Powered By Blogger

Sunday, April 16, 2017

ஒரு மாறுபட்ட ஞாயிறு..!

நண்பர்களே,

வணக்கம்.  வண்டி வண்டியாய்க் கதைகள் என்றில்லாது, short & crisp ஆக உள்ள தொடர்களில் ஒரு வசதியுண்டு ! வருஷங்களாய் அவர்களது தடங்களில் நாம் ஓடிப் பார்த்தாலும்- “ஆவ்... இன்னமும் 600+ புதுக் கதைகள் உள்ளனவா?” என்ற மலைப்பு மேலோங்கிடாது, எல்லைக் கோட்டை நெருங்கும் திருப்தி கிடைக்க வழியுண்டு இங்கே ! நமது கோடீஸ்வரக் கோமகன் லார்கோவின் சாகஸங்கள் தான் எனது இந்த மகாசிந்தனையின் பின்னணி ! 2013-ல் “என் பெயர் லார்கோ” என்றபடிக்குக் கால் மேல் கால் போட்டபடிக்கு நம் முன்னே ஆஜராகியவரைத் தொடர்ந்த ஆண்டுகளில் நாம் வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்ள ‘மள மள‘வென்று பயணித்து தொடரின் ஆல்பம் # 17 & 18-ஐ எட்டிப் பிடிக்கவிருக்கிறோம் - காத்திருக்கும் மே மாதத்தில் ! தொடரினில் இன்னமும் காத்திருப்பவை ஆல்பங்கள் 19 & 20 மாத்திரமே எனும் போது, இரண்டையும் இணைத்து நாம் ஒற்றை ஆல்பமாய் வெளியிட்டால் சுபமங்களம் பாடியிருப்போம் - லார்கோவின் முதல் சுற்றுக்கு ! கதாசிரியர் வான் ஹாம்மே இதனிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளத் தீர்மானித்திருப்பதால், லார்கோ Version 2.0 – ஓவியர் பிலிப் ப்ராங்கிற்குக் கதாசிரியர் promotion தந்திடவுள்ளது ! அவரே கதையும் எழுதி, சித்திரங்களும் போடத் தீர்மானித்திருப்பதால் அதன் பணிகளுள் தீவிரமாக உள்ளார் ! 2017-ன் மையப்பகுதியில் அந்தப் புது ஆல்பம் வெளியாகக் காத்துள்ளதெள்று சேதி ! அது தொடர்பாய் பிலிப் ப்ராங்கின் பேட்டியொன்றை இந்த வாரத்தின் highlight ஆக்கிட நினைத்தேன் ! Here goes:

 25 ஆண்டுக் கூட்டணி; 20 மெகா-ஹிட் ஆல்பங்கள்! ‘போதுமே இந்தப் பயணம்‘ என்று கதாசிரியர் வான் ஹாம்மே விடைபெற்றுவிட்டுள்ள சூழலில், அந்தப் பயணம், பிரிவு, புது முகம் பற்றியெல்லாம் பேசுகிறார் பிராங்க் ! ‘The Morning Star’ என்ற புது ஆல்பத்தின் பணிகளுக்கு மத்தியில் பிரெஞ்சு வலைத்தளத்திற்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார் !

* வான் ஹாம்மே... பிலிப் ப்ராங்க்! கூட்டணி கலைந்ததா? நட்பு தொடர்கிறதா?

Philip Franq : பெரியதொரு மேட்டரல்ல இது ! ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்திவிடுகிறேனே...? நாங்கள் எப்போதுமே ஜிக்கிடி தோஸ்த்களாக இருந்ததில்லை ! எங்களுக்குள் நன்றாகவே ஒத்துப் போகும் என்றாலும் அது எப்போதுமே ஒரு தொழில் முறை உறவாகவே இருந்து வந்துள்ளது. எனக்கும் வான் ஹாம்மேவுக்குமிடையே ஒரு தலைமுறை வயது வித்தியாசம் உள்ளது. அவருக்கு என் தந்தையின் வயது ! அதனால் அவரை எனது ‘நெருங்கிய நண்பன்‘ என்ற வட்டத்திற்குள் அடைக்க நினைக்க மாட்டேன்!

 * உங்களுக்கி்டையே ஒருவித பந்தம் உருவானதில்லையா ?

25 ஆண்டுகள் தொடர்ந்ததொரு உயர்வான உறவு சுவடுகளின்றி மாயமாகிப் போகாது தானே ?

* 25 ஆண்டுகள் வெற்றியை மட்டுமே சுவாசித்த லார்கோவுக்கு விடை தருவது எப்படியோ?

இந்தக் கேள்வியை நீங்கள் ஷானிடம் (Jean Van Hamme) தான் கேட்க வேண்டும் ! எனக்கு அவரது முடிவு ரொம்பவே அதிர்ச்சியானதே ! 20 Seconds ஆல்பத்தின் பணிகள் நிறைவுற்ற நிலையில் - அடுத்த படலத்தைப் பற்றிப் பேசுவோமென்று தான் நினைத்திருந்தேன் ! அந்த சாகஸமானது ஏகப்பட்ட முடிச்சுகளோடு தொடர்வதால் ஒரு தொடர்ச்சிக்கு அருமையான வாய்ப்பிருந்தது அதனில் ! வழக்கம் போல ஷான் பேனா பிடித்திடுவாரென்று எண்ணியிருந்தவனுக்கு - அவரது விலகல் தீரா ஆச்சர்யத்தையே தந்தது !

* லார்கோவின் கதைகள் எந்தத் திசை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதில் உங்களுக்கு நிறையவே விருப்பு-வெறுப்புகள் இருந்தன தானே ?! இப்போது நீங்களே ராஜா என்றான நிலையில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை லார்கோவுக்கு முன்மொழியப் போகிறீர்கள் ?

லார்கோவின் சாகஸங்களுக்கு ஒரு பொருளாதாரப் பின்னணி அவசியம் என்பது என் அபிப்பிராயம். டாலர் ராஜ்யம்... ஆதலினால் அதகளம் செய்வீர்... கடன் தீர்க்கும் நேரமிது போன்ற சாகஸங்கள்- பொருளாதார வன்முறையுலகிலிருந்து ரொம்பவே விலகிப் போனதாய் நான் நினைத்தேன் !

* XIII தொடரையும், தோர்கல் தொடரையுமே கூட வான் ஹாம்மே கைகழுவி விடத் தீர்மானித்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

லார்கோவுக்கொரு வரலாறு உண்டு ! அந்தக் கதைத்தொடரின் பயணத்துக்கு மத்தியில் அதை சிறுகச் சிறுக நாம் உணர்ந்து கொள்ள முடியும். நம்மைச் சுற்றியுள்ள சமகால உலகைச் சார்ந்த கதை என்பதால் இதனில் எண்ணற்ற படைப்புகளை உருவாக்குவது சாத்தியம். XIII ; தோர்கல் போன்றதல்ல லார்கோ கதாப்பாத்திரம் ! வான் ஹாம்மே உருவாக்கியதுள் தலைசிறந்தது லார்கோ என்பேன் !

* இந்த சூழ்நிலையில் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? லார்கோவின் தலைவிதி என்ன? தொடரின் எடிட்டர் என்ன அபிப்பிராயப்படுகிறார்?

எடிட்டர் ஒரு நாளும் எங்கள் கைகளைக் கட்டிப் போட்டிருக்கவில்லை ! எங்கள் சுதந்திரங்களுள் அவரோ; பதிப்பாசிரியரோ தலையிட்டதே கிடையாது ! எங்களது கூட்டு முயற்சியில் உருவானதை அப்படியே வெளியிட்டு வந்தனர் என்பதால், இன்றைய இந்தச் சூழலில் அவர்களது மனதில் சஞ்சலங்கள் இருக்கக் கூடும் தான்!

20 Seconds ஆல்பத்தில் நான் பணியாற்றத் தொடங்கியிருந்த வேளையில் ஷானிடமிருந்து எனக்கு அந்த லெட்டர் வந்தது ! இந்த ஆல்பத்தோடு தான் விடைபெறவிருப்பதாக அதனில் எழுதியிருந்தார். எனக்கும் அவருக்குமிடையே பெரியதொரு வயது இடைவெளி இருந்த போதிலும், என்றேனும் இத்தகையதொரு தருணம் புலரக் கூடுமென்று எனக்குத் தெரிந்திருந்த போதிலும் - ‘அடுத்து என்ன?‘ என்ற கேள்விக்கு விடை தேட நான் நினைத்திருக்கவில்லை ! பத்திரிகையாளர்கள் கேள்விகளால் என்னைத் துளைத்த போது - என்ன சொல்வதென்றே எனக்குத் தெரிந்திருக்கவில்லை ! 20 Seconds ஆல்பத்தின் பணிகளுக்கு மத்தியில் தான் அடுத்த தலைமுறை பற்றிய சிந்தனைகளுள் மூழ்கத் தொடங்கினேன்!

* வான் ஹாம்மே இடத்தில் யாரோ?

எனது தேடல்களுக்கு சுலப விடைகள் கிடைக்கவில்லை ! நிறைய நாவல்கள் படிப்பவன் நான் ! திறமையான பல இளம் எழுத்தாளர்கள் நாவல் உலகில் உலா வந்தாலும், பொருளாதாரம் சார்ந்ததொரு த்ரில்லரைப் படைக்கும் ஆற்றல் அவருக்கு இருப்பது அவசியமென்ற அளவுகோலினை முன்வைத்த போது பூஜ்யமே பலனானது!

* திடீரென்று எங்கிருந்து உதித்தார் புதியவர்?

ஒரு நாளிரவு திடீரென்று உதித்தது எரிக் கியாகொமெடி பற்றிய சிந்தனை ! எனக்குப் பரிச்சயமானவரே என்றாலும், இந்தப் பணிக்கென அவரை நான் பரிசீலித்திருக்கவில்லை ! நிறைய நாவல்கள் எழுதியுள்ள திறமைசாலி ! பொருளாதாரப் பத்திரிகையாளரும் கூட...! என்னோடு இணைந்து லார்கோ தொடரில் பணியாற்றப் பொருத்தமான தேர்வாக இவரைத் தீர்மானித்தேன் !

* எரிக் கியாகொமெடி ! பத்திரிகையாளர் ; நாவலாசிரியர்; பொருளாதாரப் புலனாய்வில் நிபுணர் ! லார்கோ தொடரின் வாசகரும் கூட ! ஆக இந்த வாய்ப்பை அவர் மறுத்திருக்க முகாந்திரமில்லை ! பதிப்பகம் இதனை சுலபமாய் ஏற்றுக் கொண்டதா ? அவர்கள் யாரையேனும் இந்தப் பொறுப்பிற்கான தேர்வு செய்ய எண்ணியிருந்தார்களா ?

நோ ! நான் பார்த்துக் கொள்கிறேன் ! என்று சொல்லியிருந்ததால் அவர்கள் என் தேர்வுக்கு மதிப்புத் தந்தார்கள் !

* புது ஆல்பம் – ‘The Morning Star எந்தளவிற்கு முன்னேறி வருகிறது?

லார்கோவின் நதிமூலத்திற்கு சிறுகச் சிறுகத் திரும்பும் உத்தேசமுள்ளது எங்களுக்கு ! மெதுவாய் வேறொரு தடத்தில் உழலத் துவங்கியிருந்த தொடரை வெற்றிப் பாதை நோக்கி- பிசிறின்றி இட்டுச் செல்வதே எங்கள் லட்சியம் ! 20 Seconds ஆல்பத்தைச் சார்ந்ததொரு உலகளாவிய கதைக்குள் புகுந்திருக்கிறோம் என்று சொல்லலாம் ! எரிக்கும் ரொம்பச் சீக்கிரமே தன் பொறுப்புகளை கற்றுக் கொண்டு வருகிறார் !

* வான் ஹாம்மே உங்களது சித்திரப் பணிகளுக்குள் மூக்கை நுழைப்பதுண்டா ?

நோ ! நெவர் ! ஒரு கதையினை அற்புதமாய் உருவகப்படுத்திடும் வரம் பெற்றவர் ஷான் ! ஆகையால் தான் எழுதும் எதையுமே தெள்ளத் தெளிவாய் ; எத்தனை பக்க நீளத்தில் செயலாக்குவது என்பதில் திட்டவட்டமாக இருப்பார். ஒரு கூட்டுப் படைப்பில் தனது இடமென்ன என்பதை ஸ்பஷ்டமாகத் தெரிந்து வைத்திருந்தவர் அவர் !

 * லார்கோவில் மாற்றங்கள் இருக்குமா ?

தோற்றத்தில் – No! ஆனால் அவரது சுற்றுச் சூழலை சமகாலத்துக்குக்கேற்ப மாற்றவுள்ளோம்.


* லார்கோவுக்கு பிரம்மச்சார்யம் தான் தலைவிதியா ?

யெஸ் ! மனுஷனுக்குக் குழந்தைகளும் கிடையாது; கல்யாண பந்தமும் கிடையாது ; நிச்சயமாய் அவரொரு சொதப்பலான புருஷனாகவே இருந்திருப்பாரென்பது உறுதி (சிரிப்பு!!).
---------------------------------------------------------------------------------------

Shifting back - இதோ மே மாதத்து லார்கோவின் அட்டைப்பட முதல் பார்வை ! லார்கோவின் கதைகளுக்கு நாமாகவே போட யத்தனிக்கும் ராப்பர்கள் அத்தனை சுகப்படுவதில்லை என்பதால் கடந்த 2+ ஆண்டுகளாகவே ஒரிஜினல் டிசைன்களையே பயன்படுத்தி வருகிறோம் ! இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல ! இரு ஆல்பங்களின் ஒரிஜினல் டிசைன்களை நமது டிசைனர் லேசாக பட்டி டின்கரிங் பார்த்திருக்க இந்த இதழின் முன் + பின் கவர்களாக அவை உருமாற்றம் கண்டுள்ளன ! Sober ஆன இந்தக் கதைக்கேற்ற பாணியில் அட்டையும் இருப்பதாகப் பட்டது எனக்கு! And தொடர்வது லார்கோவின் உட்பக்க trailer-ம் கூட ! வழக்கம் போல பட்டாசாய் பரபரக்கும் ஆக்ஷன் த்ரில்லர் – இம்முறை கருங்கடல் பிரதேசத்தில் ! கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னே நாமிவரைச் சந்திக்கும் தருணமிது என்பதால்- உங்களைப் போலவே, நானும் செம excited !


லார்கோவின் பட்டாசுப் பாணி பற்றியும், கதையின் ஓட்டங்கள் பற்றியும் அதன் ஓவியரின் சிந்தனைகளை படிக்கும் வாய்ப்பு கிட்டிய பின்னர், இந்தத் தொடரில் JVH + PH ஜோடியானது போட்டுள்ள உழைப்பின் முழுப் பரிமாணமும் புரிகிறது ! இந்த ஞாயிறின் பொழுதை - இதுவரையிலான ஆல்பங்கள் பற்றியதொரு அலசலில் செலவிடுவது ஸ்வாரஸ்யம் தரக்கூடுமென்று நினைத்தேன் ! இதோ இது வரையிலான LARGO பட்டியல் ! (http://lioncomics.in/largo-winch/204-largo-pack-10-discount.html) 
  • - என் பெயர் லார்கோ
  • - கான்கரீட் கானகம் நியூயார்க்
  • - துரத்தும் தலைவிதி
  • - ஆதலினால் அதகளம் செய்வீர்
  • - வேட்டை நகரம் வெனீஸ்
  • - ஒரு நிழல் நிஜமாகிறது
  • - டாலர் ராஜ்ம்
  • - கடன் தீர்க்கும் நேரமிது

மேற்படி பட்டியலில் “வேட்டை நகரம் வெனீஸ்” நீங்கலாக பாக்கி சகலமுமே classic hits என்பது எனது அபிப்பிராயம் ! எஞ்சியுள்ள 7 டபுள் ஆல்பங்களுள் தனிப்பட்ட முறையில் எனது favourite “ஆதலினால் அதகளம் செய்வீர்”! அதே போல “கான்கிரீட் கானகம் நியூயார்க்”கின் அனல் க்ளைமேக்ஸும் நெஞ்சை விட்டு நீங்கா ரகம் என்பேன் ! உங்கள் பார்வைகளில் லார்கோ தொடர்களின் highlights என்னவோ  guys?
Phillip Franq
புது வரவு எரிக் 





அப்புறம் போன வாரமே நான் எழுதிட நினைத்ததொரு விஷயம் பற்றி :  என் பொருட்டு சங்கடமானதொரு தருணத்தை எதிர்கொண்டுவரும் உங்கள் ஒவ்வொருவரிடமும் கைகூப்பும் வேளையிது guys ! முன்னாட்களின் பிழைகளுக்கொரு விலை தரும் நாளொன்று  புலராது போகாது என்பதில் எனக்குள் சந்தேகம் இருந்ததே இல்லையென்பதாலோ, என்னவோ - நமது இரண்டாம் வருகையின் தொடர்ச்சியாய், முன்னெப்போதையும் விட என்னை நானே பரிகசித்துக் கொண்டும், இயன்றளவிற்கு பணியில் மாத்திரமே கவனமாய் இருக்கவும்  முனைந்து வந்தேன் ! .  அந்த "விலை கொடுக்கும்  நாளை"  புலரச்  செய்யும் பணியை  - நண்பராய் இருந்தவரே ; எண்ணற்ற ஒத்தாசைகள் செய்தவரே - நிகழ்த்துவது தான் விதியின் விளையாட்டு போலும் ! 25 ஆண்டுகளுக்கு முன்பான அன்றைய சூழல் என்னவென்று சொல்லி அந்நாட்களை நியாயப்படுத்திடவோ ; இன்றைக்கு அதனைப் புதிதாய்க் கண்டுபிடித்தார்போல பரவசம் கொள்ளும் அறங்காவலர்களைக் கோபித்துக் கொள்ளவோ நிச்சயம் நான் முனையப் போவதில்லை ! அதேபோல பரிதாபத்தை ஈட்டிடும் முயற்சியிலும்  இறங்கும் உத்தேசமுமில்லை ! பிழைக்கான தண்டனையை ஒப்பாரி வைக்காது ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையாவது தேடித் திரட்ட முயற்சிப்பேன் ! 

எனது மேலோங்கிய ஆதங்கமும், சங்கடமுமே, என் பொருட்டு உங்களுக்கு நேர்ந்துவரும் உளைச்சல்கள் சார்ந்தவையே ! என் மீது சுடுவார்த்தைகள் வீசப்படும் வேளைகளில் எல்லாம், அவற்றால் நான் சங்கடம் கொள்ளக் கூடாதே என நீங்கள் பதறுவதை எண்ணற்ற தருணங்களில் பார்த்தவன் தானே நான் ? அத்தகைய உங்களுக்கு இன்றைக்கு மௌனம் மட்டுமே மறுமொழியாக இருப்பதை பார்க்கும் போது உள்ளுக்குள் பிசைகிறது ! நம்பிக்கை எத்தகையது ; அதன் சேதம் எத்தனை வலி தரவல்லது என்பதை உணராத ஜடமல்ல நான் ! அந்த வலியினை உங்களுக்குத் தர நான் காரணமாய் இருந்திடக் கூடாதென்பது மட்டுமே எனது பிரார்த்தனையாக இருந்து வந்தது ! ஆனால் எழுதப்பட்ட விதியை வெல்வது நானல்ல எனும் பொழுது - 'மன்னிப்பு' எனும் அந்தத் தேய்ந்து போன பதத்தின் கீழே நிழல் தேட மட்டுமே சாத்தியமாகிறது !!உங்களின் ரணங்களுக்கு நிவாரணம் என்றொன்று இருக்கத் தான் முடியுமெனில், அது எனது வாய்ஜாலத்தை விட - நிறைவானதொரு காமிக்ஸ் புதையலாக  மட்டுமே இருக்க முடியும் என்றுபட்டது ! இந்தப் பணியினில் எனக்கென நான் நிர்ணயித்துள்ள அவகாசமும், ஆண்டவனின் திட்டமிடலும் ஒத்துப் போகும் பட்சத்தில் - காத்திருக்கும் நாட்களில் அதுவே எனது ஒற்றை இலட்சியமாக இருக்கும்  guys ! அதற்கான ஆற்றலையும், ஆயுளையும் ஆண்டவன் எனக்குத் தருவாராக !! அதற்கு முன்பாக உங்களது மன்னிப்புகளும், பொருத்தருளல்களுமே பிரதானம் !! So வயது வேற்றுமை பாராது  கரம் கூப்பிடுகிறேன் all - இதையும் இணைந்தே தாண்டிச் செல்வோமேயென்ற வேண்டுகோளுடனே !! 

இந்தத் தருணத்தில் எனக்குள் எழும் இன்னொரு கேள்வியும் உள்ளது ! இத்தனை நெருங்கிப் பழகியும், இத்தனை வன்மம் துளிர்விட இந்தச் சின்னஞ்சிறு காமிக்ஸ் சார்ந்த உலகினில்   முகாந்திரங்கள் உள்ளன தானா என்று ! தற்போதையவர்கள் தான் என்றில்லாது, ஏதேதோ மனத்தாங்கல்களின் பொருட்டு என்னைத் துவைத்து எடுக்கக் காத்திருக்கும் நண்பர்களும், ஆங்காங்கே உண்டென்பதில் இரகசியமேது ? "ஈகோ" எனும் அசுரனுக்கு இந்த மண்ணில் இத்தனை பலமுண்டா ?  FB ; வலைப்பதிவுகள் என்ற இந்தப் பொதுவெளியில் கிட்டும் நீர்க்குமிழிப் பிரபல்யத்துக்கெல்லாம் மயக்கம் விளைவிக்கும் ஆற்றல் இத்தனை உண்டு தானா ? இங்கே எல்லோருமே ஒரே கட்சி ; ஒரே அணியென்ற நினைப்பில் இணையத்தினுள் நுழைந்த ஆரம்ப நாட்களில் தட்டுத் தடுமாறினேன் ; கணக்கில்லா சாத்துக்கள் வாங்கினேன் ! காமிக்ஸ் சேகரிப்பின் பொருட்டு நிலவும் போட்டிகள் ; சச்சரவுகள் ; வியாபாரங்கள் ; பணப் புழக்கம்  எத்தகையது என்பதை நேரில் காணும்வரையிலும் நானே நம்பவில்லைதான் ! அதன் பொருட்டும் தடுமாறினேன் - நிறையவே ! ஆனால் அத்தனைக்குப் பின்னும் பொதுவெளியில் யாரையும் விட்டுக்கொடுக்க எனக்குத் தோன்றவில்லையே ?! மின்னஞ்சல்களில் தனிப்பட்டமுறையில் என்னோடு சில மனபாரங்களைப் பரிமாற முன்வந்தோரின் அனாமதேயங்களை என்றைக்குமே காவு கொடுக்கவில்லையே நான் ? அர்ச்சனைகளைப் பொதுவிலும், பாராட்டுக்களை பிரத்யேகமாயும் சொன்ன போதிலும் கூட நான் எதையுமே தவறாக எடுத்துக் கொள்ளவில்லையே ? 

Oh yes - பணி சார்ந்த விஷயங்களில் ; நானெடுக்கும் தீர்மானங்களில் உறுதியாய் நிற்பதனில் - நான் பிடிவாதக்காரனே ; சில பல உரசல்களை இதன் பொருட்டு நான் விளைவித்திருக்கக் கூடும்தான் ! எனக்குள்ள பணிச்சுமையில் - சில பல தருணங்களில் நான் ஒதுங்கி நிற்க வேண்டிய வேளைகளில் திமிர் பிடித்தவனாய்த் தோற்றம் தந்திருக்கலாம் தான் ! ஆனால் இவையெல்லாமே எனது occupational hazards என்ற புரிதல்கள் இல்லாதா போய் விடும் - நமது comics உலகத்தில் ?? "எனது யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை ; என் ஒத்தாசைகளுக்கு அங்கீகாரம் தரப்படவில்லை ! எனக்கு ஆகாதவரோடு உனக்கென்ன சாவகாசம் வேண்டிக் கிடக்கு ? என் சிந்தனைகளோடு நீ ஒத்துப் போகவில்லை ! பொதுவெளியில் என் அபிப்பிராயத்தோடு ஒத்துப் போகாது என்னை சங்கடப்படுத்தி விட்டாய் !" என்பனவெல்லாமே இத்தனை ஆத்திரங்களுக்கு முகாந்திரங்களாகிடுமா இந்தச் சிறு உலகினில் ? கண்ணோட்டங்கள் மாறும் போது கருத்துக்களின் தாக்கங்களும் மாறிடுமோ ? "கொழுப்பெடுத்த பயலிவன்" என்ற கண்ணாடியோடு எனது எழுத்துக்களை மாத்திரமன்றி, உங்களது பாராட்டுக்களையும் படிப்போர்க்கு - கடுப்பு தான் மேலோங்கிடுமோ ? பதிவுகளின் வழியாய் வெளிச்சவட்டத்தை நான் மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்டதாய்த் தோன்றும் மாயையுமே வன்மத்தின் விளைநிலமோ ? தனிமையின் வெற்றிடங்கள் நாட்களின் ஓட்டத்தோடு ஆத்திரங்களாய் உருமாற்றம் கண்டிடுமோ ? காமிக்ஸ் ரசனையினில் எல்லோரும் ஓரணியே  என்று யாரையும் விட்டுக் கொடுக்காது, சேர்ந்தே நடைபோட நான் ஆர்வம் கொண்டதெல்லாம் அத்தனை பெரிய தவறா  ?? பதிவின் வழியாய் பரவலாய் சந்தோஷத்தை விதைக்கும் அவாவில் - மௌனமாய்ப் பகையையும் அறுவடை  செய்து கொண்டிருந்திருக்கிறேனா - இத்தனை நாட்களாய்  ? இன்னும் எத்தனை யுகங்கள் ஆனாலும், ஏகோபித்த மகிழ்வுக்கான பாதையறியாது தடுமாறத் தான் செய்வேனோ ? அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் தான்  தெரியவில்லையே ! 

ரொம்ப காலமாய் எனக்குள் செல்லரித்துக் கொண்டிருந்த விஷயங்களை உரக்கப் பேசியதை இதுவரைக்கும் பொறுமையோடு படித்தமைக்கு நன்றிகள் ! உங்களது ஒவ்வொரு ஞாயிறையும் சந்தோஷமாக்கிடப் பிரயத்தனம் கொள்ளும் நானின்று இப்படியொரு பாரத்தை உங்கள் திக்கில் இறக்கி வைத்திருப்பதற்கு நிஜமாகச் சங்கடப்படுகிறேன் !  இந்தமுறை மாத்திரம் பொறுத்துக் கொள்ளுங்களேன் ?  Bye guys....see you around ! Easter நல்வாழ்த்துக்கள் !

149 comments:

  1. காலை வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே...

    ReplyDelete
  2. அதிசயம் நான் நான்காவது.

    ReplyDelete
  3. Replies
    1. Letter to 'Whom so ever it may concern', seems bit worrying. By the way, who is this 'whom' ?.

      Delete
  4. ஆசிரியரே என்றும் நாங்கள்
    உங்களுடன்.
    எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்
    தங்களுக்கு வருத்தங்கள் வேண்டாம்.

    ReplyDelete
  5. Replies
    1. படிச்சுட்டு வந்து வணக்கம் சொல்றேன் ஐயா...:-)

      Delete
  6. காலை வணக்கம் எடிட்டர் சார்
    எல்லாம் கடந்து போகும்
    என்றும் தொடர்வோம் உங்களுடன்
    Happy years are always ahead

    ReplyDelete
  7. அன்பு எடி நீங்கள் செய்தது எங்கள் பொருட்டு மன்னிப்பு நாங்கள் அல்லவோ கேட்க வேண்டும். 25 வயது இளைஞன் காதலியை impress செய்ய செய்யும் தகிடு தத்தம் அல்லவா இத்ு

    ReplyDelete
  8. Dear Sir,

    இதுவும் கடந்து போகும்.

    Always with you sir. Dont worry :-)

    Waiting for MAY'17 ... Welcome Largo

    ReplyDelete
    Replies
    1. உண்மை இதுவும் கடந்து போகும்.
      நாங்கள் எப்பொழுதும் உங்களுடன்.

      Delete
  9. ///உங்களின் ரணங்களுக்கு நிவாரணம் என்றொன்று இருக்கத் தான் முடியுமெனில், அது எனது வாய்ஜாலத்தை விட - நிறைவானதொரு காமிக்ஸ் புதையலாக மட்டுமே இருக்க முடியும் என்றுபட்டது ! இந்தப் பணியினில் எனக்கென நான் நிர்ணயித்துள்ள அவகாசமும், ஆண்டவனின் திட்டமிடலும் ஒத்துப் போகும் பட்சத்தில் - காத்திருக்கும் நாட்களில் அதுவே எனது ஒற்றை இலட்சியமாக இருக்கும் guys ! அதற்கான ஆற்றலையும், ஆயுளையும் ஆண்டவன் எனக்குத் தருவாராக !! ///

    எங்கள் அனைவரின் கனவும் ஆசையும் இதுவேதான் சார். .!!
    கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. சின்ன சின்ன பள்ளங்களோ, வழியில் எதிர்படும் வேகத்தடைகள் சிலவோ, உங்களின் பயண வேகத்தையும் ஆர்வத்தையும் குறைத்துவிடக்கூடாது என்றும் வாசகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் சார். .!!

    ReplyDelete
    Replies
    1. //உங்களின் பயண வேகத்தையும் ஆர்வத்தையும் குறைத்துவிடக்கூடாது என்றும் வாசகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் சார். .!! //
      100 சதவிகிதம் உண்மை.

      Delete
  10. Triators NALLA VALNDHATHA SARITHIRAM ILLAI. THEY ALWAYS EQUAL TO OUR WASTAGE. FORGET PAST, AND LIVE FOR PRESENT. WE ALWAYS WITH YOU SIR AND WE KNOW ABOUT THE TRAITORS OF OUR COMICS GROUP. FINALLY ARASAN ANDRU KOLVAN, DHAIVAM NINDRU KOLLUM. THAT'S ALL.

    I very well expecting next month books. This month's book especially JERAHMIAH not meet with my expections. May be second book of his story may be very well. OUR COMICS FUTURE ARE VERY BRIGHT AND ENCOURAGING. SO DON'T WASTE TIME IN PAST. HAVE A NICE DAY.

    ReplyDelete
  11. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும்
    விடுமுறை நாள் வணக்கம்

    ReplyDelete
  12. ///பதிவின் வழியாய் பரவலாய் சந்தோஷத்தை விதைக்கும் அவாவில் - மௌனமாய்ப் பகையையும் அறுவடை செய்து கொண்டிருந்திருக்கிறேனா - இத்தனை நாட்களாய் ? இன்னும் எத்தனை யுகங்கள் ஆனாலும், ஏகோபித்த மகிழ்வுக்கான பாதையறியாது தடுமாறத் தான் செய்வேனோ ? அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் தான் தெரியவில்லையே ! ///

    எல்லோர்க்கும் நல்லவராய் இருக்க இறைவனால் கூட முடியவில்லையே சார்.! கடவுளரையே லெப்ட் ரைட் வாங்குவோரையும் பார்ப்பவர்கள்தானே நாமெல்லாம். சினிமா அரசியல் என்று எதை எடுத்துக்கொண்டாலும் யாரொருவரும் எல்லோர்க்கும் பிடித்தவராய் இருந்ததாய் வரலாறு பூகோளம் எதுவுமேயில்லை சார்.! இதற்காக வருத்தப்படுவது சங்கடத்தை தருகிறது . பதிவின் கடைசியில் இருக்கும் அந்த Sorry stickerஐ நீக்கிவிட்டு சந்தோசமாக வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கள் சார். .! :-)

    ReplyDelete
    Replies
    1. //பதிவின் கடைசியில் இருக்கும் அந்த Sorry stickerஐ நீக்கிவிட்டு சந்தோசமாக வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கள் சார். .! :-) //
      ஆமா சார்,நல்லதை நினைக்கவே நேரம் போதவில்லை,விட்டு தள்ளுங்க சார்,இதுவும் கடந்து போகும்.

      Delete
  13. Dont feel edi.
    இந்தநிலை மாறும்
    கவலை எதற்கு உங்களுக்கு

    இந்த மாதிரி விஷயங்களை தூக்கி கடாசிட்டு அடுத்த வேலைய பாருங்க இதற்க்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்திட்டு இருக்கீங்க




    புது லார்கோ முகச்சாயலில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குங்களா??

    ReplyDelete
  14. கடந்த மாதத்தின் தொய்வை லார்கோ சரிசெய்வார் என நம்புகிறேன்.கடந்த மாதத்தின் இதழ்களில் தேர்ச்சி பெற்றது மறுபதிப்பான கொலைகரம் மட்டுமே! ஏனோ கடந்த மாதத்தின் இதழ்களில் ஒரு விதமான slackness தென்படுகின்றன.

    ReplyDelete
  15. //பிழைக்கான தண்டனையை ஒப்பாரி வைக்காது ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையாவது தேடித் திரட்ட முயற்சிப்பேன் ! //

    ஹேட்ஸ் ஆஃப் டு யூ எடிட்டர் சார்!!!

    லார்கோவை கோடைமலர்னே போடலாமே. என பெயர் லார்கோவை திரும்ப திரும்ப வாசித்து வியந்ததை இன்னும் மறக்க முடியவில்லை. ஐபிஎல் சீசனில் லார்கோ சிக்ஸர் கன பொருத்தம். அந்த ஆகஸ்ட் ஐஸ்க்ரீம்??? கோடைக்கு குளிர்ச்சியாக ஐஸ்க்ரீம் அறிவிப்பு கொடுத்திருக்கலாமே எடிட்டர் சார்.

    ReplyDelete
  16. ///தனிப்பட்ட முறையில் எனது favourite “ஆதலினால் அதகளம் செய்வீர்”! அதே போல “கான்கிரீட் கானகம் நியூயார்க்”கின் அனல் க்ளைமேக்ஸும் நெஞ்சை விட்டு நீங்கா ரகம் என்பேன் ! உங்கள் பார்வைகளில் லார்கோ தொடர்களின் highlights என்னவோ guys?///

    என் பெயர் லார்கோ - முதல்முறை படித்தபோது மெய்மறந்து திறந்த வாயை மூடாமல் திகைத்தது இன்னும் நினைவில். எத்தனை முறை படித்திருப்பேன் என்பது நினைவிலில்லை.

    துரத்தும் தலைவிதி & ஆதலினால் அதகளம் செய்வீர் இரண்டும் மை ஆல்டைம் பேவரீட் இன் லார்கோ சீரீஸ். .!

    ReplyDelete
    Replies
    1. அனைத்து புத்தகங்களுமே திரும்பத் திரும்ப மறு வாசிப்பிற்கு உகந்ததே... கிட்டத்தட்ட அனைவரின் கனவில்/நினைவில் நம்மையே கதாநாயகனாக பொருத்திப் பார்க்கும் கதை வரிசை.. கதாசிரியராக, கதை வரிசை உச்சத்தில் இருக்கும் போதே விலகுவது மிகச் சரியே, ஆனால் வாசகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு..

      Delete
    2. // கதாசிரியராக, கதை வரிசை உச்சத்தில் இருக்கும் போதே விலகுவது மிகச் சரியே, ஆனால் வாசகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு.. //
      உண்மை.

      Delete
  17. அனைவருக்கும் easterதிருநாள் நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  18. Vijayan sir, last few days I have not visited our blog, looks like something happens. I am sorry to know that, time will heels everything. I am always with you. இதுவும் கடந்து போகும்.

    ReplyDelete
  19. டியர் விஜயன் சார்,

    சில ஞாயிறுகள் மாறுபட்டாலும், எங்கள் இளம் பருவத்து நினைவுகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் தமிழ் காமிக்ஸ் கனவுலகை கட்டியதில் மிக முக்கியமானவர் மற்றும் அந்த கனவுலகு தகர்ந்திடாமல் இன்றுவரை தொடரச் செய்பவர் என்ற அன்பும் மரியாதையும்... மாறாது என்றும் தொடரும்!

    ReplyDelete
  20. டியர் விஜயன் சார், லார்கோ பற்றிய உங்களின் பதிவு அருமை!!! நன்றாக பட்டாசாக போய்கொண்டிருந்த படத்தின் கிளைமேக்ஸ் சோகத்தில் முடிந்தால், எந்த உணர்வு இருக்குமோ அதே உணர்வுதான் உங்களின் இந்த பதிவை படிக்கும்போதும் ஏற்படுகிறது.

    மன்னிப்பு கேட்டு எங்களை சங்கடபடுத்த வேண்டாம் சார். அந்தளவு நீங்கள் தவறும் இழைக்கவில்லை.தங்களை குற்றம் சாட்டும் நபர் புனிதருமல்ல.
    இவ்வளவு நாள் தோளில் கை போட்டு பேசிவிட்டு, பிறகு முதுகில் குத்துவதெல்லாம்,, எந்த வகையில் எடுத்து கொள்வது என்று தெரியவில்லை.

    நம் காமிக்ஸ் மறுபிரவேசத்திற்கு, அதாவது வெள்ளையாய் ஒரு வேதாளம் சிக்பில் புத்தகத்திற்கு பிறகு, சில பல மாதங்கள் நம் வெளியீடு நின்றபிறகு, அது மீள் பிரவேசம் செய்ய சம்பந்தபட்ட நபர் நிறைய உதவிகள் செய்தார் என்ற வகையில் அவர் மீது எனக்கு நல்ல எண்ணமே உண்டு.

    அதை இந்த மாதிரி தரங்கெட்ட நடவடிக்கையின் மூலம் அவரே கெடுத்து கொள்கிறார்.மேலும் அவர் வகிக்கும் பதவிக்கும், அவருடைய அறிவுத்தனத்திற்கும் ஏற்ற செயல் இல்லை இது என்பதே என் கருத்து.

    இந்த நேரத்தில் வேறு தேவையில்லாமல், இன்னா செய்தாரை திருக்குறள் வேறு நியாபகத்திற்கு வந்து தொலைக்கிறது! !!!

    ReplyDelete
    Replies
    1. யாருப்பா நிங்க சொல்றது. வழக்கம் போல மாயாவி யா?
      இல்லை ன்னா அதுக்கு ஓரு மன்னிப்பு கேட்டுக்குறேன்.

      Delete
    2. 07.04.2017 இந்து தமிழ் பாருங்கள்

      Delete
    3. சுந்தர் சார்,
      +11111

      Delete
    4. சுந்தர் சார்....அருமை.....:-)

      Delete
    5. கணேஷ்குமார் குமார் யாரையும் கண்ணை மூடிக்கொண்டு(மாயாஜி)
      தெளிவானஆதாரம் இல்லாமல்
      குற்றம் சாட்ட வேண்டாம்.

      Delete
    6. யதார்த்தமான வார்த்தைகள்
      +123456

      Delete
    7. @ Ganeshkumar Kumar

      //யாருப்பா நிங்க சொல்றது. வழக்கம் போல மாயாவி யா?//

      எனகென்னவோ...அது டெக்ஸ் கதைவேண்டாம்...போரு...ஓவர் டோஸுன்னு புலம்புறரை சொல்றமாதிரி தோணுதே..! :P

      உங்களுக்கு எடிட்டர் சொல்றது என்னான்னு புரியாம போறதுக்கு காரணம் எதுவா இருக்கும்கிறதை...

      டெக்ஸ்கதை முடியலை,ரசிக்கலைன்னு நீங்க அப்பப்போ...தடுமாறதை வெச்சி நாங்க புரிஞ்சிக்க மாட்டோமா என்ன.!

      ஹாஹஹா..ஸும்மா தமாஸு...!! :D

      Delete
    8. @ சுந்தர் ஸார்

      அப்புறம் ///மேலும் அவர் வகிக்கும் பதவிக்கும்,////

      அந்த பதவி என்னானு சொன்னா அந்த பழியை 'கணேஷ்குமார் கணேஷ்' சொன்ன மாதிரி நானே ஏத்துகிறேன்..! :P

      [அந்த பதவி தமிழ்நாடு CM போஸ்ட்டா இருக்கணும் பகவானே..!]

      Delete
    9. Ganesh kv அதுக்கு தான் முன் ஜக்கிறதை முத்தன்னாவக மாயாவி இல்லைன்னா மன்னிச்சுடுங்கன்னு போட்டுடேனே.
      யாருன்னே தெரியாததால மலையாள மாந்திகர்கிட்ட போய் சோழி உருட்டி பாக்கலாம்னு இருக்கேன்.

      Delete
    10. தமிழ் ஹிந்து 7-4-17 மற்றும்14-4-17
      பார்க்கவும்

      Delete
  21. ஆசிரியரே எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டு நீங்கள் சோகக் கடலில் மூழ்குவதா எங்களின் சந்தோஷமே நீங்கள் உற்சாகமாய் (சந்தோஷமாய்)இருப்பதில்தான் இருக்கிறது கவலை வேண்டாம் ஆசிரியரே நாங்கள் என்றும் (அன்புடன்) உங்களுடன்

    ReplyDelete
  22. இந்த வருத்தமும் மன்னிப்பும் எதற்கோ?

    ReplyDelete
  23. என் பெயர் லார்கோ தான்
    உண்மை யிலேயே சரவெடி அதற்க்கு சற்றும் சளைக்காதது துரத்தும் தலைவிதி

    ReplyDelete
  24. ஆசிரியரே தயவு செய்து அந்த சாரி ஸ்டிக்கரை எடுத்து விடுங்கள் மனதை என்னவோ செய்கிறது

    ReplyDelete
  25. ////ஆனால் அத்தனைக்குப் பின்னும் பொதுவெளியில் யாரையும் விட்டுக்கொடுக்க எனக்குத் தோன்றவில்லையே ?! மின்னஞ்சல்களில் தனிப்பட்டமுறையில் என்னோடு சில மனபாரங்களைப் பரிமாற முன்வந்தோரின் அனாமதேயங்களை என்றைக்குமே காவு கொடுக்கவில்லையே நான் ? அர்ச்சனைகளைப் பொதுவிலும், பாராட்டுக்களை பிரத்யேகமாயும் சொன்ன போதிலும் கூட நான் எதையுமே தவறாக எடுத்துக் கொள்ளவில்லையே ? ////


    உண்மைதான் எடிட்டர் சார்! இந்தப் பரந்த மனப்பான்மை அந்த நண்பர்களிடம் இல்லாதுபோனது துரதிர்ஷ்டமே!!
    மனதுக்குள் ஈகோ/பொறாமை/போட்டி சகிதம் வளையவந்து நண்பர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் தங்களின் வேடம் கலைத்துத் தாமே விலகிச் சென்றதாக எடுத்துக்கொள்வோமே?
    அப்படிப்பட்டவர்களை இனங்கண்டுகொள்ளக் கிடைத்த வாய்ப்பாக இந்நிகழ்வு இருந்துவிட்டுப் போகட்டுமே! பின்னாலிருந்து உங்களைப் பரிகாசம் செய்பவர்களெல்லாம் புகழையோ, பொருளாதாரதாரத்தையோ குறுக்குவழியில் தேட முயற்சித்து அதில் வெற்றிதேட முயல்பவர்கள்தானே? பாவம்!!!
    உங்களிம் காமிக்ஸையும், நெஞ்சளவு நேசத்தையும் மட்டுமே ஆண்டாண்டுகளாய் எதிர்பார்த்துக்கிடக்கும் நல்லதொரு வாசகநண்பர் கூட்டமும் உண்டுதானே சார்? அவர்கள் ஈகோவை என்றும் முன்னிருத்தப்போவதில்லை; நாலுபேரிடமிருந்து கிடைக்கும் 'லைக்'குக்காக உங்களை மண்வாரித் தூற்றப்போவதில்லை! அவர்களுக்காக உங்கள் உழைப்பையும் தேடலையும் தொடர்ந்துகொண்டேஏஏஏஏ இருங்கள்... இன்றும், என்றென்றும்!! _/\_

    ReplyDelete
  26. சார் விட்டு தள்ளுங்கள், நான் முதல் பதிவை பார்த்ததும் செய்த முதல் விஷயம் அவரை என் நண்பர்கள் குழுவில் இருந்து அன் டேக் செய்ததுதான், என்னை பொறுத்தவரையில் காமிக்ஸ் பிடித்து இருந்தால் நன்றாக இருக்கு என்று சொல்வேன் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை, ஆனால் இந்த மாதிரி முதுகில் குத்தும் பழக்கம் என்றும் இருந்ததில்லை.
    சிறு வயதில் இருந்து இன்று வரை ஒரு என் கூட நிழலாக பயணிக்கும் ஒரே விஷயம் நமது காமிக்ஸ் தான். யார் என்ன குட்டி கரணம் அடித்தாலும் நீங்கள் என்றுமே எங்கள் ஆதர்ச நாயகர்தான். "For every action, there is an equal and opposite reaction" - இதை விரைவில் அவர் உணர்வார்...

    ReplyDelete
  27. எதுக்கு மன்னிப்பு கேட்குறிங்களேன்னு தெரியலயே. Script என்னனுன்னு சொல்லமலேயே sorry கேட்டா என்ன அர்த்தம்.
    சரி மன்னிசாச்சு. போதுமா?

    ReplyDelete
    Replies
    1. //எதுக்கு மன்னிப்பு கேட்குறிங்களேன்னு தெரியலயே. //
      Same confusion...

      Delete
    2. என்ன நடந்தது.? என்ன நட்கிறதே என்று புரியவில்லை.!!!

      Delete
  28. 40th...

    Plz remove that sorry sticker sir...🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  29. காமிக்ஸ் ஒரு கை விலங்கு நீ(ங்கள்) போட்டது-
    அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நாங்கள் போட்டது.
    ஆதாரம் இல்லையப்பா ஆறுதல் சொல்ல-
    நாங்கள் அவதாரமில்லையப்பா தத்துவம் சொல்ல....
    பரிகாரம் தேடி நாங்கள் எவ்விடம் செல்ல?
    எங்களுக்கு அதிகாரம் இல்லையப்பா
    துரோகிகளை அடங்கிவிடச் சொல்ல.
    "காஞ்சு போன பூமியெல்லாம்
    வத்தாத நதியப் பார்த்து ஆறுதல் அடையும்
    அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா....?
    தோழர்கள் எல்லாம் தங்கள் கவலைகளை
    மறக்க உங்களைத்தேடி வருவாங்க
    ஆனா, நீங்களே கலங்கி நின்னா?"
    உங்களுக்கு ஆறுதல் சொல்ல
    தோழர்கள் நாங்களிருக்கிறோம்...
    இருப்போம் எம் உயிருள்ளவரை....
    "மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்க விடுவதில்லை."
    "எல்லா துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று மௌனம்.
    இன்னொன்று காலம்."
    "நீ முழுவதும் சர்க்கரையாக இருந்து விடாதே. இந்த உலகம் உன்னை விழுங்கிவிடும்."

    ReplyDelete
  30. டியர் எடிட்டர்

    ஒரு பழமையான மரம் தான் ஈன்ற பழங்களை, அந்த மரத்தை பராமரிப்பவருக்கு நன்றிக்கடனாக தந்துவிட்டு மீண்டும் தன் கடமையைத் தொடரும். சிலர் அந்த மரத்தின் வளர்ச்சியின் பொறாமையாலோ அல்லது அதன் பழங்களை குறுக்கு வழியில் அடையநினைத்தோ கல்லெரிவார்கள். பழங்களை அதன் அன்பானவைகளுக்கு கொடுக்க அந்த மரம் எவ்வளவு ஆண்டுகள் பாடுபட்டிருக்கும், கஷ்ட்டபட்டிருக்கும், எத்தனை தியாகம் செய்திருக்கும் என்பதை நேற்று முளைத்த மூடர்களுக்கு தெறிய வாய்ப்பிள்ளைதான். விட்டுத்தள்ளுங்கள் பழுத்த மரம்தானே கல்லடிபடும்.

    சுவையான காமிக்ஸ் எனும் பழங்களை அதுவும் எனது இனிமையான தமிழில் தரும் அனுபவ மரமாக நீங்கள், தங்களை கொண்டாடும் வாசக நண்பர்களாக நாங்கள்....

    கடந்து செல்வோம், தொடருவோம்....

    ReplyDelete
    Replies
    1. ஒரு பழமையான மரம் தான் ஈன்ற பழங்களை, அந்த மரத்தை பராமரிப்பவருக்கு நன்றிக்கடனாக தந்துவிட்டு மீண்டும் தன் கடமையைத் தொடரும். சிலர் அந்த மரத்தின் வளர்ச்சியின் பொறாமையாலோ அல்லது அதன் பழங்களை குறுக்கு வழியில் //அடையநினைத்தோ கல்லெரிவார்கள். பழங்களை அதன் அன்பானவைகளுக்கு கொடுக்க அந்த மரம் எவ்வளவு ஆண்டுகள் பாடுபட்டிருக்கும், கஷ்ட்டபட்டிருக்கும், எத்தனை தியாகம் செய்திருக்கும் என்பதை நேற்று முளைத்த மூடர்களுக்கு தெறிய வாய்ப்பிள்ளைதான். விட்டுத்தள்ளுங்கள் பழுத்த மரம்தானே கல்லடிபடும். //
      சரியாய் சொன்னிங்க.

      Delete
    2. அருமை நண்பரே...சரியா சொன்னீங்க...

      Delete
  31. எனக்கு புரியாத ஓரு விஷயம் புரியவில்லை. ஆசிரியர் மாதிரி அசாத்திய திறமை உள்ள ஓரு நபரை கேள்வி கேட்கும் அளவுக்கு யாருக்கு இங்கு தகுதி உள்ளது.
    காமிக்ஸ் கடையை போதுன்டா சாமி அப்படி மூடிட்டு போய்ட்டா கேள்வி கேட்கும் யாருக்காவது ஓரு பத்திப்பகத்தை ஆரம்பித்து நடத்த திரானி உண்டா?

    காமிக்ஸ் வளர உதவி செய்வது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி தான். காமிக்ஸ் படிக்காம நம்மபலால் இருக்க முடியுமா?. அப்படியே ஆரம்பித்துதாலும் ஆசிரியர் ரின் எழுத்து நடையில் எவ்வாறு எழுதுவது. காப்பி அடிக்றதுக்கு இது ஓன்னும் Exam இல்லை. இயற்கை அருளிய வரம்.

    நம்புங்க நண்பர்களே. காமிக்ஸ் corporate நிழல் உலகத்தின் கதவை தட்ட நீங்கள் மிகப்பெரிய Don இருக்கனும்.
    நான் உதவி செய்கிறேன் அதனால் உங்களிடம் அதிகமாக உரிமை எடுத்து கொள்வேன் என்று கூறுவது சின்னபுள்ள தனமான விஷயம்.

    ஆசிரியர்டம் கூறுவது ஓன்றே ஓன்று தான். சில சமயம் தவறு செய்பர்களை தண்டித்தே ஆக வேண்டும். மறுபடி மறுபடி மன்னிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. +1000
      ஆனாலும் இது ஆசிரியருக்கு சாத்தியப்படாத ஒன்று சார்.
      திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
      என்று நம்புபவர் நம் ஆசிரியர்.
      எனவே அவர் நம்பிக்கை சாத்தியப்படும் என்று நாமும் அவருடன் சேர்ந்து நம்புவோம்.

      Delete
    2. //ஆசிரியர் மாதிரி அசாத்திய திறமை உள்ள ஓரு நபரை கேள்வி கேட்கும் அளவுக்கு யாருக்கு இங்கு தகுதி உள்ளது.//
      +11111

      Delete
    3. ஆசிரியர் மாதிரி அசாத்திய திறமை உள்ள ஓரு நபரை கேள்வி கேட்கும் அளவுக்கு யாருக்கு இங்கு தகுதி உள்ளது./


      உண்மை....

      Delete
    4. // ஆசிரியர் போல் அசாத்திய திறமையுள்ள ஒருவரை.!//

      தலைவரே!



      கடின உழைப்பை விட்டுவிட்டீர்களே.???

      Delete
  32. ஈஸ்டர் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு எனது வாழ்த்துக்களும்.

      Delete
  33. அந்த ஸ்டிக்கரை எடுத்து விட்டு அந்த இடத்தில் புது ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிடுங்க சார்.

    ReplyDelete
  34. ஏப்ரல் மாத இதழ்களின் விமர்சனம்:
    க.) டெக்ஸ்
    அட்டைப்படம்: சுமார்
    சித்திரங்கள் : சுமார்
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: ‘ தல’ எப்படி வந்தாலும் கலக்கிடுவாரு….!

    உ) பென்னி
    அட்டைப்படம்: அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : அருமை
    ஒரு வரி விமர்சனம்: இந்த முறையும் கலக்கிட்ட ….!!

    ங) ஜானி
    அட்டைப்படம்: சுமார்
    சித்திரங்கள் : சுமார்
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: இன்னும் வசனங்களை செம்மைப்படுத்தி இருக்கலாம்.

    ச) ஜெரமியா
    அட்டைப்படம்: அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : ok இரகம்
    ஒரு வரி விமர்சனம் : சிறுகதைகள் படித்த உணர்வை தருகிறது. அதனால் கூட பலருக்கு பிடிக்காமல் போய் இருக்கலாம்.


    ReplyDelete
  35. மனதை தொடும் பதிவு சார்,அந்த ஸ்டிக்கரை எடுத்துடுங்க சார்.

    ReplyDelete
  36. என்னை கேட்டால் நண்பர்களுக்காக அளித்த இந்த விளக்கமே அவசியம் இல்லை என்பேன்..என்ன தான் பத்திரிக்கைகளின் " கிசு கிசு "பாணி சுவையாக இருந்தாலும் அது நடப்புகால கிசுகிசுவாக இருப்பின் அறிந்தவர் ..அறியாதவர்..தெரிந்தும் தெரியாதர் என அனைவரும் கூடி பரபரவென விவாதிப்பார்கள் தான்...ஆனால் .....

    உதாரணமாக ரஜினி..கமல்...விஜய் ..அஜீத்..பற்றி இப்போதைய நடப்பு பற்றி கிசுகிசு வந்தால் பத்திக்கும் தான்...அதுவே எம்ஜீஆர்..சிவாஜி கால கட்டத்தின் கிசு கிசு வெனில் படிக்க சுவாராஸ்யமாக இருந்ததுப்பா..ன்னு மனசுல நினைச்சுட்டு சிரிச்சுட்டு பேப்பரை தூக்கிபோட்டுட்டு போயிட்டு இருப்பாங்க..அப்படி தான் இதுவும்...இந்த கிசுகிசுவை எல்லாம் படிச்சுட்டு சிரிச்சுட்டு தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்கனும் ..

    மேலும் ஒருவர் தனது முதலீட்டில் ஒரு தொழிலை புதிதாக ஆரம்பிக்கும் பொழுது ...அது வளர்ந்து வரும் பொழுது அந்த தொழிலை வளர்த்தவும்...தடையின்றி நடைபோடவும்...மேம்படுத்தவும் என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையிலேயே தான் இருப்பார்கள்..அந்த சிந்தனையை நடைமுறை படுத்துவதில் தீவிரமாக இருப்பார்கள்..அதில் சில ஓட்டை உடைசல்களை உடைத்து தான் தொழிலை வளர்த்து எடுப்பார்கள் என்பது யாரும் அறியாததது அல்ல.. அனுபவபட்ட திறமைசாலிகளின் நிலைமையே இதுதான் எனும் போது...இளைய வயதில் .அதுவும் எவரும் அதிகம் துணியா .தனது தொழிலை தொடங்கிய இளைஞன்...தனது தொழிலை மேம்படுத்த ..வளர்க்க செய்த சில செயல்பாடுகளை பல்லாண்டு காலம் கழித்து பகிர்வது தான் " பத்திரிக்கையின் தர்மம் "என்பது நாங்கள் அறியாத து அல்ல...மேலும் இக்கால பத்திரிக்கை தர்(ம)ம்மும் பாமர மக்களும் ரசித்து சிரிக்கும் படி தானே உள்ளது...

    இரண்டாயிரம் பேர் மக்கள் நலனுக்காக போராடினால் அதனை முதன்மையாக்காமல் அதில் புகுந்த இருவரின் தவறான செயல்பாடுகள் தான் முதன்மையாக்கபடும் என்பதும் யாரும் அறியாத ஒன்று அல்ல...எனவே தாங்கள் அந்த " கிசுகிசு" வை மனதில் கொள்ளாமல் என்றும் எப்பொழுதும் இப்பொழுது போல எங்களுக்கான காமிக்ஸ் பணியை மகிழ்வுடன் தொடர வேண்டுகிறேன்..


    எத்துனை கிசுகிசுக்கள் ..எத்தனை வாரங்கள் ..மாதங்கள் வந்தாலும் காமிக்ஸ் நண்பர்கள் என்றும் உங்கள் பக்கமே இணைந்து தொடர் நடை போடுவோம் என்பதும் தாங்கள் அறியாத ஒன்றல்ல.....


    எத்தனை இடர்கள்...இடையூறுகள் இருப்பினும் அதனை தகர்தெறிந்து எப்பொழுதும் போல வீறு நடை போடுங்கள்...

    உங்களுக்காக நாங்கள் ..எங்களுக்காக நீங்கள்...

    ReplyDelete
    Replies
    1. +1111111111

      அருமையான விளக்கங்கள் தலைவரே...

      Delete
    2. //இரண்டாயிரம் பேர் மக்கள் நலனுக்காக போராடினால் அதனை முதன்மையாக்காமல் அதில் புகுந்த இருவரின் தவறான செயல்பாடுகள் தான் முதன்மையாக்கபடும் என்பதும் யாரும் அறியாத ஒன்று அல்ல...எனவே தாங்கள் அந்த " கிசுகிசு" வை மனதில் கொள்ளாமல் என்றும் எப்பொழுதும் இப்பொழுது போல எங்களுக்கான காமிக்ஸ் பணியை மகிழ்வுடன் தொடர வேண்டுகிறேன்..//
      சும்மா நச்சுன்னு சொன்னிங்க பரணி.

      Delete
  37. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  38. நண்பர்களே
    ஆசிரியர் சார்ட்ட அரைமணி நேரத்திற்கும் அதிகமாக பேசினேன்....

    கவலை வேணாம் நண்பர்களே....

    அவர் வார்த்தைகளில் உள்ள வருத்தம் மனதில் வைத்து கொள்ள மாட்டார்.....

    முன்பை விட சிறப்பாக பணி செய்வோம் என சொல்லி உள்ளார்.

    நண்பர்கள் யாரும் கலங்க வேணாம் என சொன்னார்.

    இந்த சமயத்தில் அனைவரும் அன்பின் ஆசரியர் சாரின் பின்னே அணிவகுப்போம்...

    ReplyDelete
    Replies
    1. @ சேலம் இரவுகழுகார்

      அப்பப்பா..இப்பவாச்சும் உங்க மௌனத்தை கலைச்சிங்களே.. :))))))))))

      Delete
    2. அ....ஆ.....அம்மா ...அப்பா....குரு.....காமிக்ஸ்....டெக்ஸ்....

      பேச்சு வந்துருச்சு பேச்சு வந்துருச்சு..எங்க சேலம் டெக்ஸ் அவர்களுக்கு.....:-)

      Delete
    3. மாயாசார்@
      ஹா...ஹா...
      ஆசிரியர் சாரின் அன்பு முன்பு "மற்ற"வை அனைத்தும் ஒன்றுமேயில்லை...

      Delete
    4. சேலம் Tex விஜயராகவன் @

      உங்க வீறாப்பெல்லாம் பிரசவ வைராக்யம் போலத்தான் சார்.... ஹிஹி...

      Delete
    5. S.V.V. sir@

      விடாப்பிடியாக இருப்பது என் நாயகன் டெக்ஸ்க்கும் அவர் சீடன் எனக்கும் சொந்தம்.....

      அன்புக்கு இருவருமே அடிமைகள்.....
      இதை டெக்ஸின் பல சாகசங்களல் காணலாம் சார்.

      Delete
    6. @ SVV

      இந்த மனுஷனைக் [சேலம் டெக்ஸ்] கரைக்க எடி எம்மாம் பெரிய சங்கட பதிவு போட வேண்டி இருக்கு..உஸ்ஸ்ஸ்..... :P

      Delete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கூல் டவுன் நண்பரே...

      "வாண வேடிக்கை"களுக்கு தயாராகுங்கள்..

      Delete
  40. மன்னிப்பெல்லாம் எதற்காக எடி சார்?

    அப்படிப் பார்த்தால், டவுசர் காலத்தில் வீட்டில் சில்லறை காசு திருடினோமே - அதற்குப் பெயர் திருட்டா? அதற்கு யாரிடம் மன்னிப்பு கேட்பது?

    பள்ளியில் சகமாணவனின் சோத்து டப்பாவை ஆட்டையப் போட்டோமே - அது தப்பா? அதற்கும் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

    பால்யங்களில் செய்த சிறு தவறுகளெல்லாம் - இன்றைக்கு பேசிச் சிரிப்பதற்குத்தானே?

    மன்னிப்பெல்லாம் மாபாதகங்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் - இதையெல்லாம் சேர்ந்து பேசிச் சிரித்துக் கடந்து போவேமே....

    ReplyDelete
    Replies
    1. ///மன்னிப்பெல்லாம் மாபாதகங்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் - இதையெல்லாம் சேர்ந்து பேசிச் சிரித்துக் கடந்து போவேமே....///---அதானே...
      சோக்கா சொன்னீங்க S.V.V. sir

      Delete
  41. வர வர பதிவுகள் ரொம்ப கடுப்படிக்கிதே , ஆசிரியரிடம் சரக்கு தீர்ந்து போச்சா ? இதைய சொன்னா நிறைய நண்பர்கள் கோப்ப் படுவார்கள் .

    ReplyDelete
    Replies
    1. யாராவது வருத்தத்திலிருக்கும்போது அவர்களை மேலும் துன்புறுத்திப் இன்பம் காண்பது ரொம்பப் பிடித்திருக்கிறதா ஈ.கொ.சி நண்பரே?

      :(

      Delete
    2. கொஞ்ச நாளா பேக் ஐடி இல்லாமா, தளம் கொஞ்சம் போரடிச்சதென்னமோ உண்மைதான். இந்தா நீங்க வந்திட்டீங்கல்ல, இனிமே தளம் சுறுசுறுப்பாயிடும் :-)

      Delete
    3. கொஞ்ச நாளா பேக் ஐடி இல்லாமா, தளம் கொஞ்சம் போரடிச்சதென்னமோ உண்மைதான். இந்தா நீங்க வந்திட்டீங்கல்ல, இனிமே தளம் சுறுசுறுப்பாயிடும் :-)

      Delete
  42. இப்படி கடுப்பேத்தறதுக்கு பதிலா மாசம் ஒரு பதிவு உருப்படியா போடலாம்.நண்பர்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

    ReplyDelete
    Replies
    1. @ erode kongusingam

      முதல்ல உங்க ஆதார் நெம்பர் சொல்லுங்களேன்.!

      Delete
    2. இப்படி பின்னூட்டம் போட்டு கடுப்பேத்தறதுக்குப் பதிலா நீங்க மெளனமாவே இருந்துடலாம்.

      Delete
    3. @ erode kongusingam

      - யார் சார் நீங்க... இதுக்கு முன்ன என்ன பண்ணிட்டிருந்தீங்க?

      Delete
    4. //இப்படி பின்னூட்டம் போட்டு கடுப்பேத்தறதுக்குப் பதிலா நீங்க மெளனமாவே இருந்துடலாம்.//
      +1

      Delete
    5. நீங்களும் இங்கு பதிவு போடுவதை விட உருப்படீயா, யாருக்காவது ஜால்ரா தட்ர வேலை இருந்தா பார்க்கலாமே:-)

      Delete
    6. ஸ்ஸ்ஸ்ப்ப்பா..... என்னா வெய்யில்....

      Delete
    7. பதிவு கடுப்பேத்தினா ஒண்ணும் பிரச்சனை இல்லை...நீங்க என்ன பண்றீங்கன்னா ஒரு பேப்பர் பேனா எடுத்துகிட்டு அழகா நீங்களா ஏதாவது எழுதி அதை பதிவா படிச்சுட்டு போங்க....ஓகே...

      ஆனா பத்திரிக்கையில இதை கிசுகிசுவா போடாம போனீங்களே..சந்தோசம்...

      அப்புறம் சாரு....நீங்க போலி ஐடின்னு தெரியும்...போலி கொங்கா ன்னும் சொல்லிருங்களேன்..ஏன்னா கொங்கு மக்கள் விருந்தோம்பல்லையும் ..நாகரீகமா பேசறதிலையும் சிறப்பானவங்க...உங்ககிட்ட அது தெரியலையே ..

      Delete
    8. விடுங்க நண்பர்களே...அவருக்கு(டெங்குசிங்கம்)இதைப்பத்தியெல்லாம் ஒன்னும் புரியல போலிருக்கு....

      Delete
  43. என் பங்குக்கு நானும்...

    நிறைய பேர் என்னிடம் கேட்டும் ஒரே கேள்வி...

    "அது எப்படிங்க இவ்வளவு காமிக்ஸ் மேல காதலா இருந்துட்டு, நண்பரா பழகிட்டு, இப்படி நெகட்டிவா மாற முடிஞ்சது..???"

    தன்னை காமிக்ஸ் ஆர்வலர் [விஸ்வா] என கூறிக்கொள்ளும் ஒற்றை நபருக்கு எதிராக... ஒரு மிகபெரிய காமிக்ஸ் நண்பர்கள் பட்டாளமே [பல வருடங்களுக்கு முன்பிருந்தே] எதிராக நிற்பது முதல் ஒவ்வொன்றையும் கவனித்து பார்த்ததில் சில விஷயங்கள் புரிந்தன.

    "என்னை போன்ற காமிக்ஸ் ஆர்வலருக்கு நண்பனாக இருக்கும் தகுதி உனக்கில்லை.." என எதிர்படுப்பவர்களிடம் எல்லாம் சொல்லி...அனைவரையும் குழப்பியடித்து, அவமானபடுத்த என்ன தான் காரணம்...??? என்னதான் காரணம்..??? என வருடகணக்கில் எல்லோரும்தேடிக்கொண்டிருகிறார்கள், எடிட்டர் உட்பட..!!

    மிக சாதாரணமான பதில்...

    ஊருக்கு ஒரு கோவில் இருக்கும், அதன் வாசலில் ஒரு மனநலம் குன்றியவன்... வருவோர் போவோரையெல்லாம் ஒருமாதிரியாக சிரித்து சீண்டியும், கிழே கிடக்கும் குப்பையை மேலே வீசியும் குத்தாட்டம் போடும்.

    இதற்கெல்லாம் பயந்து யாரும் பிரார்த்தனையை மறப்பதுமில்லை, கோவிலுக்கு வரும் பழக்கத்தை விடுவதுமில்லை.இனிமே ஏன் நாம இந்த மகானை கும்பிட கூடாதுன்னு யாரும் யோசிப்பதுமில்லை.


    மேற் கூறியது சாதாரண வாசகரின் கோபமான பதில், மிக நுட்பமான கி.நா பதில் பின்னால் வருகிறது....

    ReplyDelete
  44. DEAR SIR

    ACE IT WITH YOUR GREAT ATTITUDE....

    ReplyDelete
  45. எனது பால்ய நாட்களில் பக்கமாய் இருந்து ரசனையின் வளர்ச்சியை வளர்த்தது காமிக்ஸ் தான், பயணத்தில் ஏற்ற இறக்கமென்பது இயல்புதான்....
    உங்களை நாங்கள் அறிவோம் சில நேரங்களில் யாவருக்கும் நல்லவனாக யாரும் இயலாது....
    காமிக்ஸ் ஒன்றே நமது காதல் அந்த பயணத்தை அழகுபடுத்த செய்த யாவும் சிறப்பே, விட்டு தள்ளுங்கள், நாம் கடந்து செல்லவேண்டிய தூரம் அதிகமுள்ளது....
    யாவும் காமிக்ஸ் மயம், காமிக்ஸ் தலைவா.....

    ReplyDelete
  46. என்ன சார் படிக்க படிக்க மெகா சந்தோசத்த வழங்கிட்டு கடசில இப்டி பண்ணிட்டீங்களே...நீங்க மிகச்சரியா இருப்பதால நீங்க நீங்களாவே தொடருங்கள் வழமையுடன் .லார்கோ வருவதே மாபெரும் சந்தோசம் . புதிய கூட்டணி வான் ஹாம்மேவிற்கு ஈடாகுமா எனத் தெரியாது . ஆனா ஓவியரின் பதில் இதும் கலக்கப் போவதுறுதி என பறை சாற்றுகிறது .. சார் அடுத்த வருடம் மூன்உ கதைகளும் ஒத்தயாய் ஒரே கத்தயாய் வரட்டுமே ஹார்டு பௌண்டில் இறுதி வானின் கதையை சிறப்பிப்போம் . லார்கோ அட்ட யில இதான் பெஸ்ட்..பின்னட்டையும் பிரம்மாதம்...உள் பக்கங்கள் வண்ணத்த பார்த்ததும் மனமடயும் உற்சாகம் லார்கோவின் உற்சாகத்துக்கு இணையானது ...பிசிறு..

    ReplyDelete
  47. இதுவும் கடந்து போகும் ஆசிரியரே.!!

    சமீபத்தில் தங்களின் வார்த்தைகளில் இத்தனை வலியை உணர்ந்ததில்லை.

    என்றென்றும் உங்களின் பின் அணிவகுப்போம் அன்பரே..!!

    அப்புறம்.... ஆல்டைம் ஃபேவரிட் லார்கோ என்கிற என் கருத்தோடு Phillip franq அவர்களும் ஒத்துபோகிறார் கவனித்தீரா??

    நாங்கல்லாம் அப்பவே அப்படி!!!

    ReplyDelete
  48. Sir, TeX trailer pottutu atha pathi oru varthakudu solla sorry ketutukitu .enna meterunu enaku theriyathu apram ethuku sorry.vidunga sir. TeX pathivu eppo sir atha mothalla sollunga sir please.

    ReplyDelete
  49. பனியில் ஒரு கண்ணாமூச்சி...இந்த தலைப்பே நல்லாத்தான் இருக்கு..!
    வழக்கமானடெக்ஸ் கதை...
    இழவெடுத்த கிழவனி்ன் ப்ளாஷ்பேக் சூப்பர்!ப்ளாபேக்கில் வரையப்பட்ட ஓவியங்கள் வித்தியாசமான பாணி!அட்டைப் படம் அமர்க்களம்!

    ReplyDelete
  50. ெஜரேமியா.....

    ம்ம்ம்ம்ம்ம்ம்.......


    ஃப்ரீயா வுடுங்க...!

    ReplyDelete
  51. சார்... பதிவில் இறுதியில் உள்ள sorry படத்தை தயவு கூர்ந்து நீக்கி விடுங்கள் சார்...

    நீங்கள் மன்னிப்பு கேட்க கூடிய அளவிற்கு எதுவுமே இல்லை சார்...

    2012 க்கு பிறகு ஒவ்வொரு வருடமும் நீங்கள் நமது காமிக்ஸ் அளவுகளை அடுத்தடுத்த உயரத்திற்கு கொண்டு செல்ல எவ்வளவு முயற்சி செய்கிறீர்கள் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும்.

    இது போன்ற விஷயங்களை புறந்தள்ளி நமது காமிக்ஸ் உலகில், இன்னும் நாம் அறியாத இடங்களில் கால் பதிக்க முயல்வோம் சார்... என்றும் சேந்தம்பட்டி மற்றும் அனைத்து காமிக்ஸ் நண்பர்களும் உங்களுடன் சேர்ந்தேபயணப்படுவோம்....


    சொல்ல நினைத்த விஷயம் ... பென்னி இந்த முறையும் எல்லா பந்தையும் சிக்ஸருக்கு அடுத்து தூள் கிளப்பி விட்டான். ஜூனியர் மிகவும் ரசித்தார் ... அடுத்த வருடம் பென்னி ஸ்லாட்டை கொஞ்சம் அதிகப்படுத்தலாமே சார் ...

    ReplyDelete
  52. //சார்... பதிவில் இறுதியில் உள்ள sorry படத்தை தயவு கூர்ந்து நீக்கி விடுங்கள் சார்..//
    Agreed!

    சார், ஒவ்வொரு புத்தகமும் வெளிவர்றதுக்கு நீங்க நடத்துற தணங்கினத்தோம் டான்ஸ்கள் பத்தி (கதை, பேப்பர், அச்சு மை, ஆட்கள், விடுமுறை, மழை, பைண்டிங், பேக்கிங்...) எழுதியிருக்கீங்க. இப்போ, உங்களை வருத்தப்படுத்திறமாதிரி வரக்கூடிய இந்த 'கதை மாற்றல், கதாநாய மாற்றல்' பற்றியும் அதற்கான அவசியங்கள் எப்படி வந்தது என்பது பற்றியும் ஒரு பதிவை எழுதிட்டீங்கன்னா (அதை சிலர் வாக்குமூலமா யூஸ் பண்ணிக்க வாய்ப்பிருந்தாகூட) பலரது இப்படியான கேலிக்களுக்கு முற்றுப்புள்ளி வச்சிடலாம்கிறது என்னோட தாழ்மையான கருத்து!

    ReplyDelete
  53. மீண்டும் நானே...


    ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே...:-)

    ReplyDelete
  54. அன்புள்ள எடிட்டருக்கு,

    விட்டுத்தள்ளுங்கள் .. இதுவும் கடந்து போகும்.. நீங்கள் வருத்தப்பட வேண்டாம் ..

    We are with you

    எப்போதும் போல புதுப்புது காமிக்ஸ் புதையல்களை தமிழில் அறிமுகப்படுத்துவதைத் தொடரவும்.

    அன்புடன்,
    பெரியார்

    ReplyDelete
  55. The Hindu article was a mere gossip column.
    We should just ignore and move on, should not react.

    ReplyDelete
  56. இந்த வருத்தமும் மன்னிப்பும் எதற்காக?

    ReplyDelete
  57. Dear Sir,

    இதுவும் கடந்து போகும்.

    Always with you sir. Dont worry :-)

    Waiting for MAY'17 ... Welcome Largo

    ReplyDelete
  58. Sir, I can't understand what u r sorry about! We are on ur side that is for sure! It is very difficult to understand flowery rhythmic words on mobile sir. Pls use simple language (my request).Sorry if I ve hurt u or our friends sir.

    ReplyDelete
    Replies
    1. Same Feeling Here...எடிட்டர் யார் கிட்டே சாரி கேட்கிறார்...எதுக்கு கேட்கிறார்ன்னு ஒண்ணும் புரியலை...!!!

      Delete
    2. @Editor sir:
      Whatever happens we always with u sir!!!

      Delete
  59. 'ராசா' விசுவா மற்றும் அவரின் படைப்பைப்பற்றி (எல்லாம் என் கெரகம்டா சாமி, ஒரு சிறுவனின் புலம்பலை எல்லாம் 'படைப்பு'ன்னு எழுத வேண்டியிருக்கு) ஏற்கனவே சில இடங்களில் நல்லாவே எழுதிவிட்டாயிற்று (அட கழுவி ஊத்தியாச்சு நண்பர்களே!!!). இருந்தாலும் சில நண்பர்கள் இங்கு மட்டுமே இருப்பதால் அவர்களுக்காக இது............

    'சூப்பர் ஸ்டார்' என்பது ரஜினிகாந்த் தனக்காக சூட்டிய பட்டமல்ல அது மக்களால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் பவர் ஸ்டார் என்பது டாக்டர் சீனிவாசன் அவராகவே அவருக்கு கொடுத்துக்கொண்டது (பவர் ஸ்டார் அருள் கூர்ந்து மன்னிக்கவும், எனக்கு வேறு உதாரணம் தெரியவில்லை). இதே கதை தான் நமது 'ராசா' விசுவா பட்டமும். இவரைப்பற்றி சுருக்கமாக சொல்வதாக இருந்தால், திருவிளையாடல் வசனம் ஒன்று போதும், "பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்கள் உண்டு, குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு". இதில் நம்ம 'ராசா' விசுவா எந்த வகை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. நம்ம எடிட்டர் என்றோ ஒரு நாள் நம் அனைவரிடமும் வெளிப்படையாக பகிர்ந்த ஒரு விஷயத்தை எதோ நம்ம 'ராசா' விசுவா இன்னைக்குத்தான் '007' போல ஒற்றன் வேடம் போட்டு கண்டுபிடித்த மாதிரி புலம்பியிருக்கிறாரே தவிர இதில் வேறொன்றும் இல்லை. எதிரி என்றுமே எதிரியாகத்தான் இருப்பான் அனால் நண்பன் 'மட்டுமே' துரோகியாக மாறுவான் என்பதை மட்டுமே நம்ம 'ராசா' விசுவாவின் புலம்பலிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இதற்காக நம்ம எடிட்டர் 'sorry' கேட்கவேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு (அட நம்ம எல்லோருக்கும்தாம்பா!!) தெரியவில்லை.

    ReplyDelete
  60. என்ன மேட்டர் என்று பலருக்கும் தெரியாமல் இருப்பதே நன்று இதை விட நமக்கு பல வேலைகள் இருக்கு எல்லோருக்கும் தெரிந்த நபராக நாமே மாற்ற வேண்டாமே

    ReplyDelete
  61. சார் இது பெரிய விஸ்சயமல்ல...நமது அலுவலக திறன் மிகு பணியாளர்களை லவட்டிச் சென்று முள்ளாய் குத்திய , நமது நிறுவனனரின் சௌந்திரத்தில் முல்லையாய் காட்டி வந்த , சாலையின் ஓரத்தில் மரம் நட்டதாய் வரலாறு காட்டிய அந்த அரசட் பெயர் கொண்ட அந்த காமிக்சின் உருவாக்கத்துக்கு கடைத் தேங்காய எடுத்து வழிப்பிள்ளயாருக்கு படைத்த அந்த தங்கஅரசனின் விஸ்வாசியாய்' காட்டிக் கொண்ட அந்த நபர் உங்களை குறி வை க்க காரணம்...நமது மறுவரவில் அவர கவனிக்களயாம்...அதான் பல வகைகளில் நண்பர்களிடம் கூறியும் , குட்டு பட்ட அவர் காழ்ப்புணர்ச்சியால் , அடுத்த இறுதிக் கட்டத்துக்கு விஸ்வ' ரூபமெடுத்துள்ளாராம்.அந்த விஸ்வாசம் நடிப்பு என்பது தெரியுமே அனைதது காமிக்ஸ் கூறும் நல்லுள்ளங்களுக்கும்...நமது பழய பொக்கிசங்கள வச்சும் பிழைப்பு நடத்தியதாய் கேள்வி...விடுங்கள் அதிர்வுகள் உச்சத்திற்கு பின் குறைந்துதானே தீரும் ....சில செல்லாக் காசுகள் கூட நமது இருப்பை உலகிற்கு காட்ட உதவலாம் பழயது என்ற வகையில் மட்டும்..என்ன செஞ்சாலும் உற்சாகமா இருக்காங்களேங்ற கோவத்தின் வடிகால்...ஆடி அடங்கட்டும் என அமைதியா இருக்க வேண்டாம்....கேள்விகளுக்கு பதிலை தருஓம் வழக்கம் போல. இதெல்லாம் சும்மா விஸ் விஸ்னு' கதறிய படி சுத்திகிட்டே திரியட்டும்.....மேல தூக்கி வக்கிற தப்ப மறுபடியும் செஞ்சுற வேணாமே...ப்ளீஸ்.....

    ReplyDelete
  62. ஆசிரியரே வார்த்தைகளில் கண்ணீர் வழிகிறது.வேதணை வெளிப்படுகிறது..ஆனால் என்ன மேட்டர் என்பது இது வரைக்கும் எனக்கு புரியவில்லை..ஹலோ யாராச்சும் எனக்கு விளக்கம் சொல்லுங்கப்பா ஃப்ரீ யா இருந்தால்... ஹலோ...

    ReplyDelete
    Replies
    1. @ ஜனா கிருஷ்ணா

      7 தேதி பதிவான 'மார்ச் மங்காத்தா' பதிவில், கடைசி கமெண்ட்ஸ்களை பாருங்களேன்.!தெளிவாக எழுதியுள்ளேன்.!!

      Delete
  63. ஆசிரியரே வார்த்தைகளில் கண்ணீர் வழிகிறது.வேதணை வெளிப்படுகிறது..ஆனால் என்ன மேட்டர் என்பது இது வரைக்கும் எனக்கு புரியவில்லை..ஹலோ யாராச்சும் எனக்கு விளக்கம் சொல்லுங்கப்பா ஃப்ரீ யா இருந்தால்... ஹலோ

    I also feel same blood, Y so much feeling????!!!!

    ReplyDelete
  64. +1 Vijayan sir for this post. For sharing exactly how you personally feel about this kisukisu thing. The word honesty is staying in English not because of those finding ways to avoid mistakes, but those accepting mistakes in right place with right spirit. I can speak 100s of words supporting your side but it will be meaningless when the person involved here (the one who written articles in daily news paper) is miles away from the spirit of (comics) creation.

    // இத்தனை நெருங்கிப் பழகியும், இத்தனை வன்மம் துளிர்விட இந்தச் சின்னஞ்சிறு காமிக்ஸ் சார்ந்த உலகினில் முகாந்திரங்கள் உள்ளன தானா என்று !//

    Sentiments apart, முன்பு ஒரு பதிவில் கள்ள மார்க்கெட், விலை, அவற்றை செயல்படுத்துவோரின் விற்பனை வழிமுறை பற்றிய தங்களின் நிலைப்பாடு மற்றும் தீர்மானங்களை பகிர்ந்தது நினைவிருக்கிறது. அந்தப்பதிவை படித்தகணத்திலேயே என் மனதில் லேசாக நெருடல் எழுந்தது. பின்னூட்டத்தில் நானும் ஒரு கருத்து தெரிவித்த நினைவும் உள்ளது - இதுபோன்ற விஷயங்களை பொதுவில் பேசுவது, வைராக்கியங்களை வெளிப்படையாக தெரிவிப்பது நம் தளத்துக்கு பொருத்தமில்லை என்றோ அல்லது அவசியமில்லை என்றோ - முழுமையாக நினைவில்லை.

    இது என்றைக்கும் சமூக வலைத்தளங்களில் உள்ள சிக்கல்தான். பொதுவெளியில் ஒரு நபர் அல்லது குழு செய்யும் தவறுகளை தார்மீக அடிப்படையில் ஒருவர் பொதுவில் விவாதித்தால், சம்பந்தப்பட்டோர் அதன் பொதுத்தன்மையை ஏற்கும் வாய்ப்பைவிட தனிப்பட்ட வெறுப்பாக உணரக்கூடிய வாய்ப்புகளே அதிகம். அவ்வளவு சிறுமையான மனநிலை கொண்டோர்தான் பெரும்பாலும் வெகுஜன பத்திரிகைகளில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்னும் உண்மையை காமிக்ஸ் கட்டுரைகளின் வடிவில்கூட காணமுடியும் என்பதே - Icing on the cake.

    ReplyDelete
  65. திருப்பூர் நகரில் நமது லயன் முத்து காமிக்ஸ் பெற அழைக்கவும் - பிரகாஷ்,9487243494, 866766636. திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீங்கள் எங்கிருந்தாலும் நீங்கள் இருக்குமிடத்திற்கே வந்து காமிக்கை வழங்குகிறோம். நன்றி.!

    ReplyDelete