Powered By Blogger

Sunday, June 09, 2019

தி லுங்கி டான்ஸ் !

நண்பர்களே,

வணக்கம். காண்டிராக்டர் நேசமணி பெயரைச் சொல்லி ஒரு வாரம் ஓட்டமெடுத்திருக்க, இதோ உலகக் கோப்பைக் காய்ச்சலோடு தடதடக்கத் துவங்கிவிட்டது புதியதொரு வாரம் ! And புது இதழ்களின் அலசலில் இன்னமும் முழுமூச்சில் நீங்கள் இறங்கியிருக்கா நிலையில் - ஒளிவட்டத்தை வேறெங்கும் பாய்ச்ச மனம் ஒப்பவில்லை ! இப்பொதெல்லாமே மெயின் பிக்சரை பார்க்க நேரம் கிடைப்பது குதிரைக்கொம்பாய் இருக்க, டிரெய்லர்களைப் பார்த்து, விசிலடித்து விட்டுப் போவதே லேசு என்பது போல்படுகிறது - மாதம்தோறும் இதழ்களுக்குள் புகுந்திட நம்மில் பெரும்பான்மை சிரமம் கொள்வதைப் பார்க்கும் போது ! In some ways - இந்தக் குறியீடுகளை அலசிட எனக்கு அவகாசம் கிட்டியிருப்பதுமே ஒரு வரமென்றே சொல்லத் தோன்றுகிறது ; வரும் காலங்களில், மாதம்தோறும் களமோ ; கனமோ - அதீதமான ஒரு புக்கும் ; களமும், கனமும் இலகுவாய் 2 புக்குகளும் இருத்தலே சரியான திட்டமிடலாயிருக்கும்  என்று புரிகிறது ! So அட்டவணையின் இறுதிப்படுத்தல் பணிகளில் இதன் பொருட்டு நிறையவே கவனம் தர முனைவேன் !

"சரி....இந்த வாரம் என்ன எழுதுவது ?" என்ற கேள்வி இந்த நொடியில் என் முன்னே ஆட்டம் போட - முன்னே ஓடிக்கொண்டிருக்கும் டி-வியிலோ மப்பும், மந்தாரமுமாய்க் காட்சி தரும் ஒரு லண்டனின் மதியத்தில் நம்மவர்கள் net practice செய்வதைக் காட்டிக் கொண்டிருந்தார்கள் ! "அட...ஒரு வாடகைச் சைக்கிளை வாங்கிப்புட்டு லைட்டா மிதிச்சாக்கா - 34 ஆண்டுகளுக்கு ரிவர்ஸ் கியர் போட்டுப்புடலாமே ; இதே லண்டனில் லுங்கியோடு பேந்தப் பேந்த நின்ற கதையையும் சொன்னது போலிருக்குமே !!" என்று பட்டது !! Yup ..you guessed right guys - இது flashback time !! So சன்னமாய் சில பல எச்சரிக்கைகள் :

1 .காமிக்ஸ் தொடர்பான செய்திகள் தூவலாய் மாத்திரமே தொடர்ந்திடும் ; so "உன் மொக்கை யாருக்கு வேணும்டா சாமி ?" என்போர் நேராய் பதிவின் வாலுக்கு ஜூட் விடலாமே - ப்ளீஸ் !

2 சிக்கிய சந்தில் எல்லாம் புராணம் பாடுவது வாடிக்கை என்பதால்  - இது ஏற்கனவே "சிங்கத்தின் சிறு வயதில்" தொடரிலோ ; அல்லது இங்கே பதிவுப்பக்கங்களிலோ நான் எழுதியிருக்கவும் கூடும் தான் ! So மறு ஒலிபரப்பாயிருக்கும் வாய்ப்புகளும் பிரகாசம் ! So ஜாக்கிரதை ப்ளீஸ் !

3 "சரி...உன் அனுபவத்தைச் சொல்லி எந்த பெர்லின் சுவரை தகர்க்கப் போறே தம்பி ? எந்த லோகத்துக்கு விடுதலை வாங்கித் தரப் போறே ?" என்ற கேள்வி உதட்டோரம் குடி கொண்டிருப்போராய் நீங்கள் இருக்கும் பட்சத்திலும் - பதிவின் வாலுக்கு பயணம் புளீஸ் ? ஒரு ஞாயிறை சுவாரஸ்யமாய் ஓட்டுவதான நினைப்பில் எழுதிட முனையும் வரிகளே தொடர்கின்றன ; இது பூமிக்கு சுவிசேஷத்தைக் கொணர போகும் சேதியல்ல என்பதை ஒத்துக் கொள்ளும் முதல் ஆள் ஞானே !!

So மேற்படி எச்சரிக்கைகளுக்கு பிற்பாடும் படிக்க ஆஜராகும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு மானசீக ரவுண்டு பன் வழங்கிய கையோடு மொக்கைக்குள் புகுந்திடுகிறேனே ! 

அந்தக் காலங்களில் அயல்தேசப்   பயணங்கள் என்பதெல்லாம் பெரியாட்களும், முக்கியஸ்தர்களும் மட்டுமே நினைத்துப் பார்க்கக்கூடிய சமாச்சாரங்கள் ! "இதயம் பேசுகிறது" என்ற பெயரில் வெளியாகி வந்த வாரயிதழில் அதன் ஆசிரியர் மணியன் அவர்கள் ரெகுலராய்த் தனது பயணக்கட்டுரைகளை எழுதுவதுண்டு & அவற்றைப் படிப்பதற்காகவே அந்த இதழை வாங்குவோரும் கணிசம் என்பது இன்னமும் நினைவில் நிழலாடுகிறது ! So அட்லஸில் நாடுகளாய் ; தலைநகர்களாய் மட்டுமே பரிச்சயமான ஊர்களுக்கு நேரில் போகவொரு வாய்ப்பு 1985 -ல் கிட்டிய போது உள்ளுக்குள் நிறைய உதறல் + கொஞ்சம் ஆசை ! எது எப்படியோ - இலண்டனைப் பார்த்தே தீர வேண்டுமென்ற ஆசை மட்டும் வேரூன்றியிருந்தது ! அதற்கு சில காரணங்கள் இல்லாதில்லை : 

ஆறாப்பு ; ஏழாப்பு படிக்கும் நாட்களில் ஆங்கில எழுத்தாளர் திருமதி Enid Blyton அவர்களின் சிறார் நாவல்களைப் பேயாய்ப் படிப்பதுண்டு ! Famous Five ; Secret Seven ; Five Find outers என்றெல்லாம் பள்ளி மாணவர்களை நாயக / நாயகியராய்க் கொண்டு அவர் உருவாக்கியிருந்த அத்தனை நாவல்களிலும் இங்கிலாந்தே கதைக்களம் ! கதைகளின்  மத்தியில், இங்கிலாந்தின் கிராமீய அழகு பற்றி ; கடலோர பிராந்தியங்களின் ரம்யத்தைப் பற்றி ; இலண்டனின் பரபரப்பு பற்றி ; தேநீர் வேளையில் அவர்கள் அழகாய் சாப்பிடும் கேக் ; பன் இத்யாதிகளைப் பற்றி அவர் விவரிக்கும் அழகில் அந்த தேசத்தின் மீதே ஒரு காதல் உருவாகியிருந்தது ! பற்றாக்குறைக்கு என் தந்தை சிக்கும் சந்தடியில் எல்லாமே - "உன்னை லண்டனுக்கு அனுப்பி journalism படிக்க வைக்கப் போறேன் !" என்று அள்ளி விடுவதுண்டு அந்நாட்களில் ! Journalism (இதழியல்) என்றால் என்னவென்றே தெரியாத மாக்கானாய்  இருந்தபோதிலும் "வருங்காலத்தில் நீங்கல்லாம் என்ன படிக்க போறீங்க பசங்களா ?" என்று பள்ளிக்கூடத்தில் டீச்சர் கேட்கும் போது கெத்தாய் "இலண்டன் மேலே journalism படிக்கறான் !" என்று பதில் சொல்லியிருக்கிறேன் ! பற்றாக்குறைக்கு அந்த Big Ben கடிகாரம் ; இலண்டன் பார்லிமெண்ட் போன்ற landmark ஸ்தலங்களை நமது அந்நாட்களது காமிக்ஸ்களில் பார்த்துப் பரவசமடைந்து கொள்வதுண்டு !  "மஞ்சள்பூ மர்மம் " இதழில் தேம்ஸ் நதி மீதான பாலத்தில் அடிதடி நடக்கும் சீன்களெல்லாம் நம்மூரில் கூவத்தின் மீது நடக்கும் ரகளைகள் போலவே பரிச்சயமான பிரதேசங்களாய்த் தோன்றிடும் ! "பாதாள நகரம்" இதழில் மாயாவியை ரீஜெண்ட் பார்க்கிற்குச் செல்லுமாறு டிரம் அடிக்கும் ஆசாமி  சங்கேத பாஷையில் தகவல் சொல்லும்போது - 'அட..நம்ம காமராஜ் பூங்கா ' மாதிரியே இருக்கு பார்டா !' என்று சொல்லிக்கொள்வேன்   ! 

பற்பல சாமிகளின்  புண்ணியத்தில் 1985-ன் அக்டொபரில் இலண்டனில் முதன்முதலாய்க் கால் பதிக்க சந்தர்ப்பம் அமைந்த போது, சினிமாவில் வருவது போல் பூமியெல்லாம் காலுக்குள் அதிரவில்லை  ! அந்த மண்ணைத் தொட்டு நானும் திருநீராயும் பூசிக் கொள்ளவில்லை ! மாறாக டோவர் துறைமுகத்தில் விசா வழங்கும் படலத்தில் இலண்டனின் குடியேற்றத்துறை வைத்திருந்த ஆப்பு தொண்டைக்குழி வரைக்கும் ஏறியிருக்க - அந்தப் பின்னிரவு லண்டனைப் பார்க்கவே சகிக்கலை எனக்கு ! And அடுத்த 11 நாட்களுக்கு அந்த தேசமே நமக்கு ஜாகை என்ற நினைப்பிலேயே காய்ச்சல் வராத குறை தான் ! பயண ஏற்பாடெல்லாம் தந்தையின் கைவண்ணமாயிருக்க, எங்கே போனாலும் ஒரு வாரம் ; ஒரு மாதமென டேரா போடும் அவரது வாடிக்கையின்படியே எனக்கும் itinerary செட் பண்ணியிருந்தார்கள் !

எங்கேயாச்சும் போய் ஒரு பாட்டம் 'ஓவென்று' அழுதால் தேவலாம் என்றிருந்த நிலையில் தான் லண்டனுக்குள் நுழைந்திருந்தேன் ! இன்டர்நெட் ஏதுமிலா அந்நாட்களில் ; ஹோட்டல் புக்கிங் எதுவும் கிடையாது ! 14 ஆண்டுகளுக்கு முன்னே லண்டனுக்குப் பயணமாகியிருந்த சீனியர் எடிட்டர் அன்றைக்கு அங்கிருந்த இந்திய YMCA-வில் தங்கியிருந்திருக்க, என்னையும் அங்கே போய்த் தங்கிக்கொள்ளச் சொல்லியிருந்தார் ! ஒரு முரட்டு பை ப்ளஸ் ஒரு brief case சகிதம் இந்தியன் YMCA இருக்கும் ஏரியாவின் பெயரைச் சொல்லி டாக்சியில் சென்று இறங்கி விட்டேன் ! ஏதோ - சோத்தாங்கைப் பக்கம் போய், பீச்சாங்கைப் பக்கம் போனா இடம் வந்துவிடும் என்ற நினைப்பில் டாக்சியிலிருந்து இறங்கியவனின் கண்ணில் பட்டது உசரமாய் தொடுவானத்தில் நின்று கொண்டிருந்த லண்டனின் சுழலும் டவர் போஸ்ட் ஆபீஸ் கோபுரமே ! அதன் உச்சியில் ஒரு ரெஸ்டாரண்ட் இருப்பதுமே எனக்குத் தெரியும் - "இயந்திரத்தலை மனிதர்கள்" கிளைமாக்சின் புண்ணியத்தில் ! ஆனால் அந்தத் தனிமையான நொடியில் அதை ரசிக்கும் நிலையிலெல்லாம் நானில்லை ! "முன்சாமிய பாத்தீகளா ? முன்சாமிய பாத்தீகளா ? " என்று ஜப்பானில் அனற்றித் திரியும் கவுண்டரைப் போல "YMCA எங்கே இருக்குங்கண்ணா ? YMCA எங்கே இருக்குங்கண்ணா ?" என்ற கேள்வியோடே கண்ணில்பட்டவர்களையெல்லாம் தாக்கிக் கொண்டிருந்தேன் ! அதுவொரு வெள்ளியிரவு வேறு ; எதிர்ப்பட்ட நாலில் ரெண்டு பேர் புல் பூஸ்ட்டில் தான் மணந்து கொண்டிருந்தார்கள்  ; எவனாச்சும் மப்பில் மண்டையைப் பிளந்திடுவானோ ? என்ற பயம் வேறு தொற்றிக் கொண்டது ! ஒரு மாதிரியாய் ஒரு வயோதிகத் தம்பதியின் புண்ணியத்தில் YMCA இருந்த சதுக்கத்தைத் தேடிப்பிடித்த போது என் நோவுகளெல்லாம் தீர்ந்து விட்டது போல் இருந்தது ! 

'நேரா போறோம்...ஒரு ரூம் போடறோம்...ஒரு குளியலை போட்ட கையோடு, தூக்கத்தைப் போடறோம் !" என்ற திட்டமிடலோடு போனவன் தலையில் அங்கிருந்த வெள்ளைக்காரப் பெண்மணி சிம்பிளாக ஒரு கல்லைப் போட்டு வைத்தாள் ! "Do you have a reservation ?" என்று கேட்டவளிடம் - "No ...நோ...you see I am from India ...." என்று தம் கட்டி நான் விளக்கம் சொல்ல முற்பட - "சாரி...அடுத்த மூன்றரை மாதங்களுக்கு இங்கே எல்லா அறைகளும் full " என்றபடிக்கே படித்துக்கொண்டிருந்த நாவலுக்குள் தலை புதைத்துக் கொண்டாள் ! மையமாய் , மௌனமாய் , கம்பீரமாய் அங்கே வீற்றிருந்த நம் தேசப் பிதாவின் உருவத்தைப் பார்க்கப் பார்க்க அழுகாச்சி பீலிங்கு மேலோங்கியது ! பற்றாக்குறைக்கு அங்கிருந்த இந்திய மெஸ்ஸிலிருந்து வந்த நறுமணம், சோற்றுக்குச் செத்துக்   கிடந்த நாசிகளையும், வயிற்றையும் ஏகமாய் உசுப்பி விட - "இன்னிக்கு அத்தினி பேருக்கும் பேதி புடுங்கப் போது - பாரு !!" என்ற சாபத்தோடு நடையைக் கட்டினேன் ! திரும்பவும் மெயின் ரோட்டுக்கு நடந்து, இன்னொரு டாக்சி பிடித்து ரயில்நிலையத்துக்கு அருகாமையில் ஏதேனும் ஒரு ஹோட்டலில் கட்டையைக் கிடத்துவதே இனி மார்க்கம் என்ற எண்ணத்தோடு நடக்க ஆரம்பித்தேன் ! நிமிர்ந்து பார்த்தால் ஒரு  அழகான classical ஸ்டைலிலான ஹோட்டல் எதிர்ப்பட்டது ! "அடடே....இங்கேயே கேட்டுப் பார்ப்போமே !" என்றபடிக்கு ரிஸப்ஷனுக்குப் போய் "ரூம் இருக்கா ?" என்று கேட்க.."Yes sir !" என்றாள் அந்தச் சிக் பணிப்பெண் ! 'கடவுள் இருக்காருடா கொமாரு !" என்ற நிம்மதி எனக்குள் சரேலென்று பிரவாகமெடுக்க  "One room ...10 days !" என்றேன் பந்தாவாய் ! "Very good sir ...that will be -------- பவுண்ட்ஸ் !" என்று ஒரு நம்பரைச் சொன்னார் ! எனக்கோ வடிவேலுக்குப் பஞ்சாயத்து பண்ண முனையும் சங்கிலி முருகனைப் போல "எனக்கு சரியாத் தானே கேக்குது ? " என்று ஊர்ஜிதம் செய்திடும் ஆசையே மேலோங்கியது - simply becos அம்மணி சொல்லியிருந்த தொகையைக் கணக்குப் போட்டால் நாளொன்றுக்கு நம் காசில் ரூ.எட்டாயிரம் சுமாருக்கு வந்தது ! 

35 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களில் அதுவொரு அசகாயத் தொகை (இன்னமுமே தான் !!) என்பதால் - துண்டைக் காணோம் ; துணியைக் காணோமென்று ஓட்டம் பிடித்தேன் அங்கிருந்து ! என்ன தான் பிராங்பர்ட் ; பிரஸ்ஸல்ஸ் என்று 10 நாட்களை ஐரோப்பாவில் கடத்தியிருந்த அனுபவம் இருந்தாலும், எங்குமே நாளொன்றுக்கு 1500-க்கு ஜாஸ்தியான வாடகையில் நான் தங்கியிருக்கவில்லை ! So இந்த சொகுசெல்லாம் நமக்கு கட்டாது சாமி என்றபடிக்கே சாலையை எட்டிப் பிடித்து கண்ணில்பட்ட முதல் கருப்பு டாக்சிக்குள் தஞ்சம்  புகுந்தேன் ! லண்டனின் அந்தப் பாரம்பரிய டாக்சிகள் பார்க்க டெண்டு கொட்டகை போலத் தோன்றினாலும் செம சவுகர்யமானவைகள் ! விட்டால் இதுக்குள்ளேயே இன்றைய ராப்பொழுதைச் செலவிட்டு விடலாமே என்ற ரேஞ்சுக்கு அலுத்துப் போயிருந்தவன் - "விக்டோரியா ரயில் நிலையம்" என்று டிரைவரிடம் சொன்னேன் ! இலண்டனில் அரை டஜனுக்கும் மேற்பட்ட முக்கிய ரயில்நிலையங்கள் உண்டு என்பதெல்லாம் அப்போதைக்குத் தெரியாது ; எங்கேயோ காதில் வாங்கிய 'விக்டோரியா ஸ்டேஷன்' என்ற பெயர் மட்டுமே அப்போதைக்கு கை கொடுத்தது எனக்கு ! இரவு பத்தரை சுமாருக்கு அங்கே போயிறங்க, டாக்சிக்கு அழுக நேரிட்ட தண்டத்தை நினைத்து தொண்டையெல்லாம் அடைத்தது ! 

மறுக்கா பையை இழுத்துக் கொண்டே ரயில் நிலையத்தின் பக்கவாட்டுச் சாலைகளுக்குள் புகுந்து ஹோட்டல் தேட ஆரம்பித்தேன் ! B & B (Bed  & Breakfast ) என்ற போர்டுகளுடன் நிறையவே குருவிக்கூட்டு ஹோட்டல்கள் கண்ணில்பட்டன ! ஆனால் எனக்கோ அவையெல்லாமே வசந்த மாளிகைகளாய்த் தென்பட்டன ! ஏதோ ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து தயங்கித் தயங்கி வாடகை பற்றி விசாரித்து ; அங்கிருந்த ஆசாமி ஒரு சொற்பத் தொகையைச் சொன்ன போதே இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட முடிந்தது ! பொதுவாய் இலண்டனில் பழைய காலத்து வீடுகளையே ஹோட்டல்களாய் மாற்றம் செய்து புழங்குவது வாடிக்கை ! So ஒடுக்கமான மாடிப்படிகள் தானிருக்கும் ; lift ? என்று கேட்டால் நம்மை ஒரு தினுசாய்ப் பார்ப்பார்கள் ! தவிர முக்கால்வாசி அறைகளில் பாத்ரூம் இணைந்திராது ! ஒரு மாடிக்கு ஒரு குளியலறை & ஒரு கழிப்பறை என்று அந்தந்த நடைபாதைகளின்  இறுதியில் அமைத்திருப்பார்கள் ! ரூமோடு பாத்ரூமும் சேர்த்தே வேண்டுமெனில் கட்டணம் எகிறிடும் ! நானோ மேஜைக்கு அடியில்னாலும் கட்டையைக் கிடத்த ரெடி என்றிருந்த நிலையில், கூடுதல் வாடகையிலான ரூமைத் தேர்வு செய்வேனா - என்ன ? So நான்காவது மாடியில் ஒரு புறாக்கூடு போலான அறைக்கு பையைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் - முடிவே இலா படிக்கட்டுகளில் ! ஒரு மாதிரியாய் ரூமுக்குப் போன போது குறுக்கு காணாதே போய்விட்டது ! "ஒரு வாரம் தூங்கினால் தான் இந்த அலுப்பு ஓயும் !" என்று நினைத்துக் கொண்டே பையைத் திறந்து லுங்கியை எடுத்துக் கட்டிக் கொண்டு கட்டிலில் மல்லாந்தேன் ! ரூமில் ஹீட்டர் வசதியெல்லாம் லேது என்பதால் போட்டிருந்த ஜெர்கினை கழற்றாமல் அப்படியே குறட்டை விட துவங்கினேன் ! அடித்துப் போட்டார் போல தூக்கம் வருமென்று நினைத்தே படுத்த போதிலும், "புது ஊர் ; புது ஆப்பு ; புது இடம் ; புது புறாக்கூடு" என்ற கூட்டணி ஒன்றுசேர்ந்து என் தூக்கத்துக்கு இயன்ற இடைஞ்சலைச் செய்தன ! 

காலையில் ஏழரை மணி சுமாருக்கு எழுந்த போது தான் வயிறு கலக்குவதும், பிறாண்டுவதும் ஒருங்கே  நிகழ்ந்தது ! "சாப்பிட்டு 16 மணி நேரங்களுக்கு மேலாச்சு !" என்று ஞாபகம் வர - கீழ்தளத்தில் Free breakfast என்பதால் போய் ஒரு கட்டு கட்டிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன் ! அதற்கு முன்பாய் முக்கிய வேலை காத்திருப்பதால் அதற்கு தீர்வு தேடிய நொடியில் தான் பாத்ரூம் நடைபாதையின் இறுதியில் உள்ளது நினைவுக்கு வந்தது ! கதவைத் திறந்து எட்டிப் பார்த்தால் ஊதைக் காற்று மட்டுமே தென்பட்டது ; வேறு ஆள் நடமாட்டமே இல்லை ! எல்லாருமே சனிக்கிழமை என்பதால் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சாப்பிடக் கீழே போயிருக்க வேண்டுமென்று தோன்றியது ! "சரி...நம்ம பாட்டைப் பார்ப்போம்" என்றபடிக்கு காலை ஷூவுக்குள் நுழைத்துக் கொண்டு ரூமிலிருந்து வெளியேறினேன் ! டம்மென்று கதவு சாத்தும் ஓசை எனக்குப் பின்னே கேட்ட நொடியில் தான் ரத்தம் தலைக்கேறி கிறுகிறுப்பது போல் உணர்ந்தேன் ! கதவைத் திறக்கும் சாவியானது உட்பக்கம் உள்ளது என்பதும், இந்தக் கதவுகள் automatic lock ரகத்திலானவை ; சும்மா சாத்தினாலே பூட்டிக் கொள்ளும் என்பதையும் ; சாவியைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் வெளியே வந்து தொலைத்து விட்டேன் என்பதையும் உணர்ந்த நொடியில் எனக்குள் ஓடிய பீலிங்குகளை வர்ணிக்க சான்ஸே கிடையாது ! ஆனால் "உன் பஞ்சாயத்தை அப்பாலிக்கா வைச்சுக்கோ தம்பி ; இப்போ எனக்கொரு வழி சொல்லு " என்று வயிறு ரகளை செய்திட பாத்ரூமைத் தேடிப் போனேன் ! சகலமும் சுபமாய் முடிந்த நொடியில் என்னை நானே பாத்ரூம் கண்ணாடியில் பார்த்துக் கொண்ட போது ஒரு கோமாளிப்பயலே கண்ணாடியினில் பிம்பமாய்த் தெரிந்தான் ! ஒரு கட்டம் போட்ட லுங்கி...கடைவாயோரம் ராத்தூக்கத்து ஜொள்ளோட்டத் தாரைகளின் அடையாளங்கள் ; முற்றிலுமாய்க் கலைந்து கிடந்த பம்பை மண்டை ( மெய்யாலுமேங்கோ !!) ; குளிருக்கு கழற்றியிராத ஜெர்கின் ; அவசரத்தில் சாக்ஸ் போடாது ஷூ மட்டும் போட்டிருந்த ரம்யம் என்று ஒரு மார்க்கமாய்க் காட்சி தந்தேன் ! எனது ரூமுக்குள் நுழைய வேண்டுமெனில், இந்தக் கோலத்திலேயே  நாலு மாடிப்படிக்கட்டுகளில் கீழிறங்கிப் போய் ரிசப்ஷனில் மாற்றுச் சாவி வாங்கியார வேண்டும் என்பதைத் தாண்டி வேறு வழியே கிடையாது ! No roomboys ; so "தம்பி...கீழே போயி சாவி வாங்கிட்டு வாயேன் !" என்று பணிக்க வழி கிடையாது ! 

"துணிந்த பின் மனமே ; துயரம் கொள்ளாதே !" என்று என்னை நானே தேற்றிக் கொண்டு, முயன்றமட்டுக்கும்   ஒரு casual look-ஐ முகத்தில் வைத்துக் கொண்டு படியிறங்க ஆரம்பித்தேன் ! சாப்பிட்டுவிட்டு மேலே தத்தம் அறைகளுக்குத் திரும்பிடுவோர் எதிர்ப்படும் போது - பூமி அப்படியே திறந்து என்னை விழுங்கிக்கொள்ளாதா ? என்பது போலிருக்கும் ! கீழே ரிசப்ஷனுக்கு வந்தாலோ - எதிரே இருந்த breakfast அறையில் அத்தனை பேரும் வெள்ளையும், சொள்ளையுமாய் formals  உடையணிந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, நான் சங்கு மார்க்  லுங்கிக்கு மாடல் போல போய் நின்று மண்டையைச் சொரிந்து கொண்டே என் பிரச்னையைச் சொன்னேன் ! நிமிர்ந்து பார்க்கக் கூட லஜ்ஜையாக இருக்க, "ஒரு spare சாவி கிடைக்குமா ?" என்றபடிக்கே லேசாய் நிமிர்ந்தால், ரிசப்ஷனில் இருந்ததோ ஒரு செம cute இளம் பெண் !! முந்தைய இரவில்  இருந்த அதே கடுவன் பூனை தாத்தா தான் இன்னமும் இருப்பார் என்ற நினைப்பில் இருந்தவனுக்கு  ஒரு ஜேம்ஸ் பாண்ட் அழகியை அங்கே பார்த்த நொடியில் சோகம் பன்மடங்காகிப் போனது ! சாவியை வாங்கியது, 4 மாடியின் படிகளை உசேன் போல்டின் சித்தப்பா வேகத்தில் ஏறியது ; கதவைத் திறந்து ரூமுக்குள் ஐக்கியமானது ; லுங்கியைக் கடாசிவிட்டு ஜீன்ஸை மாட்டிக் கொண்டு ; பை & பொட்டலங்களைக் கட்டி வைத்த கையோடு, ஜாக்கிரதையாய் சாவிகள் இரண்டையுமே பாக்கெட்டில் செருகிக் கொண்டே கீழே திரும்பவும் போனது - என எல்லாமே மின்னல் வேகத்து நிகழ்வுகளாகிப் போயின ! "ஓசியானாலும் இனி இந்த ஹோட்டலிலே குப்பை கொட்ட தயாரில்லை சாமி !" என்றபடிக்கே லண்டனின் வெயில் போர்த்த சாலைகளில் நடக்க ஆரம்பித்த  போது - "இந்த ஊரா இத்தனை காலத்துக் கனவு தேசமாய் இருந்துள்ளது ??" என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் ! உச்சா  போகாத ஓராங்குட்டான் போல எங்கெங்கோ அலைந்து, இறுதியாய் Youth Hostel ஒன்றில் சல்லிசாய் இடம் பிடித்த குஷியில் ஹோட்டலுக்குத் திரும்பி  சாமான்களை எடுத்துக் கொண்டு கிளம்பினேன் ! போகும் போது அந்த ஜேம்ஸ் பாண்ட் அழகி நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்ததாய்த் தோன்றியது எனது கற்பனையா ? இல்லையா ? தெரியாது ; ஆனால் ஆயுசுக்கு இனி லுங்கி கட்ட மாட்டேண்டா சாமி !! என்ற சபதம் எடுத்தது நிஜம் என்பது மாத்திரம் நினைவுள்ளது !

தொடர்ந்த 10 நாட்களில் லண்டனின் நீள அகலங்களை அளந்ததும் ; ஏதேதோ பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததும் தொடர்ந்தன ! வெறுப்பேற்றிய அதே நகரம் வாஞ்சையோடு என்னை ஏற்றுக் கொண்ட அதிசயங்களும் நிகழ்ந்தன ! ஏகப்பட்ட பணிகளிலும் அந்த மண்ணில் வெற்றி கிட்டியது ; ஏகமாய் அனுபவங்களும் கிட்டின அங்கேயே ! Maybe உலகை உவகைப்படுத்தப்போகும் இன்னொரு  பதிவெழுதும் மூட் தலை தூக்கும் போது இந்த london diary படலம் தொடருமோ என்னவோ ! எது எப்படியோ -  "லண்டன்" என்ற நொடியே அந்த "லுங்கி டான்ஸ்" நாள் தான் என் தலைக்குள் தோன்றி மறையும் !! Maybe நம்மவர்கள் கோப்பையைத் தூக்கி தேசத்தையே மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திடும் பட்சத்தில், "லண்டன்" என்றவுடன் சந்தோஷ ஞாபகங்கள் எனக்குள்ளும் இடம் பிடித்திடலாம் ! காத்திருப்பேன் அந்நாளுக்காக !

Before I sign off - இதோ "ஈரோடு எக்ஸ்பிரஸ்" புக் # 1-ன் குட்டி டிரெய்லர் ! அட்டகாசமான கதைக்களம் ; செம வித்தியாசமான கதை சொல்லும் பாணி என்று "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" பின்னிப் பெடல் எடுக்கிறது ! Dont ever miss it folks !!

170 comments:

  1. படிச்சிட்டு வர்றேன்

    ReplyDelete
    Replies
    1. மான்செஸ்டர் நகருக்கு வந்தால் என் வீட்டுக்கு வாங்க சார். இந்திய நகரங்களில் எனக்கும் இது போல அனுபவங்கள் உள்ளது. நியாபகம் வருதே... நியாபகம் வருதே...

      Delete
  2. ஸ்பாம் மெசேஜ்கள் வருகின்றன ஆசிரியரே..
    பிளாக்கில் கமெண்ட் இடுபவர்களை பில்டர் செய்யுங்கள் ப்ளிஸ்..

    ReplyDelete
    Replies
    1. கடமையே கண்ணாய் அவ்வப்போது சில நூறு spam message களை அங்கங்கே போட்டு விடும் முனைப்பு யாருக்கோ உள்ளது நண்பரே ! Filter செய்வதாயின் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு அனுமதி கோரும் முறையை அமலுக்கு கொண்டு வரணும் !

      Delete
    2. தாங்கள் எது செய்வதாயினும் எம் ஆதரவு உள்ளது சார்.

      Delete
  3. வணக்கம அனைவருக்கும்.

    ReplyDelete
  4. மிக அழகான லண்டன் பயணம். படித்து முடித்த பின் சிரிப்பை அடக்க முடியவில்லை ....ஆமா..ஆசிரியரே உங்களிடம் ஒரு. கேள்வி 1.ரிசப்னிஸ்ட் எந்த ஜேம்ஸ் பட ஹீரோயின் போல இருந்தார்கள்...
    2.இப்போது லுங்கி கட்டும் பழக்கம் உண்டா.அல்லது சபதம் சபத தானா?????

    ReplyDelete
    Replies
    1. சபதம் சபதம் தான் நண்பரே !!

      Delete
  5. என்னுடைய UK சந்தாவில் ஈரோடு புத்தகங்கள் வருமா அல்லது தனியாக பணம் கட்ட வேண்டுமா சார்?

    ReplyDelete
    Replies
    1. ரெகுலர் சந்தாக்களில் இவை அங்கமாகாது சார் !

      Delete
  6. டியர் எடி,

    பயணங்களை சுவைபட மட்டும் இல்லாமல், ஹாஸ்யங்கள் சகிதம் நினைவுகூறுவதில், நீங்கள் கில்லாடி தான். லுங்கி கட்டிகொண்டு முதன் முதலில் அயல்தேசத்து அபார்ட்மென்ட் கம்யூனிட்டிக்குள் அலைந்து திரிந்து, வசவுகளை வாங்கி கட்டி கொண்டது ஞாபகம் வருகிறது.

    இனி, சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பு மட்டுமல்ல, உங்களின் பயணகுறிப்பு தொகுதி ஒன்றிற்கும், நினைவூட்டல்களை அணிவகுத்து விட வேண்டியதுதான் :)

    ReplyDelete
    Replies
    1. அட..நம்மூர் லுங்கிகளுக்குப் பெரிய பின்னணியே இருக்கும் போலுள்ளதே ?!!

      Delete
    2. நானும் அந்த வயதில் லுங்கியோட வே கிடா விருந்துக்கு போய் என் அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன் அவர் மானத்தை வாங்கிட்டேனாம் அவர் தண்ணி யடிச்சுட்டு பண்ணின அலப்பறையில் இதெலாம் சும்மா

      Delete
  7. லுங்கி கட்டும்போது உள்ள சுகமே தனி சார்.....😊

    ReplyDelete
  8. When I saw the notice of your London visit in THALAI VAANKI KURANGU I simply thought you were doing business there easily as you had planned sir. But this much (funny) problem!?!?!?!. I wish you would continue 'Singathin siruvayadhil' sir.

    ReplyDelete
    Replies
    1. லண்டன் போட்டோல்லாம் உட்டாலக்கடி சார் ; இங்கே நம் ஆபீசில் ஏற்பாடு செய்து போட்டது !

      Delete
  9. 7th கரூர் ராஜ சேகரன் சார் திரு மணியன் சாரை விட உங்கள் கட்டுரை மிக நன் ளாக உள்ளது. சிங்கத்தின் பயணங்கள் எதிர் பார்க்கிறேன். தனி புத்தகமாக வர புனித தேவன் மானிடோஅருள் புரிவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சார்...அவரெல்லாம் பயணக் கட்டுரைகளின் கிங் !! நான் சும்மா பொழுது போகாத நேரங்களில் எதையாச்சும் எழுதி வைப்பதோடு சரி !

      Delete
  10. சில பதிவுகளும் சரி...இம்மாத இதழின் தலைப்பும் சரி போராட்டத்தில் தீ மூட்டி விடுவது போலவே இருப்பினும் ....எங்கே போய் சொல்வது


    பதுங்கி கொள்ள வேண்டியவர் பாய்ந்து பாய்ந்து தூண்ட...

    பாய வேண்டியவர்கள் பதுங்கு குழிக்குள் பதுங்கி கிடப்பதை...:-(

    ReplyDelete
    Replies
    1. தலீவரே....உங்க பதுங்கு குழி டெக்னிக் மட்டும் எனக்கு லண்டனில் தெரிஞ்சிருந்தாக்கா ஹைட் பார்க்கில் ஒரு பள்ளம் வெட்டி சட்டி, பெட்டியோடு அங்கே ஐக்கியமாகியிருப்பேனே ?!! ச்சே..!

      Delete
  11. அப்புறம் சார்...


    இம்மாத இதழ்கள் ரெடியா...?

    :-)

    ReplyDelete
  12. வணக்கம் ஆசிரியரே. ஐயா நாங்கள் எதிர்பார்ப்பது மாதந்தோறும் குண்டு புத்தகங்களே.மாதம் வெளியாகும் மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் ஒரு மாதத்திற்கு போதவில்லை.புத்தகங்களை இரசித்து படித்த பின்னர் தான் விமர்சனம் எழுதினால்தான் மிகச் சிறப்பாக இருக்கும். டைப் செய்வது கடினமான வேலை எனவே காமிக்ஸ் நண்பர்கள் பின்னூட்டம் அனுப்ப தாமதம் என்றே நினைக்கிறேன். எந்த காரணம் கொண்டும் புத்தக குறைப்பு பக்க குறைப்பு செய்து விடாதீர்கள் ஐயா.மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாம் நம் தமிழ் மொழியில் வெளிவரும் ஒரே காமிக்ஸ் உங்களது காமிக்ஸ் மட்டுமே.எங்களை போன்றோர்க்கு உங்களை விட்டால் எங்களுக்கு யாருமே இல்லை ஐயா. புத்தக வாசிப்பு அழிகின்ற நிலையில் காமிக்ஸ் மட்டுமே உயிரூட்ட முடியும்.எனவே ஆசிரியரை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் புத்தக குறைப்பு மற்றும் பக்க குறைப்பு எந்த சூழலிலும் வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. சார்...நாமெல்லாம் பதிப்புலகில் ஒரு ஓரமாய் கோலி ஆடி வரும் சிறார்களை போல !! வாசிப்பைத் தூக்கி நிறுத்தப் போகும் பாகுபாலிகளாய் நம்மை உருவகப்படுத்துவது உங்களின் காமிக்ஸ் நேசம் மட்டுமே என்பது புரிகிறது !!

      Delete
  13. இந்த மாதத்து இதழ்கள் அனைத்தும் அருமை.டெக்ஸ் இதழ் அருமை.விவரிக்க வார்த்தை இல்லை. உயிரோட்டமான சித்திரங்கள் நவரசம் பொருந்திய கதை.டெக்ஸ் மட்டும் எப்படித்தான் அமைகின்றதோ ஆசிரியருக்கே வெளிச்சம். ஜான் டோனோவான் ,புளூபெர்ரி மறுபதிப்பு அட்டகாசம் ஆசிரியரே. முதன் முறையாக படிப்பதால் டைகர் மீதான ஈர்ப்பு மிகைப்படுத்தியுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  14. இந்த மாத கதைகளில் டெக்ஸ் கதை மட்டுமே நன்றாக உள்ளது. இது என்னுடைய தனி பட்ட கருத்து அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. சிக் பில் பிடிக்கலையா சார் ?

      Delete
  15. ஆசிரியரின் கடந்த கால வரலாறு எத்தகைய கடினமானது.உங்களது வரலாற்றை படிக்கும் போது கிட்கார்ஸன் தான் என் நினைவுக்கு வருகிறார்.

    ReplyDelete
    Replies
    1. போச்சுடா...கருப்பு மசிச் சட்டிக்குள்ளாற மண்டையை இன்னுமே நல்லா முக்கி எடுக்கணும் போல் தெரியுதே.....கார்சன் ரேஞ்சுக்குப் போயிடுச்சா ?

      Delete
  16. ஞாயிறு காலை வணக்கம் சார்மற்றும் நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  17. வெளியூர்..வெளி மாநிலம்னாலே ஏகப்பட்ட குழப்பங்களும் ஏடாகூடங்களும் அரங்கேறும்..அந்நிய நாட்டுக்கு போய் திக்கித் திணறி என்ன பண்ணியிருப்பீங்க என அந்தக்கால ஹாட்லைன படிச்சிட்டு கற்பனை செய்திருக்கேன். செம்ம அனுபவம் சாரே.. படலம் தொடரட்டும்..ஈரோட்டு திருவிழா சிறக்கட்டும்..பங்கேற்கவிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. சிங்கத்தின் சிறுவயதில் என் தவிர்கமுடியாத collectionல் ஒன்று. கதை மிக அருமை. ஒரு ஷெரிப்பின் சாசனம் நகைச்சுவை விருந்து. லுங்கி டான்ஸ் அனுபவம் அனைவருக்கும் எதோ ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும். எனக்கு திருசெந்தூரில்.

    ReplyDelete
    Replies
    1. அட..நமக்குத் துணைக்கு நிறைய ஆள் உண்டு போல் தெரிகிறதே ?!!

      Delete
    2. But your adventure there in lungi is something unheard of sir. This post better be titled LUNGI IN LONDON

      Delete
    3. For me in Belgium :-) The only solace was I was using white lungis for night-wear. So it was at least uniform rather than full of gross colors :-) :-) Still I can relate to the weird look the receptionist had when I went to fetch a duplicate key card :-) :-)

      Delete
  19. இனி எங்காச்சும் யாராச்சும் லண்டன் அப்படீன்னு சொன்னாலே நீங்கதான் நினைவுக்கு வருவீங்க சார் 😁🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. சவுத் ஆப்பிரிக்காவில் "லுங்கி இங்கிடி" என்றொரு பவுலர் உள்ளாரல்லவா சார் ....அவர் பெயரைக் கேட்கும் போதெல்லாம் கூட எனக்கு லண்டன் கூத்துத் தான் ஞாபகத்துக்கு வரும் !

      Delete
  20. // Before I sign off - இதோ "ஈரோடு எக்ஸ்பிரஸ்" புக் # 1-ன் குட்டி டிரெய்லர் ! அட்டகாசமான கதைக்களம் ; செம வித்தியாசமான கதை சொல்லும் பாணி என்று "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" பின்னிப் பெடல் எடுக்கிறது ! Dont ever miss it folks !! //

    டிரெயிலர் பட்டய கிளப்புது சார் 😍😍😍
    .

    ReplyDelete
  21. அருமையான பதிவு. மாதம் ஒருமுறை யாவது இதுபோன்ற பதிவுகள் நீங்கள் எழுதலமே?..

    ReplyDelete
    Replies
    1. அட...பயணம் போவோர் ஒவ்வொருவரிடமும் இது போல் அனுபவங்களுக்குப் பஞ்சமே இராது என்பது நிச்சயம் சார் ! என்னோடு ப்ளஸ் டூ வரை படித்ததொரு நண்பன் - பிரின்டிங் ஆர்டர் வாங்கும் பொருட்டு இந்தியாவுக்குள் சுற்றாத இடம் கிடையாது! ஒரிஸாவிலும், பீஹாரிலும் ; பெங்காலிலும் அவனுக்குக்கிட்டிய பயண அனுபவங்களில் ஒரு சிறு துளியைக் கேட்டாலே திறந்த வாய் மூட ஏக நேரம் புடிக்கும் !! ஒவ்வொன்றும் ஒரு பதிவுக்கான material எனலாம் !!

      நம்ம அனுபவங்களெல்லாம் பொழுது போகா ஏதோவொரு பொழுதுக்கு ஓ.கே. சார் !

      Delete
  22. உங்கள் காலை நேர களேபரம்

    "எழுந்து வந்த எழும்புக்கூடுவில்" ஆங்கஸ் பாஸ்கர் வில் ஆவி போட்ட ட்ரெஸ் தான் எனக்கு சட்டுனு ஞாபகம் வருது...... bag piper மிஸ்ஸிங்....

    ஜெர்கின்
    கொடு போட்ட சட்டை
    லுங்கி


    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    ReplyDelete
    Replies
    1. அட...ஆமாம்லே ? அப்புறம் அந்தக் காலத்து அரசாங்க குமாஸ்தாக்களும் இப்டிக்கா டிரெஸ் செய்வதை சினிமாக்களில் பார்த்ததாக ஞாபகம்..கீழே வேஷ்டி..மேலே கோட் ; மண்டையில் தலைப்பாகை என்று !! திடசித்தர்கள் தான் !!

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. எடிட்டர் சார்..

    உங்க லுங்கி டான்ஸ் அனுபவங்கள் செம த்ரில்லிங் + கெக்கபிக்கே! ரிப்போர்ட்டர் ஜானி கதையையும், கிட்ஆர்டின் கதையையும் ஒருசேரப் படித்ததைப் போன்ற உணர்வு!

    'சி.சி.வ' கேட்டு நாங்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு போராட்டங்கள் பல நிகழ்த்துவதும், போராட்டங்கள் பலனின்றி நாக்குத் தொங்கிப் போவதின் பின்னணியும் இதுதான்!!
    இதுபோன்ற பதிவுகளைப் படிக்கும்போது மீண்டும் தீவிரமான போராட்டத்தில் குதிக்கத் தோன்றிடுகிறது.. ஆ..ஆனால்... கொஞ்சம் இருங்க அந்தண்டை போய் ஒரு ரவுண்டு அழுதுட்டு வரேன்!!

    ReplyDelete
    Replies
    1. //உங்க லுங்கி டான்ஸ் அனுபவங்கள் செம த்ரில்லிங் + கெக்கபிக்கே! ரிப்போர்ட்டர் ஜானி கதையையும், கிட்ஆர்டின் கதையையும் ஒருசேரப் படித்ததைப் போன்ற உணர்வு! //

      இதுக்கே இப்படின்னா....'அடிச்சுக் கேட்டாலும் சொல்லப்படாது' ரகத்திலான 1986-ன் பாரிஸ் அனுபவத்தை என்னவென்பீர்கள் ? ஷப்ப்பா...இன்னிக்கு நினைச்சாலும் கண்ணெல்லாம் வேர்க்குது சாமி !

      Delete
    2. // ஆனால்... கொஞ்சம் இருங்க அந்தண்டை போய் ஒரு ரவுண்டு அழுதுட்டு வரேன்!! //

      வாழைப்பூ வடை மற்றும் நண்டு வறுவல் சாப்பிட போகிறேன் என்று சொல்லுங்கள் அதை விட்டு விட்டு காமெடி பண்ணுறீங்க. பாவம் தாரை பரணி :-)

      Delete
  25. இளமையில் கொல்: டைகரின் ஆரம்ப நாட்களை சொல்லும் மூன்று சிறிய கதைகள் ஆனால் மூன்றும் பட்டாசுகள். ஓவ்வொரு கதையிலும் ஆக்சன் எதிர்பாராத திருப்பம் மற்றும் விறுவிறுப்பு.

    வண்ணத்தில் படிப்பதற்கு நன்றாக இருந்தது. இவரின் அடுத்த பாகங்களை விரைவில் வெளியிடுங்கள், முடிந்தால் இந்த வருடமே கண்ணில் காட்டுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான வாசிப்பு அனுபவத்தை கொடுத்ததில் இதற்கு இந்த மாதம் முதல் இடம்.

      Delete
    2. Super pa. Rummi நமக்கு ஆள் ரெடி

      Delete
  26. ஹாஸ்ய உணர்வு ததும்பும் பதிவு..

    புதிதாக வரும் டைகரின் ஒரு சில நகைச்சுவை கதைகளை படித்தாற்போல ஒரே சிரிப்பு..

    ( பின்னாலேயே ரம்மி வந்து தாளிக்க போறாரு..:-)]

    ReplyDelete
    Replies
    1. அவ்ளோவ்வ் மொக்கையாவா சார் இருந்துச்சு பதிவு ?

      (கன்னத்தில் மருவுக்கும், மச்சத்துக்கும் ஆர்டர் போட்டாச்சூ !! ஜார்கண்டுக்கும் டிக்கெட் போட்டாச்சூ !!)

      Delete
    2. கன்னத்தில் மருவுக்கும், மச்சத்துக்கும் ஆர்டர் போட்டாச்சூ//

      அவ்வளவு எல்லாம் பயப்பட ஒன்னுமே இல்லீங்க சார். போன தடவை ரம்மி ஏற்பாடு பண்ணின ஓலா காலியாத்தான் வந்துச்சு. பாவம் அந்த டிரைவரும் நிறைய ட்ரை பண்ணிருக்காரு. டவுசர் ரசிகர்களை எங்கே தேடியும் கண்டு பிடிக்க மிடிலயாம்.

      Delete
  27. ஒரு ஷெரீப்பின் சாஸனம்: நமது டாக்புல் வுட் சிட்டியில் புதிய சாஸனம் அறிமுக படுத்துகிறார் அது ஏன்? எதற்காக? அது என்ன? என்பதை அழகாக நகைச்சுவையுடன் சொல்வது இந்த கதை. நகரை சுத்தமாக வைப்பதில் காட்டும் அக்கறையில் நகரை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதில் கோட்டை விடுகிறார் (இது நமது நாட்டில் நடந்த விஷயத்தை ஞாபகப்படுத்தினால் கம்பெனி பொறுப்பில்லை).

    பார்ட்டர் சிட்டியில் பண்டமாற்று முறையில் கிட் ஆர்டின் சூப் சாப்பிட கடைபிடித்த வழிமுறை கெக்கே பிக்கே என்று சிரிக்க வைத்தது.

    கவர்மென்ட் இன்ஸ்பெக்டர் ஷெரிப் ஆபீஸ் வந்த உடன் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நான்-ஸ்டாப் காமெடி.

    நீண்ட நாட்களுக்கு பிறகு பக்கத்திற்கு பக்கம் காமெடி என நமது வுட் சிட்டி குழுவினர் அசத்தி விட்டனர்.

    ReplyDelete
  28. ஒரு ஷெரீப்பின் சாஸனம்: ஒரு கேள்வி:
    பக்கம் 31ல் டாக் புல்லுக்கு தீடிர் என்று அசாத்திய பலம் வருவது எப்படி? நீண்ட நேரம் வெயிலில் நின்றதா? அவரின் இந்த அசாத்திய பலம் கதையில் உபயோக படுத்தியது போல் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அந்த frame க்கு முந்தய பக்கத்தை ஒருவாட்டி கவனித்துப் பாருங்களேன் சார்..புரியும் !

      Delete
    2. அவரின் நீண்ட நேர காவல் ஒரே இடத்தில் பல மணிநேரம் திருடர்களை எப்படியும் பிடிக்க வேண்டும் என்ற வெறி?

      Delete
    3. இல்லை மக்கள் அவரை ஏற்றிய கடுப்பு

      Delete
  29. Refreshing story from Tex Viller and Co.. Martin சுமார்.. Yet to read the rest..edi..நீங்க this month is a little busy one.. So dont reduce the book size or count based on one month.. Let the feast continue

    ReplyDelete
    Replies
    1. ///this month is a little busy one.. So dont reduce the book size or count based on one month.. Let the feast continue///

      #Me too

      Delete
  30. நியூட்டனின் புது உலகம்: எரிகல் விழுவதால் ஏற்படும் பாதிப்பு அதனை சுற்றி அழகான கற்பனை கதை. அதன் பாதிப்பில் உள்ள நபர்களுக்கு இடையிலான நிழல் யுத்தம் ரசிக்கும் படி இருந்தது; ஆனால் இந்த கதையில் மார்டினுக்கு பெரியதாக வேலை ஏதும் இல்லை என்பதே உண்மை.

    முதல் சில பல பக்கங்களில் நமது காமிக்ஸ் கதாநாயகர்கள் எல்லாம் ஆங்காங்கே சந்திக்கிறார்கள் ஒருவரை விட ஒருவர் பெரியவர்கள் என காட்டும் சம்பவங்கள் அழகான கற்பனை ஆனால் கதைக்கும் இதற்கு என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஆனால் ஆரம்ப நாட்களில் நமது காமிக்ஸ் நாயகர்களின் கதையை படித்த போது இவர்கள் அனைவரும் (ஸ்பைடர், ஆர்ச்சி மற்றும் இரும்பு கை) ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்திப்பார்கள் என்று நம்பியது உண்டு.

    மார்ட்டின் வித்தியாசமான கதை ஆனால் டாக்குமெண்டரி போல் இருந்தது. எனவே கடைசி இடம்.

    ReplyDelete
  31. இந்த மாத புத்தகங்கள் ரொம்ப லைட் வெயிட் அடுத்த 20 நாட்கள் படிக்க நமது காமிக்ஸ் இல்லாமல் என்ன செய்ய என்று தெரியவில்லை.

    ReplyDelete
  32. இரண்டு புத்தகங்கள் படித்து விட்டேன்.
    1. Sheriffin சாசனம்
    2. இளமை யில் கொல்.
    இரண்டுமே அருமை. அதும் முதல் கதை ஒரு சிரிப்பு பட்டாசு மிகவும் ரசித்து படித்தேன். நண்பர் பரணி சொன்னது போல் கிட் ஆர்டின் பண்டமாற்று அற்புதம். சிரிச்சு மலாளை. 10/10
    2. டைகர் கதை அற்புதம். 9/10 ஒவ் ஒரு மதமும் காமிக்ஸ் அருமை.இன்னும் இரண்டு புத்தகங்களை படித்து முடித்து எனது விமர்சனம் பதிவிடுகிறேன்

    ReplyDelete
  33. பிஸ்டலுக்கு பிரியாவிடை டீசர் பக்கங்கள் வித்தியாசமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சுட வரும் சுட வரணும் வசனம் நமது விஜயகாந்த் பட பன்னீர் செல்வத்தை நினைவு படுத்தி ஆர்வத்தை கிளப்புகிறது. வரனும் நீ பழைய பன்னீர் செல்வமா வரணும் வருவ :-)

      Delete
    2. ஆமாம். படங்கள் அருமை

      Delete
  34. அதுவும் ஜூலை மாத இதழ் கள் எதிர்பார்ப்பை எகிற செய்கின்றன. May மாதத்திற்கு போட்டி தான். இரண்டு கிராஃபிக் நாவல்கள் மற்றும் ஒரு கார்ட்டூன் சூப்பர் சூப்பர்.

    ReplyDelete
  35. Editor sir,
    உங்களுடைய லண்டன் பயண அனுபவம் அருமை. அதேபோல Berlin wall உடைந்த்து பற்றியும், end of the cold war, பற்றியும், உங்களின் அனுபவபூர்வமான மேலான கருத்துக்களை யும் பகிர்ந்து கொள்ளுமாறு
    கேட்டுக்கொள்கிறேன் . ஏனெனில் Berlin wall வீழ்ச்சியடந்த்தின் 30 the anniversary முன்னிட்டு இந்த கோரிக்கை.

    ReplyDelete
    Replies
    1. அ..அப்படீன்னா பெர்லின் சுவரை உடைச்சது நம்ம எடிட்டர் தானா?!!

      Delete
    2. ///அ..அப்படீன்னா பெர்லின் சுவரை உடைச்சது நம்ம எடிட்டர் தானா?!!///

      அடடா...

      எவ்வளளவு செலவாகும்னு விசாரிங்க குருநாயரே..! அந்த பெர்லின் அண்ணாச்சி ஏதாச்சும் பிரச்சினை பண்றதுக்குள்ள, நாம ஆளுக்கு கொஞ்சமாப் போட்டு திரும்ப கட்டிக்குடுத்திடலாம்..!

      Delete
    3. @ KOK

      அதெல்லாம் விசாரிக்காம இருப்பேனா? பத்து லட்சம் வரைக்கும் செலவாகுமாம்.. அந்த பெர்லின் அண்ணாச்சி (ஆக்சுவலா அது அண்ணாச்சி இல்லை.. அக்காச்சி!!) அழுதுக்கிட்டே சொன்னாங்க!! சுவிஸ் பேங்க்ல லோன் வாங்கிக் கஷ்டப்பட்டு கட்டின சுவராம்!
      அந்த சுவத்தோரமா ஒரு லுங்கி டான்ஸ் போட்ட கையோட லேசா டயர்டாகிப்போய் 'உஷ்ஷபா'ன்னு சாஞ்சு நின்னதுதான் தாமதமாம்...
      'ஒரு ஷெரீப்பின் சாசனம்' கதையில் ஷெரீப் டாக்புல் மரத்தை வெட்டிச் சாய்க்கிறமாதிரி இவரும் அந்த கெட்டிச் சுவரை ஒரே நொடியில குட்டிச்சுவர் ஆக்கிட்டாராம்!

      இனிமே எடிட்டருடன் மரத்தடி மீட்டிங், சுவத்தோர மீட்டிங் - இதெல்லாம் வேணாம்! நல்லா வெட்டவெளியாப் பார்த்து மீட்டிங்க வச்சிக்கிடுவோம்! ன்னான்றீங்க?

      Delete
  36. Your strength is your sense of humour sir,that's why everyone likes to read hotline, without hotline i don't like that books,mostly it happened to reprint books so in future we need separate hotline for all books,

    ReplyDelete
  37. என்னது... புத்தகத்தை குறைக்க போறீங்களா? ஏற்கனவே வர்ற புக்கே மாசத்துல முத வாரத்துக்கே பத்தல.. விமர்சனம் போடலனா படிக்கலனு அர்த்தமா?
    செல்போன்ல தமிழ்ல டைப்படிக்கிறது ஆவுற காரியமா? இதுக்கே நாக்கு தள்ளிருச்சு. ஆனா காமிக்ஸ் குறைப்புனா எதிர்த்து குரல் (காதில் விழாவிட்டாலும்) கொடுக்கத்தாணே வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை விமர்சனம் போட வில்லை என்றாலும் இரண்டே நாட்களில் அந்த மாத காமிக்ஸ் ஐ படித்து முடித்து விடுகிறேன்

      Delete
  38. எடிட்டர் சார் @ ஹோ...ஹோ...ஹா..ஹா...
    ஹே...ஹே..........
    ஹா...ஹா...ஹா..

    ஹோ...ஹோ...ஹா..ஹா...
    ஹே...ஹே..........
    ஹா...ஹா...ஹா..

    ஹோ...ஹோ...ஹா..ஹா...
    ஹே...ஹே..........
    ஹா...ஹா...ஹா..

    ஓவல்ல நடக்கும் இந்தியா vs ஆஸ்திரேலியா வேல்டு கப் கான்டஸ்ட் பிரீ டென்சனை உங்கள் பதிவு தகர்த்துட்டது.

    சிரித்து சிரித்து வயிறு வாய் எல்லாம் வலிக்கிறது.

    நகைச்சுவை நையான்டி நடையில் "லண்டன் லிங்கி" செம யான காமெடி கலாட்டா....

    ரொம்ப நாளைக்கு பிறகு சிலமுறை படிக்க வைத்து விட்டது தங்களது இன்றைய பதிவு...!!!!


    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இதே அனுபவம் தான் இந்த மாச டெக்சு கதையை படிச்சு.. எப்பிடு வெளிப்படுத்துறதுன்னு தெரியாமே இருந்துச்சு.. ஆனாலும் உங்க எழுத்து நடை மாதிரி நமக்கு வர்றதில்லை..

      Delete
    2. """டெக்ஸ்""" இருந்தா வேறென்ன வேணும்.......!!!"""

      Delete
  39. சென்ற மாதம் வெளிவந்த பராகுடா-2'வின் பொருட்டு சந்தா E'யில் விலக்கப்பட்ட கதை எது சார்?

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ், லக்கி, போன்றோருடைய கதைகள் விலக்கப்பட்டால் கூட கவலை ஏதும் பெரிதாக தெரிவதில்லை. ஆனால், கிராஃபிக் நாவலில் வரும் கதைகள் வராமல் போனால் ஏமாற்றமாகவும், வருத்தமாகவும் உள்ளது.

      Delete
    2. என்னுடைய எண்ணமும் அதே தான்.

      Delete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. ஒரு ஷெரீப்பின் சாசனம் :

    வுட்சிடியின் சௌகிதார்களான ஷெரீப்பும் டெபுடியும் நகரைத் தூய்மையாக வைத்திருக்க எடுத்துக்கொணட அக்கறையில் பாதுகாப்பில் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.!

    நகரின் நாலா திசைகளிலும் வழிப்பறிக்கொள்ளை தலைவிரித்தாடுகிறது.. அதுவரையிலும் ஷெரீப்பைக் கொண்டாடிக் கொண்டிருந்த நகரமக்கள், இப்போது கழுவி கழுவி காக்காய்க்கு ஊற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.!

    இந்த இக்கட்டிலிருந்து ஷெரீப் அண்ட் கோ எப்படி மீள்கிறார்கள் என்பதே கதை.!
    பெரிய மனிதன் போர்வையில் வில்லன்.. சிக்னல் கொடுத்து ஆட்களை வரவழைப்பது.. காவலில் இருக்கும் ஷெரீப் அண்ட் கோவிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஏமாற்றுவது.. போன்ற சம்பவங்கள் சில டெக்ஸ் கதைகளையும் ஒரு டைகர் கதையையும் ஞாபகப்படுத்துகின்றன.!

    மேலோட்டமாய் கதையை மட்டும் பார்ததால் இது ஒரு அக்மார்க் ஆக்ஷன் கதைக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும்.. ஆனால் டாக்புல், கிட் ஆர்டின் இருக்கையில் ஆக்ஷனே ஹாஸ்யம்தானே.!
    மனம்விட்டுச் சிரிக்க ஏராளமான இடங்கள் கதையில் உண்டு.!

    வழிப்பறியை தவிர்க்க பண்டமாற்று முறையை டாக்புல் அறிமுகப்படுத்தி வைக்க அதன் விளைவுகளோ கெக்கபிக்கே ..!!

    சாப்பிட்ட பில்லுக்கு ஆர்டின் பேன்ட்டை பண்டமாற்றாக கொடுத்துவிட்டு வருவது..,
    டாக்புல் , ஊர்மக்களின் பரிகாசங்களையும் அவமதிப்புகளையும் பல்லைக்கடித்தபடி சகித்துக் கொண்டு ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் மரத்தை ஒரே வெட்டாக வெட்டித் தீர்த்துக்கொள்வது..
    வழிப்பறி இல்லாத நகர ஷெரீப்பை சந்தித்துவிட்டு.. ஈயடிச்சான் காப்பி போல ஈபீள் டவரை தீக்குச்சிகளால் டாக்புல் கட்டுவது..

    இன்னும் நிறைய அம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்..!
    கடைசியில் அந்த தில்லாலங்கடி வில்லனை கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்காற்றுவது ஹிஹி.. நம்ம கிட் ஆர்டின்தான்..!

    ஷேரிப்பின் சாசனம் - சிரிப்பின் ஆசனம்

    ReplyDelete
    Replies
    1. இந்த விமர்ச்சனம் படிக்கிறதை விட இந்த மாசம் டெக்சு கதையையே படிச்சிட்டு போயிறலாம்.. பயங்கர மொக்கை ரெண்டுமே..

      Delete
    2. ஆனாலும் ரம்மிக்கு காமெடி சென்ஸூ கணக்கில்லாம வளந்துக்கிட்டே போவுது..!:-)

      Delete
  42. நியூட்டனின் புது உலகம் :

    இந்த மார்டின் மிஸ்ட்ரீயோட கதைகள் எப்பவுமே ஏதாச்சும் ஒரு புதிரான சம்பவத்தை கையில எடுத்து.. அதை கழுத்தைச்சுற்றி.. காதைச்சுற்றி வாயில் ஊட்டிவிடும்.! ஆனா சுவாரஸ்யமா ருசியோட ஊட்டிவிடும்.. அதுதான் வெற்றியே..!

    இம்முறை எரிகல் (அல்லது விண்கல்) விழும் சமாச்சாரத்தை எடுத்துகொண்டு.. அதை மூன்று காலகட்டங்களில் நடக்கும் சம்வங்களாக கோர்த்து.. அவற்றை சூப்பர் ஹீரோக்களுடன் தொடர்புபடுத்தி.. நடுநடுவே மார்டினை சும்மாவாச்சும் நடமாடவிட்டு .. கதையில வர்ர ஒரேயொரு கவர்ச்சியான புள்ளையையும் போட்டுத்தள்ளிட்டு.. (நம்ம வயித்தெரிச்சலையும் கொட்டிக்கிட்டு).. மூன்று காலகட்டங்களின் நிகழ்ச்சிகளையும் அழகாக கோர்வையாக்கி மிகத் தெளிவாக குழப்பமில்லாம் ஒரு வித்தியாசமான.. நல்ல கதையைக் கொடுத்திருக்கிறார்கள்.!

    எல்லாவற்றிற்கும் மேலாக பலத்த கைத்தட்டல்களை சித்திரங்களுக்கும் அதன் ஓவியருக்கும் தரவேண்டும்.! இதுவரையிலும் இவ்வளவு அழகாக டயானாவையும் அவரது ஹஸ்பென்டையும் (ஆமாமா.. மார்டின்தான்) பார்த்தேயில்லை.!

    நாம் அறிந்த விசயங்களின் பின்னனியில் அறிந்திராத பல புதிர்கள் இருக்கக்கூடும்.!
    அதுபோன்ற புதிர்களில் சுவாரஸ்யமாக களமாடுவதே மார்ட்டின் மிஸ்ட்ரீ தொடரின் சிறப்பம்சம்..!
    நியூட்டனின் புது உலகம் சற்றும் சோடைபோகவில்லை..!.

    கற்பனைக்கு கதவோ எல்லையோ கிடையாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.!

    நல்லவேளை.. நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்துச்சி.. எரிகல் விழுந்திருந்தா...!? :-)

    நியூட்டனின் புது உலகம் - எல்லைகள் இல்லா உலகம்.

    ReplyDelete
  43. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். விளக்கம் ப்ளீஸ் (விவேக் இல்லை) விஜயன் சார் அவர்களே.வெகு நாட்களாக மனதை அரித்து கொண்டிருந்த சில சந்தேகங்களின் தொகுப்பே இது.எங்கேயேனும் தங்களின் மனதை புண்படுத்தும் படி வரிகள் இருப்பின் இப்போதே மன்னித்து கேட்டுக் கொள்கிறேன். நன்றி 1.PDF -எனது நிறுவன கதைகளை வெளியிட்டால் சட்ட பிரச்சினை எதிர் கொள்ள வேண்டும் என்று கூறினீர்கள்...ரொம்ப ரொம்ப  சந்தோஷம் ..ஆனால் உங்களின் பழைய அரிய படிக்காத கதைகளை என் போன்ற வாசகர்கள் வாசிக்கஎன்ன தீர்வு கண்டு உள்ளீர்கள்?(இப்போது வருபவை 90´s....நான் கேட்பதோ 70´s)...PDF பயம் தேவையில்லாத ஒன்று என்று  நினைக்கிறேன். சின்ன உதாரணம் தரலாம் என்று நினைக்கிறேன். .பவள சிலை மர்மம் PDF எனக்கு கிடைத்த போது அதை ஆர்வத்துடன் படித்து..பிறகு A4சைஸ் பிரிண்ட் (இந்திய மதிப்பில் 1000 ரூபாய்) போட்டு படித்தும் அதே புக் ரீபிரிண்ட்யாக வந்த போது 1க்கு 3 புக் வாங்கி 2புக் இந்தியாவில் என் பொக்கிஷத்தில் சேர்த்து ஒன்றை இங்கு வரவழைத்து படித்து இன்புற்றேன்(B&Wயாகவே வந்தாலும் இதை செய்து இருப்பேன்)..பின் குறிப்பு: இதன் ஒரிஜினல் முதல் காப்பி எவ்வித சேதாரமும் இன்றி என்னிடம் உண்டு).
    மற்றது பரகுடா இதுவும் PDF கிடைத்த போது படித்தேன்.அவ்வளவு தான்பிரிண்ட்  எல்லாம் போடவில்லை. காரணம் உங்களின் மொழி பெயர்ப்பு திறன் அங்கு இல்லை. .மறுபதிப்பு  கதைகளை படிக்க என்ன செய்யலாம். .யோசித்த போது எனக்கு தோன்றியவை(நன்றாக இருந்தால் ஆலோசனை செய்யலாமே) .இந்த அயல்நாட்டு பேப்பர் பெரிய சைஸ்,கலர்எல்லாவற்றையும் கொஞ்சம் ஓரமாக தள்ளி வைத்து விட்டு.....A.இது வரை வராத 4 கதைகளின் தொகுப்பு.எ.கா.1.கொலைகார குள்ள நரி(முத்து)
    2.நீதிக் காவலன் ஸ்பைடர்(லயன்)
    3.கடற்கோட்டை மர்மம்(திகில்)
    4.உலகம் சுற்றும் அலிபாபா கலரில்(மினிலயன்).
    B.இது போன்று 3 தொகுப்பு வருடத்திற்கு. ..ஜனவரி (சென்னை புத்தக விழா)...ஏபரல் 15(கோடை விழா)..ஆகஸ்ட் (ஈரோடு புத்தக விழா)..
    C.நிலவொளியில் நரபலி சைஸ்...
    D.விலை ..நீங்கள் மட்டுமே அறிவது..தயக்கமாக இருந்தால் முன் பதிவிற்கு மட்டும்.
    அது மட்டுமல்ல டெக்ஸின் வண்ணப் பதிப்பு வருடத்திற்கு 2 புக்.கண்டிப்பாக ...அவ்வளவு தான்.முக்கியமாக உங்களிடம் கேட்க நினைத்த கேள்வி. .டெக்ஸின் மாயாஜால கதைகளை எடுக்க தயங்கும் நீங்கள் கூறும் பதில்கள் எல்லாம் ok ரகம் தான் .என்றாலும் திருப்தி அளிப்பதாக அமையவில்லை என்பதே நிதர்சனம்.சில்லு மூக்கை பதம் பார்க்கும் கதைகளை ரசித்தாலும் மாயாஜால எதிரிகளை டெக்ஸ் எதிர் கொள்ளும் போது ஒரு திரில் வந்து ஒட்டி கொள்கிறது(காஞ்சனா படம் போல்)..அதிலும் மந்திர மண்டலம்,இருளின் மைந்தர்கள் my all time favorite. ...நீங்கள் வெளியிட தயங்குவதால.....வேற வழி தெரியாமல் பல நல்ல கதைகளை தேடி பிடித்து pdfல் விருந்து அளித்து கொண்டு இருக்கும் நண்பர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன்...நமது ஆசிரியர் வெளியிட தயங்கும் டெக்ஸின் மாயஜால கதைகளை மொழி பெயர்த்து தர முடியுமா என்றேன்..உடனே சில நண்பர்கள் கோப கனலும்,சிரிப்பு அலைகளையும்,தோள் தாங்கிய நண்பர்களை காண முடிந்தது...உங்களின் படைப்பை தோல்வி அடைய யார் முயற்சி செய்தாலும் அவர்களை எதிர்க்கும் முதல் ஆளாக நான் தான் வருவேன்...ஏனெனில் உங்களது படைப்பின் தீவிர முதல் வாசகன் நானாக தான் இருப்பேன்...பல நண்பர்கள் ஆச்சரிய படக்கூடும்..ஏன் அப்படி சொல்கிறேன் என்று .30 வருடமாக காமிக்ஸ படிக்கும் நான்..எனது சேமிப்பில் தங்களின் படைப்பை தவிர மருந்திருக்கு கூட வேற காமிக்ஸை சேர்த்தது கிடையாது. (ஸ்டார் காமிக்ஸில் வந்த பனி மண்டலக் கோட்டைமட்டும் உண்டு அதுவும் உங்கள் படைப்பு என்பதால்)...இப்போது சொல்லுங்கள் உங்களின் அழிவை விரும்புவேனே!!!!!!!
    உங்களுக்கு பாதகம் இல்லாமல் நமது டெக்ஸின் கதைகளை படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆதங்கம்....
    நீங்கள் தெளிவு படுத்த வேண்டியது இது தான் டெக்ஸின் அனைத்து கதைகளையும் உரிமம் வாங்கி விட்டீர்களா....நாங்கள் யாராவது ஒருவர் ஒரு  கதையை எடுத்து எங்களுக்கு தெரிந்த மொழிபெயர்ப்பில் இலவசமாக வழங்கினால் அதனால் உங்களுக்கோ எங்களுக்கோ ஏதேனும் பாதகம் ஏற்படுமா..இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?ப்ளீஸ்.
    நம் எல்லோரின் வாழ்வும் மிஞ்சி போனால் மீதி 25 வருடம்(Die hard fans அனைவரும் 40+வயதுக்கு மேல் தான் 80%)அதற்குள் நல்ல புத்தகத்தை படித்து விட வேண்டும் என்று ஆசை...என் கண்ணோட்டத்தில் நல்ல காமிக்ஸ் என்றாலே அது டெக்ஸ் கதைகள் தான். ..

    ReplyDelete
  44. Hi, Anyone can tell me where to buy comics in Madurai?

    Thanks in advanc

    ReplyDelete
  45. ஜூன் இதழ்கள் அனைத்தும் சிறப்பு .சிங்கம் சிறுவயதில் சீறிப்பாய்ந்தது மனதை மிகவும் கவர்ந்தது .டெக்ஸ் அன்றைய ஆக்ரோஷமும் வீரமும் இன்றுவரையும் கொஞ்சமும் குறையாமல் இருப்பதற்கு உண்டான காரணம் ..ஜிம் பிரிட்ஜர் என்கிற மகத்தான மனிதர் ..அவருடைய கடைசிக்கு காலங்களில் டெக்ஸ் அன்கோ உதவி புரிய வந்தது ..அனைத்துமே மகிழ்வைத்தந்தன .நீண்ட கதை என்றாலும் ஒரு பக்கத்தில் கூட தொய்வில்லாமல் கொண்டு சென்ற விதம் அனுபவம் வாய்ந்த கதாசிரியரின் திறமையே .நல்ல கதை .திரும்பவும் படிக்க தூண்டும் கதை. முழு மதிப்பெண் பெறுகிறது .

    ReplyDelete

  46. """""தி நியூசெஸ் டான்......""""--- ஒரு சகாப்தத்தின் கதை!

    """"நியூசெஸ் மாகாணத்தின் மைந்தர்களே! உங்கள் வாழ்வாதாரத்தையும் நம்பிக்கைகளையும் என்னிடம் ஒப்படைத்திருக்கின்றீர்கள்!

    இம்மந்தையின் தலைவனாக, ஒவ்வொரு கால்நடையும் என்னுடையதைப் போன்றே நல்லபடியாகப் பார்த்துக் கொள்வேன் என்று உறுதி அளக்கிறேன்!

    அத்தனை கால்நடைகளையும் நல்ல நிலையில் பாதுகாப்பாக கார்ப்பஸ் க்ரிஸ்டி வரை அழைத்துச் செல்வேன்!

    வழியில் எவரேனும் இடையூறு விளைவிக்கும் பட்சத்தில், என் சடலத்தைத் தாண்டித்தான் இந்தக் கால்நடைகளின் மீது அவர்கள் கை வைக்க முடியும் என்று உறுதி கூறுகிறேன்! இது கென் வில்லர் உங்களிக்கும் வாக்கு!""""""""


    --------உணர்ச்சிகரமான வார்த்தைகளை ஆக்ரோசமாக உதிர்க்கும் அந்த மனிதர் தம்மை சுற்றியிருக்கும் அத்தனை கண்களையும் தம்மீது பதிக்கச் செய்து உணர்ச்சி பிளம்பாக தகிக்கிறார்.

    "யார் அவர்???????"

    --எத்தனை சிறிய கேள்வி! பதில் நேர்மாறானது; அத்தனை அகன்றது!


    *ஜம்போ காமிக்ஸ் சீசன்1 ஐத் தெறிக்கவிட்ட இளம் டெக்ஸின் சீற்றத்தை தொடர்ந்து ஜம்போ சீசன் 2ல் 2வது சாகசமாக இளம் தலயின் பின்னணயை தேடி தேடி பயணப்படுகிறது அணல் பறக்கும்,

    "சிங்கத்தின் சிறுவயதில்...!"

    ---பெயரே சொல்லி விடுகிறது கதையோட்டத்தை......!

    *சிங்கத்தின் சிறுவயதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இத்தாலி முதல் இந்தியா வரையும் பின்லாந்து முதல் பிரேசிலின் மூலை முடுக்குகள் வரையும், சம அளவில் விரவிக் கிடக்கிறது.

    டெக்ஸின் இளம் பருவத்தில் நடக்கும் நிகழ்வுகள் வருகிறது என்றவுடன் ஆர்வம் பன்மடங்கு எகிறியது. தங்க கலரில் ஜொலிக்கும் பெயருக்கு மேல் இளம் தல தன் பட்டாளங்களுடன் கேட் வாக் போகும் காட்சி ஒய்யாரமான ஒரிஜினல் ஓவியத்தில் ஒளிர்கிறது.

    பின் அட்டையில் முழு நிலவு, "கமான்சே பிரதேச நிலவு"ன் கிரணங்களின் பிரகாசத்தில் வட்டவடிவில் நிலை கொண்டிருக்கும் கேரவன்கள் கொள்ளை கொள்ளுகின்றன...!!!


    *1838ல் டெக்ஸாஸ் குடியரசின் நியூசெஸ் பள்ளத்தாக்கு பகுதியில் தங்களது குடியிருப்பை நிறுவவும், கால்நடைகளை வளர்க்கவும் வந்து கொண்டிருக்கும் கேரவன் அணிவகுப்பு தான் அது...,

    *அந்த கேரவன்களின் அணிக்கு தலைமையேற்று நடத்தும் மேஜர் லீவிட்டை சந்திக்கும் இளைஞன் பேக்கர் , தன் மூத்த சகா ஜிம் பிரிட்ஜரின் சேதியை சொல்கிறான்....அது,

    """"கமான்சேக்களால் எந்நேரமும் நீங்கள் தாக்கப்படலாம்"""".......

    (கையே வலிக்கிறது நீஈஈஈண்ட நாளுக்கு பிறகு நிறைய டைப்பியதில்... ஒரு டீ போட்டு வர்றேன். கடும் நேர நெருக்கடியில் காமிக்ஸ் சுவையில் முன்போல் திளைக்க முடிவதில்லை. அவ்வப்போது வரும் டெக்ஸ் கதைகள் என்ற நல்முத்துக்களை மட்டுமே எப்படியும் ரசித்து விடுவேன். இளம் டெக்ஸ் க்கு ஒரு சின்ன ரிவியூ போட்டு விடலனா பெருந்தேவன் மணிடோவின் அருள் கிட்டாது போயிடும் அபாயம் உண்டல்லவா....!!!)





    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாள் கழித்து தங்களின் வாக்கியங்களில் லயக்கும் வாய்ப்பு கிட்டி உள்ளது....ஆவலுடன் .
      டெக்ஸ் கதைகளை வர்ணிப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே..💐💐💐💐💐💐💐

      Delete
    2. ஓவராக புலம்புற அளவுக்கு ஒன்னும் இல்லை.. இந்த கதையை பொறுத்த வரையில் முதலிருந்து கடைசி வரைக்கும் ஹீரோ ஜிம் பிரிட்ஜர் மட்டுமே.. அவர் இல்லைனா கார்சனின் நண்பரின் கதை அதோ கதி தான் போல.. கதாசரியர் ஜிம் பிரிட்ஜர் முதல் முறை கென் வில்லரை சந்திக்கும் சம்பவத்தின் போதே கார்சனின் நண்பர் அவுங்க அம்மா வவுத்துக்குள்ளே இருந்து எதிரிகளை சுட்டாருன்னு சொல்லியிருந்தா தான் இப்ப வர்ற கார்சனின் நண்பர் கதைகளுக்கு சரிப்பட்டு வரும்..

      Delete
    3. சரண்@ தேங்யூ நண்பரே!

      உங்கள் ஏரியா துபாய் வெயில் இங்கேயும் பொளந்து கட்டுது!

      ரம்மி@ "மைக்கி சோளப்பொரி" ரசிகர்கள் சலம்புவதில் இருந்தே இந்த இளம் தலையின் வெற்றி புலனாகிறது! ஹி...ஹி...!!!

      Delete
    4. உண்மை...உண்மை...👏👏👏👏

      Delete
    5. 🤭🤭🤭🤣🤣🤣🤦‍♂🤦‍♂

      Delete
    6. ----தொடர்ச்சி,

      ###கென் வில்லர்####

      *மலைகளையும் இயற்கையையும் ஆராய்ச்சி செய்யும் வெகுமதி வேட்டையர் ஜிம் பிரிட்ஜர்ம் அவரது விடலை சகா ஜிம் பேக்கரும், நியூசெஸ் பகுதியில் உலவிக்கொண்டுள்ளனர். தரிசு நிலமான அப்பகுதியை டெக்ஸாஸ் குடியரசிடம் இருந்து மெக்சிகோ அபகரிக்க முயன்றுவருகிறது.

      ((((@@@அதென்ன ஓய் டெக்ஸாஸ் குடியரசு??? அமெரிக்க மாகாணம் ஒன்றுதானே டெக்ஸாஸ் என சந்தேகம் தோன்றி இருக்குமானால் நீங்கள் இஸ்டரி சாக்ரபியில் ஆர்வமுள்ளவர்!
      1800களில் கலிபோர்னியா, நியூமெக்சிகோ, டெக்ஸாஸ் போன்ற மெக்சிகோ பகுதிகளை ஆட்டைய போட்டு "அனெக்ஸ்" செய்த அமெரக்காவின் பல்வேறு திட்டங்களில் ஒன்று தான் இது. சும்மா இருந்த டெக்ஸாஸ் மக்களை தூண்டி விட்டு மெக்சிகோவிடம் இருந்து சுதந்திரம் பெற வைத்து "டெக்ஸாஸ் குடியரசா"க்கிட்டு, பிற்பாடு "அனெக்ஸ்" செய்வதே அந்த ராக்கெட் தொழில்நுட்ப திட்டம். 1836ல் குடியரசு டெக்ஸாஸ் ப்ரம் மெக்சிகோ; 1845ல் அமெரிக்க மாகாணம் டெக்ஸாஸ்.இந்த கால கட்டத்தில் தான் நம்ம சிங்கத்தின் சிறுவயதில் அரங்கேறுது அந்த டெக்ஸாஸ்ஸில்.)))



      *கமான்சே மற்றும் பல்வேறு பழங்குடியினர் துப்பாக்கிகளுக்காக அப்பகுதியில் எதையும் செய்வார்கள் என்ற நிலை!

      *இந்த கடினமான சூழலில் தான் குடியிருப்பை நிறுவ வரும் மேஜர் லீவிட்டின் குழவினர் செல்லும் தடத்தை கண்டறிகின்றனர் ஜிம் ஜோடி.

      *பயண வண்டிகளை எச்சரிக்கை செய்ய பேக்கரை அனுப்பிட்டு, கமான்சேக்களை வேவு பார்க்க போறார், ப்ரிட்ஜர் . கமான்சேக்கள் பூசியிருக்கும் எருமை கொழுப்பின் நறுமண "வசீகரத்தில்" உசார் ஆகி அவிங்க திட்டங்களை உளவு பார்க்குறார்.

      *எருமை சென்ட் பார்டிகள் ப்ரிட்ஜரை பார்த்து விட்டு தொறத்த, செமத்தியான ரகளையில் அவுங்கள திணறடிக்கிறார். கேரவன்களிடம் இருந்து அவர்களை விலக்கி வைக்கும் முயற்சி வெற்றி பெற இருக்கும் போது, அதை புரிந்து கொண்ட கமான்சேக்கள் கேரவேன்களை குறிவைத்து குதிரைகளை தட்டிவிடுகிறார்கள்.

      *இதற்கிடையே தாக்குதலை எதிர்கொள்ள முஸ்தீபுகள் செய்கிறார்கள் லிவிட் குழாம்.
      அங்கிட்டு ஒரு கம்பீர கனவானின் குரல்,

      "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவதில்லை" என ஒலிக்க, யாராக இருக்கும் அந்த நபர் என நாம் யோசிக்க...!

      *கமான்சேக்கள் தாக்குதல் எப்படி இருக்கும் என ஷிக், ஷிக்குனு பறக்கும் அம்புகள் புரியவைக்கின்றன. தாக்குதல் நடுவே ஒரு கர்ப்பிணியும் அவரது கணவரும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்கள். அந்த கணவர் தான் அந்த "கனவான்". தாக்குதல் உக்கிரமடையும் வேளையில் உட்புகும் ப்ரிட்ஜரின் சகாயத்தால் கமான்சேக்கள் துரத்தப்படுகிறார்கள்.

      *கமான்சே தளபதியால் அந்த கர்ப்பிணி கொல்லப்படும் தறுவாயில், ப்ரிட்ஜர் அவரை காப்பாற்றுகிறார். அவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் கனவான், தன் பெயரை சொல்கிறார்,

      " என் பெயர் வில்லர்! கென் வில்லர்"

      @@@இந்த இடத்தில் கட்...கட்..ஆக இதுகாறும் தன் இளவயது கதையை கார்சன், டைகர் ஜாக் & கிட்டிடம் சொல்லிக் கொண்டு இருந்த டெக்ஸ், அந்த கர்ப்பிணியே தன் தாய் என விவரிக்கிறார். உணர்ச்சி மிகு கட்டம்! அருமையான காட்சியமைப்பு!

      ###இதுவரை கண்ணாமூச்சி காட்டி வந்த டெக்ஸின் பிறப்பு 1838 மே மாதம் என தெரியவருகிறது. இளவயது நடப்புகளை டெக்ஸ் தொடர, நாம் மீண்டும் நியூசெஸ் பகுதியில் பிரவேசிக்கிறோம்!

      *5ஆண்டுகள் கழித்து டெக்ஸ்ஸின் தாய் மே வில்லர் இறக்கிறார். அவரது சவப்பெட்டி மீது மண் அள்ளி போட்டு விட்டு சோகத்தில் துவளும் இரு சிறார்களின் முகம் நம்மையும் கலங்கடிக்கிறது. 53ம்பக்க கடைசி பேனல், கண்ணில் நீர்த்துளிர்க்க வைக்கிறது.........!!!!

      (ஆசுவாசபடுத்திகொண்டு வர்றேன்)

      Delete
    7. மிகச் சிறப்பான விமர்சனம் நண்பரே.ஏனோ தெரியவில்லை டெக்ஸ் பிளாஷ்பேக் கதை அனைத்தும் கண்ணீரை வரவழவைத்து விடுகிறது. டெக்ஸ் ஒரு சமுத்திரம். பொனெல்லி ஒரு அட்சய பாத்திரம். நமது ஆசிரியர் ஒரு கால பைரவன்.

      Delete
    8. ///டெக்ஸ் ஒரு சமுத்திரம்/// ஆம் நண்பரே! சமுத்திர அலையும் டெக்ஸ் கதைகளும் என்றும் ஓயாது; டெக்ஸ் காலத்தை வென்றவர்!

      Delete
    9. வாங்க ஜி.இப்போது ரொம்ப தெம்பாக இருக்கிறது.
      நம்ம தல விமர்சனம் உங்க பாணியில் கேட்டு எவ்வளவு நாள் ஆகிறது.
      கலக்குங்கள்.ஜி நன்றி.

      Delete
    10. //5ஆண்டுகள் கழித்து டெக்ஸ்ஸின் தாய் மே வில்லர் இறக்கிறார். அவரது சவப்பெட்டி மீது மண் அள்ளி போட்டு விட்டு சோகத்தில் துவளும் இரு சிறார்களின் முகம் நம்மையும் கலங்கடிக்கிறது. 53ம்பக்க கடைசி பேனல், கண்ணில் நீர்த்துளிர்க்க //வைக்கிறது.........!!!!//

      சேம் பீலிங் ஜி.

      Delete
    11. தேங்யூ ஸ்ரீ ஜி.

      ///சேம் பீலிங்///---நெஞ்சை கொஞ்சம் கலக்கிய கட்டம் அது ஜி.

      காட்சியமைப்பு தான் அதற்கு முக்கிய காரணம்; அந்த 53ம்பக்கத்தின் முதல் பேனலில் 5வயதும் 4வயதும் ஆன டெக்ஸ்ம் அவரது தம்பி சாமும் தங்களது தாயாரின் சவக்குழியின் மேல நின்றுகொண்டு முதுகை காட்டி கொண்டு இருக்க, X பின்னல் போட்ட ட்ராயர் எத்தனை பொடிச் சிறுவர்கள் என தெரிவிக்க, குழந்தை டெக்ஸின் வசனம்,"நீ போடு சாம்"...!!!

      அந்த கடேசி பேனலுக்கு நேர் மேல் பேனலில் கென் வில்லர் மண்வெட்டி யயில் மண்ணை அள்ளிப் போட்டு கொண்டே,

      "குட் பை!மே" என தன் துணை க்கு பிரியா விடை தர..!!!
      கொஞ்சம் மனசை பிசையும் காட்சி.
      அதுவும் டெக்ஸ் வெறியர்களுக்கு..........!!!

      Delete

    12. """" முரட்டுக் குதிரை """"

      *1849ல் 10ஆண்டுகளுக்கு பிறகு கதை தொடர்கிறது. டெக்ஸையும் அவரது தம்பி சாமையும் வளர்க்க கென் வில்லர் எடுக்கும் முயற்சிகள், கெளபாய்கள் உலகம் என கதை விரிகிறது.

      *11வயது சிறுவனாக டெக்ஸ், கால்நடை மந்தையோடு செல்லும் முதல் பயணம், ஆபத்துகள், கெளபாய்கள் சந்திக்கும் சவால்கள் என நம்மையும் கூட நியூசெஸ் பகுதியில் ஓவியரும்& கதாசிரியரும் உலவச் செய்கிறார்கள்.

      *துணிச்சல், சமயோசிதம், தைரியம், அஞ்சாமை என டெக்ஸ்க்கு சகலுமும் அந்த பிரயாணத்தில் அனுபவமாக கிட்டுகிறது.

      *கறுப்பின மக்களை டெக்ஸ் சரிசமமாக இப்போதும் நடத்துவது அவரது தந்தை இளம் வயதில் அவருக்கு கற்பித்தமையே.

      *(நாமளும் நம்ம சின்ன வயசில் டெக்ஸ், ஸ்பைடர், ஆர்ச்சி,லக்கி, சிக்பில்.. என படித்தவைகளிலேயே இப்போதும் கூட மனசு சுழல்வது ஏன்னு புரியுதா அன்பர்களே...????)

      *தொடர்ந்து 17வயதில் டெக்ஸ் 2000மைல்கள், நியூசெஸ் டூ கலிபோர்னியாவுக்கு மந்தையை வழிநடத்தி பயணப்படுவது அபாரமாக காட்சிபடுத்தப் பட்டுள்ளது. நோஞ்சான் பிமாக்கள், அடாவடி ஷெரீப்புகள், ஆபத்தான அபாச்சேக்கள்.... என வன்மேற்கின் அத்துணை அம்சங்களையும் நேர்த்தியான ஓவியங்களில் உயிரோட்டமாக விவரிக்கப்படுகிறது.

      *சான்பிரான்சிஸ்கோவில் 17வயதில் டெக்ஸ் ஒரு பெண்ணிடம் ஏமாறுவது, பிற்பாடு அவளிடம் இருந்து பணத்தை அவர் மீட்பது கொஞ்சம் குஷாலான கட்டங்கள்.

      *தன் கதையை விவரிக்கும் டெக்ஸ், கதையை இயல்பான காலகட்டத்திற்கு கொண்டு வருவது அட்டகாசமாக சொல்லப்பட்டுள்ளது.

      *க்ளைமாக்ஸ் வித்தியாசமான ஒன்று. என்ன வித்தியாசம் என காண புரட்டுங்கள் , "சிங்கத்தின் சிறுவயதில் "...!!!
      இதுகாறும் மூடுமந்திரமாக இருந்த டெக்ஸின் இளம்பிராயத்தை அறியச் செய்த வகையில் இக்கதை டெக்ஸின் ஆல்டைம் பெஸ்ட்களில் இடம் பிடிக்கிறது.

      *நம் மகனை எப்படி வளர்க்கப்போகிறோம் என கர்ப்பிணியான மே, கென்னிடம் கேட்க அவரின் பதில்....,

      """ தன் முன்னோர்களைப் போன்றே, துணிச்சல் மிக்கவனாக, வலிமை பொருந்தியவனாக, முரட்டுக் குதிரையாக!""""""


      ######*****######******#####

      Delete
    13. அருமையான விமர்சனம் நண்பரே.

      Delete
    14. Super.டெக்ஸ் என்றாலே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, மனோதைரியம்,நேர்மை இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
      இது அடிக்கடி தளத்தின் பக்கம் வந்து தல புராணம் பதிவிடவேண்டுமென வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

      Delete
    15. *//கறுப்பின மக்களை டெக்ஸ் சரிசமமாக இப்போதும் நடத்துவது அவரது தந்தை இளம் வயதில் அவருக்கு கற்பித்தமையே. //
      ஜி இது போல பேட்ஜர் கென் வில்லரை மறு மணம் புரிய வற்புறுத்தும் போதும் டெக்ஸ் தந்தை கென் வில்லர் தன் மனைவி மே தவிர தன் வாழ்வில் வேறு ஒருத்திக்கு இடமில்லை என்பார்.
      அது போல டெக்ஸ் வாழ்வில் லிலித்.

      Delete
    16. வரவேற்புக்கு தேங்யூ ஃப்ரெண்ட்ஸ் & மனதிற்குள் பாராட்டியவர்களுக்கும், பாராட்ட நினைத்தவர்களுக்கும் மானசீக நன்றிகள்.

      ஸ்ரீ ஜி@ அதே அதே... டெக்ஸ் லிலித்திற்கு பிறகு மறுமணம் புரியாமைக்கும் இதுவே காரணம்!



      கார்சன்@ அவரோட காதல் கைகூடல- கார்சனின் கடந்த காலம்..

      டைகர் ஜாக்-காதலி கடத்தி கொல்லப் படுகிறாள்...காதலும் கடந்து போகும்.

      டெக்ஸ் @ காதல் மனைவி இறக்கிறாள்...இரத்த ஒப்பந்தம், தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு!

      கிட் வில்லர்@நமக்கு தெரிஞ்சே சில காதல்கள் கைகூடல...!! மெக்சிகோ படலம்& விதி போட்ட விடுகதை..

      கென் வில்லர்@ 5வருடங்கள் மட்டுமே ஆசை மனைவி மே வாழ்கிறாள்.

      ஹூம்... என்ன இது ஒரே சோக மயமா இருக்கு...!!! டெக்ஸ் கோஷ்டிக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமான இருக்கே! சொல்லப்போனா கென் வில்லரே பர்ரால்லயோ??????

      Delete
    17. சூப்பர்..கதையை கண்முன் நிறுத்திய தங்களுக்கு எனது நன்றிகள்..🙏🙏🙏💐💐💐🙏🙏🙏

      Delete
    18. //(((@@@அதென்ன ஓய் டெக்ஸாஸ் குடியரசு??? அமெரிக்க மாகாணம் ஒன்றுதானே டெக்ஸாஸ் என சந்தேகம் தோன்றி இருக்குமானால் நீங்கள் இஸ்டரி சாக்ரபியில் ஆர்வமுள்ளவர்!
      1800களில் கலிபோர்னியா, நியூமெக்சிகோ, டெக்ஸாஸ் போன்ற மெக்சிகோ பகுதிகளை ஆட்டைய போட்டு "அனெக்ஸ்" செய்த அமெரக்காவின் பல்வேறு திட்டங்களில் ஒன்று தான் இது. சும்மா இருந்த டெக்ஸாஸ் மக்களை தூண்டி விட்டு மெக்சிகோவிடம் இருந்து சுதந்திரம் பெற வைத்து "டெக்ஸாஸ் குடியரசா"க்கிட்டு, பிற்பாடு "அனெக்ஸ்" செய்வதே அந்த ராக்கெட் தொழில்நுட்ப திட்டம்.//

      Interesting really Tex Vijay!!!

      I have never known this..have read the history of all these three States ..California, Texas, New Mexico all three had become temporarily " republic " only later to be annexed to the USA..

      The real reason though had been the political instability within the independent state of MEXICO...

      Now the state of TEXAS is the second state among the States of USA to offer
      Influence economically..

      Wow! Once barren and cowboys state ,
      now a an economically influential one.

      Delete
    19. யாஹீ...ஹீ....ஹீ...!!!

      தன்யானேன் பொருளர் ஜி!

      தங்களது வார்த்தைகள் புதிய உற்சாகத்தை கிளப்புது. 8மாதங்களில் ஹேப்பியஸ்ட் நாள் இன்று தான்!!!!

      இந்த டெக்ஸாஸ் வரலாறு கொஞ்சம் இன்ட்ரஸ்ட் சப்ஜெக்ட்...!!!

      நம்ம கதையில் வரும் டெஸ்பரேட்டர்ஸ் டெக்ஸாஸ் வரலாற்றில் சிலபல பங்கு வகிக்கின்றனர்...!!

      Delete
  47. ஷெரிப்பின் சாஸனம்.


    டெர்ரர் ஷெரீப் டாக்புல்லின் சீரிய தலைமையின் கீழ் வுட்சிட்டி நகரமானது வன்மேற்கிலேயே அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
    புச்சாண்டி காட்டினாலும் சற்றும் கலங்காத மன தைரியம் உடைய தன்னுடைய டெபுடி, கட்டம் போட்ட சட்டையுடன் அப்பப்போ எட்டிப் பார்க்கும் சிக் 'கென்ற சிக்பில், சட்டையே இல்லாமலிருந்தாலும் துளியும் சட்டை செய்யாத குள்ளன், இவர்களுடன் அணிசேர்ந்து சுத்தம் சோறு போடும், இல்லையென்றால் ஃபைன் போடும் என கண்ணும், கடமையுமாக வலம் வருகிறார் டெர்ரர் டாக்புல்.

    அப்படியே விட்டதா விதி ?

    திடீரென நாலாபக்கமும் நெருக்கடி ஏற்பட்டது.சுதாரிப்பற்குள் அது எட்டுத் திக்கும் விரிந்தது.அது அத்தனையும் அப்படியே டாக்புல்லின் தலையில் விடிந்தது.அது டாக்புல் பதவிக்கு வேட்டு வைத்தது.ஆனால் சினம் கொண்ட சிங்கத்தின் பெருமூச்சு அதன் கர்ஜனையை விட பலமாகக் கேட்கும் அல்லவா?
    அஅதன் மூச்சுக்காற்றில் எதிரிகள் கருகியிருப்பார்கள்தான்.ஆனால் நரித்தனம் படைத்த நயவஞ்கர்களால் நம் நண்பர்கள் நால்வரும் மட்டையாக ,கைகொட்டி சிரித்தது வுட்சிட்டி.

    சிலிர்த்தெழுந்த சிங்கங்காள் ஒரு பண்டைய முறையை அறிமுகப்படுத்த ,ஊர் மண்டை காய்ந்து மல்லுக்கு நின்றது
    இருந்தும்,
    பொறுமையின் சிகரமான டாக்புல் ஈபிள் சிகரத்தை தீக்குச்சிகளால் செப்பனிட்டு சாதனை செய்யும் வேளையில் ,கடைசிபக்கத்து முந்தின பக்கத்தில் புதிரை அவிழ்க்கும் ஷெர்லக் ஹோம்ஸ் (அ ) ரிப்போர்ட்டர் ஜானி போல் ,சூழ்ச்சியை உணர்ந்த சிக்பில் 'சடாரென கதவைத் திறக்க , அய்யகோ! அந்த உயரிய கோபுரம் உடைந்தே போனது.துளியும் கலங்காத மனிதர் சட்டென விஸ்வரூபம் எடுக்க அடுத்த பக்கத்திலேயே கதை சுபம் ஆனது.

    ரொம்ப நாளைக்குப் பிறகு வுட்சிட்டிக்காரங்க அடிக்கிற கூத்து ஜாலியோ ஜாலி.

    ReplyDelete
    Replies
    1. மெய்யாலுமே அருமையான நகைச்சுவை கதை.கடைசி பக்கத்தில் எதிரியைக் கண்டுபிடிக்கப்பட்டதே உண்மையான காமெடி.

      Delete
  48. 1.சிங்கத்தின் சிறுவயதில் 10/10.
    2.ஒரு ஷெரிப்பின் சாஸனம் 9.9/10
    3.நியூட்டனின் புது உலகம் 9.8/10
    4.இளமையில் கொல் 9/10

    ReplyDelete
  49. ஆசிரியரின் மலரும் நினைவுகள் எங்கள் மனங்களை மகிழ்வித்தன.

    ReplyDelete
  50. டியர் எடிட்டர்,

    நேற்றுதான் வூட்சிட்டி காமெடி டெரர் பாய்ஸ் படித்து சிரித்துக் கொண்டிருந்தேன் - இன்றோ நம் போன்ற லட்சக்கணக்கானோரை சிரிக்க வைத்த Crazy மோகன் நம்மை விட்டு அகன்றுவிட்டார். அங்கே இறைவனுக்கு சிரிப்பு மூட்ட ஒரு காமெடி கிங் தேவைப்படுகிறாரோ ? :-(

    கடந்த 40 ஆண்டுகளில் தமிழில் நகைச்சுவை எழுதுபவர் யாரும் இவரது பாதிப்பின்றி எழுதுதல் கடினமே.

    RIP Crazy Mohan Sir :-( :-(

    ReplyDelete
  51. புத்தக குறைப்பு மற்றும் பக்க குறைப்பு எந்த சூழலிலும் வேண்டாம்.////

    +11111111

    Reply

    ReplyDelete
  52. புத்தங்களை குறைப்பதா...மூச்...அதை பற்றி எல்லாம் யோசிக்கவே கூடாது ஆசிரியரே...முடிந்தால் அதிகரிக்க செய்யலாம்..

    ReplyDelete
  53. 300 பக்கம், 400 பக்கம்னு படிச்சுட்டு இப்போதெல்லாம் 52 பக்க புக் வந்தாலே.இவ்ளோதானா என்று மனசுல தோணுது. ஆகவே... முடிவு ஆசிரியர் கையில்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் புத்தகங்களை குறைக்கப்போறதா சொல்ல வே இல்லையே.
      மாதம் நான்கு இதழ்களாவது வெளியிட்டால் தான் கம்பெனிக்கு கட்டுப்படியாகும் என்பதை பல தடவை தெளிவுபடுத்தி இருக்கிறாரே.
      மே, ஜூன் மாதங்களில் குழந்தைகள் படிப்பு, ஊர் சுற்றுதல் போன்ற பரபரப்பான சூழலில், அந்த மாதம் "கிட் ஆர்டினே" வெளி வந்தாலும் இன்னும் கொஞ்சம் "லைட் ரீடிங் "காக இன்ஸ்பெஸ்பெக்டர் கருடா , சுட்டிக் குரங்கு கபீஸ் போன்ற கதைகளைக் கொண்டு ஒரு 30 பக்க காமிக்ஸ் வேண்டுமா என்று கேட்டதாக த்தான் நான் எண்ணுணுகிறேன்...?i
      அப்றம் , இந்த மாத இதழ்களில் ஹைலைட் - டாக கருதுவது " ஒரு ஷெரீப்பின் சாசனம்" தான். கதாசிரியர் பின்னாடி நடக்கும் சம்பவங்க ளுக்கு முதலிலேயே அச்சாரம் போட்டு விடுகிறார். (உ. ம்) லா லிபாப் - இன்ஸ்பெக்டரின் தொப்பியில் ஒட்டிக் கொள்வது. என்று. கதையுமே ரொம்ப நேரம் படித்தது போல் ஃப் லிங். இந்த கதையில் தான் டாக் புல்மேலோங்கித் தெரிகிறார். ரொம்ப நாள் கழித்து மீண்டும் படிக்கத் ( ரசிக்கத்)தூண்டிய இருக்கிறது.
      அடுத்து, "நியூட்டனின் இரண்டாம் உலகம் " - பொதுவாக கதை படிப்பது என்பதே என க்கு கொஞ்சம் விசயம் தெரியும். என்க்கு தெரிந்த விசயத்தை ஒரு கதாசிரியர் அவர் புத்திசாலித்தனமாக எப்படி கதை சொல்கிறார் என்பது தான் ஒரு ஈகோ மா திரியானசு வராஸ்யம்.
      ஆனால், மார்டின் கதாசிரியர் - சான்ஸே இல்லை. ஒவ்வொரு கதையிலும் அட இது நமக்கு தெரியாத கோணமாக இருக்கிறதே. என்று. மறுபடியும் படித்தால் மேலும் சில மர்மங்கள் புரிபடுமோ என்று. அதிலும் மார்டின் _னே மர்ம மனிதர். அவருக்கும் தெரியாத ஒரு மர்மக் கும்பல் இருப்பது. அவர்களைப் பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ள ஆசை ஏற்படுகிறது.
      அவளவு தான் இரண்டு புத்தகங்களே படிக்க முடிந்தது.

      Delete
  54. எனது மகனின் ஆசிரியர் இம்மாத இதழ்களுக்கு மதிப்பெண் அளித்தால் ....



    சிங்கத்தின் சிறு வயதில் - 10,\ 10 V.good *


    ஒரு ஷெரீப்ன் சாஸனம் -

    10 \9.5 good



    நியூட்டனின் புது உலகம் - 10\8 OK
    keep trying




    இளமையில் கொல் 10\8 continue full lesson

    ReplyDelete
  55. ஆசிரியருக்கு வணக்கம்,

    விமர்சனங்கள் வரவில்லை,வாசகர்களுக்கு வாசிப்புக்கான நேரம் போதவில்லை அதனால் இலகுவான கதைக்களங்கள்தான் இனிமேல் சரிப்பட்டு வரும் போல என்று தாங்கள் தெரிவித்துள்ளீர்கள்.

    வாசகர்கள் முன்புபோல் தற்போது இல்லை என்பதே உண்மை. எந்த கதை வெளியிட்டாலும் வாசகர்கள் வாங்கி விடுவார்கள் என்று இருந்தது ஒருகாலம். ஆனால் தற்போது வாசகர்களின் ரசனை பன்மடங்கு மேம்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நேர்க்கோட்டு கதைகளை மட்டுமே வெளியிட்டு வந்த தாங்கள் வாசகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று வெளியிடாமல் போன அடர் கதைக்களங்கள் அதிகம் என்று அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளீர்கள்தானே.

    ஆனால் கடந்த சில வருடங்களாக கிராபிக் நாவல்கள் அருமையாகத்தானே வந்துகொண்டிருக்கிறது. அதிலும் சமீபமாக கிராபிக் நாவல்கள் தனித்தடத்தில் (அண்டர்டேக்கர்> பராகுடா> நிஜங்களின் நிசப்தம்> ஒரு முடியா இரவு> முடிவிலா மூடுபனி> மற்றும் பல....) பட்டையைக் கிளப்பும்போது தாங்கள் தடாலென வாசிப்பிற்கு லேதுவான கதைக்களங்கள் பக்கம் திரும்புவது ஏன்?

    ஒரு மாதம் முழுவதும் வாசிக்க 4 காமிக்ஸ்கள் போதாது. வாசர்களின் சூழ்நிலை காரணமாக விமர்சனங்கள் எழுதாமல் போகலாம். அல்லது பிளாக்கில் பின்னூட்டம் இட தெரியாமலிருக்கலாம் (நானும் கூட ஓரிரு மாதங்களாகத்தான் பதிலுகிறேன்). ஆனால் காமிக்ஸ் வாசர்கள் யாரும் தற்போது காமிக்ஸ் வாசிக்காமலில்லை என்பதே உண்மை.

    எனக்குத் தெரிந்து சில வாசகர்கள் இரண்டு மாத காமிக்ஸ்களையும் மொத்தமாக வாசிக்கக் கண்டிருக்கிறேன். பிளாக்கில் மிக தாமதமாக விமர்சனங்கள் வருவதை தாங்களும் அறிவீர்களே.

    அப்படியிருக்க ஒரே மாதத்தில் அதுவும் மே மாத விடுமுறையில் விமர்சனங்கள் தற்போதைa சூழலில் வாய்ப்பே இல்லை. (80களில் 90களில் கோடை மலர் மற்றும் பிற ஸ்பெஷல் இதழ்கள் வந்தது - அப்போதைய குழந்தைகளுக்கு சிறுவர் பத்திரிக்கைகள்> காமிக்ஸ்கள் மட்டும்தான் பொழுதுபோக்கு - இப்போதோ உள்ளங்கையில் உலகம் (இணையம்) - குழந்தைகளுக்கான சேனல்களும்> இணையதள கேம்ஸ்களும் அதிகம் - எல்லாவற்றிற்கும் மேலாக தற்போது புதிதாக எந்தக் குழந்தைகளும் காமிக்ஸ் படிப்பதில்லை. பெற்றோர்கள் காமிக்ஸ் படிப்பவர்களாக இருந்தால் அந்த வீட்டில் வளரும் குழந்தைகள் மட்டுமே விதிவிலக்கு)

    ஆகையால்>

    1. தற்போதைய சூழலில் டெக்ஸ் கதைகள் அனைத்துமே இலகுவான நேர்க்கோட்டு கதைக்களங்கள் தானே. இதைவிட இலகுவான வாசிப்புக் களங்கள் வேறு என்ன வேண்டும். நிறைய வாசகர்கள் விரும்புவதும் நீங்கள் விரும்புவதும் அதுதானே (மறுபதிப்பில் கூட). எப்படிப்பார்த்தாலும் வருடம் 12 முதல் 15 டெக்ஸ் கதைகள் இலகுவான கதைக்களத்தில்)

    2. அப்படி தாங்கள் இலகுவான கதைக்களைக்கள் வேண்டுமானால் வருடம் 12 முழு நீள கார்ட்டூன்கள் ஒதுக்கிடுங்களேன். (மீண்டும் மீண்டும் கூறுவதாக எண்ண வேண்டாம்)

    3. இதழ்கள் குறைப்பு> பக்கங்கள் குறைப்பு> கதைகளில் இலகுத்தன்மை போன்ற எண்ணத்தை விட்டுவிடுங்களேன். ப்ளீஸ்!

    4. வாசகர்கள் விரும்புவது நல்ல கதைகளை மட்டுமே. ஹீரோக்களையல்ல. மறுபதிப்பில் இன்னமுமே வெளிவராத ஆரம்பகால திகில் காமிக்ஸ்களை முயற்சிக்கலாமே. முழுக்க முழுக்க மறுபதிப்பில் மும்மூர்த்திகள்> டெக்ஸ்> லக்கி ப்ளஸ் ஓரிரு பிரின்ஸ் கதைகள் இவைகள் தானே வந்துள்ளது. முடிந்தால் டெக்ஸ்> லக்கி தவிர்த்து மறுபதிப்பு என்ன வேண்டும் என்று வாசகர்களிடம் கேட்டுப்பாருங்களேன். (இதுவும் வாசகர்களின் தேர்வுதானே என்று நழுவிட வேண்டாமே! சார்)

    5. வாசர்களின் சந்தாக்களுக்கு> என்னைப்போன்று கடைகளில் வாங்கும் வாசகர்களுக்கு அதிலும் தற்போது தங்களின் வாசகர்களின் வயது பலருக்கும் லயன் மற்றும் திகில் காமிக்ஸின் வயதுதான் எனும்போது அவர்களே இன்னமும் தீவிர வாசகர்களாக இருக்கும்போது அவர்களின் ரசனைக்கு நியாயம் செய்திட வழக்கமான பாணியிலேயே தொடர்ந்திடுங்களேன். தற்போது தமிழ் காமிக்ஸ் ஆர்வத்தை தீர்த்து வைப்பதே தாங்கள் தான் எனும்போது இன்னும் மிகச்சிறப்பான ரசனைகளில் முதிர்ந்தோருக்கான சமாச்சாரங்களே தொடரட்டுமே> ப்ளீஸ்.

    6. அல்லது ரிப்போர்ட்டர் ஜானி> ராபின்> மார்ட்டின்> இவர்களுக்கு கூடுதல் ஸ்லாட்டும் மாடஸ்டி> ஜூலியா> டைலன்> மேஜிக் விண்ட் இவர்களுக்கு மறுக்கா ஒரு வாய்ப்பு ப்ளீஸ்> நான் மறுபடியும் தாங்களை போட்ட கோட்டை அழித்துவிட்டு மறுக்கா ஒரு கோடு போடச் சொல்லுவதாக எண்ண வேண்டாமே? எப்படியும் 2020க்கான இதழ்களில் ஒன்றிரண்டைத்தவிர 90 சதவீதம் இறுதிசெய்திருப்பீர்கள் எனும்போது. - நன்றி.-

    ReplyDelete
    Replies
    1. //வாசகர்களுக்கு வாசிப்புக்கான நேரம் போதவில்லை //

      இந்த காரணத்துக்காக எடிட்டர் அப்படி சொல்லவில்லை என கருதுகிறேன்..

      பராகுடா,ட்யூராங்கோ போன்று கடின கதைகளங்கள் வாசிக்க நேருகையில் அதனை சமன்செய்யும் வகையிலும் ,இயல்பாகவே இலகுரக கதைகளங்கள் மாதம் ஒருமுறை வருவது மனதுக்கு உவகை அளிக்கும் என்றவகையிலும் எடிட்டர் அதனை குறிப்பிட்டு இருக்கிறார் என்றே தோன்றுகிறது..

      He himself told " I sense it in general".( the lack of lightervein tales)..

      Delete
    2. ///அப்படி தாங்கள் இலகுவான கதைக்களைக்கள் வேண்டுமானால் வருடம் 12 முழு நீள கார்ட்டூன்கள் ஒதுக்கிடுங்களேன். (மீண்டும் மீண்டும் கூறுவதாக எண்ண வேண்டாம்)///

      யானும் அவ்வண்ணமே கோருகிறேன்..!!

      Delete
    3. வீரபாண்டியன் @ ஆழ்ந்த சிந்தனை. தொடருங்கள்.

      Delete
  56. மாண்புமிகு ஆசிரியரே வணக்கம் 🙏. நியூட்டனின் புது உலகம் வித்தியாசமான கதை.அற்புதமான, உயிரோட்டமான சித்திரங்கள்.டெக்ஸ் கதைகளின் சித்திரங்களை விட அற்புதமான சித்திரங்கள். ஆனால் நாயகர் மர்ம மனிதர் மாயமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்.எரிகல்லைப் பார்த்தவர்களே கதையின் மையம் என்பதால் மார்ட்டினுக்கு வேலையே இல்லை.ஒரு மங்கையிடம் அடி வாங்கி மயக்கமுற்று கதையினை நிறைவு செய்கிறார்.நாயகர்களுக்கு முக்கியத்துவம் தராத கதைகளை தவிருங்கள் அன்பான ஆசிரியரே... எங்களை பொறுத்தமட்டில் நாயகர் மனிதர்களை விட ஏதாவது ஒரு திறனில் மேம்பட்டவராக இருக்க வேண்டும். ஆக்‌ஷன்,துப்பாக்கி கையாள்வது,துப்பறிவது,காமெடி என எதாவது ஒன்றில் நிலைத்து கதையை முடிக்க வேண்டும்.ஆனால் இதில் அனைத்துமே மிஸ்ஸிங்.தயவு செய்து இது போன்ற கதைகளை வெளியீடாதீர்கள் காமிக்ஸின் அரை நூற்றாண்டு ஆசிரியரே...

    ReplyDelete
  57. மதிப்புமிக்க ஆசிரியருக்கு வணக்கம் 🙏. நான்கே நாட்களில் நான்கு புத்தகங்களை படித்து விட்டேன்.ஜீலை மாத நாட்களை எதிர் நோக்கி நாட்களை எண்ணும் கடினமான சூழல் .ஜீலை மாதத்து இதழ்களின் அப்டேட் எப்போ வரும் என்று வலைப்பதிவை ஒவ்வொரு நாளும் எதிர் நோக்கும் நிலை.விரைவாக அப்டேட் பண்ணுங்கள் ஆசிரியரே...
    எனது பார்வையில்....
    சிங்கத்தின் சிறுவயதில்-கர்ஜனை அதிகம்,ஆக்ரோசமான வேட்டை.
    இளமையில் கொல்-புலி பசித்தாலும் புல்லை தின்னாது.
    ஒரு செரிப்பின் சாசனம்-சிரிப்பு சாசனம்.
    நியூட்டனின் புது உலகம்- மாய உலகம்.

    ReplyDelete
  58. இளமையில் கொல் மிக நன்றாக இருந்தது. வழக்கமான டைகர் கதை போல மெதுவாக நகரும் என நினைத்து படிக்க தொடங்கினேன். ஆனால், கதை பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பாக நகர்ந்தது. "அட்லாண்டாவில் ஆக்ரோஷம்" கதையை படித்தப் போது, அதில் லூயிஸ் நார்ட்டனாக வந்து டைகரை கதிகலங்க செய்பவன் யாரோ என்று இத்தனை நாட்களாக தெரியாது இருந்தேன். அதை இந்த கதை மூலமாக தெரிந்துக் கொண்டேன். மூன்று அத்தியாயங்களும் டாப்! அடுத்த ஆண்டு வரவுள்ள இளமையில் கொல் 2 & 3"க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த கதையை மறுபதிப்பிற்கு கொண்டு வர திரு. விஜயன் சார் அவர்களிடம் வேண்டுகோள் வைத்த அத்தனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிகச் சிறப்பான விமர்சனம் நண்பரே.

      Delete
    2. சூப்பர்! மீ..டூ..

      Delete
  59. ஹாய் சார்...
    கடந்த வார கேப்சன் போட்டி ரிசல்ட் என்னிச்சு சார்...?

    ReplyDelete
  60. ட்யூராங்கோ... அடேங்கப்பா பின்றாப்ல..!

    ReplyDelete
  61. @Enthusiasm Quotes

    சார் நீங்க யாரோ எவரோ தெரியலை.. ஆனா எங்க ஸ்டீல்க்ளாவை விட அதிகமா கமெண்டு போட்டு அசத்தறீங்க சார்!! எங்க மெயில் இன்பாக்ஸ் நிரம்பி வழியுதுன்னா அதுக்கு நீங்கதான் காரணம்! உங்களை என்னிக்கும் மறக்க மாட்டோம் சார்!
    உங்களை மாதிரி இன்னும் ரெண்டு மூனு பேர் இருந்திட்டா அப்புறம் தினமும் ஒரு உப-பதிவு தான்!

    கண்டிப்பா நீங்க இந்தவருஷ EBFக்கு வரணும்! உங்களைப் பார்க்கணும்போல ஆசை ஆசையா இருக்குங்க சார்!

    அப்புறம்.. வீட்டுல பழைய காமிக்சு எல்லாம் வச்சிருக்கீங்கதானே?

    ReplyDelete
  62. தலையை சிலுப்பிக் கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தேன்.லோகமே பரம சாதுவாக இயங்கிக் கொண்டிருந்தது.ஆனால் எனக்கு தலையில் கிறுகிறுப்பு கொஞ்சம் மிச்சமிருந்தது. இந்த மாதிரி நிகழ இரண்டு காரணங்கள் இருக்கும்.
    ஒன்று புகழ்பெற்ற ஒற்றைத் தலைவலியின் பின்னணி.
    இரண்டாவது மார்டின் கதைகளினால் உண்டாகும் எதிர்வினை.

    கொஞ்சம்முன்புதான் மார்டினை வாசித்தேன் எனும்போது தலைச்சுற்றலின் காரணம் புரிகிறது.

    மார்டின் கதைகளின் ஸ்பெஷலே இதுதான்.முதல்முறையாக படிக்கும்போது மண்டை குழம்பும்.அந்தக் குழப்பமே அதை மீண்டும் படிக்கத் தூண்டும்.படிக்கப் படிக்க அதன் உள்ளடக்கத்தின் விஸ்வரூபம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கதாசிரியரின் கற்பனா சக்திக்கு மிகப்பெரிய சல்யூட்.

    வழக்கம்போல கதை ஆரம்பித்தாலும் ,வழக்கத்துக்கு மாறாக ,கதையானது முன்னும் ,பின்னும் என கலந்துகட்டி குழப்பினாலும், கதை சீராகவே புரிகிறது.எடுத்துக்கொண்ட கருவை சிந்தாமல் சிதறாமல் பரிமாறியது இன்னொரு சிறப்பு.ஆசிரியரின் மொழிபெயர்ப்பு கதையின் ஆதார தூண்களில் ஒன்று.

    அழகான ஓவியங்கள் ,கதையில் மார்டினுக்கு வேலையே இல்லையென்ற குறையை நீக்கிவிட்டன.

    அடுத்த மார்டின் கதையை நோக்கி ஆவலுடன்..,

    ReplyDelete
  63. நாட்டிங்காம்ல ஒரே மழை...மழை! சரி , மேட்ச்சுதான் இல்லை; "கொத்து புரோட்டா" ஸ்பெசல் இளம் பிலியோட (கொட்டை எடுத்ததா? எடுக்காததானு?--- டெக்ஸ் ரசிகர்கள் கேட்டு விசில் அடிக்காதீங்கப்பா...!!!) இளவயது கதையை படிப்போம்னு எடுத்தா ஒரே காமெடி! லவ் பண்ற பொண்ணு வீட்ல யார் இருப்பது, எவ்வளவு நாளாக இருக்காங்கனு அவுங்க நோக்கம் எதுனு கூடவா கணிக்க முடியாது! நேரா "தேங்காய்" மாதிரியா போய் வில்லன் வலையில் விழுவாரு....!!!! பாவம் புழுதியை விழுங்க விழுங்க ஓட்டம் எடுக்காரு....!!!!

    படிக்க படிக்க பக்கத்துக்கு பக்கம் செம காமெடித் தோரணம்!!

    விரிவான விமர்சனம் நாளை....!!!!

    புதிதாக பிலி ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ள ரசிகர்களுக்கு "கொத்து புரோட்டா" கதை தெரியுமா சார்ஸ்???

    ReplyDelete
  64. Vijay @ :-)

    அவர் ஈரோடு புத்தக திருவிழா வரத்துல ஜாங்கிரி, லட்டு மற்றும் மிச்சர் எல்லாம் கண்டிப்பாக வாங்கிட்டு வரணுன்னு சொல்ல மறந்துட்டீங்க :-)

    ReplyDelete
  65. இன்று தன் பிறந்த நாளை கொண்டாடும் மேச்சேரியின் "கிட் ஆர்ட்டின் " அவர்களுக்கு ஷெரீப் டாக்புல் ..சிக்பில் ,குள்ளன் போல பல பல நண்பர்கள் புடைசூழ இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் KOK! எண்ணத்திலும், எழுத்திலும், செயலிலும் நகைச்சுவையையே பிரதானமாகக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களைக் காண்பது மிக அரிது!

      Delete
    2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணன்!!!!

      Delete
    3. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்யா!

      மாதந்தோறும் கார்டூன் படித்து மகிழ்வுற எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டுகிறேன்!

      அட டா சனிக்கிழமை விரதம் ஆச்சே! எக்லெஸ் கேக் சாப்பிடலாம்! தயிர் சாதம் இருக்கே!

      Delete
    4. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி மகன் அண்ணன் கண்ணர்ர்ர் அவர்ர்ர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

      Delete
    5. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணன்!!!!

      Delete
    6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரவிகண்ணன்!!!!

      Delete
    7. மேச்சேரியின் கச்சேரியே !
      மனதுக்கினிமை தரும் புதுச்சேரியே !
      வற்றாத சுனையாக ஊறும் நகைச்சுவை ஏரியே.!
      பல்தடம் பதிக்காமல் சொல்தடம் படைத்த நவீன காட்டேரியே.!
      உம்மை
      வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் ஐயா.!

      Delete
  66. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் @கிட் ஆர்ட்டின் அண்ணா

    ReplyDelete
  67. மேச்சேரி ஹீரோவிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  68. வாழ்த்தி ஆசிர்வதித்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே...!

    சுருங்கச் சொல்லவேண்டுமெனில்...

    குப்றக்கா வுயுந்து கும்ட்டுக்றேனுங்கோ🙏🙏🙏.!

    ReplyDelete