நண்பர்களே,
வணக்கம். எப்போவாச்சும் ; ரொம்ப ரொம்ப எப்போவாச்சும் - ஒரு நாளின் சகல நொடிகளிலும் பெரும் தேவன் மனிடோ நமது தோள்களில் கைபோட்டபடிக்கே நம்மோடு நட்பாய், வாஞ்சையாய், ஜோக்கடித்துக் கொண்டே பொழுதைக் கடத்துவது போல் உணர்ந்திட முடியும் ! கனவில் மட்டுமே சாத்தியமாகிடும் சமாச்சாரங்கள் மெய்யாலுமே அந்த நாளில் வரிசை கட்டி அரங்கேறிடும் ! வீட்டுக்காரம்மாவோடு கடைவீதிக்கு வண்டியில் போறீங்களா ? மிஞ்சியிருக்கும் அந்த ஒரேயொரு பார்க்கிங் ஸ்பாட் அன்றைக்கு நமக்கே நமக்காய் கிடைத்து விடும் ! முக்கியமான தத்கல் டிக்கெட் போட காலை பதினோரு மணிக்கு மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, payment gateway-ல் சக்கரம் சுத்திக்கினே இருந்து உசிரை வாங்கக்கூடாதே என்று இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டு முயற்சிக்கும் போது, லொஜக்கென ரெண்டுமே லோயர் பெர்த்தாக கிடைத்து விடும் !முக்கியமானதொரு மேட்ச் பார்க்க நினைக்கும் அந்த ராப்பொழுதில் பசங்க நேரத்துக்கே தூங்கிப்புடுவாங்க...."வெளியே போவோமாடா மாப்பிள்ளைன்னு ?" கேட்டு நண்பர்களும் அன்னிக்கி மொக்கை போட மாட்டாங்க ! காமிக்ஸ் கூரியர் வந்தால் கூட வீட்டம்மிணி பழிப்பு காட்டாம, புன்சிரிப்போட கடந்தே போயிடுவாங்க ! அட, பெருமூச்சு விட்டபடிக்கே ஸ்ரீலீலாவை இன்ஸடாவிலே பார்த்துக் கிடக்கும் அங்குசாமிகளுக்குக் கூட, அகஸ்மாத்தா பஜார் பக்கமா போறச்சே, நகைக்கடைத் திறப்புக்கென வந்திருக்கும் அந்த அம்மணியை தரிசிக்க அன்னிக்கு சாத்தியப்படும்னா பார்த்துக்கோங்களேன் ! என்ன ஒரே சிக்கல் - அந்த மாதிரியான நாட்களெல்லாம் ஆயுசுக்கு ஒண்ணோ, ரெண்டோ, தபாக்கள் மாத்திரமே வாய்த்திடும் !
And அத்தகையதொரு தினத்தை நம்ம ஆந்தையனுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை வழங்குவோமென்று ஏஜிர் தேவன் உறையும் அஸ்கார்டில் தீர்மானம் ஆகியது போலும் ; ஒரு பெரும் கனவாய் இன்றைய பொழுதே எனக்கு ஓட்டமெடுத்துள்ளது !! Phewwwwww !!
எல்லாம் ஆரம்பித்தது ஒரு பத்து நாட்களுக்கு முன்னே ..... !
எங்களது துடிப்பான மாவட்ட ஆட்சியரின் முன்னெடுப்பினில் ராஜபாளையத்தில் முதல் "காமிக்ஸ் லைப்ரரி" துளிர் விடவுள்ளது என்ற சேதியுடன் நம்மிடம் புக்ஸ் கொள்முதல் செய்திட சில நன்கொடையாளர்கள் அணுகியிருந்தனர் ! நிஜத்தைச் சொல்வதானால் இந்த முயற்சியின் முழுப்பரிமாணமும் எனக்கு அந்த நொடியில் புரிந்திருக்கவில்லை. டிஸ்கவுண்ட் எவ்வளவு கொடுக்கலாம் ? ; எந்தெந்த புக்ஸ் அனுப்ப சரிப்படும் ? என்பதோடு நான் ஒதுங்கிக் கொண்டு நம்ம front office பெண்களிடம் மீதப் பொறுப்புகளை விட்டிருந்தேன் ! ஆனால் லைப்ரரி துவங்கிய ஓரிரு நாட்களிலேயே எங்கெங்கிருந்தெல்லாமோ அழைப்புகள் வரத்துவங்கின - தொடரவுள்ள ஞாயிறன்று ஒரு "சித்திரக்கதை விழா" நடைபெறவுள்ளது & அதனில் நாமும் கலந்து கொள்ள இயலுமா ? என்ற கோரிக்கையோடு ! இந்த காமிக்ஸ் நூலகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்திருந்த எழுத்தாளர் திரு.S.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமை ; பெரும் காமிக்ஸ் காதலரும், 23-ம் புலிக்கேசி திரைப்படத்தின் டைரெக்டருமான திரு.சிம்புதேவன் அவர்கள் & சென்னையின் Fine arts College -ஐ சார்ந்த மூத்த பேராசிரியர் சிறப்பு விருந்தினர்கள் என்றும் தெரியப்படுத்தினார்கள் ! 'சரிங்க...ஆனா நான் என்ன பேசணும் ? எந்தத் தலைப்பிலே பேசணும் ?' என்று தயங்கியபடியே கேட்டேன் ! "காமிக்ஸ் பதிப்புலகில் உங்களின் அனுபவங்கள் பற்றி !" என்றார்கள் !
சரி, ரைட்டு...வர்றேன் சார் என்று சொல்லி விட்டு போனை வைத்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இன்னொரு அழைப்பு : "அன்னிக்கி ஒரு சின்ன காமிக்ஸ் கண்காட்சி மாறியும் அங்கே அமைக்க முடியுமா ?" என்ற வினவல் ! "திருவண்ணாமலையில் தற்சமயமா ஒரு புத்தக விழா ஓடிக்கிட்டிருக்கே சார் ; so ஆபீசில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை & ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பெண்பிள்ளைகளை ராஜபாளையத்துக்கு அழைத்து வருவதும் முடியுமா ? என்று தெரியவில்லை !" என்று ஜகா வாங்கினேன் ! "முயற்சி பண்ணிப் பாருங்க சார் - டீச்சர்களும், பெற்றோர்களுமாய் கிட்டத்தட்ட 300 to 400 பேர் வரக்கூடிய பொழுது ! உங்க புக்ஸ் இருந்தால் சிறப்பாக இருக்கும்" என்றார் !! அப்புறமும் தட்ட முடியுமா என்ன - எஞ்சியிருந்த 2 front desk பெண்களை அரை நாளுக்கு மட்டும் வூட்டில் பெர்மிஷன் கோரச்செய்து, அங்கு display செய்திட ஏதுவான புக்ஸ்களையும் பேக் பண்ண சொல்லியிருந்தேன் !
"ரைட்டு...அது ஆச்சு ! ஆனா மேடையில் என்ன பேசுறது ? தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற எங்களது மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியரையும், எழுத்துலக ஜாம்பவான் திரு.எஸ்ரா.அவர்களையும், பற்றாக்குறைக்கு திரைப்பட டைரெக்டரையும், வைத்துக் கொண்டு தத்துப் பித்தென்று உளறிடப்படாதே !!" என்ற டர் தொற்றிக் கொண்டது ! பற்றாக்குறைக்கு ஆசிரியப் பெருமக்கள் & மாவட்ட நிர்வாக ஆளுமைகளும் !!
மேடையில் டீ ஆத்துவது என்னவோ நமக்குப் புதிதல்ல தான் ; ஆனால் இதுவரைக்குமான அந்த அனுபவங்கள் சகலமுமே காமிக்ஸில் ஊறிப் போன நம்ம நண்பர்கள் வட்டத்தினுள் மாத்திரமே அல்லவா ? So அங்கே பெருசாய் டென்ஷன் லேது ! அப்டியே சொதப்பினாலும், வக்கீல் வண்டுமுருகன் பாணியில் "உங்களுக்குத் தெரியாத நீதியில்லை ; தெரியாத சட்டமில்லை யுவர் ஆனர் ! நீங்களா பார்த்து பண்ணிக்கோங்க !" என்று ஜகா வாங்கிக்கொள்ளும் குஷன் அங்கு எப்போதுமே உண்டு ! ஆனால் காமிக்ஸை கண்ணிலேயே பார்த்திருக்கா ஒரு பெரும் திரளின் முன்னே முதன்முறையாகப் பேசணும் & நமது குழுமத்துக்கு மாத்திரமன்றி, காமிக்ஸ் எனும் ரசனைக்கே அங்கு நானொரு பிரதிநிதியாகி நிற்க வேண்டிய அவசியமும் இருக்கிறதென்பது புரிந்தது ! நான்பாட்டுக்கு மேடையில் ஒரு சூர மொக்கையை நிகழ்த்தி விட்டு வந்தால், "போங்கடாடே...உங்க காமிக்ஸும் இப்டி தானே இருக்கும் ?" என்று அந்த ஜனம் திரும்பிக்கூடப் பார்க்காது நகர்ந்து விடுமே ?! So இந்த தபா மனசிலே தோணுறதை ஜாலியா பேசுறதுலாம் சுகப்படாது ; உருப்படியாய் ஒரு உரையினை தயார் பண்ணனும் என்று நினைத்துக் கொண்டேன் ! ஆனால் ---ஆனால் ---நாம நினைப்பதெல்லாம் அரங்கேறும் நாட்கள் தான் சொற்பமோ, சொற்பம் தானே ?! பல்வேறு அதிமுக்கிய பெர்சனல் சமாச்சாரங்கள் குறுக்கிட, வேறு எதற்குமே நேரம் ஒதுக்க முடியா அசாத்திய நெருக்கடி ! தொடரும் நாட்களின் இயன்றால் அதைப் பற்றிச் சொல்ல முயற்சிக்கிறேன் !
சனியிரவிலாச்சும் கண்முழித்திருந்து prepare பண்ணலாமென்று பார்த்தால், அன்றைக்கு வீட்டில் விருந்தினர் ! 'ரைட் ரா....இருந்தா ஊருக்கு ; இல்லைன்னா சாமிக்கு !!' என்ற வடிவேல் டயலாக் தான் தூங்கப்போகும் போது மண்டைக்குள் ஓடியது !! கட்டையைக் கிடத்தினாலோ உறக்கம் பிடிக்க மறுக்கிறது !!
*சுத்த நடையில் பேசணுமா - அல்லாங்காட்டி casual ஆகப் பேசலாமா ?
*ஹாஷ்யமாய் பேசலாமா - அல்லாங்காட்டி அது மொக்கையா தோணுமா ?
*ரமணா ஸ்டைலில் புள்ளி விபரங்களையா அள்ளி விட்டா, ராஜபாளைய நாய்களை விட்டுக் கடிக்கச் செய்வார்களா ? தொப்புளை சுத்தி எட்டா ? பன்னெண்டா ?
*நம்மளை நாலாவதா பேச கூப்பிடறதா சொல்லி இருக்காங்க ! So நமக்கு முன்னே பேசுறவங்க ஏதாச்சும் காமிக்ஸ் சார்ந்த விளக்கம் கோரிக் குறிப்பிட்டால் அதற்கான follow up நம்ம உரையில் இருக்கணுமா ?
*எவ்வளவு நேரம் பேசுனா சரியா இருக்கும் ? காமிக்ஸ் பற்றித் துளியும் தெரிந்திருக்கா ஒரு audience-ன் breaking point என்னவாக இருக்குமோ ? என்று குருதிப்புனல் கமல்ஹாசன் ரேஞ்சுக்கு யோசித்தேன் !
ஆற்றுப் படுகையில் புரளும் நாய்க்குட்டியைப் போல படுக்கையில் புரண்டபடிக்கே கிடந்த சமயத்தில் தலைக்குள் "இத பேசலாமோ ? அதைச் சொல்லலாமோ ?" என்று ஓடிய வெள்ளோட்டத்தை ராத்திரி மூணு மணிக்கு எழுந்து ஒரு A4 தாளில் கிறுக்கத் தொடங்கினேன் ! நமக்குத் தான் எதையுமே நறுக்குன்னு சொல்ல வராதே, கால் அவரில் எக்ஸ்டரா ஷீட் கேட்கும் நிலை எழுந்தது ! "நாசமாப் போச்சு ; இப்டி வண்டி வண்டியா எழுதிட்டுப் போய் மேடையில் ஒப்பிச்சு வைத்தால், மக்கள் வண்ட வண்டையாய் திட்டுவார்கள் !" என்ற பயம் எழுந்தது ! கையில் இருந்த A4 தாளை பர்ர்..பர்ரேன்று கிழித்துப் போட்டுவிட்டு நாலு மணிக்கு தூங்கி வைத்தேன் ! "திபெத்தில் டின்டின்" கதையில் மட்டையாகி உறங்கும் கேப்டன் ஹேடாக்குக்கு கனவில் புரஃபஸர் கால்குலஸ் ஒரு வண்டிக் குடைகளைக் கொண்டு வந்து மொடேரென போடும் sequence போல கனவு முழுக்க ஏதேதோ மொக்கைகள் ! காலையில் 7 மணிக்கு எழுந்த போது, நாலு குவாட்டரை சாத்திய குலேபகாவலியைப் போல முகரை ரணகொடூரமாய் காட்சியளித்தது ! ஆனால்....ஆனால்...அந்த நொடியில் எனக்குத் தெரிந்திருக்காட்டியுமே இதுவொரு வரம் சுமந்த தினமாச்சே ?!!
தலைக்குள் தோன்றிய சமாச்சாரங்களை பரீட்சைக்கான பிட் பாணியில் ரத்தினைச் சுருக்கமாய் மட்டும் எழுதி வைத்துக் கொண்டு, ஏதோ ஒரு அசட்டு தகிரியத்தில் ஜூனியர் எடிட்டர் plus நம்ம front desk பெண்களோடு புறப்பட்டோம் ! தொடர்ந்த சகலமும் sheer theater !!
ராஜபாளையத்தின் மையத்தில் இருந்தது காந்தி கலைமன்ற அரங்கம் ! மாவட்ட ஆட்சியரின் அற்புத நிர்வாகத்துக்கு சான்றாய் ஒன்பதே கால் மணிக்கே அரங்கில் சொல்லி மாளா கூட்டம் ! கொண்டு சென்ற காமிக்ஸ் புக்ஸ்களை அடுக்கி வைக்க மூன்று டேபிள்களை வாங்கிக் கொடுத்து விட்டு, பெண்பிள்ளைகளை அங்கே இறக்கி விட்டு விட்டு, நாஷ்டா பண்ணித் திரும்பலாம் என புறப்பட்ட சற்றைக்கெல்லாம் போனில் வெங்கடேஸ்வரி அழைத்தாள் - "சார்...மேடைக்கு உங்கள கூப்பிடுறாங்க !!" என்று ! ஓட்டமாய் போய்ப் பார்த்தால் அரங்கம் full & மேடையில் அனைவரும் ரெடி ! திருட்டு முழி முழித்தபடிக்கே ஓடிப் போய், எனக்கென போடப்பட்டிருந்த சேரில் அசடு வழிய ஒட்டிக் கொண்டு அனைவருக்கும் ஒரு கும்பிடு போட்டேன் !! பேசத் துவங்கியவர் திரு.எஸ்ரா அவர்கள் தான் !! குற்றால அருவியின் சுகம் தந்தது அவரது உரை ! And அவர் பேசப்பேச எனக்குள் சொல்லி மாளா goosebumps !!
"தமிழ் பதிப்புலகின் தலைநகரம் சென்னை என்றாலும், தமிழ் காமிக்ஸின் மையமே நமது மாவட்டத்தின் சிவகாசி தான் ! So இதுபோலானதொரு முன்னோடி முயற்சி நம்ம மண்ணில் தான் முதன்முதலில் அரங்கேறிட வேண்டும் என்ற உணர்வில் தான் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தென் !" என்று சொன்னார் !! அதுமாத்திரமன்றி, அப்பாவின் Fleetway முயற்சிகள் பற்றி, இரும்புக்கை மாயாவியைப் பற்றி, நமது லயன் காமிக்ஸைப் பற்றியெல்லாம் பேசப்பேச எனக்கு பேஸ்மெண்ட் உதறத் துவங்கியது ! எங்கோ ஒரு மூலையில், ஒரு சிறு வட்டத்துக்கென மட்டும் நாம் இயங்கி வந்தாலும், நமது முயற்சிகளின் வீரியங்கள் உரியோர்களின் கவனங்களிலிருந்து தப்பிடுவதில்லை என்பது அழுந்தப் புரிந்தது ! வரிசையாய் நமது லயன்-முத்து சார்ந்த தகவல்களை அடுக்கிக் கொண்டே ஏகப் பரிவான வார்த்தைகளை என்னை நோக்கி எஸ்ரா.சார் அனுப்பி வைக்க, குழுமியிருந்த மக்களின் கைதட்டல்கள் எனது லப் டப்பை எகிறச் செய்தது !! கிட்டத்தட்ட அரை மணிநேரம் நீண்ட அவரது உரை நிறைவுற்ற போது "உறைபனி மர்மம்" கதையில் ஐஸாகிக் கிடக்கும் அந்த விஞ்ஞானிகள் மெரி நான் உறைந்து கிடக்காத குறை தான் !
அடுத்து வந்த டைரக்டர் திரு,சிம்புதேவன் அவர்கள் பேச ஆரம்பித்த சற்றைக்கெல்லாமே புரிந்தது - இவர் நமது தீவிர ரசிகர் & ரெகுலர் வாசகரும் என்பது ! அம்புலிமாமா ; வாண்டுமாமா ; பாலமித்ரா ; பூந்தளிர் ; கோகுலம் ; ராணி காமிக்ஸ் ; முத்து காமிக்ஸ் என்றெல்லாம் அழகாய் பேசியபடிக்கே சென்றவர், லயன் காமிக்ஸ் பற்றிப் பேசத்துவங்கிய நொடியில் வேறொரு கியருக்கு மாறிப் போய்விட்டார் !! லக்கி லூக் பற்றி ; டெக்ஸ் வில்லர் பற்றி ; கேப்டன் டைகர் பற்றி ; லாரன்ஸ்-டேவிட் ; மாயாவி பற்றி அடுக்கிக் கொண்டே சென்ற போது எனக்கு மேல் அன்னத்தோடு நாக்கு ஒட்டிக் கொள்ளாத குறை தான் ! சகலத்துக்கும் சிகரமாய் அவரது உரையை நிறைவு செய்வதற்கு முன்பாக சபையினரிடம் - "நாமெல்லாம் எழுந்து நின்று லயன் காமிக்ஸ் விஜயனுக்கு இப்போது ஒரு நிமிட கரகோஷம் கொடுப்போமா - ப்ளீஸ் ?" என்று கேட்ட நொடியில் திகைத்தே போய்விட்டேன் ! மறு நொடியே மேடையில் இருந்தோரும், குழுமியிருந்தோரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பிய போது எனது வாழ்க்கையே கண்முன்னே அசுர வேகத்தில் ஓடியது போலிருந்தது ! And இது சத்தியம் guys - அந்த நொடியில் எனக்கு மனதில் தெரிந்ததெல்லாமே அப்பாவின் முகமும், உங்கள் அனைவரின் மலர்ந்த முகங்களும் தான் ! அந்தக் கரவொலி சர்வ நிச்சயமாய் நமக்கானது folks ; நீங்களின்றி இங்கு நாங்களேது ? முகம் நிறைந்து புன்னகையோடு என் கையைக் குலுக்கிவிட்டு அவர் சென்று அமர்ந்த போது எனது மண்டையே blank !!
தொடர்ந்து பேசிய நுண்கலை கல்லூரிப் பேராசிரியரின் உரை ஓடிக்கொண்டிருக்கவே எனக்குள் டங்கு டங்கென்று நெஞ்சு அடித்துக் கொண்டிருந்தது ! ஒரு பொதுமேடையில் இத்தனை அசாத்திய சிலாகிப்புகளுக்குப் பின்பாய் எனது performance இம்மி சொதப்பலுமின்றி அமைந்திட வேணுமே என்ற பயம் தான் நெஞ்சுக்கூட்டை தெறிக்க விட்டுக்கொண்டிருந்தது ! ரைட்டு....அடுத்து நம்மளைத் தான் கூப்பிடுவாங்கன்னு தண்ணியை மடக்..மடக்குனு குடிச்சிட்டு நிமிர்ந்தால் - "அடுத்ததாக முனைவர் பிரபாவதி !" என்ற அறிவிப்பு !! ஆஹா...இன்னும் காத்திருப்புன்னா ...இன்னும் டென்க்ஷனாச்சே !" என்றபடிக்கே நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருந்தேன் ! பிரபாவின் உரையும் முடிந்திட, எழுந்திருப்போமா ? என்று எட்டிப் பார்த்தால் "கதை சொல்லும் வால்ப்பையன்" என்றொரு கலை நிகழ்ச்சி ஆரம்பித்தது ! அதில் நடித்தவரும் ஒரு முனைவர் என்பதும், அவரோடு பறையடித்தபடிக்கே பங்கேற்றவர் அவரது புதல்வி என்றும் தெரிய வந்தது !! அற்புதமாய் செய்தார் அந்த ஆற்றலாளர் !
இதுக்குள்ளாக மக்கள் பிஸ்கெட் ; டீ பிரேக்குக்கு இங்கும் அங்குமாய் கலைந்து கொண்டிருக்க, "சோணமுத்தா....இன்னிக்கி நீ காலி சேர்களுக்கு தான் டீ ஆத்தணும் போல !" என்று மண்டை சொன்னது ! தவிர, நேரம் 12.30-ஐ நெருங்கியிருக்க, அழகாய் பேக் செய்யப்பட மதிய உணவு ட்ரேகளும் வந்து இறங்கத் துவங்கின ! "சுனாமி சுழற்றியடிக்க, இன்னிக்கி நம்ம உரை பீப்ப்பீப்பீ தான் !" என்று நினைத்துக் கொண்டேன் ! And அந்த நொடியில் ஏதோ லைட்டாக பாரம் குறைந்தது போலிருந்தது ! ஆனால் திடுதிடுப்பென அரங்கமே attention-ல் நின்றது ; என்னவென்று பார்த்தால் முகம் முழுக்கப் புன்னகையோடு பெருமதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் உள்ளே வந்து கொண்டிருந்தார் ! பின்னே டவாலி, போலீஸ் பாதுகாப்பு - என வந்த ஆட்சியர் சார் துள்ளலோடு மேடையில் நடுநாயகமாக அமர்ந்த கணப்பொழுதில் அரங்கின் மொத்த சீதோஷ்ணுமுமே மாறிப் போனது ! இந்த ஒட்டு மொத்த முன்னெடுப்பிற்கும் மூலவரே அங்கே அமர்ந்திருக்க, கீழே இருந்த டீச்சரம்மா - "அடுத்ததாக நமது மரியாதைக்குரிய கலெக்டர் அவர்கள் பேசுவார்கள் !" என்று அறிவித்தார் !
ஆனால் ஆட்சியரோ - "இல்லே...விஜயன் பேசுவார் !!" என்று அறிவிக்க, மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு எழுந்தது மட்டும் தான் எனக்கு ஞாபகம் உள்ளது ! தொடர்ந்த பதினைந்தோ - இருபதோ நிமிடங்களுக்கு அங்கு நின்று உரையாற்றியது நானல்ல - உங்கள் ஒவ்வொருவரின் உந்துசக்தியும், உத்வேகங்களும் தான் ! எங்கிருந்தோ வார்த்தைகள் இரவல் கிட்டின ; ஏதோவொரு அதிசயத்தில் உடல் மொழியில் நடுக்கம் மறைந்து போனது ; எங்கிருந்தோ பேச்சில் ஒரு கோர்வை சாத்தியமாகியது ; எங்கிருந்தோ நம் பயணத்தின் காரணகார்த்தாக்களை நினைவுகூர்ந்திடும் திறன் கிட்டியது ; எங்கிருந்தோ சபையோருடன் ஐக்கியமாகிடும் மாயம் என்வசமானது ! "இல்லமெல்லாம் காமிக்ஸ் - உள்ளமெல்லாம் மகிழ்ச்சி"எனும் தலைப்பில் நான் பேசியது சர்வ நிச்சயமாய் டாலரை பழைய சந்தை மதிப்புக்குக் கொண்டு வரும் மாயாஜாலம் அல்ல தான் ; ஆனால் நான் பயந்திருந்த மொக்கையும் அல்லவே அல்ல தான் ! முன்வரிசையில் அமர்ந்திருந்த கலெக்டரின் செயலாளர் ஒரு சின்னக்காகிதத்தில் "Please 5 minutes sir " என்று எழுதி சரியான தருணத்தில் என்னிடம் நாசூக்காய் நீட்ட - "பேச்ச குறைடா..பேச்ச குறைடா.. " என்ற அலாரத்தை உள்ளுக்குள் அலற விட்டது ! எனக்குப் பின்பாய் ஆட்சியர் அவர்களும் பேச வேண்டி இருப்பதால் "மைக் மோகனாய்" உருமாறிடப்படாது ! என்று எனக்கு நானே சொல்லி வைத்திருந்தேன் ! அந்தச் சீட்டும் சரியாக வந்து சேர, சொல்ல வேண்டியதை நறுக்கென்று சொல்லி விட்டு விடை பெற்றேன் !
"நெகிழ்ச்சியான...உணர்வுப்பூர்வமான உரைக்கு நன்றி விஜயன் !" என்று anchoring செய்து கொண்டிருந்த பேராசிரியர் சொன்ன நொடியில் என் தோளில் புனித மனிடோவின் கரம் இருப்பது புரிந்தது !! தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிஅற்புதமாய் உரை நிகழ்த்திய பிற்பாடு அந்த விழா ஒரு நிறைவோடு நிறைவுக்கு வந்தது ! "தொடரும் காலங்களில் நம் மாவட்டத்தில் மட்டுமே 10 இடங்களில் இது போலான காமிக்ஸ் லைப்ரரிகள் உருவாக்கப் போகிறோம் !" என்று அவர் அறிவித்த போது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது !! ஆட்சியர் அவர்களும் ஒரு காமிக்ஸ் பிரியர் என்பது அப்பட்டமாய்ப் புரிந்தது !! And நமது வண்ண இரத்தப்படலம் தொகுப்பு + இன்னும் சிலபல புக்ஸ்களை ஒரு அழகான பார்சலாக்கி ஆட்சியருக்கு நமது அன்புடன் வழங்கினேன் !
எஸ்ரா சாருக்கோ, "நிஜங்களின் நிசப்தம்".....தாத்தா கதைகள்....திபெத்தில் டின்டின் ! டைரக்டர் சிம்புதேவன் அவர்களுக்கு "LION MAGNUM ஸ்பெஷல் ; கென்யா ; டின்டின் + இன்னும் சில புக்ஸ் !
மேடையில் இருந்து இறங்கி, அனைவரிடமும் விடைபெற்று விட்டுக் கிளம்பிய போது "உரை மிகச் சிறப்பு !" என்று டைரக்டர் சிம்புதேவனும் கைகுலுக்கிட, என் தோள்களில் அந்த அரூபக் கரம் தொடர்வது ஊர்ஜிதமானது ! அதுவரைக்கும் என்னை யாரென்றே அறிந்திருக்காத ஆசிரியப் பெருமக்களின் முகங்களில் ஒரு ஸ்னேகமான பார்வையினையும் பார்க்க முடிந்த போது - "ஆங்...அதே தான் ! இன்னிக்கி முழுக்க இந்த தோளிலிருந்து கரம் விலகிடாது !!" என்று சொல்லிக்கொண்டேன் உள்ளுக்குள் ! விழாவினிலும், மேடையினிலும் இருந்த ஒவ்வொருவரும் லயன் காமிக்ஸ் - முத்து காமிக்ஸ் என்று உச்சரித்த ஒவ்வொரு தடவைக்கும் நமக்கு மட்டும் யாராச்சும் ஒற்றை ரூபாயாய்த் தந்திருந்தாலே - விழாவின் முடிவில் என் பாக்கெட் ஆயிரங்களில் நிரம்பியிருந்திருக்கும் !!
ரைட்டு...புக்ஸ் பெருசாய் விற்றிருக்காது, டப்பிகளில் திரும்ப அடைத்துவிட்டுக் கிளம்பலாமென்று போனால், "ஏழாயிரம் ரூபாய்க்கு சேல்ஸ் ஆகியுள்ளது சார் !" என்று சொல்லி தெறிக்க விட்டார்கள் நம்மாட்கள் ! மேடையில் எந்தெந்த நாயகர்களைப் பற்றியெல்லாம் பேசியிருந்தோமோ - அவை சகலமும் விற்பனை கண்டிருந்தன !! கை நிறைய நமது காமிக்ஸோடு, ஆட்சியரிடம் ஆட்டோகிராப் வாங்க நீட்டியோரும் கணிசம் !! "சரி ரைட்டு..... போற வழியிலேயே இன்னிக்கி lift கேட்டு சமந்தா காத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை !!" என்றபடிக்கே கிளம்பி அடுத்த 45 நிமிடங்களில் வீட்டுக்குத் திரும்பினோம் - ததும்பும் நிறைவான மனதோடு !!
என்ன - வழியிலே சமந்தா தான் காத்திருக்கலை ; அது மட்டுமே ஒரு blemish on an otherwise absolutely perfect day !!
Bye all...நீங்கள் ஒவ்வொருவரும் இன்றி இந்த நாளோ, இந்தப் பயணமோ, இந்த மகிழ்வுகளோ, இந்த அங்கீகாரங்களோ, சர்வ நிச்சயமாய் சாத்தியப்பட்டிருக்காது ! உங்களுக்கு நாங்கள் பட்டிருக்கும் கடனின் அளவு ஒரு புது மாப்பிள்ளையின் தொந்தியை விடவும் வேகமாய் வளர்ந்து கொண்டே செல்கிறது !! என்றைக்கு கடன்தீர்க்கும் ஆற்றல் கிட்டப் போகிறதோ - படைத்தவருக்கே வெளிச்சம் !!
And வீடு திரும்பிய உடனேயே பதிவினை டைப் செய்யத்தோன்றியது தான் ; ஆனால் அந்த நொடியின் high-ல் எனது எழுத்துக்களில் நிதானம் சொதப்பிடலாகாதே என்ற பயம் மேலோங்கியது ! So கொஞ்ச நேர உறக்கம், தரைக்கு மறுக்கா கால்களைக் கொணரும் படலம் என்பனவெல்லாம் பூர்த்தி ஆன பிற்பாடு இந்தப் பதிவினை எழுதத் துவங்கினேன் ! Hopefully its not over the top !! See you around !!
P.S : பிரபாவதி எடுத்த சொற்ப போட்டோக்களும், ஒரு வீடியோவும் தவிர்த்து இந்த நொடியில் என்னிடம் வேறெதுவும் லேது ! Maybe நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் upload செய்திடுவார்களெனில் நிச்சயம் சொல்கிறேன் !