Powered By Blogger

Saturday, October 05, 2024

எடி to வாசு !!

 நண்பர்களே,

வணக்கம். முன்னெல்லாம் "ஹாட்லைன்" மாத்திரமே எனக்கான communication தளமாக இருந்தது ; நிதானமாய் தலைக்குள் தோன்றிய சகலத்தையும் அங்கு ஒப்பித்தேன் ! அப்பாலிக்கா "சிங்கத்தின் சிறு வயதில்" என்று ஆரம்பிக்க, அங்கேயும் கொஞ்சம் பின்னோக்கிய பார்வைகளுடன் பேச  சாத்தியமாகியது  ! ரெம்போ காலம் கழித்து நமது மறுவருகையின் சமயத்தில், இதோ இந்த blog என்ற வலைப்பூ துளிர் விட - அடுத்த 12 ஆண்டுகளுக்கு இட்லி சாப்பிட்டதிலிருந்து, தொட்டுக்க காரச் சட்னியா ? மல்லிச் சட்னியா ? என்பது வரைக்கும் அலசித் தள்ளிட முடிந்தது ! And இதோ மூன்றோ, நான்கோ மாதங்களுக்கு முன்பாய் வாட்சப்பில் "கம்யூனிட்டி" என்ற ரவுசை ஆரம்பித்த பிற்பாடு, இங்கே பதிவிட தோதுப்பட்டிருக்கா நண்பர்களோடும் கும்மியடிக்க இயன்ற வருகிறது ! பற்றாக்குறைக்கு சமீப வாரங்களில் நம்ம YouTube சேனலில் எதையாச்சும் பேசும் படலமும் ஆரம்பித்திருக்க, அங்கேயும் ஆத்தோ-ஆத்தென்று உரையாற்றிங் ! So இப்போல்லாம் காலையில் வீட்டுக்காரம்மாவைப் பார்க்கும் போது கூட "ஹை..ஹல்லோ..வணக்கம் !" என்று தான் ஆரம்பிக்கத் தோன்றுகிறது ! ("நீயெல்லாம் ரெம்போ லேட்டு பாஸு ; நாங்கல்லாம் கண்ணாலம் ஆன நாள் முதலாவே அப்புடி தான் !!" - என்ற இதர வீரர்களின் மைண்ட்வாய்ஸ் கேட்காதில்லை !!

இதில் கொடுமை என்னவென்றால் இப்போதெல்லாம் நம்ம ஆபீஸ் புள்ளீங்க மாத்திரமன்றி, நமக்கு மொழிபெயர்ப்பு செய்து வரும் யுவதிகளுமே, ஆங்காங்கே நம்ம திருவாய் மலரும் படலங்களை வாசிக்க / கேட்க ஆரம்பித்துள்ளனர் என்பதால் ஜாக்கிரதையாகவே எழுத / பேச வேண்டி கீது ! ஆனால் நமக்குத் தான் மோட்டார் ஓட ஆரம்பிச்ச சற்றைக்கெல்லாமே இஷ்டப்பட்ட திக்கிலெல்லாம் வண்டி இஸ்துகினு போகுமே - so ஒரு மந்தகாச 'ஹி...ஹி..' சகிதம் கடந்து செல்ல வேண்டி வருகிறது ! And இந்த லூட்டிகள் மத்தியில் எனக்குள்ளான  'டர்ர்ர்' படலமோ இருமடங்கு படுத்தி எடுக்கிறது !

டர்ர்ர்  # 1 : ஒரே விஷயத்தை இங்கேயும் எழுதி, இன்ன பிற ஒலிபரப்புகளிலும் கதைத்து, மொக்கை போடாதிருக்க வேண்டுமே என்பது பிரதான டர்ர் ! 

டர்ர்ர் # 2 : வேளைக்கொரு பாணியிலோ, விதத்திலோ, ஸ்டைலிலோ எழுதுவதும், செப்புவதும் நமக்கெல்லாம் அசாத்தியமே ! So ஒரே பாணியிலான நம்ம எழுத்துக்கள் / பேச்சுக்கள் உங்களுக்கு அலுத்துப்புடலாகாதே - என்பது மெயினான  டர்ர்ர் !! 

எந்தச் சாமியின் புண்ணியத்திலோ, இரண்டு இடர்களுக்கும் இதுவரையிலுமாவது கடுக்காய் கொடுத்து, குரங்கு பெடலடிச்சபடிக்கே வண்டியை ஓட்டி வருகிறேன் ! பெர்சனலாக எனக்கு உதறுவது கூடுதலாய் இன்னொரு காரணத்தின் பொருட்டுமே !! மொழிபெயர்ப்புகளை யாரேனும் செய்து விட்டு, எடிட்டிங் மட்டும் என் பொறுப்பாகிடும் வேளைகளில் பேனாவினை கொஞ்சம் ஓய்வாக இருந்திட அனுமதிக்கலாம் ! ஆனால் இதோ - லேட்டாகி விட்ட இம்மாதத்து ஸ்டெர்ன் கதைக்கு ஒற்றை நாளில் தமிழாக்கம் செய்திடும் லூசுத்தனமான கட்டாயம் ; ரிப்போர்ட்டர் ஜானியை கிட்டத்தட்ட முக்கால்பங்கு மாற்றி எழுதும் அவசியம் - என்றெல்லாம் நேரும் போது, மண்டைக்குள் சர்வ சதா காலமும் வஜன டயலாக்ஸ் ஓடிக்கொண்டே இருப்பது போலவே இருக்கும். And அவற்றை எல்லாம் தக்கி, முக்கி முடிக்கும் நொடியில், வாரமே ஓட்டம் கண்டிருக்க, இங்கே blog-ல் புதுசாய், சுவாரஸ்யமாய் எதையாச்சும் எழுதும் சமயம் புலர்ந்திருக்கும் ! So நமக்கே நம்ம வரிகளை கண்டு போரடிச்சுப்புடுமோ ? என்ற பயமும் அவ்வப்போது தலைதூக்குவதை மறுக்க மாட்டேன் !  

நான்பாட்டுக்கு "அது பாருங்க.....எங்க ஊரு பரோட்டாவை பிச்சி போட்டு சால்னா ஊத்தினா.." என்று foodvlogs பாணியிலோ ; அல்லது, இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு கருத்து சொல்லும் கந்சாமியாகவோ ; அல்லது "டிரம்பை வன்மையாய் கண்டிக்கிறேன் !!" என்று சவுண்டு விடும் சுந்தரனாகவோ இருந்திடும் பட்சத்தில், content-க்குப் பஞ்சம் எழாது தான் ! ஆனால் நாமோ, நம்ம புழைப்பைத் தவிர்த்து வேறு எது பற்றியும் எழுதுவதில்லை எனும் போது, நடுநடுவே ரோசனையில் கேசத்தைக் கொஞ்சமாய் பிய்த்துக் கொள்ள வேண்டி வரும் தான் !  But - மாதம்தோறும் 4 புக்ஸ் என்பதால், எழுத சமாச்சாரம் இல்லாதே  போவதில்லை & பற்றாக்குறைக்கு "சுந்தர சந்துக்குள் உலா போவோமா நைனா ?" என்று ஆராச்சும் அவ்வப்போது அன்பொழுக இட்டுப் போவதும் நடைமுறை என்பதால், blog வண்டி சீராகப் பயணித்து வருகிறது ! இதோ - இதுவும் ஒரு 4 புக் மாசம் எனும் போது லேப்டாப்பை தூக்கிக்கினு குந்தும் சமயமே பதிவு உருவகம் கண்டு விட்டது !! So here we go :   

பொழுதுபோக்கு துறையில் இருக்கும் அம்புட்டு பேருக்கும் பிடித்தமானதொரு phrase - "ரொம்பவே வித்தியாசமான" என்ற ஜிகினா தான் ! நம்மளுமே அந்த ஜோதியில் சேர்த்தி தான் ; "வித்தியாசமான கதைக்களம்" என்று ஜடாமுடி ஜானதனுக்கும் பில்டப் தந்தவர்களாச்சே ! But trust me guys - இந்த அக்டோபரின் நான்கு - மெய்யாலுமே ஒன்றுக்கொன்று நிரம்ப மாறுபட்டவையே !!

*ஒரு அக்மார்க் கவ்பாய் தொடர் - டெக்ஸ் ரூபத்தில் !!

*இன்னொரு West களமே - வெட்டியான் ஸ்டெர்னுக்கும் - but முன்னதுக்கும், பின்னதுக்கும், இம்மி கூட ஒற்றுமை இராது ! முதலாவது கற்பனையின் மிகை எனில், இரண்டாவதோ நிஜத்தின் gory முகத்துடனானது !!

*அப்புறம் ஒரு க்ரைம் த்ரில்லர் - ரிப்போர்ட்டர் ஜானியின் ரூபத்தில், பாரிஸ் எனும் வட்டத்துக்குள் !

*மறுபடியும் ஒரு க்ரைம் த்ரில்லர் - இம்முறையோ பூமியின் ஒரு துருவ எல்லைக்கே இட்டுச் செல்லும் பாணியில் - ப்ருனோ ப்ரேசில் புண்ணியத்தில் !

So ஒரே மாதிரித் தோன்றினாலும், ஒரே மாதிரியானவை அல்ல எனும் போது - "வாசு"என்றதொரு வாசகனாய் மட்டும் நானிருப்பின், இந்த நான்கினுள் எவற்றை எந்த வரிசையில் வாசிப்பேன் ? என்று யோசிக்கத் தோன்றியது ! ரஷ்ய-யுக்ரைன் யுத்தத்துக்கே தீர்வு சொல்லும் ஆற்றல் வாய்ந்த அந்த மகா ரோசனையே இந்த வாரத்தின் பதிவு :  

Honestly - உள்ளே காத்திருப்பது என்னவென்று தெரியாத வாசகப் பார்வையில் நானிருந்திருக்கும் பட்சத்தில் சர்வ நிச்சயமாய் உள்ளே இழுத்திருக்கக்கூடியது ஸ்டெர்ன் தான் !! அந்த மனிதனிடம், அந்தக் கதாப்பாத்திரத்திடம், அவரை கதாசிரியர் இட்டுச் செல்லும் இடங்களிடம் - ஒரு இனம்புரியா சோகம், தனிமை இருப்பது போலவே எனக்குத் தோன்றுவதுண்டு ! முகத்தில் ஒரு சலனமற்ற expression மாத்திரமே, ஆனால் அவரது உணர்வுகளை சுற்றுமுற்றும் இருக்கும் சூழலைக் கொண்டே  கடத்திடுவதில் ஓவியர் செம ஜித்து எனும் போது, ஸ்டெர்ன் பெருசாய் முகத்தில் எமோஷன்ஸ் காட்டிட அவசியமாவதில்லை ! And எல்லாவற்றிற்கும் மேலாக என்னை ஈர்ப்பது அந்த சித்திர ஸ்டைலும், கலரிங்கும் தான் ! அந்த இரண்டுக்காகவுமே ஆட்டத்தை வெட்டியானிடமிருந்தே ஆரம்பித்திருப்பேன் ! ஒற்றை வசனம் கூட இல்லாத முழுப் பக்கங்கள் ; மொழிபெயர்ப்பாளனாய் அவற்றைக் கடந்திடும் போது "ஹை...ஜாலி..ஜாலி !!" என்று கூவும் உள்ளம், ஒரு வாசகனாகவுமே கூவியிருக்கும் - கதை நகர்த்தலுக்கு மௌனத்தையே பாஷையாக்கி ஓவியர் செய்திருக்கும் அட்டகாசத்தைக் கண்டு ! And அந்த அழகுப் பெண் வாலென்டினா அறிமுகமாகும் பக்கத்தில் கலரிங் திடீரென வேறொரு உச்சத்தில் செம bright ஆகிடுவதை ரசிக்கத் தவறியே இருக்க மாட்டேன் ! கதையோடு மூழ்கும் போது என்னை impress செய்திடும் முதல் பாத்திரமாய் மர்ரே என்ற அந்த சீனியர் (கருப்பு) வெட்டியான் தான் இருந்திருப்பார் ! வெட்டியான் வேலையினையும் ஒரு ஒழுக்கத்தோடு, கர்ம சிரத்தையாய் செய்யும் மனுஷன், தனக்கு ஜூனியராக வந்து சேரும் ஸ்டெர்னுக்கு திடீரென பெரிய இடது சகவாசமெல்லாம் கிடைக்கும் போதுமே பொறாமை கொள்ளாது, இயல்பாய் தன பிழைப்பைப் பார்த்துச் செல்வதில் காட்டிய  கண்ணியத்தை ரசித்திருப்பேன் ! பற்றாக்குறைக்கு, மனசு ஒடிஞ்சு போய் ஸ்டெர்ன் திரும்பும் சமயத்தில், "ஹி..ஹி..ஹி..நாங்க தான் சொன்னோம்லே... உன் முகரைக்கு அந்தப் பொண்ணு கேக்குதாக்கும் ?" என்று கெக்கலிக்காது - "நண்பா...இது நியூ ஆர்லியன்ஸ் ! இன்னிக்கி ராத்திரிக்குள்ளாற அவளை விடவும் பத்து மடங்கு அழகான ஒரு மந்தைப் பொண்ணுங்களை நீ சந்திக்க வாய்ப்புண்டு !!" என்று தேறுதல் சொல்வது அற்புதம் !! அதே போல "இந்தப் பெண் நம்ம ரேஞ்சுக்கு அப்பாற்பட்ட பெரிய இடம் தான் ; ஆனாலும் அவளது காதல் நமக்குக் கிடைக்க ஏதாச்சுமொரு அதிசயம் நிகழ்ந்து விடாதா ?" என்ற கடைசிக் கட்டம் வரைக்குமான மௌன ஏக்கம் நிச்சயமாய் ஸ்டெர்ன் மீது எனது கரிசனத்தைக் கூட்டியிருக்கும் ! அதே சமயம், கதையின் வில்லனாக பில்டப் தந்து ரெடியாகும் "சேலம்" - படித்துறை பாண்டி ரேஞ்சிலான பிஞ்சு வில்லனே என்பதை உணர்ந்த சமயம் கொஞ்சம் ஏமாற்றம் தலைதூக்கவே செய்திருக்கும் ! But  ஸ்ட்ராங்கான அந்தப் பெண்மணி கேரக்டரும், க்ளைமாக்சில் நடந்திடும் களேபரங்களும், அதன் மத்தியில் நம்மாள் ஸ்டெர்னுக்கு கிடைக்கும் ஒரு "இச்" ஜாக்பாட்டும் அந்த ஏமாற்றத்தினை மறக்கடித்திருக்கும் ! In fact - படித்து முடிக்கும் நொடியில், கதையில் ஆழம் குறைச்சலோ ? என்ற எண்ணம் மேலோங்கியிருந்தாலும், கொஞ்ச நேரம் அந்த அனுபவத்தினை அசை போட்ட பிற்பாடு - ஸ்டெர்னின் யதார்த்த கதாப்பாத்திரத்துக்கு இது தான் சரி என்றே தோன்றியிருக்கும் ! கதை முழுசும் விரவிக் கிடக்கும் அந்த melancholy ; இறுதிப் பக்கத்தில் ஆளே இல்லாத அறையிலிருந்து குடையை விரித்தபடிக்கே மெது நடை போடும் ஸ்டெர்னை காட்டி ஓவியர் தந்திருக்கும் ஓராயிரம் குட்பைகளை ரசித்தபடிக்கே 8 /10 போட்டிருப்பேன் !

எனது அடுத்த தேர்வு நிச்சயமாய் ப்ருனோ ப்ரேசில் 2.0 வாகத் தானிருந்திருப்பார் - becos டெக்சிலும் சரி, ரிப்போர்ட்டர் ஜானியிலும் சரி - என்ன எதிர்பார்ப்பதென்று முன்னமே எனக்கொரு ஐடியா இருந்திருக்கும் ! ஆனால் கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்குப் பின்பாய் மீள்வருகை செய்திடும் முதலைப் பட்டாளம் சொல்ல வருவது என்னவோ ? என்ற curiosity என்னை உள்ளே இழுத்திருக்கும் ! அட்டைப்படத்திலேயே ரெண்டு நிமிஷம் லயித்திருப்பேன் - அந்த ஓவிய ஜாலத்தில் மயங்கியவனாய் !! இங்கும் ப்ருனோவின் விழிகளில் தென்படும் ஒரு மென்சோகம் கதை சார்ந்த எனது ஆர்வத்தினை அதிகப்படுத்தி இருக்கும் ! மெதுவாய் உள்ளே புகுந்தால் உட்பக்க சித்திரங்கள் மட்டுமன்றி, அந்த layout கூட என்னை நிரம்ப இம்ப்ரெஸ் செய்திருக்கும் ! பின்னணிகளுக்கு முக்கியத்துவம் தந்திட வேண்டிய தருணங்களில் பக்கத்துக்கு நான்கே படங்கள் - page 12 போல !! அதே போல ஒரு குளிர் பிரதேசத்து பாரை கண்ணில் காட்டிடும் போது ஓவியரின் details சார்ந்த நுணுக்கம் (பாருங்களேன் page 17) ; அந்த வானிலை அறிக்கை வாசிக்கத் துவங்கும் நொடியில் அங்குள்ளோர் அனைவரும் அதற்கு முழுக்கவனமும் தந்திடும் யதார்த்த பாங்கு - இது வெறும் பொம்ம புக் அல்ல ; இதன் பின்னணியில் ஒரு லோடு research உள்ளதென்பதை புரியச் செய்திருக்கும் ! And கதைக்குள் ஆழமாய்ப் போகப் போக, அந்த வடதுருவத்து வனாந்திரங்கள், அங்குள்ள வித்தியாசமான இன்யூட்கள், அவர்களது வாழ்க்கை முறைகளோடு பின்னிப் படரும் கதைக்களத்தை நிச்சயம் ரசித்திருப்பேன் ! 'இது போலத்தான் கதையின் மையப்புள்ளி இருக்கும் ' என்பதை யூகிக்க ஆங்காங்கே குறிப்புகளை கதாசிரியர் சிதற விட்டுச் சென்றிருந்தாலும், நம் கண்முன்னே உயிரோட்டமான சித்திரங்களுடன் கதை ஒரு க்ளைமாக்ஸை நோக்கி unravel ஆகிடுவதையே விரும்பியிருப்பேன் ! அந்தப் பழங்குடிச் சிறுவன் ; அவனுக்கிருக்கும் அந்த விசேஷ ஆற்றல் ; அதனை 'காதிலே பூ' சமாச்சாரம் போல தெரியவிடாமலே கதாசிரியர் நகர்த்திக் கொண்டு சென்ற லாவகத்தை நிச்சயம் applaud செய்திருப்பேன் ! கொஞ்சம் மிகையான கற்பனையாய் க்ளைமாக்ஸ் தென்பட்டிருந்தாலுமே, வாசிப்பின் முடிவில் 9 /10 மார்க் போட தயங்கியே இருக்க மாட்டேன் தான் ! 

And வாசகனாகவோ, புடலங்காய் எடிட்டராகவோ, எந்த அவதாரத்தில்  இருந்திருந்தாலும் கடைசிப் பக்கத்தில் ஒரு கணம் தடுமாறி நின்றே இருப்பேன் - அங்கிருந்தது அம்மாவின் நினைவஞ்சலிப் படம் என்பதால் ! Of course இழப்புகளை சந்திக்காதோர் எவரும் இருக்க முடியாது தான் & முடிவே இன்றி இந்த ஆயுள் யாருக்கும் தொடரவே போவதுமில்லை தான் ! Yet - அம்மாவின் அந்த போட்டோவை பார்க்கும் நொடியில் கடைசி 4 வருடங்களில் அவர் பட்ட கஷ்டங்களும், வலி, வேதனைகளும் தான் மனதில் நிழலாடுகின்றன ! எங்கள் சக்திகளுக்கு மீறியும் செலவழித்து வைத்தியம் பார்க்க முயற்சித்தும், அவரது வலிகளை இறுதி வரைக்கும் மட்டுப்படுத்த இயலவில்லையே என்ற ஆற்றாமை தான் இன்னமும் பிடுங்கித் தின்னுகிறது ! 2018-ன் இறுதியில் ஒரு இக்கட்டான அறுவை சிகிச்சையின் போதே அம்மா இயற்கை எய்தியிருப்பின் ஒரு ராஜவாழ்க்கை வாழ்ந்த திருப்தி எல்லோருக்குமே கிட்டியிருக்கும் ! ஆனால் அன்று பிழைக்கச் செய்த எங்களுக்கு, தொடர்ந்த 4 ஆண்டுகளின் இன்னல்களை தடுக்கவே முடியாது போனது தான் விதியின் கோர முகம் போலும் !! சாரி folks ; இது இங்கே தேவையில்லா ஒரு சமாச்சாரமாய் இருக்கக்கூடும் தான் - but அந்த கடைசிப் பக்கத்தைப் பார்த்து விட்டு இதை எழுதாது இருக்க முடியவில்லை !! Sorry again !!   

Moving on, எனது வாசிப்பு # 3 நிச்சயமாய் டெக்ஸாகவே இருந்திருக்கும் ! 'தல' நம்பள் கி சர்டிபிகேட்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் எனும் போது - அவரைப் பற்றியோ, கதையைப் பற்றியோ 'ஆஹா..ஓஹோ..' என்றெல்லாம் எழுத மெனெக்கெட மாட்டேன் ! மாறாக, அட்டகாசமான சித்திரங்களை ரசித்தபடிக்கே அந்த வன்மேற்குக்குள் நுழையும் கணமே, போனெல்லியின் ஒட்டு மொத்த டீமுக்குமே ஒரு மானசீக வணக்கத்தைப் போட்டிருப்பேன் ! கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கும் மேலாய் ஒரு நாயகரை, நாம் யாரும் கண்ணில் பார்த்தே இருக்காத பூமியில் உலவ விட்டு, அங்கேயே தொடர் வெற்றிக்கொடிகளை நாட்டிடச் செய்வதென்பது எத்தனை அசாத்திய சாதனை !! அதை இம்மி பிசகாமல் ஆண்டுதோறும், மாதம்தோறும் செய்து வரும் அசாத்தியர்களை என்னவென்று புதுசாய் சிலாகிப்பது ? சிங்கிள் ஆல்பம் ; அதுவும் நம்ம V காமிக்சில் - so நிச்சயமாய் இது செம breezy read ஆகவே இருந்திடுமென்ற எதிர்பார்ப்போடே ஒரு துள்ளலுடன் உட்புகுந்திருப்பேன் ! மிரளச் செய்யும் உயிரோட்டமான சித்திரங்கள் இங்கேயும் கட்டிப் போட, 'நீங்க வந்தா மட்டும் போதும்....நீங்க வந்தா மட்டும் போதும்" என்று டெக்சிடம் வழிந்து தள்ளியிருப்பேன் ! சிம்பிளான storyline ; இருப்பினும் அதனை துளி தொய்வுமின்றி நகற்றிச் சென்றுள்ள பாங்குக்கே சென்டம் தரலாம் என்ற சபலம் எழும் ; but "சொடலமுத்து ரொம்ப ஸ்டிக்ட்டுப்பா !!" என்ற சிலாகிப்பை ஈட்டவாச்சும் 8.5 /10 போட்டிருப்பேன் ! 

Last, but not the least - ரிப்போர்ட்டர் ஜானியின் "நள்ளிரவின் நாயகன்" !!

இந்த இதழைக் கையில் எடுத்துப் புரட்டும் போது எனக்குத் தோன்றியிருக்கக்கூடிய முதல் சிந்தனை - இதனை அச்சிட்ட பிரிண்டரைக் கூப்பிட்டு ஒரு மோதிரம் போடுவதாகவே இருந்திருக்கும் ! But தங்கம் விற்கின்ற விலைக்கு அதுலாம் கம்பெனிக்கு கட்டுபடியாகாது என்பதால், எங்க பால்யங்களில் போல, ஒரு ஜவ்வுமிட்டாய் மோதிரத்தை செஞ்சு வாங்கி அவருக்கு மாட்டி விட்டிருப்பேன் ! Oh wow - இந்த இதழின் பிரிண்டிங்கில் தான் என்னவொரு துல்லியம் !!! லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங்கில் படைப்பாளிகள் பின்னிப் பெடலெடுத்துள்ளனர் தான் - but still அதை துளியும் சொதப்பாது அச்சில் கொணர்வது சுலபமே ஆகாது !! செவாசிக்காரன் என்றமுறையில் அது பற்றி "வாசு" வுக்குக் கூட விபரம் தெரிந்தே இருக்கும் !! பக்கம் 26 -ஐ பாருங்களேன் : இரவில் ஷூட்டிங் நடக்கிறது ; அந்த லைட்ஸ் உமிழும் ஒளி ; அப்புறமாய் கடைசி பிரேமில் மோட்டார் சைக்கிளில் வரும் வில்லனை highlight செய்திட க்ரே பின்னணி ! அதே போல பக்கம் 35 !!! காரின் ஹெட்லைட்ஸ் எறியும் ஒளி ; பூட்டியுள்ள ஆபீசுக்குள் இருளில் ஜானி புகும் போது அவர் முகத்தில் தெரியும் பிரதிபலிப்பு ; தரையில் சிகப்பு அம்புகளோடு நிலா வெளிச்சம் - என கலரிங்கில் அவர்கள் செய்துள்ள அத்தனை அதகளங்களையும் பிசிறின்றி இங்கு அச்சில் நமக்குக் கொண்டு வந்துள்ளார்களே - hats off !!

ஆங்...கதையைப் பொறுத்தவரை இங்கே எல்லோருமே நம்ம ஸ்டீலின் தட்கல் பின்னூட்டங்களின் பாணியிலேயே பேசுவதால் பேந்தப் பேந்த முழித்தபடிக்கே பயணித்திருப்பேன் ! Oh yes - முடிச்சு முடிச்சா போட்டுகினே போவார் ; கடாசி 2 பக்கங்களில் தான் சகலத்தையும் அவிழ்ப்பார் என்பதும் தெரியும் தான் ! Yet - ஆந்தை விழிகள் எக்ஸ்ட்ராவாய் ரெண்டு mm திறந்தே இருப்பது போல் பட்டது - கதை நெடுகிலும் !! And நம்ம ஜானிகிட்டே நாம் எதிர்பார்ப்பதே இந்த இடியாப்பங்களைத் தான் எனும் போது, கதையை முழுசாய் படித்து முடித்த கணத்தில் - ஒரு ஜிகர்தண்டாவை அடிச்ச குஷி விரவி நின்றிருக்கும் !! My marks : 7.5 /10 

So, இந்த மாதத்து இதழ்களை இந்த டப்ஸா வாசுவின் பார்வையில் பாத்தாச்சு ! இனி மெயின் ; ஒரிஜினல் ; அசல் "வாசுக்கள்" ஆகிய நீங்கள் தான் அலசி, ஆராய்ந்து மார்க் போட்டாக வேணும் !! ஒரு சித்திர அதகளமான அக்டோபர் முழுசாய் சாதித்துள்ளதா ? என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாய்க் காத்திருப்போம் !! Bye all ....have a beautiful weekend !! See you around !!

And lest I forget :

  • திருச்சி
  • விருதுநகர்
  • தூத்துக்குடி 

என ஒரே சமயத்தில் 3 இலக்குகள் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறோம் !! இது நமக்கொரு record !!! ஆங்காங்கே வருண பகவான் மட்டும் புகுந்து விடுகிறார் ; மற்றபடிக்கு ரகளைஸ் தான் !! அதிலும் தூத்துக்குடி இறுதி நொடியில் எடுத்த தீர்மானம் - and அங்கு கிட்டிடும் விற்பனை a real surprise !!! Thanks all !!!