Powered By Blogger

Thursday, September 13, 2012

சலாம் பெங்களுரு !!

நண்பர்களே,

வணக்கம். சிவகாசியில் இரு பெரிய அம்மன் கோவில்கள் இருப்பதால், ஒவ்வொரு கோடையிலும், ஒன்றுக்கு இரண்டாகத் திருவிழாக்கள் நடந்தேறுவது வழக்கம். பள்ளி ஆண்டு விடுமுறைகளை ஒட்டிய ஏப்ரலில் ஒன்றும், மே மாதம் இன்னொன்றும் என எங்களது சிறு வயதுக் குதூகலங்கள் இந்தத் திருவிழாக்களின் வருகையைச் சுற்றியே இருந்திடுவது வழக்கம். முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அந்த அப்பட்டமான சந்தோஷத்தை ; கலப்படமில்லாக் குதூகலத்தை ; கடந்த சனி & ஞாயிற்றுக் கிழமைகள் உணர்ந்திடும் ஒரு ஆச்சர்ய அனுபவம் நமது பெங்களுரு COMIC CON திருவிழாவின் புண்ணியத்தில் கிட்டியது !



பெரிதானதொரு எதிர்பார்ப்பையோ  ..ஏராளமான பிரதிகளையோ சுமந்து செல்லாமல், ரம்யமான பெங்களுருவில் சனி காலையில் நானும், எனது புதல்வன் விக்ரமும், நமது காமிக்ஸின் "பிரபல முகமும், குரலுமான" எங்களது விற்பனை மேலாளர் ராதாகிருஷ்ணன் சகிதம் இறங்கிய போதே நமது வாசக நண்பர்களின் தொலைபேசி அழைப்புகள் துவங்கிட்டன! ராதாகிருஷ்ணனின் கைபேசி எண் நிறைய நண்பர்களுக்குப் பரிச்சயம் என்பதால், ஆர்வமான வினவல்கள் ; விசாரிப்புகள் என்று காலை 9 மணிக்கு முன்னதாகவே களை கட்டத் துவங்கியது ! நிகழ்ச்சி நடந்திடும் கோரமங்களா ஸ்டேடியத்திற்கு வழி கண்டு பிடித்து   ஒன்பது மணிக்கு அங்கே ஆஜராகிய போது, பெரிய , பெரிய டெம்போக்களிலும்  வேன்களிலும், இதர பங்கேற்பாளர்களின் சரக்குகள் வந்து இறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திட முடிந்தது ! காலை பத்து மணிக்கு மேல் திருவிழா துவங்கிடவிருக்க , தத்தம் ஸ்டால்களைத் தயார்படுத்திட    ஒன்பது மணிக்கு அனுமதி தந்திட்டார்கள். மெள்ள அரங்கினுள் நுழைந்தால், அங்கே பரிச்சயப்பட்டதொரு முகம் நம்மை வரவேற்றிட நின்றது ! அதிகாலையே பெங்களுரு வந்துவிட்டதாகவும், இங்கே அரங்கு வாயிலில் எட்டு மணிக்கெல்லாம் வந்து 'தேவுடு ' காத்திருப்பதாகவும் நமது வாசக நண்பர் சொல்லிய போது அவர்தம் முகத்தில் அயற்சியினைப் பார்த்திட முடியவில்லை ; மாறாக கொப்பளிக்கும் உற்சாகமே தெரிந்தது ! நமக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஸ்டால் எண் B17  சிறிதென்ற போதிலும் நல்லதொரு இடத்தில அமைந்திருந்தது ! 'விறு விறு' வென்று எங்கள் பணியாளர்கள் நாங்கள் கொண்டு வந்திருந்த போஸ்டர்கள் ; பெரிய banner ஆகியவற்றை ஸ்டாலில் ஒட்டிடத் தயார் ஆக, வரிந்து கட்டிக் கொண்டு நம் நண்பரும் செயலில் இறங்கினார் ! 

பத்தே நிமிடங்களில் நமது ஸ்டால் 'பளிச்' என்று காட்சியளித்தது ! வரவிருக்கும் "தங்கக் கல்லறை " அட்டைப்படத்தின் blowup ; மையமாய் சூ.சூ.Spl -ன் (முழுவதும் பூர்த்தி செய்யப் படாத ) முன்பக்க டிசைன் ; நமது நாயகர்களின்  ஒரு குட்டி அறிமுகம் கொண்ட நான்கு பக்க போஸ்டர் - ஆங்கிலத்தில் ; இரத்தப் படல முழுத் தொகுப்பின் அட்டைப்பட blow up ; WILD WEST ஸ்பெஷலின் blowup என்று  நமது ஸ்டாலின் சுவர்கள் சுவாரஸ்யமாகவே தெரிந்ததாக எனக்குப் பட்டது !  


பக்கத்தில் கடை போடத் துவங்கிக் கொண்டிருந்த இதர பங்கேற்பாளர்களை பராக்குப் பார்க்க அரங்கத்தை ஒரு ரவுண்ட் அடித்தேன் ! காமிக்ஸ் பதிப்பகங்கள் ; விற்பனையாளர்கள் மட்டுமென்று இல்லாது,  t -ஷர்ட் விற்பனை மையங்கள்  ; காமிக்ஸ் தொடர்புடைய பொம்மைகள், விளையாட்டுப் பொருட் விற்பனை நிலையங்கள்  ; அரிய காமிக்ஸ் சித்திரங்களின் சேகரிப்பைக் கொண்டதொரு கடை ; காமிக்ஸ் ஓவியர்கள் பயன்படுத்திடும் பல்வேறு சித்திர சாதனங்களின் விற்பனைக் கூடம் ; சர்வதேச அளவில் காமிக்ஸ் ; அனிமேஷன் போன்ற கலைகளில் பயிற்சி தந்திடும் பள்ளிகளின் ஸ்டால்கள் என்று காமிக்ஸ் தொடர்புடைய சங்கதிகளாய் அரங்கமே நிறைந்திருந்தது நிறைவாக இருந்தது ! "நானொரு காமிக்ஸ் காதலன் " என்று சொன்னால், "ஆஹா..நேற்று வரை பயல் நல்லா தானே இருந்தான் ?" என்ற பாணியிலான பார்வைகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு இங்கே நிச்சயமிருக்காது என்ற உணர்வு ; தொடர்ந்து இங்கே ஆஜராகப் போகும் ஒவ்வொருவரும் காமிக்ஸ் எனும் சுவையை நேசிக்கும், சுவாசிக்கும் அன்பர்களாகத் தான் இருப்பார்கள் என்ற realisation ஒரு இனம் சொல்ல இயலா இதத்தை தந்தது ! 


மணி பத்து அடிக்கும் போது வேக நடையாய் நம் வாசகர்கள் ஒருவர் பின் ஒருவராய் அங்கே பிரசன்னமாக (!) எனக்குள் சின்னதாய் ஒரு நம்பிக்கை துளிர் விடத் துவங்கியது ! நான் ஏற்கனவே எழுதி இருந்தது போல,   அசாத்தியமான விற்பனையை எதிர்பார்த்தெல்லாம் நாங்கள் COMIC CON -க்குப் புறப்பட்டிருக்கவில்லை ! மாறாக, நமது இரண்டாவது வருகையின்   தொடர்ச்சியாக ; இந்த வலைப்பதிவில் நாம் எண்ணப் பரிமாற்றங்கள் செய்திடத் துவங்கியதன் தொடர்ச்சியாக - வாசக நண்பர்களை சந்திக்கவும், அவர்தம் கருத்துக்களை அறிந்திடவும் இதுவொரு platform ஆக அமைந்திட வேண்டுமே என்ற அவா மட்டுமே என்னுள் மேலோங்கி நின்றது ! அரங்கம் முழுவதிலும் தமிழ் முகங்கள் நம்மது மாத்திரமே என்பதால், நம்மை சந்தித்திட வருகை தரும் நண்பர்களை சுலபமாய் அடையாளம் காண முடிந்த போது எனது எதிர்பார்ப்பு பொய்க்காது என்று புரிந்தது ! 

மிகச் சின்ன அவகாசத்திற்குள் நம் ஸ்டால் செம பிஸியாகி விட்டது ! பெங்களுருவில் வசிக்கும் ; பணி புரியும் நண்பர்கள் ; தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிரத்யேகமாக இதற்கெனவே ஒரு ட்ரிப் அடித்திருந்த அன்பர்கள் என்று ஒரு காமிக்ஸ் காதல் குழுமம்  அங்கே சற்றைக்கெல்லாம் உருவாகி விட்டிருந்தது ! ஒவ்வொருவரின் முகத்தில்  தாண்டவமாடிய சந்தோஷமும், கண்களில் தெரிந்த ஒளியும், எவ்வித சந்தேகமும் வைத்திடவில்லை - நம் இதழ்களின் மீது அவர்களுக்குள்ள நேசத்தினைப் பற்றி !!

ஒவ்வொருவரும் சரவெடியாய்க் கேள்விகளைத் தொடுத்தனர் !!


  • சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் எப்போது ? நிச்சயம் வருகிறது தானே ? 
  • மறுபதிப்புகளில் மாயாவி உண்டா ? 
  • வண்ணத்தில் மறுபதிப்பு போடுவீர்களா ?
  • "மின்னும் மரணம்" வண்ணத்தில் திரும்பவும் போடலாமே ?
  • மினி லயன் எல்லாவற்றையும் மறுபதிப்பு போட்டே தீர வேண்டும் !
  • டெக்ஸ் வில்லர் ஏன் ஆளைக் காணோம் ?
  • மாண்ட்ரேக் கதைகள் ஏன் வருவதில்லை இப்போதெல்லாம் ?
  • நமது சர்குலேஷன் இப்போது எவ்வளவு ?
  • ஜான் ஸ்டீல் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ஆனதன் ரகசியம் ?
  • இரத்தப் படலம் முழுவதையும் வண்ணத்தில் மறுபதிப்பு முடியுமா ?
  • கிராபிக் நாவல் என்றால் என்ன ? இது அடிக்கடி வருமா ? 
  • ஸ்பைடர் கதைகளை ரசிக்க அப்படி என்ன பெரிய பிரச்னை ?
  • "கார்சனின் கடந்த காலம் " reprintபோடாமல் விட்டுடாதீங்க !!
  • கேப்டன் டைகர் கதைகளின் குறைபடிப் பாகங்களை எப்போது நிறைவு செய்வதாக திட்டம் ? 
  • இரும்புக்கை எத்தனின் இறுதிப் பாகங்கள் ???
  • புதிதாய் என்ன கதைகள் வரப் போகின்றன ?
  • இந்தப் புது பாணிக்கு வரவேற்பு எப்படி உள்ளது ?
  • மறுபதிப்புக்கு ஏன் இவ்வளவு தயக்கம் ?
  • வேதாளரின் புதிய கதைகளை ஏன் போடக் கூடாது ? 
  • சூ.ஹீ .சூ .Spl வண்ணத்தில் போட முடியாதா ?
  • திகில் ஆரம்ப இதழ்களை தொடர்ந்து மறுபதிப்பு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள்   ?
  • கபிஷ் ; இன்ஸ்பெக்டர் கருடா போன்ற கதைகளை ஏன் போடுவதில்லை இப்போதெல்லாம் ? 
  • வாண்டுகள் படிப்பதற்காக முந்தைய ஜூனியர் லயன் பாணியில் ஏதாச்சும் வெளியிட்டால் என்ன ? 
  • டைகர் digest  ; பிரின்ஸ் digest ; சிக் பில் digest என்று தனித்தனியாய்ப் போட்டால் என்ன ? 
  • NEVER BEFORE ஸ்பெஷல் ஜனவரியில் நிச்சயமா ?

லக்கி லூக்கின் தோட்டாக்களின் வேகத்திற்கு வந்து விழுந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியது ஒரு நிஜமான சுவாரஸ்ய அனுபவம் ! நிறைய நண்பர்கள்  நமது காமிக்ஸ்களைப்  படிக்கத் துவங்கிய காலகட்டங்களைப் பற்றிச் சொல்லியவாறே சுகமாய் பின்னோக்கிப் பயணித்ததைப் பார்த்திட முடிந்தது ! அப்போது திடுமென இன்னொரு சென்னை நண்பர் அங்கே ஆஜராகினார்  - கௌபாய் தொப்பியும், பெல்ட்டும் சகிதமாய்...முன்பக்கத்தில் டெக்ஸ் வில்லரின் படமும் , பின்னே கேப்டன் டைகரின் ப்ரிண்டும் போடப்பட்டதொரு T -ஷர்ட் அணிந்து ! 

பேசிக்கொண்டே நமது புது இதழை (WILD WEST Spl ) நம் நண்பர்களுக்கு நான் வழங்கிட, செல்போன் காமராக்களும் ; டிஜிட்டல் காமராக்களும் ஆங்காங்கே பளிச்சிட்டன ! எனது கல்யாணத்தின் போது கூட யாரும் என்னை இத்தனை போட்டோக்கள் எடுத்ததாய் எனக்கு நினைவில்லை !  எப்போதுமே spotlight -ஐத் தவிர்ப்பதில் ஆர்வமாய் இருந்திடும் எனக்கோ , நண்பர்களின் உத்வேகத்தைப் பார்த்திட்ட போது 'நோ' சொல்லிட இயலவில்லை ! இந்த இரு நாள் திருவிழாவில் நான் மெய்யாக சந்தோஷப்பட்டது நண்பர்கள் பலரும் தம் குடும்பங்களோடு ஆஜராகி இருந்ததன் பொருட்டே !! கணவர்கள் மெய்மறந்து நம் ஸ்டாலில் புத்தக வேட்டை நடத்திக்கொண்டே என்னிடமும் பேசிக் கொண்டிருக்க,  துணைவிகள் லேசான புன்முறுவலோடு அங்கே கூடி நின்ற அத்தனை காமிக்ஸ் ரசிகர்களையும் பார்த்திட்டது சுவாரஸ்யமான அனுபவம் ! "காமிக்ஸ் புக்-னா பைத்தியமா ஆகிடுவார் சார் ! புக் வந்த நாளைக்கு கேட்கவே வேண்டாம் " என்று ஒரு திருமதி என்னிடம் சொல்லிட..."இங்கே நிற்கும் நாங்கள் எல்லோருமே அதே ரகம் தான் !" என்று நான் பதில் சொன்ன போது அவருக்கு சிரிப்பு ! சில துணைவியர் தாங்களும் இப்போது காமிக்ஸ் படிக்கத் தொடங்கி இருப்பதாகவும் ; ஒரு சிலர் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே வாசகிகள் என்று சொன்ன சந்தோஷத் தருணங்களும் இருந்தன !    அப்போது வேகமாய் ஒரு இளைஞர் வந்திட்டார் - ! "இங்கிலிஷில் இதை வெளியிட்டால் என்ன ? "  என்ற கேள்வியுடன் ! தாய்மொழியில் படிக்கும், ரசிக்கும் அனுபவத்திற்கு அது ஈடாகாது ; அதே போல் ஆங்கிலத்தில் வரும் ஒரு காமிக்ஸை ஆங்கிலத்திலேயே மறுபதிப்பு செய்வதில் என்ன சவால் இருந்திட முடியுமென்று நான் கேட்டேன் !   தமிழில் படிப்பது நிச்சயம் ஒரு கௌரவக் குறைச்சல் அல்லவே என்பதை நான் சொல்லிய போதும் தமிழ தெரிந்த அந்த நண்பர், அவ்வளவாக convince ஆகவில்லை என்பது எனக்குப் புரிந்தது ! 


இடையே நமது பெங்களுரு நண்பர், தமது வலைப்பூவிற்காக என்னைக் குட்டியாகவொரு impromptu வீடியோ பேட்டி எடுத்திட்டார் ! கேள்விகள் என்று முன் ஏற்பாடாக எதனையும் கொண்டிடாமல் மனதிற்குத் தோன்றியதை அவர் கேட்டிட, பெரிதாய் எந்த ஒரு சிந்தனையுமின்றி நானும் பேசினேன் ! வாஞ்சையாய் சுற்றி நின்ற நமது நண்பர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் அந்த நொடியின் சந்தோஷத்தில் பங்கேற்ற பரபரப்புத் தெரிந்தது ! நானும் எனது புதல்வனும் இதர ஸ்டால்களில் நடந்தேறிடும் சங்கதிகளை ரசித்திட ஒரு ரவுண்ட் கிளம்பினோம் ! அருகாமையில் இருந்த RANDOM HOUSE இந்தியா  விற்பனை மையத்திலும் சரி, Westland ஸ்டாலிலும் சரி, ஆங்கில கிராபிக் நாவல்கள் செம சுறுசுறுப்பாய் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன ! விலைகள் 200 ; 300 என்று இருந்த போதிலும் காமிக்ஸ் ஆர்வம் அதனைப் பொருட்படுத்தவில்லை என்பதற்கு அங்கே மாங்கு மாங்கென்று பில் போட்டுக்கொண்டிருந்த காஷியர்களே சாட்சி ! இன்னொரு பக்கமோ மேடையில் பிரபல வட இந்திய காமிக்ஸ் ஓவியர்களோடு கலந்துரையாடல் நடந்தேறிக் கொண்டிருந்தது ! ஆங்காங்கே பிரபல காமிக்ஸ் நாயகர்கள் ; காமெடியன்கள் ; வில்லன்கள் போல் மேக்கப் போட்டுக்கொண்டு COMIC  CON  ஏற்பாடு செய்திருந்த ஆசாமிகள் உலவிட, வந்திருந்த பார்வையாளர்களில் பலர் அசத்தும் காமிக்ஸ் கெட்டப் களிலும் கலக்கிக் கொண்டிருந்தனர் ! இந்தியாவிற்கு இது போன்ற pioneering முயற்சி எத்தனை விலைமதிப்பற்றது என்பதை அப்போது உணர முடிந்தது ! பெரியதொரு கண்காட்சியல்ல என்பதால் இங்கும் அங்கும் ரெண்டு சுற்று சுற்றி விட்டு நமது ஸ்டாலுக்கே திரும்பினோம். பைன் ஆர்ட்ஸ் ஸ்கூலில் இருந்து வந்திருந்த ஓவிய மாணவர்கள் சிலர் ஆர்வமாய் பேசிச் சென்ற பின்னர் , வட இந்திய காமிக்ஸ் இணையதளத்தின் சார்பாய் ஒரு இளம் நிருபர் சின்னதாய்ப் பேட்டி எடுக்கும் பாணியில் கேள்விகள் கேட்டார் ! நமது காமிக்ஸின் வயது நாற்பது என்று சொன்ன போது அவர் கண்ணில் தெரிந்த ஆச்சர்யம் ஒரு நொடிப் பொழுதுப் பெருமிதத்தை விதைத்தது எனக்குள் !



பேசியதோடு டாட்டா காட்டிடாது அனேக வாசகர்கள் தங்களிடமில்லாத இதழ்களை வாங்கிக் கொண்டே நமது பில்லிங் பிரிவையும் பிசி ஆக்கினார்கள் ! WILD WEST ஸ்பெஷல் சுடச் சுட விற்பனை ! நண்பர்களுக்கு அனுப்பிட 10 பிரதிகள் வாங்கி, அந்த 5 கிலோ சுமையை சந்தோஷமாய்த்   தூக்கிச் சென்ற நண்பரும் அதில் சேர்த்தி ! எங்கள் மேல் காட்டப்பட்டு வரும் இந்த நேசத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும், துளியும் நிபந்தனை இல்லா சங்கதிகளே என்ற போதிலும் எங்களுக்குள்ள பொறுப்பின் ஆழத்தை உணர்த்திடும் நினைவூட்டிகளாகவே நான் அவற்றைப்  பார்த்திட்டேன் ! நமது இந்தப் புது அவதாரின் ஆதாரத்தில் எத்தனை கனவுகள் ; எத்தனை எதிர்பார்ப்புகள் உங்களுள் உருவாகியுள்ளன என்பது நாங்கள் அறிந்தது தான் என்ற போதிலும் அதனை நேரடியாகக் கேட்டு..உணர்ந்திடும் போது அதன் தாக்கமே வேறாகிறது ! மதியத்திற்கு மேலே வாசகர்களின் வருகை சற்றே மட்டுப்பட்டது ! குடும்பத்தோடு வந்திருந்ததொரு நண்பர் என்னிடம் பேசிடத் தயங்கியவாறே தள்ளி நின்றே நம் ஸ்டாலைப் படம் பிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்க, அவரை அழைத்துப் பேசிய போது அவர் முகத்தில் தெரிந்த பிரகாசப் பிரவாகம் மெய்யாக என்னை உலுக்கியது. "நீங்கள் 17 வயசிலேயே வெளிநாடெல்லாம் போய் காமிக்ஸ் கதை வாங்கி வந்தது பற்றியெல்லாம் வீட்டில் சொல்லிக் கொண்டே இருப்பார் ' என்று அவரது துணைவியார் கூறிய போது விக்கித்துப் போனேன. முகமறியா  தூரத்தில் ; வெறும் பெயராகவும் ; ஹாட்லைன் எனும் ஒரு பக்கத் தொடர்பு மாத்திரமே பாலமாக இருந்திட்ட போதிலும், காமிக்ஸ் எனும் நேசம் இத்தனை சக்தி வாய்ந்ததா என்பதை உணர்ந்திட இயன்ற போது வார்த்தைகள் வரவில்லை எனக்கு ! அவர்தம் குடும்பத்தோடு போட்டோ எடுத்துக்கொண்டேன் ..எனினும் அவர்களிடம் அதன் ஒரு பிரதியை அனுப்பிடச் சொல்ல இயலாது போயிற்று ! இந்த வலைப்பதிவைப் படித்திடும் நண்பராக அவர் இருந்திடும் பட்சத்தில், please - ஒரு மின்னஞ்சலில் அப்புகைபடத்தினை எனக்கு அனுப்பிடுங்களேன் ?! 


நான்கு மணிக்கு மேலே தாக்குப் புடிக்க முடியவில்லை ; வாசகர்களின் வருகையும் குறைவாக இருப்பது போல் தோன்றியதால், எங்கள் பணியாளர்களை மட்டும் ஸ்டாலில் விட்டு விட்டு நானும் என் பையனும் புறப்பட்டோம். நாங்கள் கொண்டு வந்திருந்த இதழ்களில் 75 % அதற்குள்ளாகவே விற்றுப் போய் இருந்ததால், ராதாக்ருஷ்ணன் என் கையில் ரூபாய் 18,000 ௦௦௦௦௦௦ திணித்த போது உன் புருவங்கள் உயர்ந்தன !! சென்னை புத்தக விழாவிற்குப் பின் இது போன்ற விற்பனை வேகத்தை சந்தித்திராத எங்களுக்கு - பெங்களுருவில் இந்த விறுவிறுப்பு  ஜிவ்வென்று உற்சாகம் கூடிடச் செய்தது  ! உடனடியாக சிவகாசிக்கு போன் செய்து மேற்கொண்டு பிரதிகளை மாலை பஸ் மூலம் அனுப்பிடச் சொல்லி வைத்தேன் ! அன்றிரவு தூங்கும் போது கேப்டன் டைகரும், ஒற்றைக்கை ஆசாமிகளும், நிறைந்த கல்லாப்பெட்டிகளுமாய் எனது சொப்பனங்கள் ஒரே சித்திரமயமாய் இருந்தன ! 


மறு நாள் காலை பத்து மணிக்கு விழா துவங்கிய போது, பெங்களுரு நண்பர்கள் நமக்கு முன்பே ஆஜர் அங்கே ! ஞாயிறு என்பதால் கூட்டமும் ரொம்ப சீக்கிரமே அலைமோதியது ! சற்றைகெல்லாமே நம் ஸ்டாலில் முதல் நாளைப் போலவே (புதியதொரு) வாசகக் குழமம் ! முதல் நாளை விட இன்றைக்கு குடும்பங்களின் வருகை அதிகமாய் இருந்தது highlight ! அப்போது சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர் தம் புதல்வர் மூலம் ஒரு giftwrap செய்யப்பட்ட டப்பாவைத் தந்திட, அதன் மேல் அழகாய் ஒரு வாழ்த்துச் சேதி !! உள்ளேயோ ஒரு மைசூர்பாகு டப்பா ! டெக்ஸ் வில்லரின் அதி தீவிர ரசிகரான இந்நண்பர் நம்மை சந்திக்கவே குடும்பத்தோடு புறப்பட்டு வந்திருந்தார் !! இனிப்பாய் அங்கே கரைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகு மாத்திரமல்ல என்பதை நான் சொல்லிடத் தேவையும் உண்டா - என்ன ?
தொடர்ந்து முதல் நாளைப் போலவே சரமாரியான கேள்விகள், குழுமி நின்ற நண்பர்களிடமிருந்து ! WILD WEST இதழில் டெக்ஸ் வில்லரின் வருகை பற்றி ; டைகரின் பாக்கி இரு பாகங்கள் பற்றி விளம்பரங்கள் வந்திருந்ததால் ரொம்ப திருப்தியாக இருந்தனர் கௌபாய் கதை ரசிகர்கள் ! WILD WEST இதழின் இரு கதைகளுக்குமே அற்புதமான பாராட்டுக்கள் கிட்டிய போது,என் மனதில் அடுத்து வரவிருக்கும் சூ.ஹீ.சூ.SPL க்கு எவ்வித reactions வந்திடவிருக்கிறதோ என்று சிந்தனைகள் ஓடிய வண்ணம் இருந்தன !! 



இரண்டாவது நாளும் விறுவிறுப்பான விற்பனை ! நாங்கள் கொண்டு வந்திருந்த Full Set புக்ஸ் முழுவதும் காலி ஆகி ஒன்றிரண்டு நண்பர்கள் ஏமாற்றத்தோடு திரும்பவும் நேர்ந்தது ! எல்லாவற்றையும் விட, "உசுப்பி விடும்" விதமாய் மேஜை மேல் நின்ற :இரத்தப் படலம்" மாதிரிப்ப்ரதி எக்கச்சக்க நண்பர்களின் கண்ணை உறுதிக் கொண்டே இருந்தது ! அது விற்பனைக்கு அல்ல...மாதிரி மாத்திரமே என்று எங்கள் பணியாளர்கள் அன்பாய்ச் சொல்லிட, தீராத ஏமாற்றம் சில நண்பர்களுக்கு ! ஒன்றரை ஆண்டுகளாய் நம்மிடம் ஸ்டாக் இருந்த இதழுக்கு இப்போது தேடல் வேட்டை துவங்குகிறது ! சமயம் கிடைத்த போது மற்ற இந்திய காமிக்ஸ் பதிப்பகங்களின் ஸ்டாலுக்கு சின்னதாய் ஒரு விசிட் அடித்தேன். இங்கிலிஷில் வெளியிடப்படும் இந்த கிராபிக் நாவல்கள் இன்றைய இந்திய ஓவியர்களின் அசாத்தியப் பரிணாம வளர்ச்சியினை showcase செய்யும் விதத்தில் இருந்தது பிரமாதமாகத் தெரிந்தது. ஒரு சில பதிப்பகங்களின் கதைக் களங்கள் விநோதமாய் இருந்த போதிலும் ரோவோல்ட் ; Campfire போன்ற பதிப்பகங்களின் படைப்புகள் நிஜமாகவே அற்புதம் ! இவற்றில் தரமானவற்றை நாம் தமிழில் வெளியிட முயற்சித்தால் என்னவென்று நமது பெங்களுரு நண்பர் வினவிட, அந்தக் கோரிக்கையை  என் தலைக்குள் ஒரு ஓரமாய் பத்திரப்படுத்தியுள்ளேன் ! அவர்களது இதழ்களில் பளிச் ரகத்தில் தெரிந்த சிலவற்றை வாங்கி வந்துள்ளேன் ; படித்துப் பார்த்து விட்டு மேற்கொண்டு சிந்திக்கலாமென்ற எண்ணம்  ! 

மீண்டும் நிறைய நண்பர்கள் ; எக்கச்சக்கமான சிரித்த முகங்கள் ; ஏராளமான கை குலுக்கல்கள் ; அங்கே இங்கேவென காமெராக்களின் கிளிக்குகள் என்று பொழுது ஓடியதே தெரியவில்லை ! நான் அன்று பிற்பகல் ரயிலில் சென்னை புறப்பட வேண்டி இருந்ததால் மதியத்திற்கு மேல் ஸ்டாலில் இருந்து புறப்பட்டுவிட்டேன் ! அது வரை நம்மோடு ஒவ்வொரு நிமிடமும் காத்திருந்த அன்பான நண்பர்களுக்கு விடை கொடுப்பது நிஜமாகவே கஷ்டமான காரியமாய் இருந்தது ! மீண்டும் சென்னையில் சந்திக்கலாமென்ற போது அனைவரது முகங்களிலும் உற்சாகம் ! அன்றைய இரவு COMIC CON நிறைவு பெற்ற போது எங்களின் 2 நாள் விற்பனை ரூபாய் 40,000 -ஐ தொட்டு இருந்தது ! பிரமித்துப் போனோம் என்பது நிச்சயம் ஒரு understatement  ! 

ரயிலில் பயணிக்கும் போது என் சிந்தைகள் அங்கும் இங்குமாய் அலை பாய்ந்தன ! 2 நாட்களில் நான் பார்த்திட்ட முகங்கள் ; அந்தக் கண்களில் பளீரிட்ட உவகை ;நான் அனுபவித்திட்ட அந்த நேசத்தின் விலைமதிப்பற்ற பரிமாணம் என்று ஒவ்வொன்றாய் எனக்குள்ளே மெள்ள மெள்ள பதிவாகிக் கொண்டே இருந்தது  ! " More things are wrought by prayer than this world dreams of" என்று பிரபல ஆங்கிலக் கவிஞர் சொல்லி இருந்தது நமக்கு நிரம்பவே பொருந்தும் என்பதையும் உணர்ந்திட முடிந்தது ! நமக்காக ; நமது வெற்றிக்காகப் பிரார்த்திக்கும் உள்ளங்கள் இத்தனை இருந்திடும் போது ; நமது ஒவ்வொரு வெற்றியையும் தத்தம் வீட்டுக் குழந்தையின் சாதனை போலப் பாவித்திடும் இத்தனை நேச நெஞ்சங்கள் இருக்கும் போது புயலோ ; இடியோ ; மழையோ நம்மைத் தளரச் செய்ய சாத்தியமே இல்லை ! Thanks folks ! Thanks for every little thing! 

குட்டியாய் சில பின் குறிப்புகள் !! 

இரு நாட்களும் நம்மை சந்திக்க வந்த நண்பர்கள் அனைவரையும் இங்கே குறிப்பிடுவது இயலாத காரியமென்பதால் நான் எவர் பெயர்களையும் இங்கே எழுதிடவில்லை ! எவ்வித இருட்டடிப்பும் இதன் நோக்கமல்ல ; நண்பர்களின் பெயர்கள் விடுபட்டுப் போய்விடின் அது சங்கடத்தைத் தரும் என்ற ஒரே காரணமே இதன் பின்னணியில் ! 

COMIC CON 2012 அதிரடி வெற்றியினைத் தொடர்ந்து இதனை அடுத்த ஆண்டும் பெங்களுருவிலேயே 3 நாள் விழாவாகக் கொண்டாடிட அதன் அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் !! சென்னைக்கும் COMIC CON வருகை புரியும் நாள் தொலைவில் இராதென்று நம்புவோமாக ! Take care people ! 

165 comments:

  1. I HAVE RECEIVED THE WILD WEST SPECIAL AND THOROUGHLY ENJOYED THE STORIES. BEST WISHES FOR COMICON SUCCESS

    ReplyDelete
  2. //அன்றைய இரவு COMIC CON நிறைவு பெற்ற போது எங்களின் 2 நாள் விற்பனை ரூபாய் 400000 -ஐ தொட்டு இருந்தது ! //

    I am very happy to hear this. Congratulations and best wishes for an astronomical growth and success in the future.

    ReplyDelete
    Replies
    1. 40,000 -ஐ 400,000 என்று பதிவிட்ட தீர்க்க தரிசனம் பலிக்கட்டும்

      Delete
  3. வாழ்த்துக்கள் சார். இப்படியான வெற்றிகள் இன்னும் உங்களுக்கு உற்சாகத்தைத் தந்து, பல புதிய முயற்சிகளுக்கு வழி அமைக்கும் என்று நம்புகிறோம்.

    ReplyDelete
  4. திரு விஜயன் சார்

    தங்களது பயணம் வெற்றிகரமாக இருந்தமைக்கு மகிழ்ச்சி !!!

    வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல்:
    ---------------------------

    தங்களது சமீபத்திய பதிப்புகளில் மிக அற்புதமான பதிப்பு.

    எமனின் திசை மேற்கு மிக அற்புதமான நாவல். தாங்களும் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    கேப்டன் டைகர் - இன்னும் படிக்கவில்லை (அதை படித்துவிட்டு தான் சொல்ல வேண்டுமா மிக அருமையாகவே இருக்கும் :)

    மொத்தத்தில் நமது இரண்டாவது இன்னின்க்சில் இது ஒரு மைல் கல் இதழ்

    Great Job Done by Our Team Editor Sir ... We are lucky guys :)


    ReplyDelete
  5. மனசு நிறைவாய் உணர்கிறது. தொடரட்டும் இந்த வெற்றிகள்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  7. திரு விஜயன் அவர்களக்கு..

    பெங்களுரூ Comic Con-ல் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

    Wild Wild West கிடைக்க பெற்றேன். இரண்டுமே அருமையான கதைகள், அட்டகாசமான சித்திரங்கள் குறிப்பாக எமனின் திசை மேற்கு. நமது காமிக்ஸ் பதிப்புகள் இப்போது உலகத்தரத்துக்கு இணையாக உயர்ந்துள்ளது. Its keep getting better. Keep it up.

    சூப்பர ஹீரோ ஸ்பெஷல் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Periyar : COMIC CON -ல் உங்களையும், உங்களது நண்பரையும் சந்தித்து உரையாட முடிந்தது எனக்கும் ரொம்பவே மகிழ்ச்சியளித்ததொரு விஷயம். அதிலும் நமது online poll களுக்கு உங்களது "திருமங்கலம் பார்முலா" பற்றிப் பேசியது நினைவில் நிற்கிறது :-)

      Delete
  8. அனைத்தையும் படிக்க மிகவும் பரவசமாக இருந்தது. வழக்கம் போலவே பின்னிடிங்க சார். எனினும் ஒரு சென்டிமென்ட் இழை இந்த பின்னூட்டம் முழுவதும் ஊடே விரவி நின்றதை உணர முடிந்தது. அதற்கு காரணமான நமது வாசகர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

    ReplyDelete
  9. சின்ன கர்சிஃப்பை போட்டு விட்டு போகிறேன், படித்து விட்டு வருகிறேன்...! :)

    ReplyDelete
    Replies
    1. இந்த கண்காட்சியில் கலந்து கொண்டது வாழ்வின் இனிய தருணங்களில் ஒன்று! நீங்கள் குறிப்பிட்டதைப் போல காமிக்ஸ் புக்கை கையில் எடுத்தால் ஒரு மாதிரியாக பார்க்காத மனிதர்கள் மத்தியில் சுற்றியது ஆனந்தத்தைத் தந்தது! :) உங்களுடைய விற்பனை நான்கு லட்சம் ரூபாய்களைத் தாண்டியதில் மிக்க மகிழ்ச்சி!!! :) முதல் நாள் விற்பனை விவரத்தில் எக்கசக்கமாய் "0"-க்கள் இருக்கின்றனவே?! நமது தமிழ் காமிக்ஸ் என்பதைத் தாண்டி காமிக் கானில் கலந்து கொண்ட பார்வையாளர்களின் ஆர்வமும் உற்சாகமும், காமிக்ஸ் எனும் untapped மார்க்கெட்டுக்கு இந்தியாவில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது! இதைப் பற்றிய ஸ்பெஷல் கவரேஜை அடுத்த லயன் இதழில் எதிர்பார்க்கிறேன்! SHSS-இன் அட்டை முழுமை பெறாத ஒரு rough காப்பிதான் என்பது நிம்மதியைத் தருகிறது! ;) ஸ்பைடர் முகத்தை அழகாக காட்டுவது என்பது ரொம்பவே கடினமான செயல்தான் :D

      Delete
  10. வைல்ட் வெஸ்ட் ஸ்பெசல் இல் கிராபிக் நாவல் மிக பிரமாதம்.அதில் சொல்லப்பட்ட களம்,தளம் ரெண்டுமே தமிழுக்கு புதுசு.அற்புதமான ஆர்ட் வொர்க் ,அருமையான மொழி பெயர்ப்பு ,கண்ணை உருத்தாத வண்ண கலவை அனைத்தும் அருமை.உங்களுடைய "காமிக் கான்" பற்றிய வலை பதிவும் சூப்பர்."காமிக் கானின்" வெற்றி தமிழ் காமிக்ஸுக்கு கிடைத்த வெற்றி .காமிக்ஸ் மூலமாக தானும் வளர்ந்து ,வாசகனின் ரசனையையும் வளர்ப்பது சாதாரணமான விஷயம் அல்ல .நன்றி கலந்த வாழ்த்துக்களுடன் ..............
    CIAO,CI SENTIAMO BENE,GRAZIE!

    ReplyDelete
    Replies
    1. தனபாலன்,மதுரை :சங்கம் வளர்த்த மதுரையில் ஒரு இத்தாலிய ஆர்வலரா ? ! போட்டுத் தாக்குங்கள் !

      Delete
    2. இப்போதாவது reply செய்தீர்களே ,இனி நமது கமெண்ட் அனைத்தும் தமிழில்தான் .நன்றி .

      Delete
  11. விஜயன் சார்,

    நான் இந்த வலைப்பதிவை பெரும்பாலும் படிப்பதோடு சரி, பதிவிடுவதில்லை. ஆனால் "Wild West Special" இதழ் என்னை பதிவிட தூண்டியது. தேர்வான கதைகள் அனைத்துமே மிகச் சிறப்பானவை. பாராட்ட வார்த்தையில்லை!!!!!!!!!!!!!!!!

    எனக்கு இரண்டு கோரிக்கைகள்..

    1. தங்கக் கல்லறை இதழ் ஒரு "Collector's Edition" போலவே உள்ளது, இருப்பினும் சில விருப்பங்கள்

    * முழு கதையும் தொகுக்கப்படுவதால் முன்னட்டையில் "பாகம் 1&2" தேவை இல்லை.
    * மற்ற "Special" இதழ்களைப் போலில்லாமல் (அனைத்து வாசகர் கடிதங்கள், வலைப்பதிவுகள், Hotline, வரும் இதழ்களைப் பற்றிய விளம்பரங்கள் முன்னறிவிப்புகள் இல்லாமல்), தங்கக் கல்லறை பற்றிய உமது அனுபவங்கள் (Editor's Letter) மற்றும் தங்கக் கல்லறை பற்றிய வாசகர் கடிதங்கள் மட்டும் இடம்பெறச் செய்வது சிறப்பாக இருக்கும்.

    2.இரும்புக்கை எத்தன்

    இரும்புக்கை எத்தனின் இறுதி பாகங்கள் பற்றிய அறிவிப்பு அருமை. ஆனால் என் போன்ற புதிய வாசகர்களிடம் முந்தைய பாகங்கள் இல்லை. நெடுநாளைய வாசகர்களிடமும் தற்போதைய "Special Size" தரத்தில் இருக்கப்போவதில்லை. எனவே இரும்புக்கை எத்தன் கதையையும் ஒரு முழு தொகுப்பாக வெளியிட வேண்டுகிறேன்.

    பெரும் முயற்சி எடுத்து முழுக்கதையையும் வெளியிடும் போது, அது நீண்ட நாள் நிலைக்கும்படி "Hard Cover"-ல் வெளியிடுவது சிறப்பாய் இருக்கும். "Collector's Edition" பற்றி வாசகர் விருப்பங்களை தெரிந்து கொண்டு பதிவிடலாம்.

    என் பதிவில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்..

    Thanks,
    Sankar

    ReplyDelete
    Replies
    1. இரும்புக்கை எத்தனின் இறுதி பாகங்கள் பற்றிய அறிவிப்பு அருமை. ஆனால் என் போன்ற புதிய வாசகர்களிடம் முந்தைய பாகங்கள் இல்லை. நெடுநாளைய வாசகர்களிடமும் தற்போதைய "Special Size" தரத்தில் இருக்கப்போவதில்லை. எனவே இரும்புக்கை எத்தன் கதையையும் ஒரு முழு தொகுப்பாக வெளியிட வேண்டுகிறேன்.

      என்னிடமும் இல்லை... என்னைப் போன்று வாசிக்காதவர்களுக்கு மறுமுறை பதிக்கலாமே? ப்லீஸ்

      Delete
    2. இரும்புக்கை எத்தன் கதையையும் ஒரு முழு தொகுப்பாக வெளியிட வேண்டுமென்பதே நிறையபேர்களின் விருப்பமாக இருக்கும்

      Delete
    3. HOT LINE illamal lion,muthu comicsaa...pls intha IDEA vandam nanbaray..

      Delete
    4. Sorry. I didn't mean that I do not wish to see Editor's hotLine and reader's letters in our monthly issues. I love to read them. It really help us to know about him and our comics history..

      What I like to convey is, If he ever considered to provide us a "Collector's Edition", that book has to have his experience on acquiring that story, its first printing and reader's letters about that story only. No general stuff and intro about issues (monthly issues) to come. It only ruin the "Collector's Edition".

      Hope I'm clear enough, and anyway its my openion only..

      -Sankar

      Delete
    5. sankaralingam u : பொறுத்திருந்து பாருங்கள்...."தங்கக் கல்லறை" எப்படி மிளிரக் காத்திருக்கின்றதென்று !

      "இரும்புக்கை எத்தன் " பற்றிய உங்களின் எண்ணங்களை இன்னும் நிறைய நண்பர்களும் தெரிவித்துள்ளனர் ! In fact நேற்றைய தினம் என்னிடம் தொலைபேசியில் பேசிய நண்பர்களில் 9௦% இதை வலியுறித்தியே பேசினர் ! அவர்களுக்குச் சொல்லிய அதே பதிலையே இங்கே தங்களுக்கும் சொல்லிடுகின்றேன் : தற்போது நமது NEVER BEFORE ஸ்பெஷல் என் முன்னே பெரியதொரு சவாலாய் நின்று வருவதால், அதனைத் தாண்டி என்னால் பார்த்திட இயலவில்லை ! ஜனவரி 2013 -ல் இந்த இதழை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுத் தான் அடுத்த வேலை ! So தொடரும் இதழ்களின் மீதான சிந்தனைக்கு நிறையவே அவகாசம் உள்ளதே !

      Delete
    6. உண்மையாக இது உசுப்பேத்தும் முயற்சி அல்ல சார் ,உண்மையான கோரிக்கை,ஏனெனில் நமது இரத்த படலம் 1500 பிரதிகள் அதிகமோ அல்லது குறைவோ எனக்கு தெரியாது,ஆனால் இங்கு தற்போது நம்முடன் தொடரும் நண்பர்கள் அதன் வெளியீட்டுக்கு பின்னர் அதிகரித்துள்ளனர்.மேலும் வண்ணத்தில் பார்த்த பின்னர் எதோ பெரிய இழப்பு போல அனைத்து (80 %) வாசகர்கள் கண்டிப்பாக வேண்டும் என்பார்கள்,இதுவும் ஒரு தியரிதான்.நிரூபிக்க பட்டது உலகில் அதிகம் பேர் இதில் ஒவொரு விஷயத்திற்காகவும் அடங்குவர்.இங்கு வாங்கிய நண்பர்களுடன் சேர்த்து வாங்காத நண்பர்களும் இருக்கலாம் கணிப்பாக 500 க்கு மேல் சாத்தியம் எனில் கண்டிப்பாக திரட்டி விடலாம் .சிலர் இரண்டு பிரதிகள் வாங்க கூட ஆயத்தமாக இருப்பர்.நானே மூன்று பிரதிகள் வாங்கினேன்.முதலில் இரண்டு பிரதிகள் நமது அலுவலகம் வந்து வாங்கியுள்ளேன்.எனக்கும் நண்பருக்கு பரிசாகவும்.பின்னர் தொலைந்து விட்டது என எண்ணி மீண்டும் சிவகாசி வந்து வாங்கினேன் .ஆனால் கிடைத்து விட்ட படியால் பாது காப்பாக உள்ளது.ஆகவே தாங்கள் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட துவங்கி விடலாம் ..............................கண்டிப்பாக நெவர் பிஃபோர் ஸ்பெஸல் வேண்டும் பதிவுகள் மெதுவாக அதிகரிக்கும் நிலையில் சிறிது சந்தேகம் தோணலாம்.அனைவரும் கடைக்கு வந்தால் பார்த்து கொள்ளலாம் என அசால்ட்டாக இருப்பதே காரணம்,நான் கூட அப்படி இருந்தவன்தான் .ரத்த படலம் வந்த பின்னரே வேறு வழியின்றி சந்தா கட்டினேன்.நமது இரத்த படலமும் மெதுவாய் தானே அதிகரித்தது . தாங்கள் இது பற்றி இப்போதே நமது புத்தகத்தில் எழுதி வாசக நண்பர்களின் மன நிலையை அறிந்து கொள்ளலாம்.........................ஆவன செய்யுங்கள்........இப்போது தேடி கொண்டிருக்கும் நண்பர்களும் சந்தோசமடைவார்கள்............


      இதற்க்கு தங்களது மேலான பதிலை எதிர் பார்க்கிறேன்.

      //

      "இரும்புக்கை எத்தன் " பற்றிய உங்களின் எண்ணங்களை இன்னும் நிறைய நண்பர்களும் தெரிவித்துள்ளனர் ! In fact நேற்றைய தினம் என்னிடம் தொலைபேசியில் பேசிய நண்பர்களில் 9௦% இதை வலியுறித்தியே பேசினர் ! அவர்களுக்குச் சொல்லிய அதே பதிலையே இங்கே தங்களுக்கும் சொல்லிடுகின்றேன் : தற்போது நமது NEVER BEFORE ஸ்பெஷல் என் முன்னே பெரியதொரு சவாலாய் நின்று வருவதால், அதனைத் தாண்டி என்னால் பார்த்திட இயலவில்லை ! ஜனவரி 2013 -ல் இந்த இதழை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுத் தான் அடுத்த வேலை ! So தொடரும் இதழ்களின் மீதான சிந்தனைக்கு நிறையவே அவகாசம் உள்ளதே !

      //

      இந்த பதில் கூட இதற்க்கு உதவலாம் ,இருந்தாலும் தங்களது பதில் மீண்டும் ஒரு முறை கிடைத்தால் சந்தோசமே............நன்றி

      Delete
    7. நன்றிகள் எடிட்டர் சார்,

      "பொறுத்திருந்து பாருங்கள்...."தங்கக் கல்லறை" எப்படி மிளிரக் காத்திருக்கின்றதென்று !"

      அதன் பொன்னொளியில் எங்கள் வருத்தங்கள் மறைந்து போனால், அதைவிட சிறந்தது வேறொன்றும் கிடையாது..

      -----

      "இரும்புக்கை எத்தன் " பற்றிய உங்களின் எண்ணங்களை இன்னும் நிறைய நண்பர்களும் தெரிவித்துள்ளனர் ! In fact நேற்றைய தினம் என்னிடம் தொலைபேசியில் பேசிய நண்பர்களில் 9௦% இதை வலியுறித்தியே பேசினர்

      90% சதவிகித வாசகர்கள் விருப்பம் எனும்போது, நிச்சயம் எங்களுக்கு முழுக்கதையும் கிடைக்கும்..

      Delete
  12. உங்களது விவரிப்புகள் COMIC CON ற்கு வர முடியாத குறையைப் போக்கிவிட்டது.அடுத்த வருடம் வர முயற்சிக்கிறேன்.நம் அலைவரிசை ரசனை உள்ளவர்களை சந்தித்துப் பேசுவதே ஓர் அற்புதமான அனுபவமே.அந்த அனுபவம் கிட்டும் வாய்ப்பு மிஸ் ஆனதில் வருத்தமே. ரத்தப்படலம் jumbo புக்கின் பிண்ணனியில் உள்ள உழைப்பின் பலனான வெற்றி இப்போதுதான் வேகமாக பரவுகின்றது என்பது என் கருத்து.மாதம் இரு முறை கொண்டு வந்தால் மிக மகிழ்வேன்.டைரக்டர் ஷங்கர் படங்கள் போல ஒன்று அழகு அடுத்தது அதிரடி.வருடம் ஒரு முறை ஆயிரம் ரூபாய் விலையில் ஒரு தீபாவளி மலர்.அள்ள அள்ளக் குறையாத காமிக்ஸ் சுரங்கத்தில் நீங்கள் எங்களுக்காக கொண்டு வந்து தரும் தங்கம், வைரம் போன்ற கதைகளை அணிந்து அழகுபார்த்து பொக்கிஷமாகப் பாதுகாக்க எங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடு இறைவா...

    ReplyDelete
    Replies
    1. Raja babu : கனவுகள் மெய்ப்படும் காலங்களும் வராது போகுமா - என்ன ? !!!

      Delete
  13. Woooow,

    wow, is a simple word to describe how much i was touched while reading this article. I felt like I was there with you sir (Anna), on the comic con festival.

    I really planned to travel from chennai on saturday, but last minute works did not allow me to do so, I will be waiting for the day, Comic con or any other book festival to be organized in chennai to see and spend time in our stall.

    //நமக்காக ; நமது வெற்றிக்காகப் பிரார்த்திக்கும் உள்ளங்கள் இத்தனை இருந்திடும் போது ; நமது ஒவ்வொரு வெற்றியையும் தத்தம் வீட்டுக் குழந்தையின் சாதனை போலப் பாவித்திடும் இத்தனை நேச நெஞ்சங்கள் இருக்கும் போது புயலோ ; இடியோ ; மழையோ நம்மைத் தளரச் செய்ய சாத்தியமே இல்லை ! Thanks folks ! Thanks for every little thing!//

    Anna, it is hard to see that it took so long for you to know this, thanks is not the word used by family members. we expect a lot more from you.

    //அன்றைய இரவு COMIC CON நிறைவு பெற்ற போது எங்களின் 2 நாள் விற்பனை ரூபாய் 400000 -ஐ தொட்டு இருந்தது ! பிரமித்துப் போனோம் என்பது நிச்சயம் ஒரு understatement ! //

    this is the highlight, nice gesture to share with us, i pray to god to add one more zero at the end in next book festival. Hope you have enough books to sell, lol.

    With all the love you get, you have the great responsibility to give it back with timely publishing and good quality books(Paper + Colour). I would like to see the Hard bound Covers ASAP

    One more thing, untill now i have not received my subscription copy of WWS, yesterday at 10 AM i called our office for confirmation, they told that the book has been sent to chennai. I don't know when i will get it. It's sad to see everyone reviewing the book for the past one week.

    S.Mahesh

    ReplyDelete
  14. லக்கிலூக் சிக்பில் போல இன்னும் பல நகைச்சுவை நாயகர்களை(சிந்துபாத்,விஸ்கி சுஸ்கி,ஹெர்லாக்ஷோம்ஸ் உட்பட) அவ்வப்போது வெளியிடுங்கள் ப்ளீஸ்... நமது இதழ்கள் விற்பனையை அதிகரிக்க games cd ஒன்றை இதழோடு இலவசமாகக் கொடுக்க (champak போல) நான் உங்களிடம் கூறிய யோசனையை கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்களேன்...இது ஒரு சிறிய வியாபார தந்திரமே...ஆனால் பெரிய ரிசல்ட் இருக்கும் என்பது என் உறுதியான நம்பிக்கை...நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Raja babu : நிச்சயம் சிந்திப்போம் !

      Delete
  15. //நிச்சயமாகவே Hibernation - lil இருந்து வழியே வந்து விட்டோம். ஹுசைன் போல்ட் நன்றாக தயாராகி tune ஆகி நிற்பது போன்று இருக்கிறது. உள்ளுரில் ஓடிய அவர் இனி ஒலிம்பிக்ஸில் ஓட வேண்டியதுதான் பாக்கி. ComicCon - இல் நன்றாக ஓடி மெடல் வாங்கி விண்ணை நோக்கி அவர் ஸ்டைலில் கரத்தை உயர்த்துங்கள். உடைக்க வேண்டிய சாதனைகள் நிறைய இருக்கிறது. வாழ்த்துக்கள்.
    //

    இது நான் போன பதிவில் நான் இட்ட பின்னுட்டம்.நான் சொன்ன படியே மெடல் வாங்கி விட்டு வந்து விட்டீர்கள். வாசகர்களின் உற்சாகத்தின் முன்பு அங்கு நடந்த விற்பனை ஒன்றுமே இல்லை என்று நினைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறன். அடுத்த காமிக் கான் விற்பனை ரூ 10 லட்சத்தை தாண்டும்.

    WW ஸ்பெஷல் சூப்பர். முக்கியமாக அந்த கிராபிக் நாவல் ஒவ்வொரு படமாக பார்த்து பார்த்து நாலைந்து தடவைக்கு மேல் படித்து விட்டேன். மேலும் கிராபிக் நாவல்கள் வெளியிடுங்கள்.

    ReplyDelete
  16. //அன்றைய இரவு COMIC CON நிறைவு பெற்ற போது எங்களின் 2 நாள் விற்பனை ரூபாய் 400000 -ஐ தொட்டு இருந்தது ! பிரமித்துப் போனோம் என்பது நிச்சயம்//

    விஜயன் சார், முதலில் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் சார்.

    உங்களை ஏதோ பாராட்டவேண்டும், எதாவது எழுதவேண்டும் என்பதற்காக இதையெல்லாம் சொல்லவில்லை சார், உண்மையாகவே என் உள்மனசிலிருந்து சொல்கிறேன்.

    இன்று காலையில் உங்கள் பதிவை படித்ததில் இருந்து நான்தான் இன்னும் பிரமிப்பில் இருந்து மீளவில்லை. இந்தகாலத்தில் எத்தனைபேர் இப்படி விற்பனையை வெளிப்படையாக சொல்லமுடியும் சார்.

    கொஞ்சநஞ்சமிருந்த என் மனதை முழுதும் ஆக்கிரமித்து விட்டீர்கள். உங்கள் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையும், மரியாதையும் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுவிட்டது. நான் காமிக்ஸ் ரசிகனாக, உங்கள் வாசகனாக இருக்க பெருமையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. Karthikeyan and Rafiq Raja,, can you send me all the photos which you have taken in the comic-con to my personal mail-id?

      Delete
    2. //Karthikeyan//
      Parani, I am not sure if P.Karthikeyan was there at Comic Con.

      Karthik(eyan) is such a common name and I am sure there must have been at least a handful of Karthiks participated at the event - and I was one of them... No keyan - just Karthik - I've had enough of confusion already with Keyan! ;)

      //can you send me all the photos//
      I don't find your mail ID in your profile link?

      Delete
    3. ஹா ஹா ஹா..... நண்பர் பரணி comic con நேரடி அனுபவம் இல்லாத துரதிஷ்டசாலி இந்த keyan . நம்ம பெங்களூர் ஹீரோ karthik somalinga தான் அந்த அதிர்ஷ்டசாலி.
      அடுத்த ஆண்டு அவருக்கு போட்டியாக comic con இல் ஆஜர் ஆவதாக உத்தேசம்.:)

      Delete
    4. Sorry for the confusion, Karthik my mail id is sparani@gmail.com

      Delete
    5. //பெங்களூர் ஹீரோ//
      இந்த 'கேயன்'ங்க தொல்ல தாங்க முடியலைப்பா! :D


      //ஆஜர் ஆவதாக உத்தேசம்.//
      வாங்க, வாங்க... நெக்ஸ்ட் இயர் நீங்கதான் சூப்பர் ஹீரோ! ;)

      Delete
    6. @Parani - will try to mail the photos today...

      Delete
    7. I've just sent you a mail... there are some issues with sending the attachment - let us discuss this offline

      Delete
  17. Very happy to read about Bangalore comic con. Both 'Double thrill special' and 'Wild west special' are highly satisfying. Thanks for the proper packing.
    PLEASE CONSIDER PUBLISHING ALL 4 PARTS OF ' IRUMBUKKAI ETHAN ' TOGETHER IN A SINGLE VOLUME FOR Rs.150-200 [without any black-white comics].
    -G.Nithish.

    ReplyDelete
  18. தங்களது இந்த வெற்றி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சார் ............,மறுபதிப்பு விசயத்தில் சற்று தாராளமாக(எண்ணிக்கை 6 பதிவுகள் வருடம் தோறும்,வண்ணத்தில் ஒன்று ) செயல் படுங்கள் என கேட்டு கொள்கிறேன்.இதே போன்ற பெரிய சைசெனில் இன்னும் களை கட்டும் என்பது எனது எண்ணம்.ஆவன செய்யுங்கள் .நமது வாசக நண்பர்களின் வேண்டுகோளால் தெளிவான சில திட்டங்கள் தயாராகியிருக்கும் எனும் போதும் எனது இந்த கோரிக்கையும் கருத்தில் கொள்ளுங்கள் .......................மேலும் டெக்ஸ் அந்த வண்ணத்தில் வருகிறது என்ற அறிவிப்பு அற்புதம்,கதை கூட வண்ணத்தில் என இருந்தால் இன்னும் அற்புதமே,மார்டின்,ராபின் வண்ண விளம்பரங்கள் அற்புதம்.............அனைத்து விளம்பரங்கள் வண்ணத்தில் இருந்தால் நன்றாயிருக்கும் என்பது எனது எண்ணம். சூ.ஹீ.சூ.SPL மாபெரும் வரவேற்பை பெருமேன்பதே திண்ணம்.அட்டை படம் பழைய நினைவுகளை கிளருகிறது................அட்டகாசம் ,மாயாவி மற்றும் தீபாவளி மலர் என்ற இரண்டு மிஸ்ஸிங் ..................முழுமை செய்யும் போது இவை இடம்பெறுமா ?இரும்பு கை எத்தன் தொடர்ச்சி பாகங்களை வெளிவிடும் முன்னர் ,முதலில் இருந்தே வெளி விடலாமே ?cc ல் ஒரு வெளியீடும் தொடர்ச்சி அதே மாதத்தில் புதிய வெளியீட்டிலும் இருந்தால் பின்னி பெடலெடுக்கும்.....................




    •"மின்னும் மரணம்" வண்ணத்தில் திரும்பவும் போடலாமே ?
    •மினி லயன் எல்லாவற்றையும் மறுபதிப்பு போட்டே தீர வேண்டும் !
    •இரத்தப் படலம் முழுவதையும் வண்ணத்தில் மறுபதிப்பு முடியுமா ?
    •// கிராபிக் நாவல் ,இது அடிக்கடி வருமா ? //
    •ஸ்பைடர் கதைகளை ரசிக்க அப்படி என்ன பெரிய பிரச்னை ?
    •//"கார்சனின் கடந்த காலம் " reprintபோடாமல் விட்டுடாதீங்க !! ,இதனூடே சைத்தான் சாம்ராஜ்யத்தையும் .......................... //
    •புதிதாய் என்ன கதைகள் வரப் போகின்றன ?
    •மறுபதிப்புக்கு ஏன் இவ்வளவு தயக்கம் ?// இப்போது அதாவது காமிக் காண் அனுபவத்திற்கு பிறகு எண்ணிக்கைதனை (வருடம் 6 பதிவுகள் ) உயர்த்த திட்டமுண்டா
    •வேதாளரின் புதிய கதைகளை ஏன் போடக் கூடாது ? // பழைய கதைகள் அதை விட முக்கியம்,மறந்து விடாதீர்கள் //
    •திகில் ஆரம்ப இதழ்களை தொடர்ந்து மறுபதிப்பு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள் ?
    •வாண்டுகள் படிப்பதற்காக முந்தைய ஜூனியர் லயன் பாணியில் ஏதாச்சும் வெளியிட்டால் என்ன ?
    •டைகர் digest ; பிரின்ஸ் digest ; சிக் பில் digest என்று தனித்தனியாய்ப் போட்டால் என்ன ?



    இவை எனது மனதிலும் உங்களை கேட்க தூண்டிய கேள்விகள்,அங்கு வந்த வாசகர்களுக்கு கூறியிருப்பீர்கள்,இங்கு மேலும் ஒரு முறை தாங்கள் பதில் கூறினால் அனைவரும் சந்தோஷ படுவோம்.......................please sir ..............


    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : நண்பர்களின் இந்த ஜாலியான கேள்விகளுக்கு பதில்களை ஒருத் தனிப் பதிவாகவே போட்டிடலாம்.........பார்ப்போமே .......!

      Delete
  19. டியர் எடிட்டர்,
    இறைவனுக்கு கோடி நன்றிகள். எங்கள் அனைவரது பிரார்த்தனையும் பலித்தது.

    //நாங்கள் கொண்டு வந்திருந்த இதழ்களில் 75 % அதற்குள்ளாகவே விற்றுப் போய் இருந்ததால், ராதாக்ருஷ்ணன் என் கையில் ரூபாய் 18,000 ௦௦௦௦௦௦ திணித்த போது உன் புருவங்கள் உயர்ந்தன !!//

    எடிட் செய்யாதீர்கள். இது உண்மையிலேயே நடக்கப் போகும் விஷயம். இந்த பதிவு எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்த பதிவு. மனம் நிறைவாக இருக்கிறது.

    //எல்லாவற்றையும் விட, "உசுப்பி விடும்" விதமாய் மேஜை மேல் நின்ற :இரத்தப் படலம்" மாதிரிப்ப்ரதி எக்கச்சக்க நண்பர்களின் கண்ணை உறுதிக் கொண்டே இருந்தது !//

    இரத்தப் படலம் மெகா இஷ்யூ புத்தகதின் “ஹாட் லைன்”-னில் நீங்கள் எழுதியதை இங்கு மீண்டும் பிரதிபலிக்கின்றேன்; “So - நான் கோரவிருப்பது கதையைப் பற்றிய விமர்சனங்களை என்பதை விட - இந்த உழைப்பிற்கான அங்கீகாரத்தையே !”. பெங்களூர் காமிக் கானில் XIII - மெகா ஸ்பெஷல் இதழுக்கான ஒவ்வொரு விசாரிப்புகளும் நீங்கள் கேட்ட உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தைத்தான்.

    //ஒன்றரை ஆண்டுகளாய் நம்மிடம் ஸ்டாக் இருந்த இதழுக்கு இப்போது தேடல் வேட்டை துவங்குகிறது !//

    அந்த புத்தகத்தை நீங்கள் பதிப்பித்தது, முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே. அதனால் அந்த புத்தகம் குடத்திலிட்ட விளக்காக இருந்தது. முன் பதிவு ஆரம்பித்தபோது கிடைத்த வழக்கமான காமிக்ஸ்கள் கூட அந்த புத்தகம் வெளிவந்த கால கட்டத்தில் அறவே கிடைக்கவில்லை. அதனால் அந்த புத்தகம் வெளிவந்தது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே தெரிய வரவில்லை. சில வருடங்களுக்கு முன் தினமலர் பேப்பரின் புத்தக விமர்சன பகுதியில், ஏதோ ஒரு தடிமனான காமிக்ஸ் புத்தகத்தைப் பற்றி எழுதியிருப்பதை காண நேர்ந்ததாகவும் கூறினார். அந்த பேப்பர் கட்டிங்கை எப்படியாவது கையகப் படுத்துமாறு கேட்டேன். ஆனால் கடைசிவரை அந்த பேப்பர் கட்டிங் விவரம் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு வேளை அந்த விமர்சனம் XIII - மெகா ஸ்பெஷல் இதழுக்கான விமர்சனமாக இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. இதை சொல்வதற்கு காரணம், கம்யூனிகேஷன் கேப் முன்பு இருந்ததே. இன்றும் நமது வெளியீடுகள் கிடைக்கின்றது என்பது தமிழகத்திலேயே பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திராது என்பது எனது எண்ணம்.

    என்னைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நீங்கள் வெளியிட்ட ப்ளாக் அண்ட் ஒயிட் XIII - கலக்டார்ஸ் இஷ்யூவோ, அல்லது நீங்கள் வெளியிடப் போகும் XIII - கலர் மெகா இஷ்யூவோ எதுவாக இருந்தாலும், XIII - தன் நமது வெளியீடுகளிலேயே நீங்கள் மீண்டும் மீண்டும் பதிப்பிடப் போகின்ற புத்தகமாக இருக்கப் போகின்றது. நீங்கள் இதற்கு சொல்லப் போகும் கமெண்ட், ”இப்படி உசுப்பி விட்டு, உசுப்பி விட்டே உடம்ப ரணகளமா ஆக்கிடரானுங்கப்பா இவனுங்க”, என்று நினைகின்றேன்.

    //COMIC CON நிறைவு பெற்ற போது எங்களின் 2 நாள் விற்பனை ரூபாய் 400000 -ஐ தொட்டு இருந்தது !//

    இது TIP OF AN ICE BERG !. இது நாங்கள் அனைவரும் உவகை கொள்ளும் விஷயம்.

    இதுவரை நீங்கள் ஸ்பாட் லைட்டை புறக்கணித்து மறைவில் இருந்து இருக்கலாம். இனி நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. இனி நீங்கள் கட்டாயம் ஸ்பாட் லைட்டுக்கு வரவேண்டும். உங்களது பயணத்தின் அடுத்த கட்டத்தில் இருக்கின்றீர்கள். மறைவிலிருந்து நீங்கள் கட்டாயம் வெளியில் வரவேண்டும். நீங்கள் வெளியில் வருவதும் ஒருவகையில் விளம்பரமே, ஆனால் விளம்பரம் உங்களுக்கல்ல, அது நமது வெளியீடுகளுக்கு. இது காலத்தின் கட்டாயம் என்று நினைக்கின்றேன். நீங்கள் வேண்டாம் என்றாலும் அதுதான் நடக்க வேண்டும் என்றால் கட்டாயம் நடக்கும். அப்படி நடக்கும் போது, நீங்கள் அந்த ஸ்பாட் லைட் வாய்ப்புகளை தவிர்க்காமல் இருக்க வேண்டும்.

    நெவர் பிபோர் ஸ்பெஷலுக்கு எவ்வளவு பேர்கள் காமிக் கானில் முன்பதிவு செய்தனர் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றது.

    சென்னை புத்த கண்காட்சியும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளினால், காமிக் கானில் சந்தித்த நண்பர்களின் பெயர்களை தவிர்த்திருக்கின்றீர்கள். அதற்கு உங்களுக்கு பாராட்டுக்கள். அதே சமயம் அந்த நண்பர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கின்றது. அதற்கு ஒரு பெருமூச்சு...ம்ஹூம்..

    சென்னையில் ஒரு காமிக் கானை ஆவலாக எதிர்பார்த்தேன், இப்போது இருக்கும் நிலையை பார்த்தால் அது நடக்காது போல் தெரிகிறது. சென்னை புறக்கணிக்கப் படுகிறதோ என்று எண்ணுகின்றேன்.

    ALL THE BEST.

    அன்புடன்,

    பாலாஜி சுந்தர்.

    ReplyDelete
  20. டியர் சார் ....நேரிலேயே பார்த்தது போல் இருந்தது ...அட்டகாசமான நேரடி ஒளிபரப்பு ...congrats

    ReplyDelete
  21. //எல்லாவற்றையும் விட, "உசுப்பி விடும்" விதமாய் மேஜை மேல் நின்ற :இரத்தப் படலம்" மாதிரிப்ப்ரதி எக்கச்சக்க நண்பர்களின் கண்ணை உறுதிக் கொண்டே இருந்தது !//

    இரத்தப் படலம் மெகா இஷ்யூ புத்தகதின் “ஹாட் லைன்”-னில் நீங்கள் எழுதியதை இங்கு மீண்டும் பிரதிபலிக்கின்றேன்; “So - நான் கோரவிருப்பது கதையைப் பற்றிய விமர்சனங்களை என்பதை விட - இந்த உழைப்பிற்கான அங்கீகாரத்தையே !”. பெங்களூர் காமிக் கானில் XIII - மெகா ஸ்பெஷல் இதழுக்கான ஒவ்வொரு விசாரிப்புகளும் நீங்கள் கேட்ட உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தைத்தான்.

    //ஒன்றரை ஆண்டுகளாய் நம்மிடம் ஸ்டாக் இருந்த இதழுக்கு இப்போது தேடல் வேட்டை துவங்குகிறது !//


    அடுத்து என்ன இரத்த படலம் முழு வண்ணத்தில் பிரம்மாண்டமாய் வண்ணத்தில் 800 விலையில் hard அட்டையில்
    வந்தால் இந்த வெற்றியை அளித்த வாசகர்களாகிய நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது , இந்த வெற்றிக்கான உங்களது மறுபதிப்பு என்ற அங்கீகாரத்தையே !. ................

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : நானாக வாய்க்குள் கால் கட்டைவிரல்களைத் திணித்துக் கொண்டு பேய்முழி முழிப்பது பற்றாதென, இது போல் உசுப்பேற்றி விட்டு ரணகளமாக்கிட யுக்திகள் வேறா ? ஆஹா..... !!!

      Delete
    2. உண்மையாக இது உசுப்பேத்தும் முயற்சி அல்ல சார் ,உண்மையான கோரிக்கை,ஏனெனில் நமது இரத்த படலம் 1500 பிரதிகள் அதிகமோ அல்லது குறைவோ எனக்கு தெரியாது,ஆனால் இங்கு தற்போது நம்முடன் தொடரும் நண்பர்கள் அதன் வெளியீட்டுக்கு பின்னர் அதிகரித்துள்ளனர்.மேலும் வண்ணத்தில் பார்த்த பின்னர் எதோ பெரிய இழப்பு போல அனைத்து (80 %) வாசகர்கள் கண்டிப்பாக வேண்டும் என்பார்கள்,இதுவும் ஒரு தியரிதான்.நிரூபிக்க பட்டது உலகில் அதிகம் பேர் இதில் ஒவொரு விஷயத்திற்காகவும் அடங்குவர்.இங்கு வாங்கிய நண்பர்களுடன் சேர்த்து வாங்காத நண்பர்களும் இருக்கலாம் கணிப்பாக 500 க்கு மேல் சாத்தியம் எனில் கண்டிப்பாக திரட்டி விடலாம் .சிலர் இரண்டு பிரதிகள் வாங்க கூட ஆயத்தமாக இருப்பர்.நானே மூன்று பிரதிகள் வாங்கினேன்.முதலில் இரண்டு பிரதிகள் நமது அலுவலகம் வந்து வாங்கியுள்ளேன்.எனக்கும் நண்பருக்கு பரிசாகவும்.பின்னர் தொலைந்து விட்டது என எண்ணி மீண்டும் சிவகாசி வந்து வாங்கினேன் .ஆனால் கிடைத்து விட்ட படியால் பாது காப்பாக உள்ளது.ஆகவே தாங்கள் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட துவங்கி விடலாம் ..............................கண்டிப்பாக நெவர் பிஃபோர் ஸ்பெஸல் வேண்டும் பதிவுகள் மெதுவாக அதிகரிக்கும் நிலையில் சிறிது சந்தேகம் தோணலாம்.அனைவரும் கடைக்கு வந்தால் பார்த்து கொள்ளலாம் என அசால்ட்டாக இருப்பதே காரணம்,நான் கூட அப்படி இருந்தவன்தான் .ரத்த படலம் வந்த பின்னரே வேறு வழியின்றி சந்தா கட்டினேன்.நமது இரத்த படலமும் மெதுவாய் தானே அதிகரித்தது . தாங்கள் இது பற்றி இப்போதே நமது புத்தகத்தில் எழுதி வாசக நண்பர்களின் மன நிலையை அறிந்து கொள்ளலாம்.........................ஆவன செய்யுங்கள்........இப்போது தேடி கொண்டிருக்கும் நண்பர்களும் சந்தோசமடைவார்கள்............


      இதற்க்கு தங்களது மேலான பதிலை எதிர் பார்க்கிறேன்.

      //

      "இரும்புக்கை எத்தன் " பற்றிய உங்களின் எண்ணங்களை இன்னும் நிறைய நண்பர்களும் தெரிவித்துள்ளனர் ! In fact நேற்றைய தினம் என்னிடம் தொலைபேசியில் பேசிய நண்பர்களில் 9௦% இதை வலியுறித்தியே பேசினர் ! அவர்களுக்குச் சொல்லிய அதே பதிலையே இங்கே தங்களுக்கும் சொல்லிடுகின்றேன் : தற்போது நமது NEVER BEFORE ஸ்பெஷல் என் முன்னே பெரியதொரு சவாலாய் நின்று வருவதால், அதனைத் தாண்டி என்னால் பார்த்திட இயலவில்லை ! ஜனவரி 2013 -ல் இந்த இதழை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுத் தான் அடுத்த வேலை ! So தொடரும் இதழ்களின் மீதான சிந்தனைக்கு நிறையவே அவகாசம் உள்ளதே !

      //

      இந்த பதில் கூட இதற்க்கு உதவலாம் ,இருந்தாலும் தங்களது பதில் மீண்டும் ஒரு முறை கிடைத்தால் சந்தோசமே............நன்றி

      Delete
  22. தங்க நகரம் போன்ற மாயாஜால கதைகளும்,புராதாரன எகிப்து,அஸ்டெக்,மாயன் நாகரீகங்களும்,சிறுவர்கள் துப்பறியும் கதைகளும்,நமது இதிகாச கதைகளும்,நமது இந்திய சிறந்த வெளியீடுகளும் நமக்கான அங்கீகாரத்தை சிறுவர்கள் மத்தியில் உயர்த்தும் ..................இது குறித்தும் ஆவனம செய்யுங்கள் சார் .............நன்றி அனைத்து தங்களது அனைத்து முயற்சிகளுக்கும்

    ReplyDelete
  23. டியர் எடிட்டர் விஜயன் சார்,
    சலாம் பெங்களூர் படித்தேன். நேரில் காமிக் கான் காண முடியாத வருத்தத்தை தங்களின் பதிவு போக்கி விட்டது. பெங்களூர் விற்பனை உண்மையாகவே மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் காமிக்ஸ் மறு வருகையை இத்தகைய புத்தக மற்றும் பிற கண்காட்சிகளின் மூலம் தொடர்ந்து தெரிய படுத்துங்கள் சார். வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  24. டியர் எடிட்டர்,

    நேற்று மதியம் வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் புத்தகம் கைக்கு வந்தது. புத்தகத்தை பிரித்தேன், பிரமித்தேன். இதற்கு முன்பும், முத்துவின் முதல் வண்ண வெளியீட்டினையும், XIII - மெகா இஷ்யூவினையும் பார்த்து பிரமித்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம், அந்த பிரமிப்பினை அடுத்து, இது தற்காலிகமானது, எப்போதும் இப்படி வெளியீடுகள் கிடைக்காது என்ற எண்ணம் உடனே தோன்றி பிரமிப்பினை கரைத்திடும். ஆனால் இந்த முறை W.W. SPECIAL - புத்தகத்தை பிரித்ததும் வந்த பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை.

    W.W. SPECIAL - புத்தகத்தை எனது தாயாரிடம் காட்ட வேண்டும் என்று நினைத்தேன் ஏனெனில் முதல் முத்துகாமிக்ஸை என் கையில் கொடுத்து காமிக்ஸ் பழக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் அவர்தான். அவரிடம் W.W. SPECIAL - புத்தகத்தை கொடுத்தேன். புத்தகத்தை பிரித்த அவர் முகம், விவரிக்க முடியாத ஆச்சரிய உணர்வுகளை பிரதிபலித்தது. உடனே அவர் அட்டையை மறுபடி பார்த்து, முத்து காமிக்ஸா இது, சூப்பராக இருக்கின்றது என்று கூறினார். இந்த புத்தகத்தைப் புரட்டினால் அவருக்கு ஏற்படும் உணர்வைப் விளக்குமாறு கேட்டேன். அவர் பதில் “நேஷனல் ஜியாக்ரஃபி மேகஸினைப் போல் இருக்கின்றது என்றார்.

    அடுத்து, W.W. SPECIAL - புத்தகத்தை எனது தங்கையிடம் காட்டி அவரது கருத்தைக் கேட்டேன். (சிறு வயதில் எனது தங்கைக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு நான் வீட்டில் இல்லாத சமயம், எனது புத்தகங்களையும், ஆடியோ கேசட்டுகளையும் குடைவதுதான்). எனது தங்கையின் உடனடி பதில், தரத்திலும், படங்களைப் பார்க்கையிலும், ரீடஸ் டைஜஸ் புத்தகத்தைப் போல இருக்கின்றது என்றார்.

    W.W. SPECIAL - புத்தகத்தைப் பார்த்த உடன் எனக்கு தோன்றிய உணர்வு, நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்ட வண்ண மயமான ரஷ்ய சிறுவர் புத்தகங்களைப் பார்த்த போது என்ன உணர்வு தோன்றியதோ அதே உணர்வு ஏற்பட்டது. மிக்க மகிழ்ச்சி. இது போல இன்னும் பல வெளியீடுகள் தொடர்ந்து வெளிவரும் என்ற எண்ணம் எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

    எமனின் திசை மேற்கு கதையை படித்தேன். அருமை. எக்ஸலண்ட். உங்களது தேர்வுக்கும், உங்களது மற்றும் உங்கள் அனைத்து ஊழியர்களது உழைப்பிற்கும் எனது பாராட்டுக்கள்.

    மீண்டும் ஒரு முறை HATS OFF TO YOU.

    ஒற்றைக் கை கௌபாய் கதையை மட்டும் படித்தேன். படித்து முடிக்கும் போது இரவு 1.30. டைகர் கதையை படிக்கவில்லை. உங்கள் கனவில் மட்டுமல்ல, எனது கனவிலும் தோட்டாக்கள் பறந்தன, ஒற்றைக் கை கௌபாயும், குதிரைகளும் வந்தனர். ஏனோ தெரியவில்லை கல்லா பெட்டி மட்டும் ஒரு செகண்டு கூட வரவில்லை.

    எவ்வளவு முயற்சித்தும் எனது மனதை ஆக்ரமித்திருக்கும் எமனின் திசை மேற்கு கதையிலிருந்து மீள முடியவில்லை. கதையின் ஆக்ரமிப்பால் இன்னும் விவரிக்க மனம் விழைகிறது, ஆனால் அது இந்த புத்தகம் கிடைக்காத மற்ற வாசகர்களின் படிக்கும் உணர்வை சிதைத்துவிடும் என்பதாலும், முத்து விசிறி அவர்களின் ஜெரோம் கதைக்கான பின்னூட்டம் ஞாபகத்தில் இருப்பதாலும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

    லயன் - முத்து ஊழியர்களுக்கும், உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இந்த இதழும், காமிக் கானும் உங்களுக்கு மற்றுமொரு ”சிலங்கண்”.

    எமனின் திசை மேற்கு கிராஃபிக் நாவல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீளாததால், டைகரின் மரண நகரம் மிசௌரியை இன்னும் படிக்கவில்லை. W.W. SPECIAL - புத்தத்தில் முதல் கதையாக ஒற்றைக் கை கௌபாய் கதையை முதலில் வருமாறு தயாரித்தது சிறப்பான முடிவு.

    வான் ஹெம்மெ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் லெட்டர் எழுதி, ஒற்றைக் கை கௌபாயின் அடுத்த சாகசத்தை தொடர வேண்டுகோள் வைக்க வேண்டும் என்ற எண்ணம் பலமாக தோன்றுகிறது. (இந்த எண்ணம் ஸ்பாய்லர் இல்லையே!)

    மனம் நிறைந்த நன்றிகளுடன்,

    பாலாஜி சுந்தர்.

    ReplyDelete
    Replies
    1. Balaji Sundar : அழகானதொரு விமர்சனம் ! அதிலும் தங்களது தாயாரிடம் நமது இதழின் புது அவதாரத்தைக் காட்டி மகிழ்ந்தது nice touch ! டைகரின் கதையை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிடுவது சுலபக் காரியமல்லவே - so இந்த கிராபிக் நாவலுக்குக் கிடைத்திட்ட உச்சக்கட்டப் பாராட்டு அதுவே !

      ஒற்றைக் கை கௌபாய் தான் பனியில் மாண்டு, ஆண்டுகள் பலவும் உருண்டோடி விட்டனவே - அவரை உயிர்ப்பித்து இரண்டாம் பாகத்தை Van Hamme கொணர்வது எவ்விதம் சாத்தியமாகும் ? :-)

      Delete
    2. டியர் எடிட்டர், உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. ஒற்றைக் கை கௌபாயின் அடுத்த சாகசத்தை தொடர வேண்டுகோள் என்பது ஒரு அதிக ஆர்வக் கோளாரே!.

      சர் ஆர்தர் கொனான் டாயல் அவரது தாயாருக்கு எழுதிய கடிதத்தில் எழுதிய ஒரு விஷயத்தின் சாராம்;
      “அம்மா, இந்த ஷெர்லாக் ஹோம்ஸினால் என்னால் எந்த காரியமும் செய்ய முடியவில்லை. எந்த நேரமும் ஷெர்லாக் எனனுடைய மண்டைக்குள் நுழைந்து கொண்டு, என்னை எந்த வேலையையும் செய்ய விடாமல் என்னுடைய முழு கவனத்தையும் எடுத்துக் கொள்கிறான். அதனால், நான் முடிவு செய்துவிட்டேன். என்னுடைய அடுத்த கதையே ஷெர்லாக்கின் கடைசி கதை. அந்த கதையில் ஷெர்லாக்கை நான் சாகடிப்பதாக இருக்கிறேன்”.
      இந்த கடித்தத்திற்கு ஷெர்லாக்கின் தாயார் எழுதிய பதில் “டியர் ஆர்தர், உன்னுடைய கற்பனை படைப்புகளிலேயே சிறந்த கதாபாத்திரம், ஷெர்லாக்தான். ஷெர்லாக்கை சாகடிக்கும் உனது முடிவு ஒரு தவறான முடிவு. அதனால் நீ ஷெர்லாக்கை சாகடிக்காமல், அந்த கேரக்டரில் இன்னும் கவனம் செலுத்து என்று எழுதினார்.

      ஆனால் சர் ஆர்தர் கோனன் டாயல், தனது அடுத்த கதையில் புரபஸர் மோரியார்ட்டியுடன், ஷெர்லாக்கும் நீர்வீழ்ச்சியில் விழுந்து இறப்பது போல் கதையை முடித்தாராம். ஷெர்லாக்கின் மரணத்தை ஏற்காத ரசிகர்களின் கட்டாயத்தினால், டாயல் மீண்டும் ஷெர்லாக்கின் கதைகளை எழுதினாராம். இந்த உண்மை நிகழ்வின் தாக்கத்திலேயே, ஒற்றைக் கை கௌபாயை வைத்து அடுத்த சாகஸத்தை தொடர வேண்டுகோள் வைக்க வேண்டும் என்ற பின்னூட்டத்திற்கு காரணமாக அமைந்தது. Van Hamme-யின் அம்மா நீடித்த ஆயுளுடன் இருந்தால், அவருக்கு கடிதம் எழுதி, அவர் மகனிடம் ஒற்றைக் கையனை வைத்து கதை எழுத Pursue பண்ண வேண்டும்.

      Delete
  25. ஆசிரியரின் இந்த பதிவை படிக்கும் போது கண்களில் வந்த கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை! ஆனந்த கண்ணீர்.
    நானும் சனிகிழமை ஆசிரியரின், அண்ணாச்சி, மற்றும் நண்பர்கள் அனைவரயும் பார்த்து பேசினேன்! மகிழ்ச்சி!!
    யாரவது எனது மினஞ்சல் முகவரிக்கு எல்லா போடோவையும் அனுப்பிவையும்கள்!!! அடுத்த காமிக்-காண்ல் அன்னைவரியும் மீண்டும் காண ஆவலுடன் உள்லேன்!!

    ReplyDelete
  26. சிறுபராயத்தில் இருந்து காமிக்ஸ் என்பது ஒரு வகையான போதை போலவே எனக்கு இருந்தது. இதற்காக பெற்றோரின் கையால் அடிவாங்கிய நினைவுகள் கூட இன்னும் இருக்கின்றது ( படிக்காமல் கெட்டுவிடுவான் என்ற அக்கறை! )

    நான் இலங்கை என்பதால் அங்கு புத்தகத்தில் இட்டிருக்கும் இந்திய ரூபாய்களை விட எங்களது ரூபாய்களில் கொடுக்க வேண்டிய தொகை நான்கு அல்லது ஐந்து மடங்காக இருக்கும். பத்திரிகைக் கடைகளில் அத்திபூத்தாற் போல வருகின்ற காமிக்ஸ்களை வாங்குவது நான்தான். அதன் பேப்பர் வாசம் இன்னும் எனது நாசிகளில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது.

    அப்போதெல்லாம், புத்தகங்களில் இட்டுள்ள இந்திய ரூபாய்கள் இன்னும் கவர்ச்சியாக இருக்கும் 2.5 அல்லது 3 ரூபாய்கள் என்பதை பார்க்கும் போது, சே! நாமளும் இந்தியாவில இருந்திருக்கலாம் என்ற எண்ணம் உண்மையில் ஏற்பட்ட காலங்களையும் நினைத்து பார்க்கின்றேன்.

    அப்போது ஆரம்பித்த இந்தியா / தமிழ்நாடு வருகின்ற ஆசை இப்போது கூட இருக்கின்றது. சென்ற முறை சென்னை புத்தக கண்காட்சிக்கு வரவேண்டும் என்று திட்டமிட்டு வரமுடியாமல் போன போது அடுத்தமுறை நிச்சயம் செல்ல்ல வேண்டும் என்று உறுதியோடு இருந்தேன். அதற்கு ஒரே ஒரு காரணம் காமிக்ஸ் மாத்திரம்தான்.

    ஆனால், இப்போதைய நிலை - ஒரு இலங்கையனாக - எனக்கும் ஒரு கல் காத்திருக்குமோ என்ற அச்சத்தினை என்னுள் விதைத்துவிட்டுள்ளது.

    என்ன செய்ய??

    ReplyDelete
    Replies
    1. கறுவல் : விரைவில் உங்கள் தேசத்திற்கு இதழ்கள் வந்து சேர்ந்திடும் ....நண்பர் பிரதீப் அதற்கான முயற்சிகளில் இருக்கின்றார் !

      Delete
    2. திரு.விஜயன் அவர்களுக்கு, எந்த முயற்சியும் இருதரப்பும் சரிவர ஒத்துழைத்தால்தான் வெற்றியளிக்கும்.

      Delete
  27. Wild West Special Simply Superb! Especially Graphic Novel pictures background & theme colour excellent. Climax of Graphic novel heart touching. Again same request "Minnum maranam" in colour reprint. Surprised to know balance of tiger stories to be published. irumbukai ethan reprint seilame.

    ReplyDelete
  28. Dear editor,

    நமது Comeback special-லில் இருந்து நம் தயாரிப்புத்தரம் ஒட்டுமொத்தமாய் உயர்ந்து, காமிக் கானில் அட்டகாசமான வெற்றியைக் கொடுத்து, நாம் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள பெரிதும் உதவியிருக்கிறது.

    இந்தத் தரமே இப்போதெல்லாம் பஸ்ஸிலோ, ரயிலிலோ நாம் பயணிக்கும்போது கூச்சமில்லாமல் அனைவரின் முன்னிலையில் புத்தகத்தை படிக்க உதவுகிறது.

    இந்தத் தரமே பல புதிய தலைமுறை வாசகர்களுக்கு நம் காமிக்ஸ்களை கையிலெடுக்க உதவுகிறது.

    இந்தந் தரமே மற்றவர்களை படிக்கச் சொல்லி பரிந்துரை செய்யவும், வாங்கச் சொல்லவும் பெரிதும் உதவுகிறது.

    இந்தத் தரமே வாங்கும் புத்தகங்கள் பலவருடங்களுக்குக் கிழியாமல் இருக்குமென்ற பாதுகாப்பு உணர்வைத் தந்து நிறைய வாங்கி அடுக்கி வைக்கும் உத்வேகத்தைத் தருகிறது.

    இந்தத் தரமே உங்களது உண்மையான உழைப்பிற்கான பலனை மற்றவர்களிடம் முழுமையாய் கொண்டு சேர்த்து 'சபாஷ்' பெற வைக்கிறது.

    இந்தத் தரமே ஒரு மறைமுக விளம்பர யுக்கியாகிப் பல புதிய சந்தாதாரர்களையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது.

    இந்தத் தரமே பல புத்தகக் கடைக்கார்களுக்கும், ஏஜண்ட்டுகளுக்கும் அழைப்பிதழாய் அமையப் போகிறது.

    இந்த உலகத்தரத்தை முன்னிறுத்தி நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் பயணம் பெறு வெற்றியடைய இப்பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளையும் வேண்டிக்கொண்டு, இப்பயணத்தில் உங்களுடன் எப்போதும் நாங்களிருப்போம் என்ற உறுதிமொழியும் தந்து, பகலிரவென்று பாராமல் உங்களுடன் சேர்ந்து ஓயாது உழைக்கும் உங்களுக்கும், குறிப்பாக உங்கள் டீமிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்த்துக்களுடன்,
    ஈரோடு விஜய்

    ReplyDelete
    Replies
    1. இந்த தரமே ஈரோடு விஜய் போன்ற அருமையான நண்பர்கள் கிடைக்க வழிகோளுகிறது

      Delete
    2. vijay Erode : தரமெனும் தாரக மந்திரத்தை உச்சரித்துப் பழகி விட்டோமல்லவா ...? இனி no looking back !

      Delete
    3. dear editor,

      தரம் மட்டுமல்ல, அறிவிக்கப் பட்ட நாளிலேயே புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதும் (WWS - ஒரு வாரம் முன்னதாகவே!) நம்மைப் பொருத்தவரை ஒரு சாதனைதான்.  புத்தகத்தின் தரத்தைப் பார்த்து நம்பமுடியாமல் ஆச்சரியப்பட்ட நண்பர் பாலாஜி சுந்தரின் தாயார் கூட  முத்து காமிக்ஸ் குறித்தநாளுக்கு முன்பாகவே வெளியிடப்படும் விஷயத்தைச் சொல்லியிருந்தால் "அடப்போங்கப்பா, முத்துவாவது... குறித்த நாளில் வெளிவருவதாவது... இதில் ஏதோ ஏமாற்று வேலை இருக்கிறது" என்று சொல்லியிருப்பார்.
      ஆனால், நம்ப முடியாத அதிசயங்களும் நடந்துகொண்டுதானே இருக்கிறது!

      ஆகவே, நீங்கள் சொல்லிய 'No looking back' தரத்திற்கு மட்டும்தான் என்றில்லாமல் இந்த 'in time' வெளியீட்டு முறைக்கும் சேர்த்துத்தான் என்று நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா?



      Delete
  29. //குடும்பத்தோடு வந்திருந்ததொரு நண்பர் என்னிடம் பேசிடத் தயங்கியவாறே தள்ளி நின்றே நம் ஸ்டாலைப் படம் பிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்க, அவரை அழைத்துப் பேசிய போது அவர் முகத்தில் தெரிந்த பிரகாசப் பிரவாகம் மெய்யாக என்னை உலுக்கியது. "நீங்கள் 17 வயசிலேயே வெளிநாடெல்லாம் போய் காமிக்ஸ் கதை வாங்கி வந்தது பற்றியெல்லாம் வீட்டில் சொல்லிக் கொண்டே இருப்பார் ' என்று அவரது துணைவியார் கூறிய போது விக்கித்துப் போனேன. முகமறியா தூரத்தில் ; வெறும் பெயராகவும் ; ஹாட்லைன் எனும் ஒரு பக்கத் தொடர்பு மாத்திரமே பாலமாக இருந்திட்ட போதிலும், காமிக்ஸ் எனும் நேசம் இத்தனை சக்தி வாய்ந்ததா என்பதை உணர்ந்திட இயன்ற போது வார்த்தைகள் வரவில்லை எனக்கு ! அவர்தம் குடும்பத்தோடு போட்டோ எடுத்துக்கொண்டேன் ..எனினும் அவர்களிடம் அதன் ஒரு பிரதியை அனுப்பிடச் சொல்ல இயலாது போயிற்று ! இந்த வலைப்பதிவைப் படித்திடும் நண்பராக அவர் இருந்திடும் பட்சத்தில், please - ஒரு மின்னஞ்சலில் அப்புகைபடத்தினை எனக்கு அனுப்பிடுங்களேன் ?!

    That was my Brother Jegan . I have asked him to send photo to our comics yahoo id .Though he is an ardent fan of comics , you couldn't find him in this blog . It's him who introduced to me this wonderful world of comics . The experiences that we had in collecting our comics from second hand shop during our child hood days is something that will be cherished throughout our life time . Also Mr.Karunaianadham who did some translation work for our comics is my father's friend .

    ReplyDelete
  30. வாசக நண்பர்களின் கேள்வி இருக்கட்டும்.அதற்க்கு நீங்கள் சொன்ன பதிலையும் எழுதலாமே சார்?.(சாத்தானுக்கு கேள்வி பிடிக்காது.பதில்தான் பிடிக்கும்.ஹிஹி).

    ReplyDelete
  31. அருமையாக சொன்னீங்க தலைவா நாங்க உங்க ரசிகர்கள் அப்புறம்தான் எல்லாம்! ஆமா!

    ReplyDelete
  32. 21/09/2006 ல மறைந்த என் தந்தையார் திரு.சின்னப்பன் அவர்களுக்கு உங்க ஹாட் லைன் அவ்ளோ பிடிக்கும்! அவருக்கு இருந்த ஒரே குறை பதிமூணு படிக்காததுதான். நான் கடிதம் எழுதும்போது அழுத்தம் கொடுத்து கேட்ட பல கதைகள் அவர் கருத்துதான். இது போல நிறைய பேர் உங்களுக்கு இருக்காங்க தலைவா! பகிர நேரமில்லாதவர்கள்! தமிழ் நாட்டின் இளைய தலைமுறைக்கு (நாங்களும்தான்!!! ஹி ஹி ஹி ) நீங்க ஒரு அடையாளம் சார்! இது வெறும் புகழ்ச்சியல்ல! காஷ்மீரில் இருந்த என் மாமா சுட்டு போன காமிக்ஸ்கள் உண்டு சார்! வாழ்க! வளமுடன்!

    ReplyDelete
  33. இரும்புக்கை எத்தனின் முந்தைய பாகங்கள் என்னிடம் இல்லை. அதனை எப்படிப் பெறுவது? அல்லது மறுபதிப்பு செய்வீர்களா?
    தலையும் புரியாமல் வாலும் புரியாமல் படிப்பது மிகுந்த சிரமமாக இருக்கும். தற்சமயம் உங்களுக்கு நிறைய புதிய வாசகர்கள் கிடைத்திருப்பார்கள், அவர்களுக்கு எப்படி அந்த மீதிக்கதையைத் தருவது??/?

    ReplyDelete
  34. Dear Sir,
    I am also one of the few blessed people who was able to meet you in person in COMIC CON Bangalore.
    I could not talk to you much because

    1. I did not know what to talk due to too much of blood rush to my head with the Happiness in seeing you and our comics

    2. My KID was not allowing me stand in the same place :)

    My self and Rafiq planned to take a interview of you next day but could not catch you :(

    The best thing I got from our comics is I am able to tell my kid a good story every night when she requests me before sleep.

    As you commented and listed out what everyone wants from you ( re print, collector edition etc..)
    which may not be feasible but I would like to re itrate one point for you to consider,

    you did say to me to Get my kids to read books, The only way I can get them to read is if the books for them is targeted for under 15 age people.

    I love the stories in W. W. Special, LARGO WINCH and comeback special but the only book I was able to give to my daughter is "new look special" as that is the only book she enjoys and I am comfortable to give to her for reading.

    so to get young readers to read and get next generation for our books, we need books targeting them and for them.

    So please do consider getting Junior Lion books separately .

    Regards
    Suresh




    ReplyDelete
  35. அன்புள்ள ஆசிரியருக்கு
    ஒரு அற்புதமான புத்தகம்.ஓவியங்கள் அருமை! அருமை! அருமை!.
    மொழிபெயர்ப்பில் இன்னமும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். ஓவியங்களின்
    Extra Ordinary தரத்தால் இதுவும் ஒரு Never Before Special . டைகர் கதையில் சில இடங்களில் நீல வண்ணம் Boundry விட்டு வெளியே வந்துள்ளது. அதில் சற்று கவனம் தேவை.மற்றபடி முத்துவில் இது வரை வந்துள்ள வெளியிடுகளுள் இந்த இதழ் A gem in the crown.

    தாங்கள் காமிகானின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வாசகர்களாகிய எங்களை ஏதோ லட்சங்களை உங்கள் பதிப்பகத்தில் முதலிடு செய்த சேர் ஹோல்டர்களை போல மதித்து இத்தனை விரிவாக மனதில் தோன்றியதை மறைக்காமல் விவரித்துள்ள விதம் You are such an wonderful person. I'm speech less. May god bless you all for a greater success!!

    ReplyDelete
    Replies
    1. //வாசகர்களாகிய எங்களை ஏதோ லட்சங்களை உங்கள் பதிப்பகத்தில் முதலிடு செய்த சேர் ஹோல்டர்களை போல மதித்து இத்தனை விரிவாக மனதில் தோன்றியதை மறைக்காமல் விவரித்துள்ள விதம்//

      I felt the same way. And all of us are proud and happy for our comics sucess in the comic con.

      Delete
  36. விஜயன் சார்,

    தங்களின் கட்டுரையை படித்தபோது கண்கள் பனித்தன. நேரில் வராத குறையை தங்களின் பதிவும் மற்றும் மற்ற நண்பர்களின் பதிவும் தீர்த்து வைத்தன. தற்பொழுது வருகின்ற நமது இதழ்கள் ஓவொன்றும் மிகவும் தரமாக இருக்கின்றன.
    இந்த ஞாயிற்று கிழமை எனக்கு WW ஸ்பெஷல் கிடைத்துவிடும் (காமிக் CON ல் 10 புத்தகங்களை வாங்கிய நண்பர் மூலமாக). படித்துவிட்டு என் எண்ணங்களை தெரியப்படுத்துகிறேன்.

    அன்புடன்,
    ராஜா, France.

    ReplyDelete
  37. சார், எனக்கு இன்னும் WWS காபி வரவே இல்லை. "சொக்கா, எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? எல்லாரும் படிச்சுட்டாங்களே..! நான் மட்டும்..."

    ReplyDelete
  38. Its been more than 10 days after the release of WWS, still i have not received my copy in chennai, i have even called Lion Office two days back, they told its been dispatched, Please Send me the book.

    S.Mahesh

    ReplyDelete
  39. உங்களது காமிக் கான் முயற்சி வெற்றி அடைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
    WWS மிகவும் அருமை.
    அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்த ஒரு இதழ்.
    இதற்கான நமது குழுவின் உழைப்பு பாரட்டதக்கது.
    கண்டிப்பாக இதனையும் மிஞ்சும் ஒரு இதழ் விரைவில் மீண்டும் தருவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
    இன்றைய நிலையில் நமக்கு நாம் தான் போட்டியாளர்.
    இன்னும் சொல்லபோனால் நாம் சச்சினை போல நமது ரெகார்டை நாம் தான் முறியடிக்க வேண்டும்.
    கண்டிப்பாக அது நடக்கும்.
    எங்களது ஆதரவும் கண்டிப்பாக இருக்கும்.

    ReplyDelete
  40. // பூத வேட்டை & மரண தூதன் + discontinued tex story that came in comic express: டெக்ஸ் வரிசையில் எக்கச்சக்கமாய் கதைகள் உள்ளதால் சில நேரம் இது போல் விளம்பரப் படுத்தப் பட்ட கதைகள் தூங்கிப் போவதும் உண்டு. தூசி தட்டி சீக்கிரமாய் எடுக்கப் பார்க்கிறேன்.

    // Chinaman தொடர் நல்லதொரு கதைக் களமே....இவரை நம் இதழ்களுக்குக் கொண்டு வரலாம் தான்...திரும்பவும் முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்...! நினைவுபடுத்தியதுக்கு நன்றிகள் அருண் பிரசாத்.

    Please consider these books also for this year . I am looking forward to this chinaman story . We never had Chinese characters in our comics so far

    ReplyDelete
    Replies
    1. டியர் அருண் ,,,,,,,,,பூத வேட்டை ,,,,,,,,மரண தூதன்,,,,,,,,,,, இன்னும் ,,,பழைய புத்தகங்களை ,,,,,,,,,,,புரட்டி பார்த்தால்,,,தலை சுற்றுகிறது ,,,, பல,,,,,,,,, வருகிறது ,,,,,,,,,, விளம்பரங்கள் ,,,,,,,, டெக்ஸ்ன் மரண தூதர்கள் என்று,,,,,, பாக்கெட் சைஸ் ல் ஒரு புத்தகம் வந்ததே,,,,,,,, அது வேறு கதையா ?

      Delete
  41. SIR, salaam bengalore padika,padika santhosamaga irunthadu.WW SPECIAL simply super sir. anal bookil ORU siriya THAVARU. veliyeetu no.316 .but 315 ena print agiullathu. parthu sir. namadu comics "VARALARU MIGAVUM MUKKIYAM ARASARAY" :)

    ReplyDelete
  42. //அன்றைய இரவு COMIC CON நிறைவு பெற்ற போது எங்களின் 2 நாள் விற்பனை ரூபாய் 40,000 -ஐ தொட்டு இருந்தது ! பிரமித்துப் போனோம் என்பது நிச்சயம் ஒரு understatement ! //

    ,அஹா ஏமாற்றி விட்டீர்களே சார்,மேலிருந்து விழுவது போல உணர்ந்தேன்,ஆனால் நிச்சயம் அது 4 ,௦௦,௦௦௦ ஏன் அதற்க்கு மேலும் கட்டாயம் நடைபெறும்.சில சமயம் நாம் தவறு என நினைத்தது ,வரும் காலங்களில் சரியாய் நடக்கும்....................கண்டிப்பாக .உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் .......அந்த gift பாக்ஸ் ய்

    திறந்து வைத்திருக்கலாம் ..........பார்த்தாலே பசி தீருமல்லவா ...............

    ReplyDelete
  43. மிக மிக அருமையான ஒரு தொடக்கம் விஜயன் சார்
    தொடருங்கள் உங்கள் சிங்க நடையை :))
    .

    ReplyDelete
  44. விஜயன் சார் .. வலைப்பதிவு இப்போது மெலோடிராமாடிக் உணர்வை தருகிறது ...

    உங்கள் அணியின் velaiyai பாராட்டவேண்டும்.

    நான் இங்கே சில புள்ளிகள் சுட்டிக்காட்ட virumbugiren

    we have to bring down the கூரியர் cost....

    உங்கள் முந்தைய வலைப்பதிவு ஒன்றில் you have stated that .. Margin for store people is 20% என்று ..

    why can't we use this 20% margin for reducing the கூரியர் price at-least for our readers who get it through sandha...

    i apologize..if i have offended anyone. This is just a suggestion...

    ReplyDelete
    Replies
    1. dear Senthil,

      வாழ்த்துக்கள் நண்பரே!  உங்களுடைய கேள்வி நம் எடிட்டரை சற்று நெளியவைக்கும் என்றாலும், சந்தாதாரர்களுக்கு ஒரு 10%மாவது சலுகை கொடுப்பது(கடைகளில் ரூ.100 என்றால், சந்தாதார்களுக்கு ரூ.90) பழைய சந்தாதார்களுக்கு பயனளிப்பதோடு, புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கையை மேலும் கூட்டிட கண்டிப்பாய் உதவுமென்று தோன்றுகிறது. பல முன்னணி வார/மாத இதழ்கள் ஏற்கனவே கடைபிடித்துவரும் ஒரு வியாபாரத் தந்திரம்தான்.

      எனினும், நம் அன்புக்குறிய எடிட்டர் உலகத்தரம் வாய்ந்த சமீபத்திய வெளியீடுகளை (மற்ற புத்தக நிறுவனங்களைக் காட்டிலும்) குறைவான விலைக்கே கொடுத்து நம்மை மகிழ்வித்து வருகிறார் என்பதையும் நாம் மறுக்க இயலாது.
      நம் நோக்கம் - நமக்கு தரமான காமிக்ஸ்கள் தொடர்ந்து கிடைத்திட வேண்டுமென்பதே! நம் நோக்கம் இதுவென்றால், விலைகளில் காட்டப்படும் இதுபோன்ற சிறிய சலுகைகள் உண்மையில் ஒரு பொருட்டே அல்ல என்பதும் உண்மையே!

      எனவே, இவ்விஷயத்தில் சாதக-பாதகங்களை அலசி ஆராய்ந்து நம் எடிட்டர் எடுக்கும் எந்த ஒரு முடிவும் ஏக மனதாக எல்லோராலும் ஏற்கப்படும்.

      நம் காமிக்ஸ் பயணம் மீண்டும் நல்லதொரு  பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற எந்தவொரு கேள்வியும் நம் எடிட்டருக்கு சஞ்சலத்தை ஏற்படுத்திவிடக் கூடாதென்ற பயமே எல்லாவற்றையும்விட மேலோங்கி நிற்கிறது.

      அன்புடன்,
      ஈரோடு விஜய்

      Delete
    2. Thanks Vijay..I Agree whole heartily..
      We were having few discussions early on from our friends saying that..we need to reduce the price of the book...i thought this would address their issue as well as this would be a little push for the new joiners..

      Delete
    3. We are getting our books in international quality, also the price is less if you compare with regular magazine or other Indian comics. So I am happy with the current price and not expecting any discounts for regular reader. Also our editor is doing it for passion and the profit he gets here is not much, which I understood from his blogs and personal discussion.

      I am just giving my thoughts!

      Delete
    4. I agree with you Barani!

      "When a farmer do account, nothing will come as profit..." Likewise what will come as profit at the end of this few thousand circulation business...? The answer is nothing!

      Agents will have to buy minimum 10 and more copies for their sale purpose, they are supposed to ask for their discount. If the publisher is really making good profit, we, readers may ask for discount (are we are not supposed to do that?) But our Editor releasing just a thousand and above copies i beleive... that too all the copies wont sell at one month... He has to maintain a godown to back up the unsold copies for more than one year... Our Vijayan Sir, already quoted once as this is the direct marketing he didnt include the agent share... He just offering 20 percent discount to the agents who come for enquiry.. This collector edition is purely for Readers Priviledge...

      Dear Senthil, We understand your concern for heavy psotage rates.. Let the editor find a solution for that....
      Courier charges may expensive compare to postal (for 500gm weighted book), but it is safer...

      Delete
    5. ஆசிரியர் இதற்க்கான பதிலை முன்பே கூறியுள்ளார் நண்பர்களே ...............நமது விற்பனையாளர்களுக்கு கமிசன் தராததாலே இந்த விலை சற்று குறைந்த பிரரதிகலெனினும் சாத்தியமாயிற்று என்று.கண்டிப்பாக பிற பதிப்பகங்களின் புத்தகங்களுடன் ஒப்பிட்டால் .......................மேலும் புத்தகங்களின் பக்கங்கள் குறைந்ததெனும் கேள்விக்கும் பதிலாய் முதல் கதைக்கு பின்னர் வெள்ளை தாளின் தரம் உயர்த்த பட்டுள்ளது .........ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.......தாளின் விலை ,மையின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களும் கூறியுள்ளார் .............

      Delete
    6. இந்தியாவுக்குள் அனுப்பும் தபால், கொரியர் செலவுக்கே இங்கே சில நண்பர்கள் மாற்றுவழி உண்டா என்று தேடுகிறார்கள். சலுகைகள் கேட்கிறார்கள். அப்படியானால், கடல் கடந்திருக்கும் எங்களுக்கு (அதிலும் சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் எமக்கு) சார்ஜ் செய்யப்படும் தபால், கொரியர் கட்டணங்களைக் கேட்டால் இவர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

      Delete

  45. இந்த கதையில் தங்களின் கூற்று போல லாந்தர் விளக்கு வெளிச்ச வண்ணத்தில் கூட ஒரு சோகம் இளைந்தோடுவது கதையின் சோக ஓட்டத்திற்கு மேலும் சோகத்தை தந்துள்ளது. மாந்த்ரீகனின் கதை இதனை சோகத்திற்கு ஒரு காவியம் என நினைத்தேன்,அதில் ஓவியங்கள்,கதை மொழி பெயர்ப்பு தூக்கலாக இருக்கும்,இங்கே வண்ணமும் கதாசிரியரின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது வெகு சிறப்பு .தந்தை என்னதான் தீயவர் எனினும் மகள் மேல் கொண்ட பாசம் என துவக்கம் அவர் மேல் அனுதாபம் கொள்ள செய்கிறது.இவரா கொல்ல பட போகிறார் எனும் வருத்தத்தை ஆரம்பத்திலே விதைத்து விடுகிறது.டடாங்கா ஐயோடாகே வாகீஈடா என்ன ஒரு புரியாத ஆனால் அழுத்தம் கொடுக்க பட்ட சக்தி மிகுந்த வார்த்தை .....................



    கடைசி இரு பக்கங்களே மிக பெரிய சோகத்தில் என்னை ஆழ்த்தியது.பாவம் அந்த பெண்.மனிதர்கள் தீயவர் எனில் அவர்கள் சகவாசம் சாகும் போது கூட பிறரை காய படுத்தும் என்பதற்கிணங்க குரூர எண்ணம் கொண்ட அந்த ஷெரீப் .உயர்ந்த பண்புள்ள ,சகோதரன் என விலகி செல்லும் கேத்தி ,பின்னர் சகோதரன் இல்லை என்று தனது காதலை வெளிபடுத்தும், இறந்த நாயகனை அந்த சுட்டு கொன்ற இரவு மனதை ஏதோ செய்கிறது ,(இதே எண்ணம் கஜினி படத்தில் நாயகி,நாயகனை பற்றி அறியாமல் சாகும் அந்த வலி ...................)அதிலும் தான் சகோதரனைத்தான் காதலித்துள்ளோம் என மீண்டும் உடைவது என கதாசிரியரின் உணர்ச்சிகரமான காவியம் எனில்,மழை இவளவு சலனங்களோடு சலனமின்றி பெய்து கொண்டிருக்கிறது தனது கடமை ஆற்ற என கடைசி கட்ட ஓவியம் மெய்யாலுமே கவிதை பேசுகிறது.எது நடந்தாலும் உலக இயக்கம் மாறாது,நடப்பது நடந்து கொண்டுதானிருக்கும் உங்கள் கண் முன்னே உங்களுக்கான நியாயங்களை காட்டி கொண்டே.அவனோ இறந்தான்,முடிந்தது எல்லாம் அவனுக்கு ஆனால் புதிய வலியை தாங்கி கொண்டு ,மேலும் வரும் நாட்களை சந்தோசமாக கழிக்க அருள் செய் உடைந்து போன அந்த அப்பாவி பெண் மணிக்கு ..............என வேண்ட தூண்டுகிறது என்னை.... இதற்கு காரணம் அவள் அவனை அந்த புத்தாண்டு அன்று விலகுவது, ஏதோ தவறு என எண்ணி விலகினால் ,அந்த கயவன் செர்ரிப் மீண்டும் அவள் மனதை குதறி விட்டான்.......


    அன்பு ஆசிரியருக்கு இது போன்றே நமது நண்பர்களை பிற(நாயகன் மேல் ......) சோகங்கள் ஆட்கொண்டுள்ளது .அதாவது தங்களின் இந்த தேர்ந்தெடுப்பு மிக பெரிய நாயகர்களின் மத்தியில் ,அறிமுகமில்லாத நாயகர்கள் மாபெரும் வெற்றி பெறுவது போல.இங்கே ஒவொரு ஓவியமும் அற்புதமே,உணர்ச்சி கட்டமான கட்டங்களை தீட்டிய அந்த ஓவியர் ,கதாசிரியர் மனிதர்களாக தெரியவில்லை கண் முன்னே .மேலும் கதையின் தொடர்ச்சியாக வரும் ஓவியங்கள் அந்த 26 ம் பக்கம் கடைசி இரண்டு கட்டங்கள் frond view , side view கவனிக்க தவறாதீர்கள் நண்பர்களே ,என்னவொரு அற்புதமான பொறுப்பான ஓவியரின் கை வரிசை .....


    இந்த கதையின் வெற்றி ,மாந்திரீகனின் கதை,நரகத்தை பார்த்தேன்......போன்ற கதைகள் போல உணர்வுகளோடு பேசி விட்டன.இது போன்ற கதைகளை தேர்ந்தெடுக்க நமது நண்பர்கள் பக்க பலமாக உள்ளார்கள் ,என்பது எங்களது கருத்துக்கள் தங்களுக்கு தெரிய படுத்தி இருக்கும் ,உங்களுக்கும் தெரியாததல்ல நீங்களும் ஒரு ரசிகர் என்ற முறையில்.காவியங்கள் எப்போதாவது அபூர்வமாக பூக்கும்,இந்த குறிஞ்சி மலரை எங்கள் முன்னே படைத்த தங்களை எப்படி பாராட்ட ..............................தங்களின் தேடலுக்கு எனது இந்த சிறிய கடிதம் சற்றேனும் உங்களை உற்ச்சாக படுத்தினால் போதும் என்ற பிற நண்பர்களின் எண்ணம் போன்றே நானும் ,இன்னும் இது போன்ற மலரை படைக்கும் தங்களது காதலை சற்றும் குறைத்து விடாது தொடர ,தொடர்வோம் ..................

    நமது வெற்றி மேலும் தொடரும் நிலையில்,நமது புத்தகத்தின் தரத்தின் ஊடே ,கதையும் தரமாக மலர்வது நமது வரும் காலங்கள் சிறப்பாக இருக்கும் என்பது கண்கூடு .சிறு வயதில் என்னை குதூகல படுத்திய கதைகள்,இன்று வளர்ந்த நிலையில் மனதோடு பேசும் கதைகள் என நமது லயன் நண்பன் போலவே தொடருகிறது ........தொடரும் .........இது நமது "நட்புக்காக" .....உங்களின் தரமான காமிக்ஸ் தர வேண்டும் என்ற "காதலுக்காக ".......வளர்க !வளர்க !!வளர்க!!!

    ReplyDelete
    Replies
    1. sreel claw::

      அணுஅணுவாய் ரசித்து அற்புதமாய் விமர்ச்சனம் எழுதியிருக்கிறீர் நண்பரே!
      காவியமாய் ஒரு கதை - அதைக்
      கவிதையாய் காட்டும் நம் steel claw!
      உங்களது இந்த விமர்சனத்தைப் படிக்கும்போது ஏனோ என் விழிகளின் வெண் திரையில் வைரமுத்து மின்னி மறைகிறார்.
      வாழ்க! வளர்க!

      Delete
    2. Vijay Erode: அவர்தான் கதையையே சொல்கிறார் என்றால், நீங்களும் அதைப் பாராட்டிக்கிட்டு. ஓ... நீங்களும் வாசித்தோர் லிஸ்ட்டில் இருக்கிறீர்கள் போல..


      கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: இன்னும் இந்தப் புத்தகங்கள் கிடைக்காதவங்களப் பத்தி கொஞ்சமேனும் யோசிக்கமாட்டீங்களா ப்ரண்ட்ஸ்? மத்தவங்களப் பத்தி யோசிக்கிற எண்ணம் நமக்குத்தான் இல்லியே?

      Delete
  46. நண்பரே. இதழை இன்னும் படிக்காத பலர் இருக்கையில் இப்படி கதையின் முடிவையே அசால்ட்டாக சொல்லியிருக்கும் உங்களை எப்படிப் பாராட்டுவது? உங்களுக்கு ஆசிரியரை உற்சாகப்படுத்தும் எண்ணம் இருந்தால் கதையைச் சொல்லாமலே பாராட்டலாமே? ஏற்கனவே பல தடவை பலரும் சொல்லிவிட்ட விடயம்தான் இது! ஆனால், சிலர் இன்னும் கதைகளைச் சொல்லியே பதிவிடுவதைப் பார்க்கையில் மனவருத்தமாக இருக்கிறது. ஒரு கமெண்ட் போட்டு அதனை டெலீட் செய்துவிட்டு இன்னொரு கமெண்ட் போட்டு என்று, கமெண்ட் எண்ணிக்கையை அதிகமாக்கி, புதிய கமெண்ட்கள் வந்திருக்கின்றன என்று தேடிவரும் நண்பர்களுக்கு அது ஏமாற்றமாக இருக்கும் என்பதும் ஏன் இன்னமும் உங்களுக்குப் புரியவில்லை என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. நீங்கள் ஒன்று செய்யுங்கள், வரிக்கு வரி கதையை எங்களுக்கு சொல்லிவிடுங்கள். புத்தகம் வாங்கி வாசிக்கவேண்டிய அவசியமே இருக்காது எமக்கு. செலவும் மிச்சயம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் Bond அவர்களே!
      உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. உங்கள் வார்த்தைளில் உண்மை இல்லாமலில்லை.
      ஆனால், நண்பர் steel clawவின் கதை விமர்சனம் இதுவரை படிக்காதவர்களுக்கும் அதைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி இன்னும் ரசித்துப் படிக்கவைக்கும் விதமாகவே அமையும் என்பது என் தாழ்மையான கருத்து!
      ஒரு திரைப்படம் வெளிவந்த இரண்டாவது நாளே அதன் விமர்சனம் தினத்தந்தியிலும், குமுதம், ஆனந்தவிகடனிலும் நல்லவிதமாக எழுதப்பட்டுவிட்டால் தியேட்டர்களில் கூட்டம் அதிகரிப்பதும் நாமறிந்ததே!
      ஒரு நல்ல கதைக்கு நல்ல விமர்சனம் நல்லதையே செய்யும்.

      Stay cool, dear friend!

      Delete
    2. Vijay Reode: விமர்சனத்தை வரவேற்கிறேன் நண்பரே. அது கட்டாய தேவையும்கூட. ஆனால், கதையின் உயிர்நாடியான முடிவைச் சொல்லிவிட்டாரே.. அதைத்தான் ஏற்கமுடியவில்லை. நீங்களே சொல்லுங்கள்... கதை வாசிக்கும்போது முடிவு இப்படித்தான் இருக்கப்போகிறது, அந்த உறவுகளுக்கிடையிலான பிணைப்பு இப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரிந்தால் முழு எதிர்பார்ப்பும், சுவாரஸ்யமும் இல்லாமற் போய்விடும்தானே? இதனை அவர் தனது தனிப்பட்ட ப்ளாக்கில் எழுதியிருந்தால் நாம் ஏதும் சொல்லவேண்டி வந்திருக்காது. ஆனால், பலரும் அடிக்கடி வந்துபோகும் பொதுவான இந்தத் தளத்தில் எழுதியதை எப்படி வரவேற்கமுடியும் சொல்லுங்கள். இதைச் சுட்டிக்காட்டாவிட்டால் இனியும் இது தொடரும் என்பதாலேயே சொன்னேன். அது தவிர நீங்கள் குறிப்பிட்டதுபோல சினிமா விமர்சனம் எழுது; பத்திரிகைகள் கூட படத்தின் முடிவைச் சொல்லிவிடுகின்றனவா? அது அந்தப் படைப்புக்கும் படைப்பாளிக்கும் செய்யும் துரோகமல்லவா?

      Delete
    3. உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது நண்பரே,இது கண்டிப்பாக மன்னிக்க முடியாத துரோகம்தான்.ஏனென்றால் நானே எனக்கு புத்தகம் கிடைக்காதிருந்தால் கண்டிப்பாக கதை சுவாரஸ்யத்தை இழந்திருப்பேன்.இன்னும் எழுத இருந்தேன்.தடுத்தமைக்கு நன்றிகள் .ஒரு வாரம் கழிந்து விட்டதே என அனைவருக்கும் ஏறத்தாள கிடைத்திருக்கும் என எண்ணியதன் விளைவு, தங்களை போன்ற தூரத்தில் இருக்கும் நண்பர்களை மறந்ததுதான் போனேன்.இனி மேல் இது போன்ற முந்திரி கொட்டை தனங்களில் ஈடு பட மாட்டேன்.தவறு என்றால் அது தவறுதான் ,மேற் கொண்டு தொடராமலிருக்க தங்களை போன்ற நண்பர்களின் கருத்துக்களே உதவும்.ஆசிரியர் இதில் தனியாக விமர்சன பகுதிக்கு என ஒரு லிங்க் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.படித்தவர்கள்,தங்கள் கருத்துகளை சொல்ல ஏதுவாக இருக்கும்,படிக்காதவர்களின் சுவாரஸ்யத்தையும் குறைத்து விடாது ........மேலும் திங்கள் கிழமை அனுப்பினால் நன்றாக இருக்கும்,வெள்ளி அனுப்பினால் கிடைக்காத நண்பர்களுக்கு இரண்டு நாட்கள் நரகம்தான்,எனது எண்ணத்தை மட்டுமே கூறினேன் .அனைத்துக்கும் நன்றி நண்பரே .......

      நண்பர் விஜய்க்கு நன்றிகள் .....................

      Delete
    4. நண்பர் Bond அவர்களே!

      உங்கள் வாதத்திலிருக்கும் நியாயத்தை முழுக்க ஒப்புக்கொண்டு உங்களுக்கு பின்னூட்டமிடவிருந்த நேரத்தில், நண்பர் steel claw  முந்திக் கொண்டு பின்னூட்டமிட்டு தன் வருத்தத்தை தெரிவித்து, தான் ஒரு நல்ல மனிதர் என்பதையும் புரிய வைத்துவிட்டார்.
      உங்களது கடைசி பின்னூட்டத்தைப் போலவே இன்றைய முதல் பின்னூட்டமும் கொஞ்சம் 'தன்மை'யோடு இருந்திருக்குமானால், இப்படிப்பட்ட விவாதங்களுக்கும் இடமில்லாமல் போயிருக்கும். எனினும், இப்படிப்பட்ட விவாதங்களே உங்களைப் போன்ற நல்ல நண்பர்களை அடையாளம் காட்டிடவும் உதவுவதை மறுக்க முடியாது.

      ஒரு ஆரோக்யமான விவாதம் அழகான திருப்பத்தில் முடிந்திருப்பது மட்டற்ற மகிழ்சியளிக்கிறது.

      WWS புத்தகம் உங்களுக்கு சீக்கிரம் கிடைக்கப் பெற்று, நாங்கள் பெற்ற இன்பத்தை தாங்களும் பெற்றிட வாழ்த்துகிறேன்!


      Delete
    5. முன்னர் நான் இட்ட பின்னூட்டத்தில் வார்த்தைகள் கடினத்தன்மையோடு இருந்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!

      சட்டென்று ஒரு விடயத்தைச் சொல்லவந்ததால் வார்த்தைகள் பற்றி கவனிக்கவில்லை. ஆனாலும், நான் சொல்ல வந்த விடயத்தை புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

      யாரும் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. அவரவர்க்கு அவரவர் உரிமை இருக்கிறது. ஆனால், யாரும் பாதிக்கப்படாமல், வருத்தமடையாமல் அவற்றை உபயோகிப்பதே சிறந்தது. அது எனக்கும், எல்லாருக்குமே பொருந்தும். உங்களைப் போன்ற உள்ளதை உள்ளபடி கூறும் நண்பர்களை இங்கே அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

      கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: உங்கள் விமர்சனங்களை ப்ளாக் ஒன்றில் எழுதலாமே? இதன்மூலம் உங்கள் எழுத்து ஆற்றலை மற்றவர்களும் முழுமையாகப் படிக்கும் வாய்ப்புக் கிட்டுமே?

      Delete
  47. நண்பர்களே,

    ஆத்மார்த்தமான வாழ்த்துக்களுக்கு நன்றிகள் !! WILD WEST ஸ்பெஷல் நம் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்திடுமென்று எனக்கு திட நம்பிக்கை இருந்தது ; தற்சமயம் நீங்கள் அனைவரும் அதனை முழுமனதாகக் கொண்டாடிடுவது நமது ரசனைகளின் பரிணாம வளர்ச்சியினை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது ! நல்லதொரு கதைக் களமிருக்கும் பட்சத்தில், அதன் வெற்றிக்கு பெரியதொரு ஹீரோ அவசியமல்ல என்பது மீண்டும் ஒரு முறை "எமனின் திசை மேற்கு " மூலம் நிரூபணமாகி விட்டது !

    முதன் முறையாக ஒரு டைகர் சாகசம் backseat எடுத்துள்ளது என்பதே இந்த கிராபிக் நாவலுக்குக் கிடைத்துள்ள உச்சக்கட்டப் பாராட்டு !இரு பெரும் கதைகளின் மத்தியில் ஸ்டீவின் "ஒரு பனி வேட்டை" அரவமின்றிப் போய்விட்டதில் வியப்பில்லை தான் ; எனினும் இந்த சின்ன சாகசம் கூட அன்றைய மேற்கத்திய உலகின் கரடு முரடான வாழ்க்கைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டென நான் நினைத்தேன் !Anyways, thanks for making a beautiful book happen !

    இன்று உங்களின் பதிவுகளுக்கு எனது பதில்களை ஆங்காங்கே எழுதிட முயற்சிக்கிறேன் ! அதே போல் இன்றும், நாளையும் என்னிடம் பேசிட விரும்பும் நண்பர்கள் 98428 64584 என்ற எண்ணுக்கு போன் அடிக்கலாம் ! Have a great weekend !

    ReplyDelete
    Replies
    1. சார்,மேலும், நம்மை சந்தோசபடுத்திய நண்பர்களின் , தங்களது அடுத்த சூப்பர் ஹீரோ ஸ்பெஸல் பற்றிய அனைத்து அனுபவங்களையும் ,சுவாரஸ்யங்களையும் மிக நீளமாக ,சுவாரஸ்யமாக பதியவும் கேட்டு கொள்கிறேன் .....................

      Delete
    2. முற்றிலும் உண்மை சார் ,டைகரை பின்னுக்கு தள்ளியது ஆச்சரியமே , ஸ்டீவா யாரது?


      Delete
    3. அவ்வப்போது பின்னூட்டமிட முயற்சி செய்வதாக இன்று காலையில் சொல்லிச் சென்ற நம் எடிட்டரை அதன்பின்பு காணவில்லையே? யாராவது பார்த்தீர்களா நண்பர்களே?
      ஒருவேளை, டெக்ஸ்வில்லர் கதைகளை வாங்கிட இத்தாலி பயணமாகிவிட்டாரோ? அங்கே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏதேனும் சிறப்புச் சலுகையோ என்னவோ!


      Delete
    4. டியர் எடிட்டர், எமனின் திசை மேற்கு, கதையை படித்து முடித்தபின், புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். இரண்டு நாட்கள் கழித்து இன்று மதியம்தான் மறுபடியும் புத்தகத்தை எடுத்தேன். ஸ்டீவின் பனி வேட்டையை படித்த பின்பு தான் டைகரின் கதையை படித்தேன்.

      ஸ்டீவின், பனி வேட்டை கதையின் படங்கள் மிகவும் அருமை. படங்களின் போக்கு ஆரம்பத்தில் மெல்லிய தென்றல் காற்றாக இருந்து, பின் கதையின் முடிவில் புயலாக சீறி அடிக்கத்துவங்கி விட்டது. பனி வேட்டையின் படங்களும் பாராட்டத்தகுந்த துல்லியம் உடயவை. பனி வேட்டை கதை வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷலுக்கு ஏற்ற தேர்வே.

      வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் புத்தகத்தில் கதைகள் எந்த வரிசையில் இருக்கின்றதோ, அதே வரிசையில் அவைகளின் தரத்தையும் வரிசைப்படுத்தலாம்.

      டைகரின் கதை ஒரு நல்ல விறுவிறுப்பான, திருப்பங்கள் நிறைந்த, வெஸ்டர்ன் சினிமாவைப் பார்த்தது போல இருந்தது.

      எமனின் திசை மேற்கு படித்த பின்பு அதன் தாக்கத்தில் இருந்து வெளிவருவதற்காக, இபேயில் வாங்கிய லயன் முத்துவின் பழைய கதைகளில் இருந்து சிலவற்றை தேர்ந்தெடுத்து வலிய படித்து வருகிறேன்.

      உங்களுக்கும், உங்கள் மொத்த டீமுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும்,நன்றிகளும்.

      அன்புடன்,
      பாலாஜி சுந்தர்.

      Delete
    5. பனி வேட்டை கதை வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷலுக்கு,தலைப்பை போல ஏற்ற தேர்வே. ஆனால் டைகரையே அல்லவோ தூக்கி சாப்பிட்டு விட்டது அந்த காவியம் ..................இரு பெரும் பாலை நில புயல்களுக்கு மத்தியில் பாவம் இந்த பனி சிறு முயல்.....

      Delete
    6. Balaji Sundar : ஸ்டீவின் "பனி வேட்டை" சிறுகதை என்றாலும் சிறப்பானதொன்று என்று எனக்கும் மனதுக்குப் பட்டது.

      முதலில் வேறு ஒரு ஜாலியான steve சாகசம் தான் தயாராகி இருந்தது ; எனினும் WILD WEST இதழின் ஒரு இறுக்கமான மூடுக்கு அந்தக் கதை பொருந்தாது போல் தோன்றியதால் - கடைசி நிமிடத்தில் எழுதி, தயாரித்த கதை இது. Glad it worked !

      Delete
  48. எச்சரிக்கை;காமிக்ஸ் வாசகர்கள் இந்த கிசுகிசுவை படிக்காதீர்கள்.
    சமீபத்தில் கன்னட தேச தலைநகரத்தில் நடந்த காமிக்ஸ் கண்காட்சியில் சிவகாசி சிங்கமுத்து வாத்தியார் தனது வாரிசு,மற்றும் ராதை மணாளனுடன் கலந்து கொண்டாராம்.முன்தோன்றிய மூத்த மொழியின் சார்பாக இடம்பெற்றது அவருடைய காமிக்ஸ் மட்டும்தானாம்.இரண்டு நாள் நடைபெற்ற கண்காட்சியில் ஏராளமான வாசகர்கள் கலந்து கொண்டு சிங்கமுத்து வாத்தியாரை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்களாம்.கொண்டுபோன "மேக்கால காடு"அனைத்தும் விற்று தீர்ந்ததாம்.வாசகர்களின் அன்பில் வாத்தியார் நெகிழ்ந்துவிட்டாராம்.இதன் தொடர்ச்சியாக தனது வாரிசை களமிறக்கி புதிய காமிக்ஸ் இதழ் வெளியிடலாமா?என மல்லாக்க படுத்தபடி யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம்.இதுகுறித்து ஈரோடு ரஷ்ய சர்வாதிகாரி,பள்ளிபாளையம் கணக்கரசர்,நல்ல பிசாசு வகையறாக்களோடு ரகசிய ஆலோசனையும் நடைபெற்றதாம்.அநேகமாக அடுத்த ஆண்டு வாரிசு பிரவேசம் நிச்சயமாம்.
    (பின்குறிப்பு:ஆட்ட கடிச்சு ......மாட்ட கடிச்சு ......ஹிஹி௦.)

    ReplyDelete
  49. புகைப்படத் தொகுப்பில் எங்கே நம் காமிக்ஸ் ஸ்டாலை கழற்றிவிட்டார்களோ என்று தேடித் தேடித் தேய்ந்த நேரத்தில் கிடைத்தது; ஆஹா... என்ன ஆனந்தம்....
    http://www.facebook.com/photo.php?fbid=467364643295497

    ஏற்பாட்டாளர்கள் மிகவும் நேர்மையானவர்கள் போலும்...!

    ReplyDelete
  50. // மேக்கால காடு //

    :-)))


    (நீங்கள் புனித சாத்தான் இல்லை, புன்சிரிப்புச் சாத்தான்)

    ReplyDelete
  51. சலாம் பெங்களுரு !! பதிவு மிகவும் நன்றாக உள்ளது. புகைப்படங்கள்தான் ஹைலைட்.

    பெங்களுரு வந்த குடும்பங்கள் மட்டுமல்ல எங்களை போன்ற பல குடும்பங்களில் உங்களை பற்றியும் உங்கள் காமிக்ஸ் பற்றியும் அளாவுவது வாடிக்கை.

    ஒவ்வொருவரும் சரவெடியாய்க் கேள்விகளைத் தொடுத்தனர் !! பல கேள்விகள் நாங்களும் கேட்பதுதான்.
    அதற்கான பதில்கள் எங்கே?

    சூ.சூ.Spl -ன் (முழுவதும் பூர்த்தி செய்யப் படாத ) முன்பக்க டிசைன் மிகவும் டாப்! இரும்புக்கை மாயாவியை காணவில்லை. மாயமாய் மறைந்திருந்தாலும் இரும்புக்கை மட்டும் தெரிய வேண்டாமா?

    "தங்கக் கல்லறை " அட்டை படத்தின் அட்டகாசமான நீல வண்ணத்தை தங்கக் கல்லறை என்று கட்டம் கட்டி போட்டு இருப்பது நீல அழகை குறைத்துள்ளது. கட்டம் கட்டி போடுவது பழைய ஸ்டைல். சூ.சூ.Spl ல் உள்ளதுபோல் கட்டம் கட்டாமல் எழுத்து மட்டும் இருந்தால் நன்றாக இருக்கும்.




    ReplyDelete
    Replies
    1. "தங்கக் கல்லறை " அட்டை படத்தின் அட்டகாசமான நீல வண்ணத்தை தங்கக் கல்லறை என்று கட்டம் கட்டி போட்டு இருப்பது நீல அழகை குறைத்துள்ளது.....
      factu factu factu..
      athan pin pakka addayil ullathu pol seiyavum..

      Delete
    2. Parimel : கவலை வேண்டாம்...மாயாவி solo-வாக உள்ளார்...பின்னட்டையில் !

      Delete
    3. அந்த கையை அவது ஒரு ஓரத்தில் போட்டிருக்கலாம்.....பின்னட்டைக்கு தள்ளி விட்டாலும் ......ம்ம்ம்ம் பரவாயில்லை,தனியாக முழு பக்கத்தை ஆக்கிரமிக்க போகிறாரே என சந்தோஷ பட்டாலும் ,முன்னட்டைதனில் இல்லையே என ஆற்றாமையால் ஏங்கத்தான்( கைக்கு சிறிய இடம் போதுமே) செய்கிறது இந்த பாழும் மனது .... ..........

      Delete
    4. தங்கக் (தங்க நிறம்) கல்லறை (செவ்வகப் பெட்டி)... இரண்டையும் இணைத்து, அதன் பொருள் தெரியுமாறு செய்வதற்காக அந்த மாதிரி ஸ்டைல் என நினைக்கிறேன்.

      Delete
    5. முன்னட்டை என்ன பின் அட்டை என்ன..எல்லாமே ஒன்னுதான். எதை முதலில் பார்க்கிறோம் என்பது தானே முக்கியம் :). ஸ்டீல் க்ளா இருப்பினும் உங்களின் ஏக்கம் புரிகிறது :). என்ன செய்வது மாயமாவது என்று முடிவு செய்தபின் வரும் பின்விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

      Delete
    6. ஏற்கனவே ஒரு முறை த.க ரிலீஸ் தேதி தள்ளிப் போட்டுவிட்டார் எடிட்டர். அதனால் அட்டை எப்படியிருப்பினும், புத்தகம் கண்டிப்பாக நவம்பரில் வரவேண்டும் (ம.ந.மி கலரில் படித்தபின் டைகரை கலரில் சந்திக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது)

      Delete
  52. விஜயன் சார் ,பெங்களூர் பயணம் வெற்றிகரமாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள் .
    ஜான் ஸ்டீல் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ஆனதன் ரகசியம் ?
    இதை படித்தவுடன் வந்த சிரிப்பு அடங்குவதற்கு வெகுநேரம் ஆகியது .
    உங்களின் எழுத்து நடையை ரசித்துகொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது sir

    சார் ஒரேஒரு சிறிய ஆசை , அது பேராசையாக கூட இருக்கலாம் , never before இதழ் உடன் சிங்கத்தின் சிறுவயதில் " முழுமையாக " சிறிய புத்தகமாக வெளியிட்டால் , அது எங்களை போல் காமிக்ஸ் fans க்கு never before மட்டும் அல்ல "never மறக்க முடியாத " இதழாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .செய்வீர்களா சார் ?

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar, Salem : நேரில் சந்திக்கும் நண்பர்களிடம் சொல்லிடும் அதே பதிலே உங்களுக்கும் : சிங்கம் இன்னமும் 1986 -ன் முதல் பாதியையே கடந்த பாடைக் காணோம் !! இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் ஏராளம் உள்ளதல்லவா...? இப்போதே அதைத் தொகுப்பது பொருத்தமாக இராதென்று நினைக்கிறன். பார்ப்போமே பின்னொரு நாள் !!

      Delete
  53. Replies
    1. I have the same doubt . It might be the same .Not sure .Only editor can answer this

      Delete
  54. நண்பர்களே,

    COMIC CON - க்கு ஒரு மாதம் முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்காக என்னைப் பேட்டி கண்டிருந்தனர். தொடர்ந்த நாட்களில் அது பிரசுரமானதா, இல்லையா என்பது பற்றிக் கூட தகவல் இல்லாது இருந்தது ! அப்போதே அது பிரசுரமாகி உள்ளதென்பதை இப்போது தான் அறிந்திட முடிந்தது ! இதோ அதன் லிங்க் : http://newindianexpress.com/cities/hyderabad/article586337.ece

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் சார்! :)

      Delete
    2. அருமை சார். உங்களது ஒவ்வொரு முயற்சிகளுக்கும் கிடைத்துவரும் ஊக்குவிப்புக்கள் இன்னும் சிறப்பாக செயற்பட உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி.

      Delete
    3. வாழ்த்துக்கள் எடிட்டர் சார்!

      பேட்டியைப் படித்தேன். நிறைய கேள்விகளையும், உங்களிடமிருந்து நிறைய பதில்களையும் எதிர்பார்த்தேன், ஆனால், படிக்கத் தொடங்கியபோதே முடிந்துவிட்டது.

      நீங்கள் தொடர்ந்து Spot lightல் இருக்கவேண்டும் என்பதே எங்கள் ஒவ்வொருவரின் ஆசையும்!

      Delete
    4. எனக்கும் படிக்கும் முன்பே முடிந்தது போல ,இருந்தாலும் இந்தியா முழுவதும் ,தெரியாதவர்களுக்கு இத்தனை காலமாய் வருகிறது என தெரிய ஒரு வாய்ப்பு.ஒன்றை லட்சம் பார்வையிலே என பாட தோன்றுகிறது.....வாழ்த்துக்கள் சார் ....இரண்டுக்குமே................மேலும் நன்றிகள் ...

      Delete
  55. அடியேனும் படித்தேன்.பிரெஞ்சு மொழியில் ப்ளுபெர்ரியின் விற்பனை நாலு லட்சம் என்பதை படித்தபோது நான் பிரெஞ்ச்காரனாக பிறந்திருக்க கூடாதா?என்று தோன்றியது.(நீயெல்லாம் தோன்றியதே தவறு என்கிறீர்களா?ஹிஹி).

    ReplyDelete
  56. Exactly 6 years. An extended gap from Lion Muthu comics. During my school days I even slapped my sister for taking my own editions of Lion & Muthu comics. And my desire got accidentally kindled now. And coz of this I booked all the available editions through eBay.

    Still gutted to miss the unavailable editions in this 6 years. Let me know if I have any option to get them.

    Is there a chance to get Ratha Padalam jumbo edition? I know you will answer a big NO.[I read somewhere here that all were sold out]

    Also I have a mixed feeling for subscribing through MO or DD. Is there any online method available to subscribe?

    Please do let me know if any.

    Looking forward for your response.

    Thanks.

    ReplyDelete
    Replies
    1. Please find the bank details of out publishers from the below link.

      http://lion-muthucomics.blogspot.in/2012/01/our-bank-info-and-some-general-stuff.html

      You can transfer the money thro money transfer to their tamilnadu mercentail bank account.

      Hope this helps.

      Delete
    2. Thanks Krish.

      Is there anyway to know how much I need to pay for subscription.[From this month to probably the end of next year]

      I checked in site and it shows Rs.620 but not sure whether this is a fixed one as there are more specials getting released each month.

      Thanks once again for your response.

      Delete
    3. If u want all the previous and the upcoming issues of this year then send rs.1100
      If u want only the upcoming issues then around rs.300.

      The upcoming comics are

      Super Hero Spl 100+25
      Thanga kallarai 100+25
      Kaaval kalugu 10+15
      Jaany Story 10+15

      Even if you send excess they will keep it for the next year.
      Probably this helps.

      Editor sir,if i am wrong plese correct me.

      Delete
    4. I got the previous editions + 5 specials from eBay site. Wanted to know how much I need to pay for upcoming editions.

      Thanks Krish again for your response. :)

      Delete
    5. கிருஷ்ணா வ வெ : பதில்களுக்கும், உதவிக்கும் நன்றிகள் !

      Delete
    6. அப்பா ஒரு வழியாக எனக்கே எனக்கு என உங்களிடம் இருந்து ஒரு பின்னுட்டம்.
      சார் உதவியெல்லாம் இல்லை.இது எங்களது கடமை.

      Delete
  57. மறுபதிப்புகள் மேலும் சில யோசனைகள்... (இலவசமா சொல்றது தானே!!!)
    1 . முத்து காமிக்ஸ் "வார மலர்" தொகுப்பில் வந்த 21வார தொடர் கதை இரும்பு கை மாயாவி'ன் "ஒற்றை கண் மர்மம்" நம்மில் எத்தனை பேர் படித்து இருப்போம்? மிக நல்ல மாயாவி இன் கதை அது. அது முடிந்த பின்னர் வெளியிட ஆரம்பித்த (அதற்குள் வார மலர் ஓவர்!!!) "மாயாவிகோர் மாயாவி " தனி இதழாக வந்து விட்டது. (ஏனைய வன ராஜா, கருடா, ப்ருஸ் லீ, கபீஷ் , பாலு கதைகள் etc etc நீங்கலாக)
    2 . திகில் காமிக்ஸ் இல் வந்த தொடர் கதைகள் ஸ்பைடர் இன் "விண்வெளி பிசாசு" மற்றும் கேப்டன் ஜான் சாகசம் "விண்ணில் முளைத்த மண்டை ஓடு" பலரும் மிஸ் பண்ணிய கதைகள் அல்லவா. இரண்டும் மிக நல்ல கதைகள். அநேகம் பேர் மிஸ் பண்ணி இருப்பர். முழு கலக்சன் சேர்த்து வைத்து இருப்போர் எண்ணிக்கையில் குறைவு அல்லவா!!!
    3. சமீப காலங்களில் வெளி வந்த கதைகளை மறு பதிப்பு செய்யுமுன் இந்த கோல்டன் oldies கும் வாய்ப்பு தந்தால் நன்றாக இருக்குமே...

    ReplyDelete
    Replies
    1. மிக நல்ல யோசனை.
      கண்டிப்பாக ஆசிரியர் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

      Delete
    2. புத்தக ப்ரியன் : "விண்வெளிப் பிசாசு " & "விண்ணில் முளைத்த மண்டை ஓடு" கதைகள் அந்தக் காலத்திலேயே "தாங்கலைடா சாமி" ரகத்தில் இருந்ததாலே தான் அவற்றை முழுக் கதைகளாக வெளியிடாது தொடராகக் கொணர்ந்தேன் ! இப்போது அவற்றை மறுபதிப்பாக வெளியிடுவதென்பது - வேண்டாத விஷப் பரீட்சையாக இருந்திடும் ! Let's move on guys..!

      Delete
    3. சார் நீங்கள் ,தங்களது வேலை பளுவினூடே கலந்துரையாட தயார் எனும் வகையில் தங்கள் பதில்களுக்கு நன்றிகள்................இந்த இடத்தில் தங்களது இந்த பதிலை எதிர் பார்க்கவில்லை .............தனி புத்தகம் என்பது சிரமம் எனில் முன்பு போலவே தொடராக வெளியிடலாமே............இப்போதைய புத்தகங்கள் அனைத்துமே பாத்து காப்பாக சேமிக்கும் நிலையில் இருப்பதால் நண்பர்கள் அனைவரும் பொக்கிசமாகவே வைக்கும் நிலையில்,பழைய பொக்கிஷமும் சேர்ந்தால் அழகு பெறுமே................

      Delete
    4. மேலும் வலை மன்னனின் மிக சிறந்த கதைகளில் இதுவும் ஒன்றே என்பது எனது எண்ணம்..............

      Delete
    5. எங்கள் காதுகளை பூக்களால் சுற்றி அலங்கரியுங்கள் என்று என்னை போன்று நம்மிடையே நிறைய நண்பர்கள் உண்டு............................யதார்த்தமான கதைகள் சிறப்பாக இருக்கும் என்பது இப்போது அல்லது எப்போதும் நிரூபிக்க பட்டாலும் ,மிகை படுத்த பட்ட கதைகள் கவிதையே ,சுவாரஸ்யங்களை கூட்டவல்ல அற்புதங்களும் அவையே.................

      Delete
    6. ஸ்டீல் க்ளா::

      இத்தனை முறை நீங்கள் கேட்டது இறைவனிடமென்றால், அந்த இறைவன் கூட செவி சாய்த்திருப்பார்!

      பாவம் நீங்கள்!

      வேறென்ன சொல்ல?!

      ('அவர்' ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார்! )
      (அந்த 'அவர்' யாரென்று நம் எல்லோருக்கும் தெரியுமே!)

      அவரேதான்!

      Delete
    7. நண்பரே,

      நேற்று ஒரு வாக்கியம் படித்தேன்
      IF GOD ANSWERS YOUR PRAYER,
      HE INCRESING UR FAITH .
      IF HE DELAYS,
      HE IS INCREASING UR PATIENCE.
      IF HE DOESN'T ANSWER ,
      .................................


      இப்போது இந்த கதை எடு படுமா என்ற கேள்வி அவரிடம் உள்ளது,நமது கோல்டன் ஹீரோக்களின் வெற்றி இனி இதனை உறுதி படுத்தட்டும்.நீண்ட நாட்கள் இல்லையே,ஒரு மாதம்தானே......பார்ப்போமே...........கடவுள் நிறைவேற்றவில்லையே என நாமும் நமது வேண்டுதல்களை விட்டு விடுவதில்லையே................காத்திருப்போம்................30 ஆண்டுகள் தொடர்பின்றி காத்திருக்கவில்லையா ?இப்போதுதான் நேரடி தொடர்பிலிருக்கிறோம் அல்லவா..........


      அப்பாவிகளின் வாசகம் ...............அவர்கள் காத்திருப்பது ,நீ நினைப்பது போல அல்ல .......நீண்ட ...............

      Delete
  58. Dear editor,

    2013ல் வெளியிடப்பட இருக்கும் புத்தங்களின் வரிசைப்பட்டியலை எப்போது அறிவிப்பீர்கள்?

    மறுபதிப்பு வரிசைப் பட்டியல்?

    குட்டியானதொரு தலையனை சைஸில் டெக்ஸ்வில்லரை மறந்துவிட வேண்டாம்.

    2013ல் ஒரு மெகா மகா இதழ்- ரூ.1000 விலையில்?

    ReplyDelete
    Replies
    1. vijay Erode : NEVER BEFORE ஸ்பெஷல் எனும் சிகரத்தை முதலில் தாண்டி முடித்துக் கொள்ளுவோமே ; மறுபதிப்பு இதழ்களுக்கான planning அத்தனை சிரமமாய் இருந்திடாது !

      Delete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. இந்த செய்தி கண்டிப்பாக "கிசுகிசு" கிடையாது .இதை நமது ஆசிரியரே உறுதி செய்வார்.(ஹி..ஹி..)

    ReplyDelete
  61. Paranitharan K :

    என்னைப் பற்றி எனக்கே தெரியாத சேதிகளை சுடச்சுடக் கொணர்ந்தமைக்கு நன்றிகள் ! பிரதான தொழிலோ ; பிரதானமற்றதோ - ஆத்மார்த்த ஈடுபாடின்றி எதுவும் வெற்றி தராது என்பது எனது அனுபவப் பாடம்.

    எதை ; எந்தத் தர வரிசையில் நான் செய்கிறேன் என்பதை விட, முயற்சிகளின் பலனும், தரமும், தேறும் ரகமா என்பதே முக்கியக் கேள்விகளாக இருந்திடல் அவசியமென்பது எனது அபிப்ராயம் !

    ReplyDelete
    Replies
    1. புரிவது போலவே இருக்கும்...
      ஆனா, புரியாது!
      -இது நம் எடிட்டர் பதில் சொல்லும் விதம்!

      நிறைய சொல்லுவது போலவே இருக்கும்...
      ஆனா, எதுவுமே சொல்லியிருக்க மாட்டார்!
      -இது நம்ம எடிட்டர்!

      உதாரணம், மேற்கண்ட அவரது பதில்!


      தனது முதல் முயற்சியிலேயே நம் எடிட்டரை இப்படி அடித்துப்பிடித்து பதில் பின்னூட்டமிட வைத்த பரணிதரனுக்கு வாழ்த்துக்கள்!

      Delete
    2. Dear Editor

      Wild West Special is simply outstanding.

      Planning to buy few more copies (when it is available in discovery palace, chennai)

      Thanks for introducing such an excellent story in WWS

      Delete
  62. அன்புள்ள விஜியன் சார் , எனது முதல் தமிழ் பின்னூட்டத்தில் எனது அடிமனது ஆசையும் ,உங்கள் பதிலை வாங்க ஆசை பட்ட காரணத்தினால் ம் எழுதியது .தயவு செய்து தவறாக இருந்தாலும் , உங்கள் மனது காய பட்டு இருந்தாலும் மிக பெரிய மன்னிப்பை கோருகிறேன் .சாரி சார் ...........

    ReplyDelete
  63. //அன்றிரவு தூங்கும் போது கேப்டன் டைகரும், ஒற்றைக்கை ஆசாமிகளும், நிறைந்த கல்லாப்பெட்டிகளுமாய் எனது சொப்பனங்கள் ஒரே சித்திரமயமாய் இருந்தன ! //

    ரசித்துச் சிரித்த வரிகள்!

    //இனிப்பாய் அங்கே கரைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகு மாத்திரமல்ல.. //

    சிரித்து ரசித்த வரிகள்!
    --

    ReplyDelete
  64. Annachi,
    I came to know about the comic con through you only. Thoroughly enjoyed the half day spent there! high light was meeting you there. I had the opportunity to help your team carry books from your car to your stall and will remember the occasion forever!
    Expecting to see you release many more treasures!
    Murali

    ReplyDelete
    Replies
    1. தம்பி,

      உங்களை பெங்களுருவில் சந்திக்க முடிந்ததும், ஸ்டாலில் நமக்கு உதவியாக நீங்கள் இருந்ததும் ; சக வாசகர்களோடு பொழுதைக் கழித்த போது உங்களின் முகத்தில் தெரிந்த பிரகாசமும் எனக்கும் மறக்க இயலா தருணங்கள் ! Thanks a ton !

      Delete
  65. Anyone there who is ready to sell 'Ratha Padalam' complete series.

    I am waiting for some positive reply.

    Please.

    Thanks.

    ReplyDelete
    Replies
    1. Hi Mari,

      Apologies to say this. I am NOT doing this for collection. I just want to read all the arrivals which I missed in last 6 years.

      Henceforth asked. If you have one I will def pay you prior.

      Thanks.

      Delete
  66. Finally there are some (minor) updates on the official website!

    http://www.lion-muthucomics.com/

    ReplyDelete
  67. I just noticed that there is a Facebook page for Srilankan comics fans. They update about when and where the issues are available. Any idea who runs it?
    https://www.facebook.com/tamilcomics

    ReplyDelete
    Replies
    1. அத தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன சார் பண்ணப்போறீங்க. யாரு ரண் பண்றாங்கங்கறது முக்கியமில்ல. எப்படி ரண் பண்றாங்கங்கறதுதான் முக்கியம். யூஸ் ஃபுல்லா இருக்கில்ல? அதுபோதுமே!!!

      Delete
    2. What you are going to do by knowing "what prunthaban is going to do by knowing who is running the facebook page" :-)

      Just for fun.... the same question can be asked again to me :-)

      Delete
  68. "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் "அட்டைபடம் வெரிசூப்பர்.நீண்ட நாள்களுக்கு பிறகு பழைய spider கதை புத்தகத்தை பார்த்த அனுபவத்தை தருகிறது .கதையும் அதே அனுபவத்தை தரும் என நம்புகிறேன் .

    ReplyDelete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. Stv கொடுத்த மைசூரமாக் டப்பாவா சார்

    ReplyDelete