Powered By Blogger

Sunday, August 27, 2017

கதையொன்று..பில்டப் கணிசம்....!

நண்பர்களே,

வணக்கம். விதம் விதமாய்க் கதைகள்; தொடர்கள் என்று பார்த்து விட்டோம் ! க்ரீன் மேனரின் மாறுபட்ட களங்களும் சரி; XIII–ன் தேடல்களும் சரி, நமக்குப் பரிச்சயமே! So ஒவ்வொரு மாதமும் கதைகளுள் பணியாற்றும் போதே-

- இது ஹிட்!
- இது மொக்கை!
- இது யோகமிருந்தால் தேறிடும்!

என்று ஏதேனுமொரு தீர்மானத்துக்கு வரச் சாத்தியமாகிடும்! And பத்துக்கு ஒன்பது தடவைகள் அந்த யூகங்கள் கிட்டத்தட்ட  சரியாகவே இருந்திடவும் செய்யும் ! ஆனால்-

எப்போதாவது ஒரு கதை தரும் அனுபவமானது – ‘நாயகன்‘ கமலஹாசனைப் பார்த்து க்ளைமேக்சில் கேட்கும் குழந்தையைப் போல – ”நீ தேறும் ரகமா? தேறா ரகமா?” என்று கேட்டிடச் செய்யும்! தற்போதுமே எனக்கு அது போலொரு அனுபவம்! ‘தென் பாண்டிச் சீமையிலே‘ என்று இளையராஜாவின் கரகர குரலில் பேக்கிரவுண்ட் இசை எழாதது மாத்திரமே குறைச்சல்; மற்றபடிக்கு அச்சாய் அந்தக் கேள்வியைக் கேட்பது போலவே இருக்கிறது – காத்திருக்கும் “என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்” கிராபிக் நாவலைப் பார்த்து!

கிராபிக் நாவல் என்றால் என்ன?‘ என்ற கேள்வி அவ்வப்போது தலைதூக்குவதும், ஆளாளுக்கொரு விளக்கம் சொல்வதுமே நம் மார்க்கெட்டில் மாத்திரமின்றி – உலக காமிக்ஸ் அரங்கின் பல களங்களிலுமே வாடிக்கை தான்! ஆனால் செப்டம்பர் 1ம் தேதி “இது தான்டா மாப்பு- அக்மார்க் கிராபிக் நாவல்” என்று சொல்லிட நமக்கொரு வாய்ப்பு இருப்பது நிச்சயமென்றே சொல்வேன்!

‘ஓவர் பில்டப்‘ உடம்புக்கு ஆகாது என்பதை நிறையத் தருணங்களில் அனுபவத்தில் உணர்ந்தவன் என்ற விதத்தில் ரொம்பவே பீலா விடுவதில் இப்போதெல்லாம் எனக்கு நாட்டமிருப்பதில்லை! ஆனால் இது போன்ற கதைகளுள் பணியாற்றி விட்டு வெளிவரும் முதல் தருணத்தில் தலைக்குள் ஒரு தாங்கொணா வேகம் உருவாகியிருக்கும் – “ஆஹா... இதை நம்மவர்கள் படித்து அபிப்பிராயம் சொல்ல வேண்டுமே?! அது வரை ஆர்வத்தை அடக்குவது எவ்விதம் சாமி?” என்ற ரீதியில்! To cut a long story short – நேற்றிரவு தான் லயன் கிராபிக் நாவலின் இதழ் # 3-ன் மீதான பணிகளை நிறைவு செய்தேன்! “ஒரு முடியா இரவு” பாணியில் இதுவுமொரு b&w போனெல்லி ஆக்கமே! “Le Storie” என்ற தொடரில் அவர்களே சமீப ஆண்டுகளில் வெளியிட்டு வரும் இந்த கிராபிக் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பயணமாகும் விண்கல் எனலாம் ! இந்திய சிப்பாய்க் கலகப் பின்னணியில் ஒரு கதை; ஜப்பானிய சாமுராய் நாட்களைச் சார்ந்ததொரு கதை; 1920-களின் மாஃபியா ராஜ்யத்திலிருந்த அமெரிக்கர்களைப் பின்னணியாக்கியொரு கதை; பிரெஞ்சுப் புரட்சியின் நாட்களில் சொல்லப்பட்டதொரு கதை – என கற்பனைகளின் சிறகுகளை அவர்கள் அகலமாய் விரித்துப் பறக்க முற்பட்டு வருகின்றனர்! இதில் எதுவுமே ஒரு டாக்குமென்ட்ரி படத்தைப் போல வரலாற்றைச் சொல்லும் படைப்புகளாக இருப்பதில்லை என்பது தான் ஸ்பெஷாலிட்டியே! களங்கள்... பின்னணிகள் உலகின் பல நிஜ நிகழ்வுகள் என்றிருந்தாலும் – சொல்லப்படும் கதைகளோ கற்பனை மனிதர்களைக் கொண்டு; அவர்களது ஆசாபாசங்களைக் கொண்டு!

என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்” கூட 1970-களின் பிற்பகுதியை backdrop ஆகக் கொண்டு பிளவுபட்டுக் கிடந்த பெர்லின் நகரில் நடக்குமொரு உணர்வுப் போராட்டத்தைச் சொல்ல விழையும் ஆல்பமே! ‘நுவா‘ பாணி (Noir tales) என்று சொல்லப்படும் ஒருவித இரு்ணட கதைக்களம் தான் இது; ஆனால் அழுகாச்சிக்கு இங்கே  வேலை கிடையாது ! முறையிலாக் காதல்; காமம்; துரோகம்; மரண பயம் என பல இறுக்கமான உணர்வுகளை இந்தக் கதை மாந்தர்கள் அனுபவிப்பதை – ஏற்கனவே அகன்ற விழிகள் இன்னமும் அகலமாகிட ரசித்தேன்! கதையின் ஒரு பிரேமை நுணுக்கமாய் கவனிக்கத் தவறினாலுமே ஏதேனுமொரு முக்கிய சமாச்சாரத்தைக் கோட்டை விட்டது போலாகி விடுமென்பது போல கதாசிரியரும், ஓவியரும், பின்னியுள்ள  ஒரு taut வலை 110 பக்க நீளத்திற்கு நீண்டு செல்கிறது. கதையில் பணியாற்றி முடித்த கணத்தில் எனக்குள் எழுந்த முதல் சிந்தனையானது – ‘தொடரும் நாட்களில் ஒரு ரகளையான அனுபவம் ; முற்றிலும் contrasting சிந்தனைகளின் சிதறல்கள் காத்துள்ளது!‘ என்பதாக மாத்திரமே இருந்தது! “ஙே... இது தான் உன் ரசனை லட்சணமாக்கும் சாமி?” என்ற கேள்விகளுக்கும் பஞ்சமிருக்கப் போவதில்லை; அதே சமயம் –“ரொம்ப ரொம்ப மாறுபட்டதொரு தேர்வு!” என்ற ஆச்சர்யக்குறிகளுக்கும் குறைச்சல் இருக்கப் போவதில்லை என்றே நினைக்கத் தோன்றியது! எண்ணிக்கைகளில் எந்த அணி பாண்டிச்சேரி ரிசார்ட் அணியாக இருக்கப் போகிறது?... எந்த அணி கோட்டையிலுள்ள அணியாக இருக்கப் போகிறது என்ற கேள்வி மட்டுமே நமது செப்டம்பரை சுவாரஸ்யமாக்கிடவுள்ளது என்பேன்! “எ.சி.சா.சொ.” – புஸ்வாணமா? ஊசிப் பட்டாசா? யானை வெடியா? விடை காண ஆவலை அடக்க முடியவில்லை! ஒன்று நிச்சயம் - செப்டெம்பரில் நமது பொருளாளரும் சரி ; இணைய ஆராய்ச்சியில் அடித்து தூள் கிளப்பும் மாயாவி சிவா & நண்பர்களும் சரி - ரொம்பவே பிசியாக இருக்கப் போகிறார்கள் என்பதில் எனக்கு ஐயமே இல்லை ! இதோ அதன் அட்டைப்பட முதல் பார்வை & உட்பக்க டீசருமே!



அட்டைப்படம் – ஒரிஜினலின் ஈயடிச்சான் காப்பியே – சிற்சிறு வர்ண மெருகூட்டல்களோடு! உட்பக்கச் சித்திரங்கள் வில்லியம் வான்சின் classic ஸ்டைலிலோ; க்ரிஸ்டியன் டினாயெரின் சமகாலப் பரபரப்பு பாணியிலோ இராது – ஆனால் கதை நடக்கும் காலங்களையும், சூழல்களையும் நம் கண்முன்னே கொணர்ந்து நிறுத்தும் மாயாஜாலத்தைச் செய்கிறது! கதையில் பவனி வரும் பாத்திரங்களும் அழகுப் போட்டிக்குச் செல்லக் கூடியவர்களல்ல – மாறாகக் கரடுமுரடான தோற்றம் கொண்டவர்களே! ஆனால் நிஜ வாழ்க்கைகளில் லார்கோக்களின் மிடுக்குகளும்; ஷெல்டனின் ஸ்டைல்களும்; ஷானியாவின் வனப்புகளும் சாத்தியமாவது பெரும்பாலுமே நமது வண்ணக் கனவுகளில் மட்டும் தான் எனும் போது – இந்த சுமார் மூஞ்சிக் குமார்களும், குமாரிகளும் கதையோடு நம்மை  ஒன்றிடச் செய்வது போல் எனக்குத் தோன்றியது! ஸ்க்ரிப்டைப் பொறுத்த வரை ஒரிஜினல் இத்தாலிய வரிகள் சாட்டையடிகளாக இருந்திருக்க வேண்டும் என்பேன்; ஆங்கிலத்தில் மொழிமாற்றம் கண்டு நம்மைச் சேர்ந்த போதுமே அதன் வீரியம் அப்படியே இருந்தது! தமிழாக்கத்தில் இயன்றளவு நியாயம் செய்ய நிறைய மெனக்கெட்டிருக்கிறேன்; கதை தேறிடும் பட்சத்தில் – ஒரு சந்தோஷப் பெருமூச்சை விட மூச்சைப் பிடித்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்! So ஒரு பில்டப்பின் பின்னணி இது தான் !  

மேஜையின் ஒரு பக்கம் கிராபிக் நாவல் கிடக்க, ‘தம்‘ பிடித்துக் கொண்டு சீரியஸான கதையோட்டத்தோடு நானும் ஓடுவது அரங்கேறிக் கொண்டிருந்த அதே வேளையில் – மறுகோடியில் ‘கிக்கிப்பிக்கி‘ என்று சிரித்துக் கொண்டே சுற்றி வரும் நமது ஸ்மர்ஃப்கள் ‘போஸ்‘ கொடுத்து நின்று வந்தது தான் எனது இம்மாத highlight! கார்ட்டூன்கள் எப்போதுமே டென்ஷன்களை பறக்கச் செய்யும் பார்ட்டிகள் என்றாலும் – ஸ்மா்ஃப் கதைகள் (என்னைப் பொறுத்த வரையிலாவது) சந்தோஷ உச்சங்கள் எப்போதுமே! அந்த நீல உலகில் குடியிருக்கப் பீம்பாய்கள்; மங்குனிகள்; பந்தாக்கள்; ஜீனியஸ்கள்; உம்மணாம் மூஞ்சிகள்; ஆல்-இன்-ஆல்கள் நாம் தினந்தோறும் சந்தித்திடும் ஜனங்களின் வார்ப்புகள் தானே? மனித குணங்களை; நமது நடைமுறைகளில் உள்ள பழக்கவழக்கங்களை பகடி செய்ய கதாசிரியர் இந்த நீலப் பொடியர்களை எவ்விதம் லாவகமாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதை   ரசிக்க நேரமெடுத்துக் கொண்டால் – இந்தத் தொடரோடு நாம் ரொம்பவே நெருக்கமாகிட முடியுமென்பேன்! “டாக்டர் ஸ்மர்ஃப்” - with due respects to all the good doctors – செம ரகளையானதொரு சிரிப்புத் தோரணம்! And இதோ – அதன் ஒரிஜினல் அட்டைப்படம்; அவர்கள் வடிவமைத்துத் தந்துள்ள ஸ்மர்ஃப்ஸ் எழுத்துருவோடு!



செப்டம்பரின் எஞ்சி நிற்கும் இதழானது நமது இரவுக் கழுகாரின் “கடல் குதிரையின் முத்திரை”! ரொம்ப ரொம்ப காலம் கழித்து ஒரு classic டெக்ஸ் சாகஸத்தை ரசிக்கும் அனுபவம் காத்துள்ளதென்பேன்! TEX-ன் கதை வரிசையினில் இது துவக்க நம்பர்களுள் உள்ளதொரு சாகஸம்! பிதாமகர் G.L. போனெல்லியின் படைப்பு என்ற விதத்தில் கதையில் பரபரப்பு அனல் பறக்கிறது! நமது வறுத்தக்கறிப் பிரியர் கார்ஸன் ரேஞ்சர் அலுவலகத்தில் மேஜராக யூனிபார்மில் காட்சி தருவதும்; கதைநெடுகிலும் கட்டம் போட்ட சட்டையில் சுற்றி வருவதும் ஒரு பக்கமெனில் – இரவுக் கழுகாரும், இளவல் கிட்டும் தெறிக்கவிடும் ஆக்ஷன் blocks மறுபக்கம்! ஏகப்பட்ட வசனங்கள்; ஏகப்பட்ட ஆக்ஷன் என்று தடாலடியாய் பயணிக்கும் இந்த ஆல்பத்தின் அட்டைப்படம் இதோ!


போனெல்லியின் அட்டைப்படமொன்றை நமது ஓவியரைக் கொண்டு வரைந்து முன்பக்க ராப்பராக்கியுள்ளோம்! Old is still very much Gold என்பதை நிரூபிக்கக் களமிறங்கும் இந்த இதழ் – செப்டம்பரின் முதல்வனாகிட இயலுமா? பதில் தொடரும் வாரங்களில் தெரிந்திடும் தானே?

Moving on – 2018-ன் அட்டவணையில் ஈரோட்டுச் சந்திப்பின் போது நான் கிரகித்துக் கொண்ட சில சமாச்சாரங்களையும்; சமீப நாட்களில் உங்களிடம் கேட்டிருந்த கேள்விகளுக்குக் கிட்டிய பதில்களையும்; விற்பனை stats-களையும் கொண்டு சன்னமான சில மாற்றங்களைச் செய்து ஒரு இறுதி வடிவம் தந்து முடித்திருக்கிறேன். தொடரும் நாட்களில் – “பஜ்ஜி தின்ன பயங்கரவாதி”; “போண்டா படலம்” என்று தலைக்குள் தினுசு தினுசாய் பெயர்களை ஓட்டிப் பார்த்து – தலைப்பு சூட்டும் பணியானது அரங்கேறிடும்! அதன் பொருட்டு தேர்வான கதைகளின் கதைச் சுருக்கங்களைக் கற்றையாகப் printout எடுத்து வைத்துக் கொண்டு – விட்டத்தை நோட்டமிட்டபடிக்கு சுற்றி வருகிறேன்! பெயர்கள் set ஆன பிற்பாடு கேட்லாக்கைத் தயாரிக்க வேண்டிய பணி மாத்திரமே பாக்கியிருக்கும்! So- அக்டோபரில் தீபாவளிக்கு முன்பாக – you will have all the details! முழுசாய் 365 நாட்களுக்கானதொரு அட்டவணை என்பதால் ஒன்றுக்குப் பத்துத் தடவை – நூறு தடவை என ஒவ்வொருவரது பார்வைக் கோணங்களிலும் பார்க்க முயற்சித்து வருகிறேன்! ‘’The Perfect Combo” என்பது மட்டும் ஒரு தடவையாவது சிக்கிவிடுமென்ற நம்பிக்கையில் எனது முயற்சிகள் தொடருகின்றன! பார்க்கலாமே?!

Before I sign off – செப்டம்பர் 1-ல் மதுரையில் துவங்கவிருக்கும் BAPASI புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 97 என்ற சேதியைப் பகிர்ந்து கொள்கிறேனே? சென்றாண்டினில் மதுரையின் விற்பனை ரொம்பவே encouraging ஆக இருந்ததாய் ஞாபகம்! இம்முறையும் அந்த அதிர்ஷ்டம் தொடர வேண்டுமென்ற பிரார்த்தனையோடு விடைபெறுகிறேன் guys! Have a lovely weekend! Bye for now! See you around soon !

358 comments:

  1. Replies
    1. ////என்னைப் பொறுத்த வரையிலாவது) சந்தோஷ உச்சங்கள் எப்போதுமே!////

      ஐயா என்னையும் சேத்துக்கிடுங்க!!

      Delete
    2. ஸ்மா்ப்னாவே சந்தோசம் தானா??

      Delete
  2. Replies
    1. முதலாவதா வர்ரது மட்டுமில்லே, அப்படியே பதிவைப் பற்றி கமெண்டும் அடிக்கிறதுதானே கெத்து? அதானேப்பா?

      Delete
    2. ஸ்மா்ப்பா பொடிஞ்சீங்க
      பொடியன் சாா்!!

      Delete
  3. .பத்துக்குள் ஒன்று 7 வந்தேன்.அனைவருக்கும் இரவு மற்றும் அதிகாலை வணக்கம்.

    ReplyDelete
  4. கொலையுதிர் காலம்: இதிகாசத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தை கொண்டு ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் கதையை கொடுக்க முடியுமா? முடியும் அதுதான் இந்த கொலையுதிர் காலம்! எப்பா முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு! அதுவும் அந்த கோஹ்லெம் வரும் காட்சிகள் செம விறுவிறுப்பு, என்ன நடக்குமோ எப்படி இதனை தடுத்து நிறுத்த போகிறார்களோ என திகிலுடன் படித்தேன்! க்ரௌச்சேக்கு காமெடி செய்ய வாய்ப்புக்கள் குறைவுதான், ஆனால் அதுவே கதையின் வேகத்திற்கு துணைபுரிந்தது. அதே போல் இந்த முறைதான் ஒரு கதையின் நாயகனாக தன்னை நிரூபித்து உள்ளார் டைலன்.

    இதுவரை நமது காமிக்ஸில் வந்த டைலன் டாக் கதையில் இதுதான் டாப் & சிறந்த கதை என்பேன்.

    சிறப்பு: கடைசி பக்கத்தில் கோஹ்லெம் பற்றிய சிறிய குறிப்பு என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. அதுவும் கடைசி பக்கத்தில் கொடுத்தது, கதையை ஒரு திக் திக் மனத்துடன் படிக்க முடித்து. இதுவே இந்த குறிப்பை முதல் பக்கத்தில் கொடுத்து இருந்தால் மேல் சொன்ன வாசிப்பு அனுபவம் கண்டிப்பாக எனக்கு கிடைத்து இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : சார்...பின்குறிப்பை முன்னே கொடுத்திருந்தேனெனில் மங்குணி smurf பதவிக்கு செம பொருத்தமான ஆளாகியிருந்திருப்பேன் !!

      Delete
    2. என்னெ மாதிாி கதைக்கு முன்னே பின்னே இருப்பதையெல்லாம் படிச்சுட்டு கதைக்குள்ளே போரவிங்கள என்ன பண்றதுங்க பரணி சாா்!

      Delete
    3. விஜயன் சார், அது உண்மையாகவே ஒரு பின் குறிப்புதான். உங்கள் ஐடியா செம! பாராட்டுகள்!

      Delete
    4. Mithun Chakravarthi : //என்னெ மாதிாி கதைக்கு முன்னே பின்னே இருப்பதையெல்லாம் படிச்சுட்டு கதைக்குள்ளே போரவிங்கள என்ன பண்றதுங்க ?//

      குதிரைக்குப் பட்டை போடுவதை போல ஏதாச்சும் தயார் செய்து இணைப்பாக அனுப்ப முடிகிறதா ? என்று பார்க்க வேண்டியது தான் !!

      Delete
    5. Mithun Chakravarthi @ கதையை மட்டும்தான் உங்களை போன்றவர்களுக்கு அனுப்ப வேண்டும் அய்யா! :-) சொல்லுறத பார்த்தால் நீங்கள் எல்லா கதையிலும் கிளைமாக்ஸ் படித்துவிட்டு முதல் பக்கத்தில் இருந்து கதையை படிக்கிற குரூப் போல தெரிகிறது :-)

      Delete
    6. பரணி சார்.
      நள்ளிரவு 1மணிக்கு விமர்சனம் எழுதிறீங்க, அதுவும் டைலன் டாக் கதையை. செம தில்லானவர் நீங்க.

      Delete
    7. நீங்க வேற கோவிந்தா! நாளைக்கு காலையில் இந்தபக்கம் தலைகாட்டுவது கொஞ்சம் சிரமம். அதனால பயத்தை எல்லாம் கொஞ்சம் கட்டுபடுத்திகிட்டு விமர்சனம் எழுதிவிட்டேன்.

      பின்குறிப்பு: எந்த பயத்தை என்று எல்லாம் கேள்வி கேட்க கூடாது :-)

      Delete
    8. Mithun Chakravarthi @ சொல்ல விட்டு போன விஷயம், அடுத்த மாதத்தில் இருந்து ஒவ்வொரு கதையின் கிளைமாக்ஸ் பக்கம்களையும் உங்களுக்கு அனுப்பக்கூடாது! :-)

      Delete
    9. பரணி!

      நிஜம் என்னவென்றால் காமிக்ஸ்ல் இல்லையென்றாலும், நியூஸ் பேப்பா் மற்றும் வார, மாத இதழ்களை நான் கடெசிலோ்ந்து படிக்கறது தான் வாடிக்கைங்க!!

      Delete
    10. ///நிஜம் என்னவென்றால் காமிக்ஸ்ல் இல்லையென்றாலும், நியூஸ் பேப்பா் மற்றும் வார, மாத இதழ்களை நான் கடெசிலோ்ந்து படிக்கறது தான் வாடிக்கைங்க!!///

      கடல்ல்லே இல்லாத டெக்னிக்கா இருக்கிதே.

      கதையாவது முன்னால இருந்து படிப்பீங்கனு நம்பறேன்.

      Delete
    11. Mithun Chakravarthi @ அப்ப உங்களுக்கு மட்டும் கடைசி பக்கத்தில் இருந்து கதையை ஆரம்பிக்கிற மாதிரி ஒரு ஸ்பெஷல் பிரிண்ட் போட்டு விட வேண்டியதுதான்! :-)

      Delete
  5. விஜயன் சார், டெக்ஸ் அட்டைபடம்: கை கொடுங்க.. செமையா இருக்குது சார். வாழ்த்துக்கள். கை தட்டி கொண்டே இருக்கும் படம்கள் பல பல.

    ReplyDelete
  6. விஜயன் சார், என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் அட்டை படமும் சரி உட்பக்க டீசர்ரும் சரி சூப்பரா இருக்கு. அதுவும் அந்த உட்பக்க டீசர் சித்திரங்கள் டாப். அட்டைபடத்தில் அந்த பெண்ணின் முகம், கழுத்து, கை மற்றும் கால்களுக்கு கொடுத்த வண்ணம் அருமை, நிஜமாக ஒரு பெண் உட்கார்ந்து இருக்கும் எண்ணத்தை கொடுக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் வாங்க வாங்க அடுத்து ஸ்மா்ப் தானே!!

      Delete
    2. Mithun Chakravarthi @ இல்லை நீல பொடியர்களை பற்றியது :-)

      Delete
  7. டெக்ஸ் கதைகளை மட்டும் படிக்க முடிவதால் .அதை பற்றி மட்டும் அலசுகிறேன்.அட்டையையும் , உட்பக்க டீசரையும் பார்க்கும் போது டிராகன் நகரம் போல் ஓர் அதிர் வெடி காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதுவும் நம்ம தலையை எதிர் கொள்வது ஒரு பெண் என்று நினைக்கிறேன்.
    யாராக இருந்தாலும் நம்ம தலயின் முன் மண்டியிண்டு தானே தீர வேண்டும். .

    ReplyDelete
    Replies
    1. ////டெக்ஸ் கதைகளை மட்டும் படிக்க முடிவதால்////

      இது புதுவிதமான பிரச்சனையா இருக்கே!

      Delete
  8. விஜயன் சார், நீல பொடியர்கள் அட்டைபடம் வழக்கம் போல் சிம்ப்ளி சூப்பர்! பொடியர்கள் உலகத்தில் உலவ ரெடியாகி விட்டேன்! சமீப காலங்களில் என்னை மறந்து படிக்கும் ஒரு கதை இந்த பொடியர்கள்தான். இவர்களை ரசிக்க நாமும் பொடியர்களாக மாற கிடைக்கும் சந்தர்பத்தை பலர் தவறவிடுவதால் இவர்களை ரசிக்க முடிவது இல்லை என்பது எனது எண்ணம்.

    ReplyDelete
  9. என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்.தலைப்பே ஓரு வித்தியாசமான கவிதை போன்றது என்பதை மறுக்க முடியவில்லை.அட்டை மற்றும் டீசரை பார்க்கும் போது க்ளைமாக்ஸ் மனிதனின் மறுபக்கத்தை காட்டும் போல் தோன்றுகிறது.
    இது போன்ற கதைகள் வெற்றி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. விஜயன் சார், கடந்த வாரம் பதிவு போட்டபின் இங்கு நீங்கள் தலைகாட்டாமல் இருக்க இந்த "என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்" காரணமாக இருக்குமோ என்று இந்த பதிவை படித்தபின் யோசிக்க தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : Black & white கதைகளை கடைசி நிமிடத்தில் கூடத் தயாரித்துக் கொள்ளலாம் என்பதால் கொஞ்சம் மெத்தனமாய் இருந்து விட்டது எத்தனை பெரிய தப்பு என்பது பேனாவைத் தூக்கிக் கொண்டு போன வாரத்தின் ஆரம்பத்தில் அமர்ந்த பிற்பாடு தான் உணர முடிந்தது ! ரொம்பவே intense ஆன கதை என்பதை புரிந்து கொண்ட பின்னே இங்கே-அங்கே அசைய மனம் ஒப்பவில்லை !

      Delete
    2. உங்களின் இது போன்ற மேனக்கெடல் & ஈடுபாடுதான் இது போன்ற கதைகளை எங்களை வாசிக்க தூண்டுகிறது!

      Delete
    3. ////உங்களின் இது போன்ற மேனக்கெடல் & ஈடுபாடுதான் இது போன்ற கதைகளை எங்களை வாசிக்க தூண்டுகிறது!///

      +11111111

      Delete
  11. விஜயன் சார், மதுரை புத்தகத்திருவிழா வெற்றி பெற வாழ்த்துக்கள்! புத்தகத்திருவிழாவிற்கு நீங்கள் விஜயம் செய்யும் எண்ணம் ஏதும் உண்டா? விஜயம் செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

    ReplyDelete
  12. ////மனித குணங்களை; நமது நடைமுறைகளில் உள்ள பழக்கவழக்கங்களை பகடி செய்ய கதாசிரியர் இந்த நீலப் பொடியர்களை எவ்விதம் லாவகமாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதை ரசிக்க நேரமெடுத்துக் கொண்டால் – இந்தத் தொடரோடு நாம் ரொம்பவே நெருக்கமாகிட முடியுமென்பேன்! “டாக்டர் ஸ்மர்ஃப்” ///

    ஸ்மா்ப்பா பொடிஞ்சீங்க விஜயன் சாா்!

    ஒரு வருடம் கழித்து என் வீட்டுக்கு வந்த அண்ணன் மகன், வந்து உடனே புதுசா ஸ்மா்ப் புக் வாங்கிருக்கீங்களானு கேட்டான்! அடுத்து சுட்டி லக்கி!!

    நான் என் வீட்டின் அருகில் உள்ள குழந்தைகளுக்கு காா்ட்டூன் புக் வழங்குவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளேன்! நான் அறிந்தமட்டும் குழந்தைகளின் விருப்பத்திற்குாிய புக்கில் முதலிடம் ஸ்மா்ப்கே!

    ReplyDelete
    Replies
    1. Mithun Chakravarthi : நமது மீசை வைத்த / வைக்காத குழந்தைகளுமே இந்த ப்ளூ உலகம் மீது கொஞ்சம் வாஞ்சை வைத்தால் - all will be well sir...

      Delete
    2. விஜயன்சாா்,
      பிரச்சனை என்னன்னா?
      EBFல் சிலபல நண்பா்களிடம் நான் விசாாித்த வகையில், ஸ்மா்ப் புக்கை படிக்காமலேயே இது குழந்தைகளுக்கானதுன்னு சொல்லி, வேண்டாம்னு சொன்னதையும் காண முடிந்தது சாா்!

      Delete
    3. ///குழந்தைகளின் விருப்பத்திற்குாிய புக்கில் முதலிடம் ஸ்மா்ப்கே!///

      இதை நமது ஸ்டாலில் நான் அனுபவத்தில் உணர்ந்தேன்.

      Delete
    4. // EBFல் சிலபல நண்பா்களிடம் நான் விசாாித்த வகையில், ஸ்மா்ப் புக்கை படிக்காமலேயே இது குழந்தைகளுக்கானதுன்னு சொல்லி, வேண்டாம்னு சொன்னதையும் காண முடிந்தது சாா்! //

      இதில் ஒரு நல்லது உள்ளது! பல பெற்றோர்களுக்கு தனது குழந்தைகளுக்கு தயங்காமல் வாங்கிகொடுக்க உதவும்.

      Delete
  13. Replies
    1. வாங்க வாங்க!

      மழை எப்புடி வருதுங்க!!

      "வா்ஷினி" ராகத்துல பாடுன மழை வரும்னு சொல்றாங்களே!

      அதைப் பத்தி எதுனா பௌதீக விளக்கம் உண்டுங்களா ஜீ!

      Delete
    2. மிதுன் சார்.

      உங்களுக்கு எந்த ராகத்தில் பாடினா தூக்கம் வரும்?

      Delete
    3. தூக்கம்னா "கல்யாணி"யும்,
      அதிகாலைனா "பூபாலம்"மும்
      உலக நியதி தானே கோவிந்தரே!

      Delete
    4. இது தூங்கற நேரம்!
      சித்தெ நேரத்துல விடியற நேரம்!

      எத பாடுவீங்க கோவீ! (சாா்டா)

      Delete
    5. கல்யாணியில ஆரம்பிச்சு அப்பிடியே சிந்துபைரவிக்கு தாவி மறுபடி கல்யாணிக்கு யூ டர்ன் அடிச்சி, க்ளைமாக்ஸை பூபாளத்துல பாடினா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்

      Delete
    6. ஒரு கொசுருத் தகவல்!

      பைரவில சில ராகங்கள் உண்டு!
      "சிந்து" ன்றது சும்மானாச்சும், உல்லலாயி! அது ராகமல்ல!

      Delete
    7. யாமறிந்த மட்டிலும் "சிந்து" ஒரு வகையான கிராமிய நடை!

      Delete
    8. பாடுறதுன்னு முடிவு பண்ணிட்டா, எல்லா ராகத்திலேயும் பூந்து விளையாட வேண்டியதுதான், கிராமிய நடையோ, வெஸ்டர்ன் நடையோ, நமக்கு தேவை பாட்டு மட்டுமே.

      கேக்கிறங்க மெர்சலாகிறாங்களோ இல்ல மெண்டலாகிறாங்களோ அது வேற விசயம்

      Delete
    9. இதுதான் சந்துல சிந்து பாடுறது என்பதா?

      Delete
  14. எங்களின் BIG BOOS திரு விஜயன் அவர்களுக்கு வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் செந்தில் சத்யா சார்!!!

      Delete
    2. பதில் வணக்கம் சரவணன் ப்ரோ

      Delete
    3. வணக்கம் நண்பரே செந்தில் சத்யா!

      Now I am coming chennai for one marriage occasion!

      Delete
    4. வெல்கம் சென்னை நண்பரே

      Delete
  15. சார் மூன்று அட்டைப் படங்களும் பட்டையை கிளப்புகின்றன

    ReplyDelete
  16. ஆக எல்லாரும் வந்தாச்சு. இரவு பகலாக மாறியாச்சு. இன்னும் மிச்சம் இருக்கிறவங்க சீக்கிரம் வந்திடுங்க.
    காலைல பாத்துக்கலாம்னு இருந்தா Load more சுழல்ல மாட்டிக்குவீங்க

    ReplyDelete
  17. அடுத்த வருடம் சந்தா D எல்லோரும் விரும்பும் வகையில் இருக்கும் என ஆசிரியர் சொன்னதால் அடுத்த வருட அட்டவனையை காண ஆவலாக இருக்கிறது

    ReplyDelete
  18. மூன்று இதழ்களின் அட்டைப் படங்களும் மிகச் சிறப்பாக அமைந்தி௫க்கின்றன. அதுவும் "தல" யின் அட்டைப்படம் அசத்தல் அட்டகாசம் அ௫மை அற்புதம் அழகு என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!!!.

    ReplyDelete
  19. சார் ஆகஸ்ட்டில் செப்டம்பர்,
    எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  20. அடுத்த வருடம் சந்தா D இது போல இருக்குமோ
    1.ஆர்ச்சி
    2.ஸ்பைடர்
    3.மாயாவி
    4.ஜான் மாஸ்டர்
    5.லாரண்ஸ் டேவிட்
    6.ஜானி நீரோ
    7.சுஸ்கி விஸ்கி
    8.நார்மன்
    9.டெக்ஸ் வில்லர்
    10. புயல் வேக இரட்டையர்கள்
    இப்படிதான் இருக்கும்னு சொல்லலை இப்படி இருந்தா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கேளுங்க. கேளுங்க.
      கிடைக்கிற வரைக்கும் கேட்டுகிட்டே இருங்க.

      Delete
  21. விஜயன் சார்,

    அடுத்த வருட சூப்பர் சிக்ஸ்ஸில் ரிப்போர்ட்டர் ஜானிக்கு ஒரு ஸ்லாட் கொடுக்க முடியுமா! கடந்த பதிவில் கண்ணன் பதிவிட்ட கதைகளின் பெயர்கள் நன்றாக இருந்தது அதைவிட இதனை பலர் இதுவரை படித்து இல்லை என்பது கூடுதல் தகவல், இதில் இரண்டு கதைகளை தெர்ந்து எடுத்து ஜானி கிளாஸ்சிக் என வெளிஇட்டால் கண்டிப்பாக வெற்றி பெறுவது உறுதி.

    இதோ கடந்த பதிவில் கண்ணன் பதிவிட்டு இருந்த ஜானி கதைகள்:

    இரத்தக்காட்டேரி மர்மம்
    தலைமுறை எதிரி
    பிசாசுக் குகை
    சிவப்புப் பாதை
    மர்ம முத்திரை
    மரணப் பட்டியல்
    விசித்திரப் போட்டி
    நள்ளிரவு பிசாசு
    இரத்த அம்பு
    விசித்திர நண்பன்

    ReplyDelete
  22. ஒரு முடியா இரவு போல் “என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் ஹிட்டாகும் என நம்புகிறேன்,

    ReplyDelete
  23. அட்டைப் படங்கள் அருமை.. டெக்ஸ் அட்டைப்படம் அள்ளுது..

    ReplyDelete
    Replies
    1. உண்மையாகவே நீங்க ரம்மி தானா ...!?....:-)

      Delete
  24. Good morning my dear friends. Eagerly waiting for graphic novel. 🙌😜😜👏👏

    ReplyDelete
  25. விடிய காலை வணக்கங்கள் நண்பர்களே....!!

    ReplyDelete
  26. அட்டை படங்கள் எல்லாமே சிறப்பு . அதுவும் "என் சித்தம் சாத்தனுக்கே சொந்தம் " உட்பக்க சித்திரங்கள் மிரட்டுகின்றன . "டாக்டர் பொடியன் " இக்காக சிரிப்பதற்காக காத்துள்ளேன் . "கடல் குதிரையின் முத்திரை " அமர்க்களம் . சித்திரங்களின் புராதனத்தில் பிதாமகரின் படைப்பு என்ற தங்களின் கூற்றினை கட்டியம் கூறுவனவாய் உள்ளன . மறு பதிப்பு பட்டியலில் வரும் இதழ் பற்றி ஏதும் குறிப்பில்லையே சார் ? மதுரை புத்தக விழாவினில் விற்பனை சிறப்பாக அமைய என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  27. அல்லார்க்கும் வண்கம்!

    * கி.நா - ஆர்வத்தை அதிகரிக்குது தானா!
    * எல்லா அட்டைப்படங்களுமே சூப்பர்! டெக்ஸ் அட்டைப்படத்தில் நமது ஓவியரும் அசத்தியிருக்கிறார்!
    * ஸ்மர்ஃப் படிக்க குஷியாய் இருக்கிறேன்.
    * கதைகளுக்கான பெயர் சூட்டும்படலம் நடைப்பெற்றுவருவது மகிழ்ச்சியளிக்கிறது.கேட்லாக்கை கண்கள் விரிய புரட்டப்போகும் நாளை எண்ணி மனம் ஏங்குகிறது!
    * அந்தத் 'தல' எப்படின்னு தெரியாது. ஆனா இந்தத் 'தல' பின்னிப்பெடலெடுக்கப்போவது உறுதி!
    * மதுரை புத்தகத் திருவிழா - நிறைவாய் விற்பனை காண எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்கட்டும்!

    ReplyDelete
  28. கடல் குதிரையின் முத்திரை முத்திரை பதிக்கும் என்பது உறுதி.

    ReplyDelete
  29. அந்தத் 'தல' எப்படின்னு தெரியாது. ஆனா இந்தத் 'தல' பின்னிப்பெடலெடுக்கப்போவது உறுதி!
    தல மற்றும் தல தல தான்.

    ReplyDelete
  30. கேட்லாக்கை கண்கள் விரிய புரட்டப்போகும் நாளை எண்ணி மனம் ஏங்குகிறது!
    ஆமாம்! ஆமாம்!!

    ReplyDelete
  31. அட்டைப் படங்கள் அருமை.. டெக்ஸ் அட்டைப்படம் அள்ளுது..எல்லா அட்டைப்படங்களுமே சூப்பர்! டெக்ஸ் அட்டைப்படத்தில் நமது ஓவியரும் அசத்தியிருக்கிறார்!
    கடல் குதிரையின் முத்திரை " அமர்க்களம் . சித்திரங்களின் புராதனத்தில் பிதாமகரின் படைப்பு என்ற தங்களின் கூற்றினை கட்டியம் கூறுவனவாய் உள்ளன .
    மூன்று இதழ்களின் அட்டைப் படங்களும் மிகச் சிறப்பாக அமைந்தி௫க்கின்றன. அதுவும் "தல" யின் அட்டைப்படம் அசத்தல் அட்டகாசம் அ௫மை அற்புதம் அழகு என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!!!.
    ஆமாம், அதே அதே ,அப்படியே!

    ReplyDelete
  32. 'டாக்டர் ஸ்மர்ஃப்' கதையும், காட்சிகளும் இங்கே அவ்வப்போது ரகளை செய்துவரும் நம் மருத்துவ நண்பர்களை அப்படியே பிரதிபலிக்க இருப்பதாகத் தோன்றுகிறது! ;) பொருளாதாரம், வரலாறு, புவியியல், அறிவியல் ஆகியவற்றை மிகச் சுவையாக, தேர்ந்த நகைச்சுவை உணர்வுடன் எழுதத்தெரிந்த நம் மருத்துவர்களிடம் "லேசா தலைய வலிக்கறாப்ல இருக்கு டாக்டேர்... ஏதாச்சும் மாத்திரை இருந்தாச் சொல்லுங்களேன்?"னு நாம கேட்டா, அரைமணி நேரத்துக்கு திருதிருனு முழிக்கறாங்க; வேர்த்துக் கொட்டிடுது பாவம்! :D

    இவங்களை மனசுல வச்சுக்கிட்டு 'டாக்டர் ஸ்மர்ஃப்'பை படிச்சோம்னா ஒரு காமெடி மேளா உறுதின்றது உறுதி!

    ReplyDelete
  33. டைகரின் சாகஸங்களில் முக்கியமானது இரத்தக்கோட்டை அப்படின்னு சொன்னா, அது ரத்தக்கோட்டை என்னும் காவியத்துக்கு நியாயம் செய்தது போல் ஆகாது. இது வரை வந்த காமிக்ஸ் கதைகளிலேயே மிகவும் முக்கியமான இடம் ரத்தக்கோட்டைக்குத்தான்.
    இதுக்கு முன்னாடி டெக்ஸோட மேலோட்டமான அதிரடிகதைகளையே படித்து பழகிப் போன எனக்கு நியூஸ் பிரிண்ட்ல கறுப்பு வெள்ளைல வந்தாலும் ஆழமாக, மிகுந்த திட்டமிடலுடன், எழுதப்பட்ட அதிரடி ஆக்ஸன் ஒரு மிகப் பெரிய சர்ப்ரைஸ். பாதியில் நின்றிருந்த மின்னும் மரணம்னால டைகர் மேல ஒரு பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. தங்கக் கல்லறைக்கும் இதுக்கும் இருந்த வேறுபாடு வேற அதிகம்.
    ஒரு கதையோட பிளாட்டை (plot) முன்னமே முழுக்க நுணுக்கமா திட்டமிட்டு ஒரு கோர்வையா, புத்திசாலித்தனமா சொல்லப்பட்ட அதிரடி ஆக்சன் கதைகள்ல முக்கிய இடம் ரத்தக்கோட்டைக்கு உண்டு. இதப்படித்த பிறகு என் மனதில் டைகர் முதல் இடத்திற்கு வந்தது ஒரு கதை. இதற்கு பிறகு மின்னும் மரணத்தின் ஸ்கேன்லேசன் கதைகளை தேடிப்பிடித்து படித்ததற்கு ர. கோ. யே தூண்டுகோலாக இருந்தது.
    முதல் முதல்ல இந்தக் கதை படிச்சப்பகூட இதோட சிறப்புகள் எல்லாம் ஒரு வெங்காயமும் தெரியாது. ஒரு கால கட்டத்தில் இன்டர்நெட் வசதிகள் வந்த பிறகு கதையின் பின்புலம், சரித்திரம் ஆராய்ந்த பின் ரா. கோ மேலான பிரமிப்பு இன்னும் கூடியது.
    பிக் பாஸ் மாதிரி, அடுத்த பத்து வருசத்துக்கு ஒரு அறையிலேயே இருக்கனும், வெளில வர முடியாது, ஒவியாவெல்லாம் கிடையாது ஆனால் கூட எடுத்துட்டு போக மூனு காமிக்ஸ் கதைகள் மட்டும் தேர்வு செய்யலாம். அப்படி ஒரு போட்டி வைச்சா கூட எடுத்துட்டு போக முதல் தேர்வு ரத்தக் கோட்டை தான்.
    என்னுடய ஆதர்ச கதாநாயகர்களில் முதலிடம் டைகருக்கே. டைகரை கலாய்பபது சாத்ஜி, ப்ளூ, ரம்மி போன்ற நணபர்களின் கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்வதற்கே டைகரை பிடிக்காதவர்கள் கூட இந்தக் கதையை படித்துப் பாரக்க வேண்டும். எ. பெ. டை. படித்து விட்டு டைகரை பார்த்து பயந்தவர்கள் இந்தக் கதையை கட்டாயம் படிக்க வேண்டும். 575 ரூபாய்க்கு வண்ணத்தில் ஹார்ட் பவுண்டில் இது காமிக்ஸ் ரசிகர்களுக்கான பொக்கிஷம்.

    பி. கு:

    நாலு வார்த்தை எழுதரதுக்குள்ளே நக்கு தள்ளிடுச்சு...எப்படி தான் மாயாவி, ஈ. வி , செனா. ஆனா, தலீவர், சேலம் தல, கண்ணர், மிதுன், இன்னும் பல நண்பர்கள் இங்கு பட்டையை கிளப்புகிறார்களோ.... பொறாமையாக இருக்கிறது...இந்த வாரத்தை தளபதியின் இரத்தக் கோட்டையை கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இரத்தக் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்க இது உதவும்...

    ReplyDelete
    Replies
    1. @ MP

      ///ஒரு கதையோட பிளாட்டை (plot) முன்னமே முழுக்க நுணுக்கமா திட்டமிட்டு ஒரு கோர்வையா, புத்திசாலித்தனமா சொல்லப்பட்ட அதிரடி ஆக்சன் கதைகள்ல முக்கிய இடம் ரத்தக்கோட்டைக்கு உண்டு///

      உண்மையோ உண்மை! நேத்து நைட்தான் இ.கோ இறுதிப்பாகத்தைப் படிச்சு முடிச்சேன்! படைப்பாளிகளின் திட்டமிடலும், செதுக்கினாற்போல கதையை (இறுதிவரை பரபரப்பாக) நகர்த்திச் சென்ற விதமும் - ப்பா!! செம அனுபவம்!!

      அஞ்சு பாகங்களை படிச்சு முடிச்சதுக்கப்புறமும், இன்னும் சில பாகங்கள் இருந்திருக்கக் கூடாதா'னு ஏங்க வச்சுடுச்சு!

      என்னதான் அத்தக் காலத்துல ப்ளாக்&வொய்ட்ல படிச்ச கதைன்னாலும் - வண்ணத்தில் படிக்கும்போது பிரம்மிப்பான ஒரு புத்தம்புது வாசிப்பு அனுபவத்தைப் பெற முடிகிறது!

      காமிக்ஸ் படிப்பவர்கள் தவறவிடக் கூடாத ஒரு அசாத்திய படைப்பு இது!

      Delete
    2. என்னதான் அத்தக் காலத்துல ப்ளாக்&வொய்ட்ல படிச்ச கதைன்னாலும் - வண்ணத்தில் படிக்கும்போது பிரம்மிப்பான ஒரு புத்தம்புது வாசிப்பு அனுபவத்தைப் பெற முடிகிறது!


      #######


      உண்மை......




      ***********†


      டைகரை கலாய்பபது சாத்ஜி, ப்ளூ, ரம்மி போன்ற நணபர்களின் கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்வதற்கே



      ######


      உண்மை ;-)



      **************

      என் பெயர் டெக்ஸ் வில்லராக இருந்தாலும் கூட என் பெயர் டைகர் அட்டகாச தரத்தில் அட்டகாச படைப்பு என அவரே கூறுவார்...:-)

      Delete
    3. ///575 ரூபாய்க்கு வண்ணத்தில் ஹார்ட் பவுண்டில் இது காமிக்ஸ் ரசிகர்களுக்கான பொக்கிஷம்.///+1000

      நடுநிலையான பொதுவான கருத்துக்களை ஆழமாக ஆணித்தரமாக சொல்லி வந்த மஹிஜியின் விசாலமான விமர்சனம் அட்டகாசம்...

      உண்மையிலேயே காமிக்ஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பொக்கிசம் தான் இரத்த கோட்டை...

      இரத்த கோட்டை படித்து முடிக்கும் போது கெளபாய் கதைகள் மேல் எக்ஸ்ட்ரா பிரியம் ஏற்பட போவது உறுதி...

      Delete
    4. கார்ட்டூன் பிடிக்காவங்க, மாடஸ்டி பிடிக்காதவங்க, மார்டின், டைலன் டாக் பிடிக்காதவங்க, கிராபிக் நாவல் பிடிக்காதவங்கனு இருக்காங்க.
      ஏன் டெக்ஸை பிடிக்காவங்க ஒண்ணு ரெண்டு இருக்கிறாங்க.

      ஆனா அத்தனை பேருக்கும் பிடிச்சது "கேப்டன் டைகர் "

      அதுதான் டைகர்.

      Delete
    5. ///என் பெயர் டெக்ஸ் வில்லராக இருந்தாலும் கூட என் பெயர் டைகர் அட்டகாச தரத்தில் அட்டகாச படைப்பு என அவரே கூறுவார்..///---யெஸ்.

      என் "தல"- டெக்ஸின் சார்பில் ஆமோதிக்கிறேன்.

      மிரட்டலான படைப்பு, இந்த இரத்த கோட்டை...

      ஒரு விரிவான விமர்சனத்தை முன் வைக்கலாம் என பார்த்தால் முகூர்த்த சீசன் ரஸ், என் நேரத்தில் பெரும்பான்மையை எடுத்து கொள்கிறது. அனைத்து டைகர் ரசிகர்களி

      Delete
    6. ...களின் விரிவான விமர்சனங்களை பார்த்து விட்டு என் ஸ்டைலில் ஒரு தொடர் பதிவை இரத்த கோட்டைக்கு போட ஐடியா. டைகர் ரசிகர்களின் பார்வையை இப்போதைக்கு ரசிப்போம்...

      Delete
    7. // என்னுடய ஆதர்ச கதாநாயகர்களில் முதலிடம் டைகருக்கே. டைகரை கலாய்பபது சாத்ஜி, ப்ளூ, ரம்மி போன்ற நணபர்களின் கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்வதற்கே டைகரை பிடிக்காதவர்கள் கூட இந்தக் கதையை படித்துப் பாரக்க வேண்டும். எ. பெ. டை. படித்து விட்டு டைகரை பார்த்து பயந்தவர்கள் இந்தக் கதையை கட்டாயம் படிக்க வேண்டும். 575 ரூபாய்க்கு வண்ணத்தில் ஹார்ட் பவுண்டில் இது காமிக்ஸ் ரசிகர்களுக்கான பொக்கிஷம். //


      உண்மை மகி ஜி ... அருமை ....

      Delete
    8. //டைகரை கலாய்பபது சாத்ஜி, ப்ளூ, ரம்மி போன்ற நணபர்களின் கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்வதற்கே....//

      அவ்வளவு தொலைவில் இருந்து கூட எங்க கையை பிடுச்சு இழுக்கும் நீங்கள் ஒரு அதிசய பிறவியே ...

      Delete
    9. 👌👌👌👌👌👏👏👏👏👏 மஹி ஜி..!!

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. அருமை மகிஜி.. 👏👏👏👏👏👌👌👌👌

      Delete
    12. // 575 ரூபாய்க்கு வண்ணத்தில் ஹார்ட் பவுண்டில் இது காமிக்ஸ் ரசிகர்களுக்கான பொக்கிஷம்.//
      மஹி ஜி,சிறப்பான விமர்சனம்.
      👏👏👏👏👏👏

      Delete
  34. சார் அருமை...இந்த மாத இதழ்களே படிக்க வாகான நேரம் அமையாததால் , நேரம் கிட்டுமென ஆமோசோடு சுற்றிக் கொண்டிருக்கிறேன் . மிக மிக எதிர் பார்த்த கதை....அதற்குள் என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் முதலில் என்னை படித்து விடுவாய் என எனது சித்தத்தையும் அதற்கே சொந்தமாக்கி விடுவீர்கள் போலிருக்கே . அட்டைப்படம் சும்மா கலக்குது ;அழகாய் இருக்குது . வண்ணம் அட்டகாசம் . நீலப் பொடிய்கள் அட்டையும் அருமை . டெக்ஸ் உள் பக்கத்த பார்த்ததுமே மனக்கண்ணில் 80கள் தாண்டவமாட தவறவில்லை . எப்படி இக்காலப் பயணம் சாத்தியம் என்பதில் ஆச்சரியமில்லை . பொடியர்களுக்காக பரபரப்பாய் காத்திருப்பேன் . துக்கடா கதைகள் பிடிக்கா எனக்கு , இந்த துக்கடா கதைகள் எப்டிடா பிடிக்குதென பார்த்தால் நீங்கள் சொன்ன பட்டியல் வரும்...வியாபிக்கும் அசத்தும் வான நீலம் , புன்னகையுடன் நடமாடும் ஏராள குட்டிகள் ,இயற்கை என கூடுவதுடன் ஒரு இனம் புரியா உற்சாகமும் , ஏக்கமும் கூட காரணமாயிருக்கும் . டெக்ஸ் என்றால் எதற்கும் அஞ்சா பாய்ச்சலும் , நீல வண்ணர்களில் துரத்தபடும் போதும் கூட உற்சாகமாய் தலைதெறிக்க அவை ஓடும் சந்தோசமும் அதில் விரவிக் கிடக்கும் . டெக்ஸ் , ஸ்மர்ஃப் இரண்டுமே இரு வேறு முனைகளின் ஜாலங்கள் என்பதும் ....இரண்டுமே கதைகளிலாவது வாய்க்கிறதே . அந்த வாய்ப்பை வழங்கிய தங்களுக்கு எண்ண அளவிலா , சொல்ல சொல்ல வாய் வலிக்கா..வாயினிக்கும் நன்றிகள் பலப்பல....அட்டை படம் மூன்றும் அருமை ...மூன்றில் எதை முதலில் படிப்பதென்பதே சுவாரஷ்யமல்லவா .

    ReplyDelete
  35. நான் பரபரப்பாய் 77என போடனுமேன்னு கீழே வரயிலே கண்ணில் பட்ட 12 ெனும் மதுரை டீசர் மின்னலென கண்ணில் பட்டு சூப்பர் சிக்ஸ் பன்னெண்டு ஆயிருச்சே என பட்டாசாய் வெடிக்க படித்துக் கொண்டே கீழே வந்தால் குலை நடுங்கச்செய்யும் குலைவானமாய் புஷ் .

    ReplyDelete
  36. Replies
    1. ரின்@ ஹா..ஹா...
      ஒரு மெளன வாசகர், உன் கதைகள் மேல் தனிப்பிரியம் கொண்டவர், நேற்று மதியம் ஒரு அரை மணி நேரம் உன்னைப்பற்றியும், தடைபல தகர்த்தெழு பற்றியும் சிலாகித்து சென்றார். ஒவ்வொரு டயலாக், ஓவியங்களை ரசித்து பாராட்டினார். இதையெல்லாம் வருடம் ஒரு 2ஆவது போட மாட்டறாங்களே என
      அவர் புலம்பியதை நமட்டு சிருப்புடன் ரசித்தேன். சத்தமில்லாமல் சாதித்து விட்டாய்பா... வாழ்த்துக்களை வாங்கிகொள் அய்யா...

      Delete
    2. இல்லையே
      நான் சத்தமில்லாமல் சாப்டலயே , சத்தமாத்தானே சாப்பிட்டேன் , TV

      Delete
  37. விஜயன் சார் ஒரிஜினல் அட்டைப்படங்களை பட்டி டிங்கரிங் செய்து
    வெளியிட்டால் நேரமும் மிச்சம் எங்களுக்கும் ஒரிஜினல் அட்டைப்பபடம்
    கிடைத்தது போல் இருக்கும்.Sep மறுபதிப்பு என்னவோ.வாராவாரம் Xiii
    முன் பதிவு அப்டேட் போடுங்களேன்.
    ஈ வி Early bird badge ஆசிரியருக்கு
    அனுப்பியாச்சா நீங்க கேட்டமாதிரி
    10 மணிக்குமுன்னால பதிவ போட்டுட்டாரே

    ReplyDelete
    Replies
    1. ///ஈ வி Early bird badge ஆசிரியருக்கு
      அனுப்பியாச்சா நீங்க கேட்டமாதிரி
      10 மணிக்குமுன்னால பதிவ போட்டுட்டாரே///

      நாஞ்சொன்னது நேத்து ராத்திரி பத்து மணி! இரண்டரை மணி நேரம் லேட்டா பதிவு போட்டதுக்கு நியாயப்படி அவர்தான் நமக்கு 'Penalty bird' பேட்ஜ் அனுப்பிவைக்கணும்! கிர்ர்ர்ர்...

      Delete
    2. லேட்டா பதிவு போட்டதுக்கு மட்டும் இல்ல போன வாரம் இந்த பக்கம் வராததற்க்கும் சேர்த்து பெனாலிடி போடனும்.

      Delete
    3. "பெனால்டி" போட நாம என்ன கிறிஸ்டியானா ரொனால்டோவா...!!!

      ஆசிரியர் சார் இங்கே வந்து இருந்தால் "என் சித்தம் சாத்தானுக்கு சொந்தம்"- சித்தமா ரெடியாகி இருக்காது என்பது தானே பதிவு சொல்லும் செய்தி...

      Delete
  38. என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் ....


    காத்திருக்கிறேன் அது என்ன சிவகாசி வெடி என அறிய .....:-)

    ReplyDelete
  39. So- அக்டோபரில் தீபாவளிக்கு முன்பாக – you will have all the details!


    ######


    தீபாவளி மலரை விட அதிக ஆவலுடன் இதற்காக காத்து கொண்டு இருக்கிறோம் சார் .அதிலும் ஈரோடு தங்களின் சந்திப்பிறகு பிறகு சந்தா D யின் அட்டவனையை காண இன்னமும் ஆவல் கூடுதலாக ...:-)

    ReplyDelete
    Replies
    1. So- அக்டோபரில் தீபாவளிக்கு முன்பாக – you will have all the details!
      +1

      Delete
    2. எனக்கு சந்தா Aவிலும்(புதிய அறிமுகங்கள் யார்னு தெரிய;

      சந்தாBல்(டெக்ஸ் 70பற்றி அறிய);

      சந்தாCல்(புதிய கார்டூன் ஹீரோ யாரு);

      சந்தாDல்(எத்தனை கலர் புக்ஸ்,கொலைப்படை இருக்கா என தெரிய)

      சந்தாEல்(அண்டர்டேக்கர் பார்ட்3 வருதா என பார்க்க) மட்டுமே ஆவல்...
      மற்ற சந்தாக்களை பற்றி கவலை இல்லை...ஹி..ஹி...

      Delete
  40. மேலேயிருக்கும் 3 கதைகளின் தலைப்புகளிலுமே நம் நண்பர்களின் புனைப்பெயர்கள் ஒளிந்திருப்பதைக் கவனித்தீர்களா பிரண்ட்ஸ்?

    'என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்' - புனித சாத்தான்!
    'டாக்டர் பொடியன்' - பொடியன்!
    'கடல் குதிரையின் முத்திரை' - கடல் யாழ்!

    இதுக்குத்தான் அதுக்குத்தான்னு இல்லாம எதுக்குவேணும்னாலும் குதூகலமாகிக்கிடலாம் இங்கே - அதான் காமிக்ஸ்! ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. இப்படி எல்லாம் யோசிக்க உங்களால் மட்டுமே முடியும் ஜீ.

      Delete
    2. அலோ எங்க புனைப்பெயரில் மாசாமாசம் தலைப்பு மட்டுமா, தனி இதழே வருதில்ல...

      Delete
    3. ஆமாம் இல்ல, இத எப்படி ஈ.வி மறந்தாரு ம் புரியலியே!?

      Delete
    4. ஸ்ரீதர் @ & ஈவி@
      எது நமக்கு தெரியாம இருக்குதோ; எது நமக்கு தெரிய வைக்குதோ;
      அது நமக்கு தெரியாம தான் இருக்கும்...

      Delete
    5. ///எது நமக்கு தெரியாம இருக்குதோ; எது நமக்கு தெரிய வைக்குதோ;
      அது நமக்கு தெரியாம தான் இருக்கும்..///

      அச்சச்சோ!! டைகர் கதைகளை ஓவரா படிக்காதீங்கன்னு சொன்னா - கேட்டாத்தானே?!!

      Delete
    6. //டாக்டர் கூட இருக்காரே ?//

      அப்போ டாக்டர் என்பது புனை பெயரா.....??

      Delete
    7. ///அப்போ டாக்டர் என்பது புனை பெயரா.....??///

      அதானே?!! ஹோ ஹோ ஹோ...! :)))

      Delete
  41. இரத்தக்கோட்டை

    நண்பர்களே, நமது காமிக்ஸ் பயணத்தில் இரும்பு கை மாயாவி, ஸ்பைடர், மாண்ட்ரேக், வேதாளர் தொடங்கி டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர், லார்கோ, ஷெல்டன் என பலதரப்பட்ட நாயகர்களுடன் நாம் பயணம் செய்து உள்ளோம்.

    ஒரு புத்தகத்தை வாங்கினோம், படித்தோம் அப்படியே அதை தூக்கி போட்டு விட்டு அடுத்த புத்தகத்திற்கு சென்று விடலாம் என்ற மனபாங்கு எனக்கு தெரிந்து நமது காமிக்ஸ் உலகத்தில் சாத்தியமில்லை.

    ஒவ்வொரு கதாபாத்திரமும் எதோ ஒரு வகையில் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அல்லது நம்மை வசப்படுத்தி இருக்கிறார்கள் என்பதே உண்மை.

    பொதுவாகவே நமது ஹீரோக்களை இரண்டு விதமாக பிரிக்கலாம்.

    1) அதிசய சக்தி பெற்ற நாயகர்கள் (மாயாவி, ஸ்பைடர், மாண்ட்ரேக்)

    2) சாதாரண நாயகர்கள் (டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர், லார்கோ, ஷெல்டன்)

    இதில் சாதாரண நாயகர்களாக வலம் வந்து நமது மனதை கொள்ளை கொண்டவர்கள், இன்னும் ஒரு படி மேலே சென்று நமக்கு ரொம்ப நெருக்கமானவர்களாக தெரிவார்கள்.

    ஏன் ? எதனால் இப்படி ?

    அதிசய சக்தி பெற்ற நாயகர்கள் இடம் பெற்ற கதைகளை நாம் படிக்கும் பொழுது, அந்த கனவு உலகத்திற்குள் நாம் சென்று விடுவோம். அந்த கதை முடியும் பொழுது நாமும் அங்கிருந்தே வெளியேறி விடுவோம்.

    ஆனால் நமது சாதாரண நாயகர்களின் கதைகள் சாதாரண நிகழ்வாகவே அதாவது நமது வாழ்வில் நடைபெரும் செயல் போலவே கதையோட்டம் இருக்கும். சோகம், மகிழ்ச்சி, துரோகம், இரத்தம், வலி, பசி, தாகம், முயற்சி, ஏமாற்றம் இவை அனைத்தையும் அவர்களுடன் சேர்ந்து நாமும் உணர முடியும்.

    கேப்டன் டைகர் கதைகள் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    கேப்டன் டைகர் கதைகள் (குறிப்பாக மின்னும் மரணம், தங்க கல்லறை, இரத்தக்கோட்டை) நமது காமிக்ஸ் வாசிப்பில் ஒரு புதிய அனுபவத்தை தரக்கூடியது, இந்த கதைகளை முதல் முறை வாசிப்பவர்கள் நிச்சயம் ஒரு மறக்க இயலாத அனுபவத்தை பெறுவார்கள் (ஏற்கனவே படித்து, மறந்து விட்டு மீண்டும் படிப்பவர்களும் இதில் அடங்குவார்கள்)

    மற்ற நாயகர்களின் கதைகளுக்கும், கேப்டன் டைகர் கதைகளுக்கும் உள்ள வித்தியாசமே டைகரின் அந்த தன்னம்பிக்கை மற்றும் எவ்வளவு சிக்கலான சூழ்நிலையாக இருந்தாலும் அதில் இருந்து வெளியேற அவர் போடும் திட்டங்களும் அதை நடைமுறை படுத்தும் விதமுமே.



    இரத்தக்கோட்டை இதழில் இருந்து சில எடுத்துகாட்டுகள் நண்பர்களுக்காக ...


    மேடம், வெற்றி வாய்ப்பு இம்மியளவு இருந்தால் கூட அப்போதே நான் முந்திக் கொண்டு கிளம்பியிருப்பேன்

    வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கூட இல்லை என தெரிந்தும், முன்பே கிளம்பி விட்ட லெப்டினெண்ட் க்ரேக்கை கேப்டன் டைகர் எப்படி செவ்விந்தியர்களிடமிருந்து காப்பாற்றுகிறார் ?

    எப்படி தடுக்க முடியும் என்பதுதான் கேள்வி

    அப்பாவி செவ்விந்தியர்களை தாக்க சொல்லி உத்தரவு இடும் மேஜர் பாஸ்கம் ஐ எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் டைகர் எப்படி இந்த சூழ்நிலையை கையாளுகிறார் ?

    மிஸ் டிக்ஸன் சொல்வது முற்றிலும் சரி ... உன் முயற்சி வெற்றி பெரும் வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்று கூட இல்லை

    வெற்றி வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்று கூட இல்லை என சொல்லப்பட்ட நிலையிலும், டைகர் அதை முயற்சி செய்து வெற்றி பெற்றாரா ?

    மிஸ்டர் நீங்கள் காலாட்படையை சேர்ந்தவர்தானே ? செவ்விந்திய சண்டாளர்கள் இன்னும் ஓரிரு நிமிடங்களில் நம் மீது தாக்குதல் நடத்த போகிறார்கள்

    டக்சனில் செவ்விந்தியர்களிடம் மாட்டி கொண்ட டைகர் எப்படி அவர்களிடமிருந்து தப்பிக்கிறார் ?

    ஒரு சிறு துளி வாய்ப்பிருந்தாலும் நான் முயன்று பார்த்து விட நினைக்கிறேன் சார்

    உண்மை நிலவரத்தை எடுத்து சொல்ல, டைகர் மேற்கொண்ட முயற்சி பலித்ததா ?

    வெள்ளையர் படைத்தலைவர் நரியை விட தந்திர குணம் படைத்தவர். சிறுத்தையை விட ஆற்றல் மிக்கவர். தப்பு கணக்கு போட்ட குற்றம் ஒற்றைக் கழுகு மீது சாரும்

    செவ்விந்தியர்களே இப்படி சொல்லும் அளவிற்கு அங்கே நடந்தது என்ன ?

    இது போல எண்ணற்ற ஆச்சரியங்கள், எதிர் பார திருப்பங்கள் என பக்கத்துக்கு பக்கம் அட்டகாசமே ... அதுவும் கலரில் ஹார்ட் பவுண்ட் தரத்தில் ....

    இரத்தக்கோட்டை இதழ் ஒரு அருமையான வாசிப்புக்கு உத்திரவாதமான இதழ் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.



    திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ப்ளூ!!!

      நல்லவேளையா இ.கோ'வை நேத்துத்தான் படிச்சுமுடிச்சேன். இல்லேன்னா நீங்க மேலே குறிப்பிட்டிருக்கும் வசனங்களெல்லாம் யார் -எதற்காகக் குறிப்பிட்டதுன்னு தெரியாம என் மண்டை வெடிச்சு - அது மேகத்தைப் பிளந்து - மழை கொட்டியிருக்கும்!

      Delete
    2. ப்ளூ@ அடேங்கப்பா பிரமாதம்... டைகர் கதைதான் டாப்புனு பார்த்தா டைகர் ரசிகர்கள் விமர்சனமும் டாப்புதான்...
      இரத்த கோட்டையை அப்டியே மினியாக கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள்...சூப்பர்... படிக்காமல் தள்ளி போட்டவங்களையும் படிக்க தூண்டும் விமர்சனம்; படிச்சவங்களை கட்டி போடும் வகையில் பட்டையை கிளப்பி விட்டீர்கள்...
      ஆட்டம் சூடு பிடிக்குது...
      இன்னும் எல்லா டைகர் ரசிகர்களும் களம் இறங்கினால், மஹி ஜி சொன்ன மாதிரி
      " இந்த வாரம் இரத்த கோட்டை வாரம் தான்"...

      Delete
    3. 👌👌👌👌👏👏👏👏 ப்ளூபெர்ரி..!

      Delete
    4. அருமையான விமர்சனம் புளூ பெர்ரி

      Delete
    5. நண்பரே புளூபொ்ாி தூள் கெளப்பிட்டீங்க!!

      👏👏👏

      Delete
    6. திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : சூப்பரான பின்னூட்டம் ! ரசித்து எழுதியுள்ளது அழகாய்த் தெரிகிறது சார் !

      Delete
    7. நாகுஜீ......உங்களீன் விரிவான முதல் விமர்சனத்தை இத்தனை ஆண்டுகளில் இப்பொழுது தான் பார்க்கிறேன் ...ரத்த கோட்டையின் மகிமை போலும் ...இதே போல் அனைத்து இதழ்களுக்கும் உங்கள் எண்ணங்களை பகிருங்கள் ...

      Delete
    8. அருமை சாந்தன்!!!! இரத்தக்கோட்டையை பலமுறை படித்து ரசித்தவர்களால்தான் இப்படி விமர்சிக்க முடியும்.

      Delete
    9. //நமது சாதாரண நாயகர்களின் கதைகள் சாதாரண நிகழ்வாகவே அதாவது நமது வாழ்வில் நடைபெரும் செயல் போலவே கதையோட்டம் இருக்கும். சோகம், மகிழ்ச்சி, துரோகம், இரத்தம், வலி, பசி, தாகம், முயற்சி, ஏமாற்றம் இவை அனைத்தையும் அவர்களுடன் சேர்ந்து நாமும் உணர முடியும். //

      +1.கை தட்டும் படங்கள் ஆயிரம்...

      Delete
    10. செம. அனுபவித்து ரசித்து படித்து உள்ளீர்கள் நண்பரே . பாராட்டுக்கள் .

      Delete
    11. // இரத்தக்கோட்டை இதழ் ஒரு அருமையான வாசிப்புக்கு உத்திரவாதமான இதழ் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.//
      நாகு ஜி,முற்றிலும் உண்மை,சிறப்பான விமர்சனம்.
      👏👏👏👏👏👏

      Delete
  42. 🌹🌹🌹🌺🌺🌺🌷🌷🌷🌲🌲🌲🍬🍬🍬இன்று தன் பிறந்தநாளை கொண்டாடும் மாப்பு சத்யா, இன்று போல் என்றும் கைநிறைய ஆண்டுக்கு 12டெக்ஸ் கதைகளும், 6குண்டு புக்குகளும் பெற்று மகிழ்சியுடன் இன்புற வாழ்த்துகிறேன்🍰🍰🍰🍨🍨🍨🍫🍫🍫🍭🍭🍭

    ReplyDelete
    Replies
    1. பிறந்தநாள் வாழ்த்துகள் செந்தில் சத்யா! வாழ்க உங்கள் காமிக்ஸ் நேசம்! 💐💐💐💐🎂🍰🍦🍨🍮🍧🍡🍫🍿🍭🍬

      Delete
    2. அன்பு சத்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! சந்தோஷமும், வெற்றிகளும் நிழலாய்த் தொடரட்டும் !

      Delete
    3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் செந்தில் சத்யா!!

      Delete
    4. ஈவி@...ஸ்மார்ட் "மாப்பு" சத்யா, காங்கேயம்...என படிக்கவும்....
      (நண்பர் செந்தில் சத்யாவுக்கு அவர் பிறந்தநாளில் வாழ்த்துவோம்...)

      Delete
    5. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சத்யா!! 💐💐💐💐💐💐

      Delete
    6. ////ஈவி@...ஸ்மார்ட் "மாப்பு" சத்யா, காங்கேயம்...என படிக்கவும்....///

      T.V @ ...ஸ்மார்ட் "மாப்பு" சத்யா, காங்கேயம்...என எழுதவும்.... கிர்ர்ர்...

      @ அருமைத் தம்பி 'காங்கேயம் சத்யா'

      இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வண்ணத்தில் இரத்தப்படலம் கண்டு வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்தும் - அருமை அண்ணா - ஈனாவினா!

      Delete
    7. வாழ்த்துக்கள் நண்பரே சத்யா!

      Delete
    8. வாழ்த்துக்கள் நண்பர் செந்தில் சத்யா!!!! எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்!!!

      Delete
    9. சத்யா அண்ணா வாழ்த்துக்கள் ....இப்பொழுது எல்லாம் உங்களை அடிக்கடி காண்பதில்லையே ..வேலைபளுவோ...:-)

      Delete
    10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செந்தில் சத்யா நண்பரே . சகல வளங்களும் பெற்று பல்லாண்டு வளமுடன் வாழ்க என்று வாழ்த்துகிறேன்

      Delete
  43. வாழ்த்துக்கள் சத்யா பிரதர்.

    ReplyDelete
  44. இந்த அண்ணாத்தே எழுத்துப்பிழை இல்லாமல் இவ்வளவு பெரிய கருத்த, அதுவும் தமிழிலே போட்டிருக்கே ,

    அடடடே , ஆச்சரியக்குறி

    ReplyDelete
  45. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  46. அய்யா! எங்க போட்டோ போட்ட புக் எப்போ வரும்னு சொன்னீங்கனா தேவலாம்!

    ReplyDelete
    Replies
    1. இரவுக்கழுகு : November 1....

      Delete
    2. வாவ்... சூப்பர் சார்.

      ஒரே மாதம் இரு டெக்ஸ் இதழ்களை தராமல், அக்டோபரில்1; நவம்பரில்1- என வெளியிட்டு முடிந்தவரை மாதந்தோறும் "டெக்ஸ்"-என்ற அனைவரின் விருப்பத்தை தொடரச்செய்வது சூப்பர் சார்.

      பெரும்பாலான நண்பர்கள் விரும்பும் வகையில் செட்யூல் அமைத்ததற்கு தல "டெக்ஸ்" ரசிகர்கள் சார்பில் ஆயிரம் நன்றிகள் சார்.

      Delete

  47. கேப்டன் டைகர் கோட்டை விட்டதாக படித்தில்லை

    தில்லை டைகரின் தில்லை ரசிக்காதவருண்டோ

    உண்டோ உண்ணாமலோ தான் டைகரின் கதையே படித்திட முடித்திட முடியும்

    முடியுமோ முடிந்து விடுமோ அவ்வளவுதானா என்று ஏங்க வைக்கும்

    ஏங்க வைக்குமே கதை தானே புனைவு தானென்ற போதும் கூட

    கூட இருந்தும் சற்றும் சளைக்காத ரெட்டும் கிழவன் ஜிம்மியும்

    இம்மியும் கவனம் சிதற விடா அருமை படைப்பிந்த புதினம்

    தினம் கடந்து மீண்டும் படித்திட்டாலும்
    (பரிட்சைக்கு படிக்கிறார்டா ங்கொப்பா)
    கடுகளவும் குறைவில்லா காரம்

    காரமான டைகர் கதைகளில் இனி மிச்சங்களில்லை என்ற போதும்

    போதுமா இன்னும் கொஞ்சம் இருக்கா

    என்று கேட்க வைத்த டைகர்
    டைகர் உண்மையில் டைகர்(புலி)தான்

    ReplyDelete
    Replies
    1. போதுமா இன்னும் கொஞ்சம் இருக்கா

      என்று கேட்க வைத்த டைகர்
      டைகர் உண்மையில் டைகர்(புலி)தான்


      + 1234567890

      Delete
    2. j : வழக்கம் போலவே பின்னிப் பெடலெடுத்துள்ளீர்கள் சார் !!

      Delete
    3. ஈரோட்டுக்கு வந்திரா நண்பர்களுக்கு : 'j ' என்ற பெயரில் இங்கு எழுதிடும் நண்பர் கும்பகோணத்தைச் சார்ந்தவர் ! 'படையப்பா' திரைப்படத்தின் ஒரிஜினல் கதாசிரியர் இவரே !!! சன்மானமொன்றை தந்து, கதைக்கான உரிமைகளை பெற்றுக் கொண்டு superhit படமாக்கியுள்ளனர் ! நமது வாசக குடும்பத்திலுள்ள ஆற்றலாளர்களை எண்ணிப் பெருமிதம் கொள்ள yet another instance !!

      Delete
    4. கும்பகோணத்திற்கு ஒரு பெருமை திரு ஜெ அவர்களால்.
      தகவலுக்கு நன்றி எடிட் சார்.

      Delete
    5. j@ செம ஜி... டைகர் ரசிகர்களுக்கு உத்வேகம் தரும் உதாரண பதிவு... தொடர்ந்து கலக்குங்கள் ஜி...

      Delete
    6. வாவ் ....அருமை .....வாழ்த்துக்களுடன் எங்கள் பெருமிதமும் சார்....;

      Delete
    7. யாரும் கவனித்திருக்காவிட்டால் இப்போது திரு j அவர்களின் பதிவை மறுபடியும் படிக்கவும் ...
      அவர் அந்தாதி செய்யுள் முறையை பயன்படுத்த முயற்சி செய்து இருக்கிறார் ...
      யாப்பியலில் ஒரு செய்யுளில் அடுத்தடுத்து வரும் வரிகள் அந்தாதி முறையில் இருப்பின் அதனை அந்தாதித் தொடை என்பர் ..
      இதைத்தான் அவர் பயன்படுத்தி இருக்கிறார் .
      அடுத்தடுத்த வரிகளில் அசை அந்தாதி, சீரந்தாதி,அடி அந்தாதி, எழுத்து அந்தாதி என பயன்படுத்தி இருக்கிறார் ...
      சிறப்பான முயற்சி என்றே கருத வேண்டும்

      Delete
    8. ///யாரும் கவனித்திருக்காவிட்டால்///--சூப்பர் செனா அனா ஜி.
      நாங்கள் என்ன தமிழ் லிட்டரேச்சர் வகுப்பு பக்கம் ஒதுங்கியா உள்ளோம் செனா அனா ஜி....நீங்கள் சொன்னா அறிந்து கொள்கிறோம், அதுவே எங்கள் பாக்கியம்...

      Delete
    9. ///அடுத்தடுத்த வரிகளில் அசை அந்தாதி, சீரந்தாதி,அடி அந்தாதி, எழுத்து அந்தாதி என பயன்படுத்தி இருக்கிறார் ...///

      எனக்கு அருந்ததி, அருக்காணி - இவங்களையெல்லாம் ஓரளவுக்குத் தெரியும். ஆனா அந்தாதியை பத்தித் தெரியலையே....

      Delete
    10. நான் கவனித்தேன் செல்வம் அபிராமி சார். ஆனால் அதை விளக்க உரை யுடன் செல்ல நீங்கள் தான் சரி.அதான்...!

      Delete
    11. ///அடுத்தடுத்த வரிகளில் அசை அந்தாதி, சீரந்தாதி,அடி அந்தாதி, எழுத்து அந்தாதி என பயன்படுத்தி இருக்கிறார் ...///

      ஆத்தாடி !!

      Delete
    12. J அருமை,கலக்குங்க.

      Delete
  48. விஜயன் சார் கதைகளுக்கு தலைப்பு
    வைக்கும்போது சிலபல வார்த்தைகளை
    தவிர்த்தால் நலம் இரத்தம் கொலை
    பிணம் போன்ற வார்த்தைகளை
    தவித்தால் நலம்.எங்களை போன்ற
    வளர்ந்த குழந்தைகள் தலைப்பை
    ஒப்புக்கொள்ள முடியும்.புதியதாக
    தங்கள் குழந்தைகளுக்கு காமிக்ஸ்
    வாங்கித்தர விரும்பும் பெற்றோர்கள்
    இது போன்ற தலைப்புகளால் நமது
    புத்தகங்களை தவிர்க்கும் நிலை வரக்கூடாது. இனி வரும் புத்தகங்கள்
    அட்டைப்படங்களும் தலைப்பும்
    அனைவரும் விரும்பும் வண்ணம்
    இருக்க வேண்டும்.( மறுபதிப்பு மற்றும்
    இரத்தப்படலம் நீங்கலாக)

    ReplyDelete
    Replies
    1. ganesh kv : நிறையத் தடவைகள் அலசி விட்டுள்ள விஷயம் தானிது ! அண்டர்டேக்கர் போன்ற கதைகளுக்கு சாத்வீகமான தலைப்பு வைப்பதெல்லாம் வேலைக்கு ஆகுமா சார் ..?

      Delete
  49. இரத்தக்கோட்டை வண்ணத்தில் படிக்கும்போது ரசித்து படிக்க முடிகிறது.
    காமிக்ஸ் ரசிகர்கர்கள் வசம் இருக்க
    வேண்டிய அருமையான புத்தகம்.
    தற்போது இரத்தப்படலம் மறுவாசிப்பு .
    புதியதாக படிப்பதுபோல் இருக்கிறது.
    கதாசிரியரின் கற்பனையும் அதற்க்கு
    உயிர் கொடுத்த ஓவியரின் பங்களிப்பும்
    வியப்பில் ஆழ்த்துகிறது.வண்ணத்தில்
    படிக்கும்போது அதன் முழு வீரீயமும்
    வாசகர்களுக்கு ஓர் வப்பிரசாதமாக
    அமையும்.இந்திய இதிகாசங்கள்
    ராமாயணம்&மகாபாரதம் என்று
    இரண்டு இருக்கலாம்.ஆனால்
    காமிக்ஸில் இரத்தப்படலம் மட்டுமே
    ஒரேஒரு இதிகாசம்.முன்பதிவு செய்யாத
    நண்பர்கள் முந்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    ஆசிரியர் அறிவித்த குறைந்த அளவே
    அச்சிட உள்ள புத்தகத்திற்க்கு உடனே
    முந்துமாறு வேண்டுகிறேன்.

    ReplyDelete
  50. அடுத்த வருடமும் மாடஸ்டிக்கு கருப்பு வெள்ளை மற்றும் வண்ணத்தில் தலா ஒரு இடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    என் சித்தம் மாடஸ்டிக்கே சொந்தம்

    ReplyDelete
  51. உண்மை, மாடஸ்டி வண்ணத்தில் கெட்டி அட்டையில் வெளியிடவும் சார்.....

    ReplyDelete
  52. **இரத்தக்கோட்டை**
    இரத்தக்கோட்டையை முழுமையாக வண்ணத்தில் வாசித்துவிட்டு எழுதுகிறேன்.இதுபோன்ற இன்னமொரு உச்சவேக கதையை இனி பார்க்க முடியுமா என்றால்? முடியாது என்பது என் பதில்.ஆரம்பத்தில் டைகரின் தோட்டாதலைநகரம்.,பரலோகப்பாதை.,படிக்கும்போது வெகுவான ஈர்ப்பு ஏற்பட்டது.அதுவரை நான் முழுமையான டெக்ஸ் ரசிகன்.பரலோகப்பாதையின் உச்ச வேகம் என்னை டைகரின் ஆத்ம ரசிகனாக்கியது.
    இரத்தக்கோட்டை தொடர் முதலாக வந்த போது தொடரின் இரண்டு புத்தகம் மட்டுமே வாங்க முடிந்தது பாக்கி மூன்று கிடைக்கவில்லை.எங்கள் ஊரில் சரியான முகவர் இல்லாதது காரணம்.இரண்டு பாகத்தை மட்டும் மேய்ந்து மேய்ந்து படித்துவிட்டு பாக்கி மூணு பாகத்திற்காக கொலைவெறியோடு (அப்போது எடிட்டர் மட்டும் கையில் கிடைத்திருந்தால் ஹி ஹி) அலைந்ததுண்டு.நன்பர்களுன் இணைந்தபோது முழுமையாக படிக்க அமைந்தது பின்கதை.தற்போது எடிட்டர் அதை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார் அட்டகாசம்.
    இரத்தகோட்டையில் அருமையான கதை,மதிநுட்ப சண்டைகள்,படத்திற்க்கு படம் விறுவிறுப்பு,டைகரின் அசாத்திய நுட்பத்திறமைகள், வேகம் ,கூட இருப்பவரே குழி தோண்டிணாலும் சாமாளிக்கும் வல்லமை,மற்றும் அஞ்சா நெஞ்சம் போன்றவை மேலும் மெருகூட்டுகிறது.
    ஒவ்வொரு ப்ரேமிலும் டைகருடன் சேர்ந்து பயணிப்பதால் நமக்கு முழுமையான த்ரில் கிடைக்கிறது.வண்ணக்கலவையில் வெளியிட்டு அற்புதம் படைத்த எடிட்டருக்கு மீண்டும் நன்றிகள்.
    டைகரின் பஞ்ச பூதங்கள்(டாப் 5) வரிசையாக;-
    1.இருளில் ஒர் இரும்பு குதிரை
    2.பரலோகப்பாதை
    3.தங்கக்கல்லறை
    4.இரத்தக்கோட்டை
    5.மின்னும் மரணம்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ///ஒவ்வொரு ப்ரேமிலும் டைகருடன் சேர்ந்து பயணிப்பதால் நமக்கு முழுமையான த்ரில் கிடைக்கிறது///மாப்பு டாப்பான பாயிண்ட்...

      ஒரு சந்தேகம், ///இரத்தக்கோட்டையை முழுமையாக வண்ணத்தில் வாசித்துவிட்டு எழுதுகிறேன்.இதுபோன்ற இன்னமொரு உச்சவேக கதையை இனி பார்க்க முடியுமா என்றால்? முடியாது என்பது என் பதில்////...இப்படி சொல்லி இரத்த கோட்டைக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். ஆனால் உங்கள் டாப்5ல் இரத்த கோட்டைக்கு 4வது இடம் தான் கொடுத்து உள்ளீர்கள். அதற்கான காரணம் என்னவோ..???

      ஆரம்பத்தில் டெக்ஸ் ரசிகராக இருந்து டைகர் ரசிகராக மாறினாலும்... எங்க போயிட்டீங்க நம்ம கெளபாய் உலகத்தில் தானே உள்ளீர்கள், மகிழ்ச்சி.

      Delete
    2. @ JK

      அடடே! துளியும் எதிர்பாராப் பதிவு! அனுபவிச்சு (படிச்சு) எழுதியிருக்கீங்க. செம!!

      ///ஒவ்வொரு ப்ரேமிலும் டைகருடன் சேர்ந்து பயணிப்பதால் நமக்கு முழுமையான த்ரில் கிடைக்கிறது.///

      உண்மை உண்மை!

      Delete
    3. ஜெயக்குமார் சார் ....அட்டகாசமா அதகளமான விமர்சனம் ...அருமை ...

      Delete
    4. இரசனையான பதிவு,அருமை, வாழ்த்துக்கள்,J K.
      👏👏👏👏👏

      Delete
  53. பி. கு:

    நாலு வார்த்தை எழுதரதுக்குள்ளே நக்கு தள்ளிடுச்சு...எப்படி தான் மாயாவி, ஈ. வி , செனா. ஆனா, தலீவர், சேலம் தல, கண்ணர், மிதுன், இன்னும் பல நண்பர்கள் இங்கு பட்டையை கிளப்புகிறார்களோ.... பொறாமையாக இருக்கிறது...இந்த வாரத்தை தளபதியின் இரத்தக் கோட்டையை கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இரத்தக் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்க இது உதவும்...

    ReplyDelete
    Replies
    1. எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ஜேகே &மகி ஜீ ...கீழே பாருங்க ஜேஜீ மாதிரி பெரிய பெரிய ஆளுங்க இங்க அமைதியா உலாவிட்டு இருக்குறதை ...

      Delete
  54. ஒரு சந்தேகம், ///இரத்தக்கோட்டையை முழுமையாக வண்ணத்தில் வாசித்துவிட்டு எழுதுகிறேன்.இதுபோன்ற இன்னமொரு உச்சவேக கதையை இனி பார்க்க முடியுமா என்றால்? முடியாது என்பது என் பதில்////...இப்படி சொல்லி இரத்த கோட்டைக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். ஆனால் உங்கள் டாப்5ல் இரத்த கோட்டைக்கு 4வது இடம் தான் கொடுத்து உள்ளீர்கள். அதற்கான காரணம் என்னவோ..???///
    இரத்தக்கோட்டை உச்சவேக கதைதான் மாற்றமில்லை.டாப் 5 எனக்கு பிடித்த மாதிரி சொன்னேன்.

    ReplyDelete
  55. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.

    ReplyDelete
  56. நன்றி காமிக்ஸ் காட்டிட்ட நண்பர்களே

    காமிக்ஸ் பணிவுடன்
    J

    ReplyDelete
  57. பிரத்யேக நன்றி எடிட்டர்
    திரு.விஜயன் அவர்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. j : சார்....பவர் ஸ்டாருக்குப் பக்கத்துக்கு வீட்டுக்கு எதிர்வீடு என்று சொல்வதும் கூட கெத்தாகியுள்ள இன்றைய நாட்களில் -'தலைவரின்' all time smash hits களுள் ஒன்றுக்கு கதை எழுதுவதெல்லாம் சாமான்யக் காரியமா ? நம் நண்பர்களின் சார்பில் ஒரு மிகப் பெரிய "ஓ" போட்டாக வேண்டுமன்றோ ?

      Delete
    2. கண்டிப்பா சார் ....

      Delete
    3. j @ அடுத்து ஏதாவது சினிமாவிற்கு கதை எழுதுகிறீர்களா?

      Delete
  58. பெயர்கள் set ஆன பிற்பாடு கேட்லாக்கைத் தயாரிக்க வேண்டிய பணி மாத்திரமே பாக்கியிருக்கும்! So- அக்டோபரில் தீபாவளிக்கு முன்பாக//
    Wow,Great Sir,I Am Waiting.

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete