... "பிடுங்குகிற ஆணியை நிகழ்காலத்திலேயே பிடுங்குடாப்பா !" என்று பொங்கி விட்டீர்கள் ! ஒட்டு மொத்தமாய் நீங்கள் thumbs down என்று சொல்லிட - அந்த கேட்டும் பூட்டியது புரிந்தது ! இதற்கு மத்தியில் நமக்கு ஏற்கனவே பரிச்சயமான ஒற்றைக்கண் ஜாக் + இயந்திரன் + விசித்திர மண்டலம் (Thirteenth Floor) கதைகள் கண்ணில் பட-இவை நிச்சயமாய் ஒற்றை இதழினில் தொகுப்பாக்கிட சுகப்படுமென்று தீர்மானித்தேன் ! பரபரவென்று 'இதில் இத்தனை... அதில் அத்தனை..." என பக்க எணிக்கைகளைத் தீர்மானித்த கையோடு அவர்களிடம் சொல்ல, சந்தோஷமாய் சம்மதித்தார்கள் !  ஜம்போவின் 'The Action Special' ஜனித்தது இவ்வாறுதான்! "இந்த ஒற்றை இதழ் மட்டும் தானா ? இப்போதைக்கு இது போதுமா ?" என்று அவர்கள் கேட்ட போது எனக்கு ரெம்பவே தர்மசங்கடமாயிருந்தது ! "இத்தனை கதைகளிருந்தும் நமக்கு சுகப்படுவதாய் எதையுமா தேர்வு செய்ய முடியாது போய்விடும்?" என்ற கடுப்பில் இன்னோரு முறை அவர்களது  தளத்தினுள் புகுந்து ஃபைல்களை பொறுமையாய் அலசினேன் ! அப்போது கண்ணில்பட்டது தான் "The Bendatti Vendetta"!


'அட...  புராதனம் அல்லது sci-fi என்ற கதைகளுக்கு மத்தியில் இது ஏதோ வித்தியாசமாய்த் தென்படுகிறதே !' என்றபடிக்கே அதை மேலோட்டமாய்ப் புரட்ட - தெறிக்கும் அந்த ஆக்ஷனும், அந்த மாறுபட்ட சித்திர பாணியும் மெர்சலாக்கியது ! இது நிச்சயமாய் நமக்கு ஓ.கே.வாகிடும் என்ற நம்பிக்கையில் அவசரம் அவசரமாய் இதையுமே நமது தேர்வாக்கி, படைப்பாளிகளுக்கு சொன்னேன் ! அதற்கப்புறம் நடந்தது தான் தெரியுமே - "வஞ்சம் மறப்பதில்லை" என்ற நாமகரணத்தோடு அட்டவணையில் இடம் பிடித்து, இதோ இம்மாதம் உங்களில் சிலரது மனங்களிலாவது இடமும் பிடித்துள்ளது ! So நான் பிடிக்க முனைந்த பிள்ளையாரே வேறு ; ஆனால்  இறுதியில் அது மலைக்குரங்காகிப் போய்விடக்கூடாதே என்ற ஆர்வத்தில் /ஆதங்கத்தில் அவசரமாய்ப் பிடிக்க முயற்சித்தபோது பலனானது  ஸ்டைலான இந்தப் பிள்ளையாரே  ! ஒன்றரை வாரங்களுக்கு முன்பாய் "வஞ்சம் மறப்பதில்லை" கதையைத் தேர்வு செய்த லயன் கி.நா.டீமுக்கு நன்றிகள்" என்று இங்கே நீங்கள் பதிவிட்டதை வசித்த போது  என் மனதில் நிழலாடியது தான் மேற்படி மேற்படி பதிவு(களும்), சார்ந்த நினைவுகளும், சிந்தனைகளும் ! பெரும் ஆராய்ச்சி செய்தோ; பெரும் அலசல்களைச் செய்தோ இந்தக் கதையை "டீம்" (ஹி!ஹி!) தேர்வு  செய்திடவில்லை !  எப்போதும் போல கொஞ்சம் வாசிப்பு ; கொஞ்சம் gutfeel ; கொஞ்சம் நல்லதிர்ஷ்டம் ! அவை கெலிக்கும் போது -"நான்தேன்... நான்தேன்..." என்று கழுத்தை நீட்டிக் கொண்டு - முன்வரிசைக்குப் பாயலாம் ! அவை சொதப்பும் போது - கன்னத்தில் மருவோடு தெலுங்கானா பக்கமாய் ரயில் ஏறிடலாம் ! எப்படிப் பார்த்தாலும் ஜாலியான பிழைப்பு தானே ?
    
So Thus Ends the 2 part பதிவு ! "எலிவால் நீளத்துக்கான சமாச்சாரத்தைச் சொல்ல 2 வாரப் பதிவுகளா ? நீ நல்லா வருவே !" என்று மானசீகமாயும், உரக்கவும், எழுத்துக்களிலும் வாழ்த்தப் போகும் நண்பர்களுக்கு முன்கூட்டிய நன்றிகள் ! இந்தப் பதிவின் தலைப்பை இக்கட ஒருவாட்டி நினைவு கூர்ந்து கொள்ளுங்களேன் - பொருத்தமாயிருக்கக்கூடும் ! "நியூஸிலாந்திலே ஷூட்டிங் வைக்காட்டி, நான் எப்போ நியூசிலாந்தை பார்ப்பது?" எனும் விவேக்கைப் போல - 'நான் என்றைக்குக் கனடா கதையை அவிழ்த்து விடுவதாம் ?' எது எப்படியோ - இரு ஞாயிறுகளை இந்த வாசிப்புக்கென செலவிட்ட நண்பர்களை கும்பிட்டுக்கிறேனுங்கோ ! And தீபாவளி மலர் பணிகள் பிசாசாய் பயமுறுத்த-அப்படியே அந்தத் திக்கில் குதிரையை விடறேன் இப்போதைக்கு !
    
அப்புறம் கடந்த சில நாட்களது லீவு பற்றி கொஞ்சம் கழித்து எப்போதாவது எழுதுகிறேனே... கையில் 'தம்' இல்லை இதற்கு மேலும் பேனா பிடிக்க ! இந்தப் பதிவின் நீளத்தைப் பார்த்து மிரண்டு போன நமது DTP நண்பர் - "ஆத்தாடியோவ்..முழுசையும் அடிக்க எனக்கு இன்னிக்கு மாளாது ; பாதி தான் முடியும் !" என்று கையைத் தூக்கியிருக்க, இரண்டாம் பகுதியை நம் ஆபீஸிலேயே கோகிலாவைக் கொண்டு அடித்து வாங்கியுள்ளேன் ! So இதற்கு மேலேயும் எழுதி போனால் DTP பணியாட்கள் அத்தனை பேருக்குமே சனிக்கிழமையானால் குளிர் காய்ச்சலாகிப் போய் விடும் ஆபத்துள்ளது ! Anyways ரொம்பவே தவிர்க்க இயலா சூழல் என்பதாலேயே இந்தப் பக்கமாய் பிராமிஸ் செய்தபடிக்கு தலைகாட்ட சாத்தியப்படவில்லை ! சற்று முன்னே இங்கு நுழைந்தால் பின்னூட்ட எண்ணிக்கை 1000+ என்று மிரட்டிட - கொஞ்சமாய் மூச்சு விட அவகாசம் கிட்டும் முதல் தருணத்தில் இந்த absence பற்றி பேசிட முனைவேன் ! இப்போதைக்கு bye all ! See you around ! Have an awesome weekend ! 

344 comments:

  1. காலை வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  2. /// ‘அத்தினி பயலுக்கும் இன்னிக்கு பேதி தாண்டியோவ்!‘ என்றபடிக்கே அந்தாண்டை நகர்ந்தேன்! ///

    சிரிச்சு மாளல...🤣🤣🤣

    ReplyDelete
  3. வஞ்சம் மறப்பதில்லை ஏமாற்றமில்லை சார் இது போன்ற வித்தியாசமான கதைகள் இருந்தால் தொடர்ந்து வெளியிடவும் வார் கதைகளில் ஏதாவது வித்தியாசமான கதைகள் இருந்தால் வெளியிட்டு பார்க்கலாமே (அழுகாச்சி இல்லாமல்) அதே போல சயின்ஸ் பிக்ஷன் கதையும் ஒன்றிரண்டு முயற்சித்து பார்க்கலாம்!

    ReplyDelete
  4. Replies
    1. Kok உங்களை தான் எங்கே காணோம் என்று நினைத்தேன்.

      Delete
  5. /// ‘ஹி...ஹி...ஹி...‘ எத்தினி ரயில்வே ஸ்டேஷன் கவுண்டர்களைப் பார்த்திருப்போம்; எத்தினி பாப்கார்ன் வாங்க ஏறிக் குதிச்சிருப்போம்; எத்தினி பரோட்டா கடைகளிலே பார்சல் கட்டி வாங்க முண்டியடிச்சிருப்போம்... எங்ககிட்டேவா?‘ ///

    சத்தியமா முடில... 🤣🤣🤣

    ReplyDelete
  6. ஸ் யப்பா ஒருவழியா வந்துடுச்சிபா.,.....

    ReplyDelete
    Replies
    1. ரவி சார்...சீக்கிரம் கழுவிக் கொண்டு ஓடிவாங்க! ஜாலியாய் பதிவை படிக்கலாம்...!

      Delete
    2. எனக்கு ஏனோ 'கோயமுத்தூரில் முக்கிய நபர் கைது' ங்கிற கவுண்டமணி காமெடி ஞாபகத்துக்கு வருது.

      Delete
  7. நவம்பர் இதழ்கள் பற்றி எந்த தகவலும் இல்லையே,டீஸர்,டிரெய்லர்?????

    ReplyDelete
  8. ஆஹா பதிவு வந்திடுச்சு!
    எல்லாரும் ஓடிவாங்க....ஓடிவாங்க....!

    ReplyDelete
  9. கனத்த மனதோடு
    இருக்கும் கணத்தில்
    இந்த தளத்தை சுவாசித்தால்
    கனமும் கனவாகிடுமே !!!


    😳😳😳

    நான் தானா ???

    😳😳😳

    ReplyDelete
    Replies
    1. நிஜமாகவே மனசு லேசாயிடுச்சு,...

      நன்றிகள் பல எடிட்டர் சார்.. 🙏🏼🙏🏼🙏🏼

      Delete
    2. நீங்களேதாண்ணே🙏🏼

      வேணுமின்னா சின்னதா ஒரு டெஸ்ட்டு பண்ணி பாருங்களேன்

      என்னான்னு கேக்குறீங்களா🤷🏻‍♂️

      வீட்டம்மாகிட்ட சின்னதா ஒரு கட்டைய கொடுத்து டெஸ்ட் பண்ணி பாருங்களேன் 😇🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

      Delete
    3. உண்மைதானுங்கோ பாசு 👍🏼🙏🏼
      .

      Delete
    4. /// வீட்டம்மாகிட்ட சின்னதா ஒரு கட்டைய கொடுத்து டெஸ்ட் பண்ணி பாருங்களேன்.. ///

      ஆச்சு.. ஆச்சு.. காலைலேயே வேலை செய்யாம, இதப் படிச்சு சிரிச்சப்பவே ஒரு ரவுண்டு முடிஞ்சது..

      Delete
    5. //ஆச்சு.. ஆச்சு.. காலைலேயே வேலை செய்யாம, இதப் படிச்சு சிரிச்சப்பவே ஒரு ரவுண்டு முடிஞ்சது..//

      ஹி...ஹி...ஹி..்் இங்கேயும்..

      Delete
    6. கவித சூப்பர் சரவணன் சார் :-))

      Delete
  10. //ஆனால் யுத்தம் என்றாலே 'சத்தம்... மூச் !' // வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.. என்று சொன்னாலும் மனதை பிசையும் கதைகள் பலருக்கு பிடிப்பதில்லை.. But i am looking forward to war stories...

    ReplyDelete
  11. //ஹி...ஹி...ஹி...‘ எத்தினி ரயில்வே ஸ்டேஷன் கவுண்டர்களைப் பார்த்திருப்போம்//


    ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  12. ஞாயிறு காலை வணக்கம் சார்
    மற்றும் நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  13. இரண்டுவாரங்கள்மின்னல்வேகத்தில்தடதடத்தசி. சி வயதில். எக்ஸ்பிரஸ் புனிதத் தேவன் மனிடோ வின்அருளாசி எடிட்டருக்கு உள்ளதைபறைசாற்றியது கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மனிடோ வின் அருளாசி உண்டு எடிட்டர் க்கு

      Delete
    2. பி.பி.வி. மறுபடி படிங்க அய்யாக்களா இருவரும்- சக்திவேல்&குமார்!!!

      Delete
    3. படிக்கிறேன் படிக்கிறேன் மீண்டும் மீண்டும் ஏற்கனவே பல முறை படித்து விட்டேன்

      Delete
  14. அருமை சார் அட்டகாசமான விவரிப்பு. காசு செலவு இல்லாமல் எங்களை கனடா கூட்டி சென்று திரும்ப அழைத்து வந்ததற்கு நன்றிகள் . நீண்ட நாட்களுக்கு பிறகு இரு நெடும் பதிவுகள்.

    ReplyDelete
  15. உங்களை காணாமல் மிரண்டு போய் விட்டோம் சார். Very long absence

    ReplyDelete
  16. Replies
    1. இருந்திட்டு போங்க (அந்த இருந்திட்டு இல்லீங்கோ ) யாரு வேணாமுன்னாங்க 🤷🏻‍♂️
      .

      Delete
  17. // நியூஸிலாந்திலே ஷூட்டிங் வைக்காட்டி, நான் எப்போ நியூசிலாந்தை பார்ப்பது?" எனும் விவேக்கைப் போல - 'நான் என்றைக்குக் கனடா கதையை அவிழ்த்து விடுவதாம் ?' // செம்ம செம்ம

    ReplyDelete
  18. // நம்மூர் டாஸ்மாக்களில் விடுமுறை தினங்களுக்கு முந்தைய நாட்களில் நடக்கும் WWF ரகளைகளை நிறையப் பார்த்திருக்கிறேன் ; ஆனால் அதெல்லாம் ஜுஜுப்பி என்று சொல்லும் விதமிருந்தன அந்த 2 உணவகங்களிலும் மக்கள் நடத்திக் கொண்டிருந்த மல்யுத்தங்கள் ! எனக்கு முன்னே குறைந்தது 400 பேர் நிற்பது தெரிய – மான்ட்ரியாலின் மொத்தக் கால்நடை எண்ணிக்கையும் அங்கே கொணர்ந்திருந்தாலுமே கூட, காத்திருந்தோரின் பசிகளுக்கு ஈடு தரப் பற்றாது என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது ! //

    படிக்கச்சயே பக்குன்னு இருக்கே
    நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருக்குமுன்னு நினைக்கச்சே
    ஆத்தாடியோவ் 😱

    சார் உங்களது பயண கட்டூரை
    படிக்கச்சே அப்படியே நாங்களும் உங்களோட சேர்ந்து ஊர் சுற்றிய மாதிரியே இருக்கு சார்😍🥰

    அதுக்காக சுற்றி காட்டியவகையில் அப்படீன்னு பில்லு கொடுத்துடாதீங்க சார் 🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. ///அதுக்காக சுற்றி காட்டியவகையில் அப்படீன்னு பில்லு கொடுத்துடாதீங்க சார் 🙏🏼
      .///

      ஹா ஹா ஹா!! செம்ம்ம்ம!! :))))))

      Delete
    2. பில்ல அதிக புக்கா விட்டு பணமா வாங்கிக்கலாம் சாமியோவ்

      Delete
  19. கடந்த சில நாட்களா உங்ககிட்டேர்ந்து எந்த சவுண்டுமே வராததால நம்ம மக்கள்லாம் பரிதவிச்சுப் போய்ட்டாங்க எடிட்டர் சார்! காரணம் எதுவாக இருந்தாலும் பதிவின் ரூபத்தில் உங்களை மீண்டும் இங்கே கண்டதில் மெகா மகிழ்ச்சி எங்களுக்கு!!

    பயணக்கட்டுரை - முதல் பாதியோடு ஒப்பிட்டால் கொஞ்சம் த்ரில்லிங் குறைச்சல் தான், எனினும் ஹாஸ்யம் பல மடங்கு அதிகம்! பல இடங்கள்ல படிக்கப்படிக்கவே கெக்கபிக்கேன்னு சிரிச்சுட்டேன்!!
    காலையிலேயே கெக்கபிக்கே பண்ணி இந்த நாளை உற்சாகமாக்கியதற்கு நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. நானும் மிக ரசித்து சிரித்தேன். பயண கட்டுரை எழுதுவதில் எடிட்டர் கிங் தான்

      Delete
  20. //sir, baggage has not made the flight ! அது இன்னமுமே மாண்ட்ரியாலில் தானுள்ளது ! என்று குண்டைத் தூக்கிப் போட்டார் ! 'நாசமாய்ப் போச்சு... நான் குளிச்சு 2 நாள் ஆச்சுடிம்மா... என் கையிலே கர்ச்சீப் கூடக் கிடையாது !' என்று பதற//

    LOL

    //மலர்ந்த முகத்தோடு காலையில் வரவேற்ற பிள்ளைகளின் முகங்களிலோ மாலையில் மெலிதான நீர்த்தாரைகள் ; எருமைக்கடா போல சுற்றித் திரியும் எனக்கே தொண்டை லைட்டாக அடைக்க,//

    ஏனோ தெரியல படிக்கும் போது என் கண்களும் கலங்கிவிட்டன.

    MH MOHIDEEN

    ReplyDelete
    Replies
    1. Mohideen சார் உண்மை ரசித்து படித்து இருக்கிறீர்கள்

      Delete
    2. பொதுவாய் நான் பயணம் போகும் போதெல்லாம் யாரும் வழியனுப்ப வருவதுமில்லை ; விடைகொடுத்தனுப்ப அவசியமாகிடும் விதங்களில் யாரையும் அயல்நாடுகளில் சந்திப்பதுமில்லை சார் ! கடாமாட்டைப் போல போக வேண்டியது ; வேலையைப் பார்க்க வேண்டியது ; முடிந்த முதல் நொடியில் மூட்டையைக் கட்ட வேண்டியது என்பதே எனது பொதுவான routine ! ஆனால் இம்முறை பிள்ளைகளை சந்தித்த போது தொண்டையில கிச் கிச் !!

      Delete
    3. விக்ச போடுங்க,,,மறுக்கா போங்க,,,,ஆவத எழுதுங்க

      Delete
  21. அம்மாடியோவ் ...பெரிய பதிவு.

    ReplyDelete
  22. ////'தாயே.... மகமாயி.... நிறைய புள்ளைகுட்டி பெற்று நீ நலமாயிருக்கணும்... முதல்லே அந்த ரூட்டுக்கு என் டிக்கெட்டை மாற்றி இந்த ஊர்லேர்ந்து கிளப்பிக் கூட்டிப் போயிடு ! புயல் இல்லாத ஊரிலே பொரிகடலை சாப்பிட்டாச்சும் பகல் பொழுதைக் கழித்துக் கொள்கிறேன்!'///

    என்னை ரொம்பவே கெக்கபிக்கே செய்த வரிகள்!! :))))))))

    ReplyDelete
    Replies
    1. நானும் காட்டனும் நென்ச்சேன், ,,மிந்திட்டீய

      Delete
  23. ஆயிரம் கமெண்ட் போட்டு சாதனை படைத்த அனைத்து காமிக்ஸ் கழக கண்மணி களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ராவுக்குப் பார்த்த போது எண்ணிக்கை 839 என்று நின்றது ; விடியலின் போது 1030 என்று மிரட்டியது !! சத்தியமாய் அதனுள் புகுந்திடவே பயமாக உள்ளது !!! அன்புக்கு ஓராயிரம் நன்றிகள் என்பதைத் தாண்டி வேறென்ன சொல்லவென்று தெரியலை சார் !!

      Delete
    2. \\\சத்தியமாய் அதனுள் புகுந்திடவே பயமாக உள்ளது !!! \\\

      நம்புங்கள் சார்!!!.அடிதடி ஏதுவுமே நடக்கவில்லை என்பது தான் மிகப்பெரிய ஆச்சரியம்.

      200 கமென்ட் வேண்டுமானால் போங்காக இருக்கலாம். ஆனால் 800 கமெண்ட் வரை பதிவிட்டது நிஜத்தில் நடக்கும் என்று என்றைக்கும் நான் நினைத்ததில்லை.

      அதுவும் 500 வது கமெண்ட் யார் போடுவது. 777 நேக்கா நோக்க என்ற போட்டியும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

      ஒவ்வொரு முறை சதம் அடிக்க போகும் நேரத்தில், நொடிக்கு அறுஏழு கமெண்ட் விழுந்தது.

      Delete
    3. உண்மை கணேஷ். ஒரு சின்ன முட்டல் கூட இல்லாமல் போனது அட்டகாசம். அதுவும் around 800 comments ellam நினைத்தே பார்க்க முடியாது

      Delete
    4. உண்மை போங்கில்லாம இருந்தா நீங்களே கொண்டு போயிருப்பீங்க,,,எப்டியோ போங்க பாங்கா மாத்தியாச்

      Delete
    5. 777 நான்தான்பா நிறைய பெஞ்ச் மார்க்குகளை செயலாளர் தட்டிச்சென்றார்
      விஜயராகவன் எல்லோரையும் உற்சாகப்படுத்தி கொண்டே இருந்தார் குற்றச்சக்கரவர்த்தி சளைக்காமல் முயற்சி செய்து கொண்டிருந்தார் ஆக மொத்தம் நேற்றிரவு ரொம்ப ஜாலியாக இருந்தது நன்றி நண்பர்களே இதற்கெல்லாம் காரணமான ஆசிரியருக்கு மிக்க நன்றி

      Delete
  24. சார் அருமையான பதிவு,,,,சிரிக்கவும் சிந்திக்கவும், ,,என்ன நடந்தாலும் வாழ்க்கை எளிது இனிது என உணர்த்தும் வரிகள்,,,,என்ன நடந்தாலும் கடவுள்கீறாரு என உணர்த்திய சேதிகள்,,,,நீங்க மிஸ்டரிய தொட்டிருக்கலாம் ,,,இப்பயும் கெடல, ,,,அந்த மான்ஸ்டர தயவு செஞ்சு படா சைசுல வெளியிட்டா தமிழ் கூறும் காமிக்ஸ்லோகம் உச்சி மோந்து வாரிக்கும்,,,,பாருங்க நீங்க சொன்னாமேரி நேத்து வர ஸ்பைடர்தான் முதன்மையா பட்டது,,,ஆனாக்க இன்னிக்கு பாருங்க மான்ஸ்டர் மான்ஸ்டரா வியாபித்து நிக்குது, ,,,,,மனம் முழுக்க,,,,போட்டி நிறுவனம் விட்டத போட்டா வம்பிழுப்பாங்களேன்னு பாராம போடவும்,,,,அங்கிள் டெர்ரிய படிச்சா கரையா மனமும் உருகுமே,,,,உணர்ச்சி பர்வமான அந்த கதைய படிக்க இன்றய தலை முறைக்கும் கருணை காட்டுங்கள்,,,,அந்த இரத்தப் பொரியலுக்கு மாற்றாய் அன்பு நாயுடன் பழகலாம்,,,பெண்டாடே அட்டகாசமே,,,,அந்த பெண்ணை குழந்தைய காட்டி சிதைக்கையில் மனமெங்கும் ரணங்கள்,,,,வாழ்க்கையே பிடிக்கர,,,,அன்றய தினம் வெறுப்பே விரவிக் கிடந்தது....மீண்டு வர சில நாட்கள் தேவைப் பட்டது,,,பார்த்துக் கொண்டிருந்த இந்த அயோக்கிய உலகான என்னயும் சேத்துதான், ,,,கண்ணகியா மாறி அழிச்சிடக் கூடாதா என தகிக்கஞ் செய்தது,,,நீளும் மீதக்கதய படிச்சா சரிதான் நம்மாளயும் சத்தியமா பலி வாங்க ஏலாது, ,,டெக்ஸ் போன்ற காவிய நாயகர்களுக்கே ஏலுமோ என தோன்றச் செய்தது,,,,அடடகாசம் வலுசேக்குதோவியங்கள்,,,,,மான்ஸடர தயவு தாட்சன்யம் காட்டாம ,,,ஈகோ பாக்காம,,,கடைசி பயணியா சேத்து முதல் புக்கா சென்னைத் திருவிழல விட்டா கொண்டாட்ட சுவை கூடும்

    ReplyDelete
    Replies
    1. என்னமோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது ஸ்டீல் !! உங்க ஆஸ்தான மொழிபெயர்ப்பாளர் இங்கே ஆஜரான பிற்பாடு அவர்கிட்டே பொழிப்புரை கேட்டு வாங்கிக்கிறேன் !

      Delete
    2. ஸ்டீல்...

      உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்குன்றது தெரியும்... ஆனா அது இப்போ ரொம்ப அதிகமாயிடுச்சோன்னு தோனறது! ;)

      Delete
    3. கல்யாணமாகியிருக்குமோ 🤔🤷🏻‍♂️

      ஓடிடுடா கைப்புள்ள 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️
      .

      Delete
    4. சார் தயவு செஞ்சு அந்த மான்ஸ்டர அடுத்தாண்டு வெளியிட்டா கிடா வெட்டி பொங்கலிட்டு அழுதுட்டே படிப்பேன்னு கால பிடிச்சு கேக்குறேன்,மறுத்துடாதீங்க, ,,ப்ப்ப்ளீஈஈஈஈஷ்ஷ்ஷ்ஷ்

      Delete
    5. ஆயிரம் கமெண்டுக்கு அசராம நம்பர் போட்டப் பவே நான் நெனச்சேன். ஏர்வாடிக்கு ஒரு டிக்கெட் பார்சல்னு

      Delete
    6. உங்க கூடத் தானே. சூப்பரப்பு

      Delete
    7. Extremely sorry.just for fun.apologies to you

      Delete
    8. ஹஹஹ...நண்பர்தான,,,ஜகஜம்,,,சாரி கேட்டா கொமட்டுல குத்துவேன்

      Delete
    9. //கல்யாணமாகியிருக்குமோ 🤔🤷🏻‍♂️// -))))))))) Super

      Delete
    10. கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்✈

      Delete
  25. ஒரு வணக்கத்தை போட்டு இடம் புடிப்போம்.
    காலை வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  26. //. அதுமட்டுமில்லாமல் லண்டனில் போடுவதற்கோசரம் பரணிலிருந்து கோட்-சூட்டைத் தூசி தட்டி எடுத்து வைத்திருந்தேன் ! அனால் நமக்கு அந்த பந்தாவெல்லாம் சுகப்படாதென்று பெரும் தேவன் மனிடோவே தீர்மானித்த பிற்பாடு - வழக்கமான 'புல்லட் பாண்டி' வேஷத்திலேயே புத்தக விழாவுக்குப் புறப்படத் தீர்மானித்தேன் ! //

    // மலர்ந்த முகத்தோடு காலையில் வரவேற்ற பிள்ளைகளின் முகங்களிலோ மாலையில் மெலிதான நீர்த்தாரைகள் ; எருமைக்கடா போல சுற்றித் திரியும் எனக்கே தொண்டை லைட்டாக அடைக்க, //

    ஒரு மசாலா (புரட்டாசி மாசம் அதனால அந்த மசாலா இல்லீங்கோ) படம் பார்த்தா மாதிரி இருக்கு சார்

    பர்பெக்ட் கலவை சார்

    செம்ம சார் 👍🏼🙏🏼💐
    .


    ReplyDelete
  27. சார்.. மிகவும் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று (பயணக்கட்டுரை பார்ட் 1+ பார்ட் 2)

    உண்மையாகவே பயணம் என்பது மிகச்சிறந்த ஆசான். நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கும் + கற்றுக்கொள்ள வைக்கும்.

    பயண அனுபவங்கள் + அது தொடர்பான நினைவுகள் எப்பொழுதுமே நம்முடனே இருக்கும்.

    இந்த பதிவுகளை நீங்கள் எழுதிய பொழுது (மனதளவில்) மீண்டும் ஒரு முறை அங்கே சென்று வந்து இருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை....

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உண்மை

      கூடவே நம்மையும் 😇
      .

      Delete
    2. ஆஹா நானும் நடுங்குனேன்,,,,காமடி பீசானேன்,,,எளியவனானேன் அதால வலியவனானேன்

      Delete
    3. // உண்மையாகவே பயணம் என்பது மிகச்சிறந்த ஆசான். நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கும் + கற்றுக்கொள்ள வைக்கும். //
      மறுக்க முடியாத உண்மை.......

      Delete
  28. பதிவு 800 *நெருங்கிய, போதும், எனக்கு தலை சுற்றியது மிண்டும் பதிவை (1000 +) பார்த்து மீண்டும் மயக்கம், இதை பார்த்த,ஆசிரியர்க்கு எப்படி இருக்கும்

    ReplyDelete
  29. அய்யா.. ராசா..மகராசா.. வந்துட்டியா.. நம்ம கமெண்டு கழக கண்மணிகள் உங்க பதிவோட தலைப்பு மாதிரியே 200 கமெண்ட்ல ஈரா இருந்தவுங்க 400க்கு மேல பேனாகி 1000த்த தாண்டி இப்ப பெருமாளா நிக்கிறாங்கய்யா பெருமளா நிக்கிறாங்க. நல்ல வேளை வந்தீங்க. இல்லன்னா.. நெனச்சாலே கொல நடுங்குது சாமி.
    அதுவும் அந்த ஸ்டீல் ஐயா இருக்காரே. மனுசன் கோழி முட்ட போடற மாதிரி அசராம நம்பரா போட்டுத் தள்ளறார். அவருக்கு திருஷ்டி சுத்தி போடுங்க. கண்ணுபட்டுடப் போவுது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஸ்டீல் claw உடைய பங்கு அளப்பரியது

      Delete
    2. ஹஹஹ தவறு நண்பரே, ,,,நீங்க உற்ச்சாகமா இருந்து துவக்கம் தந்தது என்னயும் குதிக்கச் செய்தது,,,,ஆசிரியர் வர்றதுக்குள்ள ஆயிரம் பதிவ தட்டிரனும்கிறதே முன்னாலிருக்க,,,பதட்டத்துல டைப்புனா ஆசிரியர் ஆறுக்குதான் வர்றார்,,,ஆனா விட்டாக்கா பல நண்பர்கள் புதிதா இணைந்து முன்னெடுத்து ஆயிரத்த ஒடச்சிருப்பீங்க ,,,,ஆனாலும் குமார் ,,,,எப்பா

      Delete
    3. குமார் பின்னிட்டாரு ஸ்டீல் கூப்பிடும் போதெல்லாம் வந்து சிக்சர் சிக்சரா விளாசினார்

      Delete
  30. ஙே

    ஆயிரம் கமெண்ட்டுங்களா 😱
    .

    ReplyDelete
  31. அதையும் தாண்டியாச்சுங்கய்யா.

    ReplyDelete
  32. தீபாவளிட்ரெய்லர்ப்ளீஸ். ஓட்டை வாய்உலகநாதன் தலைகாட்டுவாரா கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. // தீபாவளி ட்ரெய்லர் ப்ளீஸ் //
      +1111111

      Delete
  33. வணக்கம் எடிட்டர் சார்...!

    வணக்கம் ஆயிரங்களே...!

    இனி நண்பர்கள் என்பதற்கு பதிலாக ஆயிரங்கள்!
    (கொஞ்சம் நாள் ஆயிரம் அடிச்சதை நாமலே பெருமையாக சொல்லிக்க வேணாமா..!!!!)

    ReplyDelete
  34. மீண்டும் ஒரு மெகாஆஆஆஆஆஆஆஆ பதிவு! படிச்சிட்டு வர்றேன் சார்.!

    ReplyDelete
  35. இதுவரை மூன்று முறை (கடந்த பதிவை போல்) வாசித்து விட்டேன்.
    எத்தனை முறை படித்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. எவ்வளவு முறை படித்தாலும் சலிக்கவில்லை....

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். இந்த மாதிரி எழுத்து நடை அனைவருக்கும் கை வரப் பெறுவதில்லை.

      Delete
  36. // "எலிவால் நீளத்துக்கான சமாச்சாரத்தைச் சொல்ல 2 வாரப் பதிவுகளா ? நீ நல்லா வருவே !" என்று மானசீகமாயும், உரக்கவும், எழுத்துக்களிலும் வாழ்த்தப் போகும் நண்பர்களுக்கு முன்கூட்டிய நன்றிகள் !//
    அப்படி எல்லாம் ஒன்றுமில்லை சார்,பயணக் கட்டுரை மிக சுவராஸ்யமாக இருந்தது,உங்களது பயண சாகசங்களை தெரிந்து கொள்வதும் நல்லதுதான் சார்,நீங்கள் படும் சிரமங்களை வேறு எப்படித்தான் நாங்கள் தெரிந்து கொள்வது சார்.........

    ReplyDelete
  37. உப பதிவு போட தாமசமானதால் இங்கே சில நண்பர்கள் சேர்ந்து கும்மிட்டாங்க யுவர்ஹானர்.

    400, 500, 600,........னு கடந்து லயன் தள வரலாற்றுலயே மொத முறையாக 1000 கமெண்ட் என்ற அசைக்க முடியாத அசாத்தியமான உயரத்தை தொட்டுட்டாங்க!

    சாதித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் & வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐

    சிலபல மைல்கல் கமெண்ட்கள் விழ விழ நண்பர்கள் உற்சாகம் கரைபுரள நள்ளிரவு தூக்கத்தையும், வீட்டில் அம்மணிகளின் வசவுகளையும் தாண்டி அடிச்சி தள்ளிட்டாங்க!

    தள முந்தைய உச்சபட்ச எண்ணிக்கை ரெகார்டு பிரேக் பண்ணியது கோவையில் இருக்கும் சேலம்!

    சிலபல மைல்கள் கமெண்ட்கள்
    போட்டது

    சேலத்தில் இருக்கும் ஈரோடு,
    சேலத்தில் இருக்கும் சேலம்,
    கோவையில் இருக்கும் கோவை,
    சென்னையில் இருக்கும் சென்னை,
    பெங்களூரில் இருக்கும் பெங்களூரு,
    திருப்பூரில் இருக்கும் திருப்பூர்,
    மற்றும் உலகெங்கும் இருக்கும் ஆயிரங்கள்!

    அரிதான கமெண்ட் போட்டது,

    999-ஸ்டீல் க்ளா
    1000-Kutrachakravarthy
    1001-STVR

    இது பியூர் லக் தான்...
    ஒவ்வொரு மைல்கல் கமெண்ட் போதும் ஓரே நொடியில் 10கமெண்ட்கள் விழுது.
    கவுண்ட் பேக் செய்து பார்த்தா தான் ரிசல்ட் தெரியுது.

    தளத்தின் 1000வது கமெண்ட் அடிச்ச Kutrachakravarthy க்கு வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐.

    துள்ளி குதிக்கும் உற்சாகத்தோடு இரவு முழுதும் பதிவிட்ட ATR Sirக்கும் ஸ்பெசல் வாழ்த்துகள்💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. நொடிக்கு நொடி உற்சாகமாக இருந்தது உண்மை தான்.

      Delete
    2. டெக்ஸ் விஜய்@ உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இம்மாதிரியான சந்தர்ப்பம் எப்போது வாய்க்குமோ தெரியவில்லை. யாருக்கும் ஒரு சின்ன மனத்தாங்கல்கூட இல்லாமல் நேற்றைய பதிவுகள் என்னையெல்லாம் ஒரு முப்பது வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்றது. இது உண்மையில் காமிக்ஸால் நமக்கு கிடைத்த வரம் என்பேன். காமிக்ஸால் இணைந்த இந்த சிறிய கூட்டம் பெருங்கூட்டமானால் நமக்கும் நல்லது. ஆசிரியருக்கும் நல்லது. காமிக்ஸூக்கும் நல்லது. நான்கு இலக்க விற்பனைக்கே நாக்கு தள்ள வைக்கும் காலம்போய் ஐந்திலக்க விற்பனையை அசால்ட்டாக எட்டிப்பிடிக்கும் நாள் வந்தால்....? நினைக்கும் போதே இனிக்கிறதே!

      Delete
    3. "கறை நல்லது...!" என்பது போல absence கூட ஒருவிதத்தில் நல்லது தான் போலும் ! என்றேனும் ஒரு ராப்பொழுதில் நானும் இந்த ரகளைகளில் இடம்பிடிக்கணுமே ?!!

      Delete
    4. நீங்க ஆயிரம்னு குதிப்பீங்கன்னு பாத்தேன் சார்

      Delete
    5. // சேலத்தில் இருக்கும் ஈரோடு,
      சேலத்தில் இருக்கும் சேலம்,
      கோவையில் இருக்கும் கோவை,
      சென்னையில் இருக்கும் சென்னை,
      பெங்களூரில் இருக்கும் பெங்களூரு,
      திருப்பூரில் இருக்கும் திருப்பூர்,
      மற்றும் உலகெங்கும் இருக்கும் ஆயிரங்கள்! // டெக்ஸ் விஜயராகவன் கோவையில் இருக்கும் சேலத்தை விட்டு விட்டீர்களே

      Delete
    6. நான் முயற்சி செஞ்சது என்னொமோ 999க்குத்தான் ஆனால் பாருங்கள் 1000 கிடைச்சது.

      வாழ்த்திய நண்பர்களுக்கும் பங்கேற்ற நண்பர்களுக்கும் நன்றி! நன்றி!

      Delete
    7. விடல குமார்! கொஞ்சம் மேல பாருங்க, ரெகார்டு பிரேக் நீங்க தானே! "கோவையில் இருக்கும் சேலம்"---!!! நீங்கள் போக பாக்கி ரெகார்டு பண்ணியவங்க!

      விடற மாதிரியான ரெகார்டா உங்களது!

      நீங்களும் சில மைல்கல் போட்டு இருப்பதால் இதிலும் சேர்த்துடலாம்!!

      சேலத்தில் இருக்கும் ஈரோடு,
      கோவையில் இருக்கும் சேலம்,
      சேலத்தில் இருக்கும் சேலம்,
      கோவையில் இருக்கும் கோவை,
      சென்னையில் இருக்கும் சென்னை,
      பெங்களூரில் இருக்கும் பெங்களூரு,
      திருப்பூரில் இருக்கும் திருப்பூர்,
      மற்றும் உலகெங்கும் இருக்கும் ஆயிரங்கள்!

      Delete
    8. // தள முந்தைய உச்சபட்ச எண்ணிக்கை ரெகார்டு பிரேக் பண்ணியது கோவையில் இருக்கும் சேலம்! // அரைகுறையாக படித்ததால் வந்த வினை நன்றி நண்பரே. So என்னுடைய பெயரும் இந்த காமிக்ஸ் சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. I'm very happy.

      Delete
  38. லேனா தமிழ்வாணன் அவர்களின் பயணம் சார்ந்த கட்டுரைகளை கல்கண்டில் ஒருபக்க கட்டுரை வடிவில் படித்ததாக நினைவு,அதேபோல தங்களது பயணம் சார்ந்த அனுபவங்களை உங்களது சுவராஸ்யமான எழுத்து நடையில் புத்தக வடிவில் தரலாமே.....
    புத்தக விழாக்களில் விற்பனைக்கு வைத்தால் விரும்பும் நண்பர்கள் பெற்றுக் கொள்ளலாமே சார்....
    பயணம் சார்ந்த தங்களது அனுபவங்களை தவற விடக்கூடாதே என்று இப்போது எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது.....

    ReplyDelete
    Replies
    1. தளத்தின் பார்வைகள் சில நாட்களாக தங்க விலை போல் உச்சத்தில் உள்ளது........இதே ரீதியில் போனால 40 இலட்சம் பார்வைகளை விரைவிலேயே எட்டி விடுவோம்......

      Delete
    2. ஆமாம் title கூட ready ஒரு பப்ளிஷரின் பயணங்கள் அட்டகாசமாக இருக்கும்

      Delete
    3. "விஜயனின் விஜயங்கள்" இது எப்படி இருக்கு........ஹி,ஹி,ஹி.....

      Delete
    4. //பயணம் சார்ந்த தங்களது அனுபவங்களை தவற விடக்கூடாதே என்று இப்போது எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது.....//+1
      விஜயனின் திக் திக் வஜ௰ங்கள்

      Delete
    5. விசயரின் திக் திடுக் ஹிக் கிக் பயணங்கள்

      Delete
    6. தளத்தின் பார்வைகள் சில நாட்களாக தங்க விலை போல் உச்சத்தில் உள்ளது........இதே ரீதியில் போனால 40 இலட்சம் பார்வைகளை விரைவிலேயே எட்டி விடுவோம்...

      #####

      பார்வைகள் மட்டுமா..!? :-)

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. ரவி சார் விஜயனின் விஜயங்கள் அட்டகாசமான தலைப்பு

      Delete
    9. விஜய மகாதேவர்

      Delete
  39. நேற்றைய எபெக்ட் இன்னும் போகலைன்னு நினைக்கிறேன்.

    9:00 மணிக்குள் 75 கமெண்ட்.

    ReplyDelete
    Replies
    1. 9மணிக்குள் லோடு மோர் வந்த காலம்லாம் உண்டே கணேஷ்!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ஆனால் நேற்று நிறைய கமெண்ட் போட்ட நண்பர்கள் அயர்ச்சி யால் இன்றைக்கு வர மாட்டார்கள் என்று தான் நினைத்தேன்.

      இன்று பகல் முழுவதும் 100 கமெண்ட் வந்தாலே பெரிய விஷயம் என்று தோன்றியது.

      Delete
    4. ஆமா, கண்ணெலாம் அயர்வு தெரியுது.


      பெரிய மழை வந்தது எனில் அடுத்த நாள் சாரல் மழை வருமே அதுபோல...!!!

      Delete
    5. காமிக்ஸ் இதழும் ,காமிக்ஸ் பதிவும் கண்டாலே அயர்ச்சியும் ,கவலையும் பறந்தோடி விடுகிறதே..:-)

      Delete
    6. 100 சதம் உண்மை தலைவரே

      Delete
  40. Replies
    1. ஆயிரம் கமென்ட்ஸ்ஆஆஆஆஆ!!!




      இதை எல்லாம் எளிமையாக படிக்க ஏதாவது வழி இருந்தால் கூறவும்.இரண்டு நாள் தளத்துக்கு வரலனா எப்படியெல்லாம் பயமுறுத்துராங்க.

      Delete
  41. Adhellaam irukattum Fleetway stories podunga sir. vanjam maralpadillai is really good

    ReplyDelete
    Replies
    1. எங்கள் கட்சி வலுவாக ஆகி கொண்டே செல்கிறதோ? வஞ்சம் மறப்பதில்லை க்கு மற்றுமோர் ஓட்டு

      Delete
  42. கமெண்ட் போடலைனா சாமி குத்தமாயிடுமே..

    ReplyDelete
    Replies
    1. யோவ்!!! ரயிலுக்கு காத்தடிக்கும் கதை மீதி எங்கேயா???

      Delete
    2. அது,,,அது வந்து,,,,ரயிலயே காத்தடிச்சிட்டு போயிட்டுப் போல

      Delete
  43. இந்த பதிவின் தலைப்பு என்னளவில் இப்படி இருந்து இருக்கலாம். எடியுடன் ஒர் பயணம் அல்லது எடியாக ஒரு பயணம்.
    உண்மையில் உங்களோடு நானும் பயணம் செய்தது போன்ற பிரம்மிப்பு.
    நன்றி சார்.

    ReplyDelete
  44. ///This line is open too!’ என்று குரல் எழுப்பினார். அவர் வாய் மூடுவதற்குள் “உள்ளேனுங்க அம்மணி!” என்று அவர் முன்னே அலாவுதீன் விளக்குப் பூதமாட்டம் ஆஜராகி நின்றேன்///

    ஹாஹாஹா

    ReplyDelete
  45. சார் இந்த மீதிப் பாதிப் பதிவ, ஈ.வி மாதிரி மிரட்டவெல்லாம் செய்யாம, பொறுமையா காத்திருந்து வாசிச்சவங்களுக்காா ஒரு fleetway கதையை எடுத்துவுடுங்கோ!

    ReplyDelete
    Replies
    1. சத்தியமாய் வழிமொழிகிறேன்..:-)

      Delete
    2. @ பொடியன்

      கிர்ர்ர்ர்.. உர்ர்ர்ர்...

      Delete
  46. மகிழ்ச்சி பொங்கிய போது – கடந்த 24 மணி நேரங்களுக்குள் புன்னகைக்கக் கிடைத்த முதல் முகாந்திரம் இதுவே என்பது பதிவானது!

    #####

    இந்த பதிவை இப்பொழுது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது தான் படித்து கொண்டு வந்தேன்.எத்தனை இடங்களில் வாய்விட்டு சிரித்தேன் என தெரியவில்லை..அருகில் ,முன்சீட்டில் என அடிக்கடி என்னை சிலர் திரும்பி ,திரும்பி உற்று நோக்குவதை ஓரக்கண்ணில் கண்டாலும் பதிவை தொடர்ந்து கொண்டே இருந்தேன் புன்னைகையோடு மேற்கூறிய தங்களின் வரிகளை போல...

    ReplyDelete
  47. //பிற சயின்ஸ் பிக்ஷன் நாயகர்களையும் இணைத்து பதிவொன்று போட்டேன்... "பிடுங்குகிற ஆணியை நிகழ்காலத்திலேயே பிடுங்குடாப்பா !" என்று பொங்கி விட்டீர்கள் ! ஒட்டு மொத்தமாய் நீங்கள் thumbs down என்று சொல்லிட - அந்த கேட்டும் பூட்டியது புரிந்தது//

    நேற்றுதான் ஆயிரத்தில் ஒன்றாய், Sci-Fi மற்றும் திகில் கதைகள் வந்தால் நன்று என்று கேட்டேன்.
    300 கமெண்ட்ஸ் வந்த இடத்தில் 1000ம் தான்டி காலம்மாறிவிட்டது, ஆகையால் try செய்யலாமெ எடிட்டர் சார்

    ReplyDelete
  48. அருமையான
    நகைச்சுவையான
    திரில்லான
    நெகிழ்ச்சியான
    பதிவு ஆசிரியரே

    ReplyDelete
  49. "முன்கூட்டிய பிறந்த நாள் பரிசென்று" ஒரு ஜீன்ஸையும், புதுச்சட்டையையும் மருமகள் கையில் தந்திட-காலம் தான் எத்தனை ஓடிவிட்டதென்று நினைத்துக் கொண்டேன்
    ! நண்டு போல இதே மருமகள் கைக்குள்ளும், காலுக்குள்ளும் சுற்றித் திரிந்த 20 வருடங்களுக்கு முந்தைய காலத்தில் பிறந்தநாள் gift-களைத் தருவது எனது வழக்கமாக இருந்தது ! ஆனால் இன்றைக்கோ நண்டுகள் நல்மரமாகி-கரை கடந்த மண்ணில் வேரூன்றி நிற்பதை ரசிப்பதைத் தாண்டி என்ன செய்வது..?

    #####

    மலர்ந்த முகத்தோடு காலையில் வரவேற்ற பிள்ளைகளின் முகங்களிலோ மாலையில் மெலிதான நீர்த்தாரைகள் ; எருமைக்கடா போல சுற்றித் திரியும் எனக்கே தொண்டை லைட்டாக அடைக்க,...

    ######

    சிரித்து கொண்டே பதிவை படித்து வர இறுதியில் ஒரு வித்தியாச கனத்த மகிழ்ச்சி இந்த வரிகளை படித்த பொழுது சார்..

    எப்படி ஒரு டெக்ஸ் வில்லரோடு ,லார்கோவோடு ,ஷெல்டனோடு பயணமாவேனோ அதே போலவே இந்த முறை இந்த பதிவை படித்த பொழுது உங்கள் கையை பிடித்து கொண்டு உங்களுடனே நானும் அங்கே விமானநிலையத்தில் அழைந்தது போலவே ஒரு எண்ணம் சார்..மிக்க நன்றி..

    ReplyDelete
  50. நானும் என் பங்குக்கு வாழைப்பழத்தையும் (!!!) ஒரு பிஸ்கெட்டையும் எடுத்தபடிக்கே லைனுக்குத் திரும்பிய போது தான் நம்ம கவுண்டரின் தீர்க்கதரிசனம் என்னைப் புல்லரிக்கச் செய்தது ! ஒற்றை வாழைப்பழத்தின் நிஜமான மதிப்பு என்னவென்பதை அன்றைக்கே உணர்ந்திருந்து உலகுக்கே எடுத்துச் சொன்ன ஞானம் அவருக்கன்றி வேறு யாருக்கு வரும் ? தலைவா...நீர் தேவுடு !!
    //
    தலைவா...

    ReplyDelete
    Replies
    1. ஒற்றை வாழைப்பழத்தின் அருமைக்கு உலகத்திலியே இதைவிட சிறந்த உதாரணம் சொல்ல வாய்ப்பே இல்லை..

      Delete
  51. உண்மையிலேயே உங்களுடன் பயணம் வந்தது போலிருந்தது ஆசிரியரே
    வர்தா புயல் சென்னையை தாக்கும் போது கரண்ட் இல்லாமல் மெழுகுவர்த்தி வாங்க ஊரெல்லாம் அலைந்து ஒரு சூப்பர் மார்க்கெட்டில் லைனில் மணிக்கணக்காக நின்று 15 ரூபாய் பாக்கெட்டை 75 ரூபாய் கொடுத்து வாங்கியது இதுதான் சான்ஸ் என்று ஓட்டல்காரர்கள் தோசை மட்டும்தான் ஒன்று 50 ரூபாய் என சின்ன சின்ன தோசைகளாக விற்றது அதையும் வாங்க அடித்து பிடித்து விழுந்து வாங்கியது கரண்ட் இல்லாமல் 6 நாட்கள் ஓட்டியது என சகலமும் நினைவுக்கு வந்தது ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. அந்த நேரம் எல்லாம் அப்பப்பா. எண்ணில் அடங்கா இன்னல்கள்.

      Delete
  52. ஜம்போவின் 'The Action Special' ஜனித்தது இவ்வாறுதான்! "இந்த ஒற்றை இதழ் மட்டும் தானா ? இப்போதைக்கு இது போதுமா ?" என்று அவர்கள் கேட்ட போது எனக்கு ரெம்பவே தர்மசங்கடமாயிருந்தது !

    ######

    இதை படிக்கும் பொழுது இதற்காகவாது இந்த ஆக்‌ஷன் ஸ்பெஷல் இதழ் வெற்றி அடைந்து இருக்கலாமே என்று ஒரு வருத்தமான எண்ணம் மேலோங்குகிறது சார் இப்போது..ஹீம்..:-(

    ReplyDelete
    Replies
    1. மான்ஸ்டர் வரட்டும்,,,அப்போரம் பாருங்க தலீவரே

      Delete
  53. இவ்வளவு இடர்களுக்கிடையே சொந்தங்களை பார்ப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்பதை இவ்வளவு அழகாக பதிவு செய்வது கடினம் ஆசிரியரே

    ReplyDelete
  54. உங்களின் பதிவு பாசத்தின் வலிமையை நன்றாக உணர்த்தியது ஆசிரியரே ஊரிலிருந்து திரும்பும்போது வழியனுப்ப வருபவர்களின் கண்ணீர் மனதை பிசையும் அதனை அருமையாக பதிவு செய்தீர்கள் சூப்பர் ஆசிரியரே

    ReplyDelete
  55. அப்புறம் கடந்த சில நாட்களது லீவு பற்றி கொஞ்சம் கழித்து எப்போதாவது எழுதுகிறேனே... // நல்ல சேதி தானே சார்...

    ReplyDelete
  56. சென்ற பதிவில் கமெண்ட் செக்சனில் நம்பர் மட்டுமே போடாமல் கமெண்டுகளாக நிறைய போட்டதில் நானும் ஒருவன் ஐயா ஸ்டீல் போங்காட்டம் ஆடினார் 😄😄😄😄

    ReplyDelete
    Replies
    1. உண்மை நீங்கள் முடிந்த வரை கமெண்ட் ஆகவே தான் பதிவு செய்தீர்கள்.

      Delete
    2. மறுபடியும் முதல்லேர்ந்தா ?

      Delete
    3. இல்ல வாத்தியாரே,,,,அது ஆர்வக் கோளாறு ரெக்காடுக்காக,,,மீண்டும் அது நடந்தா பிற நண்பர்கள அயர்ச்சியூட்டக் கூடும்,,,,நமக்குத் தேவைகள கோரலாமே

      Delete
    4. அட்டவணைக்குள்ள நம்ம தேவை புகுத்துவமே,,,மர்ம பங்களா படிச்சிருக்கீங்களா,,,ஆசிரியர் கூறிய மான்ஸ்டர்தானது

      Delete
    5. நம்ம தேர்வெல்லாம் இனிமே செல்லுபடியாகது இறுதி அட்டவணையை ஆசிரியர் உறுதிடுத்தியிருப்பார் வேண்டுமென்றால் ஆசிரியரின் தேர்வை சிலாகிக்கலாம்

      Delete
    6. ((உறுதிப்படுத்தியிருப்பார்))
      ஓட்டை போனு ரொம்வும் தொல்லை பன்னுது

      Delete
    7. இல்ல ஓரிரு இடம் மாற வாய்ப்பிருக்கே,,,அந்தக் கடேசி பயணி உறுதிப்படலன்னா

      Delete
  57. Replies
    1. அட ஆமா,,,நம்ம மாஸ்டர் வேலை,,,,பதிவு மான்ஸ்டர தூக்கிட்டு புத்தக மான்ஸ்டர தர முடிவெடுத்த ஆசிரியருக்கு நன்றிகள்

      Delete
  58. குமார் ரொம்ப டயார்டாயிட்டிங்களா கமெண்ட் ரொம்நவும் குறைச்சலா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவும் ன்றது தப்பாயிடுச்சி ஓட்டை போனு அது வேலையை காட்டுது

      Delete
    2. இல்ல தலைவா இங்க சேலம் ல இருக்கேன் என்னை போட்டு வீட்ல புரட்டி புரட்டி எடுத்து கொண்டு இருக்கின்றனர்.

      Delete
    3. அதயும் மீறி இங்கே வந்து கமெண்ட் போட்டு கொண்டு இருக்கிறேன். விட மாட்டேன்.

      Delete
    4. // உங்க வீட்லயுமா // எந்த வீடாக இருந்தாலும் இந்த புரட்டி எடுப்பது மாறது.

      Delete
    5. என்ன சிலர் பறந்து பறந்து அடிப்பாங்க சிலர் பூரிக்கட்டை ராக்கேட் விடுவாங்க சிலர் முடியை பிடிச்சி உலக்குவாங்க எங்க வீட்ல வார்த்தையாலயே பின்னுவாங்க தடி அடியை கூட தாங்கலாம் வார்த்தையடியை தாங்க மிடியலிங்கோ

      Delete
  59. குமார் ரெஸ்ட் எடுங்க அடுத்த வாரம் புயலா வாங்க அடுத்த பதிவு அட்டவணை பதிவு பின்னியெடுங்க போன் கை கொடுத்தா நானும் புயலா பாயுறேன்

    ReplyDelete
    Replies
    1. சத்யா no rest அடுத்த பதிவு அல்ல அதற்கு அடுத்த பதிவு தான் அட்டவணை பதிவு. I'm waiting

      Delete
  60. நண்பர்கள் ஃப்ளீட் வே கதைல எது வேணும்னு கேக்கட்டியும் மான்ஸஸ்டர கேளுங்க,,,,உங்க மேல சத்தியமா சொல்றேன், ,,,அத அடிச்சுக்க கதை கிடையாது இன்னொர் இரத்தப்படலமது
    இன்னோர் கார்சனின் கடந்த காலமது
    இன்னோர் எமனின் திசை மேற்கது
    இன்னோர் தங்கக் கல்லறையது
    இன்னோர் கழுகு மலைக் கோட்டையது
    இன்னோர் யாரந்த மினி ஸ்பைடரது
    இன்னோர் சூப்பர் சர்க்கஸது
    இனனோர் பாரகுடாவது
    இன்னோர் பனிமண்டலக் கோட்டயது
    இன்னோர் யாரந்தஜூனியர் ஆர்ச்சியது
    இன்னோர் நியூயார்க்கில் மாயாவியது
    இன்னோர் மூன்று தூண் மர்மமது
    இன்னோர் நான்கு கால் திருடனது
    இன்னோர் மஞ்சள் பூ மர்மமது
    இன்னோர் சிறறப்பறவைகளத
    ஏன் இன்னோர் செந்தூர்முருகனது

    ReplyDelete
    Replies
    1. Claw சரியான ஃபார்ம் க்கு வந்துட்டீங்க போல போட்டு பிரட்டி பிரட்டி எடுக்கரீங்களே

      Delete
    2. அப்டியாபட்ட கதையது நண்பரே,,,,ஆசிரியர் ஆர்வமா இருக்கார் நண்பரே,,,,அத தமிழ்ல படித்த நண்பர்கள் கேளுங்க ,,,,,,ஆசிரியர் நிச்சயம் தருவார்

      Delete
    3. நான் படிக்கவில்லையே.

      Delete
    4. மர்ம பங்களா, ,,,அங்கிள் டெர்ரி,,,ஒரு மனநிலை குன்றிய ஆத்மாவை, ,,தந்தையயே கொன்ன மாமாவ காக்கத் துணியும் சிறுவனோடு நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்,,,பாசத்தின் வலிவை வலியை காட்டும் உணர்ச்சிக் குவியல்களின் போராட்டக் கதையது

      Delete
    5. அப்படினா +1000 போட்டு கொள்ளுங்கள் என்னுடைய சார்பில்

      Delete
    6. அங்கிள் டெர்ரியெல்லாம் மேத்தா காமிக்ஸில் படித்த ஞாபகம்.சரியாக நினைவில்லை.

      Delete
  61. ஒன்றரை வாரங்களுக்கு முன்பாய் "வஞ்சம் மறப்பதில்லை" கதையைத் தேர்வு செய்த லயன் கி.நா.டீமுக்கு நன்றிகள்" என்று இங்கே நீங்கள் பதிவிட்டதை வசித்த போது என் மனதில் நிழலாடியது தான் மேற்படி மேற்படி பதிவு(களும்), சார்ந்த நினைவுகளும், சிந்தனைகளும்

    #####

    வஞ்சம் மறப்பதில்லை என்னை பொறுத்தவரை இதழ் வெற்றியோ தோல்வியோ இந்த கதையை தேர்வு செய்தமைக் கான காரணப் பதிவு மிகப் பெரிய வெற்றி என்பது 100% உண்மை..:-)

    ReplyDelete
  62. "நியூஸிலாந்திலே ஷூட்டிங் வைக்காட்டி, நான் எப்போ நியூசிலாந்தை பார்ப்பது?" எனும் விவேக்கைப் போல - 'நான் என்றைக்குக் கனடா கதையை அவிழ்த்து விடுவதாம் ?' எது எப்படியோ - இரு ஞாயிறுகளை இந்த வாசிப்புக்கென செலவிட்ட நண்பர்களை கும்பிட்டுக்கிறேனுங்கோ

    ######


    பதிலுக்கு மறுக்கா ,மறுக்கா கும்புட்டுகிறேங்க சார்..:-)

    ReplyDelete
    Replies
    1. நானும் கும்பிட்டு கொள்கிறேன் சாமியோ

      Delete
  63. Xiii Mystery special collected edition try pannunga sir..all spinoffs in hard binding...

    ReplyDelete
  64. 1000 பதிவுகளை பார்த்த பிறகு 168 எல்லாம் ரொம்ப துண்டு துக்கடா வாக தெரிகிறது. இன்னைக்கு ஒரு 300 தாண்டி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  65. 1000 comment special உண்டா?1000 பக்கத்தில்.

    ReplyDelete
    Replies
    1. நானும் இதை தானே கேட்க நினைத்தேன். இந்த சாதனைக்கு ஏதும் பரிசு உண்டா எடிட்டர் ஐயா

      Delete
    2. அப்ப அநத ஆயிரம் பக்க கௌபாய் கத ஒன்ன சொன்னாரே அதக்கேப்பம்

      Delete
  66. இப்பெல்லாம் Load More 50, 50ஆக இல்லாமல் 100, 100 ஆக தாண்டுகிறதே, கவனித்தீர்களா !

    ReplyDelete
  67. உங்களின் பயணப்பதிவு என்றுமே ஸ்பெஷல்தான் ஆனால் இந்தமுறை சூப்பர் ஸ்பெஷலாக இருத்தது.

    நன்றி.

    ReplyDelete