Powered By Blogger

Sunday, February 08, 2015

ரணமும்...களமும்..!

நண்பர்களே,

வணக்கம். 'வலையுலகிற்கும், மாறுபட்ட அபிப்ராயங்களுக்கும், அவற்றைக் கையாளும் விதங்களுக்கும் நாம் செமையாய்த் தயாராகி விட்டோமே - என்னமோ, போடா மாதவா.. !' என்று என்னை நானே முதுகில் தட்டிக் கொள்ளும் போது - பொடெரென்று எங்கிருந்தாவது விளக்குமாற்றுச் சாத்து விழுவதும் கூட இப்போதெல்லாம் பழக்கமாகிப் போய் விட்டது !  எவ்ளோ அடிச்சாலும் "வலிக்கலியே..!" என்று வெளியே பல்லைக் காட்டித் திரியும் கலையிலும் கூட ஓரளவிற்குத் தேர்ச்சி கண்டு விட்டேன் என்றே தான் சொல்ல வேண்டும் ! So 'எனது மேஜையில் நடந்து வரும் 'ரணகள ராஜ்ஜியத்தின்' எடிட்டிங் பணிகள் ஒரு பக்கமெனில் கடந்த நாலைந்து நாட்களாய் இங்கு அரங்கேறி வரும் வேறொரு வகையிலான 'ரணகள ராஜ்யத்தினைப்' பெரிதாய் நான் தலைக்குக் கொண்டு செல்லவில்லை தான் ! ஆனால் நம்  பொருட்டு, நண்பர்களுக்குள் வாத-விவாதங்கள் ஓடி வருவதைப் பார்ப்பது தான் சங்கடமாய் உள்ளது ! 

"2012 போல் இல்லை ; அச்சில் குறைபாடு !"  என்பதே 'சொய்ங்' என பொத்தாம் பொதுவாய் வீசப்பட்டுள்ள கல் ! அதன் பொருட்டு நண்பர்கள் அவரவர்களுக்குத் தெரிந்த விளக்கங்களை முன்வைப்பதை ஆர்வத்துடன் பார்த்தேன் ! ஒவ்வொரு விளக்கத்திலும் சாரமும், விஷய ஞானமும் நிறைந்து இருப்பதை ரசித்த அதே கணத்தில் நிஜமான பின்னணிகளை  விளக்கிட்டால் என்னவென்று தோன்றியது ! இது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் வேலையாகவும் இருக்கலாம் ; என்னை உதைக்க நானே நயமான BATA பாதணிகளை எடுத்துத் தரும் நிகழ்வாகவும் இருக்கலாம் தான் ! ஆனால் வெளிப்படையாய் இருப்பதே எனக்குத் தெரிந்த ஒரே யுக்தி என்பதால் இதன் பின்விளைவுகள் ; பின்னாத விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு எனது கொஞ்ச நஞ்ச உறக்கத்தையும்  தொலைத்துக் கொள்ளப் போவதில்லை ! எனது விளக்கங்களைப் படித்து முடித்த பின்னே -  'நம்புற மாதிரி  இல்லியே" என்றோ - 'சப்பைக்கட்டு கட்டறான்' என்றோ காமிக்ஸ் Whatsapp க்ரூப்களில் சுடச் சுட "ஞாயிறு ஸ்பெஷல்கள்" தடதடக்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்றும் தெரிகின்ற போதிலும், நிஜத்தைச் சொல்லத் தயங்கிய தவறை நான் செய்வதாகயில்லை ! 

அதே போல இந்த விளக்கங்கள், குரல் உயர்த்திப் "போராட" (!!) முயற்சிக்கும் நண்பரின் பொருட்டு அல்ல - நிச்சயமாய்  ! உயரும் ஒவ்வொரு குரலுக்கும் நடுங்கிப் போய் என் அடிமடியைத்  திறந்து காட்டுவதாக இருப்பின், நாள் முழுவதிலும் வேஷ்டியை சரி செய்வதைத் தாண்டி நான் வேறெதுவும் செய்திருக்க முடியாது ! நம் தரப்பிலும் நிச்சயமாய் நியாயம் இருக்கும் என்ற பொறுமையோடும், நம்பிக்கையோடும், நிஜம் என்னவென்று அறியாது  உள்ளுக்குள்ளே சங்கடப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய நண்பர்களின் திருப்திக்காக இந்த விளக்கப் படலம் ! 

2012-ல் வண்ணத்தில் மறுவருகை ; COMEBACK ஸ்பெஷல் என்றெல்லாம் நாம் துவங்கிய நாட்களில் ஆண்டின் சந்தாவே வெறும் ரூ.620 தான் ! அந்தத் தொகையைக் கூட 2012-ன் சென்னைப் புத்தக விழாவினில் நாம் முதல்முறையாக ஸ்டால் போட்டிருந்த தருணத்தில் - 'இனி சந்தா எவ்வளவு சார் ?' என விஷ்வா கேட்ட பின்னர் அங்கேயே வைத்து ஒரு சின்ன மனக்கணக்கைப் போட்டுச் சொன்னேன் !  முதல் இதழை ரூ.100 விலையில் வெளியிடும் போதும், "இந்த விலை வாசகர்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்குமா ?" ; இந்தக் கதைகள் ஒ.கே.தானா ?" ; "பிரின்சின் கதை சப்பையாக உள்ளதே ; லக்கி லூக்கின் புதுக் கதையில் அந்த லேட்டஸ்ட் கலரின் பாணி சூப்பர்-டூப்பராக   இருந்தாலும் கதை ரொம்ப சுமாராக உள்ளதே !" என்ற ரீதியில் எனக்குள் ஓராயிரம் சந்தேகங்கள் குடியிருந்தன ! "அந்தப் பெயருக்காகவாச்சும் வண்டி ஓடாதா- என்ன ? ; எதற்கும் இருந்து விட்டுப் போகட்டுமே !" என்ற சிந்தனையில் தான் மாயாவியின் நீளமான black & white கதையினை COMEBACK ஸ்பெஷலில் ஓட்டுச் சேர்த்திருந்தேன் ! கலர் வெளியீடுகளுக்குள் கால் பதித்த நாட்களில் நம்மிடமிருந்த திட்டமிடலின் எல்லைகள் அவ்வளவுக்குள் தான் இருந்தன ! COMEBACK SPL ; LARGO ; DOUBLE THRILL ; WILD WEST மற்றும் தங்கக் கல்லறை என ஐந்தே வண்ண வெளியீடுகள் ; மிச்சம் மீதியெல்லாம் பத்து ரூபாய் விலையிலான black & white இதழ்களே என்று தான் முதல் ஆண்டைக் கடக்க திட்டமிட்டிருந்தோம் ! 

இருநூறு ரூபாய்க்கே 852 பக்கங்கள் அவசியமாகியிருந்த அந்த (இரத்தப் படல ) நாட்களில் - தொடர் வண்ண இதழ்கள் ; தொடர் 100 ரூபாய் விலைகள் என்பதெல்லாம் நினைக்கவே பயம் தந்த முயற்சிகள் ! மொத்தமாய் முகவர்கள் நம்மைக் கைவிட்டிருந்த நாட்களவை என்பதையும் ; நமது நம்பகத்தன்மை (!!) லெமூரியாக் கண்டத்தோடு காணாது போயிருந்த சங்கதி என்பதையும் இங்கே நினைவூட்டுகிறேன் ! In fact - 2013-ல் NBS வெளியாகி ; தொடர்ச்சியாய் மற்ற இதழ்களும்  வெளிவரத் துவங்கிய வரையிலும் - ஒரு விரல் கிருஷ்ணாராவை விட  'வரும்..ஆனா வராது' காமெடியில் அதிகம் உருண்டது எனது சொட்டைத் தலையாக தான் இருக்கும் என்பதில் இரகசியமேது ? 'வாசகர்களோடு ஞாயிறுகளில் போன் பேசுகிறேன் பேர்வழி' என நான் ஆர்வக் கோளாறு காட்டிய நாட்களில்,  நண்பரொருவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதே 'சேர்ந்தார் போல நாலு இதழ்களைப் போட்டுட்டு அப்புறமா இந்த பீலாலாம் விடச் சொல்லு' என்று 'அன்பான' பின்னணிக் குரல்  ஒலித்ததும் உண்டு ! So இதுவொரு make or break சூழ்நிலை என்பதையும், இங்கே சொதப்பினால் மானம் மொத்தமாய்க் கப்பல், ரயில், ராக்கெட் ஏறி விடும் என்பதாலும் - மறுவருகையின் முதல் ஆண்டின் சகல ஸ்பெஷல் வெளியீடுகளுக்கும் நாம் சுத்தமாய்க் கணக்குப் பார்க்கவே இல்லை என்பது தான் நிஜம் ! அந்த COMEBACK ஸ்பெஷலில் சுமார் 300 பக்கங்கள் என்று ஞாபகம் ! வெறும் 1600 பிரதிகள் அச்சிடப்பட்ட அந்த  இதழை அன்றைய விலைவாசிகளில் கூட - ரூ.100-க்கு உற்பத்தி செய்ய துளி கூட வாய்ப்பே கிடையாது ! ஆனால் இனியொருமுறை 'ஹி..ஹி..'  - "இதழ்கள் தாமதம்" ; "விற்பனை மந்தம்" என்றெல்லாம் அசடு வழிந்து நிற்கவே கூடாது என்ற வைராக்கியம் மட்டும் என்னை உந்தித் தள்ள - முதலாண்டின் லாப-நஷ்டக் கணக்கு கணிசமான சிகப்பில் கரை ஒதுங்கிய போதிலும் அதனை நான் மௌனமாய் முழுங்கிக் கொண்டேன் ! "விலை அதிகம் " என்ற சிந்தனை எந்த விதத்திலும் உங்களுக்குத் தோன்றிடவே கூடாது என்ற பயமே பிரதானமாய் நின்றது ! 

சரி..இந்தக் கதைக்கும், அச்சுத் தரம் பற்றிய சர்ச்சைக்கும் என்ன சம்பந்தம் ? என்று நீங்கள் கேட்கத் துவங்கும் முன்னே நானே விஷயத்துக்கு வருகிறேன் ! 

'ஆஹா...பிரிண்டிங் பிரமாதம் !' என்றோ ; "மோசம் ! " என்றோ சொல்லும் வேளைகளில் அந்தப் பெருமையோ / சிறுமையோ அச்சுக்கு ஒரு படி முன்னேயுள்ள PRE-PRESS  என்ற பிராசசிங் பிரிவிற்கும் பெருமளவு சாரும் என்பது நிறைய கவனங்களை ஈர்க்கா  ஒரு விஷயம் ! 2012-ல் அந்த வண்ண இதழ்களை நாம் பிராசசிங் செய்த விதங்கள் சகலமுமே மிக விலையுயர்ந்த பாணிகள் ! அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் போது கிடைக்கும் அச்சுத் தரம் சராசரியை விட நிச்சயம் சில பல படிகள் மேலேயிருக்கும் ! அந்த முறையினில் அச்சுக்குப் பயன்படுத்தப்படும் பிளேட்கள் முதற்கொண்டு அயல்நாட்டு இறக்குமதிகள் தான் ! இது பற்றாதென்று அந்த நாட்களில் நம்மிடம் இன்னுமொரு துருப்புச் சீட்டும் தற்செயலாய் கைவசம் இருந்தது ! நமது இன்னொரு தொழில் second hand அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதும் கூட என்பதால், உயர்விலையிலான மிஷின்கள்  எப்போதாவது  நம்மிடம் கைவசம் இருப்பது உண்டு ! 2012-ல் அது போல் ஸ்டாக்கில் இருந்ததொரு மிஷின் விற்காது மொக்கை போட்டுக் கொண்டு கிடந்ததால் - அதனை install செய்து  trial பார்க்கும் நிலைக்குக் கொண்டு வந்து வைத்திருந்தோம் ! 'சரி..சும்மா நிற்கும் மிஷின் தானே...? விற்கும் வரைக்கும் அதில் அச்சிடுவோமே !' என்ற எண்ணத்தில் நமது வண்ண இதழ்களை அதனில் அச்சிட்டு விட்டு அப்புறம் மூடாக்குப் போட்டு மூடி விடுவோம் !   So - imported paper ; high-end pre-press ; imported plates ; imported inks ; young printing machine என்ற கூட்டணி தற்செயலாய் நமக்குக் கிட்டியிருந்தது என்பதால் அதன் பலன்கள் 'பளிச' ரகத்தில் அமைந்ததில் வியப்பில்லை ! 

2012-ன் இறுதியில் NBS என்ற மெகா இதழை அறிவிக்கும் அளவுக்கு நாம் முன்னேறியிருந்தோம் என்பதால் அந்த இதழுக்கும் அதே pre-press பாணிகள் தொடர்ந்தன ! ஆனால் மாதந்தோறும் அந்த பிராசசிங் பில்களுக்குப் பணம் கொடுக்கும் வேளைகளில் நான் பிச்சை எடுக்காத குறை தான் ! NBS தந்த உற்சாகம் தொடர்ந்து மார்ச் 2013 வரையிலும்  நஷ்டத்தின் பரிமாணங்களை மேஜை விரிப்புக்குக் கீழே பதுக்கிப் பதுக்கி வைக்கச் செய்தது ! ஆனால் என்ன தான் இதுவொரு குடும்பத் தொழில் என்றாலும் - அண்ணனின் வறட்டுப் பிடிவாதம் ஏற்படுத்தும் தொடர் நஷ்டங்களை தம்பி சகித்துக் கொண்டே இருப்பது எத்தனை காலம் தான் தொடர்ந்திட முடியும் ? மார்ச் 31-ல் அந்தக் கணக்காண்டின் முடிவுகளைத் தோராயமாய்ப் பார்க்கும் போதே - செலவினங்களைக் கணிசமாய்க் குறைக்க வழி கண்டுபிடிக்காவிட்டால் கதை கந்தலாகிப் போகும் என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது ! பற்றாக்குறைக்கு ஒரு அமெரிக்க டாலருக்கு 51 ரூபாய் சுமாருக்கு இருந்து வந்த அன்னியச் செலாவணியின் மதிப்பும் பகீர் பகீரென்று உயரத் தொடங்கிய போது நமது பற்கள் இன்னும் அதிகம் ஆட்டம் காணத் தொடங்கின !  கதைகள் ; அச்சுக் காகிதம் ; இன்க் ; பிளேட் என சகலமும் வெளிநாட்டு இறக்குமதி என்பதால், ஒவ்வொரு மாதமும் எனது திட்டமிடல்கள் மண்ணைக் கவ்வத் தொடங்கின ! 

So எங்கெங்கு முடியுமோ - அங்கங்கு செலவுகளுக்குக் கத்திரி போடுவது ; அல்லது விலையைப் 'படக்' கென ஏற்றுவது ...என்பதைத் தாண்டி நம் முன்னே பெரியதொரு choice இருக்கவில்லை ! 'ஆண்டுச் சந்தா' என வசூலித்து விட்டு, சிறுகச் சிறுக நமது இதழ்களுக்கொரு credibility வளர்த்து வரும் வேளையில் - விலையை நடுவாக்கில் கூட்டுவது நிச்சயமாய் அசிங்கமாக இருக்கும் என்பதால் cost cutting என்ற சாலையிலே செல்வதென்று தீர்மானித்தேன் ! திரும்பிப் பார்க்கையில் அது சரியான தீர்மானம் தானா  ? ; அன்றே விலையை ஏற்றி விட்டு அதே தரத்தை தொடர்ந்திருக்க வேண்டுமா ? என்ற கேள்விகளுக்கெல்லாம் சத்தியமாய் என்னிடம் விடையில்லை ! பெரும் பதிப்பகங்களைப் போல திட்டமிடவோ  ; விவாதம் செய்து தீர்மானங்களை எட்டிப் பிடிக்கவோ இங்கு ஆள் ஏது ? நானே ராஜா..நானே..மந்திரி..நானே டவாலியும் கூட எனும் போது என் சக்திக்கு உட்பட்ட தீர்மானங்களே நம் இதழ்களின் பாதைகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகிப் போகின்றன ! இதுவொரு வரமா ? சாபமா ? ; இந்த நவீன யுகத்தினில் இன்னமும் இது போன்ற archaic நிர்வாக முறைகள் கொண்டு செல்லுமா ? என்பதெல்லாம் சுவாரஸ்யமான விவாதத் தலைப்பாக இருந்திட முடியும் ! ஆனால் முடிந்தளவுக்கு என் சிந்தனைகளை மாறி வரும் ரசனைகளுக்கேற்ப adapt செய்து கொள்ள முயற்சிக்கத் தான் செய்து வருகிறேன் ! அடுத்த தலைமுறைக்கு நான் வழிவிடும் வேளை வாகாகப் புலரும் போது - maybe இது போன்ற குழப்பங்கள் தொடராது போகலாம் ! ஆனால் அது வரையிலும் என்னையும், எனது செயல்முறைகளையும் சகித்தாக வேண்டிப் போகிறது ! 

Getting back on track, பிராசசிங்கில் செய்திடக் கூடிய மாற்றங்கள் தான் முதல் இலக்காகிப் போயின - நமது Operation cost cutting -ல் ! சற்றே அடுத்த லெவல் pre-press பாணி ; இந்திய பிளேட்கள் என்ற தவிர்க்க இயலா மாற்றம் முதலில் நிகழ, பக்கக் குறைப்புகள் தொடர்ந்தன ! சரியாக அதே தருணத்தில், அதுவரையிலும் விற்பனையாகாது கிடந்த நமது உயர்விலையிலான மிஷினும் விற்பனையாகியதால் - நாம் எப்போதும் பயன்படுத்தும் normal இயந்திரத்திலேயே பணிகளைத் தொடரத் துவங்கினோம் - 2013-ன் ஏப்ரல் இதழான "டைகர் ஸ்பெஷல்" முதல் !(நார்மல் இயந்திரமென்ற உடனே இது பேரீச்சம்பழத்தின் ஈடென்று நினைத்திட வேண்டாமே - இதன் விலையே நெருக்கி 30 இலட்சம் !) சற்றே மாறுபட்ட டெக்னாலஜி கொண்ட மிஷினில் அதுவரையிலும் அச்சான நமது வண்ண இதழ்களை, நார்மலான மிஷினில் பிரிண்ட் செய்ய நம்மவர்கள்  தடுமாறத் தான் செய்தார்கள் ! "இரத்தத் தடம்" சொதப்பியது இப்படித் தான் ! தவிர அந்தத் தருணத்தில் பணியாட்களிலும் அனுபவசாலிகள் குறைவாய் இருந்திட 2013-ன் நிறைய இதழ்கள் 'தொட்டுக்கோ-துடைச்சுக்கோ' பாணியில் தான் கரை சேர்ந்தன ! இது தொடர்பாய் அந்நாட்களிலேயே நாமொரு நீண்ட விவாத மேடையை சந்தித்தது கூட நினைவிருக்கலாம் ! ஆனால் "சிப்பாயின் சுவடுகள்" வெளியான தருணம் முதலே புதிய பிரிண்டர் குமார் பணியில் சேர்ந்திட - கொஞ்சம் கொஞ்சமாய் அச்சின் சிக்கல்களை களையத் தொடங்கினோம். 2014-ன் வெளியீடுகளில் "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" ; "நள்ளிரவு நங்கை" ; "உயரே ஒரு ஒற்றைக் கழுகு" ஆகிய 3 இதழ்களைத் தவிர, பாக்கி எல்லாமே சிக்கல்களின்றி தயாராகின ! இவை மூன்றுமே மாறுபட்ட சைஸ் என்பதால் அதற்கு இன்னமும் கூடுதலாய் கவனம் செலுத்தத் தேவைப்படுகிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன் ! அதே போல - pre-press பாணியின் மாற்றங்களையும் அச்சுத் தரத்தில் அதிகமாய்ப் பிரதிபலிக்க அனுமதிக்காது இத்துறையில் புத்தம் புது மிஷின்களாய் வைத்திருக்கும் processing நிறுவனங்களையாகத் தேடித் தேடி வேலை கொடுத்து வருகிறோம் இப்போதெல்லாம் !  LMS இதழின் பணிகள் தொடங்கிய போது கூட பிராசஸிங் செய்பவர்களை அதீத கவனம் எடுத்துக் கொள்ளக் கோரி வேலை வாங்கினோம் ! அதன் அச்சுப் பணிகளின் போது நானும் விடிய, விடிய அச்சுக் கூடமே கதியெனக் கிடக்க - நமது நார்மலான மிஷினிலேயே, நம் பணியாட்கள் மிரட்டலான தரத்தை சாத்தியமாக்கினார்கள் ! 'புளுகுகிறான்..!! LMS இதழை உள்ளே அச்சிட்டிருக்க வாய்ப்பில்லை ; நிச்சயமாய் outsource செய்திருப்பார்கள் !" என்று சாதிக்கக் காத்திருக்கும் "அன்பர்களின்" பொருட்டு நான் சூடத்தை அணைத்து சத்தியம் செய்யும் முஸ்தீபுகளில் எல்லாம் இறங்கப் போவதில்லை ! ஆனால் சத்தியமான நிஜம் அதுவே என்பது ஆண்டவனுக்கும் , எங்கள் அணியின் முழுமைக்கும் தெரியும்! 

இதை விடவும் உயர்தர இயந்திரம் வாங்கிட கோடியில் முதலீடு அவசியமாகும் ! சிவகாசியிலும் சரி ; மொத்தத்துக்கே அச்சுத் தொழில் இன்றுள்ள நிலைக்கும் சரி - அத்தகைய முதலீடுகள் மண்ணைக் கவ்வ உறுதியான வழிமுறை என்ற நிலை ! 'சரி - outsource செய்து அச்சிட்டு வாங்க வேண்டியது தானே ? ' என்ற கேள்விக்கான பதில் நமது தற்போதைய ரொக்கப் பணப் புளக்க pattern-ல் உள்ளது ! ஆண்டின் துவக்கத்தில் உங்களிடமிருந்து கிட்டும் சந்தாத் தொகைகளின் 90% ஆண்டின் கதைக் கொள்முதல்களுக்கே சரியாகி விடும் ! பௌன்சர் தொடரா ? - மொத்தமாய் எல்லாக் கதைகளுக்கும் பணம் கட்டியாக வேண்டும் ; மும்மூர்த்திகளின் மறுபதிப்பா ? கட்டுடா மொத்தமாய் ! என்பதே நிலைமை ! So உங்கள் வரவுகளை சேதாரமின்றிப் பத்திரப்படுத்தி படைப்பாளிகளுக்கு அனுப்பினால் தான் சக்கரங்கள் சுற்றவே வழி பிறக்கும் ! இந்தாண்டு சந்தாத் தொகைகளை பிரத்யேகமாய் Sunshine Library கணக்கிற்குக் கொண்டு சென்றதன் காரணமே இது தான் ! தெரியாத்தனமாய்க் கூட அந்தப் பணம் வேறு செலவினங்களுக்குச் சென்று விடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதை ! 

அதன் பின்னே டிசைனிங் ; டைப்செட்டிங் செலவுகள் ; காகிதக் கொள்முதல், சம்பளங்கள், நிர்வாகச் செலவுகள் ; பிராசஸிங் செலவுகள் ; கூரியர் கட்டணங்கள் என்று வரும் தவிர்க்க இயலாச் செலவுகளை சமாளிக்க முகவர்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் பணங்களும், இடையிடையே வரும் புத்தக விழாக்களின் சிற்சிறு விற்பனைத் தொகைகளும் ஓரளவுக்கு உதவும். வங்கிக் கடன்களோ ; நமது இதர நிறுவனங்களிலிருந்து நான் கோரிப் பெற்றிடும் தொகைகளோ தான் துண்டு விழும் பட்ஜெட்டை நேர் பண்ண உதவும் கருவிகள் ! பிரிண்டிங் இன்க் வாங்குவது நீங்கலாக  "அச்சுக் கூலி" என்று தனியாக எவ்விதக் கட்டணங்களையோ   ; நான் செய்யும் மொழிபெயர்ப்புகளுக்கு அரையணா சன்மானத்தையோ கூட இந்தக் கணக்கில் நாம் பற்று எழுதுவதில்லை ! இது தான் கலப்படமில்லா நிஜம் ! இந்த சூழலில் நான் மாதா மாதம் வெளியில் அச்சுப் பணிகளை outsource செய்து தான் வாங்க வேண்டுமெனில் - அதற்கான money flow -க்கு வழியில்லையே ! ? Pre-Press யுக்திகளில் 'no compromises ' என்று நான் வீராய்ப்பாய்  மீசையை முறுக்கிக் கொள்ளலாம் தான் - ஆனால் மாதந்தோறும் அதன் பொருட்டு நான் generate செய்திடத் தேவையான தொகை சன்னமானதல்லவே  ! அச்சிடுவதில் 75% பிரதிகளை முதல் 3 மாதங்களுக்குள்ளாவது விற்க சாத்தியமாகும் நாள் புலரும் வரை இந்த ஆடு புலியாட்டத்தைத் தொடர்ந்தே தீர வேண்டும் ! Trust me guys, பணம் புரட்ட நடக்கும் இந்த அதகளம் பர்மா காடுகளில் சைமனைத் தேடிச் செல்வதை விடச் சிக்கலானதொரு பணி ! நாளைக்கே திட்டமிடலில் பலமான இன்னொரு நிறுவனம் காமிக்ஸ் வெளியீட்டைத் துவக்கி நம்மை விட அழகாய் ஒரு product-ஐ வழங்கலாம் தான் ; so நமது பட்ஜெட் / விலையமைப்புகள் சகலமும் மார்கெட்டில் அனைவருக்குமே பொருந்தும் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை !  நமக்கிருக்கும் ஆற்றல்களுக்குள் ; விலைகளை இயன்றளவு கட்டுக்குள் வைத்தே தீர வேண்டுமென்ற வைராக்கிய வட்டத்துக்குள் உலாவும் அவசியம் நேரும் போது நாம் செய்திடக் கூடியது அதிகம் இருப்பதில்லை என்பது மட்டுமே எனது பதிவு ! 

இந்தாண்டின் பௌன்சர் ; சிறைக்குள் சடுகுடு..;இரத்தப் படலம் இதழ்களெல்லாம் neat என்று சொல்லும் ரகம் என்பதில் சந்தேகம் கிடையாது ! அதே சமயம் சொற்பமானதொரு சர்குலேஷன் ; அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் - வேஸ்ட் ஆகும் காகிதங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதும் நடைமுறை. (அச்சு இயந்திரத்தில் 2000 காகிதங்களை அச்சிட சுமார் 200 தாள்கள் வேஸ்ட் ஆகும் ; அதே சமயம் 200,000 காகிதங்களை அச்சிடும் போது  வேஸ்டின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டாது !) So அந்த வேஸ்ட் காகிதங்கள் அவ்வப்போது உங்கள் பிரதியினில் நுழையும் வாய்ப்புகள் உண்டு ! இம்மாதம் முதல் அச்சுக் கூடத்திலேயே அந்த வேஸ்ட் தாள்களை தூக்கி வீசிடும் ஏற்பாடுகளை செய்திடப் போகிறோம் என்பதால் தொடரும் மாதங்களில் அதன் பொருட்டு சிக்கல்கள் பெரிதாய் எழுந்திடக் கூடாது என்று நம்புகிறேன் ! அதே போல முகவர்களுக்கு அனுப்பப்படும் பிரதிகளையும் இனிமேல் கால்களில் வெந்நீர் ஊற்றிய பாணிகளில் அனுப்பிடாது  2 நாட்களின் அவகாசத்தின்  பின்னதாக - முழுமையாகக் கை பார்க்கப்பட்ட பின்னரே அனுப்பிடவிருக்கிறோம் !  

ஒரு கொட்டாவியைப் பார்த்த மறுகணம் ஆளாளுக்குக் கொட்டாவி விடும் உணர்வு எழுவது இயல்பு தானே ?! சுமாரான அச்சுத்தரத்தோடு 2013-ல் நிறைய இதழ்களும் , 2014-ல் நடுநடுவே ஒன்றிரண்டு இதழ்களும்  வந்த பின்னே ஒவ்வொரு முறையும் அச்சின் பொருட்டு சிறு கிலேசம் எழுவது இயற்கையே ! ஆனால் - 'இவன் காசு பார்க்கும் பொருட்டு எதையோ சொதப்புகிறான் ; அதனால் இப்போது வரும் அத்தனையும் குப்பையாகத் தானிருக்கும் !' என்ற தீர்மானத்தை  மனதுக்குள் திடமான கோட்டையாய்க் கட்டிக் கொண்டு ஒவ்வொரு மாதமும் பக்கங்களைப் புரட்டும் போது - பௌன்சரின் ஒரிஜினல் rustic coloring கூட நாராசமாய்த் தெரியலாம் தான் ! ஒவ்வொரு மாதமும், இதழைப் பிரிக்கும் போதும்  , பக்கங்களைப் புரட்டும் போதும் குறைபாடுகள் உள்ளனவா ? என்ற தேடலுக்கு முதலிடம் தராது - கதையை ரசிக்க முன்னுரிமை தருவோமே நண்பர்களே ?! குறைகள் இருப்பின், நீங்கள் தேடிச் செல்லாமலே 'பொளேரென்று' உங்கள் முன்னே அவை ஆஜராகி நிற்கும் என்பது நிச்சயம் ! தற்சமயத்து பெரிய சைசில், இந்த ஆர்ட் பேப்பரில் எந்தக் குறைபாடும் கண்ணில் படாது போக வாய்ப்பே இல்லையெனும் போது - why strain to go fault finding ? 

விமர்சனங்களுக்கு நிச்சயமாய் நாம் விரோதியல்ல ; ஆனால் விமர்சனமே   வாசிப்பின் நோக்கமாகிப் போக வேண்டாமே என்பது தான் எனது விண்ணப்பம் ! கடந்த பதிவிற்கு 310+ பின்னூட்டங்கள் உள்ள போதிலும், ஷெல்டனையோ ; நண்பர் XIII -ஐ யோ பற்றிய கருத்துக்கள் / வாசக அபிப்பிராயங்கள் 50-ஐத் தாண்டியிருப்பின் ஆச்சர்யப்படுவேன் ! ரசனைகளில் முதிர்ச்சி வந்திருக்கா பால்யங்களில் carefree மனங்கள் நமக்கொரு வரமாய் இருந்ததனாலோ என்னவோ - அன்றைய கதைகளை கூட நம்மால் மனம் விட்டு ரசிக்க முடிந்துள்ளது - அது ஸ்பைடரின் புஷ்பக் கூடைகளாக இருப்பினும் ! ஆனால் இன்றோ -  பலதரப்பட்ட சிந்தனைகள் வாசிப்பின் அந்த சுலப சந்தோஷங்களை மட்டுப்படுத்தி விடுகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது ! எல்லாவற்றிற்கும் மேலாய் - "காமிக்ஸ் வாசிப்பு" என்ற கலப்படமற்ற சந்தோஷ அனுபவத்தை விட - அதன் பின்னணி அலசல்கள் ; விவாதங்கள் ; தேடல்கள் ; கலாய்ப்புகள் ; வலைத்தள ஜாலிகள் இன்றைக்கு நம் மனங்களில் பெரிதாகிப் போய் விட்டனவோ  என்ற பயம் லேசாக என்னுள் வியாபிக்கிறது ! பயண இலக்கை விடப் பயணத்தின் மீதான காதலில் நாம் மெய்மறந்து வருகிறோமா நண்பர்களே ?? 

அதே போல ஏதேதோ காரணங்களால் என் மீதான வருத்தங்கள்.- நமது காமிக்ஸ் மீதான வெறுப்பாய் மாறிடுவதும் நிகழ்கிறதோ என்ற சங்கடம் எனக்குள் உள்ளது ! "என் கருத்துக்கு மரியாதையில்லை : என் பங்களிப்புக்கு அங்கீகாரமில்லை ; இதை நான் இன்னும் சிறப்பாய்ச் செய்திருப்பேனே..' ; போட்டிக்கு ஆள் இல்லை என்பதால் தான் இவன் துள்ளுறான்  ; எனக்குப் பிடிக்காதவருக்கு இந்த சொட்டைத் தலையன் முக்கியத்துவம் தருகிறான் ; ஓவரா  நடிக்கிறானோ ? ; கொள்ளை இலாபம் பார்க்கிறானோ ? ; புக்கில் புரட்டின  பக்கமெல்லாம் இவன் புராணம் தான் " - என்று சில பல மௌன வருத்தங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம் என்பதை அறிவேன்  !  இவையும், இன்ன பிற சலனங்களும் உங்களில் சில மனங்களை அரித்துக் கொண்டிருப்பதை சங்கடத்தோடு உணர்கிறேன் ! அந்த நெருடல்கள் கூட இதழ்களை சந்தோஷமாய் வாசிக்கத் தடையாய்  நிற்கின்றனவோ ? உங்களில் எவரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் எனக்கு என்றைக்கும் இருந்ததில்லை ! அதே போல உங்களின் எண்ணங்களுக்கு நான் இசைவு தெரிவிக்க இயலாது போவதற்கும் ஓராயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம் ! எங்கெங்கோ எனது கவனங்கள் சிதறிக் கிடக்கும் நிலைகளில் - உங்களுக்கு ஏற்புடைய விதத்தினில் எல்லா சமயங்களிலும் என்னால் நடந்து கொள்ள முடியாது போயிருக்கலாம் தான் ! அவை அறியாப் பிழைகளே தவிர, உங்களைக் காயம் கொள்ளச் செய்யும் காரணிகளாக ஒரு போதும் இருந்ததே கிடையாது !  அவ்விதம் நேர்ந்திருக்கக் கூடிய உளைச்சல்களை ஒரு 31 ஆண்டு கால நண்பனுக்காகப் பொறுத்தருளக் கூடாதா folks ? 

இப்போது கூட - 'செண்டிமெண்டாகப் பேசிக் காரியம் சாதிக்கப் பார்க்கிறான் டோய்  !' என்ற விமர்சனமோ ;  "ஒரு சின்ன சர்ச்சைக்கு இது ஓவர் ரியாக்ஷன்டா சாமி !" என்ற கலாய்ப்போ ; "அடுத்த விலையேற்றத்துக்கு அண்ணாத்தே அடிப்போட்டுட்டார் !" என்ற கவலையோ எழக் கூடும் தான் ! ஆனால் இது கடந்த பதிவினில் ஏற்பட்ட சலசலப்பின் பிரதிபலிப்போ ; இன்னமுமொரு சப்பைக்கட்டு மூட்டையோ ; விலை அதிகரிப்பின் முன்னோட்டமோ கிடையவே கிடையாது ! கொஞ்ச காலமாகவே எனக்குள் உறுத்திக் கொண்டிருந்த சலனங்களை வெளிப்படுத்த இதனை ஒரு வாய்ப்பாக மட்டுமே எடுத்துக் கொள்கிறேன் ! தூங்கப் புறப்படும் முன்னே - ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே : 

இந்தத் தொழிலில் எங்களுக்குள்ள அனுபவத்தையோ ; கைவசமுள்ள அச்சுக்கூடத்து அமைப்பினையோ ; மொழிபெயர்ப்புத் திறமைகளையோ  ; படைப்பாளிகளிடமுள்ள பரிச்சயங்களையோ எங்களது  பலம் என்று நான் ஒரு நாளும் கருதவில்லை ! எங்கள் பலமே நீங்கள் தான் ! உங்களில் ஒவ்வொருவரும்  எங்களை ஒவ்வொரு விதத்தில் தாங்கி நிற்கும் தூண்கள் எனும் போது - ஒரு தூண் குறைந்தாலும் கூட கட்டிடமே இளைத்திடாதா ? We need each one of you with us folks !! போட்டுத் தாக்குங்கள் ; கலாயுங்கள் ; நிறை-குறைகளை உரிமையோடு சுட்டிக் காட்டுங்கள் - ஆனால் ஒற்றை அணியாய் நமக்குள் பிரிவுகளின்றி நின்று பழகுவோமே ? ரசனைகளில், ஜாகைகளில் ; பழகும் விதங்களில் நமக்குள் வேறுபாடுகள் இருப்பினும், 'காமிக்ஸ் காதலர்கள்' என்ற common அடையாளம் போதாதா விக்கிரமன் படக் கிளைமாக்ஸ் போல நாம் கைகோர்க்க ? Give it some thought folks ?! Bye for now ! See you around ! 

352 comments:

  1. முதல் பதிவு படித்த பின் விரைவில் .....


    ReplyDelete
    Replies
    1. மன வருத்தம் அடைய வேண்டாம் சார் ! எல்லோரும் காமிக்ஸ் ஆர்வலர்கள் என்ற ஒரே குடையின் கீழே வருபவர்கள்தாம் ....

      Delete
    2. எடிட்டரின் பதிவின் சாராம்சம் உள்வாங்கி விளையாட்டுக்கு என கூட அணி பிரிந்து வாத பிரதிவாதங்களில் ஈடுபடாது சமீபத்திய இதழ்களின் விமர்சனங்கள் மட்டும் இந்த பதிவில் இடம் பெறுமாயின் அது எடிட்டர் சாரின் மனம் புண்பட்டு இருப்பதை உணர்ந்து அதற்கு நாம் தடவும் மருந்து என்பது என் மிக தாழ்மையான கருத்து

      Delete
  2. 2வது முதல் முறையரக

    ReplyDelete
  3. ரத்த படலம் இதழில் may flower குறித்த நீண்ட விளக்க வசனங்கள் நண்பர்கள் சிலரை அயற்சி அடைய வைக்கிறது போல் காண்கிறது .....மற்றபடி வேகமான கதையின் போக்கை மட்டு படுத்துகிறது என எண்ணாமல் இந்த ஸீரிஸ் -ன் கோர் அதுதான் என உணர வேண்டும் என தோன்றுகிறது ...

    ReplyDelete
    Replies
    1. ரத்த படலம் முதல் ஜம்போ இதழும் அமெரிக்க சரித்திரம் சார்ந்தது எனவே நினைக்கிறேன் ...ராபர்ட் லட்லம் பார்ன் ஐடென்டி சீரிஸ் தாக்கம் காரணமாக ரத்த படலம் உருவானாலும் அதற்கும் இதற்கும் கதையின் முடிச்சில் யாதொரு சம்பந்தமும் இல்லை ...

      ரத்த படலத்தை மூன்றாக பிரித்தால் ...

      முதல் பகுதி ஜான் கென்னடியின் படுகொலை ....

      ஸ்டண்ட்மேன் பகுதி உள்நாட்டு குழப்பம் நிலவும் நாடுகளின் இயற்கை கனிம வளங்களை அடைய முயற்சிக்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் முயற்சி ..

      இறுதி பகுதி .....டாப் டென் அமெரிக்கன் ஸ்காண்டல்ஸ் என பார்த்தால் க்ளின்டன் ,வாட்டர்கேட் புகழ் நிக்ஸன் இவர்களுக்கு முன் இருந்த ஓர் அமெரிக்க அதிபரின் முதல் நிலை நேரடி அந்தரங்க காரியதரிசியின் பதவி ,பண மோகம் பற்றியது என யூகிக்கலாம்

      நமக்கு மே ப்ளவர் ஆயாசத்தை வரவழைத்தாலும் அமெரிக்கர்களுக்கு அது முக்கியமானதாகும் ...


      Delete
    2. 1. Lucky Luke - Gentlemen story ==> Super hit, very good story/comedy enjoyed thoroughly
      2. Magic Wind "Otrai Kazhugu"- I liked it, it kept a tense through out the story
      3. Detective Dylan "Nalliravu nangai" - It well so well until climax. Climax was a big let down.
      4. Diabolik - Can't take it anymore, its just he become complete villain in this story. Killing everybody just to loot.
      5. Bouncer - Mixed reactions i had. Even though the story/drawings were gripping. It put me in a little bit depressed mood :( Hopefully bouncer bounces back in the next issue.
      6. Johnny Nero - Good read for commute, no complaints.

      Books yet to read
      7. Mayavi
      8. David and lawerence
      9. Tex (king special) - Keeping the best for last

      And awaiting for Feb issues.

      One Good/Happy news this time books were sent out before my reminder phone call. So in another week i will get the Feb issues.
      Next month onward, i don't need to burn midnight oil to call the our office :)

      Delete
  4. டியர் எடிட்டர் சர்ர்,
    இவ்வளவு நீண்ட விளக்கமர சர்ர்? நமது கரமிக்ஸ் எப்படி வந்தாலும் நரன் வரங்கி படிப்பேன் சர்ர். இனி விடமாட்டேன். சிறு வயதில் தெரிந்தே தொலைத்து என் நண்பனை தேடி கண்டு பிடிக்க நரன் பட்டபரடு எனக்குத்தரன் தெரியும். ஒரு பதிப்பரசிரியரரய் நீங்கள் படும் பரடு எமக்கு புரிகிறது சர்ர். என்னை பொறுத்தவரை உங்களுக்கு முழுசுதந்திரம் உண்டு என்பது என் கருத்து.

    ReplyDelete
  5. உண்மைதான் ஒரு தொழிலில் கஸ்டமர் (முகவர்) கை விட்ட நிலையில் இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம் தான். ஒரு நிறுவனத்தை கையாள்வது என்பது சாதாரண விசயமில்லை கரணம் தப்பினால் மரணம் தான். இதன் வலி எனக்கு புரிகிறது ஆசிரியரே! வருத்தப்படாதீர்கள் ஆசிரியரே. அனைத்தும் சரியாகிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. பூனையின் படம் தான் மனதை என்னவோ செய்கிறது ஹும்....தயவு செய்து பூனையின் படத்தை எடுத்துவிடுங்கள் ஆசிரியரே

      Delete
    2. உண்மைதான் ....அந்த படம் வேண்டாமே சார் ..

      Delete
    3. உண்மைதான் ....அந்த படம் வேண்டாமே சார்

      Delete
    4. உண்மைதான் ....அந்த படம் வேண்டாமே சார்

      Delete
    5. //பூனையின் படம் தான் மனதை என்னவோ செய்கிறது ஹும்....தயவு செய்து பூனையின் படத்தை எடுத்துவிடுங்கள் ஆசிரியரே///

      +1

      பூனையின் படத்தையெல்லாம் நாங்கள் போட்டுக்கொள்கிறோம் எடிட்டர் சார்! எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சிங்கமுத்து வாத்தியார் என்றென்றும் சிங்கப் படத்துடன் கர்ஜித்து நடைபோட வேண்டுமென்பதே எங்கள் ஆசை!

      Delete
    6. I thought that was erode Vijay's photo standing in front of you know who in Saradha college road temple :)

      Delete
    7. @ Mahendran Paramasivam

      என்னா ஒரு கற்பனை!! ஆனால் உண்மையிலேயே மூஞ்சியை 'அப்படி' வச்சிட்டிருந்தது டெக்ஸ் விஜயராகவன் தான்! அந்தக் காட்சியை இப்போ நினைச்சாலும் ஹா ஹா ஹா...

      Delete
    8. அது ஆப்பு மேல் நானே துளவி உட்கார்ந்து விட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி . ......ஹி ஹி

      Delete
  6. கடந்த காலங்களில் மேலும் அதிக எண்ணிக்கையில் வெளியீடுகள் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும்போதே, ஒரு அளவுக்கு மேலே போனால் தனிப்பட ஒவ்வொரு இதழ்களிலும் கவனம் செலுத்துவது சிரமமாக இருக்கும், அதனால் நிதானமான ஓட்டமே நீண்டகால அடிப்படையில் வெற்றி தரும் என (நானுட்பட) சில நண்பர்கள் கருத்துக்கள் பதிவிட்டிருந்ததை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்.

    அச்சுத் தரம் பற்றிய நேரடியான குற்றச்சாட்டுக்கள் ஏதும் என்வசம் இல்லாதபோதிலும், எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஒரு இதழின் அத்தனை பிரதிகளின் அச்சுத் தரத்தையும் பரிசோதித்து அனுப்பிவைப்பது சாத்தியமற்றது என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்று என்பதை நண்பர்களுக்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

    மாதமொன்றில் ஒரு இதழ் வெளிவந்த காலத்தில் புத்தகங்களை அச்சுக்குப் பின் பரிசோதித்து, சந்தாவுக்கும் கடைகளுக்கும் அனுப்பிடுதல் சாத்தியமாக இருந்திருக்கும். ஆனால், மாதத்துக்கு 4 இதழ்கள். அதிலும் ஜனவரி போல புத்தகத் திருவிழாவுக்கு 8 தொடக்கம் 10 இதழ்கள் எனும்போது சிறியதொரு அணியினால் அத்தனை புத்தகங்களையும் சும்மா புரட்டியேனும் பார்த்து அச்சு சீராக உள்ளதா என பரிசோதித்து அனுப்புவது சாத்தியமற்றது.

    'இன்னும் வேண்டும்.. இன்னும் வேண்டும்... என்று ஆசிரியரை வறுத்தெடுப்பவர்கள் நிச்சயம் இந்த கசப்பான உண்மையையும் ஏற்றேயாகவேண்டும்.

    ஒவ்வொரு இதழுக்கும் அதன் ஆயத்தப் பணிகளிலிருந்து தபாலில் அனுப்பப்படும்வரை ஆசிரியர் பக்கத்திலிருப்பதென்பது நிச்சயம் சாத்தியமற்றதொன்று.

    ஒன்று உடனடியாக வேகத் தடைபோட ஆசிரியரை அனுமதிக்கவேண்டும். இல்லையெனில் பிரதிகள் கைக்கு கிடைத்ததும் அச்சுச் சிக்கலிருக்குமாயின் மாற்றுப் பிரதிக்கு விண்ணப்பிப்பதே ஒரே வழி.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் Podiyan அவர்களே சில, பல நண்பர்கள் குறை சொல்வதை மட்டுமே முழு நேர வேலையாக பார்க்கிறார்கள். நமது ஆசிரியரின் இந்த பதிவுக்கும் ஏதாவது காரணம் செல்வார்கள்.

      Delete
  7. Dear sir you are taking us to a long journey and we will be always with you. You are taking care of all the problems to make this journey as wonderful as possible. In this travel we are always with you to share your burdens.
    come on friends let us move forward.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Dear Vijayan sir,

    We are with you. Thanks for bringing the experience in Tamil.

    Thanks.

    ReplyDelete
  10. சார் , சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நட்புக்கு நிறமில்லை என்ற கதையை நீங்கள் பாதி மட்டுமே வெளியிட்டு உ ள்ளீர்கள் . இதற்க்கு என்ன விளக்கம் தர போகிறீர்கள்....

    To Download full version Please follow the link:

    http://www.mediafire.com/download/b8l50xxq7hyk2x2/1.cbr

    ReplyDelete
    Replies
    1. My 2 cents. Its always up to the editor to "EDIT" the story/drawing/dialogues, etc.. as long as the original publisher doesn't object.
      I had read that book and never felt its incomplete as i had never seen the original. For me our book is THE original.

      Delete
  11. இனிய காலை வணக்கம் விஜயன் Sir :)
    இனிய காலை வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே

    ReplyDelete
  12. // நம் தரப்பிலும் நிச்சயமாய் நியாயம் இருக்கும் என்ற பொறுமையோடும், நம்பிக்கையோடும், நிஜம் என்னவென்று அறியாது உள்ளுக்குள்ளே சங்கடப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய நண்பர்களின் திருப்திக்காக இந்த விளக்கப் படலம் ! //
    Thanks for the reply sir, i was one of the person who had these questions in my mind but never asked anything about it.

    In the last post itself somebody had mentioned that "for this price with this quality nobody can publish comics". I definitely feel that i am getting the value for money.

    Sad to hear that our comics is not generating much profit and you are not even taking salary for translation :( Hope this situation changes in this year for next year.

    ReplyDelete
  13. வந்துட்டேன்,காலை வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  14. இச்சமயம் மிகவும் அவசியமானதொரு பதிவு சார் .என் முதல் ரியாக்ஷன்/பிரார்த்தனை அப்படி அட்டகாசமான மெஷின் மீண்டும் நமக்கே நமக்கு நிரந்தரமாக கிடைக்க இறைவன் அருள வேண்டும் .
    பிப்ரவரி மாத இதழ்கள் நிம்மதியை தந்தன ஆசிரியரே இவ்வளவு இருந்தாலும் போதும் இன்னமொரு முப்பதாண்டு பயணம் நிச்சயம் .LMS-இப்போதைய மெஷின் தயாரிப்பா ..?
    ஆச்சரியம் தான் .அப்படியானால் பயப்பட வேண்டியதில்லை .2012 சாத்தியமே .LMS தயாரித்த அதே டீமை பிடித்து கசக்கிப் பிழிந்து வேலை வாங்கிட வேண்டியது தான் .
    ஆசிரியரே ...ஒரு முறை பால் சுவைத்து விட்டாலே சுற்றி சுற்றி வரும் பூனை(நம்ம ஈரோ விஜய் அல்ல ) .2012 பூராவும் நீங்கள் பால் காட்டிய பூனைகளின் நிலைமை எங்களோடது .இப்போது முழித்துக்கொண்டு உங்களை சுற்றி வருகிறோம் .
    கடுமையான விமர்சனங்களுக்கும் வார்த்தைகளுக்கும் எனது வருத்தங்கள் சார் .
    மன்னியுங்கள்.
    ஒரு முப்பதாண்டு கால வாசகனை பொறுத்துக்கொள்ளக்கூடாதா..?
    (அதே ஸடைல்)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் செய்த கலகம் சற்றே முரட்டுத்தனமானது என்றாலும் அது நம் காமிக்ஸ் பயணத்தின் நன்மைக்கே என்பதை நாங்கள் அறிவோம் அஹமத் பாட்ஷா அவர்களே! உங்களுடைய கலகம் இல்லாவிடில் எடிட்டரின் இந்த 'உண்மையை உரக்கச் சொல்லிடும்' பதிவு நம் எல்லோருக்கும் கிடைத்திருக்காதே! வலிமிகுந்த உண்மைகளை எடிட்டர் தனக்குள்ளேயே பூட்டி வைத்திருந்திருப்பாரே! ஆனாலும் உங்களுடைய இந்த கடுமையான பாணியை மீண்டும் பார்த்திட விருப்பமில்லை எனக்கு! எடிட்டரின் மேல் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வைப்போமே, அவர் என்றென்றும் வாசகர்களுக்கு எதிரானதைச் செய்யமாட்டார் என்று!
      மனம் திறந்த மன்னிப்புக்கோரல் உங்களது நல்ல மனதையே காட்டுகிறது.

      Delete
    2. //ஒரு முப்பதாண்டு கால வாசகனை பொறுத்துக்கொள்ளக்கூடாதா..?//
      உங்களை பொறுத்து கொண்டதால் தான், நீங்கள் முக்கியம் என்று கருதியதால் தான், உங்களின் விமர்சனம் காமிக்ஸ் வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதியதால் தான், இந்த நீண்ட விளக்க பதிவை ஆசிரியர் அளித்துள்ளார்.

      Delete
    3. // ஒரு முப்பதாண்டு கால வாசகனை பொறுத்துக்கொள்ளக்கூடாதா..? //

      எடிட்டரும் சரி வாசகர்களும் சரி தமது நெடுங்கால காமிக்ஸ் பரிச்சயத்தை அல்லது வாசகர்களுடனான உறவை ஒரு பாயிண்ட்டாகக் கருதுவது ஒரு கட்டத்திற்குப்பின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகிவிடும். ஒரு பொருளைத் தயாரிப்பவருக்கும் கஸ்டமருக்கும் இடையில் போதுமான அளவுக்கு ஆரோக்யமான இடைவெளி அவசியம். நட்புறவு என்ற எண்ணத்தில், சதாகாலமும் கூடவே இருக்கும் மனசாட்சியைப்
      போல எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பதைவிட ஒரு கஸ்டமராக குறைபாட்டை சுட்டிக்காட்டி - விட்டுவிடுவது பலநேரங்களில் நிஜமாகவே தயாரிப்பாளரை கவனம் செலுத்த வைக்கும்.

      அடிக்கடி Blog வாசகர்கள் அந்தப்பழைய பரிச்சயம், நல்லுறவு போன்ற விஷயங்களிலேயே மூழ்கியிருந்தால் ஒன்று தயாரிப்புப் பிழைகளை ஒரு கஸ்டமராக சுட்டிக்காட்டும் எண்ணப்போக்கே மட்டுப்பட்டுவிடும் அல்லது அதற்கு நேர்மாராக இனி இவர் எங்கே நாம் சொல்வதை கேட்கப்போகறார், மாறிவிட்டார் என்ற ஆதங்கத்துக்கு காரணமாகிவிடும். இரண்டுமே ஆரோக்யமானதல்ல.

      Delete
  15. மனம் கனக்க செய்கிறது இந்த பதிவு எடிட்டர் சார்...
    முகவர்கள் கே கே விட்டாலும் தங்களை வாசகர்கள் கே விடமாட்டார்கள் என்பதே நிருபிக்கப்பட்ட உண்மை.... We are always with you,...

    யாருப்பா அது எடிட்டர் மனதை கஸ்டபடுத்துவது....

    ReplyDelete
    Replies
    1. // மனம் கனக்க செய்கிறது இந்த பதிவு எடிட்டர் சார்... //

      Same feel.

      Delete
  16. /// நம் தரப்பிலும் நிச்சயமாய் நியாயம் இருக்கும் என்ற பொறுமையோடும், நம்பிக்கையோடும், நிஜம் என்னவென்று அறியாது உள்ளுக்குள்ளே சங்கடப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய நண்பர்களின் திருப்திக்காக இந்த விளக்கப் படலம் ! //

    குற்றம் சொன்ன நண்பர்களின் தொணியில் சற்றே கடினத்தன்மை இருந்தாலும், அவர்களது கேள்வியில் கொஞ்சம் நியாயமும் இல்லாமலில்லை...
    நண்பர் V Karthikeyan உள்ளிட்ட நண்பர்களைப் போலவே நானும் இந்த (வலிமிகுந்த உண்மையை உரக்கச் சொல்லிடும்) பதிவுக்காகவே காத்திருந்தேன்... கூடவே கொஞ்சம் பிஸியான குடும்பக் காரியங்களாலும்!

    இந்தப் பதிவு நிச்சயம் நம் நண்பர்கள் அனைவருக்கும் ஆழமாய் சென்று சேரும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த இக்கட்டான நிலைகள் மாறும். எல்லாம் நன்மைக்கே!

    ReplyDelete
    Replies
    1. @Erode Vijay - Your profile picture brings a smile. Good one.

      Delete
    2. @ V Karthikeyan

      :) முட்டி முட்டி விளையாடும் இந்த விலையாட்டுக்குப் பேரு 'முட்டிலோனா'. நோ நோ... உங்களையெல்லாம் சேர்த்துக்க முடியாது! ;)

      Delete
  17. ஐயா,
    ஆர்டின் உள்ளே வரலாமுங்களா.,?

    ReplyDelete
    Replies
    1. உள்வீட்டு யுத்தம் காரணமாக கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு எழுத முடியாமல் போய் அதை மறைக்க நீங்கள் சுயபரிசோதனை என்று லீவு எடுத்து கொண்டதை நாங்கள் அறிவோம் ;-)
      சீக்கிரமாக ஒரு விமர்சனம் எழுதுங்க ...சிரிச்சு நாளாச்சு .....:-)

      Delete
    2. இங்கே வந்து எட்டிப்பார்த்து அப்படியே வாட்ஸ்அப்பில் ஐக்கியமாகிடாம இருந்தாச் சரி! (முதல்ல இந்த வாட்ஸ்அப் குரூப்ஸையெல்லாம் இழுத்து மூடச் சொல்லி ஒரு போராட்டம் நடத்தணும்! ஆனால் போராட்டக்குழு தலைவரே வாட்ஸ்அப்பில் மூழ்கிக் கிடப்பதை என்னவென்பது! :( )

      Delete
    3. அவரு எங்கிங்க மூழ்கி கிடக்குறாரு. அப்பப்போ வந்து எதையாவது சொல்லி வகையா வாங்கி கட்டீட்டு கெளம்பிடறாரு. திரும்ப கோபம் தணிஞ்சி வரதுக்குள்ள வாரமே முடிஞ்சிடுது.
      அவர கட்டி மேய்க்குறது பெரும்பாடு போங்கோ.!

      Delete
  18. டியர் எடிட்டர்
    1,ஜனவரி இதழ்கள் அத்தனையுமே அருமை அதிலும் பென்சர் சூப்பர் இந்த மாதிரி கதைகள் தொடர வேண்டும்
    2.நானும் 1987 இல் இருந்து காமிக்ஸ் படித்து வருகிறேன் ஆனால் இப்போது spider படிக்க முடிய வில்லை இருந்தாலும் நான் வாங்குவேன்
    2.XIII முடிவது பெரிய ஆறுதல் ஏன் என்றல் complete collectin என்னிடம் இருந்தாலும் என்னால் முடியல
    3.2012 முதல் சந்தா செலுத்தி புக் வாங்கிவருகிறேன் ஆனால் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி விஜய ! என்ன விலை அதிகம் நான் மற்ற வர இதழ்கள் வாங்குவதை நிறுத்தி விட்டேன் ,என் செலவுகளை குறைத்து விட்டேன்
    4.மதி இல்ல மந்திரி எயபகம் இருக்கட்டும்

    ReplyDelete
  19. Sir, I can understand the difficulties and respecting much your efforts. Also i know just giving advise and suggestion is easy than running the bussiness. However nothing we are going to loose by sharing my views. Here it is..
    A comics lover can overlook quality issues by understanding your genuine diffultues. but a ordinary comics reader (new, causaul readers) will thave no interest in knowing this. That may not good for our brand image.

    If no of issues is the barrier for achieving quality then lets focus first quality then think of increase quantities.

    Also we can focus more on black and white stories and easy to print stories.

    Also I am not much comfortable with bouncer kind of dark stories. Even though you are offering under sperate roof, "Recommend for mature readers" kind of tag giving is necessary.

    ReplyDelete
  20. ஒரு அரசல்புரசலாக ஏற்கனவே பணமும், சர்குலேஷனும் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று கணிக்கமுடிந்தாலும், புட்டுப்புட்டு வைத்துவிட்டீர்கள். இவ்வளவு ‘புட்டு’ தேவையா என்றும் நீங்கள் யோசிக்கலாம். அப்பால, சிவகாசிக்கே வந்து பிரிண்டிங் மிஷினுக்குள் தலையை விட்டுக்கொண்டு அச்சாவதைப் பாத்தால்தான் நம்புவேன் என்று நான் சொன்னால் என்ன செய்வீர்களாம்?

    சில நண்பர்களுக்கு காமிக்ஸின் மீது அளவுகடந்த காதல் (வெறி என்று கூட சொல்லலாம்) இருக்கிறது. ஆகவேதான் இந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது புரிகிறது. அவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள், குயவன் ஏதோ கஷ்டப்பட்டு கொண்டுவந்த தோண்டியை, ’கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி’ என்று ஒரு பாடல் வருமே, அந்தக் கதையைப்போல ஆக்கிவிடாதீர்கள். அவ்வளவுதான்! :-)))

    ஆனால் ஒன்று, நம் காமிக்ஸ் ஒன்று, ஒரு லட்சம் காப்பி அச்சிடப்படும்போது, நீங்கள் சொல்வதைப்போல 2டி இதழ்கள் வருகிறது என்று சொல்லுங்கள். நானும் என் பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு வருகிறேன். இந்த ஆளை கட்டிவைத்து உதைப்போம்! நான் முதல் ஆளாக நிற்பேன். ஹிஹி!!

    ReplyDelete
    Replies
    1. // . அப்பால, சிவகாசிக்கே வந்து பிரிண்டிங் மிஷினுக்குள் தலையை விட்டுக்கொண்டு அச்சாவதைப் பாத்தால்தான் நம்புவேன் என்று நான் சொன்னால் என்ன செய்வீர்களாம்? //

      LOL

      Delete
    2. //குயவன் ஏதோ கஷ்டப்பட்டு கொண்டுவந்த தோண்டியை, ’கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி’ என்று ஒரு பாடல் வருமே, அந்தக் கதையைப்போல ஆக்கிவிடாதீர்கள்//
      +1

      Delete
    3. ///குயவன் ஏதோ கஷ்டப்பட்டு கொண்டுவந்த தோண்டியை, ’கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி’ என்று ஒரு பாடல் வருமே, அந்தக் கதையைப்போல ஆக்கிவிடாதீர்கள். //

      :D

      Delete
    4. ஆதி தாமிரா : //ஒரு லட்சம் காப்பி அச்சிடப்படும்போது, நீங்கள் சொல்வதைப்போல 2டி இதழ்கள் வருகிறது என்று சொல்லுங்கள். நானும் என் பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு வருகிறேன். இந்த ஆளை கட்டிவைத்து உதைப்போம்! நான் முதல் ஆளாக நிற்பேன். //

      அசாமிய அதகளம் என்பது இது தானோ ? :-)

      Delete
  21. I can say only one thing

    ''உழுதவன் கணக்கு போட்டால் உழக்கு மிஞ்சாது''.

    Just read the story enjoy it first. If any printing mistake there that only obstacle for free flow reading. Other than that I don't think much focus to be given.

    ReplyDelete
    Replies
    1. //உழுதவன் கணக்கு போட்டால் உழக்கு மிஞ்சாது''.//
      Well Said...

      //Just read the story enjoy it first. If any printing mistake there that only obstacle for free flow reading. Other than that I don't think much focus to be given.//
      +11111111111

      Delete
  22. மன வருத்தம் அடைய வேண்டாம் சார் ! எல்லோரும் காமிக்ஸ் ஆர்வலர்கள் என்ற ஒரே குடையின் கீழே வருபவர்கள்தாம் ....வருத்தப்படாதீர்கள் ஆசிரியரே. அனைத்தும் சரியாகிவிடும்
    காலை வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. POSTAL PHOENIX : பௌன்சரின் கதைமுடிவில் வரும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது நண்பரே..!

      "உறவுகளுக்கு மத்தியில் எழும் மனஸ்தாபங்கள் ஒரு மேகமூட்டமான நாளைப்போலானது. மேகங்கள் விலகிடும் போது அங்கே கதிரவனின் இதமும், வெளிச்சமுமே விரவிக் கிடக்கும்"

      Delete
    2. //"உறவுகளுக்கு மத்தியில் எழும் மனஸ்தாபங்கள் ஒரு மேகமூட்டமான நாளைப்போலானது. மேகங்கள் விலகிடும் போது அங்கே கதிரவனின் இதமும், வெளிச்சமுமே விரவிக் கிடக்கும்"//
      +1

      Delete
  23. //சில நண்பர்களுக்கு காமிக்ஸின் மீது அளவுகடந்த காதல் (வெறி என்று கூட சொல்லலாம்) இருக்கிறது. ஆகவேதான் இந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது புரிகிறது. அவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள், குயவன் ஏதோ கஷ்டப்பட்டு கொண்டுவந்த தோண்டியை, ’கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி’ என்று ஒரு பாடல் வருமே, அந்தக் கதையைப்போல ஆக்கிவிடாதீர்கள். அவ்வளவுதான்! :-))) //

    +1

    ReplyDelete
  24. //ஒரு விரல் கிருஷ்ணாராவை விட 'வரும்..ஆனா வராது' காமெடியில் அதிகம் உருண்டது //

    மன்னிக்கம்,
    அது "என்னெத்த " கண்ணைய்யா என்பதாக ஞாபகம்.
    (ரொம்ப சீரியஸான பதிவில் குறை சொல்ல கிடைத்த ஒரே வாய்ப்பு., விட்டுவிடுவேனா.ஹிஹி.)

    ReplyDelete
    Replies
    1. கிட் ஆர்ட்டின் KANNAN : அட..ஆமாலே ?

      Delete
  25. சார் பிரிண்டிங் பற்றி குறை சொன்னவர்களில் நானும் ஒருவன். ஆனால் அதன் காரணங்கள் இப்பொழுது தெரிந்துவிட்டது. இந்த மாத புத்தகங்கள் அருமை. நீங்கள் கூறிய படி, கசங்கிய பேப்பர் மட்டும் இல்லாமல் பார்த்துகொண்டால் போதும்.

    லயன் காமிக்ஸ் எங்கள் இரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று. குறை மற்றும் நிறைகளை சொல்லும்போது உணர்த்சிவசப்படுகிறோம். உங்களை காயபடுதும் நோக்கம் இல்லவே இல்லை. காமிக்ஸ் நீங்கள் அறிமுகப்படுத்தியது சார்.

    ReplyDelete
    Replies
    1. RAMG75 : //கசங்கிய பேப்பர் மட்டும் இல்லாமல் பார்த்துகொண்டால் போதும்.//

      நிச்சயமாய்ப் பார்த்துக் கொள்வோம் !

      Delete
  26. டியர் விஜயன் சார், இவ்வளவு வெளிப்படையாக இருக்கவேண்டுமா,நீங்கள் என்னதான் உள்ளம் கசிய விளக்கமளித்தாலும்,இங்கு வாலும்,முகப்புத்தகத்தில் தலையும் காட்டும் சிலபிறவிகளின் காதுமடலை கூட தொடாதே சார்.இதற்கும் பயங்கரமாக கிண்டலடித்து தங்கள் முதுகை தாங்களே சொறிந்து கொள்வார்கள். எதற்கெடுத்தாலும் குறைகாணும் இந்த நசைகளுக்கு பதிலளித்து மனவேதனை அடைவதைவிட பதிலளிக்காமலேயே இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar,Salem. : என் கடமையை செய்த திருப்தி போதுமே டாக்டர் !

      தவிர, ஒரு அபிப்பிராயத்தை / ரசனையை / செயல்பாட்டை விமர்சிப்பதற்குத் தோன்றும் வேகம், ஒரு நிஜத்தை விமர்சிப்பதில் எழாது என்ற நம்பிக்கை எனக்குள்ளது !

      Delete
  27. Replies
    1. எந்த மனவருத்தமும் ஏற்படுத்தாம கமெண்ட் போடறதுல உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாதுங்க tex kit! :)

      Delete
  28. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  29. தற்போது மாதாமாதம் நிறைய கதைகள் வருவதால் ப்ராயாரிட்டி ஆர்டர் வைத்து மெதுவாக வாசிக்கும்போது உடனுக்குடன் கதை பற்றிய Feedback தரும் வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. இன்னமும் ஜனவரி இதழ்களில் சில வாசிக்காமல் வெய்ட்டிங். அதற்குள் ஃபிப்ரவரி புக்குகள் வந்துவிட்டன. இருந்தாலும் இதற்கிடையில் தெரியாத்தனமாக ஒரு ஆர்வத்தில் சைத்தான் விஞ்ஞானி (aka சைத்தான் புரபசர்?) படித்துவிட்டு அந்த ஆனந்த அஜீரணத்துடன் ஒரு கருத்து:

    எப்டிப்பா இதெல்லாம் முன்ன படிக்க முடிஞ்சது? காதில பூ எல்லாம் பழக்கப்பட்ட விஷயம்தான் ஆனாலும் இப்போ படித்தால் மூக்கு வாயெல்லாம் பூ வைத்து அடைத்த மாதிரி ஃபீலிங்! (இதற்குதான் பருவத்தே பயிர்செய் என்றார்கள்!)
    பக்கத்துக்கு பக்கம் வரும் (un-intentional) காமெடிகள், அதீத பூ சுற்றல்களையும் கடந்து வாசிக்க உதவியது. குறிப்பாக ஸ்பைடர் சிறையில் தலைகீழாக நின்று முக்கி முக்கி தனது சகாக்களுக்கு SMS அனுப்பும் காட்சி - ஹா ஹா! ஸ்பைடர் - Too advanced for 1960s!

    ReplyDelete
    Replies
    1. Ramesh Kumar : //எப்டிப்பா இதெல்லாம் முன்ன படிக்க முடிஞ்சது? காதில பூ எல்லாம் பழக்கப்பட்ட விஷயம்தான் ஆனாலும் இப்போ படித்தால் மூக்கு வாயெல்லாம் பூ வைத்து அடைத்த மாதிரி ஃபீலிங்! //

      அட..தலைவர் சிரசாசனம் செய்து Mind SMS அனுப்புவதுக்கே ;ஜெர்க்' ஆகிப் போனால் எப்படி ?? இன்னமும் நியூ யார்க் நகரை எல்லாம் கப்பலோடு சேர்த்துக் கட்டி இழுத்துப் போகும் வேலைகள் பாக்கியுள்ளனவே ?!

      Delete
    2. ஸ்பைடர் தாய் மாமன் போன்ற ஒரு பெர்சொனளிட்டி. ஒவ்வொரு லூட்டிகளும் ரசிக்க வைக்கிறது. மாயாவி காலேஜ் புரப்ஹசர் மாதிரி. மனதுக்கு அவ்வளவு நெருக்கமாக இர்ருப்பதில்லை. :-)

      Delete
    3. Edit: //இன்னமும் நியூ யார்க் நகரை எல்லாம் கப்பலோடு சேர்த்துக் கட்டி இழுத்துப் போகும் வேலைகள் பாக்கியுள்ளனவே ?!//

      Aaaaavvv... :!

      Delete
  30. என் அம்மா ஏன் இப்போ வர காமிக்ஸ்யை இவ்வளவு விலை குடுத்து வாங்கிறேன் கேட்டாங்க, Prakash Publications தமிழில் ஐரோப்பா காமிக்ஸ் கொண்டு வந்து அதை நடத்தி செல்வது ஒரு பெரிய விஷயம், சாதனை, நான் பெருமிதம் கொள்கிறேன் என்று சொன்னேன், அதற்கு அப்புறம் கேள்வி கேட்பதில்லை
    என் அம்மா மாதம் பிறந்தால், இந்த மாதம் என்ன காமிக்ஸ் வருது, எப்போது வரும் கேட்டுகிட்டுத்தான் இருப்பாங்க
    அவர்களுக்கு பௌன்செர் பிடித்திருந்தது
    சிறு வயதில் எனக்கு காமிக்ஸ் வாங்கி கொடுத்தது அவர்கள் தான், இப்போது நான் வாங்கி தருகிறேன் அவர்களுக்கு

    முன்பை போல பத்து , இருபது ரூபாய்களில் விற்காமல் 100 ரூபாய்க்கு தாங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது நல்ல செயல். நமது தமிழ் காமிக்ஸ்கிற்கு வேண்டிய அடையாளம்

    Batman, Superman மட்டும் தான் காமிக்ஸ் என்பது இல்லை, அதையும் தாண்டி சூப்பர் பவர் இல்லாமலே சாதிக்கும் ஹீரோஸ் இருக்காங்க எங்களுக்கு காமிச்சிங்க, தமிழில் நீங்க கேப்டன் டைகேரையும் , டெக்ஸ் வில்லேரையும் கொண்டு வரலைனா எனக்கு அவர்கள் பற்றி எல்லாம் எனக்கு தெரிந்திருக்காது.

    எனக்குள் காமிக்ஸ் காதலை வளர்த்தது தங்களுடைய காமிக்ஸ் தான். எனக்கு தங்களின் வெளியிடுகள் பிடித்திருகிறது, வாங்கி படிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. SeaGuitar9 : //சிறு வயதில் எனக்கு காமிக்ஸ் வாங்கி கொடுத்தது அவர்கள் தான், இப்போது நான் வாங்கி தருகிறேன் அவர்களுக்கு //

      That's sweet !!

      Delete
    2. //SeaGuitar9//

      +1

      I didnt find "tanga kallari" in our AM shop sea guitar, if you see it in any shop do let me know.

      Delete
  31. //போட்டுத் தாக்குங்கள் ; கலாயுங்கள் ; நிறை-குறைகளை உரிமையோடு சுட்டிக் காட்டுங்கள் - ஆனால் ஒற்றை அணியாய் நமக்குள் பிரிவுகளின்றி நின்று பழகுவோமே ? ரசனைகளில், ஜாகைகளில் ; பழகும் விதங்களில் நமக்குள் வேறுபாடுகள் இருப்பினும், 'காமிக்ஸ் காதலர்கள்' என்ற common அடையாளம் போதாதா//
    +1

    ReplyDelete
  32. //இந்தத் தொழிலில் எங்களுக்குள்ள அனுபவத்தையோ ; கைவசமுள்ள அச்சுக்கூடத்து அமைப்பினையோ ; மொழிபெயர்ப்புத் திறமைகளையோ ; படைப்பாளிகளிடமுள்ள பரிச்சயங்களையோ எங்களது பலம் என்று நான் ஒரு நாளும் கருதவில்லை ! எங்கள் பலமே நீங்கள் தான் !//
    +10000 :)

    //உங்களில் ஒவ்வொருவரும் எங்களை ஒவ்வொரு விதத்தில் தாங்கி நிற்கும் தூண்கள் எனும் போது - ஒரு தூண் குறைந்தாலும் கூட கட்டிடமே இளைத்திடாதா ? We need each one of you with us folks !! போட்டுத் தாக்குங்கள் ; கலாயுங்கள் ; நிறை-குறைகளை உரிமையோடு சுட்டிக் காட்டுங்கள் - ஆனால் ஒற்றை அணியாய் நமக்குள் பிரிவுகளின்றி நின்று பழகுவோமே ?//

    Don't worry editor sir...Whatever happens we all will always with you sir...
    We give our support by reading n loving our comics!!!!

    ReplyDelete
    Replies
    1. Sathiya : Profile படமெல்லாம் தூள் கிளப்புதே !!

      Delete
    2. @Vijayan:
      மிக்க நன்றி எடிட்டர் சார்!!!

      Delete
  33. ஆசானே இவ்வளவு வெளிப்படையாக எந்த ஒரு ஆசிரியரும் இருப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி,இந்த பதிவு மிகுந்த மனவலி மிக்க பதிவுபோல் தோன்றுகிறது.அந்த பூனையின் படத்தை தயவு செய்து எடுத்து விடுங்கள்,அதன் கண்கள் மனதை என்னவோ செய்கிறது.
    நாரதர் கலகம் நன்மையிலே என்பது போல் இந்த பிரச்சனையால் உங்கள் மனதில் உள்ள உண்மைகள் ஒரு வழியாக வெளிவந்து விட்டன.இனி நீங்கள் ரிலாக்ஸ் ஆகி விடலாம்.
    விடுங்கள் எல்லாம் நன்மைக்கே,இனி நம் வாசகர்களுக்கு உண்மை நிலவரம் தெரிந்து விட்டதால் தேவையற்ற விவாதங்கள் எழாது.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : //நம் வாசகர்களுக்கு உண்மை நிலவரம் தெரிந்து விட்டதால் தேவையற்ற விவாதங்கள் எழாது.//

      தவறுகள் நிகழும் போது அவற்றைச் சுட்டிக் காட்டும் உரிமைகள் நிச்சயமாய் இன்னமும் உங்கள் கைகளில் தான் உள்ளன நண்பரே ! அதனில் துளி மாற்றமும் கிடையாது !

      Delete
  34. நீங்கள் இப்படி ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை இருந்தும் ஒரு நீண்ட விளக்கம்...வாசகர்களை மதிக்கும் உங்களின் என்னைத்தை பிரதிபலிகின்றது.. எங்களுக்கான உங்கள் மெனக்கெடலை தெள்ள தெளிவாக உணர முடிகிறது. இதை என்றும் நாங்கள் உணர்ந்தே உள்ளோம் Sir. Because we love your comics always. இதுவும் கடந்து போகும்....We keep on moving sir......We will always with you....

    ReplyDelete
    Replies
    1. Dasu Bala : நீங்களே எதிர்பார்க்காவிடினும் நம் சிந்தைகளில் படர்ந்திருக்கக்கூடிய சில சிலந்திவலைகளை அகற்றுவது என் கடமையல்லவா ?

      Delete
  35. மனதை நெகிழவைக்கும் பதிவு ! காமிக்ஸ் மீதான காதல் என்றுன்றும் நம்மை வாழ வைக்கும் வளர்க்கும் ! 2012 சந்தா தொகை Rs.620/- இரண்டு பகுதிகளாக கட்டவே சிரமப்பட்டேன். இன்று 2015 காண சந்தாவும் 2 பகுதிகளுக்கு மேலாக தான் கட்டுகிறேன் என்றாலும் இப்போது கிட்டதட்ட ஆண்டிற்கு Rs.5000 வரையில் கட்டும் அளவுக்கு வளர்ந்து இருப்பது முன்னேற்றேதின் அறிகுறிதானே ! நாம் அனைவரும் கைகோர்த்து மேலும் வளரத்தான் போகிறோம் என்பதில் சந்தேகமில்லை ,

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : வரப்புயர....நீரும்..நெல்லும்..கோனும் வளர்வது சந்தோஷ நிகழ்வல்லவா? :-)

      Delete
  36. மீண்டும் வருத்த பட வைக்கும் பதிவு ...

    நண்பர்களே அச்சு குறை பாட்டை சொல்லலாம் தவறல்ல ...எனக்கு தெரிந்து இதுவரை குறைபாடுள்ள புத்தகம் மூன்று தான் .இரத்த தடம் ...ஏற்கனவே விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டாயிற்று .அடுத்து தலைவாங்கி குரங்கு ...நீண்ட சித்திரங்கள் ...நன்கு தெரிந்தது .அடுத்து கார்சனின் கடந்த காலம் அகல வாக்கில் சித்திர தரம் இப்படி. இதை குற்றம் என ஆசிரியரை சாடலாம் .அதிக எழுத்து பிழை வந்தாலும் சுட்டி காட்டலாம் .தவறல்ல .ஆனால் சித்திரத்தில் கலர் தூக்கல் ...குறைவு ...கட்ட பேனல் சரியல்ல அழுத்தமாக கறுப்பு இல்லை ..என்றெல்லாம் குறை கண்டு பிடிக்கும் நண்பர்கள் கண்டிப்பாக கதையுடன் ஒன்ற முடியாது என்பது உண்மை .

    அதே போல ஆசிரியர் சொன்னபடி காமிக்ஸ் காதலை விட இப்போது காமிக்ஸ் பயண காதல் அதிகமா என்றால் அது தான் உண்மை .ஒரு புது புத்தகம் கைக்கு கிடைக்கும் அன்று உங்களின் பதிவும் வந்தால் இப்போது எல்லாம் மனம் முதலில் பதிவை தான் நோக்கிகிறது .இது சந்தோச விசயமா ...வருத்தமான விசயமா என்று தெரிய வில்லல.

    அப்புறமா எங்கள் பூனை சிங்கமானால் சந்தோசபடும் முதல்ஆள் நானே .
    ஆனால் சிங்கம் பூனை ஆனால் கோப படும் ஆளும் நானே ....

    எனவே ..............

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : //அப்புறமா எங்கள் பூனை சிங்கமானால் சந்தோசபடும் முதல்ஆள் நானே .
      ஆனால் சிங்கம் பூனை ஆனால் கோப படும் ஆளும் நானே ....//

      (தருமி நாகேஷின் modulation-ல்) : ஓஹோ..இங்கே எல்லாமே நீர் தானோ ?

      Delete
  37. இத்தளத்தின் உங்கள் email address update செய்யமாறு எடிட்டர் அவர்களை கேட்டுகொள்கிறேன் ஏனினில் இத்தளத்திஇல் பதியப்படும் commentகள் தங்கள் email சென்றயாமல் failure ஆகின்றது. comment publish ஆனாலும் delivery failure notice எங்கள் mailக்கு வந்துவிடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : Done ! ஏற்கனவே இதனை நண்பர் ரபீக் கூட சொல்லியிருந்தது இப்போது ஞாபகம் வருகிறது ! மாற்றத்தை செய்து விட்டேன் ; இனி சிரமம் இராதென்று நினைக்கிறேன் !

      Delete
  38. Dear Editor,

    Thanks for the detailed write up! I am convinced and so will be a lot of our regular readers.

    With regards to opinions about new stories not seen around here, my take is this: I have five issues pending to read (including the reprints) - so the latest comments are getting delayed. That said many new stories are pretty good (including the genres) and I have always voiced this out profusely.

    Good print or off-color prints: Truth is no one can provide franco-belgian comics at this price (0.6 to 1.5 Euros per book/double album). I am hoping that in future things will improve - reining in the numbers on the other hand would put exhibition plans off track. Hmmm ..!!

    You have a set of passionate fans around for 30 years and a new compelling need to avoid the RED when it comes to sales - thats a heady admixture that is causing a few ruffles. I am sure the end result would be a closer, deeper, clearer bond :-)

    ALL THE BEST !!

    ReplyDelete
    Replies
    1. Raghavan : //With regards to opinions about new stories not seen around here, my take is this: I have five issues pending to read (including the reprints) - so the latest comments are getting delayed.//

      Point well made out !

      Delete
  39. Replies
    1. சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் : ஒவ்வொரு அனுபவமும் ஒரு வாழ்க்கைப் பாடம் தானே நண்பரே ! So நிறைய படிக்கக் கிடைக்கும் வாய்ப்புக்கு சங்கடப்படுவானேன் ?

      Delete
  40. அப்போ அவுக சொன்னது ஞாயமாத்தேன் பட்டுச்சி.
    (பௌன்சர குறை சொன்னது தவிர.)

    இப்போ இவுக சொல்றதும் ஞாயமாத்தேன் படுது.
    (ஆனா இம்புட்டு விளக்கம் தேவையில்லையோன்னு தோணுது. ஏத்துக்க தயாரா இல்லாதப்போ எம்புட்டு சொன்னாலும் மூஞ்சிபொஸ்தகத்துல கிழிபடறது கன்ஃபார்ம்டுங்கோ.)

    ReplyDelete
    Replies
    1. கிட் ஆர்ட்டின் KANNAN : ரசனைகளில் மாற்று சிந்தனைகள் இருந்திடலாம் தான் ; அணுகுமுறைகளுக்கு ஒவ்வொருவரின் reactions-ம் வெவ்வேறு மாதிரி இருந்திடலாம் தான் ! அதன் பொருட்டு விமர்சனங்கள் எழலாம் தான் !

      அனால் நிஜத்தின் நிறம் ஒன்றே எனும் போது அது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாய்க் காட்சி தருமென்று அஞ்சுவானேன் ?

      Delete
  41. தரத்தில் எந்த குறையும் இருப்தாக படவில்லை , நேற்று கூட "அம்பின் பாதையில்" படித்தேன் , சித்திரங்களும் வண்ண கோர்ப்பும் மிக அருமை ... எதை பற்றியும் கவலை படாமல் உங்கள் கடமையை செய்யுகள் சார் .. ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. saravanan v : "அம்பின் பாதையில்" போன்ற நுணுக்கமான கதைகளை சுமாரான அச்சுத் தரம் சிதைத்து விடும் என்ற பயம் நிறையவே எங்களுக்குள் இருந்ததால் - இந்த இதழின் பணிகளுக்கு நிறையவே சிரத்தைகள் மேற்கொண்டோம். அதே கவனத்தை தொடரும் ஒவ்வொரு இதழ்களும் தர 100% முயற்சிப்போம் !

      Delete
  42. //"காமிக்ஸ் வாசிப்பு" என்ற கலப்படமற்ற சந்தோஷ அனுபவத்தை விட - அதன் பின்னணி அலசல்கள் ; விவாதங்கள் ; தேடல்கள் ; கலாய்ப்புகள் ; வலைத்தள ஜாலிகள் இன்றைக்கு நம் மனங்களில் பெரிதாகிப் போய் விட்டனவோ என்ற பயம் லேசாக என்னுள் வியாபிக்கிறது !//

    உண்மைதான் சார்,
    முன்பெல்லாம் தினமும் ஒரு கதையாவது வாசித்துவிடுவேன்.
    ஆனா இப்போ இந்த வாட்ஸ் அப்பு என் வாசிப்புக்கு வச்சிடுச்சு ஆப்பு.

    ReplyDelete
    Replies
    1. வாட்ஸ்அப் குரூப்புகள் நண்பர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது. ஆனால் காமிக்ஸ் படிக்கக் கிடைக்கும் சொற்ப நேரத்திற்கு ஆப்பு வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தளத்தில் செயல்பாடுகளில் சுணக்கம் நேருவதையும் சகித்துக்கொள்ள முடியாது. சுயகட்டுப்பாட்டுடன் நண்பர்களே தங்களை மட்டுப்படுத்திக்கொள்வது மட்டுமே தீர்வு! இல்லாவிட்டால், மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டும் கடையைத் திறப்பதற்கு எல்லா கடைக்கார அட்மின்களும் உறுதியெடுக்க வேண்டும்!

      Delete
    2. கிட் ஆர்ட்டின் KANNAN & Erode VIJAY : Technology-ன் நவீன முகங்களுக்கு நாம் தலை வணங்குவதில் வியப்பில்லை ! ஆனால் வாசிப்பைத் துறந்த / மறந்த நிலைகளில் அந்த ரசனையை நெடுங்காலத்துக்குத் தொடர்ந்திடல் சாத்தியமாகிடாது அல்லவா ?

      நமது காமிக்ஸின் பொருட்டு மட்டுமே இதனைச் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ! பொதுவான 'காமிக்ஸ் வாசிப்பு' பற்றிய எனது ஆதங்கமே இது !

      Delete
  43. சார் ஒன்று மட்டும் சொல்வேன், விமர்சனங்கள் நிச்சயம் உங்களுக்கு வலிமையை தரும்.

    இந்த மாத புத்தகங்களின் அச்சு தரம் அருமை, அதிலும் அம்பின் பாதையில் அட்டை படம், தூள் .....அட்டகாசம்.

    நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :-
    விமர்சனகளுக்கு பதில் சொல்வது விஜயன் சாரின் கடமை, இதில் தேவை இல்லாமல், எனக்கும் எல்லாம் தெரியும் என்று சில பேர் மூக்கை நுழைக்கும் போதுதான் தேவை இல்லாத விவாதங்கள் நடை பெறுகிறது , தயவு செய்து ஆசிரியரை பதில் சொல்ல விடுங்கள். கை விரல் உங்களை நோக்கி நீண்டால் மட்டுமே பதில் சொல்லுங்கள் ப்ளீஸ் :)

    ReplyDelete
    Replies
    1. // விமர்சனங்கள் நிச்சயம் உங்களுக்கு வலிமையை தரும். // + இன்னும் நல்ல புரிதலையும் கொடுக்கும்.
      என்னை பொறுத்தவரை இது போன்ற பதிவுகள் உங்களை பற்றி மேலும் புரிந்து கொள்ளவும், முன்பை விட இன்னும் உங்கள் மேல் மரியாதை கொள்ள செய்கிறது.

      Delete
  44. சார் மற்றும் ஒரு வேண்டுகோள், LMS சைஸ்ல் தொடர்ந்து புத்தகங்கள் வெளி இட முடியாதா, LMS படிக்கும் போது, ஒரு அற்புத காமிக்ஸ் வாசிப்பினை உணர்ந்தேன், இந்த பெரிய சைஸ் ஏதோ ஒரு வார பத்திரிகையை ஏந்தி இருப்பது போல் பீல் ஏற்படுகிறது ....எனக்கு மட்டும்தானா ???

    ReplyDelete
    Replies
    1. Giridharan V : LMS சைசுக்கே நமது பிரான்கோ-பெல்ஜியக் கதைகளையும் switch overசெய்வதாகயிருப்பின் சித்திரங்களின் சைசும், எழுத்துக்களின் அளவுகளும் சற்றே சிறிதாகிப் போவதைத் தவிர்க்க இயலாது ! முன்பு போல் ஓவியர்களைக் கொண்டு பணியாற்றிடும் பட்சத்தில் படங்களை வெட்டி ; ஒட்டி - டிங்கரிங் வேலைகளை செய்திட முடியும் ! ஆனால் இன்றோ அதெல்லாம் சாத்தியமில்லை எனும் போது அந்த சிறிய எழுத்துக்கள் தான் நெருடலே !

      But கையில் பிடித்துப் படிக்க ; வெளியே கொண்டு செல்ல LMS சைஸ் தான் better என்பதில் சந்தேகமே இல்லை தான் !!

      Delete
    2. ’நிலவொளியில் ஒரு நரபலி’ கூட சூப்பர் சைஸ் தான் சார்.நேற்று கூட கையில் வைத்து ரசித்துக்கொண்டிருந்தேன் . . .

      Delete
  45. .குறை கூ றி வரும் விமரிசனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதை விட ஆழ்ந்த தன்னிலை விளக்கம் அளித்த ஆசிரியரின் பதிவு நெஞ்சைத் தொட்டது..ஆசிரியரும் காமிக்ஸும் இருக்கும்வரை காமிக்ஸ் காதலர்களும் பக்கபலமாய் இருப்போம் சார் ..

    ReplyDelete
    Replies
    1. BAMBAM BIGELOW : நண்பரே, இன்று இதனை கண்டும் காணாது நான் நகாந்து செல்வது சுலபமே ; ஆனால் நம்பிக்கையெனும் அஸ்திவாரத்தில் எழும் எந்தவொரு விரிசலையும் துவக்கத்திலேயே சிரத்தையோடு சரி செய்யாது போயின் அதன் கஷ்டமும், நஷ்டமும் பெரிதாகிடுமல்லவா ?

      Delete
    2. சார் எங்களுக்கு உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. குறை கூறுவது சில நண்பர்களின் இயல்பு. அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவர்கள் எதிலும், எளிதில் திருப்தி அடையாதவர்கள்.
      நீங்கள் என்ன விளக்கம் சொன்னாலும் அவர்களுக்கு திருப்தி வராது .

      Delete
    3. Srithar Chockkappa : குறையில்லாத இதழ்களுக்கு இன்னும் முனைப்பாய் பணி செய்ய இதனை ஒரு கூடுதல் காரணமாக்கிக் கொண்டால் போச்சு ! !

      Delete
    4. // குறையில்லாத இதழ்களுக்கு இன்னும் முனைப்பாய் பணி செய்ய இதனை ஒரு கூடுதல் காரணமாக்கிக் கொண்டால் போச்சு //

      நல்ல விடயம் சார்
      இனி பிரிண்டிங் பற்றிய கேள்விகள் எழாது என நம்புவோம்

      Delete
  46. //உயரும் ஒவ்வொரு குரலுக்கும் நடுங்கிப் போய் என் அடிமடியைத்  திறந்து காட்டுவதாக இருப்பின், நாள் முழுவதிலும் வேஷ்டியை சரி செய்வதைத் தாண்டி நான் வேறெதுவும் செய்திருக்க முடியாது //
    சீரியசான நேரத்திலும் சரளமாய் வெளிப்படும்
    இப்படி ஒருதமிழ் நடை ...
    at the end of the day you are the one who walks TALL ...
    ரசித்தேன் ஆசிரியரே ...

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : It's the comics fraternity that walks TALL.....not me !!

      Delete
  47. தங்கத்திலே ஒரு குறை விருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ ..நாம வந்து அறிவு ஜீவி எல்லாம்
    கிடையாது ..கதை நல்லா இருக்கா சூப்பர்..சுமாரா இருக்கா அதுவும் சரிதான்..நமக்கு தொழில் காமிக்ஸ்
    படித்தல் ..ரசித்தல் அம் மட்டே ..

    ReplyDelete
  48. விஜயன் சார், நமது காமிக்ஸ்சின் அச்சு குறைவுக்கு காரணம் நமது புதிய எந்திரம் மற்றும் நமது "budget" ஒரு காரணம் என நான் ஊகித்தது சரி என்பது உங்கள் பதிவை படித்தவுடன் புரிந்து கொண்டேன்! இதற்கு எல்லாம் மேல் உங்கள் காமிக்ஸ் மீதான தீராத காதல் என்பது இந்த பதிவை படித்தவுடன் புரிந்து "மீண்டும் ஒரு முறை" கொள்ள முடிந்தது!

    தற்போது நமது அச்சு குறைகளை போக்க நீங்கள் இங்கு கொடுத்து உள்ள உறுதி மொழி போதும், நமது வளர்சிக்கு.

    தற்போது நமது அச்சு பற்றி அதிகம் பேச காரணம் இன்டர்நெட் முலம் அனைத்து ஒரிஜினல் கிடைத்து விடுவதால், இது போன்று நமக்கு ஏன் கிடைப்பது இல்லை என வினவ காரணம்.

    மேலும் சிலருக்கு இது பற்றி தெரிந்தும் கேட்க காரணம், அதிக பணம் கொடுத்தாவது சிறந்த படைப்புகளை உங்களிடம் இருந்து பெறவேண்டும் என்ற காமிக்ஸ் வேட்கை.

    இதை எல்லாம் தாண்டி சிலர் குறை சொன்னால் அதன் காரணம்களை பற்றி அலசாமல் நாம் அதனை தாண்டி செல்வது நலம்.

    என்றும் உங்களுடன் அதே ஆர்வத்துடன் பயணிக்க நாங்கள் அனைவரும் தயாராக உள்ளோம்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : //தற்போது நமது அச்சு பற்றி அதிகம் பேச காரணம் இன்டர்நெட் முலம் அனைத்து ஒரிஜினல் கிடைத்து விடுவதால், இது போன்று நமக்கு ஏன் கிடைப்பது இல்லை என வினவ காரணம். //

      "டிஜிட்டல் பிரிண்டிங்" எனும் துறையை சில சர்வதேச ஜாம்பவான் நிறுவனங்கள் தங்கள் கரங்களுக்குள் வைத்துக் கொண்டுள்ளன - இன்க் மற்றும் உபரிப் பாகங்களின் விலைகள் குறைந்திடாது கட்டிக் காப்பாற்றும் பொருட்டு !

      அந்த வட்டம் உடைக்கப்பட்டு - டிஜிட்டல் அச்சின் விலைகள் குறைந்திடும் காலம் பிறக்கும் போது நீங்கள் இணையத்தில் பார்க்கும் அத்தனையும், அப்படியே சாத்தியமாகும் !

      Delete
    2. // அந்த வட்டம் உடைக்கப்பட்டு - டிஜிட்டல் அச்சின் விலைகள் குறைந்திடும் காலம் பிறக்கும் போது நீங்கள் இணையத்தில் பார்க்கும் அத்தனையும், அப்படியே சாத்தியமாகும் ! //
      காத்திருப்பேன்... என்றும்!

      Delete
  49. ஷெல்டன் - கதை வழக்கம் போல் முதல் பக்கதில் இருந்து இறுதி பக்கம் வரை விறுவிறுப்பு. கதையின் தலைப்பு மிகவும் பொருத்தமானது. குறை ஒன்றும் இல்லை, அப்படி கண்டிப்பாக ஏதாவது சொல்லணும்னா சில இடம்களில் தென்பட்ட எழுத்து பிழைகளை சொல்லலாம். மொத்தத்தில் ஒரு நிறைவான இதழ்!

    ReplyDelete
  50. To : Edit,

    புதிக கதைகள் விரைவில் வரப்போகின்றன, இந்த இதழில் சித்திரங்களின் பாணி அபாரம், இந்த கதை இந்தப் பின்னணியில் உருவாக்கப்பட்டது, எமது அலுவலகத்தில் புதிதாக ஒரு முன் அலுவலகப் பணியாளரை நியமித்திருக்கிறோம் - என்று சில முன்னறிவித்தல்கள், தகவல்களை எமக்கு தெரிவித்து வருவதுபோல... எமது அச்சுக் கம்போஸிங்கில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது, தாள்களில் இத்தகைய மாற்றம் - இதனால் செய்திருக்கிறோம், இந்த அளவில் இந்தக் கதையை அச்சிட நேர்ந்த அவசியம் என்ன, இப்படி அச்சு இயந்திரம் மாறியிருக்கிறது - மாற்றம் தெரிகிறதா? பக்கங்களை குறைக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்று அவ்வப்போது சில முன்னறிவித்தல்களை எழுதிவிட்டால் இப்படியெல்லாம் கேள்விகள் வருவதும் ஆசிரியர் நொந்துபோய் பதிவெழுதுவதும் அவசியப்படாதோ? :-)

    ReplyDelete
    Replies
    1. Podiyan : அச்சுத் துறையும் சரி, pre -press துறையும் சரி ஒரு சமுத்திரத்தின் ஆழம் கொண்டவை ! 30 ஆண்டுகளாய் இந்தத் துறையில் குப்பை கொட்டி வரும் எங்களுக்கே ஒவ்வொரு புது நாளும் இன்னமும் ஒரு புது பரிமாணத்தைக் காட்டி வருகின்றது ! அசுர வேகத்தில் டெக்னாலஜி மேம்பட்டு வரும் இந்தத் துறையில் நாங்களே மாணவர்களாய் இருந்து வரும் நிலையில் இதைப் பற்றி updates ; விளக்கங்கள் என்பதெல்லாம் நம் சக்திக்கு மீறியவை ! Sometimes keeping things simple is not a bad idea at all..!

      Delete
  51. ஆதலினால் காதல் கொள்ளாதீர்...

    'பெண்களின் மிகப்பெரிய ஆயுதம் - கண்ணீர்' என்பதை ஷெல்டன் தனக்கான பாணியில் சொல்லியிருக்கிறார்.
    படித்த பிறகே புரிகிறது இது எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்று! இத்தனைநாளும் ஷெல்டனின் தொடர் கதைகளைப் படித்துவிட்டு, இந்த ஒன்-ஷாட் கதையைப் படிப்பது ஒரு நல்ல மாறுதல்! ஓவியங்களும், வண்ணங்களும் அசத்துகின்றன.

    தன் காதலியின் முன்னால் காதலனை மீட்க ஒரு சாகஸம் என்பதெல்லாம் நமக்கு புதுசு பாஸ்! ஷெல்டனுக்கும் ஹானஸ்ட்டிக்கும் இடையேயான உரையாடல்கள் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

    கதையைப் படிப்பதற்கு முன்பு, ('காதல்' என்ற தலைப்புடையதாலோ என்னவோ) அட்டைப்படத்தில் ஷெல்டனை சிறைவைத்திருப்பது இரண்டு ஆயுதமேந்திய பெண்கள் என்றும், இதுவொரு முக்கோணக் காதல் கதையாக இருக்கக்கூடும் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் ஆயுதமேந்திய நீக்ரோ ஆண்கள் என்பது படித்த பிறகே புரிந்தது! ( நீக்ரோக்களைக்கூட நம்ம ஓவியர் மாலையப்பர் வெள்ளக்கார தொர மாதிரி செவப்பா வரைஞ்சிருக்காரே சார்!) . அட்டைப்படத்தில் ஷெல்டனின் தலையின் அளவு விகிதாச்சாரங்கள் அவரது உடலைவிடவும் சிறியதாக வரையப்பட்டிருப்பது மற்றொரு குறை!

    'சி.சி.வயதில்' - 1990களின் கஷ்டகாலங்களை அழகாக விவரிக்கிறது.

    'சி.சி.வலையில்' - CBFன் Sweet Memories!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY @ கடந்த வருடமும் இது போல் ஒரு ஒன்-ஷாட் கதை வெளி வந்தது! அதுவும் இது போல் ஒரு ரசிக்க கூடிய அதிரடி கதை என்றால் மிகையில்லை!

      Delete
    2. //அட்டைப்படத்தில் ஷெல்டனின் தலையின் அளவு விகிதாச்சாரங்கள் அவரது உடலைவிடவும் சிறியதாக வரையப்பட்டிருப்பது மற்றொரு குறை!//
      +1

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. @ Parani from Bangalore

      தொடர் கதைகளைப் படிக்க ஆரம்பிக்கும்போதே'ஆண்டவா எனக்கு கடந்த பாகங்களின் கதையையும் கேரக்டர்களையும் ஞாபகப்படுத்து' என்ற பிரார்த்தனையும் மனதின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொள்கிறது. என்னைப் பொருத்தவரை, கணிசமான இடைவெளியில் வெளிவரும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தொடர்களை விட, 'படிச்சு ரசிச்சோம். மூடிவைத்தோம்' ரகத்தினாலான ஒன்ஷாட் கதைகளையே அதிகம் விரும்புகிறேன்!

      Delete
    5. Erode VIJAY : //படித்த பிறகே புரிகிறது இது எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்று! //

      கதையைப் படிக்காமலே 4 மாதங்களுக்கு முன்பாக ஒரு அவசரத்தில் தலைப்புகளை வைத்து விட்டு - பின்னாட்களில் அவை பொருத்தமானவைகளாக அமையும் போது 'க்ளோஸ்-அப்' பற்பசை விளம்பரமே நினைவுக்கு வருகிறது !

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  52. இந்த நல்லநேரத்தில் ஒரு டவுட்டு... ஷெல்டன் கதையின்படி பிணைக்கைதிபோல துப்பாக்கி முனையில் இருவர் நடுவில் உட்கார்ந்து போஸ்கொடுப்பது மார்ட்டின் லெக்ரெட்தானே.. ஷெல்டன் இல்லையே.. ஆனால் அட்டையில் ஷெல்டன் அந்த இடத்தில் உட்கார்ந்திருப்து ஏதேனும் மிஸ்டேக்கா?

    ReplyDelete
    Replies
    1. உங்க யூகம் சரிதான்! இந்த கதையில் கானகத்தின் நடுவே ஷெல்டன் பயணிக்கும் ஒரு ஸ்டில் தான் நமது NBS பின் அட்டையில் உள்ள ஓவியம்!

      Delete
    2. Btw, இந்த மாத ஷெல்டன் நல்ல எண்டர்டெய்னிங் கதை. ஒரே பாகத்தில் முடியும் சிறிய சாகசம் என்பதால் ஸ்ட்ரெய்ன் பண்ணாமல் படிக்க உதவியது.

      Delete
    3. உங்க யூகம் சரிதான்! இந்த கதையில் கானகத்தின் நடுவே ஷெல்டன் பயணிக்கும் ஒரு ஸ்டில் தான் நமது NBS பின் அட்டையில் உள்ள ஓவியம்!

      Delete
    4. என்னை பொறுத்தவரை ஷெல்டன் கதைகள் என்றுமே ஒரு நல்ல entertainment தான், சொல்ல போனால் லார்கோவை விட இவர் கதைகள் எதுவும் சோடை போனதில்லை!

      Delete
    5. Ramesh Kumar & Parani from Bangalore: 'ராப்பரில் நாயகரை இடம் பெறச் செய்வோமே' என்ற சிந்தனையில் படைப்பாளிகள் ஒரிஜினல் டிசைனில் ஷெல்டனை மண்டிக்கால் போட வைத்துள்ளனர் ! நம்மூரில் ஜெயிலுக்குப் போகும் முன்னே சிரித்த முகமாய் போஸ் கொடுக்கும் பிரமுகப் பாணியை நம் ஓவியர் தன பங்குக்குப் புகுத்தி விட்டுள்ளார் ! அவ்வளவே ! :-)

      Delete
  53. ஷெல்டன்: விறுவிறுப்பான கதை ஆனால் முடிவு சப்பென்று ஆகி விட்டது.

    XIII: வரலாறு குறிப்புகள் நிறையே பக்கத்தை ஆக்கரமித்தாலும் கூட, விறுவிறுப்பு சற்றும் குறைய வில்லை. க்ரீன்பால்ஸ் எனக்கும் கூட பிடித்த இடமாகி விட்டது. க்ரீன்பால்ல்ஸ், பாகம் 6 & 7 இல் வந்ததாக நியாபகம், ஆனால் இப்போது அந்த ஊரின் பெயரை படிக்கும் போது கூட பாகம் 6 & 7 இல் வந்த க்ரீன்பால்ஸ் நிகழ்வுகள் நினைவில் சுலபமாக வந்து விடுகிறது. இது வரை வந்த பாகங்களில், இந்த இரு பாகம் தான் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. XIII இன் வம்ச வரலாறு and அவர் தேடி அலைந்த நினைவுகள் திரும்புவதால் மனதை இந்த பாகம்கள் ஆக்கரமித்து விட்டது என்று நினைக்கிறன். XIII கூடவே சேர்ந்து இத்தனை வருடம் அவருடன் சேர்ந்து பயணித்த நானும், நினைவு தேடல் படலத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து விட்டதாலும் பிடித்து இருக்கிறது. இறுதி பாகம் எப்போ வரும் என்று மனம் ஆவலுடன் எதிர்பார்கிறது

    SPIDER: சபாஷ்! காமிக்ஸ்கே உரிய கோட்பாடுகள் and fantasy, நம் வலை மன்னனின் கதையை படிக்கும் பொது தான் முழுதாக உணர முடிகிறது. என்ன தான் எதார்த்தமான கதைகளங்களில் லார்கோ, ஷெல்டன், கிராபிக் நாவல்கள் அசத்தினாலும், குற்ற சக்கரவர்த்தியோடு பயணிக்கும் போது தான் காமிக்ஸ் வாசிப்பு முழுமை அடைவதாக உணர்ந்தேன் நான். ரசித்து நிதானித்து படித்தேன். என் மகன், நான் படிக்கும் போதே கதை சொல்ல சொல்லி என்னை நச்சரிச்சு என்னுடனே என் மூலமாக அவனும் கதையை உள் வாங்கி கொண்டான். அவனுக்கு frame by frame விளக்கி கதை சொல்லும் போது என் மனதில் பேரானந்தம் உண்டானது. சீக்கிரமே அவனும் காமிக்ஸ் உலகினில் வந்து விடுவான் என்று நம்பிக்கை வந்து விட்டது. Again Spider ஐ களமிறக்கி விட்டதற்கு ஆசிரியர்கு நன்றிகள் பல. குறிப்பு: பிரளயத்தின் பிள்ளைகள் கதையை கூட அவன் ஆர்வத்துடன் கேட்டு அறிந்து கொண்டான்.

    இந்த மாதத்தின் புத்தகங்களில், எல்லா விதத்திலும் XIII என்னை கவர்ந்து இருந்தாலும், என் ஆதர்ச நாயகன் குற்ற சக்கரவர்த்திகே முதலிடம்.

    ReplyDelete
    Replies
    1. ///அவனுக்கு frame by frame விளக்கி கதை சொல்லும் போது என் மனதில் பேரானந்தம் உண்டானது. சீக்கிரமே அவனும் காமிக்ஸ் உலகினில் வந்து விடுவான் என்று நம்பிக்கை வந்து விட்டது.///

      சூப்பர்! :)

      Delete
    2. Dasu Bala : குட்டீஸ்களுக்குக் கதை சொல்லுவது ஒரு சுகானுபவம் ; அதற்காகவேனும் ஸ்பைடர் பயன்பட்டமைக்கு சந்தோஷம் ! உங்களுக்கும் கதை பிடித்திருந்தது தான் highlight !!

      Delete
  54. அம்பின் பாதையில் படங்கள் ஒவ்வொன்றும் போட்டோ போல இர்ருக்கிறது. பெட்டி மற்றும் அன்னிக்கா சூப்பர் .×1111ம் அழகுதான் .:-) மிக அருமையான வரலாற்று தகவல்களோடு ஒரு நிறைவான புத்தகம்.

    ReplyDelete
    Replies
    1. RAMG75 : //பெட்டி மற்றும் அன்னிக்கா சூப்பர் //

      ஆஹா !! Lt. ஜோன்ஸ் அங்கே பன்சிஸ்தானில் ஜெயிலுக்குள் பிணைக்கைதியாகக் கிடக்கும் கவலை துளியும் இல்லாது இங்கே பாராட்டு மடலா ?!! நடக்கட்டும்..நடக்கட்டும் !

      Delete
  55. சார் எனது அனுபவத்தில் சொல்கிறேன். நாம் செய்யும் நல்ல விஷயங்களை பாராட்ட சிலருக்கு தெரியாது அது பொறாமையினால் கூட இருக்கலாம். அதுவே நாம் செய்யும் சிறு தவறுகளை கூட பெரிதாக்கி பார்ப்பவர்கள் அதனால் நம்மை சிறுமைபடுத்த நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்லதுக்கு காலமில்லை என்று சும்மாவா சொன்னார்கள் இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
    Replies
    1. R.Anbu : //இதுவும் கடந்து போகும்//

      கடந்தும் போய் விட்டது நண்பரே ! :-)

      Delete
  56. காலையில் தங்களது பதிவைப் படித்தவுடனே இதை சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்...வெளியே செல்ல வேண்டிய காரணத்தினால் ஒரு சின்ன reply யை மட்டும் போட்டுவிட்டு சென்றுவிட்டேன்....

    இதோ என்னுடைய மொக்கை starts,

    நானும் கூட சில சமயம் நமது சில காமிக்ஸ்களின் அச்சுத்தரத்தைப் பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன்...'என்னடா இது printing இவ்வளவு கேவலமாக இருக்குதே' ன்னு தங்களின் மீது கோபம் கூட பட்டிருக்கிறேன்...

    ஆனால், இது எல்லாம் போன சென்னை புத்தகத் திருவிழா வரை மட்டுமே...ஏனென்றால் போன சென்னைப் புத்தகத் திருவிழாவினில் ஒரு பெரீய ஸாரி மிகப்பெரிய நிறுவனத்தின் மிக பிரபலாமன புத்தகம் ஒன்றை வாங்கினேன்...
    அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களையும் பார்க்கும் பொழுது அப்படியே பத்திக்கிட்டு வந்துச்சு...அப்படியொரு மோசமான 'printing' தரத்திலிருந்தது அந்த புத்தகம்....

    ஏன் உதாரணமாக நமது 'விகடன்' நிறுவனம் வெளியிடும் புத்தகங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன்...
    ரூ.80,100,120 etc.விலையில் 100,150 பக்கங்கள் விற்கும் புத்தகங்களின் அச்சுத்தரம் அப்படியே கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போலிருக்கும்...அவ்வளவு அருமையாக இருக்கும்....

    ஆனால், அதே விகடனின் 'இயர் புக் 2015' புத்தகத்தைப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும்....இந்த புத்தகத்தின் தரம் நல்லாயிருக்கும்... ஆனால், மேலே அவர்கள் வெளியீட்டுள்ள புத்தகத்தின் பேப்பர் தரத்திற்கோ அச்சுத்தரத்திற்கோ பக்கத்தில் கூட வர முடியாது...

    இதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் அதிகப் பக்கங்கள் கொண்ட இந்த நல்ல புக்கை (விகடன் இயர் புக் 2015) அனைவரிடமும் சென்று சேர்க்க வேண்டும் என்கிற ஒரே காரணித்தினால் அவர்கள் சின்னதாக அச்சுத்தரத்திலும்,பேப்பர் தரத்திலும் compromise செய்து கொள்ள வேண்டியிருக்கிறது...

    அப்பேர்ப்பட்டவர்களுக்கே அந்த நிலைமையெனில்,' கரணம் தப்பினால் மரணம்' என்று உள்ள நிலையிலும் தொடர்ந்து காமிக்ஸ் வெளியிட்டு வரும் உங்களை அச்சுத்தரம் சரியில்லை என்கிற ஒற்றை விஷயத்துக்காக ஏன் குறை கூற வேண்டும் என்று அமைதியாக இருந்து விட்டேன்...

    ஆனால், அதற்காக நமது அச்சுத்தரதைக் குறை சொல்லும் நண்பர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியாது...அதனால் தான் குறை கூறுகிறார்கள் என்று நான் சொல்ல வரவில்லை...
    நமது காமிக்ஸின் அச்சுத்தரம் பற்றிய நமது வாசகர்களின் (நண்பர்களின்) ஆதங்கம் , நிச்சயமாய் நமது காமிக்ஸின் தரத்தில் எந்த வகையிலும் குறை வந்து விடக்கூடாது என்றும், நமது காமிக்ஸ் மீது கொண்டுள்ள காதலின் வெளிப்பாடு தான் என்பதும் தாங்கள் அறியாதுதல்ல...

    நண்பர்களும் ரொம்ப நாள் மனதிலிருந்ததைக் கேட்டுவிட்டார்கள்...அதற்கு மனம் திறந்து நீங்களும் நீண்ட பதில் அளித்து விட்டீர்கள்...
    இப்பொழுது எங்களின் மனமும், உங்களின் மனமும் ரொம்ப relax ஆக உள்ளது போல் feel பண்ணுகிறேன்....

    அது உண்மையாயின், வெகு விரைவில் இங்கே தங்களின் புதிய மகிழ்ச்சியான பதிவு ஒன்றைக் காண ஆவலுடன் காத்துள்ளோம்...

    ReplyDelete
    Replies
    1. விகடன் புத்தகங்கள் மிக மிக மெல்லிய தாளில் பிரிண்ட் செய்யப்படுகிறது. 110 பக்க புத்தகம் 175 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதோடு compare செய்தால் நம் புத்தகங்கள் 400க்கு குறைவில்லாமல் விற்கலாம்.

      Delete
    2. @RAMG75:
      நன்றாகச் சொன்னீர்கள் நண்பரே!!!
      அதுவும் எல்லாப் பக்கங்களும் முழு வண்ணத்தில், அதுவும் ஆர்ட் பேப்பரில் ரூ.120 விலையென்பது நமது ஆசிரியருக்கு மட்டுமே சாத்தியம்...

      Delete
    3. அன்புத் தம்பி சத்யாவின் எழுத்துக்கள் அருமை அண்ணனை( அது நான் தான்!) உவகை கொள்ளச் செய்கிறது!
      தம்பி உடையான் படைக்கு அஞ்சானி!

      Delete
    4. @Erode VIJAY Anna:
      //அண்ணனை( அது நான் தான்!)//
      நல்லாச் சொன்னீங்க போங்க... நீங்க எனக்கு அண்ணன்னு...உங்களுக்கெல்லாம் அறிமுகம் தேவையா என்ன...

      சமீபத்தில் நடந்து முடிந்த சென்னைப் புத்தகத் திருவிழாவினில் நமது ஸ்டாலில் சனிக்கிழமை இருந்த போது, புதியாய் பார்த்துக்கொண்ட காமிக்ஸ் நண்பர்களிடம் நான் தான் 'சத்யா' என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்...

      சொல்லி வைத்தார்போல் அனைவரும் எந்த 'சத்யா' என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்...நம்ம blog ல கூட அடிக்கடி comments போடுவனே அந்த 'காங்கேயம் சத்யா' என்றும் சொல்லிப் பார்த்தாச்சு...ம்ஹூம்...
      இத்தனைக்கும் நம்ம blog ல இருக்கறதே நானும் இன்னொரு 'சத்யா (சத்யாவுக்கு காமிக்ஸும் பிடிக்கும்....)' வும் தான்...

      சரி நமக்கு reach இவ்வளவு தான் போல ன்னு விட்டுட்டேன்...

      ஆனா அடுத்த நாள், டெக்ஸ் மாம்ஸ் ன்னு நினைக்கிறேன்..இவர் தான் 'சத்யா', அதாவுது நம்ம விஜய் blog ல சொல்லுவாருல அந்த 'அன்புத் தம்பி சத்யா' ன்னு அறிமுகப் படுத்தி வெச்சாரு...உடனே எல்லாரும் நல்லா கை குலுக்கி நன்றாகத் தெரிந்த ஒரு நண்பனைப் போல் பேசவும் பழகவும் ஆரம்பித்துவிட்டார்கள்...

      ஆஹா...இப்பத்தான்யா நம்மள இவங்களுக்குத் தெரிய வருதுன்னு ரொம்ப சந்தோஷமடைந்தேன்...நிஜமா அன்னைக்கு 'அன்புத் தம்பி' ங்கிற வார்த்தைக்காக உங்ககிட்ட நேரடியா சொல்லல, ஆனா மனசுக்குள்ள ஒரு தேங்ஸ் சொல்லிக்கிட்டேன்...

      அதே மாதிரி, யாரை எப்படி அறிமுகப்படுத்தி வெச்சா மத்தவங்களுக்கு டக்குன்னு ரீச் ஆகும்கிறதையும் தெரிஞ்சுக்கிட்டேன்...
      Thnks Vijay Anna n Tex Maams :)

      Delete
    5. அடடே! 'அன்புத் தம்பி'க்குப் பின்னால் இப்படியொரு வரலாறா!!
      வெறும் 'விஜய்' என்று மட்டும் இங்கே பின்னூட்டமிட்டிருந்தால் எனக்கும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும். என் பெயருக்கு முன்னால் 'ஈரோடு'ம், புரொஃபைல் பிக்கசரில் பூனைகளும் உதவின! முடிந்தால், தம்பி சத்யாவும் இது போன்ற ஏதாவதொன்றை முயற்சிக்கலாம்! :)

      Delete
    6. Sathiya : விலை / விற்பனை சம்பந்தப்பட்ட கட்டுப்பாடுகள் / சிரமங்கள் நமக்குத் தான் என்றில்லை ; நிறைய பதிப்பகங்களுக்குமே உண்டு தான் ! So அவர்களது ground realities என்னவென்று அறிந்திருக்கா நிலையில் விமர்சிப்பது சரியாகாது !

      இணையத்தின் வருகைக்குப் பின்னே பதிப்பகத் துறையே ஒரு நோஞ்சான் பிள்ளையாகிப் போய் விட்டதால் - அது யார் வீட்டுப் பிள்ளையாய் இருந்தாலும் கொஞ்சம் அனுசரணையோடு பார்த்துக் கொள்ளத் தேவையாகிறது !

      Delete
  57. எனவே இதை பற்றி எல்லாம் பதிவு போடாமல் காமிக்ஸ் பற்றிய செய்திகளை மட்டும் தெரிவியுங்கள்

    ReplyDelete
  58. அன்புள்ள ஆசிரியர் உங்களுடைய இந்த பதிவின் விளக்கம் தெளிவாகவும், போன பதிவிலேயே அஹமத பாஸாவிற்கு அளித்த விளக்கம் சிறிதளவும் புரியத்தான் செய்தது.

    ஆனால் இந்த விவாதத்திற்கு வேரொருவர் அளித்த விளக்கம் அவர் தற்பெருமையை மட்டுமே வெளிப்படுத்தியதே தவிர அந்த விளக்கத்தின் பயன் என்ன? இதில் கீழே ஒரு பின்னூட்டத்தில் ''அடபோங்கய்யா'' என்று தெனாவெட்டான நக்கல் வேறு. இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை ?!

    ஆனால் உறுதியாக ஒன்று தெரிகிறது நண்பரின் அதி மேதாவித்தனம் என்ற கற்பனை கோட்டையும், மற்றவர்களை இளக்காரமாக நக்கல் செய்யும் குணமும் அதிவிரைவில் இந்த தளத்தில் அடித்து துவைத்து காயப்போடப்படும்.

    ReplyDelete
    Replies
    1. அடியாத்தாடி, பகிரங்க மிரட்டல்! பயமால்ல இருக்கு! :-))

      இப்ப பார்த்தா நான் இங்கு வருவதை குறைத்துக்கொண்டிருக்க வேண்டும். உங்களுக்காச்சும் அடிக்கடி வரமுயற்சிக்கிறேன் மீரான்.

      Try.. if you can!! :-))

      Delete
    2. வடிவேல் மாடுலேஷன்ல்ல சும்மா பின்னுரீங்களே ஆதி ! :)

      Delete
    3. @ FRIENDS : ரௌத்திரங்களை பௌன்சரும் ; சவால்களை டெக்சும் வெளிப்படுத்தும் போது ரசித்து விட்டுப் போவோமே நண்பர்களே ?! அவற்றை நாம் நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டாமே - ப்ளீஸ் ?

      Delete
    4. உங்கள் வார்த்தைகளுக்கு என்றும் மரியாதை அளிப்பவன் சார் ! என் உறவுகளையும் . நண்பர்கள் வட்டத்தையும் தாண்டி என் வாழ்கையில் தவிற்க முடியாத ஒரு நபர் உண்டு என்றால் அது நீங்கள் தான் சார் !
      உங்கள் எழுத்துகளை வாசித்து என் மனதில் ஏற்பட்டிருக்கும் உங்கள் மீதான பிம்பம் எந்த சூழலிலும் மாறிவிடக்கூடாது என்ற காரணத்தினாலேயே உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் அமைந்த போதும் தள்ளிநின்று ரசித்தவன்.
      ஆனால் நண்பர் ஆதி தன் கருத்துக்களை சிந்திப்பதில் இயலாமை ஏற்படும் போதெல்லாம் மற்றவர்களை மட்டம் தட்டி ஏளனம் செய்து வெறுப்பேற்றுகின்றார். அந்த செயலுக்கு எவ்வாறுதான் பதில் அளிப்பது ? எப்படிதான் பொருத்துக்கொள்வது ? அதனால்தான் இது எங்கே போய் முடியுமோ என்று கவலையுடன் கூறினேன். புத்தி இது போன்ற கருத்துக்களுக்கு எதிர் கருத்து பதிவதை தவறென்றே உணர்ந்துள்ளது, ஆனால் என் தன்மானத்தை அவரின் நக்கல் உரசிப்பார்ப்பதால் என்னால் எதிர்க்காமல் இருக்க முடியவில்லை. உங்கள் வார்த்தைக்கு மதிப்பளித்தவனாக இந்த விஷயத்திலிருந்து வெளியேறுகிறேன்.

      Delete
  59. எடிட்டர் சார்,

    நான் கூட, என்ன நமது சில புத்தகங்களின் பிரிண்டிங் தரம் வேறு மாதிரி உள்ளதே என்று நினைத்துள்ளேன் அனால் இங்கு அதை வெளிப்படுத்தியதில்லை. இன்று தங்களின் இந்த விளக்கங்கள் மூலம் என் போன்றோரின் சந்தேகங்களை நிவர்தி செய்ததோடு இல்லாமல் தங்களில் மேல் உள்ள மதிப்பு மேலும் உயர்ந்தது என்றே சொல்லவேண்டும்.

    மேலும் நான் எனது பாண்டிச்சேரி காமிக்ஸ் நண்பர்களிடம் அடிக்கடி ஒன்று சொல்வதுண்டு. இங்கு ஒரு பிரெஞ்சு ஆல்பம் 12 euros விலையில் விற்கப்படுகிறது. அவர்களுடைய சைஸ் நம்முடையதைவிட சற்றே பெரியது என்றாலும் பிரிண்டிங் தரத்தில் கிட்டத்தட்ட நாம் நெருங்கி விட்டோம். ஆனால் இரண்டு ஆல்பம்கள் கொண்ட (Rs 2000) நமது புத்தகத்தின் விலையோ Rs 120 . இது நிஜமாகவே சாத்தியமில்லாத ஒன்று என்று. காமிக்ஸ் மீதுள்ள காதலால் தான் தங்களால் இது முடிகிறதென்பது இப்போது கண்கூடாக தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. Radja : லட்சங்களில் விற்பனையாகும் அவர்களது ஆல்பங்களுக்கு சகலமும் சாத்தியம் ! நமக்கோ ரொம்பவே சின்ன வட்டம் ! அதற்குள்ளே டான்ஸ் ஆட வேண்டிய நெருக்கடி என்பதில் தான் சிக்கலே..!

      But இதற்குள் சாதிக்க முயற்சிப்பதும் ஒரு த்ரில் அனுபவமே !

      Delete
  60. ரொம்ப சூடா இருக்கே தளம்.!
    தப்பாச்சே.! ஒரு ஜோக் சொல்றேன்.!

    சைத்தான் விஞ்ஞானி அருமையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. கிட் ஆர்டின் நானும் உங்கள்க்கு

      ஒரு ஜோக் சொல்றேன்.!
      .
      .சைத்தான் விஞ்ஞானி அருமையாக இருந்தது.

      Delete
    2. ஜேம்ஸ் பாண்ட் கதைகளுக்கு சவால்விடும் வகையில் சைத்தான் விஞ்ஞானி கதையில் பல அட்வான்ஸான தொழில்நுட்பங்கள் உள்ளன. மிகவும் அருமையான பகுதி, 37ஆம் பக்கத்தில் இரண்டாம் கட்டம்! :D

      Delete
  61. ஒரு நோயாளி முன்பு குணமான அதே நோய்க்கு மறுமுறையும் அதே மருத்துவரிடம் அதே மாதிரியான ட்ரீட்மெண்ட் எடுத்தும் முன்பு இரண்டு நாளில் குணமான நோய் இப்பொழுது 7 நாட்க்களாகியும் குணமாகாத போது நோயாளி ஏன் தனக்கு இன்னும் நோய் குணமாகவில்லை என்று மருத்துவரிடம் கேட்கவில்லை என்றால்; என்னை பொருத்தவரை அந்த நோயாளி இன்னும் 2 அல்லது சில நாட்களில் மரணம் அடைவது நிச்சயம்.
    இதை புரிந்து கொள்ள 2 கிலோ மூளை தேவை இல்லை, தன் உடல் மீது அக்கறை இருந்தால் போதும். இப்போது யானையை யார் குருட்டு பார்வை பார்த்துள்ளார்கள் என்பது புரியும்.

    ReplyDelete
    Replies
    1. Meeraan : நோய்..மரணம்..மருத்துவர் என்றெல்லாம் வேண்டாமே நண்பரே ! ரிலாக்ஸ் ப்ளீஸ் !

      Delete
    2. @மீரான்,

      கிண்டல் பதில் தருவதானால்: ஒரே கருத்தில் என் அறிவுக்கண்ணைத் திறந்து என்னை கிழித்து தொங்கவிட்டுவிட்டீர்கள் ஐயா! I'm flat.. You won! :-)))

      உண்மையான பதில்: புரிதல் பிரச்சினைதான் இங்கே மிச்சமிருப்பது. நான் பேசிக்கொண்டிருப்பது வேறு. நீங்கள் பேசிக்கொண்டிருப்பது வேறு. என் மீது தங்களுக்கு கோபம் வந்துவிட்டதால் இனி அது புரியப்போவதும் இல்லை. சொல்லப்போனால் உங்கள் இதே கருத்து, எனது கருத்துகளில் வேறு வார்த்தைகளில் உள்ளன. அதையே மீண்டும் சொல்லி, என்னை மடக்கிவிட்டதாய் கருதுகிறீர்கள். :-)))

      விஜயன் சாரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து நீங்கள் நிறுத்திக்கொண்டுவிட்டதால், நானும் அப்படியே! இல்லாவிட்டாலும் கூட இதை எனக்குத் தொடர விருப்பமில்லை. வேறு கருத்தில், வேறு பொழுதில் சண்டை போட்டுக்கொள்ளலாம். எங்கே போய்விடப்போகிறோம்? :-))

      போங்க+ஐயா எனும் இரு மரியாதையான வார்த்தைகளை கோர்த்ததே உங்கள் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல் எனில் ‘தற்பெருமைக்காரன்’, ‘அதிமேதாவி’ என்ற சொல்லாடல் என்னை பாதிக்காதா என்பதை மட்டும் நீங்கள் சிந்திக்கலாம்!

      அதோடு சண்டை என்றால் போடுபவர் இருவரும் ஒரே சமயத்தில் ஆன்லைனில் இருந்துகொண்டு சரமாரியாக பேசவேண்டும். அப்போதுதான் சண்டை போடுபவருக்கும் அழகு, அதை வேடிக்கை பார்ப்பவருக்கும் ஒரு சுவாரசியம்! இதென்ன காலையில் ஒருவர் சொன்ன கருத்துக்கு மாலையில் பதில் தர, அடுத்த கருத்துக்கு மீண்டும் காலை வரை காத்திருப்பது? போர் இல்லையா? :-))))

      @ஈ.வி&கண்ணன்,

      சைத்தான் விஞ்ஞானியைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் அழகு. அதுவும் டைமிங் ஜோக்ஸ் குறிப்பாக, “வண்ண வண்ணப் பூக்களை” மிக ரசித்தேன். கமெண்ட் செக்‌ஷனுக்குள் வராது போனால் உங்களை நிறையவே மிஸ் செய்கிறேன் எனப்புரிகிறது. கீப் கோயிங்!

      அதோடு வெளியூரில் மாட்டிக்கொண்டுவிட்டதால் விஞ்ஞானியைச் சந்திக்க இன்னும் 10 நாட்கள் காத்திருக்கவேண்டுமே நினைக்கும்போது என் காது வாழைப்பூக்களுக்காக ஏங்குகிறது! :-))

      Delete
  62. சைத்தான் விஞ்ஞானி.:-
    நம்ம ரிப் கிர்பியோட பட்லரு டெஸ்மாண்டு, புரோமோஷன்ல சைத்தான் புரொபெசரா கலக்கியிருக்கிறார்.
    நினைத்தவுடன் தோற்றத்தை கம்பீரமாகவும் பலமுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள முடிந்த புரொபெசரால் தலையில் முடி மட்டும் வளர்க்க முடியாமல் போய்விட்டது.
    நெற்றிக் கண்ணில் கதிர்வீச்சை உண்டாக்கி எல்லாவற்றையும் பஸ்பமாக்குகிறார்.
    பல்புல கூட பலவித்தைகளை காட்டி தலைவர்களை பயங்கரவாதிகளாக மாற்றுகிறார்.
    ஸ்பைடரும் ஈக்கோலா பல மாயாஜாலங்களை செய்து தூள் கிளப்புகிறார்.
    இவிங்க ரெண்டு பேரும் வானத்துலயே எஸ் எம் எஸ் அனுப்பி சவால் விட்டுக்கிறாங்க. ரைட்டு, ஆனா சண்டை போட எதுக்கு எகிப்துக்கு போறாங்கன்னுதான் புரியல சாமி.
    டெலிபதிலயே ஹெலிகார்., கம்ப்யூட்டர்., பெல்ஹாம் ஆர்டினுன்னு அத்தனை பேரையும் கன்ட்ரோல் பண்றாரு நம்ம ஸ்பைடர்.
    ஜிஸ்மாக் கருவி,
    வேற்று கிரகம்,
    எண்டிடாயிட்ஸ்
    புரபெசர் மற்றும் ஸ்பைடர்

    அய்யகோ பூமாலைகளால் ஊரே நிரம்பி விட்டது.

    அப்போதும் சரி இப்போதும் சரி ஸ்பைடரின் மலர் சுற்றல் கதைகள் என்னை மயக்கியதே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

    (ஸ்பைடர் ரசிகர்கள் மன்னிச்சூ,...)

    ReplyDelete
    Replies
    1. ஸ்பைடரின் சில கதைகள் சற்று நம்புமளவுக்கும் (?!) சுவாரஸ்யமாகவும் இருந்தமாதிரி ஞாபகம். தவளை எதிரி - என்ற கதை இப்போது மறந்துவிட்டது, ஆனால் முன்பு வாசித்தபோது இந்தளவுக்கு பூ சுற்றல் உணர்வு இல்லாமல் நன்றாக இருந்தது.

      // டெஸ்மாண்டு, புரோமோஷன்ல சைத்தான் புரொபெசரா கலக்கியிருக்கிறார். //
      ஹா ஹா!

      Delete
    2. அடடே முட்டாள் தனமாக கதையையும் புரபெசரையும் முடிக்கும் முடான்டார்க்ஸை மறந்தே போனேன்.
      ஸாரி ஜென்டில்மென்..

      Delete
    3. சிறுவயதில் நூறுமுறைகளாவது படித்துக்களித்த கதை இது! இப்போது ஒரு முறையாவது படித்துவிடும் ஆவலில் தோதான ஒரு நேரத்திற்காகக் காத்திருக்கிறேன்; கடந்துவிட்ட பள்ளிப் பருவத்தின் எஞ்சிநிற்கும் இனிய நினைவுகளை மீட்டெடுக்கவாவது! :)

      Delete
    4. கிட் ஆர்ட்டின் KANNAN & Ramesh Kumar : அப்டிக்கா எஸ்கேப் ஆகிடலாம் முடியாது ! இன்னமும் தோட்டங்கள் பல காத்துள்ளன - வித விதமான மலர்களின் விளைச்சல்களோடு !!

      Delete
    5. //கடந்துவிட்ட பள்ளிப் பருவத்தின் எஞ்சிநிற்கும் இனிய நினைவுகளை மீட்டெடுக்கவாவது! :)//
      @ விஜய்
      அஞ்சாம் வகுப்புல நெல்லிக்கா பரிமாறிக்கிட்ட ருக்குவை , மீட்டெடுக்கப் போறீங்களா.! :)
      முடியும்னு நினைக்கிறீங்க.!
      நினைவுகள் நினைவுகளாக இருந்தால்தான் இனிக்கும் நண்பரே.!
      பால்யத்தில் ரசித்த ஒன்றை அதே அளவுகோல்களுடன் இப்போதும் ரசிக்க முடியுமா.?? (இது ருக்குவை குறித்து அல்ல.) (D) (Safety க்கு.)

      எடிட்டர் சார்,
      வரட்டும் எத்தனை லோடு மலர்மாலைகள் வந்தாலும் ஓ.கே.
      காதுகள் தயார் நிலையில் இருக்கும். (வேற வழி, மற்ற மறுபதிப்புகள் வேண்டுமே.)

      Delete
    6. கிட் ஆர்ட்டின் KANNAN @
      // எதுக்கு எகிப்துக்கு போறாங்கன்னுதான் புரியல சாமி. //
      1. அங்க ஸ்பைடர் இது வரை போகலையாம்
      2. அங்க பில்டிங் குறைவு என்பதால் போது மக்களுக்கு சேதாரம் கம்மியாகும் என்ற நல்எண்ணத்தில் தான்.

      Delete
    7. // அப்டிக்கா எஸ்கேப் ஆகிடலாம் முடியாது ! இன்னமும் தோட்டங்கள் பல காத்துள்ளன - வித விதமான மலர்களின் விளைச்சல்களோடு !! //

      சார் ஆர்ச்சியின் பனிப்பூதம் மறுபதிப்பு சாத்தியமா? எனக்கு அந்தப்பூ பிடிக்கும்! ஹா ஹா!

      Delete
  63. குறைந்தபட்சம் ஒரே ஒரு ஸ்பைடர், ஒரே ஒரு ஆர்ச்சி கதையையாவது வண்ணத்தில் பார்த்துவிட ஆசை! ஏற்பாடு செய்யுங்களேன் எடிட்டர் சார்?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அது நீண்டகால ஆசை விஜய் ......ஆல்பத்தில் அது மிஸ்ஸிங்

      Delete
    2. Erode VIJAY : ஒரு ஸ்பைடரின் சிரசாசனத்துக்கே அண்ட சராசரங்கள் ஆட்டம் காணும் போது சட்டித் தலையனும் துணைக்கா ?? ஆத்தாடி !!

      Delete
    3. //குறைந்தபட்சம் ஒரே ஒரு ஸ்பைடர், ஒரே ஒரு ஆர்ச்சி கதையையாவது வண்ணத்தில் பார்த்துவிட ஆசை! //

      ஹிஹிஹி.!

      வண்ண வண்ண பூக்கள்.

      Delete
    4. விஜயன் சார், இந்த வலைதளத்திற்கு அப்பால் உள்ளவர்கள் சொல்லட்டும் நான் நம்புகிறேன்! இந்த வலைதளத்தில் உள்ள (குறைந்த அளவு) நண்பர்கள் சொல்லவதைவைத்து வலைமன்னனை எடை போடுவது கள்ளாட்டம்.

      Delete
    5. பரணி சார் ,
      இப்படியே. ஆசிரியரை உசுப்பேத்தி
      வலைமன்னனை மீண்டும் துப்பாக்கியுடன் நீச்சல் டிரஸ்ஸில் வரவைத்து விடாதீர்கள் ....
      செத்திடுவோம் ....

      Delete
    6. // AHMEDBASHA TK // வலைமன்னன் வரணும் தொடர்ந்து வரணும்.. வருவார் அவர் கண்டிப்பா வருவார்! (சத்திரியன் பட வில்லன் மொடுலசன்ல படிங்க!)

      Delete
    7. //வலைமன்னனை மீண்டும் துப்பாக்கியுடன் நீச்சல் டிரஸ்ஸில் //

      :D

      Delete
    8. // ஒரு ஸ்பைடரின் சிரசாசனத்துக்கே //
      அவர் ஒரு யோகா மாஸ்டர் என்பது இத பார்த்தாவது புரிஞ்சுகொங்க! இந்த மாதிரி பல நல்ல விஷயம்களை அவர்ட இருந்துகத்துக்கலாம்.

      Delete
  64. Replies
    1. விஜயன் சார், எனக்கு இந்த மாத புத்தகம்கள் வழக்கம் போல் 3 நாட்கள் தாமதமாகத்தான் வந்தன, அவற்றில் முதலில் படிக்க முடிந்தது ஷெல்டன் கதை. மற்ற இரண்டு கதைகளை வரும் வாரம் ஆபீஸ் செல்லும் போது பஸ்சில் படிக்க வேண்டும். எனவே விமர்சனம் தாமதம், வழக்கம் போல்!

      Delete
  65. டியர் எடிட்டர் சர்ர் ,
    உங்களுடைய பதிவில் அந்த பூனையை எடுத்து விடுங்கள் ஸர்ர் பிளீஸ்? அதன் கண்கள் என்னை என்னவோ பண்ணுகின்றன என்பது நிஐம்.

    ReplyDelete
  66. இந்த மாதப் புத்தகங்களின் அட்டைப்படங்களைப் பொறுத்தவரை பார்த்தவுடனே ஸ்தம்பிக்கச் செய்தது - அம்பின் பாதையில்! அந்த நீல வண்ணமும், டார்ச் வெளிச்சம் வரையப்பட்ட விதமும் - அம்மாடி!!

    இரண்டாவது இடம் - ஸ்பைடருக்கு! கொள்ளை அழகு!

    மூன்றாவது இடம் - ஆதலினால் காதல் கொள்ளாதீர்!

    ReplyDelete
    Replies
    1. முதல் இடம் - ஸ்பைடருக்கு
      இரண்டாம் இடம் - அம்பின் பாதையில், ஆனால் இதனை இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம், நமது பௌன்செர் அட்டைபடம் போல! இந்த வருடத்தில் மிகவும் கவர்ந்த அட்டை படம் பௌன்செர்.. பௌன்செர்.. பௌன்செர்...
      மூன்றாவது இடம் - ஷெல்டன் கதை

      Delete
  67. விஜயன் சார், மறுபதிப்பு கதைகளுக்கு புதிய மொழி பெயர்ப்பு என்பது தேவை இல்லை என்பது எனது கருத்து, அப்படி செய்வதாக இருந்தால் மற்றவர்கள் செய்வதை விட அதனை நீங்கள் செய்வது நலம்! ஏற்கனவே மொழி பெயர்த்த கதை என்பதனால் இதற்கு நீங்கள் செலவிடும் நேரம் குறைவு, மற்றும் இன்னும் சிறப்பாக வரலாம்.

    ReplyDelete
    Replies
    1. +1

      சூப்பர் ஐடியா!

      புதிதாய் மொழிபெயர்க்கவேண்டும் என்ற அவசியம்கூட இல்லை! வசனங்களை இப்போதைய ட்ரெண்ட்டுக்குத் தகுந்தாற்போல கொஞ்சம் மாற்றியமைத்தால்கூட போதும்!

      Delete
  68. No worries Sir.
    you are doing a great job.
    No one have rights to asking questions to you.
    You have rights to do anything.

    ReplyDelete
  69. XIII - the mayflower series not very interested as like as the previous series.
    Anyway xiii always rocking.

    ReplyDelete
  70. //அதே போல முகவர்களுக்கு அனுப்பப்படும் பிரதிகளையும் இனிமேல் கால்களில் வெந்நீர் ஊற்றிய பாணிகளில் அனுப்பிடாது 2 நாட்களின் அவகாசத்தின் பின்னதாக - முழுமையாகக் கை பார்க்கப்பட்ட பின்னரே அனுப்பிடவிருக்கிறோம் ! //

    good decision edit sir! extend this is decision for online purchases also. its late decision and expected as part of your subscription announcement !

    if not here where to express. its here we express. when the 3d print occupies most part of our brain its impossible for us to indicate it to focus on story some times forgive our friends if they used harsh words. beside your explanation Edit we understand that you also understand bad print quality not making any one proud.

    thanks for your explanation edit sir, its quite a long post but you could have ignored and pass on, but you decided other end. thanks edit sir.

    i dont have to write about that we/I always stand by Lion brand as always did!

    ReplyDelete
  71. 2 doubts:

    when will "Tanga kakllarai" getting listed online?
    when are you going to announce pricing for new books (comics special, muthu special) its better if you announce it earlier its better for me to prepare Edit sir.

    ReplyDelete
    Replies
    1. Hello Satish
      For now "Thanga Kallarai" is available in townhall shops
      This week we might get "Wild West Special" also

      Delete